Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts

Friday, February 19, 2010

கடற்கரையில் தமிழ் டிவிட்டர்கள் - 03

மீண்டும் வட்டமடித்து அமர்ந்த போது மீண்டும் இனிப்பு இன்னொரு சுற்று வந்தது. நீங்க பாண்டியராஜன் மாதிரி எப்பவும் கூலிங்களாஸை கழட்ட மாட்டீங்களா என்று @njganesh என்னை நக்கலடிக்க, அதை கழட்டிட்டா வயசு அதிகமா காட்டும் என்று என் மனைவி வெள்ளைக் கண்ணாடியை மாற்றித் தந்தாள் (கவலையா, கடுப்பா). உண்மையிலேயே இப்பதான் நீங்க யூத்தா இருக்கீங்க என்று பாலா, @ommachi உள்ளிட்டோர் (கேலியா,நிஜமா) சர்டிபிகேட் கொடுத்தார்கள். அப்போது பாலா, @ommachiக்குப் பின்னால் பலூன் சுடும் கடை ஜரூர் ஆகிக் கொண்டிருந்தது. ஹலோ ரொம்ப பின்னால போகாதீங்க சுட்டுருவாங்க என்றார். இதுக்குப் பேரு சுடறதா? ரிலீசுக்கு முன்னாடியே ஜக்குபாய் சிடியானதுக்குப் பேர்தான் சுடறது என்றார் @rgokul. என்னைப் பார்த்து டைரக்டர் உங்க படம் எப்போ என்றார் @anbudan_bala, எதுக்கு சிடி போடறதுக்கா என்று அதிர வைத்தார் @ommachi.
.
யாரு ஹீரோ? யாரு மியுசிக் போன்ற சம்பிரதாய சலசலப்புகள் அடங்கிய பின்னால், மீண்டும் அதே ஸ்வீட் வந்தது. அலுத்தபடி அட எனக்கு வேணாங்க என்றபடி @njganesh தனது மூட்டையை எடுத்து வைக்க, மற்றவர்கள் அனைவரும் கப்சிப் ஆனோம். அனைவரும் பார்வையும் அவருடைய பையில். அவரோ ஹாலிவுட் சினிமாவில் ஹீரோக்கள் டைம் பாமை ஃபியுஸ் செய்வது போல, பயங்கர சஸ்பென்சுடன் படு நிதானமாக பையை திறக்க ஆரம்பித்தார். பக்கத்திலிருந்த நான் ஆர்வம் தாங்காமல் எட்டிப்பார்த்துவிட்டு,  கணேஷ் சாப்பாடு கட்டிக்கிட்டு வந்திருக்காருங்க என்று கொளுத்திப் போட, பதறியபடி அவர் தனது மூட்டையை பட்டெனத் திறந்தார். உள்ளே இருந்து அவர் வெளியே எடுத்தது..... சே! தண்ணீர் பாட்டில். 

அடுத்த சில நிமிடங்களை ஆபரேஷன் செய்தவர் @spinesurgeon இலவச இன்ஷீரன்ஸ் அது இதுன்னு சொல்றீங்க? ஆனா ஒருத்தன் பொது மருத்துவமனைக்கு வந்து போனா அவனைப் பத்தி ஒழுங்கா ரெக்கார்ட் மெயிண்டெயின் பண்றீங்களா நீங்க? என்று வம்புக்கு இழுத்தார் @anbudan_bala வம்புக்கு இழுக்க வைத்தவர்கள் @vickytamil மற்றும் @icarsprakash. கலைஞரை வம்புக்கிழுத்தால் டாக்டர் சூடாவார் என்பது டிவிட்டர் ஐதீகம். ஆனால் ஆத்து மணலில் பீச்சு மணலை நைசாகக் கலப்பது போல, டாக்டர் சிக்கலில் சிக்காமல் எந்த அளவுக்கு பொது மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பற்றிய தகவல்களை கணிணி மயமாக்கி இருக்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்தார். விளக்கத்தை விலாவாரியாக கேட்டு வாங்கியது, வெங்கட். டாக்டர் பேசி முடிக்கும் வரை பொறுமையாக இருந்த என் மனைவி இவர் உண்மையிலேயே டாக்டரா என்று சந்தேகக் கேள்வி எழுப்ப #twitter-meet-doubt-03, ஏங்க இப்படி ஒரு சந்தேகம் என்று மொத்த டிவிட்டர்களும் அதிர்ந்தார்கள். ”இல்ல அவர் பேசற அழகான கோயம்புத்தூர் தமிழைக் கேட்டா ஆச்சரியமா இருக்கு” என்று அப்பாவியாக என் மனைவி சமாளித்தார். இவரை டாக்டர்னு சொல்றதுக்கே அதிர்ச்சியாகறீங்களே, இளைய தளபதி விஜய்யை டாக்டர்னு சொன்னப்போ எங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று மொத்த பேரும் கோரஸாகச் சொல்ல, உண்மையிலேயே அதிர்ச்சியானவர் நம்ம @scanmanதான். அவர் பேரு விஜய். நானும் டாக்டர் விஜய், அவரும் டாக்டர் விஜய்யான்னு புலம்பித் தள்ளிட்டார் என்று @spinesurgeon தனது சக டாக்டரின் சார்பில் புலம்பினார் (அல்லது சந்தோஷப்பட்டார்).

திடீரென பிரகாஷ் முகத்தில் குறும்பு, டாக்டர் உங்களை பாலா என்னமோ கேட்கணுமாம் என்றார். என்னது? நான் டாக்டரான்னு நீங்களும் கேட்கப் போறீங்களா? அதான் அவங்க கேட்டுட்டாங்களே என்றார். இல்ல இது வேற என்றார் பாலா. கேளுங்க என்றார் டாக்டர். நாங்கள் எல்லோரும் என்னவாக இருக்கும் என்று ஆர்வம் அதிகமாகி பாலாவைப் பார்க்க, இளையராஜாவுக்கு பத்மபூஷண் கொடுத்தது பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க என்றார். தனது வாயைப் பிடுங்க வலை விரிக்கப்படுகிறது என்பதை உணர்ந்த டாக்டர், கொடுக்கலாமே தப்பில்ல, எவ்வளவோ பேருக்கு தர்றாங்க, இப்ப இளையராஜாவுக்கும் கிடைச்சிருக்கு என்று, மையமாகப் பேசி ஜகா வாங்கிக் கொண்டார். பொறி பறக்கும் என்று நினைத்த மற்ற டிவிட்டர்களுக்கு ஏமாற்றம்.
போட்டோவை ஏற்றிவிட்டு அடுத்த வரியை எழுதுவதற்கு முன் உதயம் தியேட்டரில் தமிழ்ப்படம் பார்த்துவிட்டு வந்துவிட்டேன். வீடு வருவதற்குள் படம் மறந்து போனாலும், அன்றைய சந்திப்பில் தமிழ்படம் பற்றிய பேச்சு ஞாபகம் வந்தது.

தமிழ்படத்தைப் பற்றி பேச்சு வந்தபோது, ஒரு தடவை பார்க்கலாம். நேற்று நான், மனைவி,மகள் மூவரும் போய்விட்டு வந்தோம் என்றார் @ommachi. அத இரசிக்கணும்னா பழைய படமெல்லாம் பார்த்திருக்கணும், இல்லன்னா சிரிப்பு வராது என்றார்கள் @icarsprakash, @spinesurgeon, @njganesh. அப்படின்னா எனக்கு ஒத்து வராது என்றார் வெங்கட். ஆனா இதை தலைவர் ஃபேமிலி தவிர யார் எடுத்திருந்தாலும் ரிலீஸ் பண்ணியிருக்க முடியாது, என்ன சொல்றீங்க என்று மீண்டும் பாலா டாக்டருக்கு கொக்கி போட, டாக்டர் சிக்கவே இல்லை. ஆமாம், ஆமாம் என்று என்னைப் பார்த்து (ஏன் என்னைப் பார்த்து?) சிரித்தார்.


இடையில் மீண்டும் என்னுடைய ”அவர்” படம் பற்றி பேச்சு வந்தபோது MP3 பிளேயரில் வைத்திருந்த பாடலை @anbudan_bala, @ommachi, @njganesh, @icarsprakash, @madhankarky @vickytamil @lavanya ஆகியோர் தனித்தனியாகக் ஆளுக்கொரு பாடலாகக் கேட்டார்கள். மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு 5 நிமிஷம் நீங்க கண்ணை மூடினா, உங்க பாடல்களை சுட்டு நெட்டுல போட்டுலாம் என்று @njganesh கிண்டலடித்தார்.

இவங்க எல்லாரையும் இதுக்கு முன்னாடி மீட் பண்ணியிருக்கீங்களா என்று மறுபடியும் ஒரு சந்தேகத்தை கிளப்பினாள் என் மனைவி. #twitter-meet-doubt-04. @ommachi, @icarsprakash தவிர மற்றவர்களை இப்போதுதான் நான் பார்க்கிறேன். ஏன் கேட்கிற? என்றேன். இல்ல எல்லாரும் பல வருஷ ஃபிரண்ட்ஸ் மாதிரி ஜாலியா ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் பண்ணிக்கறீங்களே, அதனாலதான் கேட்டேன் என்றாள்.


நான் பதில் சொல்லும்முன் @madhankarky மணலில் ஏதோ எழுத ஆரம்பித்திருந்தார்.
க - கா - கி - கீ -கு -கூ
ப - பா - பி - பீ - பு -பூ
ம - மா - மி - மீ - மு - மூ
இந்த எழுத்து வரிசைகளின் எழுதும் பாணியை உற்று நோக்குங்கள். “அ, ஆ, இ, ஈ“ ஒலி வரை எல்லாம் ஒரே மாதிரி உள்ளன. ஆனால் “உ“ ஒலி வரும்போது எழுதும் முறையில் “கு“ மேல் நோக்கி சுழிக்கப்படுகின்றது. ”வு” கீழ்நோக்கி ஒரு நேர்கோடாக இறங்குகின்றது. அதே போலத்தான் ”ஊ” ஒலியுள்ள எழுத்துக்களும் அடிப்படை ஒலியில் ஒன்றாக இருந்தாலும் எழுதும் முறையில் மாறுபடுகின்றன. இதை சரி செய்து அனைத்துக்கும் ஒரே மாதிரி எழுத்து வடிவம் கொண்டு வந்தால் தமிழுக்கென கீபோர்டு வடிவமைப்பதும், குழந்தைகளுக்கு தமிழ் எழுதக் கற்றுத் தருவதும் சுலபமாகிவிடும், என்று @madhankarkyயும், @spinesurgeonம் படு தீவிரமாகச் சொன்னார்கள்.

சிங்கப்பூரில் தமிழ் எழுத்துப் பயிற்சி என வரும்போது, “ட ப” போன்ற வளைவற்ற எழுத்துக்களில்தான் ஆரம்பிக்கப்படுகின்றது. போகப் போக ”க, வ” போல வளைவுகளுக்குப் பழக்கி கடைசியாக “இ” சொல்லித் தரப்படுகின்றது என்று டிவிட்டர் மீட்டிங், செம்மொழி மாநாடு போல வித்தியாசம் காட்டத் துவங்கியது. ஆனால் @ommachi மற்றும் venkat இந்த பயிற்சி முறை பம்மாத்து என்றார்கள். வளைவுகளை உடனே பழக்க வழி கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, தள்ளிப் போடுவது வேஸ்ட் என்றார்கள்.

திடீரென பேச்சு எல்.கே.ஜி லெவலில் இருந்து, டாப் கியருக்கு மாறியது. என்னதான் தமிழுக்கு வக்காலத்து வாங்கினாலும் இஞ்சினியரிங் மற்றும் மருத்துவத்தை ஆங்கிலம் தவிர்த்து தமிழில் மட்டும் படிக்க முடியுமா? என்று @icarsprakash கேட்டதும், ஏன் முடியாது என்று @ommachi சூடாகிவிட்டார். படிக்க முடியாது என்பது ஒரு mind set தான் என்று வெங்கட் அவரை ஆமோதித்தார். ஜப்பானில், சைனாவில் எல்லாம் ஆங்கிலம் கிடையாது. அவர்களில் டாக்டர் இல்லையா, சயிண்டிஸ்ட் இல்லையா என்று @ommachi கேட்க, ஆனால் அதற்கு மேல் படிக்க ஆங்கிலம் கட்டாயம் தேவையாமே என்று யாரோ சொல்ல... அதற்கு மேல் என்றால் நோபல் பரிசு வாங்க தமிழ் போதாதுன்னு சொல்றீங்களா? நான் இதை மறுக்கிறேன் என்று ஆங்கிலம் தெரியாமல் நோபல் பரிசு வென்ற ஒரு ஜப்பானியரைப்  பற்றிச் சொன்னார்.

ஆனா ஒண்ணுங்க, ஏகப்பட்ட திறமைசாலிகள் இருக்காங்க, இந்தியாவில ஐ.டி. முன்னேறிடுச்சு, அது இதுன்னு சொல்றாங்க, ஆனா ஒரே ஒரு புராடக்டாவது இந்தியர்கள் உருவாக்கினதுன்னு இருக்கா? இதே எம்.பி.3 பிளேயர்லயே பாட்டு கேட்கறீங்க. பாட்டுக்கு Tag இங்கிலீஷ்லதான் இருக்கு. இதை தமிழ்ல பண்ண முடியாதா? ஏன் யாரும் முயற்சிக்கல? என்று வெங்கட் காட்டமாகக் கேட்டார்.

அதற்கு யார் என்ன பதில் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் என் மனைவியின் கடைசி சந்தேகம் #twitter-meet-doubt-05. அவர் யாரு என்றாள் @madhankarkyயைக் காட்டி. இவ்வளவு நேரம் கழித்து இந்த சந்தேகமா என்று தோன்றினாலும், @madhankarkyயையே பதில் சொல்லச் சொன்னேன். அவர் என் பெயர் மதன் கார்க்கி, அண்ணாமலை யுனிவர்சிட்டியில் தமிழ் கம்ப்யுட்டடிங் பற்றி வகுப்பு எடுக்கிறேன், என்று முடித்துக் கொள்ள, முக்கியமா அவர் கவியரசு வைரமுத்துவின் மகன் என்று @spinesurgeon சொல்ல, ஏங்க அவர் வைரமுத்துவோட பையன்னு ஏன் சொல்லல என்று மனைவி ஆதங்கப்பட்டார். அவரே அடக்கமா இருக்கும்போது, நான் என்னத்தை சொல்ல என்றேன். @lavanyaவும் என் மனைவியைப் போலவே வியக்க ஆரம்பித்திருந்தார். அதே நேரம் இருட்ட ஆரம்பித்திருந்ததால், அனைவரும் புறப்பட முடிவானது. ஆளாளுக்கு ஃபோன் நம்பர்களையும், டிவிட்டர், இ-மெயில் ஐடிகளையும் பரிமாறிக் கொள்ள, மணி 7.30, கடைசி நேர ஃபிளாஷ்கள் மின்னின.

@lakshmi கடைசிவரை பார்வையாளராகவே இருந்தார். அரட்டையில் வெகு சில வார்த்தைகளே பேசினார் என்பது பெட்டிச் செய்தி. @lavanjaj அவ்வப்போது சில கேள்விகளைக் கேட்டார், பதில்களை காதில் வாங்கிக் கொண்டாரா என்பது தெரியவில்லை. என் மனைவி டிவிட்டர் அல்ல என்பது உபரிச் செய்தி.

விடைபெறும் போது எனக்குத் தோன்றியது இதுதான். சந்திப்பு ஏற்பாடானது டிவிட்டர் வழியாக இருக்கலாம். ஆனால் சந்திப்பை சாத்தியமாக்கியது மனிதர்களை மனிதர்கள் புரிந்து கொள்ள உதவும் ஆர்வம் தான். இந்த ஆர்வம் அடிக்கடி சந்திக்கும் நட்பாக மாறலாம் அல்லது டிவிட்டுகளாகவே தொடரலாம்.

சந்திப்புக்கான பஞ்ச் லைன், அதே இரவில் @anbudan_bala விடமிருந்து வந்தது. அவர் @madhankarky வைரமுத்துவின் மகனா?  சொல்லவே இல்லையே என்று டிவிட்டியிருந்தார். டிவிட்டுகள் தொடரும்.

கடற்கரையில் தமிழ் டிவிட்டர்கள் - 02

கதை, கவிதை என கற்பனை சமாச்சாரங்களை எழுதும்போது, நேற்று நிறுத்தி, அடுத்த மாதம் தொடரலாம். நாம் விரும்பும் எதையும் எழுதலாம். ஆனால் சந்திப்புகளை உடனே எழுதிவிட வேண்டும். இல்லையென்றால், மனைவியின் ”வரும்போது இதயம் நல்லெண்ணெய் வாங்கிட்டு வாங்கதான்” ஞாபகத்தில் மிதக்கிறது. சந்திப்பில் நடந்ததெல்லாம் மறந்து போகிறது. நேற்று கே.கே. நகர் முனுசாமி சாலை வீட்டுக்குப் பக்கம் என்பதால் @parisalkaaran புத்தக வெளியீட்டு விழாவிற்குப் போயிருந்தேன். போன ஞாயிற்றுக் கிழமை பீச்சில் சந்தித்த @athisha வாசலில் எதிர்ப்பட்டு, இந்த ஞாயிற்றுக் கிழமை நீங்கயாரு என்றார்?

இப்படி சில யாருக்களும், நடந்தது என்னக்களும், அப்புறம்களும் மனதில் கபடி ஆடும்போது, கடற்கரையில் தமிழ் டிவிட்டர்கள் - 02 வை எழுத ஆரம்பிக்கிறேன். முன் பின் பார்த்திராதவர்கள், பீச் போல பொதுவான இடத்தில் சந்திக்கும்போது, காந்தி சிலை அருகில் என்று சொன்னால் அங்கேயே நின்றுவிட வேண்டும். கால் வலி என மணலில் நகர்ந்தால் தாமதமாக வருபவர்களை மிஸ் பண்ணிவிடும் அபாயம் உள்ளது. டிவிட்டர்களுக்கென்று தனியாக அடையாளம் எதுவும் இல்லை. அதனால் மற்றவர்கள் வந்துவிட்டார்களா என்று நொடிக்கொரு முறை திரும்பிப் பார்க்கும்போது சுண்டல் பையன்கள், குதிரை சவாரி அழைப்பர்கள் தவிர மற்ற அனைவருமே டிவிட்டர்கள்போலத்தான் இருக்கிறார்கள். அரட்டை காத்திருத்தலாக மாறுவதை தவிர்க்க யாராவது ஒருவர் முன்வந்து தன் மொபைல் நம்பரை அனைவருக்கும் தந்து காந்தி சிலைக்கு முதலிலேயே வந்து காத்திருக்க வேண்டும். #twitter-meet-tips-01
 சந்திப்பின் முதல் பாகத்தில் டிவிட்டர்கள் சந்திப்பு பற்றி சில கேள்விகள் கேட்டிருந்தேன். யாரும் (டிவிட்டரில் கூட) பதில் சொல்லவில்லை. மீண்டும் பதிலை எதிர்பார்க்காமல் இன்னொரு கேள்வி.
டிவிட்டர் வந்தவுடன் பிளாக் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது என்கிறார்கள். ஒப்புக் கொள்கிறீர்களா?
பதில் எதுவாக இருந்தாலும் பதிலாக இருக்கட்டும், எதிர் கேள்வியாக இல்லாமல்.

”எங்கள நெருங்கி உட்கார சொல்லிட்டு நீங்க எங்க எஸ்கேப்பு”, என்று இடைவேளை முடிந்து திரும்பி வந்த @icarusprakashஐ  கலாய்த்தார் @njganesh. அவர் பதில் மேலேயே, மற்ற டிவிட்டர்கள் காந்தி சிலைக்கு அருகிலேயே நிற்பதாக @vickytamil கண்டுபிடித்து, அறிவித்து அவர்களை வரவேற்க, மற்ற டிவிட்டர்களும் வந்து சேர்ந்தார்கள்.  பெயிண்ட் பால் விளையாட்டில் மாறி மாறி எதிராளியின் மேல் பெயிணட் தெளிப்பதைப் போல, அவர்கள் வரும்போதே மாறி மாறி நாங்களும் அவர்களும் கிளிக்க ஆரம்பித்துவிட்டோம்.

கிளிக் முடிந்ததும் நிறைய புன்னகைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. சீனியர் என்று டிவிட்டரில் அன்போடு கலாய்க்கப்படும் @anbudan_bala ஜீனியர்கள் போல டி-ஷர்டில் இளமையாக வந்தார். டைரக்டர் எப்படி இருக்கீங்க? வசந்தபவன் மீட்டிங் மிஸ் ஆனதால, நான் முக்கியமா உங்களையும், @icarusprakashயும்தான் பார்க்க வந்தேன். @ommachi - @lakshmi தம்பதியினர் புன்னகைத்ததும், நிச்சயம் நீங்க வந்துடுவீங்கன்னு தெரியும் என்றார். . நாங்க வந்து ரொம்ப நேரமாச்சு. காந்தி சிலைன்னு சொன்னதும் அங்கேயே நின்னுட்டோம், என்று புகாராக இல்லாமல் தகவலாகச் சொன்னார் @spinesurgeon. போட்டோ எடுக்கும்போது, பார்த்து கிளார் அடிக்கும் என்றார் பளபள வழுக்கையுடன். ஆனால் டிவிட்டர் போட்டோவை விட நேரில் மிக மலர்ச்சியாக இருக்கிறார். @njganeshன் அதகளமான கைகுலுக்கலில், யாருக்காவது கைவலித்திருக்கும். @luckykrishna, @athisha மற்றும் @icarusprakash ஆகிய மூவரும் வலைப் பிரபலங்கள் என்பது, டிவிட்டர்கள் டீம்-2ன் ”ஓ..தெரியுமே” புன்னகையிலேயே புரிந்தது. இந்த அறிமுகங்களில் பெண்கள் எப்படி கலந்து கொண்டார்கள் என்பதை கவனிக்கவில்லை.

ரொம்பக் கூச்சமாக அறிமுகம் செய்து கொண்டவர் @madhankarky. கல்லூரியின் கடைசி பெல் வரை காத்திருந்து படித்து வந்த மாணவர் போல இருந்தார். @spinesurgeonக்கு இணையாக தலையில் பளபளா காட்டியவர் @rgokul. பென் டிரைவ் போல செதுக்கிய தாடியில் வசீகரமாகத்தான் இருந்தார். அனில்கும்ப்ளே போல தோற்றமளித்த @rajeshpadman பெர்முடாஸில் ஹாய் என்றார். பக்கத்துலயே வீடும் ஆஃபீசும் இருக்காம். தினசரி வாக்கிங் வருவது போல கேஷீவலாக வந்திருந்தார். எல்லா அறிமுகங்களையும் பொறுமையாக கிளிக் செய்து கொண்டிருந்த வெங்கட்டின் முகத்தில் தொடர்ந்து மென் சிரிப்பு, கையிலிருந்த காமிரா கிளிக்கிக் கொண்டே இருந்தது. ஆனால் இருவாரமாகியும் இன்னமும் அவரிடமிருந்து ஃபோட்டோக்கள் வரவில்லை.

எல்லோரும் அமர்ந்தவுடன் வட்டம் பெரிதானது. ஏற்பாடு செய்தவர்தான் வரவேற்புரை என்று @njganesh அறிவிக்க, ஐயய்யோ நான் இல்ல என்று @vickytamil நழுவப்பார்த்தார். பிறகு தைரியமாகி, பேச்செல்லாம் கிடையாது. சுய அறிமுகம் போதும் என்று தன் பெயரையும், டிவிட்டர் ஐடியையும் கூறினார், செல்வக்குமார் - @isr_selva, பிரகாஷ்-@icarusprakash, Dr.Bruno-@spinesurgeon என ஒவ்வொருவராகத் தொடர maddhankarky-@madhankarky என்றார் மதன். அவ்வளவுதான் அடுத்த வினாடி, ரெண்டாம் வாய்ப்பாடை தப்பாகச் சொன்ன மாணவனை மிரட்டும் வாத்தியார் போல, அப்படின்னா என்று @njganesh அவரை அதட்டினார். மதன் ஒரு கணம் ஜெர்க் ஆனாலும் பெயரும், ஐடியும் ஒன்றுதான் என்று நிதானமானார்.

ஒரு கேள்வி - பெயரையும், டிவிட்டர் ஐடியையும் சொன்னால் அதற்குப் பெயர் சுய அறிமுகமா?
பதில் சொல்வதற்கு முன் ஒரு விஷயம். முந்தைய வரிக்கும் இந்த வரிக்கும் இடையில் 72 மணி நேரம் இடைவெளி இருக்கிறது. இதற்கு மேல் தாமதித்தால் எல்லாம் மறந்து போகும் என்ற பயத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

அரட்டையின் ஒரு பகுதி, ஜெயமோகன் எப்படிங்க இவ்வளவு எழுதறார் என்று ஆச்சரியத்தில் ஆரம்பித்து, ஏன் எழுதறார் என்ற கேள்வியில் முடிந்தது. ஏன்னா மக்கள் கூட கிடைக்கிற Connectivityதான் என்று தீர்ப்பு வழங்கினார் @luckykrishna. அதனால என்ன யூஸ்? பணமும் கிடையாது என்று சந்தேகம் கிளப்பிய லாவண்யா, நீங்க ஏன் சாருவை ரொம்ப சப்போர்ட் பண்றீங்க என்று அதிஷாவை நோக்கி கேள்வியை வீசினார். ஏன்னா சின்ன வயசுல இருந்து எனக்கு அவரைத் தெரியும். வளர்ந்து அவரை மாதிரியே எல்லா மேட்டர்லயும் பெரிய ஆளா ஆகணும்னு எனக்கு ஒரு ஆசை இருந்தது, என்றார் அதிஷா. எல்லா மேட்டர்லயும்னா கட்டிங் மேட்டர்லயா என்றார் @icarusprakash.


ஆனா ஒண்ணுங்க வெறும் டெக்ஸ்ட் ஃபைல்லயே சர்வரை ஃபுல்லாக்கிய பெருமை ஜெயமோகனுக்குதான் என்றார் @njganesh. நீங்கதான் சர்வரை மெயின்டெயின் பண்றீங்களா என்று @rajeshpadman கேள்வி கேட்க, ஆமாம் என்றார். ஜெயமோகன் மாதிரி ஆளுங்க பக்கம்பக்கமா எழுதறாங்க ஆனா ஒரு பக்கத்துக்கு மேல புரியல, என்றவர் @vicktamil? இவங்கள்லாம் பரவால்ல, சிலபேர் தமிழ்லதான் எழுதுவேன், இங்கிலீஷ் வார்த்தையை தொடவே மாட்டேன்னு அடம்பிடிக்கிறதெல்லாம் கொஞ்சம் அதிகம் என்றார் @spinesurgeon. ஆமாம் என்ற ஆமோதிப்பு குரல்களுக்கிடையில் @TBCDயின் தமிழ்பிடிவாதம் கொஞ்சம் வறுபட்டது. Scanஐ சுகேன் என்பதும், Firefoxஐ நெருப்பு நரின்னும் சொல்றதெல்லாம் காமெடி என்று  யாரோ சொல்ல, சுஜாதாவே அப்படி எழுதியிருக்காருங்க என்று இன்னொரு யாரோ (@spinesurgeon அல்லது @anbudan_bala) சொன்னார்கள். அட அவர் நகைச்சுவைக்காக அப்படி எழுதியிருப்பாருங்க என்று நான் சொன்ன போது, @lakshmi 5வது முறையாக எழுந்து சென்று மொபைலில் பேசிவிட்டு வந்தார். ஜெயந்தியும், லாவண்யாவும் 3வது முறையாக தங்களுக்குள் எதற்க்காகவோ சிரித்தார்கள்.அதிஷாவும், @luckykrishnaவும் 4வது முறையாக நாங்க (கிழக்கு பதிப்பகம்) உலக சினிமாவுக்கு புறப்படணும் என்றார்கள். உடனே @spinesurgeon நீங்க போங்க, பின்னாலயே நானும் அரை மணியில வர்றேன் என்றார். இந்த சந்தடியில் திடீரென நமது முன் ஸ்வீட் பாக்ஸ். யாரு கொடுத்தது என்று நிமிர்ந்தால் பூர்ணகும்ப ஸ்வீட்ஸ் வழங்கியவர் நான்தான் என்ற புன்னகையுடன் @madhankarky.


ஸ்வீட் சாப்பிட்டு முடிந்த பின், நாங்க புறப்படறோம் என்று எழுந்துவிட்டார்கள் அதிஷாவும், @luckykrishnaவும். எல்லோரும் டாட்டா சொன்னபோது, ஒரு நிமிஷம் குரூப் போட்டோ எடுத்துக்கலாம் என்றவர் வெங்கட். சரி என்று ஆளாளுக்கு போஸ் கொடுக்க தயாராகி நிற்க காமிராவுடன் நின்றவர்கள் வெங்கட்டும், மதன் கார்க்கியும். பிறகு வெங்கட்டையும் நிற்கச் சொல்லிவிட்டு இரண்டு காமிராக்களையும் தானே இயக்கிய மதன் எந்த குரூப் போட்டோவிலும்  இல்லை.

பதிவு ரொம்ப நீளமாக இருந்ததால், வெட்டப்பட்ட பகுதிகள் அடுத்த பகுதியில்.

Tuesday, February 9, 2010

கடற்கரையில் தமிழ் டிவிட்டர்கள் - 01

நிலம் ஒன்றே,
சேரிக்கும் சீவாலயத்துக்கும் ஜலம் ஒன்றே,
அலம்புவதற்க்கும் பூசைக்கும் குளம் ஒன்றே,
தன்னைத்தான் அறிந்தவனுக்கே . . .

இதை பேச்சுப் போட்டியில் பேசி பரிசு வாங்கி மறந்தவர்களும், மறக்காவிட்டாலும் பின்பற்ற முடியாதவர்களும், மறந்தாலும் பின்பற்ற முயற்சிக்கிறவர்களும் ஒன்று கூடி கும்மியடிக்கிற ஆன்லைன் மடம் டிவிட்டர்.

தினப்படி வேலைகளைத் தவிர்த்து, டிவிட்டரைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தால் சங்க காலம் முதல், அவதார் காலம் வரை 140 எழுத்துகளில் சுருங்கிய தகவல்கள் சற்றும் எதிர்பாராமல் கிடைக்கலாம். ஆனால் அத்தனையும் சளைக்காமல் ஓடும் நதி போல சளசளவென விரைவாக . . .

சரி எதற்க்காக இந்த டிரையலர்? டிவிட்டர் நதியில் தகவல்களையும், விமர்சனங்களையும், வெற்று அரட்டைகளையும் அள்ளிக் கொட்டுபவர்கள் நேரில் சந்திக்க நேர்ந்தால்? பிப்ரவரி 7 ஞாயிற்றுக்கிழமையில் அப்படி ஒரு சந்திப்பு மெரினா பீச்சில் காந்தி சிலை அருகில் நிகழ்ந்தது.

சந்திப்பை பற்றி துவக்குவதற்குமுன் ஒரு கேள்வி. டிவிட்டர்கள் சந்திப்பு எதற்கு?
ஏய் . . .
வாடா சும்மா போய் யாரெல்லாம் வராங்கன்னு பார்த்துட்டு வரலாம்.
Bee . . . மாதிரி நேரில் போய் ரெண்டு கொட்டு கொட்டலாம்.
சீய் . . . இந்த ஆளு அவ்வளவுதானா/இவ்வளவு பெரியவனா என்று நொந்து/வியந்து போகலாம்.
டீ . . . பிஸ்கெட்டை அங்க போய் ஓசியில சாப்பிடலாம்.
ஈ . . . ன்னு இளிச்சு நிறைய ஃபிரெண்டுகளை சம்பாதிக்கலாம்.
ஃ . . . மேற் கூறிய எல்லாம்.
ஃ2 . . . மேற் கூறிய எதுவுமில்லை.

இதில் எது உங்கள் பதில் என்பதை யோசித்துக் கொண்டே அடுத்த வரிக்கு நகருங்கள்.

சந்திப்பு ஆரம்பித்த கதை
எழுதுவதற்கு மிட்நைட் கவிதையும், வாசிப்பதற்கு லைம்லைட் பிளாகுகளும் சிக்காத சில இரவுகளில் வெறுமனே தமிழ் டிவிட்டுகளை கவனித்துக் கொண்டிருப்பேன். அப்படிப்பட்ட ஒரு இரவில் நியுஜெர்ஸி டிவிட்டர் @njganesh நான் சென்னையில் இருக்கிறேன் என்றார். உடனே @vickytamil நாம் சந்திக்கலாமா என்று பதிலுக்கு டிவிட்டினார்.

 இடையில் வேறு வேலைகளைப் பார்த்துவிட்டு மீண்டும் நுழைந்தபோது எங்கே சந்திக்கலாம் என்று கேட்டு (@elavasam, @icarusprakash, @athisha, @luckykrishna, @anbudan_bala) டிவிட்டியவர்களின் எண்ணிக்கை கூடியிருந்தது. எந்த முன் உத்தேசமும் இல்லாமல் ஒரு சினிமா தியேட்டருக்குள் நுழைவது போல நானும் வர்றேன் என்று டிவிட்டினேன். பட்டென பவர்கட் போல டிவிட்டரே அமைதியாகிவிட்டது. என் மிட்நைட் கவிதைக்கு மிரண்டு அனைவரும் பதுங்கிவிட்டார்களோ என சந்தேகித்தபோது @mu75 எத்தனைபேர் என்று கேட்டார். நான்தான் இது வரைக்கும் ஆட்டத்திலேயே இல்லையே, இருந்தாலும் டிவி பார்த்து ஸ்கோர் சொல்வது போல ஆறோ ஏழோ என்றேன். கேட்ட அடுத்த வினாடி @priyaraju ஆஜராகி ”இந்த முறை மன்னியுங்கள், நண்பர்களே. சில உறவினர்களை நாளை சந்திக்க உள்ளேன். அடுத்த முறை சந்திப்போம்” என்று ஸ்கோரைக் குறைத்தார். அதே நேரம் பளிச்சென @vickytamil ஆஜராகி "இதுவரைக்கும் 12 + 1 பேர்" என்று ஸ்கோரை ஏற்றினார். யாரந்த +1 எனக்கேட்டதற்கு இதுவரைக்கும் பதில் இல்லை. இடையில் @elavasam காலையில் வைக்கமுடியுமா நானும் வரப்பார்க்கிறேன் என்றார். நான் மீண்டும் இடத்தையும் நேரத்தையும் சொல்லுங்க என்று கேட்டவுடன் 4 மணி காந்தி பீச் என்று ஒருவழியாக @vickytamil அறிவித்தார்.

திடீரென @ommachi ஆஜராகி ”குடும்பத்துடன் வரலாமா? ஆண்டீர் மட்டுமேவா?” என்றார். இடையில் புகுந்த @lavanyaj This tweetup is for guys alone? என்று அதையே ஆங்கிலத்தில் கேட்டார். யாரும் பதில் சொல்லாததால் @ommachi I would like to come with the kid அப்போதான் நம்மள (வசதியாய்) கண்டுகாம வுடுவாங்கோ :)  என்றவுடன் சூட்சுமம் புரிந்து நானும் மனைவி ஜெயந்தி மற்றும் மகளுடன் வருவதாக சம்மதித்தேன். ஆனால் @lakshmi ஹோம்வொர்க் செய்து தருவதாக சம்மதித்தும், என் மகள் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள். இதற்கிடையில் @anbudan_bala குடும்பஸ்தர்களுக்கு ஒரு வரவேற்பு டிவிட்டை தட்டிவிட @lavanyajவும் வருவதாகச் சம்மதித்தார்.

கடற்கரையில்
திரும்பிப் பார்க்கையில்
என் காலடித் தடங்கள் இல்லை.

எந்தக் காலத்திலோ கணையாழியில் படித்த ஹைகூவை இங்கு பயன்படுத்திக் கொள்கிறேன். என் காலடித் தடங்கள் எங்கே போனதாம் என்று கேட்பவர்கள் அடுத்த வரிக்கும், கேட்காதவர்கள் அடுத்த பாராவுக்கும் தாவலாம்.
”என் பின்னால் டிவிட்டர் நண்பர்கள் வந்துகொண்டிருந்ததால் என் காலடித் தடங்கள் மறைத்துவிட்டன” என்பது முந்தைய ஹைகூவில் எழுதப்படாத (எழுதக்கூடாத) கடைசி வரி.

காந்திசிலையை நெருங்கியபோது
@vickytamil கிட்டத்தட்ட நான் மனதில் வடித்திருந்தது போலவே தேகம். முன் நெற்றி மட்டும் அதிகம். ஆனால் ”வாங்க அவர் நான் தான் இவர்” என்று அதிர்வேட்டு போல வரவேற்ற @njganeshன் சரீரமும் சாரீரமும் (கமெண்ட் உபயம் @anbudan_bala) நான் எதிர்பாராதது. மனிதர் செம ஜாலி பட்டாசு. ஃபிங்கர் சிப்ஸ் போல பொறாமைப்பட வைத்த ஒல்லி உடம்புடன் மையமாகச் சிரித்து கைகுலுக்கி வரவேற்றார் @luckykrishna. எனக்குப் போட்டியாக @njganesh கூலிங்கிளாஸை எடுத்து மாட்டி அட்டகாசமாக போஸ் கொடுக்க காமிரா கிளிக்க ஆரம்பித்தது. ஓரிரு கிளிக்குகள் முடிவதற்கு முன் பீச்சுக்காற்றில் சுடிதார் போட்டு ஒரு காற்றாடி பறந்து வந்தது போல இருந்தது. பார்த்தால் நம்ம @lavanyaj என் மனைவி துணைக்கு ஆள் கிடைத்த சந்தோஷத்தில் லாவண்யாவிற்கு ஹலோ சொல்ல அது ஒரு கிளிக் ஆனது. கொஞ்ச நேரத்தில்
லாரிக்கு ஒதுங்குகிற மொபெட் போல @athisha வந்தார். போட்டோவுக்கு போஸ் கொடுக்க அநியாயத்துக்கும் பிகு செய்தார்.


சிறிது நேரத்தில் @ommachi @lakshmi தம்பதியர் குழந்தையுடன் வருகை தந்தனர். பரஸ்பர கைகுலுக்கல் மற்றும் குழந்தை கொஞ்சலுக்குப் பின் ”இவர் உண்மையிலேயே நியுஜெர்சிதானா?” #doubt01 என்று என் மனைவி @njganeshஐ சந்தேகித்தார். அட ஆமாங்க. நான் என் பேச்சை வச்சு என்னை சைதாப்பேட்டைன்னு முடிவு பண்ணிடாதீங்க. தமிழ்லயே டி-ஷரட் போடற அளவுக்கு பற்று அதிகமானதால என்கிட்ட அமெரிக்க வாசனை கம்மி என்றார்.

அதற்குள் பெண்கள் தனிக் கூட்டணி அமைக்க, @ommachi மட்டும் குழந்தைக்கு வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்தார். காலையில ரிப்போர்ட்டர், மத்தியானம் டிவிட்டர், அப்புறம் பிளாகர் அப்படின்னு தினசரி டிரிபிள் ரோல் பண்றோம் என்றார்கள் அதிஷாவும், லக்கியும்.அவர் திரைப்படக்குழு கதை, திரைக்கதை, வசனங்கள், பாடல்களை முடித்துவிட்டு நடிகர் நடிகைகளை தேடிக் கொண்டிருக்கிறது என்றேன் நான். விக்கி தான் சார்ந்திருக்கும் டாட்காம்கள் பற்றி ஏதோ சொன்னார்.  கணேஷ் லோக்கல் கடை ஒன்றில் கத்தரிக்காய் வாங்குவது போல செல் போன் பர்ச்சேஸ் கதையைச் சொன்னார். இதற்குள் அரை மணி நேரம் கடந்து கால் வலிக்க ஆரம்பித்ததும்,  நாம உள்ள மணல்ல போய் உட்காரலாம். மத்தவங்க மெதுவா வரட்டும் என்று முடிவானது. முதலில் வந்த டிவிட்டர் குழு காந்தி சிலையை விட்டு உள்ளே நகர்ந்தது.

நகர்ந்த பின் என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ளும் முன் இன்னும் சில கேள்விகள்.
எழுதியவை இலகுவில் மறந்து எழுதியவர்களே அதிகம் நினைக்கப்படுவதால் டிவிட்டுகளை ஜங்க் ஃபுட், ஜங்க் ஃபிக்ஷன் போல ஜங்க் சொற்கள் என்று சொல்லலாமா?
கோடம்பாக்கத்திற்கு பஸ் ரூட் சொல்வது போல எளிதாக இருப்பதால் பேப்பர் பேக், வெர்னாகுலர், மாத நாவல்கள் வரிசையில் டிவிட்டுகளை சேர்க்கலாமா?
வடிவேலு - சிங்கமுத்து மோதல்கள் போன்ற மெலிதான விஷயங்களைக் கூட தீவிரமாக அலசிக் காயப்போடுவதால் ஜங்க்கர்கள் என்று டிவிட்டர்களை அழைக்கலாமா? யோசிப்பவர்கள் இங்கேயே நிற்கவும், மற்றவர்கள் அடுத்த வரிக்கு வந்துவிடலாம்.

பீச் மணலில் வட்டமாக வசதியாக உட்கார்ந்தபின்னும் என்னை ஆச்சரியப்படுத்திய சமாச்சாரம், நமது @ommachiயின் அமைதி. கடந்த (வசந்தபவன்) டிவிட்டர்கள் சந்திப்பில் எஃப்எம் ரேடியோ போல எங்களைக் கவர்நதவர், இந்த முறை விருப்பம் கேட்ட நேயர் போல மகளுடன் காத்தாடி விட்டுக் கொண்டிருந்தார். அதற்குள் @luckykrishnaவும் @athishaவும் தங்கள் டிவிட்டர் அவதாரம் முடிவதாகவும், இனி உலகசினிமா இரசிகனாக அவதாரமெடுத்து கிழக்குப் பதிப்பகம் செல்லவேண்டுமென்றார்கள் வாட்சைப் பார்த்தபடி. இப்பதான் ஓபனிங் டைட்டில் போட்டிருக்கோம் அதுக்குள் எண்ட் டைட்டிலா?  என்று நொந்த வேளையில் பெண்கள் தங்களுக்குள்ளும், மொபைலிலும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

@njganeshன் இடிக்குரலில் புதியதலைமுறை மாத இதழின் தொடர் விளம்பரங்களைப் பற்றி பேச்சு யு டர்ன் அடித்தபோது, SRM குழு கல்விக்கென புதிய சானல் துவங்குகிறார்களாமே என்ற என் சந்தேகத்தை மறுத்தார்கள் @luckykrishnaவும் @athishaவும். டிவி பற்றி பேச்சு வந்தவுடன் தூர்தர்ஷனில் எனது நிகழ்ச்சி மற்றும் துபாய் பயண விபரங்களை கேட்டுக்கொண்டார் @vickytamil. @ommachiக்கு காத்தாடி அலுத்துவிட்டது போல, மற்றவர்கள் எங்கே என்று தூரப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.
அதே திசையில் உற்று நோக்கிய விக்கி, @icarusprakash அப்பவே வந்துகிட்டிருக்கேன்னு சொன்னாரே எங்க காணோம் என்று முணுமுணுத்தபோது, கையில் காமிராவுடன் அவர் வந்தார்.

டிவிட்டர்கள் மற்றும் பதிவர் சந்திப்புகளில் ஆளாளுக்கு ஒரு காமிரா இருப்பது வசதி. போஸ் கொடுக்கத் தேவையின்றி, அவரை விட்டுட்டோமா, நாம இருக்கோமா என்ற கவலையின்றி கிளிக்குகளுக்கிடையில் இயல்பாக அரட்டை நடக்கிறது. அதற்கு இந்த சந்திப்பை பற்றிய புகைப்படங்களே சாட்சி.
.
@icarusprakash @luckykrishna மற்றும் @athisha இவர்கள் மூவரும் சந்திப்பு எக்ஸ்பர்டுகளாக இருக்கிறார்கள். மிக இயல்பாக இணைந்து மிக இயல்பாக விலகுகிறார்கள். பல்வேறு சந்திப்பர்களைப் பற்றி காமெடியாக அலசுகிறார்கள். இன்னைக்கு நம்மளப் போலவே இன்னொரு குரூப் மஞ்ச சட்டையில சந்திக்கிறாங்க என்றார் @luckykrishna. ஆங்கிலத்தில் மட்டுமே டிவிட்டும் குழு ஒன்றிடம் நானும் வரலாமா என்று தமிழில் விண்ணப்பித்தேன். அதற்கும் ஆங்கிலத்தில்தான் பதில் தந்தார்கள் என்றார் @athisha. பைக்கை பீச்சுலயே விட்டுட்டு உலக சினிமாவுக்கு போயிட்டு வந்திடலாமா என்று @luckykrishnaவும் @athishaவும் சுறுசுறுப்பு காட்டியபோது @lavanyaj மற்றும் @njganesh ஆகிய இருவரும் அவர்களிடம் இன்டர்வியு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

@ommachi இன்னும் அதிசயமாக அமைதி காத்தார். வட்டம் பெரிசா இருக்கு கொஞ்சம் கிட்ட உட்காரலாமே என்று @icarusprakash யோசனை சொல்ல, வட்டம் சுருங்கியது. ஆனால் அடுத்த வினாடியே @icarusprakash எழுந்து கொண்டு இதோ வர்றேன் என்று கிளம்பினார். எதற்கு என்பது நான் சொல்லாமலயே உங்களுக்குத் தெரியும்.

இடைவேளை


@njganesh தனது பையை திறந்து எடுத்தது என்ன?
@anbudan_bala @spinesurgeonனிடம் கேட்ட அதிரடி கேள்வி என்ன?
@madhankarky யார் என்பது எப்போது வெளியானது?

இது போன்ற அதிரடி சஸ்பென்ஸ் கேள்விகளுடன் அடுத்த பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது.தொடர்ச்சியை படிக்க அடுத்த பதிவுக்கு காத்திருங்கள்.

Thursday, October 2, 2008

வெற்றிகரமான பதிவர் சந்திப்புக்கு 10 யோசனைகள்

ஒரே ஒரு பிளாக் எழுதுவதன் மூலம் ஒரு பதிவர் சந்திப்பை அறிவித்துவிட முடியும். ஆனால் வெற்றிகரமான சந்திப்பிற்கும், மீண்டும் மீண்டும் சந்திப்பதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும். இதோ என்னுடைய 10 யோசனைகள். வெளிநாடுகளில் இது போன்ற பதிவர் சந்திப்புகள் "வெற்றிகரமான பிசினஸ் நெட்வொர்க் சந்திப்புகளாகவும்" நிகழ்த்தப்படுகின்றன. கலந்துகொண்ட அனுபவம் எனக்கு உண்டு. இதன் மூலம் வெறும் வெட்டிச் சந்திப்பாக இல்லாமல், ஏதோ ஓரளவிற்கு உபயோகமான சந்திப்பாக மாற்றிக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு ryze.com
  1. மீண்டும் . . . மீண்டும் . . .சந்திப்பை முன் நின்று நடத்துபவர் யார் என்பது அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
  2. அவருடன் உரையாட வசதியாக ஒரு தொலைபேசி எண் அவசியம் தேவை
  3. நடத்துபவரும், அவருடைய குழுவும் அறிவிக்கப்படவேண்டும்
  4. சந்திப்பின் காரணம் பொத்தாம் பொதுவாக இருக்கக் கூடாது.
    உதாரணமாக ஒரு டாப்பிக் - "பதிவுகளின் பலன்களும், பாதகங்களும்"
  5. இது குறித்து யார், யார் பேசலாம் என்பதை முன் கூட்டியே உறுதி செய்ய வேண்டும்.
  6. சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் கட்டாயம் தேவை. உதாரணமாக . .
    வரவேற்புரை
    விருந்தினர் அறிமுகம்
    இன்றைய தலைப்பு ஒரு அறிமுகம்
    முதல் 5 பேச்சாளர்கள்
    டீ பிரேக்
    அடுத்த 5 பேச்சாளர்கள்
    நன்றியுரை மற்றும் முடிவுரை
  7. யார் வரவேற்புரை, யார் தலைப்பை அறிமுகம் செய்வது, யார் பேச்சாளர்களை அறிமுகப்படுத்துவது, யார் நன்றியுரை மற்றும் முடிவுரை வழங்குவது போன்ற அனைத்தும் முதலிலேயே தீர்மானிக்கப்படவேண்டும்.
  8. சந்திப்பிற்கான செலவுகளை எப்படி பகிர்ந்து கொள்வது என்ற தெளிவான சிந்தனை தேவை.
  9. அடுத்த பதிவர்கள் சந்திப்பு எப்போது இருக்கலாம் என்பதற்க்கான உத்தேச தேதிகள் இருக்க வேண்டும்.
  10. பதிவர் சந்திப்பிற்கென 'தனி வலைப்பூ' இருக்க வேண்டும்.