Showing posts with label june 1. Show all posts
Showing posts with label june 1. Show all posts

Wednesday, July 16, 2014

கேப்போம்ல : முதலமைச்சராக செயல்பட இன்னும் என்னதான் வேண்டும் ஜெயலலிதாவிற்கு?

ஒரு முதலமைச்சராக செயல்பட இன்னும் என்னதான் வேண்டும் ஜெயலலிதாவுக்கு?
சட்டசபையில் எதிர்கட்சிகளே கிடையாது. பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட எதிர்க்கட்சி.
இங்கு இவர் ஆட்சி. மத்தியில் அவருக்குப் பிடித்த மோடியின் ஆட்சி.
அவருடைய எதிரிகள் கருணாநிதியும், காங்கிரசும் வீழ்ந்து கிடக்கிறார்கள்.

ஆனாலும் இன்னமும் ஹோல் சேல் மளிகைக்கடை முதலாளி போலவே செயல்படுகிறார். தான் முதலமைச்சர் என்பதையே மறந்துவிட்டார். 

எதைக் கேட்டாலும் மலிவு விலை கொசுறு கொடுத்து ஃபோட்டோ எடுத்துக்கொள்கிறார்.
மின்தடை இருக்கே என்றால், மின் தடை இல்லை மின்வெட்டுதான் இருக்கு என்று வார்த்தைகளால் ஏமாற்றுகிறார்.

இலங்கைப் படையினரால் இன்னமும் மீனவர்கள் கைது தொடர்கிறதே என்றால், கச்சத் தீவை மீட்போம் என்கிறார். எப்போது என்றால் காவிரிக்காக போராடுவோம் என்கிறார். காவிரி என்ன ஆச்சு என்றால் முல்லைப் பெரியாருக்கு தாவுகிறார். முல்லைப் பெரியார் பிரச்சனைக்கு என்ன வழி என்றால் மத்திய அரசை கை காட்டுகிறார். மத்திய அரசு அந்த 7 பேரை விடுதலை செய்யுமா என்றால், கருணாநிதி ஆட்சி சரியில்லை என்கிறார்.

நடந்துகொண்டிருப்பது இவருடைய ஆட்சி. ஆனால் இவர் கருணாநிதி ஆட்சி நடக்கிறது என நினைத்துக்கொண்டிருக்கிறாரோ என்று சந்தேகம் வருகிறது. அவரை மக்கள் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவரை எதிர்த்து அறிக்கைவிட்டால் அதுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது போல செயல்படுகிறார்.

டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவது. அந்த வருமானத்தில் மலிவு விலை அம்மா பிராண்டுகளை அறிமுகப்படுத்துவது, கருணாநிதியை திட்டி அறிக்கை விடுவது. இவற்றைத் தவிர இந்த 3 ஆண்டுகளில் உருப்படியாக எதையுமே செய்யவில்லை ஜெயலலிதா.

மீண்டும் கேட்கிறேன், அரசியல் வானிலை முற்றிலும் அவருக்கு சாதகமாக இருந்தாலும் ஏன் செயல்பட மறுக்கிறார்? சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அவரே கற்பனை செய்யாத அளவிற்கு மக்கள் அரசியல் வெற்றியை தந்திருக்கிறார்கள். பதிலுக்கு கொஞ்சமாவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். நீண்டகாலத்திட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். ஆனால் 3 ஆண்டுகள் ஆனபின்பும் அதற்கான அறிகுறியே இல்லையே. இன்னும் என்னதான் வேண்டும், ஜெயலலிதாவுக்கு?

#கேப்போம்ல  

Tuesday, June 17, 2014

மின்தடைக்கு எதிராக கொந்தளிப்பு! சென்னை ஸ்டைல்!

நேற்று சென்னை மாநகர் முழுவதும் திடீர் திடீர் என மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஃபேனோ ஏசியோ இயங்கவில்லை. இதனைத் தொடர்ந்து தூக்கமிழந்த மக்கள் தமிழக அரசையும், தமிழக மின் துறையையும் எதிர்த்து கொந்தளிப்புடன் ஃபேஸ்புக்கிற்குள் நுழைந்தார்கள்.

நுழைந்தவேகத்தில் குஷ்பு திமுகவிலிருந்து விலகியதை கிண்டலடித்து ஸ்டேட்டஸ் போட்டார்கள். மேலும் சிலர் #IsupportKushbu என்று டிவிட்டரில் குஷ்புவுக்கு ஆதரவாக ட்வீட் செய்தார்கள். ஆனாலும் கோபம் அடங்காத சிலர் மானாட மயிலாட புகழ் நமீதாவையும் கேலி செய்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

மக்களின் எதிர்ப்பைக் கண்டு  அதிர்ச்சியடைந்த தமிழக அரசு அவசரம் அவசரமாக இந்த மாதத்தை மேமாதம் பார்ட் -2 என அறிவித்தது. இந்த  அவசர அறிவிப்பைத் தொடர்ந்து மே மாதம் இன்னும் முடியவில்லை என்றும் அதனால் ஜீன் 1ம் தேதியும் இன்னும் வரவில்லை என்பதையும் சென்னைவாசிகள் உணர்ந்து கொண்டார்கள்.

இந்த நிலையில் மொபைலிலும் ஐ-பேடிலும் சார்ஜ் தீர்ந்தவுடன் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரிலிருந்து லாக் அவுட் செய்து மின்தடைக்கு எதிரான போராட்டம் வாபஸ் என்று அறிவித்தார்கள்.

மேலும் போராட்டக்காரர்களில் சிலர் மிகவும் திருப்தியுடன் குஷ்பு பிஜேபியில் சேர்ந்துவிட்டாராம் என்று சந்தோஷமாக வதந்திபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மக்கள் மீண்டும் கொந்தளிக்க வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து போராட்டத்தை சமாளிக்க மேமாதம் பார்ட்-3ஐ அமல்படுத்தி ஜீன்-1ம் தேதியை மேலும் தள்ளிவைக்க ஏற்பாடுகள் நடப்பதாக நம்பத்தகுந்த அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.