Tuesday, September 22, 2009

அவருக்காக என் பெயரை மாற்றலாமா?

எனக்கு என் பெற்றோர்கள் வைத்த பெயர் செல்வக்குமார். 60களில் வெளிவந்த மேஜர் சந்திரகாந்த் படம் மற்றும் நாடகத்தில் என் தந்தை(ஐ.எஸ்.ஆர்) நடித்துள்ளார். கே.பாலச்சந்தரின் இந்த படைப்பு அட்டகாசமான ஹிட். அதில் எனது தந்தை ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் செல்வம். அந்தப் படம் வெளியான நேரத்தில் நான் பிறந்ததால் எனக்கு செல்வக் குமார் என்ற பெயர் வைத்தார்களாம். ஆனால் (பெண்)நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட அனைவரும் என்னை செல்வம் என்றே அழைத்தார்கள், அழைக்கிறார்கள்.

இதில் விந்தை என்னவென்றால் செல்வம் என்ற பெயர் செல்வக்குமார் என்று ஆனது. ஆனால் செல்வக்குமாரை அனைவரும் செல்வம் என்றுதான் அழைக்கிறார்கள். கல்லூரியில் படித்த மூன்று நண்பர்கள் (கிருஷ்ணன், விஜயகுமார், வெங்கடேசன்) மட்டும் என்னை செல்வா என்று அழைப்பார்கள். திருமணத்திற்கு முந்தைய நாள் வரை நான் தாடி வைத்திருந்தேன். அது வரையில் சில நண்பர்கள் என்னை “டேய் தாடி” என்று அழைப்பார்கள்.

கல்லூரி (படிப்பதாக ஊர் சுற்றிய) காலத்திலேயே என் பெயர் ஆனந்த விகடனில் வர ஆரம்பித்தது. இரா.செல்வக்குமார் என்ற பெயரில் கதைகளும், கவிதைகளும், துணுக்குகளும் வெளியாகின. ”இராமச்சந்திரன்” என்பது என் தந்தையின் பெயர். அதனால் ஆர்.செல்வகுமார் என்ற பெயரை இரா.செல்வக்குமார் என்று பிரசுரிக்க கொடுத்தேன்.

வில்லன் நடிகர் திரு.செந்தாமரையின் மகன்கள் தென்னவன் மற்றும் வள்ளுவன் ஆகியோர் எனது பள்ளிக்கால நண்பர்கள். திரு.செந்தாமரை அவர்கள் நியுமராலஜயில் கெட்டிக்காரர். அவரின் பாதிப்பு அவருடைய மகன்களுக்கும் உண்டு. ஒரு நாள் தென்னவன் ஏதேதோ கூட்டிப் பார்த்துவிட்டு இனிமேல் ஒரு 'K' சேர்த்து R.Selvakkumar என்று எழுது, கையெழுத்துப் போடு என்று சொன்னார். நான் அரை மனதுடன் அப்படியே செய்ய ஆரம்பித்தேன். எனது கையெழுத்துகளில் இன்னொரு 'K' சேர்ந்து கொண்டது. போகப்போக கையெழுத்து சுருங்கி selv வரையில்தான் இருந்தது. மற்ற எழுத்துக்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. ஆனால் ஒரு சில விசிட்டிங்கார்டுகளில் R.Selvakkumar என்றும், ஒரு சில விசிட்டிங்கார்டுகளில் R.Selvakumar என்றும், தொடர்ந்து குழப்படி செய்து கொண்டிருந்தேன்.

கல்லூரி முடிந்து Zee TVயில் கால் பதித்த காலத்திலிருந்து டைட்டிலில் (இயக்கம்) ISR.SELVAKUMAR என்று பெயர் போட்டுக் கொள்ள ஆரம்பித்தேன். மீடியா நண்பர்கள் அனைவரும் என்னை செல்வக்குமார் என்றே அழைக்க ஆரம்பித்தார்கள். அதாவது டிவி உலகில் என் பெயர் செல்வக்குமார், மற்றவர்களுக்கு என் பெயர் செல்வம். அது இன்று வரையில் அப்படியே தொடர்கிறது.

இடையில் கிட்டத்தட்ட 10 புத்தகங்கள் எழுதினேன். அனைத்தும் கணினி தொடர்பானவை. முதன் முதலாக எனக்கு ஆங்கிலத்தில் எழுதும் வாய்ப்பு வந்தது. ஆங்கிலத்தில் சுமார் என்றாலும், கம்ப்யுட்டரில் ஞானம் உண்டு என்பதால் தைரியமாக ஒப்புக் கொண்டு எழுதினேன். புத்தகம் வெளியாகும் நேரத்தில் (ஜோதிடத்தில் ஆர்வமுள்ள) நண்பர் ஜெயகோபி எனது பெயரை ISR.SELVA என்று பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டார். நானும் அப்படியே செய்தேன். ஜெயகோபி (மெட்டி ஒலி, எம்டன் மகன்)எடிட்டர் ஜெயக்குமாரின் மூத்த சகோதரர். இருவருமே என் நண்பர்கள்தான்.

2006ல் எனது பள்ளிக்கால நண்பர் சுப்பையா இசக்கி கிரியேஷன்ஸ் என்ற ஒரு படத் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். முதல் படைப்பாக ”சக்ஸஸ்” என்ற திரைப்படத்தை தயாரித்தார். திரு. ராம்குமார் அவர்களின் புதல்வரும், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பேரனும் ஆகிய துஷ்யந்த் அறிமுகமான படம். அந்த திரைப்படத்தில் புரொடக்ஷன் மேனேஜர் முதல் நடிகர் மற்றும் இணை இயக்குனர் வரை பல்வேறு பொறுப்புகள் ஏற்று ஆல் இன் அழகு ராஜாவாக பணியாற்றினேன். டைட்டிலில் ISR.SELVA என்றே போட்டுக் கொண்டேன்.

இந்த நிலையில் சென்ற மாதம் திடீரென என் பெயரை மாற்றலாம் என்று எனக்கும் என் சித்தப்பாவுக்கும் தோன்றியது. உடனே சித்தப்பாவின் நியுமராலஜி நண்பர் ஒருவரை சந்தித்தோம். அவர் ”சந்தன்” என பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்றார். எனது மனைவி, அம்மா, தம்பி-தங்கைகள் உட்பட அனைவரும் சந்தன் என்ற பெயர் நன்றாக இருப்பதாகக் கூறுகிறார்கள். நான்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பின்குறிப்பு
தற்போது தயாரிப்பில் உள்ள ஒரு திரைப்படத்திற்கு பாடல் பதிவு முடிந்துவிட்டது. அடுத்த கட்டமாக நடிகர் நடிகையர் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்கப் போவது நான். அதற்க்காகவே இந்த பெயர் மாற்றம் பற்றிய யோசனை. திரைப்படத்தின் பெயர் “அவர்”

இப்போது சொல்லுங்கள் அவருக்காக நான் என் பெயரை மாற்றலாமா?

Sunday, September 20, 2009

உன்னைப் போல் ஒருவன் - காமன் (சிட்டி) மேன்

ஒரே நாளில் நிகழும் கதை. ஒரே இடத்தில் நிகழும் கதை என்றும் சொல்லலாம். பாடல்களே இல்லாத படம். மிக வேகமான திரைக்கதை. இடைவேளை வந்ததே தெரியவில்லை (என்னப்பா அதுக்குள்ள இன்டர்வெல் விட்டுட்டான் - இது என்னுடைய மகள் மற்றும் பலர்). இன்டர்வெல் பாப்கார்ன் பக்கெட் தீருவதற்குள் கிளைமாக்ஸ் வந்து எந்த அலட்டலும் இல்லாமல் படமும் முடிவடைந்துவிடுகிறது.

சலங்கை ஒலி படத்தில் கமலின் நடன அசைவுகளை அறைகுறையாக படம்பிடிக்கும் ஒரு அசட்டு சிறுவனை ஞாபகமிருக்கிறதா? தசாவதாரம் படத்தில் அமெரிக்காவில் கமலுக்கு காரோட்டும் அமெரிக்க இந்தியனை ஞாபகம் இருக்கிறதா? அந்த அசட்டுச் சிறுவன்தான் இந்த அமெரிக்க இளைஞன். அந்த இளைஞன் தான் சக்ரி டோலட்டி. இந்தப் படத்தின் இயக்குனர். ஜெயித்துவிட்டார்.

படத்தின் ஹீரோ அறிமுக வசனகர்த்தா இரா.முருகன். பைனரி போல வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக அசத்தியிருக்கிறார். கமலுக்கு படத்தில் வசனம் மட்டுமே துணை. படத்தில் ஓரிரு காட்சிகள் தவிர அவர் எதிரில் ஆள் இல்லாமல்தான் தன்னுடைய ஆக்ஷ்ன் மற்றும் ரியாக்ஷன்களை காட்டி நடித்திருக்கிறார்.

படத்தில் கமலுக்கு பெயர் கிடையாது. எந்த மதம் எந்த ஜாதி என்கிற அடையாளம் கிடையாது. அவர் ஒரு காமன் மேன் அவ்வளவுதான். எந்தமாதிரியான காமன் மேன்? ஆர்.கே. இலட்சுமணனின் கார்டுன்களில் சமுக அவலங்களை ஓரமாக நின்று நையாண்டி பார்வை பார்க்கும் காமன் மேனா? இல்லை. நடுரோட்டில் (யாரோ) ஒரு கர்பிணிப் பெண்ணை மதத்தை காரணம் காட்டி சிதைத்த ஒரு கொடுர வர்க்கத்தின் கோரம் பொறுக்க முடியாமல் அவர்களை அழித்தொழிக்க முயலும் ஆக்ரோஷமான காமன் மேன்.

தீவிரவாதத்தை தீவிரவாதத்தால்தான் தகர்க்க முடியும் என்று சீறும் காமன்மேனுக்கும், அதிகாரவர்க்கத்தின் முரண்பாடுகளில் சிக்கித் தவிக்கும் ஒரு போலீஸ் கமிஷனருக்கும் இடையில் நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் உன்னைப் போல் ஒருவன். கமல் ஆடு, மோகன்லால் புலி. புலி தான் ஜெயிக்கும் என்பது தெரிந்த கதை. ஆனால் திகட்டாத அறிவார்ந்த திரைக்கதையால் படம் வெற்றியடைகிறது.

ராகவன் மரார் என்ற பெயருடைய மலையாள கமிஷனராகவே படம் முழுக்க வந்து அசத்துகிறார் மோகன்லால். அபியும் நானும் படத்தில் “சிங்“காக வந்த கணேஷ் வெங்கட்ராம் இந்தப் படத்தில் ஃபிட்டான அதிரடிப்படை வீரராக ஜொலிக்கிறார். பரத்ரெட்டியும் ஓகே.

குஜராத், பெஸ்ட் பேக்கரி, மீனம் பாக்கம் குண்டு வெடிப்பு, கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு என கடந்த 15 ஆண்டு காலத்தில் மதத்தின் பெயரால் நடந்த அத்தனை துர் சம்பவங்களும் வசனங்களில் வந்து போகின்றன. கத்தியின் கூர்மையான விளிம்பில் நடப்பது போல அபாயமான விவகாரங்களை அருமையான உரையாடல்களாக மாற்றியிருக்கிறார்கள்.

உடன் வேலை செய்பவன் குண்டு பட்டு செத்தால் கூட காப்பாற்றாமல்,அதை செய்தியாக்கிவிட்டு, நாங்கள்தான் முதன் முதலில் இந்த செய்தியை படம் பிடித்தோம் என்று (துட்டு பார்க்க) விளம்பரம் தேடும் 'Exclusive' டெலிவிஷன் செய்தி நிறுவனங்களை ஒரு பிடி பிடித்திருக்கிறார்கள். அதுவும் கமிஷனரிடமே சிகரெட் கேட்கும் அந்த செய்திப் பெண்ணின் காரக்டர், மீடியாக்களின் அலட்சியம் மற்றும் அகம்பாவத்தின் உருவகம். 26/11 என்று வருணிக்கப்படும் தாஜ் ஹோட்டல் மற்றும் விக்டோரியா ரயில் நிலைய குண்டு வெடிப்பின் போது மீடியாக்களின் அசட்டுத்தனமான (Exclusive வெறி பிடித்த) கவரேஜை பார்த்துக்கொண்டே தீவிரவாதிகள் காய் நகர்த்தியதை இந்தப் படம் கிண்டலடிக்கிறது.

தீவிரவாதிகள் என்றால் அவர்கள் முஸ்லீம்கள்தான் என்று தற்போதைய உலகம் நினைப்பதை இல்லை என்று மறுக்க காமன்மேன் காரக்டர் மூலம் இந்தப் படம் சொல்ல முயல்கிறது. ஆனால் அந்தச் செய்தி சாதாரண இரசிகனை போய் சேர்ந்திருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. காரணம்? விசுவலில் (தீவிரவாத)முஸ்லீம்கள்தான் காட்டப்படுகிறார்கள். அவர்களின் கோபம் மட்டும்தான் காட்டப்படுகிறது. அவர்களால் பாதிக்கப்படும் (அப்பாவி)முஸ்லீம்கள் படத்தில் இல்லை.

எல்லா இடங்களிலும் எள்ளலும் துள்ளலுமாக வந்த வசனம், கடைசிக் காட்சியில் ஒரு வரி கூட இல்லாமல் போனதில் பல இரசிகர்களுக்கு ஒரு Unfinished உணர்வை தந்துவிட்டது. கிராமப்புறங்களில் இந்தப் படம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரியவில்லை.

நல்ல படம். வெற்றிப்படமா என்பது படத்தின் பட்ஜெட்டையும், பார்க்கும் இரசிகர்களின் எண்ணிக்கையையும் பொறுத்தது.

Wednesday, July 29, 2009

ஆனந்த விகடன் - குமுதம் தமிழ் ஈழ அகராதி

ஆனந்த விகடன் - குமுதம் தமிழ் ஈழ அகராதி - ராஜீவ் கொலைக்குப் பின்

பிரபாகரன் கர்ஜித்தபோது
தமிழ் ஈழ ஆதரவு = அது கருணாநிதி பிரச்சனை. நமக்கேன் வம்பு?
பிரபாகரன் = ராஜீவ் கொலையாளி
இந்திய அரசு = ஜெ+சு.சுவாமி மிரட்டலுக்குப் பணிந்து ஈழ விவகாரத்தை கை கழுவ வேண்டிய அரசு.
கருணாநிதி = ஈழ தீவிரவாதிகளுக்கு துணை செல்பவர்
முதல்வர் பதவி = ஆட்சி கவிழ்க்கப்பட்டு கருணாநிதி இழக்க வேண்டியது
இலங்கைத் தமிழர்களின் தலைவர் = பிரபாகரன் இல்லை

பிரபாகரனின் கர்ஜனை அடங்கிய பின்
தமிழ் ஈழ ஆதரவு = கருணாநிதி எதிர்ப்பு. ஹையா தலையங்க மேட்டர்!
பிரபாகரன் = தனி ஈழத் தலைவர்
இந்திய அரசு = ஜெ+கம்யுனிஸ்டுகளுக்குப் பணிந்து இலங்கையின் மேல் படையெடுக்க வேண்டிய அரசு.
கருணாநிதி = ஈழம் அமைவதை தடுப்பவர்
முதல்வர் பதவி = கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டியது
இலங்கைத் தமிழர்களின் தலைவர் = அப்பாடா! பிரபாகரன் இல்லை.

ஆனந்த விகடன், குமுதம் மட்டுமல்ல. தமிழகத்தின் அனைத்து முன்னணி பத்திரிகைகளும் இந்த நிலையைத்தான் எடுத்திருக்கின்றன.

விடுதலைப் புலிகள் வீழ்வதற்கு முன் குறைந்தபட்சம் அரைப்பக்க கட்டுரை கூட இவர்கள் தனி ஈழத்தை ஆதரித்து எழுதியதில்லை. காரணம் என்ன தெரியுமா? தாங்களும் ராஜீவ் கொலையாளிகளின் கூட்டாளிகளாக சித்தரிக்கப் பட்டுவிடுவோம் என்ற பயம்.

தற்போது பிரபாகரன் இல்லை என்றான பின், பயம் தெளிந்து, தயக்கம் விலகி, தனி ஈழம் பற்றி பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். பிரபாகரனும் இல்லை. இவர்களை மிரட்டக்கூடிய ஜெயலலிதாவும் தேர்தல் ஜீரம் வந்து தனி ஈழம் என்று பிதற்றிவிட்டார். அதனால் இவர்களுடைய தனி ஈழ கோஷம் தற்போது பயமில்லாமல் வெளிப்படுகிறது.

இதை வாசிக்கிற சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கக் கூடும். ஆனால், இந்த பத்திரிகைகளின் தனி ஈழ ஆதரவு மிகவும் காலம் கடந்து வெளிப்பட்டிருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது.

இது என் கருத்து. உங்கள் கருத்து என்ன?