Showing posts with label கம்ப்யூட்டர். Show all posts
Showing posts with label கம்ப்யூட்டர். Show all posts

Tuesday, August 21, 2012

கற்றதும் கற்பதும் : நெருப்பு நரியின் சைலண்ட் தந்திரம்


FireFox எனப்படும் நெருப்பு நரி பிரவுசர், சத்தமே இல்லாமல் ஒரு புரட்சி செய்திருக்கிறது. தற்போது FireFox 14 புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. வெளியான ஒரே வாரத்தில் முந்தைய பதிப்பிலிருந்து புதியபதிப்பிற்கு 46% சதவிகிதம் பயனார்கள் நகர்ந்துவிட்டார்கள். எப்படி இது சாத்தியமானது?

Silent Update Serivce என்றொரு புதிய நுட்பத்தை மோசில்லா பயன்படுத்தியுள்ளது. பயனாளர்கள் ஆன்லைனில் இருக்கும்போது, அவர்களை தொந்திரவு செய்யாமல், இணைய வேகத்தையும் பாதிக்காமல், நாம் வேலை செய்யும்போது காதில் விழும் பாட்டுபோல, சுளுவாக புதியபதிப்பை ஏற்றிவிட்டது.

விண்டோஸில் User Account Control என்றொரு பாதுகாப்பு அம்சம் உள்ளது. இதற்குத் தெரியாமல் எந்த ஒரு புதிய பதிப்பும், தானியங்கியாக நமது கணிணியில் உள்ளிறங்க முடியாது. ஆனால் அதற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, நெருப்பு நரி-14 உள்ளே வந்துவிட்டது என்பதுதான் சூப்பர் செய்தி.

நீங்கள் நெருப்பு நரி பயன்படுத்துபவரா? அப்படியானல் உங்கள் கணிணியில் நெருப்பு நரி-14 இறங்கிவிட்டதா? செக் பண்ணிக் கொள்ளுங்கள்.

கற்றதும் கற்பதும் : சிவப்பு ஆப்பிளும் கருப்பு தொப்பியும்


Black Hat என்பது உலகில் தற்போது தவிர்க்க முடியாத நிறுவனம். ஐடி துறையில் உள்ள அரசுகள், நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் எல்லோரும் ஒரே ஒரு முறையாவது இந்த நிறுவனத்துடன் கைகுலுக்காமல் இனி செயல்பட முடியாது என்கிற அளவுக்கு பிரபலம். அப்படி என்னதான் செய்கிறது கருப்பு தொப்பி நிறுவனம். மென்பொருளோ, இயங்குதளமோ எதுவாக இருந்தாலும் முதலில் அதை தனது புத்திசாலி வல்லுனர்களிடம் தருகிறது. அவர்கள் அதை கச்சிதமாக பிரித்து, ஓட்டைகளை கண்டுபிடித்து, அதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சம்போடுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு ரஷ்ய மென்பொருள் உளவாளி, ஆப்பிளின் iOS இயங்குதளத்துக்குள் புகுந்துவிட்டார். புகுந்தது மட்டுமல்லாமல், காசு கொடுத்தால்தான் வாங்க முடியும் என்றிருந்த சில மென்பொருள்களை ஆன்லைன் வழியாக நூறு சதவிகிதம் ஆடித்தள்ளுபடியில் இலவசமாக வாங்கமுடியும் என்று மாற்றிவிட்டார். அதே போல சில தினங்களுக்கு முன்பு, அதே இயங்குதளத்தை, ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போல, இஷ்டத்துக்கு தகவல்கள் பதியும் தளமாக ஒரு வைரஸ் மாற்றிவிட்டது.

பாதுகாப்பு உளவாளிகளும், வைரஸ்களும் எங்களை நெருங்கவே முடியாது. நாங்கள் இரும்புக் கோட்டை என்று தெம்புடன் இருந்த ஆப்பிள் நிறுவனம், இதனால் அதிர்ச்சியடைந்தது. எனவே இந்த குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பை தயார் செய்திருக்கிறது. ஆனால் சந்தைக்கு வருவதற்கு முன், தயங்கித் தயங்கி Black Hat நிறுவனத்திற்குள் காலடி வைத்திருக்கிறது. இனி பிளாக் ஹாட் நிறுவனத்தின் பிஸ்தாக்கள் மீண்டும் ஒருமுறை iOSல் உள்ள ஓட்டைகளை தேடித் துப்பறிந்து, குறைகளைக் களைவார்கள்.

Black Hat நடத்தப்போகும் சமீபத்திய மாநாட்டில், ஆப்பிள் பங்கு கொள்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் சுடு செய்தி.

கற்றதும் கற்பதும் : ஒரு வார்த்தை சொல்ல முடியாமல் தவிக்கும் மைக்ரோசாஃப்ட்


ஒரே ஒரு வார்த்தை சொல்ல முடியாமல் தவிக்கும் மைக்ரோசாஃப்ட்.

எகிப்து அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்ட போது அவர்களுக்கு உதவியாக இருந்தது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களும், ஸ்கைப் போன்ற குரல் தொடர்பு தளங்களும்தான். எனவே எகிப்திய அரசாங்கத்தின் கணிணி வல்லுனர்கள் தற்போது, ஸ்கைப் வழியாக நடைபெறும் சந்தேக உரையாடல்களை ஒலிப்பதிவு செய்வதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்கைப் வழியாக நடைபெறும் குரல் உரையாடல்கள் அனைத்தையும் அவ்வளவு எளிதாக ஒலிப்பதிவு செய்துவிடமுடியாது.

ஸ்கைப் 2003ல் பிரபலமாகத் துவங்கியதிலிருந்தே, அதன் கட்டமைப்பை உடைத்து, அதை செயலிழக்கச் செய்ய பல முயற்சிகள் நடந்தன. ஆனால் ஸ்கைப் நிறுவனத்தின் சாமர்த்திய பூட்டுகளால் (Encryption) இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. ஆனால் எகிப்து அரசாங்கம் இந்த பூட்டுகளை திறந்து உள்ளே புகுந்திருப்பதாகச் சொல்லப்படுவது உண்மை என்றால், ஸ்கைப்பின் நம்பகத் தன்மையின் மேல் சந்தேகம் வருகிறது. எனவே நமது அந்தரங்கத்துக்குள் வெளியார் நுழைவதை தவிர்க்க விரும்புபவர்கள், ஸ்கைப்பை தவிர்த்துவிட்டு வேறு குரல் தளங்களுக்கு மாறலாம் என்கிறார்கள் சர்வதேச வல்லுனர்கள்.

ஸ்கைப் கட்டமைப்பை அவ்வளவு எளிதாக உடைக்க முடியாது. ஆனால் தற்போது அதன் மேல் சந்தேகம் எழுந்துள்ளதற்கு காரணம், ஸ்கைப்பின் புதிய பங்குதாரரான மைக்ரோசாஃப்ட்தான் என்று சிலர் சொல்லத் துவங்கியுள்ளனர். சர்வதேச நாடுகளில் தனது சந்தை சரியாமல் இருக்க, அந்தந்த நாடுகளின் சொல்பேச்சுக்கு ஏற்ப, ஸ்கைப் கட்டமைப்பை மைக்ரோசாஃப்ட் தளர்த்தியிருக்கலாம் என்கிறார்கள் அதன் போட்டியாளர்கள்.

உலகம் முழுவதும் தேச நலனுக்கு எதிராக நடவடிக்கைகளை முடுக்க ஒவ்வொரு நாடும் முனைப்பாக இருக்கிறது. எனவே அந்த நாடுகளுக்கு ஸ்கைப் போன்ற குரல் தளங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் உள்ளது. ஸ்கைப்பை தன்வசம் தற்போது வைத்துள்ள மைக்ரோசாஃப்டுக்கு சட்ட ரீதியாகவே வேறு வழியில்லை. ஆனால் இதை வெளிப்படையாகச் சொன்னால், தனது வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என்பதால், அது பூசி மெழுகுகிறது என்கிறார்கள், விபரம் அறிந்தவர்கள்.

இந்த யூகம் சரியாக இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. அதன் செய்தித் தொடர்பாளரை நோக்கி வீசப்பட்ட கேள்வி இதுதான். ஸ்கைப் குரல் தளம் தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு சொந்தம். ஆனாலும் அதன் கட்டமைப்புகளை தளர்த்தி குரல் உரையாடல்களை பதிவு செய்யும் நிபுணத்துவம் மைக்ரோசாஃப்டிடம் உண்டா?
இதற்கு ஒரே பதில்தான். ஆமாம் (அ) இல்லை.

ஆனால் இன்னமும் இந்த ஒற்றை வார்த்தைகளை உதிர்க்க தயங்கிக் கொண்டிருக்கிறது.

Friday, March 16, 2012

ஐடி முடித்தவுடன் வேலையில் சேர்வது எப்படி?


கல்லூரி புராஜக்டுகளும், சர்டிபிகேட் படிப்புகளும் வெற்றியின் மாஜிக் ஃபார்முலா!

முத்து ராமலிங்கம்
புராஜக்ட் மானேஜர் - மெட்லைஃப் - நியூயார்க்

கம்ப்யூட்டர் உலகம் மாத இதழுக்காக
மின்னஞ்சல், ஃபேஸ்புக் மற்றும் தொலைபேசி வழி பேட்டி

ஐடி துறையில் அடிப்படை தெரிந்திருந்தாலே, கை நிறைய சம்பளம் என்கிற காலம் போயே போச்சு. இப்போது அனுபவஸ்தர்களுக்கு மட்டுமே அழைப்பு. ஐடி துறை தவிர அதைச் சார்ந்த வேறொரு துறை பற்றிய அறிவும் இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. ஆனால் ஒரு மாணவன் எப்படி அனுபவஸ்தனாக கல்லூரியை விட்டு வெளி வர முடியும்? ஐடி படிக்கிற மாணவன், வேறொரு துறையின் அனுபவத்தை பெறுவது எப்படி? ஐடி மாணவன் படிப்பு முடித்தவுடனே வேலை வாய்ப்பு பெறுவது எப்படி?

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்தக் கேள்விகளுக்கு மெட்லைஃப், நியூயார்கிலிருந்து பதில் சொல்லியிருக்கிறார் திரு. முத்து ராமலிங்கம். 

சம்பிரதாயமான ஆனால் அவசியமான கேள்வி.  உங்களைப் பற்றி சொல்லுங்களேன்.

படித்தது டிப்ளோமா மற்றும் BCA பட்டப் படிப்பு. 15 சான்றிதழ் படிப்புகள். (15 International Certificates) IT இல் கடந்த 12 வருடங்களாக வேலை செய்கிறேன். என்னுடைய முதல் வேலையாக சாதாரண ஹார்ட்வரே எஞ்சினியராக ஆரம்பித்தேன். தற்போது இங்கு ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக வேலை செய்கிறேன். 

உங்களுடைய பணி எப்படிப் பட்டது?
நிறுவனங்கள் உபயோகப் படுத்தும் மென்பொருள்கள், ஹார்ட்வேர்,நெட்வொர்க், பாலிசி மற்றும் வழிமுறைகளை பின்பற்றி தகுந்த (Security) பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்திக் கொடுத்து கண்காணிப்பதே என் வேலை. செக்யூரிட்டி என்றதும், போலீஸ் போல யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு, கையில் துப்பாக்கியுடன் வாசலில் நிற்கிற வேலை என்று நினைத்துவிடாதீர்கள் (சிரிப்பு).

கம்ப்யூட்டர் உலகம் வாசகர்கள் புத்திசாலிகள். அவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள்.
ஹா..ஹா...ஹா...அவங்க அப்படி நினைக்க மாட்டாங்க. ஆனா டேட்டா செக்யூரிட்டின்னு சொன்னா, ஏதோ யூனிஃபார்ம் மாட்டின அமெரிக்க காவல்காரன்னுதான் எங்கம்மாவும், சொந்தக்காரங்களும் நினைக்கறாங்க..(மீண்டும் சிரிப்பு). அவங்க படிக்காதவங்க அப்படி நினைக்கறதுல தப்பு இல்ல. ஆனா மாணவர்களுக்கே ஐடி துறை பற்றிய புரிதல் கம்மியா இருக்குன்னு நினைக்கறேன்.

மாணவர்கள் ஐடி துறையைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவில்லைன்னு சொல்றீங்களா?
ஆமாம். ஐடி தொடர்பான படிப்பு என்றால், ஹார்டுவேரா? சாஃப்டுவேரா? என்று இரண்டே கேள்விகளைத்தான் கேட்கிறார்கள். ஆனால் ஐடி துறை இப்போது இந்த இரண்டையும் எப்போதோ தாண்டி மிகப் பரவலாகிவிட்டது. ஹார்டுவேர் என்று எடுத்துக் கொண்டால் Networking, Routing, Firewall என்று நீண்டு கொண்டே போகும். அதே போல சாஃடுவேர் என்றால் Coding, Tester, Database Administrater என்று ஏகப்பட்ட பிரிவுகள். மாணவர்களுக்கு இதில் எது தனக்கு விருப்பம் என்பதை படிக்கும்போதே உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப சான்றிதழ் (Certificate) படிப்புகளையும் முடிக்க வேண்டும். முன்பெல்லாம் BCA, MCA, BE Computer Science முடித்தாலே வேலை கிடைத்துவிடும். ஆனால் தற்போதைய நிலை வேறு. மாணவர்களுக்கு அவர்களுடைய டிகிரி தவிர, சான்றிதழ் படிப்புகளும் கட்டாயம் தேவைப்படுகிறது.

சான்றிதழ் (Certificate) படிப்புகள் என்றால் என்ன?
முன்பு பட்டங்களை தகுதியாக வைத்து (Degree based) வேலை தந்தார்கள். தற்போது திறமைகளை அடிப்படையாக வைத்துதான் (Skill based) வேலை. CISCO, Microsoft, Linux, ORACLE போன்றவை மிகப்பெரிய சர்வதேச ஐடி நிறுவனங்கள். இவர்களுடைய மென்பொருள்கள் அல்லது வன்பொருள்கள்தான் தற்போது உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே ஐடி துறையில் வேலை தேடும்போது, இவர்களின் மென்பொருள் அல்லது வன்பொருள் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டும். இதற்கென சான்றிதழ் (Certificate) தேர்வுகள் உள்ளன. உங்கள் விருப்பம் மற்றும் திறமைகளின் அடிப்படையில் அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். அதை எடுத்துக் கொண்டு ஜாப் மார்கெட்டுக்குள் நுழைய வேண்டும். போகப் போக ஒன்றுக்கு மேற்பட்ட சர்டிபிகேட்டுகளை படித்து வாங்கிக் கொள்ளலாம். இதற்காக கல்லூரி முடிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. கல்லூரியில் படிக்கும்போதே ஈடுபடலாம்.

சான்றிதழ் படிப்புகள் இவ்வளவுதானா? இன்னமும் இருக்கின்றனவா?
நான் சில உதாரணங்களைத்தான் கூறியுள்ளேன். இது போல எவ்வளவோ சான்றிதழ் படிப்புகள் உள்ளன. PCI for ATM Cards, .Net, Java, Share Point, Web logic என்று சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். எப்போதெல்லாம் மைக்ரோசாஃப்ட், ஆரகிள் போன்ற நிறுவனங்கள் புதிய மென்/வன் பொருள்களை அறிமுகப்படுத்துகின்றனவோ அப்போதெல்லாம் அது குறித்த ஒரு சான்றிதழ் படிப்பும் உருவாகிவிடும். சுருக்கமாகச் சொன்னால் பட்டப்படிப்பு மட்டும் போதவே போதாது. சான்றிதழ் படிப்புகளை கட்டாயம் மாணவர்கள் படிக்க வேண்டும்.

சான்றிதழ் படிப்புகளைப் படித்தால் மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆரகிள் யாஹீ போன்ற நிறுவனங்களில் வேலை கிடைக்குமா?
நீங்கள் திறமைசாலியாக இருந்தால் நிச்சயம் கிடைக்கும். அதைவிட முக்கியமாக இன்று ஐடி என்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது. மருத்துவமனைகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகள், தொலை தொடர்பு துறை, விண்வெளி, சூப்பர் மார்கெட், விமானத் துறை, பங்கு வர்த்தகத் துறை என எல்லா துறைகளிலும் ஐடி உள்ளது. எனவே இவற்றில் ஏதாவது ஒரு துறை பற்றிய அடிப்படை அறிவும், அங்கு பயன்படுத்தப்படும் மென்பொருள், வன்பொருள் பற்றிய அறிவும் தற்போதைய தேவை. அதற்கேற்ப உங்கள் சர்டிபிகேட் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். அப்படிப் படித்தால் ஐடி துறையில் மட்டுமல்ல, ஐடியை சார்ந்திருக்கும் எல்லா துறைகளிலும் உலகமெங்கும் வேலை வாய்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் நான் தற்போது ஒரு சர்வதேச இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஐடி துறையை நிர்வகித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் ஒரு மாணவனுக்கு எப்படி புதிய துறை பற்றிய அடிப்படை அறிவும், அனுபவமும் கிடைக்கும்?
ஒரு துறை சார்ந்த அறிவும், அனுபவமும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் கல்லூரிகளில் புராஜக்ட் தருகிறார்கள். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அந்த துறையில் சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் அந்த நிறுவனத்தில் தற்காலிக பயிற்சிக்கு அனுமதி பெற்று அங்கு உள்ள ஐடி தேவைகளை உணர்ந்து அதில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் நான் பார்த்தவரை மாணவர்கள் இந்த பயிற்சியை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.

மாணவர்கள் தங்கள் புராஜக்டுகளை விளையாட்டாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறீர்களா?
பெரும்பாலான மாணவர்கள் விளையாட்டாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் புராஜக்டுகளை செய்வதே இல்லை. பணம் கொடுத்து வேறு யாராவது செய்து வைத்திருக்கும் புராஜக்டுகளை வாங்கி, தங்கள் பெயர் போட்டு கல்லூரியில் சமர்ப்பிக்கிறார்கள். தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்பதை பல மாணவர்கள் உணர்வதே இல்லை. புதிதாக ஒரு துறை பற்றிய அடிப்படை அறிவு, நிறுவனங்கள் இயங்கும் விதம், அங்கு பயன்படுத்தப்படும் மென்/வன் பொருள்கள் பற்றிய அடிப்படை அறிவை பெறும் வாய்ப்பை தாங்களே உதறுகிறார்கள். பணம்பெற்றுக் கொண்டு அவர்களுக்கு புராஜக்டுகளை விற்கிற நிறுவனங்களை உதாசீனப்படுத்த வேண்டும். கஷ்டப்பட்டு எப்படியாவது தங்கள் புராஜக்டுகளை தாங்களே முடிக்க வேண்டும். அங்கு கிடைக்கும் அனுபவத்துக்கு ஏற்ப, விருப்பத்துக்கு ஏற்ப சான்றிதழ் படிப்புகளையும் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் ஐடி படித்து விட்டு மாரக்கெட்டிங், கணக்கு வழக்கு என்று தொடர்பில்லாத வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். பல மாணவர்கள் இந்த தவறைத்தான் செய்கிறார்கள்.

கம்ப்யூட்டர் உலகம் வாசிக்கும் மாணவர்கள் உங்கள் அறிவுரையை ஏற்று பணம் கொடுத்து புராஜக்ட் வாங்காமல், தாங்களே செய்து முடிப்பார்கள் என்று அவர்கள் சார்பில் உறுதி அளிக்கிறோம். ஆனால் புராஜக்டுகளால் ஒரு பிரயோஜனமும் இல்லையென்று சில மாணவர்கள் புலம்புகிறார்களே...
யார் சொன்னது? இன்றைக்கு உலகத்தையே கட்டிப் போட்டிருக்கும் ஃபேஸ்புக் ஒரு கல்லூரி புராஜக்ட்தான். கல்லூரி நண்பர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வந்து பேசிப்பழகும் எண்ணத்தில் உருவாக்கப்பட்டதுதான் ஃபேஸ்புக். மார்க் ஜீகர்பர்க் என்கிற மாணவர் உருவாக்கிய இந்த புராஜக்ட்தான் இந்த நூற்றாண்டின் மிகப் பரபரப்பான புராஜக்ட். இது போல ஒவ்வொரு மாணவரும் க்ரியேட்டிவாக புராஜக்டுகளை சிந்திக்க வேண்டும். அதை கூட்டாகச் சேர்ந்து செய்து முடிக்க வேண்டும். இன்று முதலீட்டாளர்கள் சிறந்த புராஜக்டுகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் செய்து முடிக்கிற புராஜக்ட் ஃபேஸ்புக் போல ஒன்றாக அமைந்துவிட்டால் . . . யோசித்துப் பாருங்கள். நாளை உலகமே உங்கள் பின்னால் அணிவகுக்கும்.

நீங்கள் கூறுவது போல புராஜக்டை முடித்துவிட்டு, சான்றிதழ் படிப்பையும் முடித்துவிட்டு பணிக்குச் செல்லும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது?
நான் ஏற்கனவே சொன்னதுதான். இந்த இரு அடிப்படை தகுதிகள் இல்லாதவர்கள்தான் தடுமாறுவார்கள். மற்ற அனைவருக்கும் மிகப் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. 

பிசினஸ் அனலிஸ்ட் -->ப்ரீ சேல் --> டெவலப்மெண்ட் டீம் ---> டீம் மேனேஜர்  ---> ஹாக்கிங்  --->  சானிடைசிங்  --->  டெஸ்டிங்  --->  குவாலிட்டி அனலைசிஸ்.  இது போல ஒவ்வொரு நிறுவனத்திலும் பல பிரிவுகள் உள்ளன. ஒரு உதாரணத்திற்கு நான் இவற்றை குறிப்பிடுகிறேன். உங்கள் திறமையும், விருப்பமும் உங்களை தாமாகவே இதில் ஏதாவது ஒரு பிரிவில் கொண்டு சேர்க்கும்.

நீங்கள் பணிபுரியும் துறையான Information Security பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். Information என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள்?

Information என்று நான் குறிப்பிடுவது தகவல். ஐடிக்கும், தகவலுக்கும் என்ன தொடர்பு என்று தோன்றும். அதை விளக்கி விடுகிறேன். ஒரு நிறுவனத்திற்கும் எப்படி அசையும்/அசையா சொத்துக்கள் உண்டோ, அதே போல தகவல் என்ற மிகப் பெரிய சொத்து உண்டு. சொல்லப் போனால் தகவல்கள் இல்லையென்றால் நிறுவனங்கள் இல்லை, வியாபாரம் இல்லை. அவற்றை நிர்வகிக்க சிறந்த ஐடி சொல்யூஷன் இல்லையென்றால், அந்த தகவல்கள் பத்திரமாக இருக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.

எனவே தகவல்களை வாங்கவும், சேமிக்கவும், பாதுகாக்கவும் சிறந்த ஐடி வழிமுறைகள் (Process) வேண்டும். அவற்றை தகவல் திருடர்களின் வைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் வழி முறைகள் வேண்டும். 

மாணவர்களுக்கு புரியும் வகையில் கொஞ்சம் எளிமைப்படுத்துவோமே... எத்தனை வகையான தகவல்கள் உள்ளன? அல்லது தகவல்களை எப்படி பிரிக்கலாம்?

ஒரு நிறுவனமோ அல்லது வங்கியோ அல்லது ஒரு மருத்துவமனையோ அவர்களின் தேவைகளைப் பொறுத்து தகவல்களில் பல வகைகள் உள்ளன..

ஆனால் சில தகவல்கள் (General) பொதுவான தகவல்கள். உதாரணமாக வாடிக்கையாளர்களின் தகவல்கள், அவர்களின் தயாரிப்புகள், பணப் பரிமாற்றங்கள்,வேலை செய்யும் நபர்களின் தகவல்கள், அவர்களின் ஆண்டு திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் மற்றும் மிக முக்கியமாக அவர்கள் உபயோகிக்கும் கணினிவிபரங்கள். சில தகவல்கள் வெளி ஆட்கள் யாருக்கும் தெரியக் கூடாது(Confidentiality) கோகோ கோலா சீக்ரட் ஃபார்முலா போல. சில தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்(Partially), உதாரணமாக ATM பாஸ்வேர்டுகள். சில தகவல்கள் பொதுமக்களுக்கு(Public), இதற்கு உதாரணமாக ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் விதம் விதமான திட்டங்கள். .

இவ்வாறு தகவல்களின் தேவைகள் பொறுத்து(Availability) அதன் பாதிப்புகள் (Impact) பொறுத்து தகவல்களை வகை பிரிக்கலாம். 

நீங்கள் சொல்லும்போதுதான் தகவல்கள் மிக முக்கியமானவை என்று புரிகிறது. தகவல்களை ஐடி எப்படி பாதுகாக்கிறது?

மிகச் சுருக்கமாகச் சொல்கிறேன். Information Security என்பது பெரிய குடை போல. அதன் கீழ் பல பிரிவுகள் இயங்குகின்றன.  தகவல்களை சேதப்படுத்துவது அல்லது திருடுவதுதான் ஹாக்கர்கள் மற்றும் வைரஸ் பரப்புவர்களின் நோக்கம். அவற்றை தடுக்க மிக முக்கியமாக மூன்று பிரிவுகள் உள்ளன. 1. உடனடி காவல் (IR Instant Response Team). ஆம்புலன்ஸ் போல இயங்கும் பிரிவு 2. வரும் முன் காவல் (Before attack). தடுப்பு மருந்து கொடுப்பது போன்ற பிரிவு. 3. சேத மதிப்பீட்டுப் பிரிவு (Risk assesment)

Information Security Management - இந்த துறைக்கென்ற சான்றிதழ் படிப்புகள் உள்ளனவா?
எக்கச்சக்கமாக உள்ளன. CISM, CISSP என்று சிலவற்றைக் குறிப்பிடலாம்.

கம்ப்யூட்டர் உலகம் வாசகர்களுக்கு உங்களுடைய ஸ்பெஷல் டிப்ஸ் என்ன?
மாணவர்கள் கல்லூரியில் தரப்படும் புராஜக்டுகளை காப்பியடிக்காமல், தாங்களே சிந்தித்து, தாங்களே செய்ய வேண்டும். ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபின்னும் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். நிறைய சான்றிதழ் படிப்புகள் உள்ளன. விருப்பம், திறமை மற்றும் அப்போதைய வேலை டிமாண்டுக்கு ஏற்ப படித்து தங்கள் பயோடேட்டாவை மதிப்பு மிக்கதாக மாற்றிக் கொள்ள வேண்டும். எப்போது ஆலோசனை தேவைப்பட்டாலும் என்னை muthuramalingam.s@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக அணுகலாம். ஆல் த பெஸ்ட்!

Monday, March 5, 2012

Two Flower - வி.எல்.சியின் அடுத்த அதிரடி வெர்ஷன்

ஆரம்பத்தில் ஆபரேடிங் சிஸ்டங்களுக்கு இடையில்தான் போட்டி. ஆடியோ வீடியோ ப்ளேயர்கள் தூங்கி வழிந்து கொண்டிருந்தன. டிஜிட்டல் தொழில் நுட்பம் துவங்கியவுடன், சிம்பு-தனுஷ் போட்டி போல லைட்டாக சூடாகின. தற்போது HD எனப்படும் High Definition வீடியோக்களின் காலம். யார் சூப்பர் ஸ்டார் என்கிற ரேஞ்சுக்கு மீடியா ப்ளேயர்கள் ஷாருக் - அமிதாப் போல குஸ்தியில் இறங்கிவிட்டன.

தற்போது தயாராகும் குறும்படம் முதல் நெடும்படம் வரை, எல்லாமே HD தான். இந்த வீடியோக்களை இயக்காத மீடியா ப்ளேயர்கள் பாகவதர் காலத்து ப்ளேயர்களாக ஓரம்கட்டப்பட்டுவிட்டன.

ஆனால் இரசிகர் மன்றமே உண்டு என்று சொல்லும் அளவுக்கு VLC இந்தியாவில்  மிகப் பிரபலம். வெர்ஷன் VLC 1.1.x கிட்டத்தட்ட ஒரு ரஜினி. இதுவரை 485 மில்லியன் முறை டவுன்லோடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த டவுன்லோடர்களின் பட்டியலில் இந்தியர்களே அதிகம்.

தற்போது Two Flower என்ற பெயரில் VLC Ver 2.0 அறிமுகமாகியிருக்கிறது. ஏற்கனவே சக்ஸஸ் என்பதால், ரஜினி பட பஞ்ச் டயலாக்குகள் போல எக்கச்சக்க ஃபில்டர்கள் மற்றும் புது கோடக்குகளுடன் (Codec) ஆரவாரமான வரவேற்பு. ஆபரேடிங் சிஸ்டம் எதுவாக இருந்தாலும், எந்த வீடியோ ஃபார்மட்டாக இருந்தாலும் VLC 2.0 அட்டகாசமாக படம் காட்டும்.


  • பரிசோதனை முயற்சியாக Blue-Ray வீடியோக்களை பார்க்க வசதி உள்ளது.
  • விண்டோஸ்  7, Android, iOS and OS/2 - பல வீடியோ ப்ளேயர்கள் இந்த புதிய இயங்குதளங்களில் நொண்டி அடிக்கும். ஆனால் VLC ஐஸ்வர்யா ராய் கன்னங்களைப் போல வழு வழு என்று வீடியோக்களை இயக்கும்.
  • iOS, Android and OS/2 இவற்றில் சில ஆடியோ ப்ளேயர்கள் தொண்டை கட்டிய பாடகர்கள் போல தடுமாறுகின்றன. ஆனால் VLC ஸ்ரேயா கோஷல் போல அம்சமாகக் குழையும்.
  • அனைத்து பிரவுசர்களுடனும் சிநேகமாக இயங்க சில திருத்தங்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இணைய வீடியோக்களையும் அமர்க்களமாகப் கொலை வெறி பாட்டு போல ஜாலியாகப் பார்க்கலாம்.
  • Mac பயன்படுத்துபவர்களுக்கு தோற்றம், அதிக பயன் என கிட்டத்தட்ட எல்லாமே புதிதாக இருக்கும்.



Vlc 2.0 - Two Flower டவுன் லோடு செய்ய இங்கே க்ளிக்குங்கள். 

Saturday, September 3, 2011

ஆப்பிள் வெளியிட்ட (போலி) விண்டோஸ்?

அடுத்த வரிக்குச் செல்வதற்கு முன் ஒரு வார்த்தை. இந்தப் பதிவு முழுவதும் பின்வரும் தளத்தில் வெளியான ஒரு கற்பனைச் செய்தியை உண்மை என நினைத்து எழுதப்பட்ட தவறான பதிவு
http://www.it-reporter.com/news-flash/849_apple-admits-providing-fake-windows-8-beta-downloads/

இதை வாசித்து முடித்தபின் கோபித்துக் கொள்ளப் போகும் ஆப்பிள் நிறுவனத்தார் மற்றும் ஆப்பிள் பயனாளர்களிடம் முன் கூட்டியே என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்! எதற்க்காக இதை குறிப்பிடுகின்றேன் என்றால் இன்று மீடியாக்களை விட வேகமாக சுவையாக, பிளாக்ஸ், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற alternate mediaக்கள் செயல்படுகின்றன. அவற்றில் உறுதி செய்யப்படாத தகவல்களின் அடிப்படையில் பல விவாதங்களும், செய்திகளும் வெளியாகிவிடுகின்றன. அவ்வாறு நிகழ்ந்த தவறுகளில் ஒன்றுதான் இந்தப் பதிவு.

எதற்க்காக பகிரங்கமாக இங்கு ஒப்புக் கொள்கிறேன் என்றால், இன்று பல வலைப்பூக்களுக்கு வாசகர்களிடமும், பத்திரிகைகளிடமும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்த நம்பகத் தன்மை தொடர வேண்டும் என்றால், நாம் மேலும் ஜாக்கிரதையாக, பொறுப்புடன் செயல்பட வேண்டும். கற்பனைச் செய்தியை உண்மை என நம்பி பதிவு எழுதியதற்க்காக மீண்டும் ஒரு முறை வருந்துகிறேன்.



என் தவறை சுட்டிக் காட்டிய நண்பர் ஸ்ரீஜிக்கு நன்றி!

முன்னொரு காலத்தில் 24 வரி கருப்புத் திரையில் A> என்ற இரண்டே எழுத்துக்கள் மட்டும் தான் கம்ப்யூட்டர் திரையில் இருக்கும். அதைப் பார்த்து குழம்பி, என்ன செய்வது என சாதரண மக்கள் மிரண்டு கொண்டிருந்த காலத்தில் விண்டோஸ் வந்தது.

கிளிக், டிராக், டிராப் என்ற கான்செப்டுடன் முதன் முதலில் விண்டோஸை அறிமுகப்படுத்தியது பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல மைக்ரோசாஃப்ட் அல்ல, ஆப்பிள்.

வறண்ட கமாண்ட் பிராம்ப்டுகள் மட்டும் இருந்த காலத்தில் கம்ப்யூட்டர் என்றால் மக்களுக்கு அலர்ஜியாகத்தான் இருந்தது. ஆனால் விஷிவலாக விண்டோஸ் கான்செப்டை ஆப்பிள் அறிமுகப்படுத்தியபின், அதுவரையில் ஒதுங்கிய பலரும், படத்துடன் காமிக்ஸ் புக் படிக்கிற குதூகலத்துடன் கம்ப்யூட்டரை பயன்படுத்தத் துவங்கினார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்த ஆரம்பித்தது ஆப்பிள் கம்ப்யூட்டர்களைத்தான். மைக்ரோசாஃப்டின் டாஸ் அடிப்படையிலான கம்ப்யூட்டர்கள் தங்களது மவுஸை இழக்கத் துவங்கின. அப்போதுதான் பில்கேட்ஸின் விளம்பர மூளை அபாரமாக வேலை செய்தது. கொஞ்சமும் தயங்காமல், ஆப்பிளின் விண்டோஸ் கான்செப்டை திருடி, மாற்றி அதை விட மலிவான விலையில் சந்தையில் இறக்கினார். வியாபாரம் சூடு பிடித்ததும், தொடர்ச்சியான அடுத்தடுத்த பதிப்புகளை(Version) இறக்கினார். நான் படித்த காலத்தில் விண்டோஸ்-98 மிகப் பிரபலம். அதற்குப் பின் விண்டோஸ்-XP நன்றாக இருந்தது எனச் சொல்லலாம். விண்டோஸ் ME, Vista இவையெல்லாம் சொதப்பல். விண்டோஸ்-7 பரவாயில்லை. தற்போது விண்டோஸ் 8 பீட்டா பதிப்பு டவுன்லோடு செய்து கொள்ள கிடைக்கிறது.

பில்கேட்ஸ்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பெரும்பாலும் அடுத்தவர் கான்செப்டை திருடி மாற்றி தனது பெயரில் வெளியிடுவதைத்தான் இத்தனை வருடங்களும் செய்து வந்திருக்கிறது. பில்கேட்ஸின் ஒரே பலம், அசுரத்தனமான மார்க்கெட்டிங் திறமை. அதனால் விண்டோஸ் கான்செஃப்டை ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருந்தாலும், ஆப்பிளுக்குரிய பெயர், வியாபாரம் என அனைத்தையும் விண்டோஸ் தட்டிப் பறித்துக் கொண்டுவிட்டது. விண்டோஸ் என்றாலே மைக்ரோசாஃப்டின் பெயர் மட்டுமே ஞாபகம் வருகிற அளவிற்கு செய்துவிட்டது. ஆப்பிளின் பெயரையே மறக்கடிக்க வைத்துவிட்டது. விண்டோஸ்-7ன் வெற்றியைத் தொடர்ந்து விண்டோஸ்-8ஐ செப்டம்பரில் அறிமுகப்படுத்தப் போவதாக சில மாதங்களுக்கு முன் மைக்ரோசாஃப்ட் அறிவித்தது.

ஆனால் ஜீன் மாதமே விண்டோஸ்-8 பீட்டா பதிப்பு இணையத்தில் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் மைக்ரோசாஃப்டுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் மைக்ரோசாஃப்டுக்கு தெரியாமலேயே இது இணையத்தில் கிடைத்தது என்பதுதான். திருடனுக்கே திருடன் என்பது போல மைக்ரோசாஃப்ட் இதை யார் செய்திருப்பார்கள் என விழித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட திருட்டு விசிடி போன்ற ஒரு சிக்கல். தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்குள், பலரும் விண்டோஸ்-8 பீட்டாவை டவுன்லோடு செய்து பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இன்ஸ்டால் ஆகும்போது சிக்கல் ஏதுமில்லை என்றாலும், அதற்குப் பின் செம படுத்தல். விண்டோஸ்-8 சந்தைக்கு வரும் முன்பே அதன் பெயர் கெட ஆரம்பித்தது.

இதை யார் செய்திருப்பார்கள் என்று மைக்ரோசாப்ட் துப்புத் துலக்கியதில், முதலில் தெரியவந்த உண்மை என்ன தெரியுமா? இணையத்தில் கிடைத்தது அசல் விண்டோஸ்-8 பீட்டா பதிப்பு அல்ல. அது போலவே இருந்த ஒரு போலி. மைக்ரோசாஃப்டின் பெயரைக் கெடுப்பதற்க்காகவே திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஒரு போலி. விசாரணை அப்படி இப்படி என நீண்டதில், இதைச் செய்தது ஆப்பிள் நிறுவனம்தான் என்ற (உறுதிப்படுத்தப்படாத) தகவல் கிடைத்தது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தது. ஆனால் ஒரு கட்டத்தில் தற்போது ஓய்வு பெற்ற ஸ்டீவ் ஜாப்ஸ், ஒரு ஆப்பிள் மீட்டிங்கில் பின்வருமாறு கூறினாராம்.

“நான் அப்பவே சொன்னேன், வேண்டாம் வேண்டாமென்று. மார்க்கெட்டை பிடிக்க வேறு உத்தியை பயன்படுத்தலாம் என்று எவ்வளவோ சொன்னேன். ஆனால் செவி கொடுக்கவில்லை. இப்போது பெரும் பிரச்சனை வரும் போலிருக்கிறதே”

அவர் பேசியதாக வெளியான இந்தத் தகவலும், விண்டோஸ்-8 போலி பீட்டா பதிப்பை ஆப்பிள்தான் வெளியிட்டது என்பதற்கும் உறுதிபடுத்தப் பட்ட தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் நிச்சயம் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், இரண்டு ஐடி பூதங்கள் பல வருடங்களாக மோதிக் கொண்டிருக்கின்றன. இத்தனை வருடங்களாக நல்லவனாக இருந்த ஆப்பிள் என்ற பூதம், தற்போது கெட்டவனாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான். இது ஒரு சந்தைப் போர்.  நீங்க விண்டோஸ்-8 பீட்டா பதிப்பை டவுன்லோடு பண்ணிட்டீங்களா?