Showing posts with label கற்றதும் கற்பதும். Show all posts
Showing posts with label கற்றதும் கற்பதும். Show all posts

Tuesday, August 21, 2012

கற்றதும் கற்பதும் : நெருப்பு நரியின் சைலண்ட் தந்திரம்


FireFox எனப்படும் நெருப்பு நரி பிரவுசர், சத்தமே இல்லாமல் ஒரு புரட்சி செய்திருக்கிறது. தற்போது FireFox 14 புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. வெளியான ஒரே வாரத்தில் முந்தைய பதிப்பிலிருந்து புதியபதிப்பிற்கு 46% சதவிகிதம் பயனார்கள் நகர்ந்துவிட்டார்கள். எப்படி இது சாத்தியமானது?

Silent Update Serivce என்றொரு புதிய நுட்பத்தை மோசில்லா பயன்படுத்தியுள்ளது. பயனாளர்கள் ஆன்லைனில் இருக்கும்போது, அவர்களை தொந்திரவு செய்யாமல், இணைய வேகத்தையும் பாதிக்காமல், நாம் வேலை செய்யும்போது காதில் விழும் பாட்டுபோல, சுளுவாக புதியபதிப்பை ஏற்றிவிட்டது.

விண்டோஸில் User Account Control என்றொரு பாதுகாப்பு அம்சம் உள்ளது. இதற்குத் தெரியாமல் எந்த ஒரு புதிய பதிப்பும், தானியங்கியாக நமது கணிணியில் உள்ளிறங்க முடியாது. ஆனால் அதற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, நெருப்பு நரி-14 உள்ளே வந்துவிட்டது என்பதுதான் சூப்பர் செய்தி.

நீங்கள் நெருப்பு நரி பயன்படுத்துபவரா? அப்படியானல் உங்கள் கணிணியில் நெருப்பு நரி-14 இறங்கிவிட்டதா? செக் பண்ணிக் கொள்ளுங்கள்.

கற்றதும் கற்பதும் : சிவப்பு ஆப்பிளும் கருப்பு தொப்பியும்


Black Hat என்பது உலகில் தற்போது தவிர்க்க முடியாத நிறுவனம். ஐடி துறையில் உள்ள அரசுகள், நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் எல்லோரும் ஒரே ஒரு முறையாவது இந்த நிறுவனத்துடன் கைகுலுக்காமல் இனி செயல்பட முடியாது என்கிற அளவுக்கு பிரபலம். அப்படி என்னதான் செய்கிறது கருப்பு தொப்பி நிறுவனம். மென்பொருளோ, இயங்குதளமோ எதுவாக இருந்தாலும் முதலில் அதை தனது புத்திசாலி வல்லுனர்களிடம் தருகிறது. அவர்கள் அதை கச்சிதமாக பிரித்து, ஓட்டைகளை கண்டுபிடித்து, அதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சம்போடுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு ரஷ்ய மென்பொருள் உளவாளி, ஆப்பிளின் iOS இயங்குதளத்துக்குள் புகுந்துவிட்டார். புகுந்தது மட்டுமல்லாமல், காசு கொடுத்தால்தான் வாங்க முடியும் என்றிருந்த சில மென்பொருள்களை ஆன்லைன் வழியாக நூறு சதவிகிதம் ஆடித்தள்ளுபடியில் இலவசமாக வாங்கமுடியும் என்று மாற்றிவிட்டார். அதே போல சில தினங்களுக்கு முன்பு, அதே இயங்குதளத்தை, ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போல, இஷ்டத்துக்கு தகவல்கள் பதியும் தளமாக ஒரு வைரஸ் மாற்றிவிட்டது.

பாதுகாப்பு உளவாளிகளும், வைரஸ்களும் எங்களை நெருங்கவே முடியாது. நாங்கள் இரும்புக் கோட்டை என்று தெம்புடன் இருந்த ஆப்பிள் நிறுவனம், இதனால் அதிர்ச்சியடைந்தது. எனவே இந்த குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பை தயார் செய்திருக்கிறது. ஆனால் சந்தைக்கு வருவதற்கு முன், தயங்கித் தயங்கி Black Hat நிறுவனத்திற்குள் காலடி வைத்திருக்கிறது. இனி பிளாக் ஹாட் நிறுவனத்தின் பிஸ்தாக்கள் மீண்டும் ஒருமுறை iOSல் உள்ள ஓட்டைகளை தேடித் துப்பறிந்து, குறைகளைக் களைவார்கள்.

Black Hat நடத்தப்போகும் சமீபத்திய மாநாட்டில், ஆப்பிள் பங்கு கொள்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் சுடு செய்தி.

கற்றதும் கற்பதும் : ஒரு வார்த்தை சொல்ல முடியாமல் தவிக்கும் மைக்ரோசாஃப்ட்


ஒரே ஒரு வார்த்தை சொல்ல முடியாமல் தவிக்கும் மைக்ரோசாஃப்ட்.

எகிப்து அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்ட போது அவர்களுக்கு உதவியாக இருந்தது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களும், ஸ்கைப் போன்ற குரல் தொடர்பு தளங்களும்தான். எனவே எகிப்திய அரசாங்கத்தின் கணிணி வல்லுனர்கள் தற்போது, ஸ்கைப் வழியாக நடைபெறும் சந்தேக உரையாடல்களை ஒலிப்பதிவு செய்வதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்கைப் வழியாக நடைபெறும் குரல் உரையாடல்கள் அனைத்தையும் அவ்வளவு எளிதாக ஒலிப்பதிவு செய்துவிடமுடியாது.

ஸ்கைப் 2003ல் பிரபலமாகத் துவங்கியதிலிருந்தே, அதன் கட்டமைப்பை உடைத்து, அதை செயலிழக்கச் செய்ய பல முயற்சிகள் நடந்தன. ஆனால் ஸ்கைப் நிறுவனத்தின் சாமர்த்திய பூட்டுகளால் (Encryption) இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. ஆனால் எகிப்து அரசாங்கம் இந்த பூட்டுகளை திறந்து உள்ளே புகுந்திருப்பதாகச் சொல்லப்படுவது உண்மை என்றால், ஸ்கைப்பின் நம்பகத் தன்மையின் மேல் சந்தேகம் வருகிறது. எனவே நமது அந்தரங்கத்துக்குள் வெளியார் நுழைவதை தவிர்க்க விரும்புபவர்கள், ஸ்கைப்பை தவிர்த்துவிட்டு வேறு குரல் தளங்களுக்கு மாறலாம் என்கிறார்கள் சர்வதேச வல்லுனர்கள்.

ஸ்கைப் கட்டமைப்பை அவ்வளவு எளிதாக உடைக்க முடியாது. ஆனால் தற்போது அதன் மேல் சந்தேகம் எழுந்துள்ளதற்கு காரணம், ஸ்கைப்பின் புதிய பங்குதாரரான மைக்ரோசாஃப்ட்தான் என்று சிலர் சொல்லத் துவங்கியுள்ளனர். சர்வதேச நாடுகளில் தனது சந்தை சரியாமல் இருக்க, அந்தந்த நாடுகளின் சொல்பேச்சுக்கு ஏற்ப, ஸ்கைப் கட்டமைப்பை மைக்ரோசாஃப்ட் தளர்த்தியிருக்கலாம் என்கிறார்கள் அதன் போட்டியாளர்கள்.

உலகம் முழுவதும் தேச நலனுக்கு எதிராக நடவடிக்கைகளை முடுக்க ஒவ்வொரு நாடும் முனைப்பாக இருக்கிறது. எனவே அந்த நாடுகளுக்கு ஸ்கைப் போன்ற குரல் தளங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் உள்ளது. ஸ்கைப்பை தன்வசம் தற்போது வைத்துள்ள மைக்ரோசாஃப்டுக்கு சட்ட ரீதியாகவே வேறு வழியில்லை. ஆனால் இதை வெளிப்படையாகச் சொன்னால், தனது வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என்பதால், அது பூசி மெழுகுகிறது என்கிறார்கள், விபரம் அறிந்தவர்கள்.

இந்த யூகம் சரியாக இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. அதன் செய்தித் தொடர்பாளரை நோக்கி வீசப்பட்ட கேள்வி இதுதான். ஸ்கைப் குரல் தளம் தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு சொந்தம். ஆனாலும் அதன் கட்டமைப்புகளை தளர்த்தி குரல் உரையாடல்களை பதிவு செய்யும் நிபுணத்துவம் மைக்ரோசாஃப்டிடம் உண்டா?
இதற்கு ஒரே பதில்தான். ஆமாம் (அ) இல்லை.

ஆனால் இன்னமும் இந்த ஒற்றை வார்த்தைகளை உதிர்க்க தயங்கிக் கொண்டிருக்கிறது.

Monday, July 2, 2012

கற்றதும் கற்பதும் : டிவி, மொபைல், கேம் ஸ்டேஷன்களை இணைக்கும் Smart Glass


என்னுடைய நண்பருக்கு நண்பர், மைலாப்பூரில் மைசூர் சில்க்ஸ் பட்டுப்புடவைகள் விற்றுக் கொண்டிருக்கிறார். எனக்குத் தெரிந்து 20 வருடங்களாக அந்தக் கடை ஒரே மாதிரிதான் உள்ளது. கடைப் பையன்கள் பையர்கள் ஆகிவிட்டாலும், மைசூர் சில்க் தவிர வேறெதுவும் உள்ளே நுழைந்தது இல்லை. காஸ்ட்லியான மைசூர் பட்டுகளுக்கு இடையில் என் நண்பர் போன்ற அப்பாவி ஆண் ஜந்துக்களுக்காக ஜிப்பாக்கள் மற்றும் வேட்டிகளுக்கு என்று தனி கொசுறு செக்ஷன் உண்டு. 

மத்த புடவைக்கடையெல்லாம் அமலா பால், அனுஷ்காவை மாடலாகப் போட்டு விதம் விதமாக விளம்பரம் தந்து என்னென்னவோ பட்டுப் புடவை விக்கறாங்களே, நீயும் அந்த மாதிரி ஏன் பண்ணக் கூடாது என்று என் நண்பர் எப்போதுமே அக்கடைக்காரரிடம் கேட்பார். அதே கல்லாப் பெட்டியில் உட்கார்ந்து கொண்டு கிட்டத்தட்ட அதே தொனியில், எனக்கு இருக்கற இதே கஸ்டமர்ஸ் போதும். மைசூர் சில்க் அப்படின்னா அவங்க இங்கதான் வருவாங்க. அவங்களுக்கு பொண்ணு, பேத்தி எல்லாம் இங்கதான் வருவாங்க. அதனால நமக்கு இதுவே போதும் பாஸ் என்பார்.

கிட்டத்தட்ட அந்த மைசூர் சில்க்காரர் போலத்தான் மைக்ரோசாஃப்டும், மென்பொருளை விட்டுவிட்டு வன்பொருள் பக்கம் வராமல் இருந்தது. அவர்கள் கல்லா கட்டியதெல்லாம் விண்டோஸ் போன்ற மென்பொருள்களில்தான். தற்போது முதன் முறையாக ஞானோதயம் வந்து சர்ஃபேஸ் - Surface என்ற வன்பொருளை இறக்கியிருக்கிறது. ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் ஐ-பேட், குளிகைக் கணிணிகள், ஆன்ட்ராயிட் ஃபோன்களால், மேசைக் கணிணிகளின் பயன்பாடு குறைந்து வருகிறது என்பது உண்மை. அபாயகரமாக குறையாவிட்டாலும் குறைந்து வருகிறது என்பதை உணர்ந்து கொண்ட மைக்ரோசாஃப்ட் தானும் ஐ-பேட் போன்ற வடிவத்தில் ஒரு பேடை இறக்கியிருக்கிறது. அதுதான் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ்.

இன்னும் சந்தைக்கு வராத இந்த சர்ஃபேஸ் பற்றி நான் ஏற்கனவே சிலவருடங்களுக்கு முன் உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எப்போதும் மைக்ரோசாஃப்ட் தனது ஆக்ரோஷமான வியாபார உத்திகளால் மற்ற நிறுவனங்களை மிரட்டியெடுக்கும். அவர்களுடைய தயாரிப்பை விட, வியாபார உத்திகள்தான் பிரபலம். ஆனால் இம்முறை தயாரிப்பும் சிறப்பாக இருப்பதாக சில டெக் செய்திகள் கசிகின்றன. ஆப்பிளின் ஐ-பேடுக்கு கடும் போட்டியாக இருக்கக் கூடும் என்கிறார்கள்.

முதல் காரணம் இந்தப் பேடில் இணைக்கத் தேவையான மௌஸ் போன்ற அனைத்து தேவைகளையும் தானே தயாரித்திருக்கிறது. மற்ற நிறுவனங்களை துளியும் சாரவில்லை. எனவே இதுக்கு அது ஒத்துவரவில்லை என்பது போன்ற பிரச்சனை வராது. 

இரண்டாவது முக்கிய காரணம், மேசைக் கணிணிகளில் நாம் பயன்படுத்தும் அதே ஆபரேட்டிங் சிஸ்டம் சர்ஃபேஸிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே உங்கள் விண்டோஸ் பிசியில் நீங்கள் இயக்கும் அத்தனை மென்பொருட்களையும் நீங்கள் சர்ஃபேஸிலும் இயக்க முடியும். ஆப்பிளின் ஐ-பேட் அப்படி அல்ல என்பது மிக முக்கிய வித்தியாசம்.

சர்ஃபேஸ் - Surface வாயிலாக வன்பொருள் துறையில் முதன் முதலில் இறங்கியிருந்தாலும் மைக்ரோசாஃப்ட் படு தெம்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

டிவி, மொபைல், கேம் ஸ்டேஷன்களை இணைக்கும் ஸ்மார்ட் கிளாஸ் - Smart Glass
இதுவும் மைக்ரோசாஃப்ட் சமாச்சாரம்தான். ஆப்பிள் ஏர் - Apple Air என்றொரு மென்பொருள் உண்டு. அதனை வைத்துக் கொண்டு உங்கள் மொபைல் ஃபோன், டிவி, கேம் ஸ்டேஷன்களை ஒன்றிணைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும். கிட்டத்தட்ட அதே தொழில் நுணுக்கத்துடன் சந்தைக்கு வந்திருப்பதுதான் Smart Glass.

சில வருடங்களுக்கு முன் துபாய் சென்றிருந்தேன். கராமாவில்  ஒரு தூத்துக்குடிக்காரரை சந்தித்தேன். அவர் எனக்கு டிவிட்டரில் அறிமுகமானவர். எனவே அவருடைய வீட்டுக்குச் சென்றதும், ஃபில்டர் காபி, மெதுவடை மற்றும் சுஜாதா, சாண்டில்யன், ஜெயகாந்தன்களை விழுங்கிவிட்டு டிவிட்டரை ஆன் செய்துவிட்டார். அவருடைய பிசி திரை போதாது என்பதால் தியேட்டர் எஃபக்டடில் கேபிள் போட்டு LCD TV திரைக்கு இணைப்பு தந்துவிட்டார். தொடர்ந்து ஒரு மணிநேரம் அவரும் நானும் டிவிட்டரில் உலவி அரட்டையடித்து மீண்டும் சந்திப்பதாக விடைபெற்றேன். இன்னமும் சந்திக்கவில்லை. அந்த ஃபில்டர் காபிக்காக மீண்டும் செல்லலாம்தான்.

சரி விஷயத்துக்கு வருகிறேன். நண்பர் டெக் பிரியர் என்பதால் கேபிள்கள், அடாப்டர்கள் எல்லாம் வாங்கி கணிணித்திரையை டிவி திரைக்கு கொண்டு வந்துவிட்டார். எல்லோரும் அப்படிச் செய்து கொண்டிருக்க முடியாது. எனவே இவை எல்லாவற்றையும் ஒரு பட்டன் வழியாக இணைக்க விடுவிக்க ஒரு அலை மென்பொருள் தேவைப்படுகிறது. அதுதான் Smart Glass. உங்களுக்கு XBox தெரிந்திருக்கும். அது ஒரு விளையாட்டு டப்பா. வெர்சுவலாக பாக்ஸிங் பண்ணலாம், ஃபுட்பால் கிரிக்கெட் விளையாடலாம், ராக்கெட் லாஞ்ச் பண்ணலாம், அடுத்த நாட்டின் மேல் பாம் போடலாம், ஏலியனாக மாறி யாருடனோ போர் புரியலாம். இந்த எக்ஸ் பாக்ஸை பயன்படுத்தி உங்கள் மொபைலையும், டிவியையும் நீங்கள் இணைத்துக் கொள்ள முடியும்.

படுக்கையில் படுத்துக் கொண்டே உங்கள் மொபைலில் உலவிக் கொண்டிருந்த தளத்தை உங்கள் டிவிக்கு மாற்றிக் கொள்ள முடியும். அதே போல டிவியிலிருந்து மொபைலக்கு இடம் மாற்றலாம்.

கூகுள் இந்த விஷயத்தில் பிஸ்தா. Smart Glassலும் இது இருப்பதாகச் சொல்கிறார்கள். உண்மையா, புருடாவா என்பது வந்தபின்தான் தெரியும்.

Friday, June 29, 2012

இந்தியாவில் பெட்ரோல் விலை ஏற்ற இறக்கங்களுக்கு காரணம் என்ன?

பெட்ரோல் விலை ரூ. 2.46 காசுகள் குறைந்திருக்கிறது.

இந்த வரியை படிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு நீங்கள் பெட்ரோல் பங்க்கில் க்யூவில் நின்று வந்திருக்கலாம். அல்லது நண்பருக்கு ஃபோன் செய்து ஆட்டோகாரன் பெட்ரோல் விலையை காரணம் காட்டி 200 ரூபாய் கேட்டதைச் சொல்லி அங்கலாய்த்திருக்கலாம். அல்லது உங்கள் அக்காவோ அம்மாவோ பெட்ரோல் விலை ஏறினா ஏன் காய்கறி விலை ஏறணும் என்று காய்கறி வண்டிக்காரனிடம் மல்லு கட்டுவதை கவனித்திருக்கலாம்.

அதே போல இந்த வரியை வாசிக்கும்போது, அப்பாடி ஏதோ இரண்டு ரூபாயாவது இறக்கினானுங்களே, இதை அப்பவே செய்திருக்கலாம்ல. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு குறைச்சிட்டாங்களா, என ஆபீசிலும், கேன்டினிலும், பஸ்ஸிலும் பேசிக் கொண்டு வந்திருப்பீர்கள்.

சரி ஏன் இந்த ஏற்ற இறக்கங்கள்? மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள் என்று தெரிந்தும் ஏன் ஏழு ரூபாய் விலை ஏறியது? விலை ஏற்றத்தை மறந்து அதற்குப் பழகிப் போயிருந்தபோது ஏன் விலை இறங்கியது?

பொதுவாக கச்சா எண்ணை விலை ஏறினால் உலகமெங்கும் பெட்ரோல் விலையும் எகிறிவிடும். ஆனால் இந்த முறை அப்படியில்லை. கச்சா எண்ணை ஒரு நயா பைசா கூட ஏறவில்லை. ஆனாலும் பெட்ரோல் விலை ராக்கெட் போல எகிறியது. காரணம் யூரோ கரன்ஸி. அதென்ன யூரோ கரன்ஸி. உலகப் போருக்குப் பின்னர் சர்வதேச அளவில் அதிகம் புழங்கும் கரன்சியாக அமெரிக்க டாலர் வந்துவிட்டது. எனவே உலகமே போண்டியானாலும் அமெரிக்கா சமாளித்துக் கொள்ளும் நிலை இன்றும் இருக்கிறது. இதைத் தடுக்க ஐரோப்பிய நாடுகள் பல ஒன்று சேர்ந்து ஐரோப்பிய யூனியன் ஒன்றை உருவாக்கின. இந்த நாடுகள் அனைத்துக்கும் பொதுவாக யூரோ மணி என்ற கரன்ஸியை உருவாக்கின. டாலருக்குப் போட்டியாக இதை உருவாக்கி தங்களுக்குள் கொடுக்கல் வாங்கலை எல்லாம் யூரோ கரன்சியாகவே செய்து வந்தார்கள். ஆனால் இதெல்லாம் ஓரளவுக்குத்தான். ஏற்கனவே ஏற்றுமதி இறக்குமதிக்காக கடன் வாங்கிய நாடுகள் பல, டாலர்களில்தான் வர்த்தகம் செய்து வந்தார்கள். அதனை உடனடியாக மாற்ற இயலவில்லை. இந்த யூரோ-டாலர் குழப்பத்தால் யூரோ மணியின் மதிப்பு தடாலடியாக கீழே விழுந்துவிட்டது. இதனால் ஐரோப்பிய யூனியனில் அங்கத்தினர்களாக இருந்த சில நாடுகள் திவாலாகிவிட்டன.

யூரோ மணி கீழே விழுந்ததும் பதற்றத்தில் டாலரின் மதிப்பு முன்பை விட எக்கச்சக்கமாக உயர்ந்தது. எனவே வேறு வழியில்லாமல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கீழே இறங்கிக் கொண்டே வந்தது. எனவே டாலருக்கு நிகராக 45 ரூபாயாக இருந்த இந்திய கரன்ஸி கிட்டத்தட்ட 60 ரூபாயாக இறங்குகிற நிலை வந்துவிட்டது. நாம் நம் நாட்டிற்கு தேவையான கச்சா எண்ணையை டாலர்களில்தான் இதுவரை வாங்கிக் கொண்டிருக்கிறோம். இனிமேலும் அப்படித்தான் வாங்க முடியும். ஆனால் ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு உயர்ந்துவிட்டதால் நாம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு குறைந்தபட்சம் 8 ரூபாய் அதிகம் செலவழிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.

நம்நாட்டில் பெட்ரோல் விற்பனை பெரும்பாலும் தனியார் வசம்தான் உள்ளது. இந்த விலை உயர்வை தாங்க முடியாத அந்த நிறுவனங்கள் அடம்பிடித்து விலையை ஏற்றிவிட்டன.

காரணம் இந்த விலைக்கு கச்சா எண்ணையை தொடர்ந்து வாங்கினால் ஒரு நாளைக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகக் கூறி எண்ணை நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல் சப்ளை செய்வதை நிறுத்திவிட்டன.

இதை எப்படிக் குறைப்பது என அரசும் அந்த நிறுவனங்களும் தவித்துக் கொண்டிருக்கும் வேலையில் நாம் பெட்ரோல் பங்கில் சண்டை பிடித்துக் கொண்டிருந்தோம்.

யூரோ கால்பந்து அரையிறுதியில் இத்தாலியும், ஜெர்மனியும் மோதிக் கொண்டிருக்கும் நள்ளிரவில் பெட்ரோலின் விலை இரண்டு ரூபாய்க்கும் மேல் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த விலை குறைப்புக்கு காரணம் நமது ரூபாயின் எழுச்சிதான். ஒரேடியாக வீழ்ந்து வந்த இந்திய ரூபாய், தற்போது ஸ்டெடியாக இருக்கிறது. யூரோவின் மதிப்பு மேலும் சரியாதிருக்க மன்மோகன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் சிலர், சில ஐரோப்பிய நாடுகளுக்கு கடன் கொடுத்ததை ஞாபகத்தில் கொள்ளுங்கள். இது போன்ற நடவடிக்கைகளால் யூரோ ஸ்டெடி ஆனதும், ரூபாயும் டாலருக்கு எதிரான தள்ளாட்டத்தைக் குறைத்துக் கொண்டது. எனவே பெட்ரோலின் விலையும் நம்மைப் பொறுத்தவரை குறைந்துவிட்டது.

இம்முறை டாலரின் மதிப்பு உயர்ந்தும் ஐடி நிறுவனங்களின் மதிப்பு உயரவில்லை.
ஓ.. பெட்ரோல் கிடைக்காததற்கு இதுதான் காரணமா என்று ஆச்சரியப்படுகிற அதே நேரத்தில் இந்த செய்தி எங்களுக்கு எதற்கு என்று உங்களில் சிலர் கேட்கக் கூடும். பெட்ரோலுக்கும் ஐடிக்கும் தொடர்பு இருக்கிறது. இது போல டாலர் விலை உயர்ந்து ரூபாயின் மதிப்பு சரியூம்போதெல்லாம் பங்கு மார்கெட்டில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் எல்லாம் உயரும். ஐடி நிறுவனங்களின் பங்கை வாங்க ஒரு போட்டியே நடக்கும். காரணம் பெரும்பாலான இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்க டாலரில்தான் பெரும்பாலும் சம்பாதிக்கின்றன. எனவே டாலரின் மதிப்பு உயரும்போது ஐடி நிறுவனங்களின் சொத்து மதிப்பும் உயருகின்றன. எனவே ஐடி நிறுவனங்களின் பங்கை வாங்கி விற்க பெரும்போட்டி நடக்கும்.

ஆனால் இந்த முறை அந்த மாதிரி பரபரப்பு எதுவும் இருக்கவில்லை. ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 8 ரூபாய் வரை வீழந்தாலும் ஐடி நிறுவனங்களுக்கான மவுசு கூடவில்லை. காரணம் . . . . ரொம்ப சிம்பிள். நம் நாட்டின் ஐடி நிறுவனங்கள் தற்போது அமெரிக்காவை மட்டும் நம்பி இல்லை. அமெரிக்கா தவிர நிறைய உள்நாட்டு புராஜக்டுகளை நம்பி இயங்குகின்றன. அதனால் டாலரின் ஏற்றம் ஐடி நிறுவனப் பங்குகளை வாங்கி விற்கும் பங்கு தரகர்களுக்கு அதிக உற்சாகம் தரவில்லை.


Friday, May 11, 2012

கற்றதும் கற்பதும் (கூகுள், டின்ட், பிக் மங்கி)



கூகுளின் மேகக் கணிமை (Cloud Computing)
சென்ற வாரம் ஒரு நள்ளிரவு. நண்பர் ஒருவர் விடிவதற்குள் ஒரு க்ரீட்டிங்கார்டு வேண்டும் எனக் கேட்டார். நெருங்கிய நண்பர் என்தால் தட்டமுடியவில்லை. தூக்கத்தை தொலைத்து அவசரம் அவசரமாக ஃபோட்டோஷாப்பில் ஒரு டிசைன் செய்து அனுப்பினேன். பிறகு மறந்தே போய்விட்டேன். இரண்டு நாட்கள் கழித்துப் பார்த்தால் வேறொரு டிசைனை வைத்து க்ரீட்டிங்கார்டு தயார் செய்திருந்தார்.

நான் அனுப்பிய டிசைன் பிடிக்கவில்லையான எனக்கேட்டேன்.

அதற்கு அவர் சொன்ன பதில்தான் ஹைலைட்.
”நீ அனுப்பிய பதிலை பார்க்கவே இல்லை” என்றார்.
”ஏன்?” என்றேன்.
”ஏனென்றால் நீ அனுப்பிய ஃபோட்டோஷாப் ஃபைலை பார்க்க என்னிடம் ஃபோட்டோஷாப் இல்லை” என்றார்.

இதே அனுபவம் எனக்கு ஏற்கனவே நடந்திருக்கிறது. ஒரு கார்ப்பரேட் ஃபிலிம். ஒரு குறிப்பிட்ட காட்சியை எடிட் செய்யாமல் அப்படியே பார்க்க வேண்டும் என க்ளையண்ட் விரும்பியதால், அதை உடனடியாக உதவியாளர் வழியாக அனுப்பி வைத்து விட்டு வேறு வேலையில் மும்முரமாகிவிட்டேன். அதிகாலையில் ஃபோன். 

”சார், நீங்க அனுப்பின வீடியோவில் ஏதோ பிரச்சனை. திறக்கவே மாட்டேன்கிறது. திறந்தாலும் விட்டு விட்டு ப்ளே ஆகிறது” என்றார். 

பல்வேறு குழப்பங்கள், விளக்கங்கள் மற்றும் கோபங்களுக்குப் பின் . . . . ஹி..ஹி..ஹி... நீங்க அனுப்பினது HD வீடீயோவா... HD என் கம்ப்யூட்டரில் திறக்காதே என்றார்.

இந்த அவஸ்தைகளை இனி எளிதாக தவிர்க்கலாம். கூகுள் நிறவனம் தனது Google Docs சேவையை இன்னும் சிறப்பாக்கி (Google Drive) என்னும் புதிய ஸ்பெஷல் சேவையை தருகிறது. காதலிக்கு மேகத்தை தூதுவிடுவது போல, இனி கூகுள் (Cloud storage service) சேவையை பயன்படுத்தி குழப்ப க்ளையண்டுகளை சமாளிக்கலாம்.

இந்த தொழில்நுட்பம் மூலம் நம்முடைய கோப்புகள் ஆடியோ, வீடியோ மற்றும் டெக்ஸ்ட் உட்பட எதுவாக இருந்தாலும், இணையத்தில் சேமித்து வைக்கலாம். மேலும் நாம் எங்கு சென்றாலும் அவற்றை அங்கிருந்தே திறக்க முடியும். உதாரணத்திற்கு என் க்ளையண்ட் கேட்ட வீடியோவை கூகிள் டிரைவில் பதிவேற்றம் செய்து விடலாம். எனது க்ளையண்ட் கூகிள் டிரைவ் மூலம் தனது மொபைல்களிலோ, அல்லது கணினிகளிலோ அதனை பார்த்துக் கொள்ளலாம். HD வீடியோ ப்ளேயர் இல்லை எனப் புலம்ப வேண்டாம். ஏனென்றால் கூகுள் டிரைவ் இதனை எளிதாக ப்ளே செய்யும். ஒரு காலத்தில் யாஹீ சூட்கேஸ் என்றொரு சமாச்சாரம் இருந்தது. இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் அதன் தொழில்நுட்பம் வேறு. இது மேகக் கணிமை (Cloud Computing) என்ற தொழில் நுட்பம் மூலம், எங்கிருந்தாலும் எளிதாகப் பயன்படுத்தும் வாய்ப்பு தருகிறது.

மேகக் கணிமை = Cloud Computing

இந்த மொழிபெயர்ப்பு அழகு. யார் செய்தது எனத் தெரியவில்லை. வாசித்தவுடன் மனதில் ஒட்டிக் கொண்டுவிட்டது.

சரி மீண்டும் விஷயத்திற்கு வருகிறேன். அடுத்த முறை என் நண்பரைப் போல யாராவது க்ரீட்டிங் கார்டு டிசைன் செய்து ஃபோட்டோஷாப் ஃபைலை அப்படியே கேட்டால் கூகுள் டிரைவுக்குள் போட்டு விடுங்கள். அவரிடம் ஃபோட்டோஷாப் இல்லாவிட்டாலும், டவுன்லோடு செய்யாமலேயே அவரால் பார்க்க முடியும்.

இந்த  Cloud Storage சேவையில் ஏற்கனவெ Apple, Box.net, மற்றும் Dropbox என பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இவற்றில்  கூகுள் டிரைவ் சிறப்பாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

உங்களிடம் ஜிமெயில் ஐடி இருந்தால் https://drive.google.com/ என்ற முகவரி வழியாக நீங்கள் இந்த சேவையை பயன்படுத்தி 5GB வரை இலவசமாக சேமிக்கலாம். அதற்கு மேல் என்றால் பணம் கட்ட வேண்டும்.


ஐடி என்பது டாட்டா என்ட்ரி செய்ய மட்டுமல்ல
நான் எடிட்டராகப் பொறுப்பேற்று இருக்கும் மாத்தியோசி இதழின் சார்பாக, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் திரு. பி.வி. ரமணா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. எளிமையாக, எளிமையை விட ஆர்வம், ஆர்வத்தை விட அக்கறை அதிகம் உள்ளவராக இருக்கிறார். சந்திப்புக்கு குஜராத்திலிருந்து ஒரு கன்ஸல்டன்ட் வந்திருந்தார். அவரும் ஆச்சரியப்பட்டார். பரவாயில்லயே எங்க குஜராத் மாதிரியே இங்கயும் சின்சியர் அமைச்சர்கள் உள்ளார்களே என்றார். எங்கள் குஜராத் என்றவர் ஒரு தமிழர் என்பதை அடைப்புக் குறிக்குள் போட்டுப் படிக்கவும்.

விடைபெற்று காரில் ஏறும்போது, குஜராத்தில் சாலையில் ஒரு கேபிள் போட வேண்டும் என்றால் கூட, கார்ப்பரேஷன், மின் துறை, தண்ணீர் துறை மற்றும் ஐடி துறையும் ஒரே இடத்தில் இருப்பார்கள். அனைவரும் ஒன்று கூடி பேசி முடிவெடுப்பார்கள். நெடுஞ்சாலைத் துறை சாலையை போட்டு முடித்த அடுத்தநாள், மின் துறை சாலையை துண்டிக்கும் அபத்தமெல்லாம் நடக்காது என்றார். அவர் சொன்ன லிஸ்டில் ஐடி துறையும் உள்ளதை கவனியுங்கள். ஐடி துறைதான் மற்ற துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க உதவும் துறை. நம்ம ஊரில் ஐடி துறை சம்பாதித்து ஹவுசிங் லோன் போடுவதற்கு மட்டும்தான் பயன்படுகிறது.

சென்னை கார்ப்பரேஷனின் கால்சென்டர் சொதப்பல்!
இன்று காலையில் ஒரு செய்தி. 1913 என்பது சென்னை கார்ப்பரேஷனின் புகார் எண். தண்ணீர் குழாயில் சாக்கடை வந்தாலோ, சப்வே போல பெரிதாக பள்ளம் தோண்டிக் கிடந்தாலோ இந்த எண்ணை அழைக்கலாம். அழைத்தால் வந்து சரி செய்வார்களாம். இதெல்லாம் யாரும் அழைக்காமலே வந்து செய்ய வேண்டிய சேவைகள். இருந்தாலும் அழைத்தால்தான் வருவேன் என்ற கார்ப்பரேஷனை அணுக நீங்கள் 1913ஐ அணுக வேண்டுமாம். திருப்பதியில் வரிசை டிக்கெட் வாங்காமலேயே லட்டு கிடைக்குமா? கிடைக்காது. அது போலத்தான் இந்த நம்பரும் கிடைக்கவே கிடைக்காது. கிடைத்தாலும், நீங்கள் கேட்ட சேவை கிடைக்காது.


இதற்கு மிக முக்கிய காரணம், ஆள் பற்றாக்குறை. இவ்வ்வவ்வளவு பெரிய சென்னைக்கு நான்கே நான்கு பேர்தான் இந்த ஃபோனில் பதில் சொல்ல நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் அவர்கள் பதில் சொன்னாலும், வடபழனியில் உள்ள ஒரு பிரச்சனையை சென்னை சென்டர் ஸ்டேஷனுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் எப்படி தீர்க்க முடியும். வாய்ப்பே இல்லை.

எனவே இதன் எக்ஸ்டென்ஷனாக, சென்னை நகரின் அத்தனை கார்ப்பரேஷன் அலுவலகங்களும் இணைக்கப்பட வேண்டும். அடையாறில் இருந்து ஒருவர் 1913ஐ அழைத்தால் உடனடியாக அந்த ஃபோன் பார்வர்டு செய்யப்பட்டு அடையாறுக்கு அருகில் உள்ள அலுவகலத்தை இணைக்க வேண்டும். இது சும்மா ஒரு சாம்பிள் ஐடியாதான். பரபரவென இயங்கும் கால்சென்டர்களை அமைத்துத் தர இன்று டெக்னாலஜி மிகச் சுலபமாக இருக்கிறது. மொபைல் கம்பெனிகளின் கால்சென்டர்கள் பல டெல்லி, மும்பையில் உள்ளன. ஆனால் ஈரோடு சந்திப்பில் இருந்து அழைத்தால் கூட பக்கத்துதெருவில் இருந்து பேசுவது போல நெருக்கமாகி, உங்களுக்கு பதில் sms அனுப்பி அசத்திவிடுவார்கள்.

ஆனால் நமது சென்னை கார்ப்பரேஷன் 1913 சேவையில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரை சஸ்பெண்டு செய்திருக்கிறார்கள். இதை டைப் பண்ணும்போது, அவர்கள் டீ குடித்துவிட்டு வந்து மீண்டும் வேலையில் சேர்ந்திருக்கக் கூடும். 1913 சேவையை திறம்பட நடத்த வேண்டுமென்றால், சஸ்பெண்டு சிறந்த வழி அல்ல. அதற்கு பதில் இந்த கால்சென்டர்கள் எப்படி இயங்குகின்றன, அதனை எப்படி நடத்துவது என்ற வகுப்புக்கு அனுப்பி வைக்கலாம்.

உங்கள் பிளாகை மற்றவர்கள் களவாடாமல் தவிர்க்க ஒரு வழி
ஒருவர் எழுதிய பிளாகை அப்படியே வரிக்கு வரி கட் அண்டு பேஸ்ட் செய்து, தனது பிளாகாக வெளியிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் பேஸ்ட் செய்தவரின் தளத்தில் இது உங்களிடம் இருந்துதான் சுடப்பட்டது என்பதை தெரிவிக்கும் வழி ஒன்று உள்ளது.

டின்ட் என்றொரு தளம், http://id.tynt.com 
இந்த தளத்திற்கு சென்று தேவையான விபரங்களைக் கொடுங்கள்.
அதன் பின் உங்கள் பதிவுகள் ஏதாவது களவாடப் பட்டால், கண்ணுக்குத் தெரியாமல் உங்கள் பதிவின் முகவரியை அந்தப் பதிவிலேயே இணைத்துவிடும். எனவே உங்கள் பதிவை யார் எத்தனை காப்பி எடுத்தாலும், அத்தனையும் உங்கள் தளத்தை நோக்கியே இழுத்து வரும். டிரை பண்ணுங்க.

ஆன்லைனிலேயே இமேஜ் எடிட்டிங்
சென்னைக்கு வெளியே உள்ள, வாய்ப்பு வசிதிகள் குறைவாக உள்ள மாணவர்களுக்கு சொல்லித் தர எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த சில மாதங்களாக, பொன்னேரியில் வசிக்கும் நண்பர் ஒருவர் துணையுடன், அங்கிருக்கும் ஏழை மாணவர்களுக்கு ஆன் லைன் வழியாக வெப்சைட் வடிவமைப்பு, அதில் கதை, கவிதைகளை ஏற்றுதல், இமேஜ் எடிட்டிங் என சில பல வேலைகளை சொல்லித் தந்து வருகிறேன். எல்லாமே skype அல்லது கூகுள் சாட் வழியாகத்தான். மாணவர்கள் படு சுட்டிகள். பளிச்சென்று பிடித்துக் கொள்கிறார்கள்.

கடந்த வாரம் ஆன்லைனிலேயே இமேஜ் எடிட்டிங் பழகினார்கள். உதவிக்கு வந்த தளத்தின் பெயர், www.picmonkey.com - பெயரில்தான் அடங்காத குரங்கின் பெயர் இருக்கிறதே தவிர, சமர்த்தான தளம். அட்டகாசமாக ஆன்லைனிலேயே ஃபோட்டோஷாப் வேலை பார்க்கலாம்.

Friday, March 16, 2012

ஐடி முடித்தவுடன் வேலையில் சேர்வது எப்படி?


கல்லூரி புராஜக்டுகளும், சர்டிபிகேட் படிப்புகளும் வெற்றியின் மாஜிக் ஃபார்முலா!

முத்து ராமலிங்கம்
புராஜக்ட் மானேஜர் - மெட்லைஃப் - நியூயார்க்

கம்ப்யூட்டர் உலகம் மாத இதழுக்காக
மின்னஞ்சல், ஃபேஸ்புக் மற்றும் தொலைபேசி வழி பேட்டி

ஐடி துறையில் அடிப்படை தெரிந்திருந்தாலே, கை நிறைய சம்பளம் என்கிற காலம் போயே போச்சு. இப்போது அனுபவஸ்தர்களுக்கு மட்டுமே அழைப்பு. ஐடி துறை தவிர அதைச் சார்ந்த வேறொரு துறை பற்றிய அறிவும் இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. ஆனால் ஒரு மாணவன் எப்படி அனுபவஸ்தனாக கல்லூரியை விட்டு வெளி வர முடியும்? ஐடி படிக்கிற மாணவன், வேறொரு துறையின் அனுபவத்தை பெறுவது எப்படி? ஐடி மாணவன் படிப்பு முடித்தவுடனே வேலை வாய்ப்பு பெறுவது எப்படி?

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்தக் கேள்விகளுக்கு மெட்லைஃப், நியூயார்கிலிருந்து பதில் சொல்லியிருக்கிறார் திரு. முத்து ராமலிங்கம். 

சம்பிரதாயமான ஆனால் அவசியமான கேள்வி.  உங்களைப் பற்றி சொல்லுங்களேன்.

படித்தது டிப்ளோமா மற்றும் BCA பட்டப் படிப்பு. 15 சான்றிதழ் படிப்புகள். (15 International Certificates) IT இல் கடந்த 12 வருடங்களாக வேலை செய்கிறேன். என்னுடைய முதல் வேலையாக சாதாரண ஹார்ட்வரே எஞ்சினியராக ஆரம்பித்தேன். தற்போது இங்கு ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக வேலை செய்கிறேன். 

உங்களுடைய பணி எப்படிப் பட்டது?
நிறுவனங்கள் உபயோகப் படுத்தும் மென்பொருள்கள், ஹார்ட்வேர்,நெட்வொர்க், பாலிசி மற்றும் வழிமுறைகளை பின்பற்றி தகுந்த (Security) பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்திக் கொடுத்து கண்காணிப்பதே என் வேலை. செக்யூரிட்டி என்றதும், போலீஸ் போல யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு, கையில் துப்பாக்கியுடன் வாசலில் நிற்கிற வேலை என்று நினைத்துவிடாதீர்கள் (சிரிப்பு).

கம்ப்யூட்டர் உலகம் வாசகர்கள் புத்திசாலிகள். அவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள்.
ஹா..ஹா...ஹா...அவங்க அப்படி நினைக்க மாட்டாங்க. ஆனா டேட்டா செக்யூரிட்டின்னு சொன்னா, ஏதோ யூனிஃபார்ம் மாட்டின அமெரிக்க காவல்காரன்னுதான் எங்கம்மாவும், சொந்தக்காரங்களும் நினைக்கறாங்க..(மீண்டும் சிரிப்பு). அவங்க படிக்காதவங்க அப்படி நினைக்கறதுல தப்பு இல்ல. ஆனா மாணவர்களுக்கே ஐடி துறை பற்றிய புரிதல் கம்மியா இருக்குன்னு நினைக்கறேன்.

மாணவர்கள் ஐடி துறையைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவில்லைன்னு சொல்றீங்களா?
ஆமாம். ஐடி தொடர்பான படிப்பு என்றால், ஹார்டுவேரா? சாஃப்டுவேரா? என்று இரண்டே கேள்விகளைத்தான் கேட்கிறார்கள். ஆனால் ஐடி துறை இப்போது இந்த இரண்டையும் எப்போதோ தாண்டி மிகப் பரவலாகிவிட்டது. ஹார்டுவேர் என்று எடுத்துக் கொண்டால் Networking, Routing, Firewall என்று நீண்டு கொண்டே போகும். அதே போல சாஃடுவேர் என்றால் Coding, Tester, Database Administrater என்று ஏகப்பட்ட பிரிவுகள். மாணவர்களுக்கு இதில் எது தனக்கு விருப்பம் என்பதை படிக்கும்போதே உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப சான்றிதழ் (Certificate) படிப்புகளையும் முடிக்க வேண்டும். முன்பெல்லாம் BCA, MCA, BE Computer Science முடித்தாலே வேலை கிடைத்துவிடும். ஆனால் தற்போதைய நிலை வேறு. மாணவர்களுக்கு அவர்களுடைய டிகிரி தவிர, சான்றிதழ் படிப்புகளும் கட்டாயம் தேவைப்படுகிறது.

சான்றிதழ் (Certificate) படிப்புகள் என்றால் என்ன?
முன்பு பட்டங்களை தகுதியாக வைத்து (Degree based) வேலை தந்தார்கள். தற்போது திறமைகளை அடிப்படையாக வைத்துதான் (Skill based) வேலை. CISCO, Microsoft, Linux, ORACLE போன்றவை மிகப்பெரிய சர்வதேச ஐடி நிறுவனங்கள். இவர்களுடைய மென்பொருள்கள் அல்லது வன்பொருள்கள்தான் தற்போது உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே ஐடி துறையில் வேலை தேடும்போது, இவர்களின் மென்பொருள் அல்லது வன்பொருள் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டும். இதற்கென சான்றிதழ் (Certificate) தேர்வுகள் உள்ளன. உங்கள் விருப்பம் மற்றும் திறமைகளின் அடிப்படையில் அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். அதை எடுத்துக் கொண்டு ஜாப் மார்கெட்டுக்குள் நுழைய வேண்டும். போகப் போக ஒன்றுக்கு மேற்பட்ட சர்டிபிகேட்டுகளை படித்து வாங்கிக் கொள்ளலாம். இதற்காக கல்லூரி முடிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. கல்லூரியில் படிக்கும்போதே ஈடுபடலாம்.

சான்றிதழ் படிப்புகள் இவ்வளவுதானா? இன்னமும் இருக்கின்றனவா?
நான் சில உதாரணங்களைத்தான் கூறியுள்ளேன். இது போல எவ்வளவோ சான்றிதழ் படிப்புகள் உள்ளன. PCI for ATM Cards, .Net, Java, Share Point, Web logic என்று சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். எப்போதெல்லாம் மைக்ரோசாஃப்ட், ஆரகிள் போன்ற நிறுவனங்கள் புதிய மென்/வன் பொருள்களை அறிமுகப்படுத்துகின்றனவோ அப்போதெல்லாம் அது குறித்த ஒரு சான்றிதழ் படிப்பும் உருவாகிவிடும். சுருக்கமாகச் சொன்னால் பட்டப்படிப்பு மட்டும் போதவே போதாது. சான்றிதழ் படிப்புகளை கட்டாயம் மாணவர்கள் படிக்க வேண்டும்.

சான்றிதழ் படிப்புகளைப் படித்தால் மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆரகிள் யாஹீ போன்ற நிறுவனங்களில் வேலை கிடைக்குமா?
நீங்கள் திறமைசாலியாக இருந்தால் நிச்சயம் கிடைக்கும். அதைவிட முக்கியமாக இன்று ஐடி என்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது. மருத்துவமனைகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகள், தொலை தொடர்பு துறை, விண்வெளி, சூப்பர் மார்கெட், விமானத் துறை, பங்கு வர்த்தகத் துறை என எல்லா துறைகளிலும் ஐடி உள்ளது. எனவே இவற்றில் ஏதாவது ஒரு துறை பற்றிய அடிப்படை அறிவும், அங்கு பயன்படுத்தப்படும் மென்பொருள், வன்பொருள் பற்றிய அறிவும் தற்போதைய தேவை. அதற்கேற்ப உங்கள் சர்டிபிகேட் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். அப்படிப் படித்தால் ஐடி துறையில் மட்டுமல்ல, ஐடியை சார்ந்திருக்கும் எல்லா துறைகளிலும் உலகமெங்கும் வேலை வாய்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் நான் தற்போது ஒரு சர்வதேச இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஐடி துறையை நிர்வகித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் ஒரு மாணவனுக்கு எப்படி புதிய துறை பற்றிய அடிப்படை அறிவும், அனுபவமும் கிடைக்கும்?
ஒரு துறை சார்ந்த அறிவும், அனுபவமும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் கல்லூரிகளில் புராஜக்ட் தருகிறார்கள். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அந்த துறையில் சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் அந்த நிறுவனத்தில் தற்காலிக பயிற்சிக்கு அனுமதி பெற்று அங்கு உள்ள ஐடி தேவைகளை உணர்ந்து அதில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் நான் பார்த்தவரை மாணவர்கள் இந்த பயிற்சியை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.

மாணவர்கள் தங்கள் புராஜக்டுகளை விளையாட்டாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறீர்களா?
பெரும்பாலான மாணவர்கள் விளையாட்டாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் புராஜக்டுகளை செய்வதே இல்லை. பணம் கொடுத்து வேறு யாராவது செய்து வைத்திருக்கும் புராஜக்டுகளை வாங்கி, தங்கள் பெயர் போட்டு கல்லூரியில் சமர்ப்பிக்கிறார்கள். தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்பதை பல மாணவர்கள் உணர்வதே இல்லை. புதிதாக ஒரு துறை பற்றிய அடிப்படை அறிவு, நிறுவனங்கள் இயங்கும் விதம், அங்கு பயன்படுத்தப்படும் மென்/வன் பொருள்கள் பற்றிய அடிப்படை அறிவை பெறும் வாய்ப்பை தாங்களே உதறுகிறார்கள். பணம்பெற்றுக் கொண்டு அவர்களுக்கு புராஜக்டுகளை விற்கிற நிறுவனங்களை உதாசீனப்படுத்த வேண்டும். கஷ்டப்பட்டு எப்படியாவது தங்கள் புராஜக்டுகளை தாங்களே முடிக்க வேண்டும். அங்கு கிடைக்கும் அனுபவத்துக்கு ஏற்ப, விருப்பத்துக்கு ஏற்ப சான்றிதழ் படிப்புகளையும் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் ஐடி படித்து விட்டு மாரக்கெட்டிங், கணக்கு வழக்கு என்று தொடர்பில்லாத வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். பல மாணவர்கள் இந்த தவறைத்தான் செய்கிறார்கள்.

கம்ப்யூட்டர் உலகம் வாசிக்கும் மாணவர்கள் உங்கள் அறிவுரையை ஏற்று பணம் கொடுத்து புராஜக்ட் வாங்காமல், தாங்களே செய்து முடிப்பார்கள் என்று அவர்கள் சார்பில் உறுதி அளிக்கிறோம். ஆனால் புராஜக்டுகளால் ஒரு பிரயோஜனமும் இல்லையென்று சில மாணவர்கள் புலம்புகிறார்களே...
யார் சொன்னது? இன்றைக்கு உலகத்தையே கட்டிப் போட்டிருக்கும் ஃபேஸ்புக் ஒரு கல்லூரி புராஜக்ட்தான். கல்லூரி நண்பர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வந்து பேசிப்பழகும் எண்ணத்தில் உருவாக்கப்பட்டதுதான் ஃபேஸ்புக். மார்க் ஜீகர்பர்க் என்கிற மாணவர் உருவாக்கிய இந்த புராஜக்ட்தான் இந்த நூற்றாண்டின் மிகப் பரபரப்பான புராஜக்ட். இது போல ஒவ்வொரு மாணவரும் க்ரியேட்டிவாக புராஜக்டுகளை சிந்திக்க வேண்டும். அதை கூட்டாகச் சேர்ந்து செய்து முடிக்க வேண்டும். இன்று முதலீட்டாளர்கள் சிறந்த புராஜக்டுகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் செய்து முடிக்கிற புராஜக்ட் ஃபேஸ்புக் போல ஒன்றாக அமைந்துவிட்டால் . . . யோசித்துப் பாருங்கள். நாளை உலகமே உங்கள் பின்னால் அணிவகுக்கும்.

நீங்கள் கூறுவது போல புராஜக்டை முடித்துவிட்டு, சான்றிதழ் படிப்பையும் முடித்துவிட்டு பணிக்குச் செல்லும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது?
நான் ஏற்கனவே சொன்னதுதான். இந்த இரு அடிப்படை தகுதிகள் இல்லாதவர்கள்தான் தடுமாறுவார்கள். மற்ற அனைவருக்கும் மிகப் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. 

பிசினஸ் அனலிஸ்ட் -->ப்ரீ சேல் --> டெவலப்மெண்ட் டீம் ---> டீம் மேனேஜர்  ---> ஹாக்கிங்  --->  சானிடைசிங்  --->  டெஸ்டிங்  --->  குவாலிட்டி அனலைசிஸ்.  இது போல ஒவ்வொரு நிறுவனத்திலும் பல பிரிவுகள் உள்ளன. ஒரு உதாரணத்திற்கு நான் இவற்றை குறிப்பிடுகிறேன். உங்கள் திறமையும், விருப்பமும் உங்களை தாமாகவே இதில் ஏதாவது ஒரு பிரிவில் கொண்டு சேர்க்கும்.

நீங்கள் பணிபுரியும் துறையான Information Security பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். Information என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள்?

Information என்று நான் குறிப்பிடுவது தகவல். ஐடிக்கும், தகவலுக்கும் என்ன தொடர்பு என்று தோன்றும். அதை விளக்கி விடுகிறேன். ஒரு நிறுவனத்திற்கும் எப்படி அசையும்/அசையா சொத்துக்கள் உண்டோ, அதே போல தகவல் என்ற மிகப் பெரிய சொத்து உண்டு. சொல்லப் போனால் தகவல்கள் இல்லையென்றால் நிறுவனங்கள் இல்லை, வியாபாரம் இல்லை. அவற்றை நிர்வகிக்க சிறந்த ஐடி சொல்யூஷன் இல்லையென்றால், அந்த தகவல்கள் பத்திரமாக இருக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.

எனவே தகவல்களை வாங்கவும், சேமிக்கவும், பாதுகாக்கவும் சிறந்த ஐடி வழிமுறைகள் (Process) வேண்டும். அவற்றை தகவல் திருடர்களின் வைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் வழி முறைகள் வேண்டும். 

மாணவர்களுக்கு புரியும் வகையில் கொஞ்சம் எளிமைப்படுத்துவோமே... எத்தனை வகையான தகவல்கள் உள்ளன? அல்லது தகவல்களை எப்படி பிரிக்கலாம்?

ஒரு நிறுவனமோ அல்லது வங்கியோ அல்லது ஒரு மருத்துவமனையோ அவர்களின் தேவைகளைப் பொறுத்து தகவல்களில் பல வகைகள் உள்ளன..

ஆனால் சில தகவல்கள் (General) பொதுவான தகவல்கள். உதாரணமாக வாடிக்கையாளர்களின் தகவல்கள், அவர்களின் தயாரிப்புகள், பணப் பரிமாற்றங்கள்,வேலை செய்யும் நபர்களின் தகவல்கள், அவர்களின் ஆண்டு திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் மற்றும் மிக முக்கியமாக அவர்கள் உபயோகிக்கும் கணினிவிபரங்கள். சில தகவல்கள் வெளி ஆட்கள் யாருக்கும் தெரியக் கூடாது(Confidentiality) கோகோ கோலா சீக்ரட் ஃபார்முலா போல. சில தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்(Partially), உதாரணமாக ATM பாஸ்வேர்டுகள். சில தகவல்கள் பொதுமக்களுக்கு(Public), இதற்கு உதாரணமாக ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் விதம் விதமான திட்டங்கள். .

இவ்வாறு தகவல்களின் தேவைகள் பொறுத்து(Availability) அதன் பாதிப்புகள் (Impact) பொறுத்து தகவல்களை வகை பிரிக்கலாம். 

நீங்கள் சொல்லும்போதுதான் தகவல்கள் மிக முக்கியமானவை என்று புரிகிறது. தகவல்களை ஐடி எப்படி பாதுகாக்கிறது?

மிகச் சுருக்கமாகச் சொல்கிறேன். Information Security என்பது பெரிய குடை போல. அதன் கீழ் பல பிரிவுகள் இயங்குகின்றன.  தகவல்களை சேதப்படுத்துவது அல்லது திருடுவதுதான் ஹாக்கர்கள் மற்றும் வைரஸ் பரப்புவர்களின் நோக்கம். அவற்றை தடுக்க மிக முக்கியமாக மூன்று பிரிவுகள் உள்ளன. 1. உடனடி காவல் (IR Instant Response Team). ஆம்புலன்ஸ் போல இயங்கும் பிரிவு 2. வரும் முன் காவல் (Before attack). தடுப்பு மருந்து கொடுப்பது போன்ற பிரிவு. 3. சேத மதிப்பீட்டுப் பிரிவு (Risk assesment)

Information Security Management - இந்த துறைக்கென்ற சான்றிதழ் படிப்புகள் உள்ளனவா?
எக்கச்சக்கமாக உள்ளன. CISM, CISSP என்று சிலவற்றைக் குறிப்பிடலாம்.

கம்ப்யூட்டர் உலகம் வாசகர்களுக்கு உங்களுடைய ஸ்பெஷல் டிப்ஸ் என்ன?
மாணவர்கள் கல்லூரியில் தரப்படும் புராஜக்டுகளை காப்பியடிக்காமல், தாங்களே சிந்தித்து, தாங்களே செய்ய வேண்டும். ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபின்னும் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். நிறைய சான்றிதழ் படிப்புகள் உள்ளன. விருப்பம், திறமை மற்றும் அப்போதைய வேலை டிமாண்டுக்கு ஏற்ப படித்து தங்கள் பயோடேட்டாவை மதிப்பு மிக்கதாக மாற்றிக் கொள்ள வேண்டும். எப்போது ஆலோசனை தேவைப்பட்டாலும் என்னை muthuramalingam.s@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக அணுகலாம். ஆல் த பெஸ்ட்!