Showing posts with label செல்வா ஸ்பீக்கிங். Show all posts
Showing posts with label செல்வா ஸ்பீக்கிங். Show all posts

Tuesday, September 18, 2012

விகடனுக்கும், குமுதத்துக்கும் பணிவான வேண்டுகோள்

யோசித்துப் பார்த்தால், சிறுவயதிலிருந்தே இத்தனை வருடங்களாக நான் தெரிந்து கொண்டது, அறிந்து கொண்டது, புரிந்து கொண்டது என அனைத்துமே ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பத்திரிகைகள் வழியாக மட்டுமே.

பெரும்பாலும் இப்பத்திரிகைகள் நடிகர் நடிகர்களின் தனிப்பட்ட சந்தோஷங்களையும், துயரங்களையுமே கட்டுரைகளாக, கவர்ஸ்டோரிகளாக என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் தவறில்லை. நானும் இவற்றையே விரும்பிப் படித்திருக்கிறேன்.

ஆனால
் கூடங்குளம் போன்ற ஒரு மக்கள் பிரச்சனையை ஒரு ஊறுகாய் விளம்பரம் அளவிற்கு கூட இப்பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லை என்பது என் கருத்து. கடந்த 25 வருடங்களில் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்து மொத்தமே 10 கட்டுரைகள் கூட வந்திருக்காது என நினைக்கிறேன்.

கூடங்குளம் பிரச்சனையைப் பற்றிய அடிப்படை தகவலும், புரிதலும் எனக்கு இல்லாமல் போனதற்கு 50 வருடப் பாரம்பரியம்மிக்க இப்பத்திரிகைகளின் பொறுப்பற்றதன்மையே காரணம்.

இதற்கு பிரயாசித்தமாக கடந்தவாரம் கூடங்குளம் பிரச்சனை பற்றி ஆனந்த விகடன் ஒரு கவர்ஸ்டோரி வெளியிட்டுள்ளது. சந்தோஷம்!

இப் பிரச்சனையில் மக்களுக்கு சாதகமாக தீர்வு கிடைக்கும் வரை, தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவளிக்கும்படி ஆனந்தவிகடன், குமுதம் நிர்வாகத்தாரை கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, August 21, 2012

மியாவ் என்றால் என்ன?


கிட்டத்தட்ட நள்ளிரவு!
சன்னமாக ஒரு ஆணின் அழுகுரல்!

சில வீடுகளின் உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்குகளைத் தவிர, தெருவில் வேறெந்த வெளிச்சமும் இல்லை.

குரல் வந்த திசை மேலும் இருட்டானதாக இருந்தது. அந்த இருட்டை அடையாளம் காட்டும்விதமாக ஒரு மொபைல் ஃபோனின் ஒளி.

நிழலாக ஒரு சைக்கிளும், முகம் தெரியாத அந்த ஆளையும் அவர்களை கடப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு என்னால் பார்க்க முடிந்தது.

‘என் குழந்தையை என்கிட்ட தரப்போறியா இல்லையாடி... ‘
அவனைக் கடக்கும்போது என் காதில் விழுந்த வார்த்தைகள் இவை.

அந்த ‘டி‘ அவனுடைய மனைவியாக இருக்கக் கூடும்... அல்லது...
என்னுடைய யூகங்கள் புதுப்புது வடிவமெடுப்பதற்குள் வீடு வந்துவிட்டது.

வாசலில் ஒரு குட்டிப் பூனை. அதற்கு அம்மாவோ அப்பாவோ கிடையாது. என்னைப் பார்த்ததும் மரத்தில் தொற்றிக் கொண்டது.

அந்தப் பூனை குட்டியைப் போல எங்கோ ஒரு குழந்தை... அந்த மரத்தடி ஆணுக்கும், அவன் கெஞ்சிக் கொண்டிருந்த ‘டி‘க்கும் இடையில் சிக்கிக் கொண்டு இருக்கிறதோ...

அவர்கள் இருவரையும் விடுங்கள். அந்தக் குழந்தை தன் உணர்வுகளை யாரிடம், எப்படிச் சொல்லும்.

மியாவ் என்றது குட்டிப் பூனை, எங்கோ வெறித்தபடி!

மியாவ் என்றால் என்ன? உங்களில் யாருக்காவது அர்த்தம் தெரியுமா?

Tuesday, June 26, 2012

செல்வா ஸ்பீக்கிங் - (சிநேகா, சூகர்பெர்க் திருமணம்)

சஸ்பென்ஸ் திருமண இன்விடேஷன்
‘என் மகனுடைய கல்யாணத்துக்கு கூப்பிட்டிருந்தேனே... ஏன் வரல?‘ என்றார் நண்பர்.  என் ஞாபகங்களைத் தோண்டியபடி எப்போ? என்றேன். தெரியாத மாதிரி கேட்கறதுல நீங்க ஒரு கிங் என்றார். நிஜமாவே தெரியல. எப்போ கூப்பிட்டீங்க என்றேன். ஒரு வாரத்துக்கு முன்னால் என்றார். எனக்கு ஒரு மணி நேரம் முன்னாடி சொன்னாலே, மறதி ஓவர் டேக் செய்துவிடும். ஒரு வாரம் என்றால், எப்படி ஞாபகமிருக்கும். அதனால் சமாளித்து, மன்னிக்கணும் வேலை பிஸியில் நீங்கள் இன்விடேஷன் கொடுத்ததையே மறந்துவிட்டேன் என்று ஹிஹிஹிளித்தேன். 

அதற்குப் பின் தான் சூப்பர் கிளைமாக்ஸ். அது என்ன என்பது சஸ்பென்ஸ். சஸ்பென்சை நான் எப்போ சொல்லுவேன், எப்படிச் சொல்வேன் என்பது எனக்கே தெரியாது.

சிநேகா - பிரசன்னா திருமணம்
மீண்டும் இன்னொரு திருணமத்தைப் பற்றி பேசப் போகிறோம். சிநேகா - பிரசன்னா நட்சத்திரத் திருமணம். இந்த திருமணத்திற்கும் நான் செல்லவில்லை. என்னைப் பார்த்து, ஏன் எங்கள் திருமணத்திற்கு வரவில்லை என்று சிநேகாவும் கேட்கவில்லை, பிரசன்னாவும் கேட்கவில்லை. காரணம் அவர்களுக்கு என்னைத் தெரியாது. ஆனாலும் அவர்களுடைய திருமணத்தை நான் வேடிக்கை பார்த்தேன். உபயம் விஜய் டிவி.  ஒரு பெரும் தொகையை பெற்றுக் கொண்டு, தங்கள் திருமணத்தை கவர் செய்து ஒளிபரப்பும் உரிமையை சிநேகா-பிரசன்னா தம்பதியர் விஜய் டிவிக்கு அளித்ததாகக் கேள்விப்பட்டேன். மேற்கத்திய நாடுகளில் இந்தக் கலாச்சாரம் உண்டு. தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளை, கமர்ஷியலாக்கும் இந்தக் கலாச்சாரம், நமது தமிழகத்திற்குள்ளும் நுழைந்துவிட்டது. பணம் சம்பந்தப்பட்டுவிட்டது என்பதாலோ என்னவோ, சில வெட்கங்களும்-புன்னகைகளும் காமிராவுக்கான ஒத்திகையாகவே எனக்குப்பட்டது. சிநேகா-பிரசன்னா தம்பதியினர் தொடர்ந்து நட்சத்திர அந்தஸ்துடன் வாழ்க்கை நடத்தினால், அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையை, அதற்கு காது குத்துவதையும் விஜய் டிவியின் காமிரா துரத்தும். ஒரு வேளை அவர்கள் அதற்குள் மார்கெட் இழந்தால், விஜய் டிவி அதற்குப் பதிலாக நீயா நானா நடத்தப் போய்விடும். அந்த ஏற்றத் தாழ்வுகளை எதிர்பார்த்து சமாளிக்கும் மனத் தின்மையுடனும், சந்தோஷத்துடனும் வாழ சிநேகா-பிரசன்னா தம்பதியினரை மனமார வாழ்த்துகிறேன்.

உறைந்த சாக்லேட்
நான் ஒரு சாக்லேட் பிரியன். அதனால் என்னை சந்திக்கிற நண்பர்கள் பலரும் எனக்கு சாக்லேட் பரிசளிப்பார்கள். சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த நண்பர் ஒருவர் எனக்கு ஒரு சாக்லேட் பரிசளித்தார். சாக்லேட்டை கொடுக்கும்போதே, உடனே பிரிட்ஜ்ல வைச்சுடுங்க. உங்க ஊர் வெயில்ல இளகிடுச்கு என்றார். அவர் கொடுக்கும்போது கிட்டத்தட்ட ஒரு ஜீஸ் பாக்கெட் போல ஆகிவிட்டது. அதனை பிரிட்ஜிக்குள் வைத்துவிட்டு கிட்டத்தட்ட இரு வாரங்களாக மறந்தே போனேன். இந்த வரியை எழுதும்போது, தாகத்திற்கு பிரிட்ஜைத் திறந்தால், அந்த சாக்லேட் பாக்கெட் கண்ணில் சிக்கியது. எடுத்துப் பார்த்தால் எல்லா சாக்லேட்டுகளும் ஒன்றாகி உறைந்து ஒரு இனிப்பான ஐஸ் கட்டி போல ஆகிவிட்டது. கத்தியை வைத்து முயற்சித்தும் அதனை பிளக்க முடியவில்லை என்பதால், அதனை பென்சில் சீவுவது போல சீவிச் சீவி சுருள் சுருளாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். உலகிலேயே இது போல சாக்லேட் சாப்பிட்ட ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன். சரி எதற்காக இந்தத் தகவல் என்று கேட்கிறீர்களா? இனிப்பான சங்கதி ஏதாவது சொல்ல வேண்டும் எனத் தோன்றியதால் இதைச் சொல்கிறேன்.

ஏர்போர்ட் டியூட்டி ஃப்ரி கடைகளில் மலிவு விலை சாக்லேட் வாங்கும் பலரும் சீன சாக்லேட்டுகளை வாங்கிவருவார்கள். பார்ப்பதற்கு மொளுக் மொளுக் என்று போஷாக்காக இருக்கும். இப்படி குண்டாக காட்சியளிப்பதற்காகவே, இந்த சாக்லேட்டுகளில் melamine என்றொரு சமாச்சாரத்தை கலப்பார்களாம். குறிப்பாக குழந்தைகளின் உடல் நலத்திற்கு இது தீங்கானதாம். அதனால் இந்த மலிவு விலை சீன சாக்லேட்டுகளை தவிர்த்துவிட வேண்டும். இனிப்பான தகவல், உபயோகமான தகவலாகவும் இருக்க வேண்டுமில்லையா... அதற்குத்தான் இந்த சீன சாக்லேட் சப்ளிமெண்ட்.

ஃபுட்கோர்ட்டில் நுழையும் முன் . . .
முதன் முதலில் துபாய் போய் இறங்கியபோது, நான் சந்திக்கவிருந்த நபர், ஃபுட் கோர்டுக்கு வந்துடுங்க என்றார். எனக்குத் பரிச்சயமான ஒரே கோர்ட் சைதாப்பேட்டை கோர்ட்தான். அதனால் அவர் சாப்பாடு சம்பந்தமாக ஏதோ கோர்டுக்கு அழைக்கிறாராக்கும் என்று நினைத்துவிட்டேன். உள்ளே நுழைந்ததும் ஒன்றும் புரியவில்லை. வரிசையாக பர்மா பஜார் கடைகள் போல, சாப்பாட்டுக் கடைகள், அவற்றின் எதிரில் எக்கச்சக்க டைனிங் டேபிள்கள். உள்ளே நுழையலாமா? உட்காரலாமா? உட்கார்ந்தாலே துட்டு கேட்பார்களா என்று ஒரே குழப்பம். எனவே ஃபுட்கோர்ட் உள்ளே நுழையாமல் கலவையான இறைச்சி வாடையை சங்கடமாக நுகரந்தபடி சும்மா நடந்து கொண்டிருந்தேன். நண்பர் வந்தவுடன்தான், எந்தக் கடையிலும் சாப்பாடு ஆர்டர் செய்யலாம், எந்த டேபிளிலும் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று புரிந்தது.

தற்போது ஃபுட்கோர்ட் இல்லாத ஷாப்பிங் மால்களே சென்னையில் இல்லை. LKG பிள்ளைகள் கூட ஃபுட்கோர்டில் பர்கர் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றன. சென்னையிலேயே பிரபலமான ஒரு  ஃபுட்கோர்ட். இங்கே 100 ரூபாய் கட்டி ஒரு கிரெடிட் கார்டு வாங்க வேண்டும். 90 ரூபாய்க்கு சாப்பிட்டால் மீதி பத்து ரூபாயை உங்களுக்குத் தர மாட்டார்கள். அவர்களிடமே தங்கிவிடும். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் அங்கு சாப்பிடுகிறார்களாம். ஆளுக்கு பத்து ரூபாய் அவர்களிடம் விட்டு வந்தால், கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு இலட்சம் ரூபாய் அவர்களுக்கு எந்த செலவும் இல்லாத உபரி லாபம்.

வெயிலில் வாடும் காய்கறிகாரனிடமும், கோவில் பூக்காரிகளிடமும், பத்து பைசாவுக்கு சண்டை போடுகிற நாம், கோடீஸ்வர ஷாப்பிங் மால்களில் இப்படி ஏமாந்து இழப்பதை மிகப் பெருமையாகவும் ஒரு அந்தஸ்தாகவும் நினைக்கிறோம். எனது நண்பர் சுரேகா இந்த வருடம் புத்தாண்டின் போது அதே ஃபுட் கோர்டில் மீதிப் பணத்தை தந்தாக வேண்டும் என்று சண்டையிட்டு பணத்தை வாங்கிக் கொண்டுதான் வெளிவந்தார்.
அடுத்தமுறை அந்த ஃபுட்கோர்டில் சாப்பிட உட்காரும்போது இதனை மனதில் கொள்ளுங்கள். 

கிளைமாக்ஸ்
நண்பரிடம், ‘நீங்க இன்விடேஷன் கொடுத்ததையே மறந்துட்டேன், நீங்க எப்போ வந்து இன்விடேஷன் தந்தீங்க‘ என்றேன். அவர் ஹா..ஹா..ஹா எனச் சிரித்துவிட்டு நான் உங்களுக்கு கைப்பட இன்விடேஷன் தரவே இல்லை. ஃபேஸ்புக்கில் என் பையன் கல்யாணம் பற்றி எல்லாத்துக்கும் பொதுவா மெசேஜ் போட்டிருந்தேன். உங்களுக்கு tag பண்ணியிருந்தேன். நீங்கதான் மிஸ் பண்ணிட்டீங்க என்றார்.

முன்பெல்லாம் வீடு வந்து அழைப்பிதழ் தருவார்கள். அப்புறம் தபாலில் அனுப்பி வைக்க ஆரம்பித்தார்கள். பின்னர் இமெயில் அழைப்பிதழ்கள், அப்புறம் மொபைலில் அழைக்க ஆரம்பித்தார்கள். தற்போது ஃபேஸ்புக்கில் மெசேஜ் போட்டாலே அது இன்விடேஷனுக்கு சமம் என்ற மனநிலை நமக்கு வந்துவிட்டது.

நான் வாசித்த ஹைகூ
காட்டிக் கொடுப்பதில்
முதல் பரிசு
கண்ணாடிக்கு

நான் எழுதிய புக்கூ
கணவனையும்
நண்பனாக அறிமுகப்படுத்துவது
ஃபேஸ்புக்

கடைசிச் செய்தி! 
ஃபேஸ்புக்கை வடிவமைத்து, நமக்குத் தந்த சூகர்பெர்கிற்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் அவருடைய திருணமத்திற்கு நாளின் பெரும்பகுதியை அவர் உருவாக்கிய ஃபேஸ்புக்கிலேயே கழிக்கும் என்னைப்போன்ற அப்பிராணி நண்பர்களுக்கு அவர் அழைப்பிதழ் தரவில்லை.

Friday, May 11, 2012

செல்வா ஸ்பீக்கிங் - 4


எழுதிவிட்டு போஸ்ட் பண்ணப்படாத ஒரு வாசகர் கடிதத்துடன் இக்கட்டுரை துவங்குகிறது. சென்ற IOC (In & Out Chennai) இதழின் முதல் பக்கத்தில் ஆர்த்தி மங்களா எழுதியிருந்த கட்டுரை அருமை. திடீர் மின் துண்டிப்பால் விளக்குகள் அணைந்தாலும், கார்களின் விளக்கொளியில் தொடர்ந்து தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்த பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் முயற்சி மிக மிக இன்ஸ்பயரிங். இந்தக் கடிதத்தை எழுதி போஸ்ட் பண்ணாத வாசகர் நான்தான்.

கட்டுரையும் எழுதிவிட்டு, வாசகர் கடிதமும் எழுதினால் பிரசுரிப்பார்களா எனத் தெரியவில்லை. அதனால் கடிதத்தையே என் கட்டுரையின் முதல் பாராவாக்கிவிட்டேன்.

பெரும் தலைவர்களின் சாதனைக் கதைகளை விட, இது போன்ற எளிய மனிதர்களின் எளிய வெற்றிதான் அதிகம் நம்பிக்கையும், உற்சாகமும் தருகிறது. அந்த பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கை தட்டி உற்சாகப்படுத்தியவர்களுக்கும், கார் லைட்டுகளுக்கும் வாழ்த்துகள்!

அந்தக் கட்டுரையில் ஒரே ஒரு விஷயம் மிஸ்ஸிங். பவர் கட் ஆனதும், ஆர்த்தி மங்களா என்ன மேஜிக் செய்தார் என்பது பற்றிய விபரம் இல்லை. சென்ற வாரம் ஒரு பவர்கட் இரவில் நான் ஒரு மாஜிக் செய்தேன். பவர்கட் ஆனதும், இருளில் யாருக்கும் தெரியாமல் டப்பாவுக்குள் இருந்த, கால்கிலோ திருநெல்வேலி ஹல்வாவை மறைய வைத்துவிட்டேன். வீட்டு வாண்டுகள் சண்டைக்கு வரும் என்பதால், எப்படி அந்த மாஜிக் செய்தேன் என்பதை திருநெல்வேலி இருட்டுகடை வாசலில் நின்று கேட்டாலும் சொல்ல மாட்டேன்.

முசோலினி
பின்னர் தேவைப்படும் எதையாவது மறக்காமலிருக்க வேண்டுமென்றால், அதை எங்காவது எழுதி வைப்பது வழக்கம். எனவே முசோலினி என்ற இந்தப் பெயரை இங்கே எழுதி வைக்கிறேன். ஏன் மறக்கக் கூடாது என்பதற்கு விடை (அ) கேள்வி கடைசி பாராவில் உள்ளது.

கழுகு - சுஜாதா எழுதிய சுருக்கமான நீதிக்கதை!
ஒரு கழுகு சுதந்திரமாகப் பறந்து சென்றுகொண்டிருந்தது. விஷ் என்ற சப்தம் கேட்டு அது என்ன என்று பார்ப்பதற்குள் ஒரு அம்பு அதைத் தாக்க, அடிபட்டு தன் இறக்கை இழந்து சுழன்று சுழன்று சொத்தென்று கீழே விழுவதற்கு முன் தன்னைத் தைத்த அம்பை ஒரு தடவை பார்த்தது. கூர்மையான முனை, நீண்ட உடல், அதன் வாலில் கழுகிறகு! ‘அடப்பாவமே!’ என்று சொல்லிகொண்டே செத்துப்போனது.

நீதி : பல தடவை நம் எதிரிகளுக்கு நம்மை அழிக்க நாமே உதவி செய்து தருகிறோம்.

சுருக்கமா எப்படி எழுதறது என்பதை தலைவர் சுஜாதாகிட்டதான் கத்துக்கணும். அதே பாணியில நானும் ஒரு கதை டிரை பண்ணப் போறேன்.

காக்கா - நான் எழுதிய சுருக்கமான நீதிக்கதை!
பாட்டி சுட்ட வடையை நைஸாக கொத்திக் கொண்டு மரத்தில் அமர்ந்தது காக்கா. அதைப் பார்த்த நரி, ஹேய் காக்கா நீ ரொம்ப அழகு என்றது. நரித் தந்திரம் தெரிந்த காக்கா, வடையை காலில் பிடித்துக் கொண்டு, நான் அழகு என்று நீ சொன்னதை அப்படியே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸா போடு என்றது.

நீதி :
செக்புக் இல்லார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை
ஃபேஸ்புக் இல்லா நபர்க்கு.

சுஜாதாவும், வள்ளுவரும் மன்னிப்பார்களாக!

வரம்பு மீறும் சின்னத்திரை
ஜீ தமிழில் அச்சமில்லை அச்சமில்லை என்றொரு நிகழ்ச்சி. நிர்மலா பெரியசாமி, பிரிந்து கிடக்கும் குடும்பங்களை எதிரெதிர் சோபாக்களில் உட்காரவைத்து கன்னாபின்னாவென்று கேள்வி கேட்கிறார்.
உன் அப்பா உன்னை அடிக்கிறாராம்மா.. அப்பெண் அழுகிறாள். தந்தை மறுக்கிறார். உடனே அவரை வெளியே அனுப்பிவிட்டு, அப்பெண்ணிடம், ஏம்மா உன் அப்பா உன்னை தனியா கூப்பிட்டு ...... . . . . . அதற்குப் பின் வந்த வார்த்தைகள் எல்லாம் மகா வக்கிரம். தனியறைக்குள் ஆலோசனையாக சொல்ல வேண்டியவற்றை, ஏதோ பட்டி மன்றம் போல, பொதுவில் வைத்து விசாரிப்பதை உடனே தடை செய்ய வேண்டும். காமிராவின் முன்னால் தன்னை மறந்து அழும் அந்த டீன் ஏஜ் பெண், அதே நிகழ்ச்சியை டிவியில் பார்க்கும்போது மனரீதியாக எப்படியெல்லாம் பாதிக்கப்படுவாள். குழந்தைகளுடன் அமர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் மனதில் இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதைப் பற்றி யாரும் சிறிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. வித்யாபாலன் நடித்த டர்ட்டி பிக்சரை இரவு 11 மணிக்கு மேல்தான் ஒளிபரப்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதே ரீதியில் இந்த நிகழ்ச்சிக்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். அல்லது நிறுத்தப்பட வேண்டும்.

மீண்டும் முசோலினி
இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. மிஸ்டர் X ஹிட்லருக்கு தந்தி அனுப்பினார்.

''நிலைமை மிக மோசம். உணவு அவசரத்தேவை. தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும்.''
ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது,''உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை. வருந்துகிறேன் ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டிற்கும்,ரஷ்யப் போர்முனைக்கும் தேவைப்படுகிறது ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும்.''
மிஸ்டர் X மீண்டும் தந்தி அனுப்பினார், ''தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி வையுங்கள்.'' சரி அந்த மிஸ்டர் X யார் எனத் தெரிய வேண்டுமா? நான்காவது பாராவின் தலைப்பு அவர் பெயர்தான்.

In & Out Chennai April (15-30) இதழில் எழுதியது

Monday, April 23, 2012

செல்வா ஸ்பீக்கிங் - 03

OK let him Do it!
இந்த வரிக்குள் ஒரு திருக்குறள் ஒளிந்திருக்கிறது. ஒளித்து வைத்தவர் மிகப் பெரிய பிரபலம். அவர் யார்? அது எந்தக் குறள்? 
இதனை நீங்கள் யூகித்துக் கொண்டே இதே வரியில் நிற்கலாம். அல்லது அடுத்த வரியை படித்துக் கொண்டே  யூகிக்கலாம்.

டைட்டானிக்கை மீண்டும் எடுக்க முடியுமா?
டைட்டானிக்கை 3Dயாக்கி மீண்டும் வெளியிட்டிருக்கிறார்கள். செம ஃபிரஷ். 97ல் வெளிவந்த படம் போலவே தெரியவில்லை. இப்போதுதான் முதல் முறை பார்ப்பது போல 

அவ்வளவு எமோஷன். பிரமாண்டமான கப்பலை, அதை விடப் பிரமாண்டமான காதலுக்குள் மிதக்க விட்டதுதான், திரைக்கதை சாமர்த்தியம். இப்போதும் கிளைமாக்ஸ் 

பார்க்கும்போது தொண்டை அடைத்துக் கொண்டு சோக்கிங். சரி.. 2Dயில் உருவான திரைப்படத்தை 3Dயில் எப்படி மாற்றினார்கள்? ஒரே புகைப்படத்தை ஒரே அளவில் 

போஸ்ட்கார்டுகளாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றன் மேல் ஒன்று வைத்துவிட்டு, ஒன்றை மட்டும் சில மில்லி மீட்டர்கள் நகர்த்தினால் எப்படி 

இருக்கும்? அதே போலத்தான் 2D டைட்டானிக்கை தனித்தனி தொடர் (இலட்சக்கணக்கான) புகைப்படங்களாக மாற்றி, இன்னொரு காப்பி எடுத்து அவற்றை ஒன்றன் மீது 

ஒன்று டிஜிட்டலாகவே அடுக்கி இன்னொரு படமாக்குகிறார்கள். இதை 3D கண்ணாடி போட்டுக் கொண்டு பார்க்கும்போது, திடும்மென்று முப்பரிமாணம் விரிந்து டைட்டானிக் 

கப்பல் நமது மூக்கு நுனியைக் கடந்து செல்கிறது. இவ்வளவுதானா என்று வியக்காதீர்கள். இன்னும் நிறைய்ய்ய்ய இருக்கிறது. டெக்னிகல் சமாச்சாரங்களை கொஞ்சம் 

கொஞ்சமாகப் படித்தால் ஈஸியாகப் புரியும். இல்லையென்றால் போரடித்துவிடும்.

திரு. ஞானராஜசேகரன் இயக்கிய பாரதி படத்தை பார்த்துவிட்டு கமலிடம் கேட்டார்களாம். மீண்டும் ஒரு முறை பாரதி படத்தை எடுக்க முடியுமா? அதற்கு அவருடைய 

பதில்... ஏன் முடியாது. பாரதியைப் பற்றிச் சொல்ல இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இன்னும் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றாராம்.

அதே போல டைட்டானிக் படத்தை மீண்டும் எடுக்க முடியுமா எனக் கேட்டால், என்னுடைய பதிலும் ஏன் முடியாது என்பதுதான். ஜேம்ஸ் காமரூன் காதலை 

மையப்படுத்தியது போல, அந்த விபத்தில் தப்பிப் பிழைத்த ஈவா ஹர்ட் என்ற 7 வயது குழந்தையை மையப்படுத்தி ஒரு புது டைட்டானிக் எடுப்பேன்.

மீண்டும் குறள் டெஸ்ட்
'This man, this work shall thus work out,' let thoughtful king command; 
Then leave the matter wholly in his servant's hand. 
இந்த வரிகள் எந்த திருக்குறளை குறிக்கின்றன? முதல் வரிக்கும் இதற்கும் தொடர்பிருக்கிறது. தொடர்பைக் கண்டுபிடிக்க, முதல் பாராவுக்கும், இந்தப் பாராவுக்கும் 

கண்களை அசையுங்கள். கண்களுக்கு சிறந்த எக்ஸர்சைஸ். இது திருக்குறள் அல்ல.. கண் டாக்டர் குரல்.

2D முதல் 7D வரை
பிரபல கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் தற்செயல்தான். ஆதாம் ஆவாளை ஈர்க்கப் பயன்பட்ட ஆப்பிள், புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க உதவியது ஒரு தற்செயல்தான். 

ஆப்பிள் உருவான காலத்தில் இருந்து மரத்திலிருந்து கீழேதான் விழுந்து கொண்டிருக்கிறது. ஐசக் நியூட்டனும் அதை வெறுமனே வேடிக்கை பார்த்திருக்கிறார். ஆனால் 

திடீரென ஒரு நாள் ஏன் இது கீழே விழுகிறது. மேலே செல்ல வேண்டியதுதானே என்று அவருக்குத் தோன்றியது தற்செயல்தான். அந்த தற்செயல் சிந்தனையின் 

விளைவாகத் தோன்றியதுான் புவிஈர்ப்பு விசை பற்றிய கண்டுபிடிப்புகள். 

சினிமாவிலும் தற்போது அது போல ஒரு தற்செயல் கண்டுபிடிப்பு பிரளயத்தை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது. Canon 7D என்றொரு ஸ்டில் காமிரா சில 
வருடங்களுக்கு முன்பு அறிமுகமானது. அதில் போனால் போகட்டும் என்று வீடியோ ரெக்கார்டிங் ஆப்ஷனும் தந்திருக்கிறார்கள். என்னைப் போல சிக்கன ஆசாமி, எதற்கு 

தேவை இல்லாமல் வீடியோ காமிராவுக்கு வாடகை. இந்த ஆப்ஷனையே பயன்படுத்தலாமே என்று தற்செயலாக முடிவெடுத்து ஒரு டாகுமெண்ட்ரி படத்தை எடுத்திருக்கிறார். 

பெரிய திரையில் போட்டுப் பார்த்த நண்பர்களுக்கு ஆச்சரியம். சினிமா காமிராவுக்கு இணையான படத் துல்லியம். அவ்வளவுதான் அந்தச் செய்தி பரபரவென பரவி தற்போது 

கோடம்பாக்கம் வரையில் வந்துவிட்டது. நானும் ஒரு Canon 7D வைத்திருக்கிறேன். ஒழுங்காகப் பயன்படுத்தத் தெரிந்தால் அட்டகாசமாக முழு திரைப்படத்தையும் 

இதிலேயே எடுத்துவிடலாம். அரவான், மெரீனா போன்ற படங்களில் இந்தக் காமிரா அட்டகாசமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காமிராவின் விலையே இலட்சம் + சொச்சம் 

தான். நல்ல கதை இருந்தால் (மட்டும்) இந்தக் காமிராவை எடுத்துக் கொண்டு படம்பிடிக்கப் புறப்பட்டுவிடுங்கள்.

போகிற போக்கைப் பார்த்தால் இந்த மாத செல்வா ஸ்பீக்கிங் சினிமா ஸ்பெஷல் ஆகிவிடும் போலிருக்கிறது. அதனால் ஒரு யு டர்ன். அவ்வப்போது நான் மறக்காமல் 

யாஹீ தளத்திற்குள்ளும் நுழைவதுண்டு. அதில் பார்த்த சுவாரசியமான டிப்ஸ்! திருமண வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமா? 3 டிப்ஸ். முதலாவது நல்ல சாப்பாடு. 

இரண்டாவது நல்ல உடல் பயிற்சி. மூன்றாவது நல்ல டைம் பாஸ் என்று போட்டிருந்தார்கள். நம் நகர்ப்புற வீடுகளில் பொதுவாக மனைவிகள் (வேறு வழியின்றி) 

சமைக்கிறார்கள், கணவர்கள் தொந்திக்கு பயந்து உடற் பயிற்சி செய்கிறார்கள், இருவரும் சேர்ந்து தனித்தனியாக ஃபேஸ்புக்கில் டைம் பாஸ் பண்ணுகிறார்கள்.
இதனால் நல்ல திருமண வாழ்க்கை கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் டிப்ஸ் பேஜில் வந்திருந்த ஃபிட்னஸ் விளம்பரங்கள் மூலமாக யாஹீவுக்கு வருமானம்  என்பது மட்டும் உறுதி.

திருக்குறளும் பாப்பையா குரலும்
அரசியல் காரணமாக புத்தாண்டு தினங்கள் மாறினாலும் பாப்பைய்யாவின் பட்டிமன்றங்கள் மாறுவதில்லை. பல வருடங்களா பாரதி பாஸ்கர், ராஜா என ஒரே டீமை வைத்து 

வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார். சமீபகாலமாக T20 கிரிக்கெட் போல இளைய முகங்களும் தென்படுகின்றன. ஆரம்ப கால பட்டிமன்றங்களில் நிறைய  இலக்கியம் இருக்கும். இப்போது வெறும் ஜோக் தோரணம்தான். இருந்தாலும் இவருடைய பட்டி மன்றத்தை தொடர்ந்து ஒளிபரப்பாகின்ற டமில் ஹீரோயின்களின் பேட்டிக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்பதால் இன்னமும் பலகாரங்களுடன் சாலமன் பாப்பைய்யாவின் பட்டி மன்றத்தையும் தவிர்க்க முடியவில்லை. அவர் ஒரு குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். 

இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.

இந்த உரைக்கும் கட்டுரையின் முதல் வரிக்கும், ஐந்தாவது பாராவுக்கும் ஒரு குறள் பாலம் இருக்கிறது. 

டாட்டா கார்டுகளை விஞ்சும் இன்டர்நெட் பேக்
வெளியூருக்கு பயணிக்கும்போது, சில நேரங்களில் மாதம் ஆயிரம் ரூபாய் கட்டுகிற டாட்டா கார்டுகள் கூட சொதப்புகின்றன. ஆனால் 98 ரூபாய்க்கு இன்டர்நெட் பேக் டாப்அப் செய்தால் எங்கிருந்தாலும் இணைப்பு கிடைக்கிறது. நான் பல நேரங்களில் என் மொபைல் போனைத்தான் லாப்டாப்புடன் இணைக்கிறேன்.

ஏ.ஆர்.இரகுமான்
இசைப் புயலை பல வருடங்களுக்கு முன் அவருடைய அலுவலகத்தில் சந்தித்தேன். புயல் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. அமைதியான புன்னகையுடன் கை குலுக்கினார். நான் எழுதியிருந்த ஸ்க்ரிப்டில் இருந்த பிரமாண்டம் என்ற வார்த்தையை நீக்கிவிடும்படி வார்த்தைகளுக்கே வலிக்காமல் கூறினார். நமக்கு எதுக்கு சார் அந்த வார்த்தையெல்லாம் என்றார். பிறகு இதுதான் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறை. இதுதான் உங்கள் எடிட்டிங் மெஷின் என்றார். அது ஒரு ஆப்பிள் இயங்குதளம் கொண்ட மேக் மெஷின். எனக்கு பழக்கமில்லையே என்றேன். கற்றுக்கொள்ள எத்தனை நாள் ஆகும்? எனக் கேட்டார். 30 நாட்களுக்குள் கற்று வேலையை முடிக்கிறேன் என்றேன். வெரிகுட், ஆல் த பெஸ்ட் என்று கைகுலுக்கிவிட்டு கே.எஸ்.இரவிக்குமாரிடம் பேசச் சென்றுவிட்டார். செல்லும்போது, OK let him Do it! என்று தன் உதவியாளரிடம் சொல்லிவிட்டுச் சென்றார்.

ஒருவரை அழைத்துவிட்டால் அவர் மேல் அவர் வைக்கும் அபார நம்பிக்கைக்கு இணை இல்லை. அவருடன் இணைந்து பணி புரியும் இசை வல்லுனர்கள் எல்லாம் தங்களின் பெஸ்ட்டை மட்டுமே இரகுமானுக்குத் தருகிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் திறமையின் மேல் அவர் வைக்கும் நம்பிக்கை. இவர் நாம் நினைப்பதை தந்துவிடுவார் என்ற உறுதி. அதற்கான எல்லா சூழலையும் அமைத்துத் தரும் தன்மை. தந்த பின் பொறுமையாகக் காத்திருந்து, தனக்கு வேண்டியதைப் பெறும் இலக்கு. இதுதான் ஏ.ஆர். இரகுமான்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்

இதை வள்ளுவர் ஏ.ஆர்.இரகுமானுக்குச் சொன்னாரா எனத்தெரியாது. ஆனால் இரகுமான் இந்தக் குறனை கடைபிடிக்கிறார்.

In & Out Chennai (Apr) இதழுக்காக எழுதியது.

Tuesday, April 3, 2012

செல்வா ஸ்பீக்கிங் - 02


முதல் வரியை எழுதும்போது, பக்கத்தில் அமர்ந்திருக்கும் நண்பர் டர்ட்டி பிக்சர் படத்தை டிவிடியில் பார்த்துக் கொண்டிருக்கிறார். எடுத்தவுடனேயே எதுக்கு இந்த வெட்டித் தகவல் எதற்கு என்று முறைக்காதீர்கள். பின் வரும் வரிகளில் திடீரென்று இதற்கு ஒரு லிங்க் வரும்.

அடியாத்தி!
அலையாத்தி என்றால் அலை ஆத்தி. கடலில் அலைகளின் வேகம் அதிகமாகி ஊருக்குள் புகும்போது, அலைகளின் வேகத்தை ஆற்றி மட்டுப்படுத்தும் மரங்களுக்கு அலை ஆத்தி, அலையாத்தி மரங்கள் என்று பெயர். ஆங்கிலத்தில் மாங்குரோவ் மரங்கள். ஆனால் பெரும்பாலும் கடற்கரையின் ஓரத்தில் காணப்படும் சவுக்கு மரங்களையே மாங்குரோவ் மரங்கள் என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த உண்மையை நான் சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன். சீர்காழிக்கு அருகில் உள்ள பெரும்தோட்டம் என்ற கிராமத்தில் ஒரு இறால் பண்ணை வைத்திருக்கிறார்கள். அங்கு மண்வளமும், நீர் வளமும் கெடாமல் இருக்க மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி மரங்களையும் வளர்க்கிறார்கள். அவர்கள் சொல்லி, நேரில் பார்த்த பின்தான் சவுக்கு என்பது அலையாத்தி அல்ல என்று தெரிந்து கொண்டேன். அப்படியா அடியாத்தி என்று நீங்கள் வியப்பது தெரிகிறது. இப்போது உங்கள் தமிழுக்கு ஒரு சோதனை. அலையாத்தி என்றால் அலை ஆத்தி... அடியாத்தி என்றால்?

என்னுடைய ஆன்லைன் பிழை திருத்தி
கடலைப் பொறி - கடலைப் பொரி. இரண்டில் எது சரி? உங்களை எல்லாம் பொறி வைத்துதான் பிடிக்கணும். ஒழுங்கா பிழை இல்லாம எழுத மாட்டீங்களா என்று என்னை டிவிட்டரில் ஒரு பிடி பிடித்திருந்தார் @elavasam. கடலைப் பொறி தவறு, கடலைப் பொரிதான் சரி. இந்த தவறை இன் & அவுட் பிழை திருத்தர்கள் சுட்டிக் காட்டியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.

பட்ஜெட்டில் கல்விக்கு அதிக நிதி
கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியிருக்கும் தமிழக பட்ஜெட்டுக்கு சபாஷ்
செயல் வழிக் கல்வியை (சில பல நீதிமன்ற இழுபறிகளுக்குப்பின்) தமிழக அரசு செயல்படுத்தியிருக்கிறது. அது வெற்றிகரமாக தொடர வேண்டுமானால் அரசின் கவனம் கல்வியின் மேல் முழுமையாக இருக்க வேண்டும். முதல் கட்டமாக தமிழக நிதி நிலை அறிக்கையில் 14,552 கோடி ரூபாய் கல்விக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் மற்ற எந்த துறைக்கும் ஒதுக்கப்பட்டதை விட இது அதிகம். இதை மனமார வரவேற்கிறேன். இலவச(விலையில்லா) செருப்பு, நோட்டுபுத்தங்கள், ஜாமெட்ரி பாக்ஸ் இவற்றிற்கு மட்டும் இந்த பட்ஜெட்டை செலவு செய்யாமல், மற்ற அம்சங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

1. டிஜிட்டல் பாடத் திட்டங்களை வடிவமைத்தல்
2. டிஜிட்டல் வகுப்பறைகளை உருவாக்குதல்
3. டிஜிட்டல் முறையில் வகுப்பெடுக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி தருதல்
4. வல்லுனர்களைக் கொண்டு (மாணவர்/ஆசிரியர் இருவருக்குமே) பேச்சுக்கலை, மனவளக் கலை பயிற்சி தருதல்
5. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை அழகாக, தரமாக பராமரித்தல்

இவை ஐந்தையும் மிக முக்கியமாக நான் நினைக்கிறேன். மற்ற அம்சங்களைப் பற்றி அவ்வப்போது பேசுவோம்.

டிஜிட்டல் கர்ணன் - சிவாஜி தி பாஸ்
1964ல் வெளிவந்து பாக்ஸ் ஆஃபிசில் சொதப்பிய படம் கர்ணன். பழைய பிரிண்டை தூசி தட்டி எடுத்து, அதில் உள்ள கோடுகளை, வண்ணப் பிசிறுகளை நீக்கி, டிஜிட்டல் நுட்பத்தால் செதுக்கி வெளியிட்டிருக்கிறார்கள். இந்த முயற்சிக்காக சபாஷ்! 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையைத் தொட்டிருக்கும் கர்ணன், மற்ற புதுப்படங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. செம வசூல் படம் மெகா ஹிட். நான் ஒரு செவ்வாய்கிழமை மாலையில் சாந்தியின் திரையரங்கில் படம் பார்த்தேன். உடன் படம் பார்த்தவர்கள் விவிஐபிக்கள் (பெயர் தவிர்க்கிறேன். என்ன்ன்ன்ன்ன்ன்ன்னா பில்டப்பு!). அரங்கம் நிறைந்த காட்சி. கணிசமான இளைஞர்கள் கூட்டம் ஒரு ஆச்சரியம். அதை விட ஆச்சரியம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். கடந்த சில வருடங்களாக, குடும்பங்கள் திரையரங்குக்கு வருவது குறைந்துவிட்டது. காரணம் டிக்கெட் விலை என்பது பொய். படங்கள் குடும்பங்களை பயமுறுத்துகின்றன. குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கக்கூடியதாக இல்லை. சீட்டில் நெளிய வைக்கின்றன. எனவே குடும்பத்துடன் ஒரு நல்ல படம் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கமும், நவீன கொலவெறி சினிமாக்களின் மேல் உள்ள கோபமும் கர்ணன் படத்தால் தீர்க்கப்பட்டிருக்கிறதாக நான் நினைக்கிறேன். அதனால் மக்கள் மகிழ்ச்சியுடன் கர்ணன் பார்க்க புறப்பட்டுவந்துவிட்டார்கள்.

அந்தக் காலத்துக்கே உரிய அப்பிய மேக்கப், மிகை வசனங்கள் இருந்தாலும் கர்ணன் படம் சொல்லும் செய்தி, உள்ளத்தை உருக வைக்கிறது. மகாநதி படத்தில் ஒரு அற்புதமான வசனம். நாட்டுல நல்லவங்களுக்கு நல்லது மட்டுமே நடக்காதா? நல்லவனுக்கு கிடைக்கிற அவ்வளவு செல்வாக்கும் மரியாதையும், அவனுக்கு கிடைக்கறதை விட அதிகமாவே கெட்டவனுக்கும் கிடைக்குதே. நல்லவனுக்கு ஏன் திரும்பத் திரும்ப சோதனை? என்று கமல் கண்ணீர் மல்க ஆதங்கத்துடன் அரற்றுவார். உள்ளம் உறைய வைக்கும் காட்சி அது. அந்தக் கேள்வி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்ப வரும் கேள்வி. அந்தக் கேள்விக்கு கர்ணன் படம் விடை சொல்கிறது.

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது, வல்லவன் வகுத்ததடா...

ஆத்மசுத்தியுடன் இந்தப் பாடலைக் கேளுங்கள். ஐ பெட்! உங்கள் கண்களில் ஒரே ஒரு துளி நீராவது துளிர்க்கும்...

விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன், சீர்காழி கோவிந்தராஜன், பி.ஆர் பந்தலு, தி மாஸ்! சிவாஜி தி பாஸ்!

புன்னகை மன்னன் கண்டக்டர்
இரு மாதங்களுக்கு முன்பு. மோட்டர் பைக் பங்ச்சர் (இதற்கு ஏற்ற தமிழ் வார்த்தை என்ன?) பாண்டிபஜாரில் அப்படியே பார்க் செய்துவிட்டு, ஒரு பஸ்ஸைப் பிடித்தேன். எனக்குப் பிடித்த 12B. ஏன் பிடிக்கும் என்பதைப் பற்றி ஃபிளாஷ்பேக் சொல்ல ஆரம்பித்தால், பனகல் பார்க் சாரதா வித்யாலயா பற்றி சொல்ல வேண்டியதிருக்கும் என்பதால் அடுத்த பஸ் ஸ்டாப்புக்குள் டிக்கெட் வாங்கி பயணத்தை தொடருகிறேன். கண்டக்டர் புன்னகை மன்னனாக இருந்தார். சில ஃபுட்போடர்கள் அவரை இம்சித்துக் கொண்டே இருந்தாலும் புன்னகையை ஏற்றி இறக்கினாரே தவிர, கோபப்படவில்லை.ஆழ்வார் பேட்டையில் இறங்கும்போது, உங்க புன்னகை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதே போல எப்பவும் சிரிச்சுகிட்டே இருங்க என்று சொல்லிவிட்டு இறங்கிவிட்டேன். மனிதருக்கு சந்தோஷம் தாள முடியவில்லை. மாலையில் வேலை முடிந்து, பஞ்சர் ஒட்டி வண்டியை ஸ்டார்ட் பண்ணும்போது, சார் என்று குரல். மீண்டும் மதியம் பார்த்த 12B. அதே கண்டக்டர். சார்.. வாங்க என்று குரல். அதே புன்னகை கண்டக்டர். வண்டி இருக்கு என்றேன். எங்கே என்றார் சைகையில். வடபழனி என்றேன். அட நம்ம டெப்போ என்றார். பஸ்ஸை பின் தொடர்ந்தேன். வடபழனியில் பஸ் நின்றதும் வந்து கை கொடுத்தார். சார் ஒரே வார்த்தையில என் குணத்தையே மாத்திட்டீங்க. வெளியில நான் சிரிச்சுகிட்டே இருப்பேனே ஒழிய வீட்டுக்குப் போனா எரிஞ்சு விழுவேன் சார். இனிமே அது கூட இருக்காது, என்றார். புன்னகைத்துக் கொண்டே அவர் வாங்கித்தந்தது தான் என்னால் இன்று வரை மறக்க முடியாத சுவையான டீ. அவர் பெயரை மறந்துவிட்டேன். பெயரா முக்கியம், குணம்தானே முக்கியம். ஹல்லோ கண்டக்டர், ஒரு வேளை நீங்கள் இதை வாசித்தால் என் பதில் புன்னகையை பெற்றுக்கொள்ளுங்கள்.

தூக்கிலடப்பட்ட பன்றி
பிரெஞ்சு நாட்டில் 1386ல் ஒரு பன்றியை தூக்கிலிட்டார்களாம். ரொம்ப முக்கியம், இந்த உபயோகமற்ற தகவல் எதுக்கு என்கிறீர்களா? இது போன்ற (நமக்கு உபயோகமே இல்லாத) வெட்டி useless தகவல்களால் ஆனதுதான் நம் உலகம். பிரபு-நயன் திருமணம், ஐஸ்வர்யா குழந்தைக்கு என்ன பெயர், கோச்சடையானில் ரஜினி ஹீரோயின் யாரு? இதில் எந்த ஒரு தகவலாலும் நமக்கு துளி கூட உபயோகமே இல்லை. ஆனால் இந்தச் செய்திகளால்தான் நமது இதயங்களே துடிக்கின்றன. இதயம் என்றதும் ஞாபகம் வருகிறது. நமது இதயம் ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் முறை துடிக்கிறதாம். இன்று எனக்கு எக்ஸ்ட்ராவாக ஒரு இலட்சத்து ஒரு முறை துடித்தது. காரணம் என் பக்கத்தில் நண்பர் பார்த்துக் கொண்டிருக்கும் டர்ட்டி பிக்சர் வித்யாபாலன். சும்மா எட்டிப்பார்த்த ஒரு வினாடியில் வித்யாபாலனால் இதயம் எக்ஸ்ட்ராவாக ஒரு முறை துடித்துவிட்டது.

இதெல்லாம் ஒரு நியூஸா?  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று நீங்கள் பற்களை நறநறப்பது தெரிகிறது. பதட்டப்படாமல் இன்னொரு யூஸ்லெஸ் தகவலாக நினைத்து மறந்துவிடுங்கள். நான் வித்யாபாலனை இரசிக்கப்போகிறேன். மகா திறமைசாலி! தேசிய விருதுக்கு தகுதியானவர்தான்! அப்பாடி சமாளிச்சுட்டேன்! ஹலோ நண்பா... ரீ வைண்ட். படத்தை முதலில் இருந்து போடு!

(In & Out Chennai பத்தரிகையில் ஏப்ரல் இதழில் நான் எழுதியது)

Saturday, March 17, 2012

செல்வா ஸ்பீக்கிங் - 01


பொரி சாப்பிட்டுக் கொண்டே இதை எழுத ஆரம்பிக்கிறேன். எத்தனையோ கொறியல்கள் இருக்க, பொறியை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பதை பின் வரும் பாராக்கள் ஏதாவதில் சொல்கிறேன்...

முதலில் ஸ்டாட்டர்... 
சில வீடுகளில் முன்பசிக்கு இதைச் சாப்பிடுங்க.. அதுக்குள்ள விருந்து தயாராகிடும் என்று உட்கார வைப்பார்கள். அதே போல நட்சத்திர ஓட்டல்களில் மெயின் சாப்பாட்டுக்கு முன் ஸ்டாட்டர்கள் தருகிறார்கள். நான் பொதுவாக வறுத்த மஞ்சூரியன் மற்றும் வெஜ் ரோல்களை விரும்பிச் சாப்பிடுவேன். பில் கொடுப்பது நீங்கள் எனத் தெரிந்துவிட்டால், ஸ்டாட்டர்களின் பட்டியல் நீளும். ஆனால் அதற்கப்புறம் ஃபிரைடு ரைசுடன் உணவை முடித்துக் கொள்வேன், உங்க பர்ஸின் கனம் அதிகம் குறையாமல் பார்த்துக் கொள்வேன். அதனால் தயங்காமல் என்னை விருந்துக்கு அழைக்கலாம்.

பிலேட்டட் மகளிர் தின வாழ்த்துகள்!
எதற்காக இதைச் சொல்ல வந்தேன் என்பதால் கடந்த மாதம் பொன்னேரியில் ஒரு விழாவுக்குப் போயிருந்தேன். சிறப்பு விருந்தினர் என்பதால் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று, நண்பர்கள் ஒரே அடம். நித்யகல்யாணி என்றொரு ஓட்டல். கல கலவென்று கூட்டம். அங்கு உணவை விட பரிமாறுபவர்கள்தான் ஸ்பெஷல்! ஆர்டர் எடுப்பது, டேபிள் துடைப்பது, இலை எடுப்பது, பரிமாறுவது, பில் போடுபவர்கள் என அனைவருமே பெண்கள். மகளிர் தினத்தை தாண்டி வராமலிருந்திருந்தால், அவர்களின் ஃபோட்டோ போட்டு ஸ்பெஷல் கவரேஜ் செய்திருப்பேன். அவர்கள் அனைவரும் அன்னையராக இருந்தால், அன்னையர் தினம் ஸ்பெஷலில் அவர்களை குறிப்பிடுவேன் என்று இன் ரூ அவுட் எடிட்டோரியலுக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன். சாப்பாடு நல்லா இருந்துதா சார் என்றாள் அந்தப் பெண். நல்லா இருந்துச்சும்மா. . . ஆனா நான் கேட்டது ஃபிரைட் ரைஸ், நீ தந்தது கர்ட் ரைஸ் என்றேன். அச்சச்சோ மாத்தியிருக்கலாமே சார்! மாத்திக் கேட்டேனே . . . ஆனா நீ தந்தது மிக்ஸ்டு ரைஸ் என்றேன். மன்னிச்சிருங்க சார் என்றாள். வெள்ளந்தியாக பேசிக் கொண்டே, தலை குனிந்த அந்தப் பெண்ணின் மேல் எனக்கு கோபம் வரவில்லை. அழுத்தும் பணப் பற்றாக் குறையை சமாளிக்க, குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, ஓட்டலில் வந்து சிரமப்படும் நித்யகல்யாணி ஓட்டல் பெண்களுக்கு பிலேட்டட் மகளிர் தின வாழ்த்துகள்!

பிலேட்டட் என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் மாற்று என்ன? சரியான விடை சொல்வோருக்கு அட்வான்ஸ்டு வாழத்துகள்!

ஜிமெயிலுக்கு ஒரு விண்ணப்ப மெயில்
நேற்று இரவு, ஜிமெயிலுக்குள் நுழைந்த போது, ராஜஸ்தான் பாலைவன வெயிலில் நுழைந்தது போல ஆகிவிட்டது. உங்ககிட்ட ஒரே பிரச்சனை, கடைசி நிமிஷத்துலதான் ஆர்டிகிளை எழுதித் தருவீங்க என்று என் பத்திரிகை ஆசிரிய நண்பர்கள் கோபிப்பார்கள். தாமதத்துக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் இருக்கும். இன்றைய காரணம் ஜி-மெயில். இந்தக் கட்டுரையை ஜி-மெயில் டிராஃப்டில் டைப் அடித்துக் கொண்டே வந்தேன். நள்ளிரவு தூக்கக் கலக்கத்தில் ஏதோ ஒரு கீயை விரல்கள் அமுக்கிவிட, 3 நாட்களாக தொடர்ந்து அடித்து வைத்திருந்த கட்டுரை நொடியில் னுசயகவல் இருந்து காணாமல் போய்விட்டது. அதற்குப்பின் விடிய விடிய கூகுள் தேடல். எத்தனை தேடியும் னுசயகவல் இருந்து டெலிட் ஆகிவிட்டால் அதை அன்டெலிட் செய்ய வழியே கிடைக்கவில்லை. அப்படி ஒரு வசதியே ஜிமெயிலில் கிடையாதாம். அபத்தம். குப்பை ஸ்மாம் மெயில்களை எல்லாம், ஒரு டப்பாவுக்குள் போட்டு ஊற வைக்கிறது. ஆனால் டிராஃப்டில் இருப்பவற்றை ஒரு பட்டன் அழுத்தலில் தொலைத்துவிடுகிறது.

யுவர் ஆனர்
டிராஃப்ட்டில் உள்ள மெயில்களை டெலிட் செய்யும்போது, ஒரு முறைக்கு பல முறை உறுதி செய்த பின்தான் டெலிட் செய்ய வேண்டும் என்று ஜிமெயிலுக்கு ஆணையிடும்படி கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு இ.பி.கோ சட்டத்தின்படி தொடர்ந்து அவர்களுக்கு ஒரு இலட்சம் ஸ்பாம்மெயில்களை ஜிமெயிலுக்கு அனுப்பி தண்டனை தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வழக்கால் இன் ரூ அவுட் சென்னை பதிப்பகத்தார், தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், என்னிடமிருந்து ஆர்டிகிள் தாமதாகவோ, லேட்டாகவோ வேறு ஏதோ ஒரு ஆகவோதான் வரும். எனவே கபர்தார்!

இந்த வரியுடன் பவர் கட்... இரண்டு மணி நேரம் கழித்துதான் தொடர்வேன். தொடரும் முன் பழைய சாதமும், மிளகாய் வத்தலும் சாப்பிட்ட பின்தான் வருவேன். கட்டுரையின் முதல் பாராவில் பொறியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். எதற்காக என்று யோசித்துக் கொண்டு நீங்களும் இரண்டு மணி நேரம் கழித்து இக் கட்டுரையை தொடரலாம்.


டேப்ளாய்ட் நிகழ்ச்சிகள்
உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் புகைபிடிக்கக் கூடாது டாஸ்மாக் போகக் கூடாது கன்னா பின்னா தீனி கூடாது என்பது அறிவுரை. நமக்கு இந்த அறிவுரை பிடிக்கும். மீறக் கூடாது என்று தோன்றும். ஆனால் அதை மீறிக் கொண்டே இருப்போம். இந்த சுய அத்து மீறலுக்கு தீனி போடுவதுதான் டேப்ளாய்ட் நிகழ்ச்சிகள். கை நிறைய பணம் புரண்டு எப்படி பொழுதைப் போக்குவது எனத் தெரியாமல் எழுபதுகளில் அமெரிக்கர்கள் திணறிக் கொண்டிருந்தபோது அவர்களை டெலிவிஷன் பெட்டிகளின் முன் கட்டிப்போட உதித்தவைதான் டேப்ளாய்ட் நிகழ்ச்சிகள்.

மனிதனுக்கு பரபரப்பு பிடிக்கும். அதுவும் பக்கத்து வீட்டின் பரபரப்பு என்றால் நமக்கு இன்னும் சுவாரசியம். பக்கத்துவீட்டுக்காரனின் தனியறை சமாச்சாரமாயிற்றே என்று ஒதுங்க மாட்டோம். ஜன்னல் வழியாகக்கசியும் அவர்கள் வீட்டு மோதலையும் காதலையும் இரகசியமாக ஒட்டுக் கேட்போம். மனசாட்சி வேண்டாம் எனச் சொன்னாலும் ஒட்டுக்கேட்கும் ஆசை பக்கத்துவீட்டு ஜன்னலை விட்டு நகராது. ஏன் இப்படி இரகசியமாக கஷ்டப்படறீங்க. எல்லாரும் எங்க ஸ்டுடியோவுக்கு வாங்க. உங்க பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு பிரச்சனைகளையெல்லாம் பகிரங்கமாக கைதட்டி விசில் அடித்து வேடிக்கை பாருங்கள் என்று நிகழ்ச்சி பண்ண ஆரம்பித்தார்கள். கள்ள உறவுகளும் விரிசல் உறவுகளும் மேடை ஏறினர். கணவன், மனைவி அப்பா மகன் மகள் காதலன் காதலி என சகட்டு மேனிக்கு எல்லோரையும் மேடை ஏற்றி பப்ளிக்காக சண்டை போட வைத்தார்கள். வேடிக்கை பார்த்த கூட்டம் சுற்றி அமர்ந்து விசில் அடித்து கை தட்டி ஆரவாரம் செய்தது. நிகழ்ச்சி செம ஹிட்.

ஜெர்ரி ஸ்ப்ரிங்கர் என்றொருவர் இதில் சமர்த்தர். குடும்பங்களை உறவுகளை மோதவிடுகிறார். அவர்கள் அமைதியாக இருந்தாலும் எதையாவது பேசி தூண்டி விடுகிறார். சம்பந்தப்பட்டவர்கள் கைகலப்பில் ஈடுபடும் அளவுக்கு தூண்டிவிடுகிறார். அடித்துக் கொள்ளும் இரகசியக் காதலிகள் மனைவிகள் கணவன்களை இரத்தம் வராமல் தடுத்து காப்பாற்ற பயில்வான்களுடன்தான் காமிரா முன்னால் தோன்றுகிறார். அதனால் இவருடைய நிகழச்சி பயங்கர பிரபலம்.

நம்ம ஊர் நீயா? நானா? இந்த வகைதான் ஆனால் மிக மென்மையான டேப்ளாய்ட் நிகழ்ச்சி. அவ்வப்போது அமெரிக்கத்தனம் எட்டிப்பார்த்தாலும், பொதுவாக அடக்கி வாசிக்கிற நிகழ்ச்சி! அரட்டை அரங்கங்களின் கண்ணீர் கதறல்கள் இதிலேயே இன்னொரு வகை. ஊன்றிக் கவனித்தால் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் சுவாரசியம் கூட்டுவதற்காக அவ்வப்போது ஒரு குடும்பத்தை கண்ணீர் விட வைக்கும் அபத்தங்களை அத்து மீறல்களை நாம் அடையாளம் காணலாம். வடநாட்டில் ஹிந்திக்காரர்கள் கொஞ்சம் தைரியமாக பிக்-பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பாதி டேப்ளாய்ட் நிகழ்ச்சிக்காரர்களாக புரொமஷன் பெற்றுவிட்டார்கள்.

நூற்று சொச்சம் சேனல்கள் இருந்தாலும் எஃப் எம் சேனல்கள் இருந்தாலும் ஐ-பாட் முழுக்க பாடல்கள் நிரம்பி வழிந்தாலும் நமக்கு எதிலும் நாட்டம் இல்லை. ரிமோட் பட் பட்டென்று மாறிக் கொண்டே இருக்கிறது. எதிலுமே திருப்தி இல்லை. ஆனாலும் எனக்கு இது வேண்டாம் தேவை இல்லை என்று நியாயம் பேசும் மனசாட்சியை மீறுவது மட்டும் எப்போதும் திருப்தியாக இருக்கிறது. இதற்கு தீனி போடும் நிகழ்ச்சிகள் விரைவில் தமிழ் தொலைகாட்சிகளை முற்றுகையிடும். இன்னும் 50 தமிழ் சேனல்கள் வரப்போகிறதாம். ஜாக்கிரதை!

மேயர் சார் இதைக் கவனிங்க ப்ளீஸ்
இப்போது பொறி மேட்டருக்கு வருகிறேன். ஆனால் இது நான் முதல் பாராவில் குறிப்பிட்ட கடலைப் பொரி அல்ல. கடந்த வாரம் உதயம் தியேட்டர் பின்புறத்திலிருந்து இ.எஸ்.ஐ நோக்கி வெறும் 30 கி.மீ வேகத்தில் என்னுடைய ஸ்ப்ளெண்டர் சென்று கொண்டிருந்தது. இடது பக்கத்தில் எங்கிருந்தோ வந்தான் ஒரு டெம்போ டிராவலர். டங் என்று ஒரு சத்தம்! அடுத்த நிமிடம் தரையில் உருண்டேன். துணைக்கு என் எழுபது வயது சித்தப்பாவும் உருண்டார். தலைக்கவசம் இருந்ததால் தப்பித்தேன். அவருக்கு நல்ல நேரம் கவசமாக இருந்ததால் நெற்றியில் வெட்டுடன், சில எம்.எல்.கள் இரத்தம் இரத்தம் சிந்தியபின் தப்பித்தார். எனக்கு கையிலும் காலிலும் எக்கச்சக்க சிராய்ப்பு. நான் துவைக்காமலேயே ஒரு மாதமாக பயன்படுத்திய ஜீன்ஸ் அவுட். இனி அதை கட் பண்ணி அரை டிரவுசராகத்தான் பயன்படுத்த முடியும். அந்த வளைவு ஒரு மரணப் பொறி. ஓ வடிவில் வாகனங்கள் கிராஸ் பண்ணுகின்றன. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 பேர் விபத்துக்கு உள்ளாகிறார்கள் என்று தண்ணீர் தந்து ஆசுவாசப்படுத்திய அந்த ஏரியா கடைக்காரர் சொன்னார். அந்த வளைவில் சிக்னல் வைக்க வேண்டும் அல்லது ஓ வடிவில் வாகனங்களை கிராஸ் பண்ண விடாமல் சுற்றி வர வைக்க வேண்டும்.

மேயர் சார் படுகுழியாகக் கிடந்த ஆற்காட் ரோடுக்கே தார்ச்சாலை வந்தாச்சு. இந்த உதயம் தியேட்டர் மரணப்பொறிக்கும் முடிவு கட்டுனீங்கன்னா நல்லா இருக்கும்.

பசுமை விடியல்
சர்வதேச அளவில் வயது ஜாதி மத வித்தியாசம் இன்றி எல்லோரையும் பிடித்திருக்கும் வியாதிக்குப் பெயர் ஃபேஸ்புக். அடுத்த 5 வருடங்களுக்கு இந்த வியாதியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றுதான் நினைக்கிறேன். இதில் என்னைப் போல முத்தக் கவிதைகள் எழுதி இம்சிப்பவர்களைத் தவிர, உருப்படியான வேலை செய்யும் நல்ல உள்ளங்களும் இருக்கிறார்கள். பசுமை விடியல் என்றொரு குழு! தமிழகம் முழுக்க படர்ந்து நீர் வளத்தை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பதுதான் இவர்களுடைய முக்கிய பணி! தொடர்ந்து மரம் நடும் பணியிலும் ஈடுபடுகிறார்கள். இதற்கு தலைமை பொறுப்பு ஏற்று நடத்துபவர் திருமதி.கௌசல்யா ராஜ். திருநெல்வேலிக்காரர். இவருடைய ஆர்வமும் செயலும் என்னையும் பசுமை விடியலுக்குள் ஈடுபாடு கொள்ள வைத்துவிட்டது. கடந்தவாரம் போரூரை அடுத்து உள்ள கொளப்பாக்கத்தில் மரங்கள் நடும் பணியில் ஈடுபட்டோம். உங்கள் காலனியிலும் மரம் நட வேண்டுமா? பசுமை விடியலை அழையுங்கள். உடனே வருவோம்.

பொறி வைக்காத பொரி
இறுதியாக முதல் பாராவில் குறிப்பிட்ட பொறி மேட்டருக்கு வருகிறேன். உலகிலேயே பல்லிடுக்கில் சிக்கிக் கொள்ளாத சிக்கிக் கொண்டாலும் கரைந்து போகின்ற பல் இல்லாதவர்களும் சாப்பிட முடிகின்ற எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு நிறையாத ஒரே உணவு பொறிதான். கிரிக்கெட் ஸ்டம்புகளைப் போல எக்கச்சக்க இடைவெளியுடன் பற்களை பராமரிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு பொறிதான் எக்காலத்துக்கும் உகந்த கொறியல்! நான் ஏன் பொரி சாப்பிடுகிறேன் என்பதை இதை விட சிம்பிளாக விளக்க முடியாது!

In and Out Chennai என்ற மாதமிருமுறை வெளிவரும் நாளிதழில் மார்ச் இதழில் எழுதியது.