Showing posts with label In and Out Chennai. Show all posts
Showing posts with label In and Out Chennai. Show all posts

Friday, August 17, 2012

In & Out Chennai - நீதானே என் பொன்வசந்தம்


Illayaraja is .... 

கோடிட்ட இடத்தை நான் நிரப்ப விரும்பவில்லை. உணர்வின் மிகுதியில் இளையராஜாவே தன்னைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் இவை. ஜெயா டிவியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக இயக்குனர் கௌதம் மேனன் அவரை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். இருவரும் மிகச் சாதாரணமாக தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்த அந்த பேட்டியில், சட்டென ஏதோ ஒரு கணத்தில், இளையராஜா அந்த வார்த்தைகளை உச்சரித்தார். அவர் அப்படி சொன்ன பின், அவரே ஒரு கணம் மௌனித்தார். அவருடைய இசையின் இடையில் நிகழும் மௌனங்களைப் போல, ஓராயிரம் ஸ்வரக்கோர்வைகளை உள்ளடக்கிய அடர்த்தியான மௌனம். இதை எதிர்பாராத கௌதம் மேனன், நிலைத்த பார்வையுடன் என்ன பதில்சொல்வது எனத் தெரியாமல் அமர்ந்திருந்தார். உலகம் ஒரு நொடி நின்றது போல அதைப் பார்த்துக் கொண்டிருந்த நானும் உறைந்து போனேன். சில நொடிகள்தான்...இளையராஜாவே அந்த மௌனத்தைக் கலைத்தார்.

'தவறுக்காக ஒருவன் பெருமைப்படுவானா? இந்த பிறப்பே ஒரு தவறு. இந்த பிறப்புக்காக நான் பெருமைபட்டுக் கொள்ள என்ன இருக்கிறது?' எதற்காக நான் பிறந்தேன். எதற்காக இந்த வாழ்க்கை, இந்த இசை, இந்த பாராட்டு?'

இளையராஜாவின் இந்த வார்த்தைகளை எத்துனை பேர் புரிந்து கொண்டார்கள் எனத் தெரியவில்லை. பின்வரும் கவிதையை சுஜாதா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கவிதை இளையராஜா கூறிய வார்த்தைகளின் ஆழத்தை விளக்கக்கூடும்.

பசித்தவாயை பூமியின் இனிய மார்பில் பதிந்திருக்கும் மரம்.
தினம் முழுதும் கடவுளை நோக்கி
இலைநிறை கைகளை உயர்த்தி பிரார்த்திக்கும் மரம்.
கோடையில் கூந்தலில் பறவைக் கூடுகள் அணிந்து
குளிரில் மார்பில் பனிக்கட்டி படிந்து
மழையுடன் நெருக்கமாய் வாழும் மரம்.

இந்தக் கவிதை இத்துடன் முடிந்திருந்தால், அது மிகச் சாதாரணம். அதற்கடுத்த இரு வரிகள்தான் உணர்வுகளின் ஆழத்தில் ஆச்சரிய வளையங்களை எழுப்பக்கூடியவை.

கவிதைகள் செய்வது என் போன்ற முட்டாள்கள்.
கடவுள் ஒருவர்தான் மரம் செய்யத் தெரிந்தவர்!

இளையராஜா இதைத்தான் சொன்னார். 

பாடல்கள் சமைப்பது என் போன்ற சாதாரணர்கள், 
கடவுள் ஒருவர்தான் இசையை செய்யத் தெரிந்தவர்! 

எதிலும் உச்சம் தொட்டவர்கள் தங்களைத் தாங்களே கடவுளின் தேசத்தில் துச்சமாகத்தான் நினைக்கிறார்கள். சமுத்திரம் ஆரவாரம் செய்யும். நான் சமுத்திரத்தின் ஒரு துளி எனும்போது கரையின் ஆரவாரமோ, ஆழத்தின் அமைதியோ, எதுவுமே எனக்கு சொந்தமில்லை. எல்லாம் சமுத்திரத்திற்கே சொந்தம். நிறைய சாதித்தவர்கள் இப்படி ஒரு நிலைக்கு தங்களை தாங்களே இழுத்துச் செல்ல முயல்கிறார்கள். இசையில் உன்னதம் தொட்டிருக்கும் இளையராஜா தன்னை இசைச் சமுத்திரத்தில் கரைந்து போன ஒரு ஒலித்துளியாக நினைத்துக் கொண்டு உச்சரித்த வார்த்தைகள், அவருடைய இசையைப் போலவே என் ஆன்மாவை இன்னமும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.

எதிர் நீச்சலும், எதிர்நீட்டலும்!
ICE AGE - 3D இந்தப் படம் சென்னையில் வெளியாகிவிட்டதா? வெளியாகியுள்ளதா? எனத் தெரியவில்லை. இந்தப் படத்தின் வியாபாரத் தொடர்புடைய ஒருவர் டிவிட்டரில் படம் வெற்றி என அறிவித்திருந்தார். படம் நன்றாக உள்ளதா? இல்லையா? என இரசிகர்கள் பார்த்து உணரும் முன்பே, படத்தின் வசூல் பற்றிய கணக்குகளை தீர்மானிக்கும் வியாபார உத்திகள் கோடம்பாக்க சினிமாவுக்குள் வந்துவிட்டது. தற்போது ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்து, ஷங்கர் இயக்கிய ‘சிவாஜி‘ திரைப்படம் 3Dயில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் தியேட்டர்களைத் தொடும் என செய்திகள் கசிகின்றன. இதைக் கேள்விப்பட்டதும், சிவாஜிக்கு பதில் எந்திரனை 3Dயில் மாற்றலாம் என சில இரசிகர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்திய சினிமாவுக்கு மை டியர் குட்டிச் சாத்தான்தான் முதல் 3D. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் அத்தகைய முயற்சி ஒரு எதிர் நீச்சல். அந்த வகையில் குட்டிச் சாத்தானுக்கு ஒரு சபாஷ்! எந்திரனை இந்தியாவின் முதல் சயின்ஸ் ஃபிக்ஷன் என்று வர்ணித்தார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எம்.ஜி.ஆர் நடித்து ஜெனோவா என்றொரு சயின்ஸ் பிக்ஷன் படம் அந்தக் கால தூர்தர்ஷனிலேயே பார்த்திருக்கிறேன். 

முதலாவதாக வந்ததோ, அடுத்ததோ எதுவாக இருந்தாலும் சயின்ஸ் பிக்ஷன் என்பதற்கு கதையில் ஒரு எதிர்நீட்டல் (Extra Polation) இருக்க வேண்டும். அதாவது இன்றைய கண்டுபிடிப்புகள், இன்றைய நடை முறை வாழ்விலும், நாளைய வாழ்விலும் எத்தகைய மாற்றங்களைத் தரும் என்பது பற்றி, ஒரு நிஜம் தாண்டிய கற்பனை வேண்டும். உதாரணமாக இன்றைய மனிதர்கள் ஆன்லைன் வழியாக ரேஷனரிசி வாங்குகிறார்கள். நாளைய மனிதர்கள் கை, கால்களை ஸ்பேர்பார்ட்ஸ் கடைகளில் வாங்கிக்கொள்வார்கள். ஆனால் இது போன்ற கற்பனை எதுவும் எந்திரனில் கிடையாது, சிட்டி ஒரு ரோபோ என்பதைத் தவிர. எனவே அது முழு சயின்ஸ் பிக்ஷன் அல்ல. ஆனாலும் எந்திரனை எனக்குப் பிடித்தது. அதற்கு காரணம் திரைக்கதையோ, இசையோ, நடிப்போ, டெக்னாலஜியோ அல்ல. எந்திரனைப் பொறுத்தவரை ரஜினி தன்னை முழுமையாக இயக்குனர் ஷங்கரிடம் ஒப்படைத்துவிட்டார். அந்த ஒப்படைப்பு எனக்கு பிடித்தது. படம் உருவான கதை பற்றிய காட்சிகள், சில ரஜனி பேட்டிகள் போன்றவற்றை பார்த்தபோது, ஷங்கரை பரிபூரணமாக நம்பி ஒத்துழைத்த ரஜினி, ரஜினிக்கே புதுசு.

கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு பரிபூரண ஒத்துழைப்பை இளையராஜா-கௌதம் மேனன் இணையில் கண்டேன்.  கௌதம் மேனனின் பாடி லாங்வேஜ், பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், லண்டன் நகரில் அவர்கள் நடந்து சென்ற புகைப்படங்கள், இளையராஜாவின் நிறைவான புன்னகை, எனக்கு அப்படி ஒரு எண்ணத்தையே தோற்றுவித்தது. ஜெயா டிவி பேட்டியை பார்த்தபின், என்னுடைய எண்ணம் சரி என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இளையராஜாவின் வார்த்தைகளே அதற்கு அத்தாட்சி தந்தன.

‘எனக்கே இந்த அனுபவம் புதிது. வேறு எந்த இயக்குனரிடம் எனக்கு இது போன்ற அனுபவம் ஏற்பட்டதில்லை‘ என்று திரும்பத் திரும்ப, வெவ்வேறு வார்த்தைகளில் இளையராஜா, தான் கௌதம் மேனனின் மேல் கொண்ட ஈர்ப்பை வெளிப்படுத்தினார். என் ஞாபகம் சரி என்றால், இதற்கு முன்பு, எந்த இயக்குனருடனும் இளையராஜா இத்தனை ஈடுபாடுகாட்டியதில்லை, அவர்களுடன் அமர்ந்து பேட்டியளித்ததும் இல்லை.

சங்கமம் திரைப்படத்தில் ‘மழைத் துளி மழைத் துளி மண்ணில் சங்கமம்‘ என ஒரு பாடல் வரும். அதில் மெல்லிசை மன்னர் ‘மகனே‘ என்றொரு வார்த்தையை உருகி உருகி உச்சரிக்கும்போது, ஏ.ஆர்.இரகுமானை அவர் ஆசிர்வதிப்பது போலவே எனக்கு கேட்கும். அது போல எளிதில் அணுக முடியாத மேதமை பொருந்திய தந்தையை, புத்திசாலி மகன் தன் சாமர்த்தியத்தால் ஈர்த்து அவருடன் இணைந்து, கம்பீர வெட்கத்துடன் ஒரு காலை வாக்கிங் சென்றது போல இருந்தது அன்றைய இளையராஜா-கௌதம்மேனன் பேட்டி. ‘ஹோய் பாத்தியா எங்கப்பாவை.. யார் தெரியுமா அவரு.. ராஜாடா..‘ என்று பெருமையும், நம்பிக்கையும், பணிவும் பொங்க சொன்னது போல இருந்தது, கௌதம்மேனனின் ஒவ்வொரு வார்த்தையும்.

இந்த விதை நான் போட்டது, இதை ஆண்டு அனுபவிச்சு அடுத்த தலைமுறைக்கும் நீதான் எடுத்துட்டுப் போகணும், என்று தேவர் மகனில் சிவாஜி, தன் பட்டணத்து மகன் கமலுக்கு அறிவுறுத்துவார். கௌதம் மேனன் நீதானே பொன்வசந்தம் படத்தின் மூலம் அதை செய்து கொண்டிருக்கிறார். நேற்று தான் கேட்டு வளர்ந்த இளையராஜா இசையை இன்றைய தலைமுறைக்கும் அதே வீச்சுடன் அறிமுகப்படுத்த முன்வந்திருக்கிறார். கர்ணன் திரைப்படம் டிஜிட்டலில் உயிர் பெற்று, இன்றைய தலைமுறையின் சில நூறு பேர்களையாவது தொட்டதில் எனக்கு பலத்த சந்தோஷம். அதே போல ஒரு செய்தியாக, ஒரு தகவலாக, ஒரு பழைய பாடலாக மட்டுமல்லாமல், இளையராஜா, இளைஞர்களின் ராஜாவாகவே அறிமுகப்போகிறார் என்பது எனக்கு புத்துணைர்வை தருகிறது. இளையராஜாவுக்கும் ஒரு உற்சாகம் திரும்பி வந்திருப்பதாக உணர்கிறேன். 


ஓவியர் ஜீவாவை உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். ஜீவ்ஸ் என்று அவரை செல்லமாக அழைப்பேன். ஓவியர் என்றாலும், திரைச்சீலைகள் என்ற திரைப்படம் பற்றிய புத்தகம் எழுதி அதற்காக தேசிய விருது பெற்றவர். கடந்த வாரம் கோவை சென்றிருந்த போது, மரக்கடை வீதியில் இருந்த அவருடைய அலுவலகத்தில் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். நான் சென்றபோது, இன்னமும் கண்கள் வரையப்படாத ஒரு புத்தர் ஓவியமும், கண்களில் தன் உணர்வுகள் கொப்பளிக்க உற்றுப் பார்த்த ஒரு ஓவியமும் அவருடைய மேஜையில் இருந்தன. சினிமாவுக்கு பேனர் வரைந்த காலத்தில் இருந்த திருப்தி, ஃபோட்டோஷாப்பில் தயாராகும் பிளக்ஸ் பேனர்களில் இல்லை. அந்த அலுப்பும் சலிப்பும் என்னை ஆக்கிரமிக்கும்போதெல்லாம், இது போல வரைந்து வரைந்து குவிப்பேன் என்றார். 

இதுதானே வாழ்க்கை!
அணுவுக்குள் அணுவாகி
அப்பாலுக்குள் அப்பாலாகி
ஒரு புள்ளியில் தோன்றி
புள்ளியில் மறையும்
ஒரு புள்ளி!
இதுதானே வாழ்க்கை!

இது தற்போது தயாரிப்பில் இருக்கும் நான் இயக்கும் திரைப்படத்தில் வெளிவரப்போகும் பாடல் வரிகள். இவற்றை அவரிடம் காண்பித்து, அந்தப் பாடல்களுக்கான ஓவியத் தேவைகள் பற்றி கேட்டேன்.  மேதைகள் அவ்வளவு எளிதாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஜீவாவும் பிடிகொடுத்து பேசவில்லை. கௌதம் மேனன், இளையராஜாவை ஈர்த்தது போல, நானும் அவரை ஈர்ப்பேன். இசையமைக்கப்பட்டிருக்கும் அந்த பாடல் வரிகளுக்கு அவரையே ஓவியம் வரையச் செய்வேன்.

இளையராஜாவின் மேதைமையை கௌதம் மேனன் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்கிறார். இதே போல, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் தேவகானங்களையும் அடுத்த தலைமுறைக்கு, இன்றைய தலைமுறை இயக்குனர் யாராவது இட்டுச் செல்ல வேண்டும். 

இது என் ஆசை மட்டுமல்ல, தீராத வேட்கை என்றும் சொல்லலாம்.

 அடுத்தடுத்த தலைமுறையினர் இந்த மேதைகளின் இசை கேட்டு வளர வேண்டும் என்பது ஆவல்.




‘என்னோடு வா..வா.. என்று சொல்ல மாட்டேன். 
உன்னை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டேன்‘

நீங்கள் எனக்காக எழுதிய வரிகள் என்று அந்த பேட்டியில், இளையராஜாவிடமே கௌதம்மேனன் பெருமைபட்டுக் கொண்டார்.
எனக்கென்னமோ இளையராஜாவின் இசையுடன் உலவும் காற்று, நம் எல்லோரையுமே பார்த்து இப்படிப் பாடுவதாகத் தோன்றுகிறது.

ஐ லவ் மியூசிக்! ஐ லவ் இளையராஜா!
கட்டுரையின் முதல் வரியில் உள்ள கோடிட்ட இடத்தை Music என்று நிரப்பிக் கொள்ளுங்கள்!

Tuesday, August 7, 2012

இன் & அவுட் சென்னை - கிராஷ்கோர்ஸ்!

மீண்டும் கொடைக்கானல்! இம்முறை இன்னமும் தமிழில் பெயரிடப்படாத Crash Course என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக. எட்டு பேர் கொண்ட மிகச்சுருக்கமான குழு. ஒரு கோடி பங்களா என்று பெயர் பெற்ற பங்களாவில் படப்பிடிப்பு. எனக்கு இணை தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவாளர் அவதாரம். அவ்வப்போது குறும்படங்களுக்கு காமிரா பிடித்திருக்கிறேன். (எல்லாம் Canon 7D கொடுத்த தைரியம்). நானே இயக்குனராகவும் இருந்ததால் ஒளிப்பதிவாளராகவும் இருப்பது எளிதாகத்தான் இருந்தது. ஆனால் எனக்குள் இருந்த இயக்குனரை ஓரம்கட்டிவிட்டு, வேறொரு இயக்குனரின் ஐடியாக்களை மட்டும் பதிவு செய்யும் ஒளிப்பதிவாளராக மட்டும் களத்தில் நிற்பது, முதலிரு நாட்களுக்கு கடினமாக இருந்தது. நானே இயக்குனராக இருந்தபோது, ஒளிப்பதிவுத் திறமையில் உள்ள எனது பலவீனங்களை தவிர்த்துவிடுவேன். ஆனால் இயக்குனர் முரளியிடம் என் பாச்சா பலிக்கவில்லை.

டி.எஸ்.முரளிதரன் இசையமைப்பாளராக இருந்து இயக்குனராக முதல் முயற்சி செய்யும் படம் இது. சூர்யா நடித்த ஸ்ரீ படத்தின் இசையமைப்பாளர் என்றால், உங்களில் பலர் அவரை எளிதாக அடையாளம் கண்டு கொள்வீர்கள். சமையல் குறிப்பு படித்து பனியாரம் செய்தால் அதிரசம் வந்து நிற்கும். அதுபோல விரைவாக செய்ய வேண்டும் என்ற துரிதப்படுத்தலால் ஆரம்பத்தில் லைட்டிங் எனக்கு கண்கட்டி வித்தையாக இருந்தது. ஆனால் வாழ்க்கையே ஒரு கிராஷ் கோர்ஸ்தானே. சட்டென்று தயார் ஆகிவிட்டேன். ஒரு டீ குடிக்கும் இடைவெளியில் லைட்டிங்கை இடம் மாற்றி வேறொரு பரிமாணம் தரப் பழகிவிட்டேன். தற்போது எடிட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. குறையும் நிறையும் தெரியவரும். அதை பின்னர் பட்டியலிடுகிறேன்.

கிராஷ் கோர்ஸ் - 1 :
கற்க வேண்டுமென்றால் நாம் நினைத்ததை நாமே செய்யணும்.
பழக வேண்டுமென்றால் மற்றவர் கேட்பதை நாமே செய்யணும்.

பிஸ்மில்லாகானின் ஷெனாயில் ஹிந்தோளத்தை நேடியாக கேட்டிருக்கிறீர்களா? விருகம்பாக்கம் முதல் தரமணி  வரை சைக்கிளிலேயே பயணிக்க ஏதுவாக உடல் தெம்பும், வாகன மிரட்டல் இல்லாத தெருக்களும் இருந்த காலம். ஐஐடியில் அப்போது மார்டிகிராஸ் என்று பெயரிடப்பட்ட ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் பிரபலம். பிரபல இசைஞர்கள் எல்லாம் வருடா வருடம் வருவார்கள். இரவு பனியில் நனைந்து கொண்டு கிளாசிகல் இசை கச்சேரிகளுக்கு மட்டும் நண்பர்களுடன் சைக்கிளிலேயே சென்று வருவேன். கர்நாடக இசை போல அல்லாமல் ஹிந்துஸ்தானி மிகவும் நிதானமானது. பிஸ்மில்லாகானின் ஷெனாய் ஹிந்தோளத்தை பிரசவித்தபோது ஆரோகரணம் அவரோகணத்தில்  குழந்தை வளர்ப்பு போல கொஞ்சம் கொஞ்சமாக தொட்டிலிட்டு, குளிப்பாட்டி, உடை மாற்றி ஜீவஸ்வரங்களை உச்சி முகர்ந்த கணத்தில், கடவுள் அருகே வந்து கன்னத்தில் முத்தமிடுவது போல இருந்தது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் கேட்ட அந்த லைவ் பிஸ்மில்லாகான் ஷெனாயை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை.

மோட்டார் சுந்தரம் பிள்ளையில் மனமே முருகனின் மயில்வாகனம் என்று எம்.எஸ்.வி ஹிந்தோளத்தை கையாண்டிருப்பார். இளமைக்காலம் படத்தில் ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா என்று இளையராஜாவும் தூள் கிளப்பியிருப்பார். ஆனால் எனக்குப் பிடித்தது இன்னும் பழைய எவர் க்ரீன் ஹிட். ஹிந்தோளத்தை வைத்து துடிப்பான ‘கண்களும் கவிபாடுதே...‘ என ஒரு மெட்டமைத்திருக்கிறார் ஆதி
நாராயணராவ்.

கிராஷ் கோர்ஸ் - 2:
கடவுளை தரிசிக்க கண் மூடி தியானிக்கலாம் (அ) கண் மூடி பிஸ்மில்லாகானின் ஷெனாயில் லயிக்கலாம்.

விருகம்பாக்கம் பாரத் பெட்ரோலியம் பங்க்கில் காற்று பிடிக்கும் பான்பராக் வாய் பையனுக்கு ஒரு அட்வைஸ். தம்பி பான்பராக் கெடுதி. காலை 6 மணிக்கே பான்பராக் அதனினும் கெடுதி. உன் துவைக்காத யூனிஃபார்மையும் மீறி, நேற்றைய இரவின் டாஸ்மாக் நாற்றத்தையும் சகித்துக் கொண்டுதான் இன்று என் மோட்டர் சைக்கிளுக்கு காற்றடித்துக் கொண்டேன். டயருக்கு காற்று இறங்கிவிட்டால் மீண்டும் காற்றடித்துக் கொள்ளலாம். மனிதனுக்கு மூச்சு நின்றுவிட்டால் இதயத்துக்கு காற்றடிக்கும் பம்பு இன்னும் வரவில்லை. சந்தேகம் ஏதுமிருப்பின், பான்பராக்கை துப்பிவிட்டு வந்து என்னிடம் கேள். சட்டையில் பான்பராக் கரை படிந்துவிட்டால் போகாதாம். ஆனால் அந்தப் பழக்கம் விட்டுவிடக் கூடியதே.. சீக்கிரம் விட்டுவிடு.

கிராஷ் கோர்ஸ் - 3:
கெட்டப் பழக்கங்களை கை விட சிறந்த வழி. தன்னிடம் கெட்டப் பழக்கம் இருப்பதை உடனடியாக ஒப்புக் கொள்வதே.

ஒரு வாரகாலமாக எனக்குப் பிடித்த ஒரு வதந்தி உலவிக் கொண்டிருக்கிறது. டாஸ்மாக் கடைகளை மூடலாமா என்று தமிழக அரசு யோசித்துக் கொண்டிருக்கிறதாம். ஒரு வதந்தியை திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்பார்கள். அதனால் இந்த வதந்தியை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்கள் திரும்பத் திரும்ப வாசிப்பதன் மூலம் இந்த வதந்தி உண்மையாகிவிடுமானால் அதை விட சந்தோஷம் வேறெதுவும் இல்லை. சாராயக்கடையை நடத்திதான் இந்த அரசாங்கத்தை நடத்த முடியும் என்ற கொடுமையான நிலையிலிருந்து வெளிவருவது கடினம்தான். ஆனாலும் எத்தனையோ கோடி குடியர்கள் இந்தப் பழக்கத்திலிருந்து கொஞ்சமாவது விடுபட டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடிவைப்பது உதவும்.

கிராஷ் கோர்ஸ் - 4 :
அரசு தன் குடிகளை காக்க குடியை ஒழிக்கணும்.

கடவுள் விளையாட்டு பற்றி ஏதாவது தெரியுமா என்றார் நண்பர். ஏ.பி.நாகராஜனின் திருவிளையாடல் படத்தில் சில எபிசோடுகள் இருக்கின்றன என்றேன். நண்பர் கோபமாகிவிட்டார். நானும் சளைக்கவில்லை. திருவிளையாடல் தருமி மாதிரி, மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த சில தகவல்கள் என்னிடம் உள்ளன. வேண்டுமானால் அவற்றைத் தருகிறேன். எவ்வளவு சரியோ அவ்வளவு பரிசு கொடுங்கள் என்றேன். நண்பர் நம்பியாராகி பற்களை நறநறத்தபடி ஒலிம்பிக் பார்க்கப் போய்விட்டார். ஒலிம்பிக்கில் கடவுள் விளையாட்டை காட்டுகிறார்களா என்ன?

Playing God is dangerous என்று அவ்வப்போது நமது சமகால நவீன விஞ்ஞானிகளுக்கு செக் வைக்கப்படுகிறது. டெஸ்ட் டியூப் பேபி, குளோனிங் செய்யப்பட்ட டாலி ஆடு, ஒரு மனிதனின் டி.என்.ஏ வரைபடம் என ஒவ்வொரு அறிவியல் சாகசத்திற்குப் பின்னும், பாராட்டுகளை விட அதிகமாக கண்டனங்கள்தான் அதிகம் வந்தன. அறிவியல் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகள் என்பது, ஒரு நோயை குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ, எதிர்ப்பு சக்தியை உண்டாக்கவோ பயன்படவேண்டும். அவனுடைய தினசரி நடவடிக்கைகள் சுலபமானதாக மாற்ற உதவ வேண்டும். ஆனால் டி.என்.ஏ வரைபடங்களை வைத்து ஒரு மனிதனை உருவாக்குகிற சமாச்சாரம் எல்லாம் கடவுளின் வேலை. அவருடைய வேலையை பார்க்க விஞ்ஞானிகளுக்கு அனுமதியில்லை. அப்படிச் செய்தால் எதிர்காலத்தில் பல பயங்கரங்கள் உருவாகும், என்று உலகெங்கும் கண்டனக் குரல்கள் வந்தவண்ணம் உள்ளன. கடவுள் விளையாட்டை மனிதன் விளையாடுவது ஒருபுறம் இருக்கட்டும். 27 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள குழாய்களை பூமியில் புதைத்து அதற்குள் சப்-அடாமிக் துகள்களை மோதவிட்டு 99.9சதவிகிதம் கடவுளையே உருவாக்கிவிட்டோம் என்று ஒரு விஞ்ஞான உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு என்ன சொல்வது. அதாவது இந்த உலகை உருவாக்கிய மூலத்தை(கடவுளை) கண்டுபிடித்துவிட்டார்களாம். கண்ணதாசன் ஒரு முறை கேட்டார். மூலம் என ஒன்றிருந்தால் ஆதிமூலம் என்று ஒன்றிருக்கும். அது எது? என்றார். ஏ.பி.நாகராஜன் சார். கண்ணதாசனின் இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது போல ஏதாவது ஸ்க்ரிப்ட் எழுதி வைத்திருக்கிறாரா என்று யாராவது ஃபிலிம் நியூஸ் ஆனந்தனைக் கேட்கலாம்.

கிராஷ் கோர்ஸ் - 5:
கடவுளை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க சிறந்த வழி, கடவுளை சதா சர்வகாலமும் மறுத்துக் கொண்டிருப்பதே.

இளைய காமராசர். இது நான் எழுதியுள்ள ஒரு புத்தகத்தின் தலைப்பு. CSC கம்ப்யூட்டர் நிறுவனத்தின் (மறைந்த) தலைவர் திரு.அய்யம்பெருமாள் பற்றி நான் எழுதிய இந்தப் புத்தகம் கடந்தவாரம் ஒரு நெகிழ்வான விழாவில் வெளியானது. வழக்கமான புத்தக வெளியீடாக இல்லாமல், CSC நிறுவனத்தின் தனியுரிமை(Franchise) கிளை நடத்திவருபவர்கள், அய்யம்பெருமாளுடன் தங்கள் அனுபவங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுடைய உணர்வுகள் எந்தப் புத்தகத்திலும் அடங்காதவை. பரிசுத்தமான உணர்வுகள் வார்த்தைகளில் சிக்குவதில்லை.

கிராஷ் கோர்ஸ் - 6 :
இறந்த பின்னும் வாழலாம். இருக்கும்போது உடனிருப்பவரை வாழ வைத்தால்.

இந்த வாரக் கேள்வி.
கிராஷ் கோர்ஸ் -  இதற்கு சரியான தமிழாக்கம் என்ன?

Monday, July 16, 2012

இன் & அவுட் சென்னை - மாடு தின்னாத போஸ்டர்கள்!


நண்பா உனக்கொரு வெண்பா
------------------------------------------
நண்பா உனக்கு வெண்பா தெரியுமா என்றது ஒரு மின்னஞ்சல். தெரியாதுபா என்றேன் பதிலில். பரவால்ல இதைப் படிப்பா என்றது அடுத்த அஞ்சல்.

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பருதி பரிமே லழகர் –திருமலையர்
மல்லர் பரிப்பெருமால் காளிங்கர் வள்ளுவர்நூற்
கெல்லையுரை செய்தா ரிவர்!

நாக்கு முக்க பாட்டு புரிகிற நமக்கு இதுவும் புரிந்துவிடும் என்று நம்புகிறேன். புரியாதவர்கள் தொடர்ந்து வரும் பாராவுக்கு அடுத்த பாராவுக்கு வந்து விளக்கம் கேட்கலாம். வரும்போது க்ரீன் டீயுடன் வாருங்கள். மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு அல்லவா. பருகிக் கொண்டே வெண்பாவுக்குள் டைவ் அடிக்கலாம்.

சில போஸ்டர்களை மாடு தின்பதில்லையே ஏன்?
-----------------------------------------------------------------------
போஸ்டர் பார்க்கிற கிக் சிறு வயதில் இருந்து ஒட்டிக்கொண்டிருக்கிறது. இன்னமும் வண்டியை செலுத்திக் கொண்டிருக்கும்போது சிலர் சந்து முனை பிள்ளையார்களுக்கு கன்னத்தில் போட்டுக் கொள்வது போல, நான் போஸ்டர் அமலாபால்களை ஒரு முறை கண்ணோடு கண் நோக்கிவிடுகிறேன். சமீபத்தில் கண்ணில் பட்டது வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் புத்தக வெளியீடு. ஆனந்தவிகடனில் தொடராக வந்த கதை (வந்து கொண்டிருக்கிற கதை) புத்தகமாக வந்திருக்கிறது என நினைக்கிறேன்.

செல்ஃபோன் நிறுவனங்கள், புடவைக் கடல் பேனர்கள் மற்றும் சினிமா போஸ்டர்களுக்கு இடையே வைரமுத்துவும் அவர் படைப்புகளும் போஸ்டர்களாக பளபளப்பது எனக்கு சந்தோஷமே. சென்னையில் கண்ட கண்ட இடத்தில் போஸ்டர் ஒட்ட தடை வந்துவிட்டது. அதனால் போஸ்டர்களும் அதைத் தின்னும் மாடுகளும் சென்னையில் அரிதாகிவிட்டன. மூலம், எய்ட்ஸ் போன்ற ரகசிய வியாதிகளுக்கு உடனடி நிவாரணம் தரும் பழுப்பு மஞ்சள் போஸ்டர்கள் கட்டணக் கழிப்பிடம் அல்லது இலவச வெளியிடம் எங்கும் காணப்படும்.

எல்லாவற்றையும் தின்கிற மாடுகள் இவற்றை தின்பதே இல்லை. எய்ட்ஸ் தொற்றும் என்ற பயமா? டேஸ்ட் சரியிருக்காதா? மாடுகளிடம் பேசும் பழக்கம் உள்ளவர்கள் கேட்டுச் சொல்லுங்கள். சமீபத்தில் அருகருகே ஒட்டியிருந்த இரு போஸ்டர்களை இரசித்தேன். வீடு வாங்க விற்க என்னை அணுகுங்கள் என்றது முதல் போஸ்டர். அருகிலேயே இன்னொரு போஸ்டர், இங்கு போஸ்டர் ஒட்டினால் தண்டிப்பேன் என்றது. இரண்டிலும் ஒரே நபர், ஒரே எண்.

வெண்பா எதற்கு? சுவாரசிய விளக்கம்.
ஒரு ஆப்பிளை பிடித்திருப்பது போல கையை வைத்துக் கொண்டு, இதுபோல கட்ச்சிக்கோன்னு சொல்ற மாதிரி வளைவாக இருக்கற இடத்துக்குப் பெயர்தான் கட்ச் வளைகுடா என்றார் ஆசிரியர். 35 வருடங்களுக்கு முன் அவர் சொன்னதை இன்னமும் மறக்க முடியவில்லை. இந்திய மேப்பில் கன்னியாகுமரியை தேடுவேன். ஆனால் கட்ச் வளைகுடாவை அவர் தந்த விஷீவல் விளக்கத்தால் மறக்காமல் சுட்டிக் காட்டுவேன்.

ஆனால் எனக்கு வந்த தமிழ் வாத்தியார்கள் சரியான கட்ச்சர்கள். இலக்கணம் எதுக்கு சார் என்றேன். காதை கடித்தாரா? திருகினாரா? என்று தெரியவில்லை. ஆம்புலன்ஸ் சிவப்பு விளக்குபோல பளீரென காது ஒளிர்ந்தது. சில ஆசிரியர்கள் அப்படித்தான். கேள்வி கேட்பதை விரும்புவதில்லை. ஆனால் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் அவர்கள் இருக்கிறார்கள். என் நண்பர் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டத்துறையில் அரசுப் பணியில் இருக்கிறார். அவர் ஒரு நாள் வெண்பா எதற்கு என்று விளக்கம் சொன்னார். எளிமை மற்றும் சுவாரசியம்.

நண்பர்களின் பெயர்களையும், எண்களையும் மொபைல் போனில் சேமிப்பது போல, வரிசையாக சில பெயர்கள் அல்லது பொருள்களை தொகுத்து வைக்க வெண்பா பயன்படுகிறது என்றார்.

இப்போது முதல் பாராவில் இருக்கும் வெண்பாவை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். சில பெயர்கள் வரிசையாக தொகுக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொள்வீர்கள்.

அட போங்க சார் என அலுப்பவர்கள் அடுத்த பாராவுக்கும், மற்றவர்கள் முதல் பாராவுக்கும் எகிறிக் குதிக்கலாம்.

டைனோசரை விடப் பிரமாண்டமான ஈ
------------------------------------------------------
முதன் முதலில் டைனோசரை திரையில் பார்த்த வியந்த நான், ஒரு சிறிய ஈயைப் பார்த்தும் வியந்தேன். இயக்குனர் ராஜமௌலி ‘நான் ஈ‘ படத்தில் இதை சாதித்திருக்கிறார். பிரமாண்டத்திற்கு பெயர் பெற்ற சங்கர் இது வரை மல்டிபிளை உத்தியைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். 100 தொப்பைகளில் ரஜனி படம். மேம்பால டிராபிக் நெரிசலில் 1000 வாகனங்கள். என பார்த்து சலித்திருந்த நம்மை இதற்கு முந்தைய படமான மகதீராவிலேயே நிமிர்ந்து உட்கார வைத்தார். இதில் ஒரு ஈயை வைத்து அசத்திவிட்டார். ஒரு சிறிய ஈ கொடிய மனிதன் ஒருவனை வெல்ல முடியும் என்று நம்ப வைத்திருக்கிறார்.

அவருக்கு ஒரு சபாஷ் என்றால், அசுர உழைப்பை தந்திருக்கும் ஒளிப்பதிவாளர் செந்தில்குமாருக்கு சபாஷ் சபாஷ்! பெரிய பங்களா. ஆங்காங்கே நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. துளியூண்டு ஈ உயிருக்கு பயந்து ஓட, இரண்டு பருந்துகள் அதை விழுங்க துரத்துகின்றன. கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பர பர சேஸ். இதில் ஸ்பெஷல் என்னவென்றால், துரத்தப்படும் ஈ, துரத்தும் பறவைகள், எரிக்கும் நெருப்பு எல்லாமே கிராபிக்ஸ். சேஸ் நடக்கும் கட்டிடம் மட்டும் உண்மை. எல்லாவற்றையும் கற்பனையில் வைத்துக் கொண்டு காமிராவை நகர்த்த வேண்டும். முதலில் தப்பி ஓடும் ஈயின் பார்வையில், பிறகு துரத்தும் பறவைகளின் பார்வையில், அதன்பின் இவற்றை கவனிக்கும் பார்வையாளர்களின் பார்வையில். ஆங்காங்கே அசத்தும் ஸ்லோமோஷன்களுடன் அரங்கம் அதிர்கிறது.

டிஜிட்டல் காமிரா பிரியர்களுக்காக சில தகவல்கள். Arri, Canon 5D மற்றும் Go-Pro காமிராக்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு வினாடியில் 2000 ஃபிரேம்களை விழுங்க வேண்டிய படுஸ்லோ மோஷன் காட்சிகளுக்கு Phantom காமிராக்களை பயன்படுத்தியுள்ளார்கள்.

டிஜிட்டலில் படம் எடுத்தால் பார்க்க நன்றாக இருக்காது என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் நான் ஈ பார்த்துவிட்டு தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளவும் என்று சிபாரிசு செய்கிறேன்.

ஓகேப்பா... மீண்டும் வெண்பா
------------------------------------------
வெங்காயம் தக்காளி வெள்ளரி பீக்கம்ப
ரங்கி புடலைவெண்டி அத்திமு -ருங்கைவாழை
கொத்தவரை கோசு குடைமிளகு பூசுணை
கத்தரி பீன்ஸ்பாகற் காய்!

இந்த வெண்பாவில், ஏதோ ஒரு ரெசிப்பி இருக்கிறது. அதற்கு தேவையான காய்கறிகளை தொகுத்திருக்கிறார்கள்.

இப்போது முதல் பாரா வெண்பாவை படியுங்கள். திருக்குறளுக்கு யார் யார் உரை எழுதியுள்ளார்கள் என்ற வரிசை அதில் உள்ளது.

இதை சொல்லிக் கொடுத்த நண்பரிடம் கேட்டேன். வெண்பா வழியாக பெயர்களை அடுக்க சொல்லித் தந்த நீ, உங்கள் அலுவலகத்தில் ஃபைல்களை அடுக்கி வைக்காமல் தேடிக் கொண்டிருப்பது ஏன் என்றேன். அவர் கிர்ர்ர்ர்ர்ர்... என்றார் நான் சர்ர்ர்ர் என புறப்பட்டேன்.

இதே பாணியில் நீங்களும் முயற்சிக்கலாம்.
தலைப்பு - நண்பன்
கடைசி வரி - ஃபேஸ்புக் நண்பனே தெம்பு!