Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, August 24, 2012

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - Song of this Century!

‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது...‘

சற்று முன் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜீனியர் நிகழ்ச்சியில் இந்தப் பாடலை ஒரு சிறுவன் பாடிக் கொண்டிருந்தான். அற்புதமான அனுபவம். 

ஆன்மாவில் தோய்ந்த அச்சிறுவனின் குரலில், கண்ணதாசன் வரிகள் கொஞ்சம் கொ
ஞ்சமாக இதயத்தை பிழிய ஆரம்பித்தபோது, பாடகி அருணா சாய்ராமின் விழியோரத்தில் கண்ணீர். உணர்வுகளை அடக்க முடியாமல், ராஜேஷ் வைத்தியா வீணை மீட்டுவதை நிறுத்திவிட்டு, கண்களின் ஈரத்தை துடைத்துக் கொண்டார்.

அரங்கத்திலிருந்த ஒவ்வொரு இதயமும் விவரிக்க முடியாத உணர்வுகளால், கசிந்துருகியபோது, உயிரற்ற காமிரா கூட உணர்வு பெற்று அழுதது போலத் தோன்றியது.

எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும், குடும்பத்தினருடன் அமர்ந்து இந்த பாடலை பார்த்துக் கொண்டிருந்த என் விழிகளின் ஓரங்களிலும் நீர். தொண்டை அடைத்துக்கொண்டு வார்த்தைகள் எழவில்லை.

அந்தப் பாடலின் மகத்துவம் அப்படி. கர்ணன் போன்று தூய உள்ளம் கொண்டிருந்தாலும், வாழ்வின் இன்பங்களும், துன்பங்களும் அனைவருக்கும் பொது. நல்லவர்களால் ஒப்புக் கொள்ள முடியாத இந்த சித்தாந்தத்தை, கடவுள் கண்ணனே விளக்கிப் பாடுவது போன்ற இந்த பாடல் மிக மிக அபூர்வம்.

இதற்கு முன்பும், பின்பும் இந்தச் சூழல் எந்தப் படத்திலும் வந்ததில்லை. அப்படி ஒரு பாடல் இனிமேல் வந்தாலும் இந்தப் பாடல் போல் வருமா எனத் தெரியவில்லை.

இந்தப் பாடலைக் கவனியுங்கள்! மேதைகளின் சங்கமம்! பி.ஆர்.பந்துலு, சக்தி கிருஷ்ணசாமி, சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், சீர்காழி கோவிந்தராஜன், கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி!

இன்று வரை, இந்தப் பாடல் எல்லா போட்டி மேடைகளிலும் தொடர்ந்து பாடப்படுகிறது. ஒவ்வொரு முறை ஒலிக்கும்போதும், உள்ளங்கள் உருகுவதையும், கண்ணீர் பெருகுவதையும் பார்க்க முடிகிறது. எனக்குத் தெரிந்து வேறெந்த பாடலும் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம், இசையும், வரியும், குரலும் ஆன்மாவை உலுக்கி எடுக்கிறது. எத்துணை கொடிய ஆன்மாவாக இருந்தாலும், மரிக்கும்போது இப்பாடலைக் கேட்டால், தூய்மையாக மாறிப்போகும்.

என் உள்ளத்தின் சலனமற்ற ஆழத்தில் இந்தப் பாடல் எப்போதும் இருக்கிறதென நினைக்கிறேன். எத்தனை முறை இந்த பாடலைக் கேட்டாலும், கண்கள் கசிகின்றன. இதயம் கங்கையில் குளித்து எழுவது போல இனம் புரியா புனித உணர்வை அடைகிறது.

என்னைக் கேட்டால், கடந்த 50 ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த தமிழ் திரை இசைப் பாடல்களில் முதல் இடம், உள்ளத்தில் நல்ல உள்ளம்‘ என்ற இந்தப் பாடலுக்குத்தான். Song of this Century!

என் உள்ளத்தை சுத்திகரிக்கும், இந்த அற்புத பாடலைத் தந்த மேதைகளை சந்திக்க நேர்ந்தால், அவர்களின் பாதம் தொட்டு வணங்குவேன்.

குறிப்பாக தன் இசையின் மேன்மையால் காலத்தின் தோள்களில் ஏறி, அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, இசையால் உருகும் உள்ளங்களின் உள்ளும், வெளியும் பயணித்துக் கொண்டிருக்கும் மெல்லிசை மன்னர் ஐயா எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு என் இதயத்தின் ஒலிகளை சமர்ப்பிக்கிறேன்.

இன்று விஜய் டிவியில் பாடிய அச்சிறுவனின் பெயரை குறித்துக் கொள்ள மறந்துவிட்டேன். நான் மறந்தால் என்ன . . . எத்தனையோ மேதைகளின் பெயர்களுடன் சேர்ந்து, இனி அவன் பெயரும் ஒலிக்கும். இதை விட வேறென்ன பேறு வேண்டும்.

‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது,
வல்லவன் வகுத்ததடா..‘

Friday, August 17, 2012

In & Out Chennai - நீதானே என் பொன்வசந்தம்


Illayaraja is .... 

கோடிட்ட இடத்தை நான் நிரப்ப விரும்பவில்லை. உணர்வின் மிகுதியில் இளையராஜாவே தன்னைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் இவை. ஜெயா டிவியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக இயக்குனர் கௌதம் மேனன் அவரை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். இருவரும் மிகச் சாதாரணமாக தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்த அந்த பேட்டியில், சட்டென ஏதோ ஒரு கணத்தில், இளையராஜா அந்த வார்த்தைகளை உச்சரித்தார். அவர் அப்படி சொன்ன பின், அவரே ஒரு கணம் மௌனித்தார். அவருடைய இசையின் இடையில் நிகழும் மௌனங்களைப் போல, ஓராயிரம் ஸ்வரக்கோர்வைகளை உள்ளடக்கிய அடர்த்தியான மௌனம். இதை எதிர்பாராத கௌதம் மேனன், நிலைத்த பார்வையுடன் என்ன பதில்சொல்வது எனத் தெரியாமல் அமர்ந்திருந்தார். உலகம் ஒரு நொடி நின்றது போல அதைப் பார்த்துக் கொண்டிருந்த நானும் உறைந்து போனேன். சில நொடிகள்தான்...இளையராஜாவே அந்த மௌனத்தைக் கலைத்தார்.

'தவறுக்காக ஒருவன் பெருமைப்படுவானா? இந்த பிறப்பே ஒரு தவறு. இந்த பிறப்புக்காக நான் பெருமைபட்டுக் கொள்ள என்ன இருக்கிறது?' எதற்காக நான் பிறந்தேன். எதற்காக இந்த வாழ்க்கை, இந்த இசை, இந்த பாராட்டு?'

இளையராஜாவின் இந்த வார்த்தைகளை எத்துனை பேர் புரிந்து கொண்டார்கள் எனத் தெரியவில்லை. பின்வரும் கவிதையை சுஜாதா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கவிதை இளையராஜா கூறிய வார்த்தைகளின் ஆழத்தை விளக்கக்கூடும்.

பசித்தவாயை பூமியின் இனிய மார்பில் பதிந்திருக்கும் மரம்.
தினம் முழுதும் கடவுளை நோக்கி
இலைநிறை கைகளை உயர்த்தி பிரார்த்திக்கும் மரம்.
கோடையில் கூந்தலில் பறவைக் கூடுகள் அணிந்து
குளிரில் மார்பில் பனிக்கட்டி படிந்து
மழையுடன் நெருக்கமாய் வாழும் மரம்.

இந்தக் கவிதை இத்துடன் முடிந்திருந்தால், அது மிகச் சாதாரணம். அதற்கடுத்த இரு வரிகள்தான் உணர்வுகளின் ஆழத்தில் ஆச்சரிய வளையங்களை எழுப்பக்கூடியவை.

கவிதைகள் செய்வது என் போன்ற முட்டாள்கள்.
கடவுள் ஒருவர்தான் மரம் செய்யத் தெரிந்தவர்!

இளையராஜா இதைத்தான் சொன்னார். 

பாடல்கள் சமைப்பது என் போன்ற சாதாரணர்கள், 
கடவுள் ஒருவர்தான் இசையை செய்யத் தெரிந்தவர்! 

எதிலும் உச்சம் தொட்டவர்கள் தங்களைத் தாங்களே கடவுளின் தேசத்தில் துச்சமாகத்தான் நினைக்கிறார்கள். சமுத்திரம் ஆரவாரம் செய்யும். நான் சமுத்திரத்தின் ஒரு துளி எனும்போது கரையின் ஆரவாரமோ, ஆழத்தின் அமைதியோ, எதுவுமே எனக்கு சொந்தமில்லை. எல்லாம் சமுத்திரத்திற்கே சொந்தம். நிறைய சாதித்தவர்கள் இப்படி ஒரு நிலைக்கு தங்களை தாங்களே இழுத்துச் செல்ல முயல்கிறார்கள். இசையில் உன்னதம் தொட்டிருக்கும் இளையராஜா தன்னை இசைச் சமுத்திரத்தில் கரைந்து போன ஒரு ஒலித்துளியாக நினைத்துக் கொண்டு உச்சரித்த வார்த்தைகள், அவருடைய இசையைப் போலவே என் ஆன்மாவை இன்னமும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.

எதிர் நீச்சலும், எதிர்நீட்டலும்!
ICE AGE - 3D இந்தப் படம் சென்னையில் வெளியாகிவிட்டதா? வெளியாகியுள்ளதா? எனத் தெரியவில்லை. இந்தப் படத்தின் வியாபாரத் தொடர்புடைய ஒருவர் டிவிட்டரில் படம் வெற்றி என அறிவித்திருந்தார். படம் நன்றாக உள்ளதா? இல்லையா? என இரசிகர்கள் பார்த்து உணரும் முன்பே, படத்தின் வசூல் பற்றிய கணக்குகளை தீர்மானிக்கும் வியாபார உத்திகள் கோடம்பாக்க சினிமாவுக்குள் வந்துவிட்டது. தற்போது ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்து, ஷங்கர் இயக்கிய ‘சிவாஜி‘ திரைப்படம் 3Dயில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் தியேட்டர்களைத் தொடும் என செய்திகள் கசிகின்றன. இதைக் கேள்விப்பட்டதும், சிவாஜிக்கு பதில் எந்திரனை 3Dயில் மாற்றலாம் என சில இரசிகர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்திய சினிமாவுக்கு மை டியர் குட்டிச் சாத்தான்தான் முதல் 3D. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் அத்தகைய முயற்சி ஒரு எதிர் நீச்சல். அந்த வகையில் குட்டிச் சாத்தானுக்கு ஒரு சபாஷ்! எந்திரனை இந்தியாவின் முதல் சயின்ஸ் ஃபிக்ஷன் என்று வர்ணித்தார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எம்.ஜி.ஆர் நடித்து ஜெனோவா என்றொரு சயின்ஸ் பிக்ஷன் படம் அந்தக் கால தூர்தர்ஷனிலேயே பார்த்திருக்கிறேன். 

முதலாவதாக வந்ததோ, அடுத்ததோ எதுவாக இருந்தாலும் சயின்ஸ் பிக்ஷன் என்பதற்கு கதையில் ஒரு எதிர்நீட்டல் (Extra Polation) இருக்க வேண்டும். அதாவது இன்றைய கண்டுபிடிப்புகள், இன்றைய நடை முறை வாழ்விலும், நாளைய வாழ்விலும் எத்தகைய மாற்றங்களைத் தரும் என்பது பற்றி, ஒரு நிஜம் தாண்டிய கற்பனை வேண்டும். உதாரணமாக இன்றைய மனிதர்கள் ஆன்லைன் வழியாக ரேஷனரிசி வாங்குகிறார்கள். நாளைய மனிதர்கள் கை, கால்களை ஸ்பேர்பார்ட்ஸ் கடைகளில் வாங்கிக்கொள்வார்கள். ஆனால் இது போன்ற கற்பனை எதுவும் எந்திரனில் கிடையாது, சிட்டி ஒரு ரோபோ என்பதைத் தவிர. எனவே அது முழு சயின்ஸ் பிக்ஷன் அல்ல. ஆனாலும் எந்திரனை எனக்குப் பிடித்தது. அதற்கு காரணம் திரைக்கதையோ, இசையோ, நடிப்போ, டெக்னாலஜியோ அல்ல. எந்திரனைப் பொறுத்தவரை ரஜினி தன்னை முழுமையாக இயக்குனர் ஷங்கரிடம் ஒப்படைத்துவிட்டார். அந்த ஒப்படைப்பு எனக்கு பிடித்தது. படம் உருவான கதை பற்றிய காட்சிகள், சில ரஜனி பேட்டிகள் போன்றவற்றை பார்த்தபோது, ஷங்கரை பரிபூரணமாக நம்பி ஒத்துழைத்த ரஜினி, ரஜினிக்கே புதுசு.

கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு பரிபூரண ஒத்துழைப்பை இளையராஜா-கௌதம் மேனன் இணையில் கண்டேன்.  கௌதம் மேனனின் பாடி லாங்வேஜ், பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், லண்டன் நகரில் அவர்கள் நடந்து சென்ற புகைப்படங்கள், இளையராஜாவின் நிறைவான புன்னகை, எனக்கு அப்படி ஒரு எண்ணத்தையே தோற்றுவித்தது. ஜெயா டிவி பேட்டியை பார்த்தபின், என்னுடைய எண்ணம் சரி என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இளையராஜாவின் வார்த்தைகளே அதற்கு அத்தாட்சி தந்தன.

‘எனக்கே இந்த அனுபவம் புதிது. வேறு எந்த இயக்குனரிடம் எனக்கு இது போன்ற அனுபவம் ஏற்பட்டதில்லை‘ என்று திரும்பத் திரும்ப, வெவ்வேறு வார்த்தைகளில் இளையராஜா, தான் கௌதம் மேனனின் மேல் கொண்ட ஈர்ப்பை வெளிப்படுத்தினார். என் ஞாபகம் சரி என்றால், இதற்கு முன்பு, எந்த இயக்குனருடனும் இளையராஜா இத்தனை ஈடுபாடுகாட்டியதில்லை, அவர்களுடன் அமர்ந்து பேட்டியளித்ததும் இல்லை.

சங்கமம் திரைப்படத்தில் ‘மழைத் துளி மழைத் துளி மண்ணில் சங்கமம்‘ என ஒரு பாடல் வரும். அதில் மெல்லிசை மன்னர் ‘மகனே‘ என்றொரு வார்த்தையை உருகி உருகி உச்சரிக்கும்போது, ஏ.ஆர்.இரகுமானை அவர் ஆசிர்வதிப்பது போலவே எனக்கு கேட்கும். அது போல எளிதில் அணுக முடியாத மேதமை பொருந்திய தந்தையை, புத்திசாலி மகன் தன் சாமர்த்தியத்தால் ஈர்த்து அவருடன் இணைந்து, கம்பீர வெட்கத்துடன் ஒரு காலை வாக்கிங் சென்றது போல இருந்தது அன்றைய இளையராஜா-கௌதம்மேனன் பேட்டி. ‘ஹோய் பாத்தியா எங்கப்பாவை.. யார் தெரியுமா அவரு.. ராஜாடா..‘ என்று பெருமையும், நம்பிக்கையும், பணிவும் பொங்க சொன்னது போல இருந்தது, கௌதம்மேனனின் ஒவ்வொரு வார்த்தையும்.

இந்த விதை நான் போட்டது, இதை ஆண்டு அனுபவிச்சு அடுத்த தலைமுறைக்கும் நீதான் எடுத்துட்டுப் போகணும், என்று தேவர் மகனில் சிவாஜி, தன் பட்டணத்து மகன் கமலுக்கு அறிவுறுத்துவார். கௌதம் மேனன் நீதானே பொன்வசந்தம் படத்தின் மூலம் அதை செய்து கொண்டிருக்கிறார். நேற்று தான் கேட்டு வளர்ந்த இளையராஜா இசையை இன்றைய தலைமுறைக்கும் அதே வீச்சுடன் அறிமுகப்படுத்த முன்வந்திருக்கிறார். கர்ணன் திரைப்படம் டிஜிட்டலில் உயிர் பெற்று, இன்றைய தலைமுறையின் சில நூறு பேர்களையாவது தொட்டதில் எனக்கு பலத்த சந்தோஷம். அதே போல ஒரு செய்தியாக, ஒரு தகவலாக, ஒரு பழைய பாடலாக மட்டுமல்லாமல், இளையராஜா, இளைஞர்களின் ராஜாவாகவே அறிமுகப்போகிறார் என்பது எனக்கு புத்துணைர்வை தருகிறது. இளையராஜாவுக்கும் ஒரு உற்சாகம் திரும்பி வந்திருப்பதாக உணர்கிறேன். 


ஓவியர் ஜீவாவை உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். ஜீவ்ஸ் என்று அவரை செல்லமாக அழைப்பேன். ஓவியர் என்றாலும், திரைச்சீலைகள் என்ற திரைப்படம் பற்றிய புத்தகம் எழுதி அதற்காக தேசிய விருது பெற்றவர். கடந்த வாரம் கோவை சென்றிருந்த போது, மரக்கடை வீதியில் இருந்த அவருடைய அலுவலகத்தில் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். நான் சென்றபோது, இன்னமும் கண்கள் வரையப்படாத ஒரு புத்தர் ஓவியமும், கண்களில் தன் உணர்வுகள் கொப்பளிக்க உற்றுப் பார்த்த ஒரு ஓவியமும் அவருடைய மேஜையில் இருந்தன. சினிமாவுக்கு பேனர் வரைந்த காலத்தில் இருந்த திருப்தி, ஃபோட்டோஷாப்பில் தயாராகும் பிளக்ஸ் பேனர்களில் இல்லை. அந்த அலுப்பும் சலிப்பும் என்னை ஆக்கிரமிக்கும்போதெல்லாம், இது போல வரைந்து வரைந்து குவிப்பேன் என்றார். 

இதுதானே வாழ்க்கை!
அணுவுக்குள் அணுவாகி
அப்பாலுக்குள் அப்பாலாகி
ஒரு புள்ளியில் தோன்றி
புள்ளியில் மறையும்
ஒரு புள்ளி!
இதுதானே வாழ்க்கை!

இது தற்போது தயாரிப்பில் இருக்கும் நான் இயக்கும் திரைப்படத்தில் வெளிவரப்போகும் பாடல் வரிகள். இவற்றை அவரிடம் காண்பித்து, அந்தப் பாடல்களுக்கான ஓவியத் தேவைகள் பற்றி கேட்டேன்.  மேதைகள் அவ்வளவு எளிதாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஜீவாவும் பிடிகொடுத்து பேசவில்லை. கௌதம் மேனன், இளையராஜாவை ஈர்த்தது போல, நானும் அவரை ஈர்ப்பேன். இசையமைக்கப்பட்டிருக்கும் அந்த பாடல் வரிகளுக்கு அவரையே ஓவியம் வரையச் செய்வேன்.

இளையராஜாவின் மேதைமையை கௌதம் மேனன் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்கிறார். இதே போல, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் தேவகானங்களையும் அடுத்த தலைமுறைக்கு, இன்றைய தலைமுறை இயக்குனர் யாராவது இட்டுச் செல்ல வேண்டும். 

இது என் ஆசை மட்டுமல்ல, தீராத வேட்கை என்றும் சொல்லலாம்.

 அடுத்தடுத்த தலைமுறையினர் இந்த மேதைகளின் இசை கேட்டு வளர வேண்டும் என்பது ஆவல்.




‘என்னோடு வா..வா.. என்று சொல்ல மாட்டேன். 
உன்னை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டேன்‘

நீங்கள் எனக்காக எழுதிய வரிகள் என்று அந்த பேட்டியில், இளையராஜாவிடமே கௌதம்மேனன் பெருமைபட்டுக் கொண்டார்.
எனக்கென்னமோ இளையராஜாவின் இசையுடன் உலவும் காற்று, நம் எல்லோரையுமே பார்த்து இப்படிப் பாடுவதாகத் தோன்றுகிறது.

ஐ லவ் மியூசிக்! ஐ லவ் இளையராஜா!
கட்டுரையின் முதல் வரியில் உள்ள கோடிட்ட இடத்தை Music என்று நிரப்பிக் கொள்ளுங்கள்!

Thursday, July 19, 2012

இந்தியாவின் முதல் ரொமாண்டிக் சூப்பர்ஸ்டார் விடை பெற்றார்!

ராஜேஷ் கண்ணா! இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார்!

சின்ன தலையசைப்பிலும், நளினமான கையசைப்பிலும், மெல்லிய புன்சிரிப்பிலும் இந்தியாவின் இளமையை எழுபதுகளில் கொள்ளையடித்தவர்.

எப்போதும் சீராகத் தலைவாரப்பட்டு, மடிப்பு கலையாத உடைகளுடன் ஒரு ஒழுக்கமான பையன் தோற்றம். ஆங்ரி யங் மேனாக, அமிதாப் தனித்து தெரிந்ததற்கு ராஜேஷ்கண்ணாவின் இந்த தோற்றமும் ஒரு காரணம்.

அவருடன் அமிதாப் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இரண்டும் ஜெம். அதுவும் ஆனந்த்... என்ற படம்... கிளாசிக்!

ஹிந்தி தெரியாத மாநிலங்களிலும் ராஜேஷின் திரை ஆளுமை ஊடுருவி இருந்தது. மேல் பட்டன் போடாத சட்டையுடன், கன்னக்குழியழகி ஷர்மிளா டாகூருடன் அவர் தோன்றிய படங்கள், அவரை ஒரு ரொமான்ஸ் கிங்காக உயர்த்தின.

அவர் உச்சத்தில் இருந்தபோது, கிட்டத்தட்ட தொடர்ச்சியாக 15 படங்கள் சூப்பர் ஹிட்!



டியர் ராஜேஷ் கண்ணா,
உங்கள் நினைவாக அமர் பிரேம் படத்திலுள்ள இந்தப் பாடலில் மூழ்கிக் கொள்கிறேன். பாடலுக்கு அர்த்தம் கேட்காதீர்கள். எனக்கு அர்த்தம் தெரியாது. ஆனால் உங்களைத் தெரியும். உங்கள் முகம் சொல்லும் பாவனை தெரியும். இந்தப் பாடல் யாரையோ வழியனுப்பும் முடிவில்லா உணர்வைத் தருகிறது. அதே உணர்வுடன் உங்களையும் அனுப்பி வைக்கிறேன். 

Bye Rajesh! I miss you

Wednesday, July 11, 2012

நான் ஈ - விமர்சனம்

ஒரு சின்ன ஈ அளவு கதை! ஆனால் பிரமாண்டமான CLAN திரைக்கதை! காட்சிக்கு காட்சி சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. நாயகி சமந்தா, கடைசிக் காட்சியில் வரும் சந்தானம், இவர்களைத் தவிர, எவருமே பழகிய முகம் இல்லை. இருந்தாலும் அலுப்பே இன்றி தியேட்டர் கை தட்டல்களால் பரபரக்கிறது.


நண்பர் ஜெயராஜ் சத்யம் தவிர வேறு எந்த தியேட்டரிலும் படம் பார்க்க விரும்ப மாட்டார். தும்..தும்... என்று இதில் உள்ளது போல சவுண்ட் குவாலிடி வேறு எதிலும் இல்லை என்பார். எனவே தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் சத்யம் குழுமத்தினர், எங்களுடன் ஜெயராஜ் பேசிக் கொண்டிருக்கும்போது கேண்டிடாக எடுத்து ஒரு க்ளிப் போடலாம். நேற்று ராயப்பேட்டை சத்யத்தில் கிடைக்கவில்லை என்று புதிதாக வந்திருக்கும் பெரம்பூர் சத்யத்துக்கு(S2) டிக்கெட் எடுத்துவிட்டார். எடுத்துவிட்டாரே தவிர, கூகுள் மேப் 13 கிலோ மீட்டர் காட்டுதே, எத்தனை மணிக்கு புறப்படறது என்றார் சற்றே டிராபிக் கிலியுடன்.


படத்தைப் பற்றி சொல்லாமல் தியேட்டரைப் பற்றிச் சொல்கிறேனே என நினைக்காதீர்கள். ராயப்பேட்டை சத்யத்தில் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற வரி ஒரு சேதி சொல்கிறது. திங்கட்கிழமை இரவுக்காட்சி ஒரு படம் ஹவுஸ் ஃபுல் ஆகிறது என்றால் அது டாப் டக்கர் படமா இல்லையா?

ஒரு ஈயாம்.. அது தான் ஹீரோவாம்... தூங்கறதுக்குன்னே படம் தேர்ந்தெடுத்து போறாரு என்று புறப்படும்போது வீட்டில் கிண்டல்.  இது போதாமல் டிராபிக் பயத்தால் பூந்தமல்லி ஹைரோடு தவிர்த்து, பாடி பிரிட்ஜ் ஏறி, வழி தெரியாமல் சுற்றி பெரம்பூர் S2வை அடைந்தபோது, கிட்டத்தட்ட தூக்கம் வந்துவிட்டது. ஆனால் எல்லாம் டைட்டில் போடும் வரைக்கும்தான். அதற்குப் பின் ஈடா.. ஈடா.. ஈடா.. என்று அதிரும் இசையுடன் ஒரு குதூகல உலகில் துள்ள வைக்கிறார் இயக்குனர்.



தூங்கப் போகும் முன் ஒரு குழந்தை அப்பாவிடம் கதை கேட்கிறது. ஒரு ஊர்ல என்று ஆரம்பிக்கும்போதே, இது வேண்டாம்பா, எப்ப பார்த்தாலும் இதையே சொல்ற என்று குழந்தை அலுத்துக் கொள்ள, அப்பா ஈ கதை சொல்ல ஆரம்பிக்கிறார். காட்சி கிடையாது. டைட்டிலுடன் வெறும் ஒலிதான். அந்தக் குழந்தையுடன் நாமும் ஈ கதை கேட்க தயாராகிவிடுகிறோம்.


இயக்குனரின் சாமர்த்தியத்தை புரிந்து கொள்ள, இந்த துவக்கம் போதும். எந்த லாஜிக்கும் இல்லாமல் ஒரு சாதாரண ஈயை சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு நம்மால் பார்க்க முடிகிறது என்றால் ரசிகனை தயார்படுத்தும் இது போன்ற சின்னச் சின்ன உத்திகள்தான் காரணம்.


படம் ஈயை விடச் சிறியதான ஒரு காதலில் அழகாகத் துவங்குகிறது. தொண்டு நிறுவனம் நடத்தும் சமந்தாவை, எதிர் வீட்டு நானி துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் இனிமையான ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் போல.. லைக்.. லைக்... லைக்! 

எந்தப் பெண்ணையும் வளைத்துப்போடும் பிசினஸ் தாதா சுதிப், சமந்தாவை தற்செயலாகப் பார்க்க, தடையாக இருக்கும் நானியை கொடூரமாகக் கொல்கிறார். நானி ஈயாக மறுபிறவி எடுத்து சுதிப்பை பழிவாங்குவதுதான் கதை.


ராஜமௌலியின் மகதீரா படத்தில், துபாயில் இருந்த எனது நண்பர்கள் அனிமேஷன் மற்றும் காம்போசிட்டிங் செய்திருக்கிறார்கள். அச்சமயத்தில் துபாயில் இருந்த நான், அது உருவாகத்தில் இருக்கும்போதே அதன் துல்லியத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் நான் ஈ, நான் வியந்த மகதீராவையே மிஞ்சிவிட்டது. ஒரு ஈயை வைத்துக்கொண்டு, ஆக்ஷன் படம் எடுப்பதற்கு மகா சாமர்த்தியமான கற்பனையும், திட்டமிடலும், செயல் திறனும் வேண்டும். ராஜமௌலி அண்டு டீம், பின்னி எடுத்துவிட்டார்கள். குறிப்பாக அனிமேஷன் டீம்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டரில் சிரிக்காதவர்களே இல்லை. சபாஷ்... சபாஷ்... சபாஷ்.... குஷியில் கைக்குழந்தையை கீழே தவற விட்டுவிட்டு பக்கத்து இருக்கை கணவன்-மனைவி சண்டை போடுகிற அளவுக்கு சில காட்சிகள் அபாரம். அதே போல கிளைமாக்ஸில் சீட்டு நுனிக்கு அழைத்துச் செல்கிறார். (S2வில் உள்ள இருக்கைகள் சாய்வதற்கு அவ்வளவு தோதாக இல்லை)


காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்கிற காட்சி, இன்று வரை சூப்பர் ஹிட். தியேட்டரே குலுங்கும். அதற்கு காரணம் நாகேஷ் மட்டுமல்ல, நாகேஷின் ஆக்ஷனுக்கு இணையான பாலைய்யாவின் அசராத விதம் விதமான ரியாக்ஷன். அதே இந்தப் படத்தில் கிராபிக் ஈ அதகளம் பண்ணுகிறது என்றால், அது எடுபடக் காரணம் வில்லன் சுதிப். (டப் செய்தவர்களுக்கு ஒரு ஷொட்டு. அபார குரல் செலக்ஷன்) ஒரே பார்வையில் பெண்களை வீழ்த்தும் கோடீஸ்வர பிசினஸ்மேனாக அவர் துப்பாக்கியில் குறிபார்த்து நம்மையும் வீழ்த்துகிறார். அடேங்கப்பா அபார நடிப்பு! கம்பீரமாக அறிமுகமாகி, ஒரு ஈயால் சின்னா பின்னமாகி கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் அளவுக்கு மாறுவதை நறுக்கென்று செய்திருக்கிறார். ஈயின் வெற்றிக்கு அவர் ஒரு மிக முக்கியக் காரணம்.


முதன் முதலாக சந்தானம்  நண்பேண்டா டிராக்கிலிருந்து மாறியிருக்கிறார். இரசிக்க முடிகிறது. சந்தானம் இந்த டிரெண்டை பிடித்துக் கொள்ள வேண்டும். இன்னும் பல வருடங்கள் தாக்குப்பிடிக்க இதுதான் சிறந்த வழி. படத்தில் அவர் வரும் பகுதி ஒரு இலவச இணைப்புதான் என்றாலும் சரியான சிரிப்பு மசாலா. படம் முடிந்து டைட்டில் ஓடும்போதுதான் சந்தானத்தின் காட்சிகளே வருகின்றன. எனவே பார்க்கிங்கில் இருந்து காரை எடுக்கும் அவசரத்தில் இந்தக் காட்சிகளை தவறவிட்டுவிட வேண்டாம்.

பென்சில் சீவும் பெண்சிலையே என சுவாரசியமான வார்த்தைகளை மரகதமணியின் மெட்டுகளுக்குள் அமர்த்தியிருக்கிறார் கார்க்கி.


படத்தில் வந்த ஈ அளவிற்கு மகா சுறுசுறுப்பாக பார்க்கிங்கில் ஒரு பெரியவர் இயங்கிக் கொண்டிருந்தார். 61 வயதில் அசராத சுறுசுறுப்பு. முன்பு ராயப்பேட்டை சத்யத்தில் இருந்தாராம். இரண்டு குழந்தைகள், ஏதோ காலேஜ் படிக்கிறார்கள். என்னால முடிஞ்சது சம்பாதிச்சு தர்றேன் என்று சொல்லிவிட்டு, ஒரு சல்யூட்டுடன் அடுத்த காரை பார்க்கப் போய்விட்டார்.


நமது சமூகத்தில் ஈக்களையம், முதியவர்களையும் எவரும் மதிப்பதில்லை. ஆனால் கிளைமாக்ஸில் காதலிக்காக தன்னை இழக்கிற ஈயும், தன் குழந்தைகளுக்காக தன்னை இழந்து கொண்டிருக்கிற பார்க்கிங் பெரியவரும் இன்னமும் என் மனதில் இருக்கிறார்கள். உண்மையான அன்பு மறு ஜென்மம் எடுத்தாவது உலகை வெல்லும். படம் சொல்லும் செய்தி இதுதான்.

ஈடா... ஈடா... ஈடா... ரெண்டு நாளாச்சு, மரகதமணியின் பாட்டு இன்னமும் மனசுக்குள் அதிர்ந்து கொண்டிருக்கிறது.

Tuesday, June 26, 2012

சகுனி - திரை விமர்சனம்!

இடைவேளை!

‘டேய் எழுந்திருடா.. எழுந்திருடா... ஐயய்யோ என்னடா எழுந்துக்க மாட்டேங்கிறான். செத்துட்டானா... டேய் இவனை எழுப்புடா..‘
‘டாய்.. நான் சாகலடா.. ‘
‘என்னது நீ சாகலயா.. போச்சு போ.. நீ எஸ்கேப் ஆகிட்டேன்னு நினைச்சேன். இப்படி வந்து சிக்கிட்டியேடா?‘

படத்து டயலாக்கை விட, பக்கத்து சீட் டயலாக் நச். (பக்கத்து சீட்டர்கள் புண்ணியத்தில்) இடைவேளை விட்டப்புறம்தான் என்னால் சிரிக்க முடிந்தது. அதுவரை சந்தானமும், கார்த்தியும் எவ்வளவோ கிச்சு கிச்சு மூட்டிப் பார்த்தார்கள். ரீல் அந்து போனதுதான் மிச்சம்.

முதலில் தனக்கொரு என்ட்ரி வைத்துக் கொண்டு, நாலு சீன் கழித்து சந்தானத்துக்கும் ஒரு என்ட்ரி கொடுத்து, கெக்கே பிக்கே என ஜோக் அடித்து, சாராயக் கடையில் ஒரு பாட்டு வைத்து, அவ்வப்போது ஒரு பெண்ணை காதலித்துவிட்டால் முதல் பாதி தப்பிவிடும் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டார் கார்த்தி.

சந்தானம் இன்னமும் சிவா மனசுல சக்தி படப்பிடிப்பு முடியவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அதே பிரடிக்டபிள் காமெடி டிராக். நண்பேன்டாவாக ஜீவா, ஆர்யா, உதயநிதி ஸ்டாலின் வரிசையில் தற்போது கார்த்தி. ஒரே மாற்றம் பழைய படங்களில் கசங்கிய சட்டையுடன் வருவார். இப்போது ஹீரோக்களை விட பளபளப்பாக டிரஸ் பண்ணுகிறார்.

ஹீரோயின் பெயர் தெரியவில்லை. முகமும் என்ட் டைட்டிலுக்கு முன்பே மறந்து போச்சு. கௌரவத் தோற்றங்களில், சோப்ளாங்கி காட்சிகளில் அனுஷ்காவும் ஆன்ட்ரியாவும் பரிதாபமாக வந்து மறைகிறார்கள். பிரகாஷ் ராஜை ஏதோ ஒரு மொட்டை மாடிக்கு வர வைத்து, ‘யார்ரா அவன்? அவனை வரச் சொல்லுடா‘ என்ற டயலாக்கை வேறு வேறு மாடுலேஷனில் எடுத்து வைத்துக்கொண்டுவிட்டார்கள். படம் முடியும் வரை அதையே பேசிக் கொண்டிருக்கிறார். செல்லம் இனிமே உஷாரா இருக்கணும். இல்லன்னா இப்படியே பேச வைத்து காலி பண்ணிவிடுவார்கள். கந்துவட்டி அக்காவாக ராதிகாவும், கார்த்தியின் அத்தையாக ரோஜாவும் சில காட்சிகளில் வந்து போகிறார்கள். இவர்களைத் தவிர, அவ்வப்போது ரஜினியின் கட்அவுட்டுகளும், பேனர்களும் காட்சியில் வந்து போகின்றன.

கார்த்தியின் பூர்வீக வீட்டை பாலம் கட்டுவதற்காக அரசாங்கம் கையகப்படுத்துகிறது. பாலம் கட்டும் காண்ட்ராக்டை பினாமி பெயரில் வைத்திருக்கும் முதலமைச்சரை சந்தித்து வீட்டை திருப்பித் தர கேட்கிறார் கார்த்தி. அவர் மாட்டேன் என்றதும், கிங் மேக்கராக சகுனி வேலை செய்து கந்து வட்டிப் பெண்ணை மேயராக்குகிறார். ஜெயிலில் இருக்கும் எதிர்கட்சித் தலைவரை முதல்வராக்குகிறார். முதல்வர் பிரகாஷ்ராஜை ஜெயிலுக்கு அனுப்புகிறார்.

ஆட்டோவுக்கு கூட காசில்லாத ஒருவன் எப்படி ஒரு அரசாங்கத்தையே மாற்றுகிறான் என்கிற ரஜனி ரேஞ்ச் மசாலாவை, திரைக்கதையே எழுதாமல், அபத்தக் காமெடி உப்புமாவாக்கி நம்மை தியேட்டரை விட்டு விரட்டியடிக்கிறார்கள். வேகமாக விரட்டுவதற்கு ஹை டெசிபல் பிண்ணனி இசை உதவுகிறது.

டிக்கெட்டுக்கு 600 ரூபாய், பாப்கார்ன், பெப்ஸிக்கு 550 ரூபாய்.. தண்டம்.. தண்டம்.. பணமும் போச்சு, (நைட் ஷோவினால்)தூக்கமும் போச்சு என்றபடியே ஒரு குடும்பம் வெளியேறிக் கொண்டிருந்தது.

234 தொகுதிகளிலும் ஆளுக்கு 1000ம் ரூபாய் தந்தால் கூட இந்தப் படத்தை எவராலும் இரசிக்க முடியாது.

Wednesday, March 14, 2012

காயம் நல்லது - சேரனும் தமிழ் சினிமா ஜாம்பவான்களும்!

சினிமாவையும் சினிமாவில் இருப்பவர்கள் வாழ்வையும் மக்களுக்கு அறிமுகப் படுத்துவதை விடுத்து... மக்களையும் மக்களின் வாழ்வையும் சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவோம்.

சங்ககிரி ராஜ்குமார் தனது வலைப்பதிவில் இப்படித்தான் அறிமுகம் தந்திருக்கிறார். யார் இந்த சங்ககிரி ராஜ்குமார்? இந்தக் கேள்வி சினிமா ஆர்வலர்கள் மத்தியில் உரக்க எழுந்திருக்கிறது. காரணம் இயக்குனர் சேரன்.

திரு.சேரன் சமீபகாலமாக பத்திரிகைகளில் அதிகம் குறிப்பிடப்படுகிறார். காரணம் அவரது சினிமாக்கள் அல்ல, அவர் நேசிக்கும் சினிமாக்கள்!

எனது நண்பர் ஷண்முகராஜ், திரு.சேரனிடம் சினிமா பயின்றவர். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். எல்லா முதல் பட இயக்குனர்களுக்கும் உள்ள பிரச்சனை. படம் நன்றாக இருக்கிறது. ஆனால் இரசிகர்களிடம் சென்றடைவதில் சிக்கல். சேரன் தாமாகவே முன்வந்து படத்தைப் பார்த்து, பாராட்டி பத்திரிகைகளில் அது பற்றிய செய்திகள் வரவழைத்தார். விளைவு திரு.மைக்கேல் ராயப்பன் படத்தை வாங்கியிருக்கிறார். தற்போது சன்பிக்சர்ஸ் தொலைக்காட்சி உரிமையை வாங்கியிருக்கிறது. படம் நிச்சயம் திரைக்கு வரும். அதற்கு காரணம் மாணவனின் மேல் அக்கறை கொண்ட குரு சேரன்.

அதே போல நடிகர் திலகத்தின் டிஜிட்டல் கர்ணன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் கர்ணன் வெளியீட்டு விழாவில் அவர் பேசிய உணர்வுபூர்வமான யுடியூபில் செம ஹிட். சிவாஜியின் மாஸ்டர் பீஸ் கர்ணன். அதனை நோக்கி, இன்றைய தலைமுறையினர் சிலபேரையாவது தனது பேச்சால் கவர்ந்து இழுத்திருக்கிறார். வரும் வாரத்தில் கர்ணன் டிஜிட்டல் திரையில் கர்ஜிக்கப்போகிறான். நிச்சயம் ஒரு ஓபனிங் இருக்கும். நான் குடும்பத்துடன் செல்லப் போகிறேன். அதற்கு முக்கியக் காரணம் சிவாஜி மட்டுமல்ல, சிவாஜி வெறி பிடித்த இரசிகன் சேரன்.

தற்போது காயம் என்ற திரைப்படத்தை தானே வெளியிடுகிறார். காயம், சென்ற வருடம் வெங்காயம் என்ற பெயரில் வெளியான படம். வழக்கமாக கொஞ்சம் சுமாராக இருந்தால் கூட குதறி எடுத்துவிடும் ஆன் லைன் விமர்சகர்கள் கூட, நன்றாக இருக்கிறது என்று பாராட்டிய படம். ஆனால் விளம்பர வெளிச்சம் இல்லாமல் வெளியானதால், படம் நன்றாக இருந்தும் இரசிகர்களைச் சென்றடையவில்லை.

தற்போது காயம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள படம்தான், வெங்காயம். அந்தப் படத்தின் இயக்குனர்தான் சங்ககிரி ராஜ்குமார். அவரை நான் கேபிள் சங்கர் எழுதிய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்தேன். இயக்குனர் மீரா கதிரவனும், அவரும் சிறப்பு விருந்தினர்கள்.

‘நான் இந்தப் புத்தகத்தை இன்னும் வாசிக்கவில்லை. எனவே எனக்கு புத்தகம் பற்றிய கருத்து இல்லை. ஆனால் புத்தகம் வெற்றியடைய வாழ்த்துகள்‘ என்று சுருக்கமாகப் பேசி, ஒரு நேர்மையான மனிதனாக இன்னமும் என் மனதிற்குள்ளேயே இருக்கிறார்.

உண்மையும் நேர்மையும் எப்போதும் நிராகரிக்கப்படுவதில்லை. இனி அவ்வளவுதான் என்று சினிமா உலகம் மறந்திருந்த அவருடைய வெங்காயம், இன்று மீண்டும் தமிழ் சினிமா இரசிகர்களின் பார்வைக்கு வந்திருக்கிறது.

இன்று ஃபேஸ்புக்கில் படத்தின் புதிய டிரையலரைப் பார்த்தேன். இன்றைய தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி இயக்குனர்களும், மிகப்பெரிய ஜாம்பவான்களும், சங்ககிரி ராஜ்குமார் என்ற எளிய மனிதனின் சினிமாவைப் பற்றி புகழ்ந்து பேசுவதைக் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. காலம் மறந்து போகவிருந்த ஒரு நல்ல திரைப்படம் மீண்டும் உயிர்பெற்று, இன்று புகழ் வெளிச்சத்தில் இருக்கக் காரணம், ஒரு நல்ல மனிதன் சேரன்.

காயம் நல்லது! அது தந்த நிராகரிப்பு வலிதான் இன்று இத்தனை ஆதரவை பெற்றுத் தந்திருக்கிறது.

முதல் படம் தயாரிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் படப்பிடிப்பு சாதனங்களை வாடகைக்கு விட வேண்டும் என்று இயக்குனர் ஜனநாதன் கூறியிருந்ததாக, ஒரு பத்திரிக்கை குறிப்பை வாசித்தேன். டிஜிட்டல் யுகத்தில் சினிமா புதிய அவதாரம் எடுத்தாலும், அது சேரன், ஜனநாதன் போன்ற அக்கறை உள்ளவர்களால்தான் தாக்குப்பிடிக்கிறது.

நற் குணங்கள் உடையோர் நல்ல படைப்புகளையே தருவார்கள். அவர்களையும், அவர்களது படைப்புகளையும் ஆதரிப்போம்!


Sunday, March 11, 2012

அரவான் - விமர்சனம்


வசந்தபாலன் ஒரு ஒரிஜினல் படைப்பாளி. அரவான் பார்க்கிறவரை அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அவரும் ஆங்கிலப் படங்களின் டிவிடிக்களைப் பார்த்து, அவற்றில் உள்ள நல்ல காட்சிகளை தமிழாக்கம் செய்வார் என்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

அவர் வெயில் படத்தின் திரைக்கதையை உணர்வுப்பூர்வமாக கண்களில் நீர் வழிய விவரித்ததை நேரில் கேட்டிருக்கிறேன். கதாபாத்திரங்களை உயிருள்ளவர்கள் போல நம்பி அவர்களுடன் ஒன்றக் கூடியவர். ஆனால் அரவானில் அவர் கதாபாத்திரங்களுடன் ஒன்றியதைவிட பிரமாண்டம், கிராபிக்ஸ், பீரியட் ஃபிலிம், டிஜிட்டல் சினிமா என்று டெக்னிகல் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் அதிகம் ஒன்றிவிட்டார் எனத் தோன்றுகிறது.


அண்ணா சாலை வழியாக சத்யம் எஸ்கேப்புக்குள் நுழைய முற்படுபவர்கள், நைட் ஷோவுக்கு சாயங்காலமே புறப்பட்டுவிடுவது நல்லது. திக்குத் தெரியாமல் திரியும் திரைக்கதை போல, தியேட்டரின் நுழை வாயிலைத் தேடி (மெட்ரோ ரயிலுக்கு வழிவிட்டு) கிட்டத்தட்ட 300 யு டர்ன்கள் அடிக்க வேண்டியதிருக்கிறது. ஆனால் நீங்கள் எவ்வளவு தாமதமாகப் போனாலும் ஃபிங்கர் சிப்ஸ் மொறு மொறுவென்று சூடாகக் கிடைக்கிறது என்பதும், படம் ஆரம்பித்துவிட்டாலும், சென்னை டிராபிக் ஜாம் போல, நமக்காக அதே இடத்தில் நகராமல் நின்று கொண்டிருக்கிறது என்பதும் முதல் பாதியின் மைனஸ்.


கதைக் களமும், கதையும் அருமை. ஆனால் படத்தில் ஓடி ஒளியும் கதாநாயகனைப் போல,  திரைக்கதையும் ஓடி ஒளிந்துவிட்டது.


எதைச் சொன்னாலும், நல்லதையும் சொல்ல வேண்டும் என்பதால், பண்டைத் தமிழர்களை பீட்ஸா தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த முயன்றுள்ள பாலை படத்துக்கு ஒரு சபாஷ்! அடடா பாலை என்று சொல்லிவிட்டேனா...! பரவாயில்லை.... கிட்டத்தட்ட அதே சாயலில் வெளியாகியுள்ள அரவான் படத்துக்கும் அதே சபாஷை பாதியாக்கி பகிர்ந்து கொடுக்கிறேன்.

இரு படங்களும் முழுக்க முழுக்க டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தயாரான படங்கள் என்பதில் ஒற்றுமை துவங்குகிறது. பண்டைய தமிழர்களைப் பற்றி சொல்வதற்கு எவ்வளவோ இருக்க, அவர்கள் களவாடியதையும், சண்டையிட்டுக் கொண்டதையும் மட்டுமே சொன்னதில் ஒற்றுமை தொடர்கிறது. அப்புறம் (ஏதோ ஃபேஷன் ஷோவில் பிடித்துக் கொண்டு வந்தது போலத் தோன்றும்) கதை நாயகிகளை தேர்வு செய்த விஷயத்தால் இரண்டு படங்களையும் ஒப்பிடுவதை தவிர்க்கவே முடியவில்லை. மிக முக்கியமாக சுருக்கமாக ஒன்றரை மணி நேரத்தில் எடுக்க வேண்டியதை, இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக நீட்டி முழக்கி அலுப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பசுபதி நன்றாக நடித்திருக்கிறார். அவருடைய தியேட்டர் அனுபவத்தை கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அவருக்கு இதெல்லாம் போதாது. ஆதிக்கு இது புது அனுபவமாக இருந்திருக்கும். மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது புரிகிறது. எக்கச்சக்க ஸ்கோப் இருந்தும் அதிகமாக சோபிக்கவில்லை. காரணம் அவருக்கு பெரும்பாலும் அழுத்தமற்ற காட்சியமைப்புகள். படம் முழுக்க வரும் நாயகியை விட, நண்பனின் மனைவியாக வரும் பெண்ணும்,  கவர்ச்சிப் பெண்மணிகளும் அதிகம் நிற்கிறார்கள். கோடம்பாக்கத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அலைபாய்ந்து கொண்டிருக்கும் பரத்துக்கு அரவான் சரியான பயிற்சிப் பட்டறை! அஞ்சலி தேவையற்ற தேர்வு, வீணடிக்கப்பட்டிருக்கிறார்.


எங்களுடன் படம் பார்த்த சொற்ப இரசிகர்களில் பாதிப்பேர், படத்தில் நடித்த யாருக்கோ நண்பர்கள் போலிருக்கிறது. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கை தட்டிக் கொண்டிருந்தார்கள். பின்னர் அலுத்துப் போய் அவர்களே கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அவர்களால் பாப்கார்ன் செம சேல்ஸ். பக்கெட் பக்கெட்டாக காலி செய்தார்கள். படம் சுவாரசியமின்றி தொய்யும்போதெல்லாம், இவர்களைத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.


எனது நண்பர் விவேக் நாராயண் ஒரு பாடலில், சீர்காழி சிவசிதம்பரத்துடன் இணைந்து பாடியிருக்கிறார். பாடல் சுமார் என்றாலும், (அரவான் அரவான் கோரஸ்) ஏதோ முஸ்லீம் பாடல் போல ஒலிக்கிறது. கதாநாயகி தேர்வைப் போலவே, கார்த்திக்கை இசையமைப்பாளராக்கியதும் ராங் சாய்ஸ். நிலா பாடலில் வரும் கிராபிக்ஸை எட்டாங்கிளாஸ் படிக்கும் மாணவர்களே ஃபிளாஷில் செய்துவிடுவார்கள். படு குழந்தைத் தனமாக இருந்தது!

சிலுக்கு சீஸன், பழி வாங்கும் சீஸன் போல இது தமிழ் உணர்வு சீஸன் போலிருக்கிறது. பாலை, ஏழாம் அறிவு, அரவான் என்று தொடர் தமிழ் உணர்வுத் தாக்குதல்கள் கொஞ்சம் கிலியைத் தருகிறது. சந்தோஷமாக இருந்தாலும், அரை குறை திரைக் கதைகள் இம்சிக்கின்றன.

மகா பாரத யுத்தத்தில் பாண்டவர்கள் வெல்ல வேண்டும் என்பதற்காக, தன்னைத் தானே பலி கொடுத்துக் கொண்டவனின் பெயர் அரவான். வசந்தபாலனின் நாயகன், இரு ஊர்களின் பகை தீர வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்கிறான்.

மரண தண்டனை அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. இனிமேல் இருக்கக் கூடாது என்ற டைட்டில் கார்டுடன் படம் முடிவடைகிறது.

ஆனால் படம் இந்த டைட்டில் கார்டில் ஆரம்பித்து, ஆதி கழுத்தை வெட்டிக் கொள்ளும் முன் ஃபிளாஷ் பேக்கில் கதை நகர்ந்திருக்க வேண்டும்.

காவல்கோட்டம் புத்தகத்தின் இடையில் வந்து போகும் சிறுகதைதான் அரவான் திரைக்கதை என்று வசந்தபாலன் சொல்லியிருந்தார். அரவான் படம் முழுவதுமே ஒரு இடைச் செருகலை வலிந்து இழுத்தது போலத்தான் இருக்கிறது.

டியர் வசந்தபாலன்,
இனி நாவல்களை முழுவதுமாக வாசியுங்கள். எங்களைப் போல பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஆங்கிலப்பட டிவிடிக்களை பார்த்துவிட்டு திரைக்கதை எழுத ஆரம்பிக்காதீர்கள். நீங்கள் சுயமாகவே சிந்தித்து நல்ல படம் எடுக்கக்கூடியவர் என்கிற அபார நம்பிக்கையால் இதை உரிமையுடன் சொல்கிறேன்.

(அவர் எந்தெந்த படங்களின் டிவிடிக்களை பார்த்து அரவானில் காட்சியமைத்திருக்கிறார் என்பதை, வசந்தபாலனை விமர்சிக்க நேர்ந்த  வருத்தத்துடன், இதை வாசிக்கிற உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்)

இதே திறமையான டீம், இன்னும் நல்ல திரைக்கதையுடன் மீண்டும் களத்துக்கு வந்து வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.

Monday, December 12, 2011

ரஜினி - (அனைவருக்கும் பிடித்த) முரண்பாடுகளின் மூட்டை!

எனக்கு குளிர் பிடிக்கும், இசை பிடிக்கும், நீலம் பிடிக்கும், பறவைகள் பிடிக்கும், குழந்தைகள் பிடிக்கும் என்பது போல, இரஜினியையும் பிடிக்கும்.

30 வருடங்களாக, இந்த மனிதன் நடித்த படங்களும், செய்திகளும் எனக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சில நேரம் சே.. இதென்ன தனி மனித நேசிப்பு என்று அறிவு ஒதுக்கித் தள்ள முயற்சித்தாலும், மீண்டும் ரஜினி என்ற பெயர் காந்தமாக ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.

 டிவி, ரேடியோ, பத்திரிகைகள் என ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு மிகை பிம்பம் என்று விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் 30 வருடங்களுக்கு மேலாக ஒரு பிம்பம் அப்படியே நிலைத்து நிற்பதும், மேலும் விசுவரூபம் எடுப்பதும், ஒதுக்கித் தள்ள நினைப்பவர்களையும், அது பற்றி தொடர்ந்து பேச வைக்கிறது.

ரஜினி நல்ல நடிகரா? ரஜினி மோசமான நடிகரா? ரஜினி நல்ல மனிதனா? ரஜினி கெட்ட மனிதனா? ரஜினிக்கு அரசியல் ஆசை இருக்கிறதா? ரஜினிக்கு அரசியல் ஆசை இல்லையா? ரஜனி பழைய தலைமுறையா? ரஜினி புதிய தலைமுறையா? ரஜினி லேட்டா? ரஜினி லேட்டஸ்டா?

நீங்கள் இதில் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் என் பதில் ஆம் என்பதுதான். ரஜினி என்கிற பலமான பிரமாண்ட பிம்பத்தை இரசிக்கிறவர்கள், அவருடைய முரண்பாடுகள் மிக்க நிஜ வாழ்வையும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் விசித்திரம்.

பாபாவின் தோல்வியும், எந்திரனின் வெற்றியும் ஒரே அளவு பரபரப்பாகிறது. புகை, குடி என்ற அவரின் குறையும், ஆன்மீகம், யோகா என்ற ஒழுக்கமும், ஒரே விகிதத்தில் ஏற்கப்படுகிறது.

பலமும் பலவீனமும் கலந்த அவர், முரண்பாடுகளின் மூட்டை. ஆனாலும் அவரைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சுட்டி டிவி குழந்தைகள் முதல் என்டிடிவி பெரிசுகள் வரை, எல்லோரையும் ஈர்க்கிறார்.

ஏன் என்று காரணம் தேடுவதை விட, இரசிப்பது எளிதாக இருக்கிறது. அதனால் தான் நான் ரஜினி இரசிகனாக இருக்கிறேன்.

ஹேப்பி பர்த்டே தலைவா... உங்க அடுத்த படம் எப்போ?
(இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இதே கேள்விதான்)

Saturday, December 10, 2011

ராஜா-வாலி-மனசு-இசை

இரண்டு மாதங்களுக்கு முன்பு, நண்பர் ஒருவர் டிஸ்கவரி புக் பேலசுக்கு வா என்றார். வந்தேன். ஆனால் அவர் வரவில்லை. அரை மணி காத்திருந்து, ஒரு டீ குடித்து வீடு திரும்ப முடிவெடுத்தபோது,. வணக்கம் தலைவரே என்று நண்பர் கேபிள் சங்கரின் குரல். அவ்வளவுதான், தொடர்ந்து நான்ஸ்டாப் டாக்கிங். வாய் வலித்தாலும் பரவாயில்லை, கால் வலிக்கக் கூடாது என நண்பர் வேடியப்பன் (டி.பு.பே) சேர் போட்டுத் தரும்போது, எனக்கு சுரேகா அறிமுகமானார்.

ஊர் கதையெல்லாம் பேசி, சொந்தக் கதை பேசும்போது, கேபிள் பிளாகில் எழுதிய சிறுகதைகள் பற்றி பேச்சு வந்தது. குறிப்பாக பிரியாணி என்ற சிறு கதையைப் பற்றி சுரேகா மிகவும் சிலாகித்தார். ரொம்ப டச்சிங்கா இருந்தது, படிச்சவுடனே கண்ணு கலங்கிடுச்சு என்றார்.

சுரேகாவின் அந்த விமர்சனம் என் மனதிலேயே தங்கிவிட்டது. அதனால் கதையை படிக்காமலேயே அடுத்த குறும்படத்திற்கான கதை, கேபிளின் பிரியாணிதான் என்று தீர்மானித்தேன். அடுத்த சில நாட்களில் கேபிள் கதையை அனுப்பி வைக்க, நான் திரைக்கதை எழுதினேன். முக்கியமான கதாபாத்திரத்தில் டிவிட்டர் நண்பர்(@iamkarki) நடிக்க உற்சாகமான டீம் உருவானது. பிரியாணி என்ற டைட்டிலுடன் ஆரம்பித்த ரிகர்சல், மனசு என்ற புது டைட்டிலுடன் நிறைவுற்றது.

என்னைப் பொறத்தவரையில், நான் வேலைசெய்யும் புராஜக்டுகளில், இசைக்காக மிகவும் மெனக்கெடுவேன். சும்மா இசை, ஏதோ ஒரு டிராக் என்பதில் எனக்கு எப்போதும் திருப்தி இல்லை. நண்பர் இசையமைப்பளார் விவேக் நாராயணிடம் கதையை விவரித்தேன். (பிரியாணி)உணவு  இந்தக் கதையில் பிரதானமாக இருப்பதால், பசி தொடர்புடைய ஸ்ரீஇராகத்தில் பிண்ணனி இசை அமைத்து தந்தார். எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கிறதா என்று கேட்டுச் சொல்லுங்கள்.

தீம் மியூசிக் - 1 


தீம் மியூசிக் - 2



இசை உருவாகிற கணங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் இரண்டு மேதைகள் ஒன்றாக இணைகிறபோது பரவசம்... பரவசம்... பரவசம்.

காற்றில் வரும் கீதமே பாடலுக்கு உருகாதவர் இருக்க முடியாது. அது இளையராஜாவின் மாஸ்டர் பீஸ். அந்தப் பாடல் உருவாகும் விதத்தை கேளுங்கள். ராஜா மெட்டமைக்க, வாலி வார்த்தைகள் கொடுக்க, ஒரு குழந்தையின் ஜனனம் போல, விவரிக்க முடியாத ஒரு உன்னதத்தை உணர்வீர்கள்.

Thursday, December 1, 2011

பாலை - விமர்சனம்

இந்த வரியை எழுதிக் கொண்டிருக்கும்போது, பாலை திரைப்படம் திரையரங்குளை விட்டுப் போயிருக்கலாம்.

Canon 5D, 7D ஸ்டில் காமிராக்களை வைத்து, வசதி குறைவான லைட்டிங்கில் படம்பிடித்து, ஒரு லாப்டாப்பில் எடிட் செய்யப்பட்ட படம். அந்த வகையில் இந்தப் படத்துக்கும், அதன் குழுவினருக்கும் பாராட்டுகள்.

கதைக் களம் வித்தியாசமானது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என நிலங்கள் வகுக்கப்பட்டு தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் நடக்கும் கதை. முல்லை நிலத்தில் வசிக்கும் தமிழர்களை, வந்தேறிகள் பாலை நிலத்துக்கு துரத்தியடிக்கிறார்கள். ஓடி ஒளிந்த தமிழர்கள் போரிட்டு மீண்டும் முல்லை நிலத்தை வெல்கிறார்கள்.

அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரத்தில் சுருக்கமாக சொல்ல வேண்டியதை, இரண்டு மணி நேரத்துக்கு இழு இழு என்று இழுத்துவிட்டார்கள். சம்பவங்களோ, திருப்பங்களோ இல்லாத திரைக்கதை. படம் பார்த்து முடிக்கும்போது அசதியாக இருக்கிறது. மனதில் எதுவுமே தங்கவில்லை.

நாட்டிய நாடகத் தன்மை படம் முழுவதும் இழையோடுகிறது. வெள்ளைத் துண்டுகளும், மலர் கிரீடங்களும்தான் மேக்கப். சில நேரங்களில் ஃபேஷன் ஷோ ராம்ப் வாக் போல இருக்கிறது. குறிப்பாக காயாம்பூ என்கிற பெண் பாத்திரம் தோன்றும்போதெல்லாம் அப்படி இருக்கிறது. அந்தப் பெண் ஈர்க்கிறார். அவர் ஏற்கனவே இரு தமிழ் படங்களில் நடித்திருக்கிறாராமே..

மற்ற நடிகர்களில் எவருடைய முகமும் மனதில் தங்கவில்லை. எல்லோரும் ஒரே மாதிரி வந்து மறைகிறார்கள். தமிழர்களும், வந்தேறிகளும் மோதுகிற காட்சிகளில், இருவருமே ஒரே மாதிரி வெள்ளை துண்டுகளை அணிந்து கொண்டு, இருட்டிலும், மணல் புழுதியிலும் மோதும்போது, யார் யாரை தாக்குகிறார்கள் என்றே புரியவில்லை.

பழந் தமிழர்கள் போர் செய்வதைத் தவிர வேறெதுமே செய்யவில்லையா? இவ்வளவு நீளமான படத்தில் தமிழர்களின் மற்ற குணாதிசயங்களையும் கொஞ்சமாவது காட்டியிருக்கலாம்.

இந்தப் படம் தியேட்டர்களை விட்டு போகக் காரணம், சினிமாவை கையில் வைத்திருக்கும் பெரிய பண முதலைகள் என இயக்குனர் சில பேட்டிகளில் குற்றம்சாட்டியிருந்தார்.

சுவாரசியமில்லாத காட்சியமைப்புகள் நிறைந்த பாலையை எவ்வளவு பெரிய பண முதலையும் ஓட வைக்க முடியாது என்பதுதான் என் கருத்து.

வித்தியாசமான படங்கள் எல்லாம், நல்ல படங்கள் அல்ல. - உதாரணம் பாலை.

மயக்கம் என்ன - விமர்சனம்


கமலா தியேட்டரில் படத்தைப் போட்டுவிட்டு கதவுக்கு வெளியே கார்பெண்டருக்கு வேலை கொடுத்துவிடுகிறார்கள். DTS 5.1 ஐயும் மீறி அவர் ரம்பம் போடுகிற சத்தம் உள்ளே வருகிறது. இத்தனைக்கும் நைட் ஷோ!

நல்லவேளை படத்தில் ரம்பம் இல்லை. ஆனால் அக்மார்க் செல்வராகவன் பிராண்ட் கோடாலி இருக்கிறது. எடுத்தவுடன் நண்பனின் காதல் பிளக்கப்படுகிறது. நண்பனின் காதலி அறிமுகமான இரண்டாவது காட்சியிலிருந்தே, கொஞ்சம் கொஞ்சமாக எப்படி கதாநாயகனின் காதலியாகிறாள் என்பதுதான் (வழக்கமான) முதல்பாதி.

இரண்டாவது பாதியில் நாயகன் திடீர் மனநோயாளியாக மாறுவதும் வழக்கமான செல்வராகவன் ஸ்டைல்தான். ஒரே மாற்றமாக, இதில் காதலி, மனைவியாகி, நாயகனை அவன் இலட்சியம் நிறைவேற உதவுகிறாள்.

தனுஷ் நன்றாக நடித்திருக்கிறார். ரிச்சா கங்கோபாத்யாய அவருக்கு ஈடு கொடுக்கிறார். கொஞ்சம் தெலுங்கு வாடையடிக்கும் முகம் என்றாலும், பூசினாற் போல இருப்பதால் அம்மணி கோடம்பாக்கத்தில் ஒரு ரவுண்டு வருவார் என நினைக்கிறேன்.

படம் முழுவதும், மாற்றான் மனைவி மற்றும் மாற்றான் காதலியின் மேல் ஆசைப்படுபவர்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் நண்பர்களாகவும் இருக்கிறார்கள். திரும்பத் திரும்ப அனைத்துப் படங்களிலும் செல்வராகவனின் இதே பாத்திரப் படைப்புகளால், கோபமாகவும், சலிப்பாகவும் இருக்கிறது.

படம் பார்க்கும்போது, சில காட்சிகள் பிடிக்கிறது. அதுவும் வீடு வந்ததும் மறந்து விடுகிறது. படம் முழுக்க தனுஷ் தயங்கித் தயங்கி காதலிக்கிறார், தயங்கித் தயங்கி போட்டோகிராபராக முன்னேறுகிறார். மயக்கம் என்ன என்பதற்கு பதில் தயக்கம் என்ன என்று டைட்டில் வைத்திருக்கலாம்.

புது தயாரிப்பாளர் (மனைவி) என்பதால் செல்வராகவனிடம் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. அடுத்த படத்துக்கு புது உதவியாளர்களுடன் புதிய களத்தை அவர் தேடிப் பிடிக்க வேண்டும்.

மயக்கம் என்ன... மயக்கவில்லை!

Saturday, November 26, 2011

சிறு தயாரிப்பாளர்களுக்கு இனி சினிமாவில் இடமில்லை?

திரு. செந்தமிழன் இயக்கத்தில் பாலை என்கிற திரைப்படம் பற்றி கேள்விப்பட்டீர்களா? 

நான் டிரையலர் பார்த்தேன். நிச்சயம் ஈர்க்கிறது. இன்று புதிய தலைமுறை சானலில் படம் பற்றிய சிறு நிகழ்ச்சியை பார்த்தேன். படம் சிறப்பாக இருப்பதாக, பார்த்தவர்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூறினார்கள். ஆனால் படத்தை பெரும்பாலானவர்கள் பார்க்க முடியாத சூழல். 


காரணம் . . . பாலை இயக்குனர் திரு. செந்தமிழன் எழுதியுள்ள நீண்ட உருக்கமான கடிதத்தில் இருந்து சில வரிகளை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். 

‘முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம். ‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது. ‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே. ‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்.‘

அவருடைய கடிதம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

'தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை.

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன'


ஏன் இப்படி? சினிமா வெளியீடு ஒரு மிக முக்கியமான மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமிக்கும் Umbrella release பாணி, இந்திய சினிமா வியாபாரத்திலும் நுழைந்து விட்டது. ஆனால் இந்த வியாபார முறையினால், எல்லா சிறு தயாரிப்பாளர்களின் படங்களும் இப்படித்தான் சிக்கித் திணறுகின்றன.

வால்மார்ட் வந்தால் எப்படி சிறு வணிகர்கள் காணாமல் போவார்களோ, அது போல இந்த புதிய வியாபாரச் சூழலால் சிறு தயாரிப்பாளர்களும் காணாமல் போகத்தான் வேண்டுமா? இந்த சூழலை சிறு தயாரிப்பாளர்கள் எப்படி சமாளித்து எதிர்கொள்வது?

சினிமா வியாபார நுணுக்கம் அறிந்தவர்கள் கூறலாம்.

பாவம் சில்க் ஸ்மிதாக்கள்!

டர்ட்டி பிக்சர் என்ற ஹிந்திப் படத்தில் சில்க் ஸ்மிதாவாகத் தோன்றுகிறார், வித்யா பாலன்.

 மீடியாக்கள் சிலிர்த்து எழுந்துவிட்டன. சில்க் உயிருடன் இருந்தபோது, தாங்கள் எழுதிய வக்ரமான கிசுகிசுக்கள், கற்பனையாக புனைந்த செய்திகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, சில்க் ஸ்மிதா ஒரு பெண் என்றும் அவர் அப்பாவி என்றும் திடீரென கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்தக் கரிசனம் கூட சில்க்காக தோன்றுவது வித்யாபாலன் என்பதால்தான். சில்க்கின் வேடத்தில் அனுராதா ஒப்பந்தமாகி இருந்தால், மீடியாக்களின் ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதுதான் ஊடகங்களின் உண்மையான கோர முகம்.

சில்க் ஸ்மிதாவின் உயர்வுக்கும், புகழுக்கும், கடைசி காலத்தில் அவர் அனுபவித்த மன அழுத்தங்களுக்கும், மீடியாக்களின் பொறுப்பற்றதனத்துக்கும் பங்கு உண்டு.

இன்று காலை கூட அங்காடித் தெரு புகழ் அஞ்சலி ஒரு பத்திரிகையில் புலம்பியிருந்தார். சில வருடப் போராட்டங்களுக்குப் பின் இப்போதுதான் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. அதற்குள் நடிகர் ஜெய்யுடன் என்னை இணைத்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது எனக்கு வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

உற்று கவனியுங்கள், அஞ்சலியை புலம்ப வைத்திருப்பது நீங்களோ நானோ அல்ல. அகோரப் பசியுடன் திரியும் பொறுப்பற்ற பத்திரிகைகள்.

பாவம் சில்க் ஸ்மிதாக்கள்!