Showing posts with label illayaraja. Show all posts
Showing posts with label illayaraja. Show all posts

Friday, May 17, 2024

I don't know how to name it!

 

How to Name it?

இளையராஜா இசையில் 1986ம் ஆண்டு இந்த மேற்கத்திய - இந்தியக் கலப்பு (Western Indian Fusion) ஆல்பம் வெளியானது.
அதற்கு முன்பு எனக்குப் பரிச்சயமான ஒரே ஃபியூஷன் ஆல்பத்தின் பெயர் சக்தி. எல்.சங்கர், ஜாகிர் ஹுசைன், விக்கு வினாயக்ராம், மெக்லாஃலின் ஆகியோரின் வித்தியாசமான கூட்டணி. பக்கத்து வீட்டில் இருந்த மோகன கிருஷ்ணன் மாமாதான் எனக்கு இந்த உலகத்தின் ஜன்னல். புதிய சங்கதிகளை அவர்தான் அறிமுகப்படுத்துவார். 1973ல் உருவான சக்தி கூட்டணியின் இசையை அவர் வீட்டில்தான் இசைத்தட்டில் கேட்டேன். ஸ்டீரியோவில் மேற்கத்திய இசையுடன் கை கோர்த்துக் கொண்டு, கடமும், தபேலாவும் என்னை வியக்க வைத்தன. வித்தியாசமான அந்த இசைக்கலவை எனக்கு இசையின் புதிய பரிமாணங்களை அறிமுகம் செய்தது. அப்போதுதான் திரை இசைக்கு வெளியே உள்ள கலப்பிசை உலகிற்குள் முதல் முதலாக நுழைந்தேன்.
எம்.எஸ்.வியின் பாதிப்பு இல்லாத இளையராஜாவின் இசை என்னை பரவசப்படுத்திக் கொண்டிருந்த காலம் அது. சில பாடல்களில், இந்திய திரை இசை இரசிகர்கள் எவருமே அதற்கு முன் கேட்டிராத பரிசோதனைகளை அவர் முழு வீச்சுடன் நிகழ்த்திக் கொண்டிருந்தார். அதுவரை இந்தியத் திரை இசை தொட்டிருந்த திசைகளைக் கடந்து அவர் பயணப்படத் துவங்கியிருந்தார். அவருடைய இசை ஏன், எப்படி வித்தியாசமாக மாறிக் கொண்டிருக்கிறது எனப் புரியாமலேயே அதனை நான் உள்வாங்கிக் கொண்டிருந்த காலம் அது. முரட்டுக்காளை என்கிற மசாலாப் படத்தில் கூட ”எந்தப் பூவிலும் வாசம் உண்டு” என சிம்பொனி வாசமடிக்க வைத்தார்.
அப்போதுதான் 1986ல் How to Name it? என்கிற ஆல்பம் வெளியானது. உலக இசையில் புது வகை இசையாக ஒரு பியூஷன். தான் பண்ணைபுரத்துக்கான கலைஞன் மட்டுமல்ல, இவ்வுலகம் அனைத்துக்குமான கலைஞன் என இளையராஜா தன்னைத் தானே உணர்ந்து கொண்ட ஆல்பம் அது. அதற்குப் பின் இருவருடங்கள் கழித்து 1988ல் Nothing but Wind வெளியானது. மீண்டும் ஒரு இசை வீச்சு. ஸ்டீரியோ வாக்மேனை மாட்டிக் கொண்டு கல்லுப்பட்டியில் ஆள் நடமாட்டமே இல்லாத மிகப் பரந்த வெளியில் அந்த இசையைக்கேட்டு மயங்கிக் கிடந்த தருணங்கள் ஞாபகம் வருகிறது.
இளையராஜா அப்படியே தொடர்வார், சர்வதேச அரங்கில் தன் இசையை அரங்கேற்றுவார் என நினைத்தேன். ஆனால் ஏனோ தெரியவில்லை. மீண்டும் திரை இசைக்கே வந்துவிட்டார். மிகப் பெரிய இடை வெளி. திருவாசகத்தை சிம்பொனி வடிவத்தில் வெளியிட்டார். எவருமே நினைத்துப் பார்க்க முடியாத முயற்சி அது. அடுத்தடுத்து அவருடைய முதல் சிம்பொனி வெளியாகப்போவதாக செய்திகள் வந்தன. அவ்வப்போது அது குறித்த தகவல்கள் கசிந்து கொண்டே இருந்தன. ஆனால் இன்று வரை அந்த சிம்பொனி வெளிவரவே இல்லை.
அவருடைய மகள் பவதாரிணியின் பிரிவிற்குப் பிறகு அவர் புதிய இசையுடன் வருவார் என நான் அனுமானித்தேன். ஒரு மனிதன் தன் இயல்புக்குள் கரைந்து போவது துயரத்தை மறக்கும் வழி. இசைப்பதுதான் இளையராஜாவின் இயல்பு. நான் எதிர்பார்த்து போலவே தற்போது தனது புதிய சிம்பொனியைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பு இசை உலகில் புதிய ஆரவாரத்தை எழுப்பியிருக்கிறது. எல்லோரும் அந்த சிம்பொனிக்கா இப்போதே தயாராகிவிட்டார்கள்.
இளையராஜா இந்த மண்ணில் மேலும் ஒரு புதிய இசை அதிர்வை உருவாக்கத் தயாராகிவிட்டார். எண்பது வயதை தொட்டுவிட்ட ஒரு கலைஞனிடமிருந்து இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியிருப்பதே அதிசயம்தான்.
மடை திறந்து தாவப்போகும் அந்த சிம்பொனி இசையலைக்காக காத்திருக்கிறேன். என்னுடைய இந்த உணர்வுக்கு என்ன பெயரிடுவது எனத் தெரியவில்லை. I don’t know how to name it.

Wednesday, May 8, 2024

நீங்கள் கடைசியாக குயிலின் ஓசையைக் கேட்டது எப்போது?

எம்.எஸ்.வி-யிலிருந்து துவங்குகிறேன். அவருடைய பல பாடல்களை நான் ஏன் தவறவிட்டேன் என்பதற்கான விடை இளையராஜாவின் பாடல்களில் இருந்தது. இளையராஜாவின் பல பாடல்களை நான் ஏன் தவறவிட்டேன் என்பதற்கான விடை, ஏ.ஆர். இரகுமானின் பாடல்களில் இருந்தது. அதுபோலத்தான் நான் தற்போது தேடிக்கொண்டிருக்கின்ற விவரிக்க இயலாத ஒன்று யுவன், இமான், சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன், ஆனிரூத் போன்றோரிடம் அவ்வப்போது கிடைக்கிறது. இவர்கள் தொடர்ந்து என் தேடலை பூர்த்தி செய்யும்போது எம்.எஸ்.வி, இளையராஜா, ரகுமான் வரிசையில் எனது ஆதர்சமாக நிலைத்துவிடுவார்கள்.

எளிதாகச் சொன்னால் நான் எதைத் தேடுகிறோனோ அது மட்டுமே என் கவனம் பெறுகிறது. சாவியைத் தேடும்போது நான் தொட்டு நகர்த்தி வைக்கும் புத்தகம் கவனத்தில் பதிவதில்லை.
இதற்கு அர்த்தம் நான் புத்தகத்தை நிராகரிக்கிறேன் என்பதல்ல. அது போலத்தான் நான் தவறவிட்ட பாடல்களும். இரசனை என்பதே ஒரு பஸ் பயணம் போலத்தான். பயணத்தில் இடதுபக்கம் தெரிவதை இரசிக்கும்போது வலதுபக்கம் உள்ளவை கண்களில் படுவதில்லை. திரும்ப வரும்போது அவை கண்களில் படுவதற்கு வாய்ப்பு உண்டு. சமீபத்தில் நான் அப்படிக் கண்டுகொண்ட பாடல்களில் ஒன்றுதான் ஆகாயத்தாரை!
எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.இரகுமான் ஆகியோரின் சில பாடல்கள் இப்போதும் என் கவனத்தில் படாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் அவர்கள் எப்போதும் என் கவனத்தில் இருப்பார்கள்.

நீங்கள் கடைசியாக குயிலின் ஓசையைக் கேட்டது எப்போது?

Tuesday, May 7, 2024

ஆகாயத் தாமரை

ஆகாயத் தாமரை என்றொரு பாடல். இப்போதுதான் டிவிட்டரில் முதல் முறையாகக் கேட்டேன். ஜீ தமிழ் சரிகமபா நிகழ்ச்சியில் ஒரு ஆட்டோ டிரைவர் பாடினார். பாடி முடிக்கும்போது உணர்வு மிகுதியில் அழுதுவிட்டார். அப்போது ஒரிஜினல் குரலை ஒலிக்க விட்டார்கள். குரல் இளையராஜா!

முழுப்பாடலையும் இனிமேல்தான் தேடிக் கேட்கப் போகிறேன். சில ஆட்டோ டிரைவர்கள் தேர்ந்த மெலடி இரசிகர்களாக இருப்பார்கள். அவர்களின் பிளே லிஸ்டில் பெரும்பாலும் எளிமையான, ஆர்கெஸ்ட்ராவின் ஆதிக்கம் அதிகம் இல்லாத, இனிமையான பாடல்கள் இருக்கும். இந்தப்பாடலைக் கேட்டதும் ஒரு கணம் ஆட்டோவில் அமர்ந்து கேட்டது போலத் தோன்றியது.
மறக்காமல் சொல்லிவிடுகிறேன், வீரபாண்டி என்ற அந்த ஆட்டோ டிரைவருக்கு நல்ல குரல்.

Friday, April 19, 2024

இளையராஜா கதை - இம்தியாஸ் அலி இயக்கத்தில் , ஏ.ஆர் இரகுமான் இசையில்

 இளையராஜா படத்தை இயக்க நான் இம்தியாஸ் அலியை பரிந்துரைக்கிறேன். இசை ஏ.ஆர்.இரகுமானாக இருக்க வேண்டும்.

இன்று சம்கீலா படம் பார்த்தேன். படம் பார்த்தபின் இதனை சொல்லத் தோன்றியது. பஞ்சாப் மாநிலத்தில் மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு இசைக்கலைஞனைப் பற்றிய கதை இது. அவனுடைய வாழ்வை மிகவும் நெருக்கத்தில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வை படம் ஏற்படுத்துகிறது.

தன் மண்ணின் மைந்தனை, ஏன் ஒரு சமூகம் உச்சி முகர்கிறது என்பதையும், அதே சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஏன் அவனை நிராகரிக்கிறார்கள் என்பதையும் மிக நுணுக்கமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இப்படம் விவரிக்கிறது. அவனுடைய ஏற்றத்தை எட்டி நின்று பார்க்கும் இன்னொரு சமூகம் அவன் தடுமாறும்போது அவனை எப்படி தங்கள் சொல் கேட்பவனாக மாற்ற வலை வீசுகிறது என்பதையும் படம் தொட்டுக் காண்பிக்கிறது.

சம்கீலாவின் நிஜப் பாடல்கள் படம் நெடுக வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை நிஜ காட்சிகளுடன், திரைக்காட்சிகளை இணைத்து காட்டிய விதம் அற்புதம்.

ஏ.ஆர்.இரகுமான் சம்கீலா பற்றி


ய பாடலையும், அவனுடைய வாழ்வின் முக்கிய தருணங்களுக்கான பாடல்களையும் இப்படத்தில் இசைத்திருக்கிறார். இறுதிக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும், இசையும் மனதை நெகிழ வைத்துவிட்டன.

இந்த மண்ணின் ஈரத்தை சுவாசித்துக் கொண்டும், இந்த மண்ணுக்கான ஈரத்தை தந்து கொண்டும் இருக்கும் இளையராஜாவின் வாழ்வை, அவரைச் சுற்றியுள்ள சமூக அரசியலுடன் பார்ப்பதற்கு, ஆழமான பார்வையுள்ள ஒரு எழுத்து தேவை. அந்த எழுத்தும், அதை திரைக்கு கடத்தும் திறனும் இம்தியாஸ் அலியிடம் இருக்கிறது. ராக்ஸ்டார் உள்ளிட்ட அவருடைய முந்தைய படங்களே இதற்கு சாட்சி!


இளையராஜாவின் கதையை எத்தனையோ விதங்களில் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அவருடைய வாழ்வு பெரு வாழ்வு. அவ்வாழ்வின் ஒரு துளியை அருண்மாதேஸ்வரன் முதல் கதையாக இயக்கட்டும், அடுத்த இளையராஜா கதையை இம்தியாஸ் அலி, ஏ.ஆர் இரகுமான் இசையில் இயக்கட்டும். இது என் விருப்பம்.

ISR Selvakumar