Showing posts with label arrahman. Show all posts
Showing posts with label arrahman. Show all posts

Monday, June 3, 2024

இரகுமானுக்கு அப்புறம் நீதான்டா!

இந்தியன்-2 பாடல்கள்!
அனிரூத் இரசிகர்கள் கொஞ்சம் தயக்கமாகத்தான் பாடல்களை வரவேற்றிருக்கிறார்கள்.
ஏ.ஆர்.இரகுமான் இரசிகர்களில் பலர் இது இந்தியன்-1 போல இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இளையராஜா இரசிகர்கள் இதை கேட்டிருப்பார்களா எனத் தெரியவில்லை.
தமிழ் சினிமா பாடல்களின் இரசிகர்கள் என இப்போது பொத்தாம் பொதுவாக குறிப்பிட முடியவில்லை. அதனால் இப்படி தனித்தனியாக குறிப்பிடுகிறேன்.
ஷங்கருக்கு ஹாரிஸ் ஜெயராஜ் அளித்த பாடல்களும் சூப்பர் ஹிட் என்றாலும், இருவரின் இரசனைக்கும் மெல்லிய அளவில் ஒட்டாமை இருந்தது போலிருந்தது. ஆனால் ஆனிரூத் ஷங்கரின் இரசனைக்கு பிசகில்லாமல் மாறிவிட்டார். தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் இருந்து விலகி, இயக்குநருடன் பேசிப்பேசி பாடல்களை உருவாக்கும் பாணிக்கு மாறியிருக்கிறார் எனத் தோன்றுகிறது. இந்தியன் -2 பாடல்களில் ஷங்கரும் இருக்கிறார், ஆனிரூத்தும் தெரிகிறார் என்பதுதான் சிறப்பு.
ஆனிரூத் மாஸ் பாடல்களுக்குதான் லாயக்கு, அவருக்கு உணர்வுப்பூர்வமாக இசையமைக்கத் தெரியாது என்கிற இமேஜ், இந்தியன்-2 விலிருந்து மாறிவிடும். படம் வெளியாகி காட்சிகளுடன் பார்க்கும்போது இதுவரை ஆனிரூத்தை ஏற்காதவர்களும், இரசிப்பார்கள். ஆனிரூத் இப்படத்திலிருந்து இன்னும் புதிதாக மாறுவார்.
ஆடியோ அறிமுக விழாவில் இரகுமானுக்கு அப்புறம் எவன்டா என்றார் ஆனிரூத். நீதான்டா என்கிறேன் நான். சியர்ஸ் ஆனிரூத்!
Indian 2 is Anirudh 2

 

Wednesday, May 8, 2024

நீங்கள் கடைசியாக குயிலின் ஓசையைக் கேட்டது எப்போது?

எம்.எஸ்.வி-யிலிருந்து துவங்குகிறேன். அவருடைய பல பாடல்களை நான் ஏன் தவறவிட்டேன் என்பதற்கான விடை இளையராஜாவின் பாடல்களில் இருந்தது. இளையராஜாவின் பல பாடல்களை நான் ஏன் தவறவிட்டேன் என்பதற்கான விடை, ஏ.ஆர். இரகுமானின் பாடல்களில் இருந்தது. அதுபோலத்தான் நான் தற்போது தேடிக்கொண்டிருக்கின்ற விவரிக்க இயலாத ஒன்று யுவன், இமான், சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன், ஆனிரூத் போன்றோரிடம் அவ்வப்போது கிடைக்கிறது. இவர்கள் தொடர்ந்து என் தேடலை பூர்த்தி செய்யும்போது எம்.எஸ்.வி, இளையராஜா, ரகுமான் வரிசையில் எனது ஆதர்சமாக நிலைத்துவிடுவார்கள்.

எளிதாகச் சொன்னால் நான் எதைத் தேடுகிறோனோ அது மட்டுமே என் கவனம் பெறுகிறது. சாவியைத் தேடும்போது நான் தொட்டு நகர்த்தி வைக்கும் புத்தகம் கவனத்தில் பதிவதில்லை.
இதற்கு அர்த்தம் நான் புத்தகத்தை நிராகரிக்கிறேன் என்பதல்ல. அது போலத்தான் நான் தவறவிட்ட பாடல்களும். இரசனை என்பதே ஒரு பஸ் பயணம் போலத்தான். பயணத்தில் இடதுபக்கம் தெரிவதை இரசிக்கும்போது வலதுபக்கம் உள்ளவை கண்களில் படுவதில்லை. திரும்ப வரும்போது அவை கண்களில் படுவதற்கு வாய்ப்பு உண்டு. சமீபத்தில் நான் அப்படிக் கண்டுகொண்ட பாடல்களில் ஒன்றுதான் ஆகாயத்தாரை!
எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.இரகுமான் ஆகியோரின் சில பாடல்கள் இப்போதும் என் கவனத்தில் படாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் அவர்கள் எப்போதும் என் கவனத்தில் இருப்பார்கள்.

நீங்கள் கடைசியாக குயிலின் ஓசையைக் கேட்டது எப்போது?

Thursday, April 25, 2024

ஏ.ஆர்.இரகுமான் - டெய்லர் ஸ்விஃப்ட் கூட்டணி

 பத்து வருடங்களாக டிரெண்டிங்கில் இருக்கும் கூட்டணி!

”Kun faya Kun பாடலைக்கேட்டதிலிருந்து ஏ.ஆர்.இரகுமானை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்”, என்று டெய்லர் ஸ்விஃப்ட் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். நான் டெய்லர் ஸ்விஃப்ட் பாடல்களை தேடிக்கேட்டது அந்த (2014) பேட்டிக்குப்பின்னர்தான்.
டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை வாழ்க்கை மைக்கேல் ஜாக்சனின் இசை வாழ்க்கையைப் போல தனித்துவமானது. அவருக்காக இசையமைக்க நானும் ஆர்வமாக இருக்கிறேன் என்று ஏ.ஆர்.இரகுமான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு (2024) ஒரு பேட்டியில் கூறினார்.
எனது டீன் ஏஜ் பருவத்தை ஆக்கிரமித்தவர் மைக்கேல் ஜாக்சன். இப்போதும் அவர் ஏற்படுத்திய அதிர்வுகள் அப்படியே இருக்கிறது. அவரும் ஏ.ஆர்.இரகுமானும் இணையப்போகிறார்கள் என்று செய்தி வெளியானபோது மிகவும் உற்சாகமடைந்தேன். ஆனால் மைக்கேல் ஜாக்சனின் மறைவால் அந்தக் கனவுக் கூட்டணி நிறைவேறவில்லை.
டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை மைக்கேல் ஜாக்சனைப்போல என்னை ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரின் இசையிலும் ”தன்னைக் கண்டடைவது” என்கிற தேடல் இருப்பதாகத் தோன்றும். இரகுமானின் பாடல்கள் பலவற்றிலும் இந்த தேடல் இருப்பதை கவனிக்கலாம். சமீபத்தில் அந்த தேடல் அதிகமாகியிருக்கிறது. அந்த வகையில் டெய்லர் ஸ்விஃப்ட் அவரை வசீகரித்திருக்கலாம்.
தற்போது டெய்லர் ஸ்விப்ட் #THETORTUEDPOETSDEPARTMENT என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார். அப்பாடலுக்கு வாழ்த்து தெரிவித்து ஏ.ஆர்.இரகுமான் ஒரு ட்வீட் செய்தார். அவ்வளவுதான் அவர்கள் இருவருடைய கூட்டணி அமைந்துவிட்டதாகவே இரசிகர்கள் கொண்டாடத் துவங்கிவிட்டார்கள்.
இந்தத் தருணத்தில் ஓகே கண்மணி படத்தில் வரும் ”மன மன மன மென்டல் மனதில்” பாடல் ஞாபகம் வருகிறது. அதில் துள்ளலாகப் பாடியிருக்கும் ஜோனிடா காந்தியின் குரலில் டெய்லர் ஸ்விஃப்டின் சாயல் இருக்கும்.
ஏ.ஆர்.இரகுமானின் இசையில் டெய்லர் ஸ்விப்ட் பாடப்போகும் பாடலுக்காக இப்போதிருந்தே காத்திருக்கிறேன்.



Saturday, April 20, 2024

ஜெய்ஹோ பாடலை முதலில் நான் பாடவில்லை - சுக்விந்தர் சிங்

 ஒவ்வொரு அரிசியிலும் அது யாருக்கானது என்று எழுதியிருக்கும் என்பார்கள். படைப்புகளுக்கான விருதுகளும் அப்படித்தான் எனக்கருதுகிறேன். ஜெய்ஹோ பாடலின்மேல் அது ஆஸ்கருக்கானது என எழுதப்பட்டிருந்ததோ என்னவோ!

ஜெய்ஹோ பாடல் எப்படிப் பிறந்தது, அது எந்தப்படத்துக்காக பதிவு செய்யப்பட்டது யாரோ பாடிய அந்தப் பாடலுக்கு தனது குரல் எப்படி வந்தது, ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக அது எப்படி தேர்வு செய்யப்பட்டது அது எப்படி ஆஸ்கர் சென்றது

இத்தனை கேள்விகளுக்கும் பதிலாக அப்பாடலைப்பாடிய சுக்விந்தர்சிங் கூறிய வீடியோ ஒன்று பார்த்தேன். சுவாரசியம்!

நான் குறிப்பிட்டுள்ள பகுதி வீடியோவில் 14.15 ல் துவங்குகிறது.

Friday, April 19, 2024

இளையராஜா கதை - இம்தியாஸ் அலி இயக்கத்தில் , ஏ.ஆர் இரகுமான் இசையில்

 இளையராஜா படத்தை இயக்க நான் இம்தியாஸ் அலியை பரிந்துரைக்கிறேன். இசை ஏ.ஆர்.இரகுமானாக இருக்க வேண்டும்.

இன்று சம்கீலா படம் பார்த்தேன். படம் பார்த்தபின் இதனை சொல்லத் தோன்றியது. பஞ்சாப் மாநிலத்தில் மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு இசைக்கலைஞனைப் பற்றிய கதை இது. அவனுடைய வாழ்வை மிகவும் நெருக்கத்தில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வை படம் ஏற்படுத்துகிறது.

தன் மண்ணின் மைந்தனை, ஏன் ஒரு சமூகம் உச்சி முகர்கிறது என்பதையும், அதே சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஏன் அவனை நிராகரிக்கிறார்கள் என்பதையும் மிக நுணுக்கமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இப்படம் விவரிக்கிறது. அவனுடைய ஏற்றத்தை எட்டி நின்று பார்க்கும் இன்னொரு சமூகம் அவன் தடுமாறும்போது அவனை எப்படி தங்கள் சொல் கேட்பவனாக மாற்ற வலை வீசுகிறது என்பதையும் படம் தொட்டுக் காண்பிக்கிறது.

சம்கீலாவின் நிஜப் பாடல்கள் படம் நெடுக வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை நிஜ காட்சிகளுடன், திரைக்காட்சிகளை இணைத்து காட்டிய விதம் அற்புதம்.

ஏ.ஆர்.இரகுமான் சம்கீலா பற்றி


ய பாடலையும், அவனுடைய வாழ்வின் முக்கிய தருணங்களுக்கான பாடல்களையும் இப்படத்தில் இசைத்திருக்கிறார். இறுதிக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும், இசையும் மனதை நெகிழ வைத்துவிட்டன.

இந்த மண்ணின் ஈரத்தை சுவாசித்துக் கொண்டும், இந்த மண்ணுக்கான ஈரத்தை தந்து கொண்டும் இருக்கும் இளையராஜாவின் வாழ்வை, அவரைச் சுற்றியுள்ள சமூக அரசியலுடன் பார்ப்பதற்கு, ஆழமான பார்வையுள்ள ஒரு எழுத்து தேவை. அந்த எழுத்தும், அதை திரைக்கு கடத்தும் திறனும் இம்தியாஸ் அலியிடம் இருக்கிறது. ராக்ஸ்டார் உள்ளிட்ட அவருடைய முந்தைய படங்களே இதற்கு சாட்சி!


இளையராஜாவின் கதையை எத்தனையோ விதங்களில் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அவருடைய வாழ்வு பெரு வாழ்வு. அவ்வாழ்வின் ஒரு துளியை அருண்மாதேஸ்வரன் முதல் கதையாக இயக்கட்டும், அடுத்த இளையராஜா கதையை இம்தியாஸ் அலி, ஏ.ஆர் இரகுமான் இசையில் இயக்கட்டும். இது என் விருப்பம்.

ISR Selvakumar

Saturday, April 13, 2024

காற்றின் இரைச்சல்களுக்கு நடுவில் ஒரு தம்பூராவைப்போல . . .

 

Istigfar !!!

முதன்முதலாக இந்தப் பாடலைக் கேட்டபோது, முற்றிலும் பரிட்சயமில்லாத வடிவம் என்னை திகைக்க வைத்தது. ஆனாலும் அறிமுகமில்லாத மொழியில் பாடலை நகர்த்திய தாள வாத்தியக் கருவியின் ஒலியைப் பிடித்துக் கொண்டு மெதுவாக பாடலுக்குள் நுழைந்தேன். பிரமாண்டமான சமுத்திரத்தின் கரையிலிருந்து ஆழத்தை அறியும் உணர்வுடன் பாடலை உள்வாங்கத் துவங்கினேன்.
காற்றின் இரைச்சல்களுக்கு நடுவில் ஒரு தம்பூராவைப்போல மனதை ஒருமுகப்படுத்தியது பாடல். அதே நேரம் அடுக்கடுக்கான குரல்களின் கீழ் அடுக்கில் பூமி புரள்வதுபோன்ற ஒரு அடியிசை மனதைப்பிசைந்தது. கரையிலிருந்த நான் திடீரென கடலின் ஆழத்துக்குள் உள்ளிழுக்கப்பட்டது போல உணர்ந்தேன்.
இனம் புரியாத பதற்றம், பதறாதே என ஒரு குரல், நீரில் முங்கும்போது கேட்கும் நசுங்கிய ஒலிகள், கூடவே நானிருக்கிறேன் என நம்மைக்காக்கும் ஒருவரின் கரம், கனத்த நிமிடங்களைக் கடந்த பின் நிகழும் ஆசுவாசம், இதழில் மறைந்து நிறையும் புன்னகை என்பது போன்ற கலவையான அனுபவம்.
ஒலி ஏற்படுத்தாத மணல் துகள் ஒன்று உருளுவது போல பாடல் அமைதியாக முடிவடைகிறது. அந்தக் கணத்தில் இசையும், இசைப்பவரும், அதை இரசிப்பவரும் என அனைவரும் ஒன்றுதான் என்கிற உணர்வு.
அன்பைக் கோருபவனுக்கு திரும்பவும் அன்பு கிடைக்குமா எனத் தெரியாது. ஆனால் அன்பைச் செலுத்துபவனின் மேல் அனைவரும் அன்பைப் பொழிவார்கள். உங்களுக்கு யார்மேலாவது கோபமிருந்தால் மன்னித்துவிடுங்கள். உங்களை இந்தப்பிரபஞ்சம் மன்னிக்கும்.
இன்று அதிகாலை மூன்று மணிக்கே எழுந்துவிட்டேன். அப்போது ஒலிக்கத் துவங்கிய பாடல் இன்னும் எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. எங்கிருந்து ஒலிக்கிறது என்றுதான் தெரியவில்லை. அதுதான் இந்தப் பாடலின் மகத்துவம்.
Istigfar என்றால் . . . உங்கள் அனுபவத்தைக் கொண்டு நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்.

Monday, January 22, 2024

க்வாஜா மேரே க்வாஜா

தூயவனை என்னைத்
துலக்க வழி தெரியாமல்
தூயவனே உன்னிடத்தில்
தொலைக்க வழி தேடுகிறேன்.
இறைவனிடம் ஒரு விவாதம் என்ற மு.மேத்தாவின் கவிதையில் இந்த வரிகள் உள்ளன. ஆழ்மனதை உசுப்பும் இந்த வரிகளுக்கு இணையான ஏ.ஆர்.இரகுமானின் பாடல் ஜோதா அக்பர் படத்தில் வரும்.
”க்வாஜா மேரே க்வாஜா” என்ற இந்தப் பாடலுக்கு எனக்கு இதுவரையில் அர்த்தம் தெரியாது. ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் விடைதெரியாத பல கேள்விகளுக்கு பதில் கிடைப்பதைப் போலிருக்கும். உடல்சோர்வும், மனச்சோர்வும் எட்டிப்பார்க்கும்போதெல்லாம் இந்தப் பாடலை என் மனது தானே பாடத் துவங்கிவிடும். அது நாள் முழுவதும் தொடரும், அடுத்த நாள் வரையிலும் கூட நீளும். இதயத்தையும், மனதையும் கழுவி புதிதாக்கிவிட்ட உணர்வு கிடைக்கும். ஒரு ஆன்ம பலம் கிடைக்கும்.
இன்று தொலைக்காட்சிகள் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களைக் காண்பித்துக் கொண்டிருந்தபோது நான் க்வாஜா மேரே க்வாஜா பாடலில் தான் நாள் முழுவதும் அமிழ்ந்திருந்தேன். இப்போதும் கூட ஏ.ஆர்.இரகுமானின் ஆர்மோனியம் எனக்குள் ஒலிக்கிறது.

இதில் அதிசயம் என்னவென்றால் இன்று நான் முதலில் கேட்ட பாடல் கர்ணன் படத்தில் வரும் ”உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது” பாடல்தான். விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையில் கண்ணதாசன் எழுதியுள்ள அந்தப் பாடல் கடவுளின் அருகில் அமர்ந்து கடவுளுக்காகவே உருவாக்கப்பட்டது போலிருக்கும். கடவுளுக்கே அமைதி வேண்டுமென்றால் அந்தப்பாடலைத்தான் கேட்பார்.
அந்தப்பாடலில் கரைந்து கொண்டிருந்த நான் க்வாஜா மேரா க்வாஜாவுக்கு எப்போது மாறினேன் எனத் தெரியவில்லை. இரு பாடல்களுமே எனக்கு ஒரே உணர்வைத்தான் தருகின்றன. இன்றைய இரவு இவ்விரு பாடல்களுடன் நீளும். அக்பரும், கர்ணனும் துணைக்கு இருப்பார்கள், ஒருவேளை கடவுளும் இருக்கலாம்.

ஏ.ஆர்.இரகுமான் மயக்குகிறார்! ஏ புள்ள!

ஏ புள்ள கக்களத்தி!


வாலி, வைரமுத்துவிற்குப் பின், கபிலன்தான் ஏ.ஆர்.இரகுமானுக்கு சரியான கூட்டணியாக இருப்பார் எனத் தோன்றுகி
றது.
எம்.எஸ்.வியின் இசையில் தபேலா பயணிக்கும் திசையை கணிக்கவே முடியாது. துள்ளி விளையாடும், உதாரணத்திற்கு நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் பாரதி கண்ணம்மா பாடல்.
எம்.எஸ்.விக்கு தபேலா போல ஏ.ஆர்.இரகுமானுக்கு தவில். அவர் தவிலை கையாளும் விதம் முற்றிலும் புதுமை. லால்சலாம் படத்திற்காக அவர் இசையமைத்துள்ள ஏ புள்ள பாடலில் தவில் தனி நடை நடக்கிறது. மெட்டைக்கேட்டுவிட்டு தன்போக்கில் நடனமாடும் இளைஞனைப்போல தாவிக்குதிக்கிறது.
இரண்டு நாட்களில் குறைந்தபட்சம் 30 - 40 முறை கேட்டிருப்பேன். ஏ புள்ள மயக்குகிறது!

#MSV #ARRahman #AePulla #LalSalam #Tabela #Thavil

Monday, August 15, 2022

எனக்கு ஏன் இரகுமான் பாடல்களைப் பிடிக்கிறது?

நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு

தேனைத் தந்தா என்னவாகும்?
Rahman for all my moods. I think I'm in time sync with A.R.Rahman's music. I feel vibrations and deep emotions kindled with all his latest compositions.
கிழக்குச் சீமையிலே பாடல் வெளியானபோது, வாக்மேனில் கேசட்டைப் போட்டுவிட்டு வேலி காத்தான் செடிகள் அடர்ந்த கிரிக்கெட் மைதானத்தில் தனியாக அமர்ந்து இரசித்தேன். காற்றில் பறப்பதைப் போலிருந்தது. நேற்று வெந்து தணிந்தது காடு படத்தின் ”மறக்குமா நெஞ்சம்” பாடல் வெளியானபோதும், மொட்டை மாடியில் தனியனாக அமர்ந்து பாடலுக்குள் அமிழ்ந்தேன். எத்தனை முறை தொடர்ந்து பாடலைக் கேட்டேன் என்று கணக்கே இல்லை.
இதை வாசிக்கும் நீங்கள் தற்போதைய இரகுமான் பாடல்களை எப்படி இரசிக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. ஆனால் நான் முன்பு எப்போதையும் விட இரகுமானின் இசையுடன் மிக நெருக்கமாக உணர்கிறேன். அதற்குக் காரணமாக என் தற்போதைய மன ஓட்டம் மற்றும் தற்போதைய தேடல்களுக்கு இரகுமானின் இசை ஒரு வடிகாலாக இருக்கிறது எனக் கருதுகிறேன்.
எங்கு தொடங்கும்
எங்கு முடியும்
ஆற்றின் பயணம்!