Friday, February 19, 2010

கடற்கரையில் தமிழ் டிவிட்டர்கள் - 02

கதை, கவிதை என கற்பனை சமாச்சாரங்களை எழுதும்போது, நேற்று நிறுத்தி, அடுத்த மாதம் தொடரலாம். நாம் விரும்பும் எதையும் எழுதலாம். ஆனால் சந்திப்புகளை உடனே எழுதிவிட வேண்டும். இல்லையென்றால், மனைவியின் ”வரும்போது இதயம் நல்லெண்ணெய் வாங்கிட்டு வாங்கதான்” ஞாபகத்தில் மிதக்கிறது. சந்திப்பில் நடந்ததெல்லாம் மறந்து போகிறது. நேற்று கே.கே. நகர் முனுசாமி சாலை வீட்டுக்குப் பக்கம் என்பதால் @parisalkaaran புத்தக வெளியீட்டு விழாவிற்குப் போயிருந்தேன். போன ஞாயிற்றுக் கிழமை பீச்சில் சந்தித்த @athisha வாசலில் எதிர்ப்பட்டு, இந்த ஞாயிற்றுக் கிழமை நீங்கயாரு என்றார்?

இப்படி சில யாருக்களும், நடந்தது என்னக்களும், அப்புறம்களும் மனதில் கபடி ஆடும்போது, கடற்கரையில் தமிழ் டிவிட்டர்கள் - 02 வை எழுத ஆரம்பிக்கிறேன். முன் பின் பார்த்திராதவர்கள், பீச் போல பொதுவான இடத்தில் சந்திக்கும்போது, காந்தி சிலை அருகில் என்று சொன்னால் அங்கேயே நின்றுவிட வேண்டும். கால் வலி என மணலில் நகர்ந்தால் தாமதமாக வருபவர்களை மிஸ் பண்ணிவிடும் அபாயம் உள்ளது. டிவிட்டர்களுக்கென்று தனியாக அடையாளம் எதுவும் இல்லை. அதனால் மற்றவர்கள் வந்துவிட்டார்களா என்று நொடிக்கொரு முறை திரும்பிப் பார்க்கும்போது சுண்டல் பையன்கள், குதிரை சவாரி அழைப்பர்கள் தவிர மற்ற அனைவருமே டிவிட்டர்கள்போலத்தான் இருக்கிறார்கள். அரட்டை காத்திருத்தலாக மாறுவதை தவிர்க்க யாராவது ஒருவர் முன்வந்து தன் மொபைல் நம்பரை அனைவருக்கும் தந்து காந்தி சிலைக்கு முதலிலேயே வந்து காத்திருக்க வேண்டும். #twitter-meet-tips-01
 சந்திப்பின் முதல் பாகத்தில் டிவிட்டர்கள் சந்திப்பு பற்றி சில கேள்விகள் கேட்டிருந்தேன். யாரும் (டிவிட்டரில் கூட) பதில் சொல்லவில்லை. மீண்டும் பதிலை எதிர்பார்க்காமல் இன்னொரு கேள்வி.
டிவிட்டர் வந்தவுடன் பிளாக் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது என்கிறார்கள். ஒப்புக் கொள்கிறீர்களா?
பதில் எதுவாக இருந்தாலும் பதிலாக இருக்கட்டும், எதிர் கேள்வியாக இல்லாமல்.

”எங்கள நெருங்கி உட்கார சொல்லிட்டு நீங்க எங்க எஸ்கேப்பு”, என்று இடைவேளை முடிந்து திரும்பி வந்த @icarusprakashஐ  கலாய்த்தார் @njganesh. அவர் பதில் மேலேயே, மற்ற டிவிட்டர்கள் காந்தி சிலைக்கு அருகிலேயே நிற்பதாக @vickytamil கண்டுபிடித்து, அறிவித்து அவர்களை வரவேற்க, மற்ற டிவிட்டர்களும் வந்து சேர்ந்தார்கள்.  பெயிண்ட் பால் விளையாட்டில் மாறி மாறி எதிராளியின் மேல் பெயிணட் தெளிப்பதைப் போல, அவர்கள் வரும்போதே மாறி மாறி நாங்களும் அவர்களும் கிளிக்க ஆரம்பித்துவிட்டோம்.

கிளிக் முடிந்ததும் நிறைய புன்னகைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. சீனியர் என்று டிவிட்டரில் அன்போடு கலாய்க்கப்படும் @anbudan_bala ஜீனியர்கள் போல டி-ஷர்டில் இளமையாக வந்தார். டைரக்டர் எப்படி இருக்கீங்க? வசந்தபவன் மீட்டிங் மிஸ் ஆனதால, நான் முக்கியமா உங்களையும், @icarusprakashயும்தான் பார்க்க வந்தேன். @ommachi - @lakshmi தம்பதியினர் புன்னகைத்ததும், நிச்சயம் நீங்க வந்துடுவீங்கன்னு தெரியும் என்றார். . நாங்க வந்து ரொம்ப நேரமாச்சு. காந்தி சிலைன்னு சொன்னதும் அங்கேயே நின்னுட்டோம், என்று புகாராக இல்லாமல் தகவலாகச் சொன்னார் @spinesurgeon. போட்டோ எடுக்கும்போது, பார்த்து கிளார் அடிக்கும் என்றார் பளபள வழுக்கையுடன். ஆனால் டிவிட்டர் போட்டோவை விட நேரில் மிக மலர்ச்சியாக இருக்கிறார். @njganeshன் அதகளமான கைகுலுக்கலில், யாருக்காவது கைவலித்திருக்கும். @luckykrishna, @athisha மற்றும் @icarusprakash ஆகிய மூவரும் வலைப் பிரபலங்கள் என்பது, டிவிட்டர்கள் டீம்-2ன் ”ஓ..தெரியுமே” புன்னகையிலேயே புரிந்தது. இந்த அறிமுகங்களில் பெண்கள் எப்படி கலந்து கொண்டார்கள் என்பதை கவனிக்கவில்லை.

ரொம்பக் கூச்சமாக அறிமுகம் செய்து கொண்டவர் @madhankarky. கல்லூரியின் கடைசி பெல் வரை காத்திருந்து படித்து வந்த மாணவர் போல இருந்தார். @spinesurgeonக்கு இணையாக தலையில் பளபளா காட்டியவர் @rgokul. பென் டிரைவ் போல செதுக்கிய தாடியில் வசீகரமாகத்தான் இருந்தார். அனில்கும்ப்ளே போல தோற்றமளித்த @rajeshpadman பெர்முடாஸில் ஹாய் என்றார். பக்கத்துலயே வீடும் ஆஃபீசும் இருக்காம். தினசரி வாக்கிங் வருவது போல கேஷீவலாக வந்திருந்தார். எல்லா அறிமுகங்களையும் பொறுமையாக கிளிக் செய்து கொண்டிருந்த வெங்கட்டின் முகத்தில் தொடர்ந்து மென் சிரிப்பு, கையிலிருந்த காமிரா கிளிக்கிக் கொண்டே இருந்தது. ஆனால் இருவாரமாகியும் இன்னமும் அவரிடமிருந்து ஃபோட்டோக்கள் வரவில்லை.

எல்லோரும் அமர்ந்தவுடன் வட்டம் பெரிதானது. ஏற்பாடு செய்தவர்தான் வரவேற்புரை என்று @njganesh அறிவிக்க, ஐயய்யோ நான் இல்ல என்று @vickytamil நழுவப்பார்த்தார். பிறகு தைரியமாகி, பேச்செல்லாம் கிடையாது. சுய அறிமுகம் போதும் என்று தன் பெயரையும், டிவிட்டர் ஐடியையும் கூறினார், செல்வக்குமார் - @isr_selva, பிரகாஷ்-@icarusprakash, Dr.Bruno-@spinesurgeon என ஒவ்வொருவராகத் தொடர maddhankarky-@madhankarky என்றார் மதன். அவ்வளவுதான் அடுத்த வினாடி, ரெண்டாம் வாய்ப்பாடை தப்பாகச் சொன்ன மாணவனை மிரட்டும் வாத்தியார் போல, அப்படின்னா என்று @njganesh அவரை அதட்டினார். மதன் ஒரு கணம் ஜெர்க் ஆனாலும் பெயரும், ஐடியும் ஒன்றுதான் என்று நிதானமானார்.

ஒரு கேள்வி - பெயரையும், டிவிட்டர் ஐடியையும் சொன்னால் அதற்குப் பெயர் சுய அறிமுகமா?
பதில் சொல்வதற்கு முன் ஒரு விஷயம். முந்தைய வரிக்கும் இந்த வரிக்கும் இடையில் 72 மணி நேரம் இடைவெளி இருக்கிறது. இதற்கு மேல் தாமதித்தால் எல்லாம் மறந்து போகும் என்ற பயத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

அரட்டையின் ஒரு பகுதி, ஜெயமோகன் எப்படிங்க இவ்வளவு எழுதறார் என்று ஆச்சரியத்தில் ஆரம்பித்து, ஏன் எழுதறார் என்ற கேள்வியில் முடிந்தது. ஏன்னா மக்கள் கூட கிடைக்கிற Connectivityதான் என்று தீர்ப்பு வழங்கினார் @luckykrishna. அதனால என்ன யூஸ்? பணமும் கிடையாது என்று சந்தேகம் கிளப்பிய லாவண்யா, நீங்க ஏன் சாருவை ரொம்ப சப்போர்ட் பண்றீங்க என்று அதிஷாவை நோக்கி கேள்வியை வீசினார். ஏன்னா சின்ன வயசுல இருந்து எனக்கு அவரைத் தெரியும். வளர்ந்து அவரை மாதிரியே எல்லா மேட்டர்லயும் பெரிய ஆளா ஆகணும்னு எனக்கு ஒரு ஆசை இருந்தது, என்றார் அதிஷா. எல்லா மேட்டர்லயும்னா கட்டிங் மேட்டர்லயா என்றார் @icarusprakash.


ஆனா ஒண்ணுங்க வெறும் டெக்ஸ்ட் ஃபைல்லயே சர்வரை ஃபுல்லாக்கிய பெருமை ஜெயமோகனுக்குதான் என்றார் @njganesh. நீங்கதான் சர்வரை மெயின்டெயின் பண்றீங்களா என்று @rajeshpadman கேள்வி கேட்க, ஆமாம் என்றார். ஜெயமோகன் மாதிரி ஆளுங்க பக்கம்பக்கமா எழுதறாங்க ஆனா ஒரு பக்கத்துக்கு மேல புரியல, என்றவர் @vicktamil? இவங்கள்லாம் பரவால்ல, சிலபேர் தமிழ்லதான் எழுதுவேன், இங்கிலீஷ் வார்த்தையை தொடவே மாட்டேன்னு அடம்பிடிக்கிறதெல்லாம் கொஞ்சம் அதிகம் என்றார் @spinesurgeon. ஆமாம் என்ற ஆமோதிப்பு குரல்களுக்கிடையில் @TBCDயின் தமிழ்பிடிவாதம் கொஞ்சம் வறுபட்டது. Scanஐ சுகேன் என்பதும், Firefoxஐ நெருப்பு நரின்னும் சொல்றதெல்லாம் காமெடி என்று  யாரோ சொல்ல, சுஜாதாவே அப்படி எழுதியிருக்காருங்க என்று இன்னொரு யாரோ (@spinesurgeon அல்லது @anbudan_bala) சொன்னார்கள். அட அவர் நகைச்சுவைக்காக அப்படி எழுதியிருப்பாருங்க என்று நான் சொன்ன போது, @lakshmi 5வது முறையாக எழுந்து சென்று மொபைலில் பேசிவிட்டு வந்தார். ஜெயந்தியும், லாவண்யாவும் 3வது முறையாக தங்களுக்குள் எதற்க்காகவோ சிரித்தார்கள்.அதிஷாவும், @luckykrishnaவும் 4வது முறையாக நாங்க (கிழக்கு பதிப்பகம்) உலக சினிமாவுக்கு புறப்படணும் என்றார்கள். உடனே @spinesurgeon நீங்க போங்க, பின்னாலயே நானும் அரை மணியில வர்றேன் என்றார். இந்த சந்தடியில் திடீரென நமது முன் ஸ்வீட் பாக்ஸ். யாரு கொடுத்தது என்று நிமிர்ந்தால் பூர்ணகும்ப ஸ்வீட்ஸ் வழங்கியவர் நான்தான் என்ற புன்னகையுடன் @madhankarky.


ஸ்வீட் சாப்பிட்டு முடிந்த பின், நாங்க புறப்படறோம் என்று எழுந்துவிட்டார்கள் அதிஷாவும், @luckykrishnaவும். எல்லோரும் டாட்டா சொன்னபோது, ஒரு நிமிஷம் குரூப் போட்டோ எடுத்துக்கலாம் என்றவர் வெங்கட். சரி என்று ஆளாளுக்கு போஸ் கொடுக்க தயாராகி நிற்க காமிராவுடன் நின்றவர்கள் வெங்கட்டும், மதன் கார்க்கியும். பிறகு வெங்கட்டையும் நிற்கச் சொல்லிவிட்டு இரண்டு காமிராக்களையும் தானே இயக்கிய மதன் எந்த குரூப் போட்டோவிலும்  இல்லை.

பதிவு ரொம்ப நீளமாக இருந்ததால், வெட்டப்பட்ட பகுதிகள் அடுத்த பகுதியில்.

Tuesday, February 9, 2010

கடற்கரையில் தமிழ் டிவிட்டர்கள் - 01

நிலம் ஒன்றே,
சேரிக்கும் சீவாலயத்துக்கும் ஜலம் ஒன்றே,
அலம்புவதற்க்கும் பூசைக்கும் குளம் ஒன்றே,
தன்னைத்தான் அறிந்தவனுக்கே . . .

இதை பேச்சுப் போட்டியில் பேசி பரிசு வாங்கி மறந்தவர்களும், மறக்காவிட்டாலும் பின்பற்ற முடியாதவர்களும், மறந்தாலும் பின்பற்ற முயற்சிக்கிறவர்களும் ஒன்று கூடி கும்மியடிக்கிற ஆன்லைன் மடம் டிவிட்டர்.

தினப்படி வேலைகளைத் தவிர்த்து, டிவிட்டரைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தால் சங்க காலம் முதல், அவதார் காலம் வரை 140 எழுத்துகளில் சுருங்கிய தகவல்கள் சற்றும் எதிர்பாராமல் கிடைக்கலாம். ஆனால் அத்தனையும் சளைக்காமல் ஓடும் நதி போல சளசளவென விரைவாக . . .

சரி எதற்க்காக இந்த டிரையலர்? டிவிட்டர் நதியில் தகவல்களையும், விமர்சனங்களையும், வெற்று அரட்டைகளையும் அள்ளிக் கொட்டுபவர்கள் நேரில் சந்திக்க நேர்ந்தால்? பிப்ரவரி 7 ஞாயிற்றுக்கிழமையில் அப்படி ஒரு சந்திப்பு மெரினா பீச்சில் காந்தி சிலை அருகில் நிகழ்ந்தது.

சந்திப்பை பற்றி துவக்குவதற்குமுன் ஒரு கேள்வி. டிவிட்டர்கள் சந்திப்பு எதற்கு?
ஏய் . . .
வாடா சும்மா போய் யாரெல்லாம் வராங்கன்னு பார்த்துட்டு வரலாம்.
Bee . . . மாதிரி நேரில் போய் ரெண்டு கொட்டு கொட்டலாம்.
சீய் . . . இந்த ஆளு அவ்வளவுதானா/இவ்வளவு பெரியவனா என்று நொந்து/வியந்து போகலாம்.
டீ . . . பிஸ்கெட்டை அங்க போய் ஓசியில சாப்பிடலாம்.
ஈ . . . ன்னு இளிச்சு நிறைய ஃபிரெண்டுகளை சம்பாதிக்கலாம்.
ஃ . . . மேற் கூறிய எல்லாம்.
ஃ2 . . . மேற் கூறிய எதுவுமில்லை.

இதில் எது உங்கள் பதில் என்பதை யோசித்துக் கொண்டே அடுத்த வரிக்கு நகருங்கள்.

சந்திப்பு ஆரம்பித்த கதை
எழுதுவதற்கு மிட்நைட் கவிதையும், வாசிப்பதற்கு லைம்லைட் பிளாகுகளும் சிக்காத சில இரவுகளில் வெறுமனே தமிழ் டிவிட்டுகளை கவனித்துக் கொண்டிருப்பேன். அப்படிப்பட்ட ஒரு இரவில் நியுஜெர்ஸி டிவிட்டர் @njganesh நான் சென்னையில் இருக்கிறேன் என்றார். உடனே @vickytamil நாம் சந்திக்கலாமா என்று பதிலுக்கு டிவிட்டினார்.

 இடையில் வேறு வேலைகளைப் பார்த்துவிட்டு மீண்டும் நுழைந்தபோது எங்கே சந்திக்கலாம் என்று கேட்டு (@elavasam, @icarusprakash, @athisha, @luckykrishna, @anbudan_bala) டிவிட்டியவர்களின் எண்ணிக்கை கூடியிருந்தது. எந்த முன் உத்தேசமும் இல்லாமல் ஒரு சினிமா தியேட்டருக்குள் நுழைவது போல நானும் வர்றேன் என்று டிவிட்டினேன். பட்டென பவர்கட் போல டிவிட்டரே அமைதியாகிவிட்டது. என் மிட்நைட் கவிதைக்கு மிரண்டு அனைவரும் பதுங்கிவிட்டார்களோ என சந்தேகித்தபோது @mu75 எத்தனைபேர் என்று கேட்டார். நான்தான் இது வரைக்கும் ஆட்டத்திலேயே இல்லையே, இருந்தாலும் டிவி பார்த்து ஸ்கோர் சொல்வது போல ஆறோ ஏழோ என்றேன். கேட்ட அடுத்த வினாடி @priyaraju ஆஜராகி ”இந்த முறை மன்னியுங்கள், நண்பர்களே. சில உறவினர்களை நாளை சந்திக்க உள்ளேன். அடுத்த முறை சந்திப்போம்” என்று ஸ்கோரைக் குறைத்தார். அதே நேரம் பளிச்சென @vickytamil ஆஜராகி "இதுவரைக்கும் 12 + 1 பேர்" என்று ஸ்கோரை ஏற்றினார். யாரந்த +1 எனக்கேட்டதற்கு இதுவரைக்கும் பதில் இல்லை. இடையில் @elavasam காலையில் வைக்கமுடியுமா நானும் வரப்பார்க்கிறேன் என்றார். நான் மீண்டும் இடத்தையும் நேரத்தையும் சொல்லுங்க என்று கேட்டவுடன் 4 மணி காந்தி பீச் என்று ஒருவழியாக @vickytamil அறிவித்தார்.

திடீரென @ommachi ஆஜராகி ”குடும்பத்துடன் வரலாமா? ஆண்டீர் மட்டுமேவா?” என்றார். இடையில் புகுந்த @lavanyaj This tweetup is for guys alone? என்று அதையே ஆங்கிலத்தில் கேட்டார். யாரும் பதில் சொல்லாததால் @ommachi I would like to come with the kid அப்போதான் நம்மள (வசதியாய்) கண்டுகாம வுடுவாங்கோ :)  என்றவுடன் சூட்சுமம் புரிந்து நானும் மனைவி ஜெயந்தி மற்றும் மகளுடன் வருவதாக சம்மதித்தேன். ஆனால் @lakshmi ஹோம்வொர்க் செய்து தருவதாக சம்மதித்தும், என் மகள் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள். இதற்கிடையில் @anbudan_bala குடும்பஸ்தர்களுக்கு ஒரு வரவேற்பு டிவிட்டை தட்டிவிட @lavanyajவும் வருவதாகச் சம்மதித்தார்.

கடற்கரையில்
திரும்பிப் பார்க்கையில்
என் காலடித் தடங்கள் இல்லை.

எந்தக் காலத்திலோ கணையாழியில் படித்த ஹைகூவை இங்கு பயன்படுத்திக் கொள்கிறேன். என் காலடித் தடங்கள் எங்கே போனதாம் என்று கேட்பவர்கள் அடுத்த வரிக்கும், கேட்காதவர்கள் அடுத்த பாராவுக்கும் தாவலாம்.
”என் பின்னால் டிவிட்டர் நண்பர்கள் வந்துகொண்டிருந்ததால் என் காலடித் தடங்கள் மறைத்துவிட்டன” என்பது முந்தைய ஹைகூவில் எழுதப்படாத (எழுதக்கூடாத) கடைசி வரி.

காந்திசிலையை நெருங்கியபோது
@vickytamil கிட்டத்தட்ட நான் மனதில் வடித்திருந்தது போலவே தேகம். முன் நெற்றி மட்டும் அதிகம். ஆனால் ”வாங்க அவர் நான் தான் இவர்” என்று அதிர்வேட்டு போல வரவேற்ற @njganeshன் சரீரமும் சாரீரமும் (கமெண்ட் உபயம் @anbudan_bala) நான் எதிர்பாராதது. மனிதர் செம ஜாலி பட்டாசு. ஃபிங்கர் சிப்ஸ் போல பொறாமைப்பட வைத்த ஒல்லி உடம்புடன் மையமாகச் சிரித்து கைகுலுக்கி வரவேற்றார் @luckykrishna. எனக்குப் போட்டியாக @njganesh கூலிங்கிளாஸை எடுத்து மாட்டி அட்டகாசமாக போஸ் கொடுக்க காமிரா கிளிக்க ஆரம்பித்தது. ஓரிரு கிளிக்குகள் முடிவதற்கு முன் பீச்சுக்காற்றில் சுடிதார் போட்டு ஒரு காற்றாடி பறந்து வந்தது போல இருந்தது. பார்த்தால் நம்ம @lavanyaj என் மனைவி துணைக்கு ஆள் கிடைத்த சந்தோஷத்தில் லாவண்யாவிற்கு ஹலோ சொல்ல அது ஒரு கிளிக் ஆனது. கொஞ்ச நேரத்தில்
லாரிக்கு ஒதுங்குகிற மொபெட் போல @athisha வந்தார். போட்டோவுக்கு போஸ் கொடுக்க அநியாயத்துக்கும் பிகு செய்தார்.


சிறிது நேரத்தில் @ommachi @lakshmi தம்பதியர் குழந்தையுடன் வருகை தந்தனர். பரஸ்பர கைகுலுக்கல் மற்றும் குழந்தை கொஞ்சலுக்குப் பின் ”இவர் உண்மையிலேயே நியுஜெர்சிதானா?” #doubt01 என்று என் மனைவி @njganeshஐ சந்தேகித்தார். அட ஆமாங்க. நான் என் பேச்சை வச்சு என்னை சைதாப்பேட்டைன்னு முடிவு பண்ணிடாதீங்க. தமிழ்லயே டி-ஷரட் போடற அளவுக்கு பற்று அதிகமானதால என்கிட்ட அமெரிக்க வாசனை கம்மி என்றார்.

அதற்குள் பெண்கள் தனிக் கூட்டணி அமைக்க, @ommachi மட்டும் குழந்தைக்கு வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்தார். காலையில ரிப்போர்ட்டர், மத்தியானம் டிவிட்டர், அப்புறம் பிளாகர் அப்படின்னு தினசரி டிரிபிள் ரோல் பண்றோம் என்றார்கள் அதிஷாவும், லக்கியும்.அவர் திரைப்படக்குழு கதை, திரைக்கதை, வசனங்கள், பாடல்களை முடித்துவிட்டு நடிகர் நடிகைகளை தேடிக் கொண்டிருக்கிறது என்றேன் நான். விக்கி தான் சார்ந்திருக்கும் டாட்காம்கள் பற்றி ஏதோ சொன்னார்.  கணேஷ் லோக்கல் கடை ஒன்றில் கத்தரிக்காய் வாங்குவது போல செல் போன் பர்ச்சேஸ் கதையைச் சொன்னார். இதற்குள் அரை மணி நேரம் கடந்து கால் வலிக்க ஆரம்பித்ததும்,  நாம உள்ள மணல்ல போய் உட்காரலாம். மத்தவங்க மெதுவா வரட்டும் என்று முடிவானது. முதலில் வந்த டிவிட்டர் குழு காந்தி சிலையை விட்டு உள்ளே நகர்ந்தது.

நகர்ந்த பின் என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ளும் முன் இன்னும் சில கேள்விகள்.
எழுதியவை இலகுவில் மறந்து எழுதியவர்களே அதிகம் நினைக்கப்படுவதால் டிவிட்டுகளை ஜங்க் ஃபுட், ஜங்க் ஃபிக்ஷன் போல ஜங்க் சொற்கள் என்று சொல்லலாமா?
கோடம்பாக்கத்திற்கு பஸ் ரூட் சொல்வது போல எளிதாக இருப்பதால் பேப்பர் பேக், வெர்னாகுலர், மாத நாவல்கள் வரிசையில் டிவிட்டுகளை சேர்க்கலாமா?
வடிவேலு - சிங்கமுத்து மோதல்கள் போன்ற மெலிதான விஷயங்களைக் கூட தீவிரமாக அலசிக் காயப்போடுவதால் ஜங்க்கர்கள் என்று டிவிட்டர்களை அழைக்கலாமா? யோசிப்பவர்கள் இங்கேயே நிற்கவும், மற்றவர்கள் அடுத்த வரிக்கு வந்துவிடலாம்.

பீச் மணலில் வட்டமாக வசதியாக உட்கார்ந்தபின்னும் என்னை ஆச்சரியப்படுத்திய சமாச்சாரம், நமது @ommachiயின் அமைதி. கடந்த (வசந்தபவன்) டிவிட்டர்கள் சந்திப்பில் எஃப்எம் ரேடியோ போல எங்களைக் கவர்நதவர், இந்த முறை விருப்பம் கேட்ட நேயர் போல மகளுடன் காத்தாடி விட்டுக் கொண்டிருந்தார். அதற்குள் @luckykrishnaவும் @athishaவும் தங்கள் டிவிட்டர் அவதாரம் முடிவதாகவும், இனி உலகசினிமா இரசிகனாக அவதாரமெடுத்து கிழக்குப் பதிப்பகம் செல்லவேண்டுமென்றார்கள் வாட்சைப் பார்த்தபடி. இப்பதான் ஓபனிங் டைட்டில் போட்டிருக்கோம் அதுக்குள் எண்ட் டைட்டிலா?  என்று நொந்த வேளையில் பெண்கள் தங்களுக்குள்ளும், மொபைலிலும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

@njganeshன் இடிக்குரலில் புதியதலைமுறை மாத இதழின் தொடர் விளம்பரங்களைப் பற்றி பேச்சு யு டர்ன் அடித்தபோது, SRM குழு கல்விக்கென புதிய சானல் துவங்குகிறார்களாமே என்ற என் சந்தேகத்தை மறுத்தார்கள் @luckykrishnaவும் @athishaவும். டிவி பற்றி பேச்சு வந்தவுடன் தூர்தர்ஷனில் எனது நிகழ்ச்சி மற்றும் துபாய் பயண விபரங்களை கேட்டுக்கொண்டார் @vickytamil. @ommachiக்கு காத்தாடி அலுத்துவிட்டது போல, மற்றவர்கள் எங்கே என்று தூரப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.
அதே திசையில் உற்று நோக்கிய விக்கி, @icarusprakash அப்பவே வந்துகிட்டிருக்கேன்னு சொன்னாரே எங்க காணோம் என்று முணுமுணுத்தபோது, கையில் காமிராவுடன் அவர் வந்தார்.

டிவிட்டர்கள் மற்றும் பதிவர் சந்திப்புகளில் ஆளாளுக்கு ஒரு காமிரா இருப்பது வசதி. போஸ் கொடுக்கத் தேவையின்றி, அவரை விட்டுட்டோமா, நாம இருக்கோமா என்ற கவலையின்றி கிளிக்குகளுக்கிடையில் இயல்பாக அரட்டை நடக்கிறது. அதற்கு இந்த சந்திப்பை பற்றிய புகைப்படங்களே சாட்சி.
.
@icarusprakash @luckykrishna மற்றும் @athisha இவர்கள் மூவரும் சந்திப்பு எக்ஸ்பர்டுகளாக இருக்கிறார்கள். மிக இயல்பாக இணைந்து மிக இயல்பாக விலகுகிறார்கள். பல்வேறு சந்திப்பர்களைப் பற்றி காமெடியாக அலசுகிறார்கள். இன்னைக்கு நம்மளப் போலவே இன்னொரு குரூப் மஞ்ச சட்டையில சந்திக்கிறாங்க என்றார் @luckykrishna. ஆங்கிலத்தில் மட்டுமே டிவிட்டும் குழு ஒன்றிடம் நானும் வரலாமா என்று தமிழில் விண்ணப்பித்தேன். அதற்கும் ஆங்கிலத்தில்தான் பதில் தந்தார்கள் என்றார் @athisha. பைக்கை பீச்சுலயே விட்டுட்டு உலக சினிமாவுக்கு போயிட்டு வந்திடலாமா என்று @luckykrishnaவும் @athishaவும் சுறுசுறுப்பு காட்டியபோது @lavanyaj மற்றும் @njganesh ஆகிய இருவரும் அவர்களிடம் இன்டர்வியு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

@ommachi இன்னும் அதிசயமாக அமைதி காத்தார். வட்டம் பெரிசா இருக்கு கொஞ்சம் கிட்ட உட்காரலாமே என்று @icarusprakash யோசனை சொல்ல, வட்டம் சுருங்கியது. ஆனால் அடுத்த வினாடியே @icarusprakash எழுந்து கொண்டு இதோ வர்றேன் என்று கிளம்பினார். எதற்கு என்பது நான் சொல்லாமலயே உங்களுக்குத் தெரியும்.

இடைவேளை


@njganesh தனது பையை திறந்து எடுத்தது என்ன?
@anbudan_bala @spinesurgeonனிடம் கேட்ட அதிரடி கேள்வி என்ன?
@madhankarky யார் என்பது எப்போது வெளியானது?

இது போன்ற அதிரடி சஸ்பென்ஸ் கேள்விகளுடன் அடுத்த பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது.தொடர்ச்சியை படிக்க அடுத்த பதிவுக்கு காத்திருங்கள்.

Monday, December 21, 2009

திருவெம்பாவை - திருப்பள்ளி எழுச்சி - 4,5

வாழ்க வளமுடன்!
தமிழின் அமுத வரி எடுத்தேன் ..
திருவெம்பாவை சொல்ல...

இந்த வரிகளை எழுதித்தந்தவள் ஃபேஸ்புக் தங்கை அமுதா. திருவெம்பாவை பற்றி எழுதும்போது,  நமீதாக்களை பற்றிக் குறிப்பிடாமல் பக்தியோடு எழுதுங்கள், என்று செல்லமாக அதட்டி மேற்கண்ட வரிகளைக் கொடுத்தாள். அதிலிருந்து நான் தொடரவேண்டுமாம். 3 நாட்கள் ஆகிவிட்டது. அடுத்த எழுத்து கூட வரமாட்டேன்கிறது.

வெள்ளத்தில் ஏற்படும் சுழி, மெதுவாகத் துவங்கி, துரிதமாக பெருகி, படு குழியாக மாறி, எதையும் உள்ளுக்குள்ளே ஆழ்த்திவிடும். அந்தச் சுழி போன்ற மயக்கத்தில், (நமீதாக்களையும், தமன்னாக்களையும் இரசித்துக்கொண்டு) செல்லும் திசை தெரியாது (ஜொள்ளின்)ஆழத்தில் சிக்கும் (என்னைப் போன்ற ஜீவராசிகளின்) உயிர்களை உணர்வூட்டி, தட்டி எழுப்பி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" (சாமி கும்பிடும்போது, சினிமா நடிகை எதுக்குடா ராஸ்கல்) என்ற பொன்னான வாசகத்தால் கைதூக்கி விடுவதுதான் திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்.

ஸ்ஸ்ஸ் அப்பா, உருப்படியா ஒரு வரி எழுதலாம்னு பார்த்தா இப்பவே கண்ணைக் கட்டுதே . . .

மார்கழி மாதத்தில் நான் மட்டும்தான் 8 மணி போர்வைக்குள் பதுங்குகிறேன் என்று நினைக்காதீர்கள். அந்தக்காலத்திலேயே இறைவனை வழிபடவேண்டிய சில பெண்களே சுணக்கமாகத்தான் இருந்திருக்கிறார்கள். இப்பாடல்களில் வரும் பெண்கள் உய்யும் வகை உய்ந்த அடியார்கள்.(உய் உய்னு சுத்த தமிழ்ல கலக்கறனா?) அந்தப் பெண்கள் என்ன செய்கிறார்கள் ? ஒன்று கூடுகிறார்கள். ஆதியும் அந்தமும் இல்லாதவன், அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன், அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடுகிறார்கள். பிறகு இந்தப் பேரின்பப் பெருவழிக்கு வராது விடுபட்டுப் போன (என்னைப் போல பெட்ஷீட்டுக்குள் அலாரத்தை அணைத்துவிட்டு அரைமயகத்திலிருக்கும்) அக்கம்பக்கத்திலுள்ள தம் எல்லாத் தோழிகளின் துயில் மயக்கத்தைத் தெளிவிக்கிறார்கள்(என் மனைவி எனக்கு காபி தருவது போல), அவரையும் கண்ணுக்கினிய கருணைக் கடலான சிவபெருமானை (மார்கழி மாசத்துலயாவது சாமியைக் கும்பிடுங்க என்று என் வீட்டில் அர்ச்சிப்பது போல) பாடத் தேற்றுகின்றனர்.

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர், இறை மணக்க, தமிழ் மணக்க, உளம் மணக்க திருவண்ணாமலை தரிசனத்தின்போது எழுதியபாடல்கள்.
 நாம் உய்யும் நெறியை உறுதியாகப் பற்றவேண்டும். அதே நேரத்தில் "எம்பிரான் மூலபண்டாரம் வழங்குகின்றான்; வந்து முந்துமினே !" என அறைகூவி அழைத்தும், அறியாதவருடைய இல்லங்களுக்கே சென்று (தங்கை அமுதா என்னை, அண்ணா நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இன்பமாக இம்சிப்பதைப்போல) அவர் வாழ்வையும் அண்ணாமலையாரின் அருள் ஒளி நிறைந்ததாக ஆக்க வேண்டும்.

பெருமானின் திருவருளால் அழியாத இன்பம் பெற்ற நம் ஆன்றொர்கள் செய்தது அது; நாமும் செய்யத் தக்கதும் வேண்டுவதும் அதுவே.

"அரன் நாமமே சூழ்க வையகமுந் துயர் தீர்கவே"

(ஹையா... எழுதி முடிச்சுட்ட்ட்ட்ட்டேன். மைடியர் தங்கை அமுதா . . . எப்ப்பூடி? இந்த சேட்டைக்காரனும் பக்தி கலந்து எழுதுவேன்ல . .)

இனி  திருவெம்பாவை


இங்கே சொடுக்கி டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

 "அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
      அரிதென, எளிதென", அமரும் அறியார்,
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
      எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச
      மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
      எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !

    "அந்தப் பரம்பொருள் பழத்தின் சுவைபோல இனியது,
அமுதம் போன்றது, அறிந்து கொள்வதற்கு அரியது, எளியது" என
அறிவால் உறுதி பெற தேவர்களுக்கும் இயலவில்லை !
(அப்படிப்பட்ட தாங்கள்) "இதுவே அந்தப் பரம்பொருளின் திருவுருவம்.
இவர் தான் அந்தப் பரம்பொருள்." என்று (கூறத்தக்க எளியமுறையில்) எங்களை ஆண்டுகொண்டு இங்கே எழுந்தருளியுள்ளீர் !
தேன் மிகுகின்ற சோலைகள் உள்ள திருஉத்தரகோச மங்கையில் வீற்றிருப்பவனே !
திருப்பெருந்துறைக்கு அரசே ! எது எங்களைப் பணி கொள்ளும் வகை ? அதன்படியே நடப்போம் !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

ஆறு - வழி.

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
      மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
      பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
      திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

முன்னரே இருக்கும் துவக்கமும், இடைனிலையும், இறுதியும் ஆனவரே !
உம்மை மும்மூர்த்திகளும் அறியவில்லை. பிறகு வேறு யார் தான் அறிய முடியும் ?!
(பூமியாகிய) பந்தினை விரலில் அணிந்தவளும் (உமை), நீயும், உன்
அடியார்களின் (பலகாலமாக அன்பு செய்துவந்த) பழைமை வாய்ந்த
(மனத்து) இல்லங்கள்தோறும் எழுந்தருளுகின்ற பரமனே !
சிவந்த நெருப்புப் போன்ற அழகிய மேனியும் காட்டி,
திருப்பெருந்துறையில் கோயிலும் காட்டி, அந்தணனாக அமரும் கோலமும்
காட்டி என்னை ஆண்டாய் ! விரும்பி உண்ணும் அமுதம் போன்றவனே !
பள்ளி எழுந்தருள்க !

மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் - இல்லம்; தழல் - தீ; புரை - போன்ற.

இன்னும் ஒரு திருவெம்பாவை



இங்கே சொடுக்கி டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
      விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
      வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
      கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
      எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !

விண்ணுலகில் உள்ள தேவர்கள் அணுகக் கூட முடியாத மேன்மையான பொருளே !
உமக்கு அடிமை பூண்ட அடியார்களாகிய நாங்கள், இந்த மண்ணுலகில் வந்து
வாழ வழிவகை செய்தவனே ! அழகு மிகுந்த திருப்பெருந்துறையுடையவனே !
வழியடியார்களாகிய எங்கள் கண்ணினுள் நின்று ஆனந்தம் தருகின்ற தேனே !
கடலிலிருந்து தோன்றிய அமுதமாகத் தோன்றுபவனே ! கரும்பே ! விரும்பித்
தொழும் அடியவர்களின் எண்ணத்தில் நிறைந்தவனே ! உலகுக்கு உயிரானவனே !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

நண்ணுதல் - நெருங்குதல்; விழு - மேன்மை; தொழுப்பு (தொழும்பு) -
அடிமைப்பணி; வண் - அழகிய; களி - மகிழ்ச்சி.

"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
      போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
      திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
      படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

"இந்த மண்ணுலகம் சிவபெருமான் வழியாக உய்யக் கொள்கின்றது
(சிறந்த இடம்). அப்படிப்பட்ட இப்பூவுலகில் பிறவாமல் நாம் நாட்களை வீணாகக்
கழித்துக்கொண்டிருக்கிறோம்." என்று திருமால் விருப்பப்பட்டுப் பிறக்குமாறும்,
பிரமன் ஆசைப்படுமாறும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே,  
உம்முடைய மிக மலர்ந்த மெய்க் கருணையுடன் நீங்கள்,
இவ்வுலகில் வந்து எம்மை ஆட்கொள்ள வல்லவர் ! அத்தகைய விருப்பம் தரும்
அமுதமே ! பள்ளி எழுந்தருள்க !

புவனி - பூமி; மலரவன் - பிரமன்; அவனி - உலகம்.