Saturday, August 16, 2014

சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் 9 மொழிப்பாடல் - என்னுடைய மொழி எங்கே?

ஏ.ஆர்.ரகுமானின் வந்தேமாதரம் பாடல் வெற்றிக்குப்பின், தேசிய ஒருமைப்பாட்டை மையமாக வைத்து பல பாடல் முயற்சிகள். #MicromaxUniteAnthem அந்த வரிசையில் லேட்டஸ்ட். மைக்ரோமேக்ஸ் - சோனி நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இந்தப்பாடல் தயாராகியிருக்கிறது. தயாராகியிருக்கிறது என்பதை விட சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது என்பதுதான் உண்மை.

முதல் காரணம் பழைய டியூன். இதற்காக புதிதாக எதையும் கம்போஸ் செய்யவில்லை. ரங்தேபசந்தி படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள Roobaroo என்ற பாடலை சற்றே வடிவம் மாற்றியிருக்கிறார்கள். இது கூட பரவாயில்லை. இந்த சிங்கிள் ஆல்பத்தில் 10 பாடகர்கள் 9 இந்திய மொழிகளில் பாடியிருக்கிறார்கள். இதுதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தேசிய ஒருமைப்பாடுதான் தீம் என்றால் ஏன் 9 மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரவேண்டும். எங்கள் மொழியை ஏன் நிராகரித்தீர்கள் என்று பாடலில் இடம் பெறாத மொழி பேசுபவர்கள் ஆன்லைனில் கோபமாக தங்கள் கருத்துகளை தெரிவித்துவருகிறார்கள்.

எனக்கும் அதுதான் தோன்றுகிறது. மைக்ரோமேக்ஸ் - சோனி போன்ற பெரிய நிறுவனங்கள் கைகோர்க்கும்போது நிச்சயமாக ஒரு புதுப்பாடலை உருவாக்கியிருக்க முடியும். அதைச் செய்யாததே ஏனோதானோ என்ற எண்ணத்தையே குறிக்கிறது. அடுத்ததாக ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை இடம்பெற வைக்க வேண்டும் என்று முடிவு செய்தது சிந்தனையில் ஆழமில்லை என்பதைக் காட்டுகிறது. ஏனென்றால் இந்தியாவில் பரவலாக பேசப்படும் அத்தனை மொழிகளையும் இதில் இடம்பெற வைப்பது சாத்தியமே இல்லாதது. எனவே இந்தப் பாடலில் இடம்பெறாத மொழியைப் பேசுபவர்கள் நிச்சயம் ஏமாற்றமடைவார்கள். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பாடல் நாட்டின் எந்தப்பகுதியைச் சேர்ந்தவரையும் உயர்த்துவதோ, தாழ்த்துவதோ, கண்டுகொள்ளாமல் விடுவதோ, முக்கியத்துவம் தருவதோ தவறு. ஆனால் இந்தப்பாடல் இந்தக் குளறுபடியான எண்ணங்கள் அனைத்தையும் தருகிறது. பாடலுக்கான வீடியோவிலும் எந்தக் க்ரியேட்டிவிட்டியும் இல்லை. பாடல் வரிகளில் இடம்பெறாத மொழிகளை எழுத்து மற்றும் காட்சி வடிவிலாவது வீடியோவில் கொண்டு வர முயற்சித்திருக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால் தங்கள் விளம்பரத்துக்காக இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கும் ஒரு சாதாரண வீடியோதான் இது. இதற்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் தொடர்பே இல்லை.

பட்டி மன்றம் - முதன் முறையாக வெர்சுவல் ஸ்டுடியோவில் படம்பிடிக்கப்பட்டது.

பட்டிமன்றங்கள் என்றாலே உடனே ஏதாவது ஆடிட்டோரியத்திற்குள் புகுந்துவிடுவோம். வெகு அபூர்வமாக ஏதாவது பள்ளி (அ) கல்லூரி மைதானங்களில் படமாக்குவோம். மைதானங்களில் உள்ள சிக்கல் என்னவென்றால் மாலை நேரத்துக்கு மேல்தான் தோதுப்படும். ஏனென்றால் அப்போதுதான் பார்வையாளர்கள் தாங்கிக்கொள்கிற அளவுக்கு வெக்கை குறைவாக இருக்கும். ஆனால் இவற்றில் விளக்கைச் சுற்றும் பூச்சிகள், கொசுத்தொல்லை மற்றும் மழை போன்ற தடங்கல்களுக்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் ஆடிட்டோரியம்தான் சிறந்த சாய்ஸ்.


ஆனால் இந்த சுதந்திர தினத்துக்கு நாங்கள் வித்தியாசமான, துணிச்சலான ஒரு முடிவெடுத்தோம். எங்களுடைய புதுயுகம் வெர்சுவல் ஸ்டுடியோவிலேயே பட்டிமன்றத்தை படமாக்கலாம் என்பதே அது. ஏற்கனவே நடிகை அபிராமி தொகுத்து வழங்கிய ரிஷிமூலம் பேச்சு மன்றம் நிகழ்ச்சியை வெர்சுவல் ஸ்டுடியோவில் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம்.  அதைவிட இதில் சிக்கல் குறைவுதான். அதனால் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் பட்டிமன்றத்தை இதுவரை யாரும் முயற்சிக்கவில்லை என்ற சின்ன த்ரில் ஜாலியாக இருந்தது.

சரியாக 48 மணி நேரங்களே எங்களுக்கு இருந்தது. ஆனாலும் 3Dயில் மளமளவென ஒரு செட்டை வடிவமைத்தோம். பார்வையாளர்கள் 50 பேரை திரட்டினோம். பேச்சாளர்களை ஒரு கற்பனை மேடையில் அமர வைத்து அனைவரையும் ஒரு சேர எங்கள் ஸ்டுடியோவிலேயே படம்பிடித்தோம். வெர்சுவல் ஸ்டுடியோவில் உள்ள மிகப்பெரிய சிக்கல் நிழல்கள் விழாத லைட்டிங் மிக முக்கியம். ஆனால் 50 பேருக்கு மேல் உள்ளே இருந்தால் நிழல்களை தவிர்க்க மிகவும் மெனக்கெட வேண்டும். ஆனால் எங்கள் டெக்னிகல் டீம் அபாரமானது. அசராமல் செய்து முடித்தார்கள்.

இதில் இன்னொரு துணிச்சல் என்னவென்றால் பட்டிமன்ற பேச்சாளர்களில் நடுவர் பிரகதீஸ்வரனைத் தவிர வேறு எவருக்கும் பச்சைத் துணிகளால் சூழப்பட்ட கற்பனை மேடைகளில் (Virtual stage) பேசி பழக்கமில்லை. ஆனாலும் பெரிய சிக்கல்கள் எதுவும் எழாமல் படப்பிடிப்பை முடித்து ஒளிபரப்பும் செய்துவிட்டோம்.

அடுத்த முறை பார்வையாளர்களின் எண்ணிக்கையை 100 பேருக்கு மேல் உயர்த்தலாமா என்ற தைரியமான எண்ணம் வந்திருக்கிறது. கடினம் இல்லை என்றாலும் ஒரு பட்டிமன்றத்தை முதன் முறையாக வெர்சுவல் ஸ்டுடியோவில் படம்பிடித்த ஒரு திருப்தி. அந்த திருப்தியைத் தந்த புதுயுகம் டெக்னிகல் குழுவிற்கு சபாஷ்.

Saturday, August 9, 2014

தான் வீசிய ஷார்ட்பிச் பந்துகளில் தானே வீழ்ந்த இந்தியா

லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்தை வென்றதற்கு காரணம் இஷாந்த் வீசிய ஷார்ட்பிச் பந்துகள்தான். அப்படி பந்து வீசச் சொன்னது கேப்டன் தோனி. எல்லோரும் அதற்காக தோனியை புகழ்ந்து கொண்டிருக்க, ராகுல் டிராவிட் மட்டும் ஒரு வித்தியாசமான கருத்தைச் சொன்னார்.

டெஸ்ட் மாட்ச்களுக்கு ஷார்ட்பிட்ச் பந்துகள் ஒத்துவராது. வெற்றி பெற்றுவிட்டோம் என்பதால் இதை சரி என்று நினைக்கக்கூடாது. இந்திய பவுலர்கள் இங்கிலாந்து பாட்ஸ்மான்களின் பேட் விளிம்பை(Genuine Edge) தொடுவதுபோல் பந்துவீச வேண்டும். அதுதான் தொடர்ச்சியான பலன் தரும் என்றார்.

டிராவிட் சொன்னது சரி. டெஸ்ட் மாட்சுகளில் ஐந்து நாட்கள் என்பதால் ஷார்ட்பிட்ச் பந்துகளை தவிர்த்துக்கொண்டே இருக்கலாம். பொறுமையாகக் காத்திருந்து இலகுவாக வருபவற்றை மட்டும் பவுண்டரிக்கு விரட்டலாம். இங்கிலாந்து இந்த எளிய பாடத்தை மறந்துவிட்டு டிவண்டி டிவண்டி போல விளாச ஆரம்பித்ததும் வரிசையாக தவறுகள் செய்து தோற்றுப்போனார்கள். ஆனால் இதை உடனடியாக உணர்ந்து கொண்டு அடுத்தடுத்த டெஸ்ட்களில் ஷார்ட்பிட்ச் பந்துகளை கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் இதை உணராமல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தம் கட்டி ஷார்ட்பிட்ச் வீசியே களைத்துப்போனார்கள். இங்கிலாந்து எளிதாக வெற்றி பெற்றது.

டிராவிட் சொன்னதை கவனித்துக் கேட்டிருந்தால் இந்தியா ஒரு வெற்றிகரமான அணியாக இங்கிலாந்திலிருந்து திரும்பியிருக்கலாம். ஆனால்... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். உலகின் பிரபலமான கேப்டனாக இருந்தாலும் டிராவிட் போன்ற அனுபவசாலிகள் சொல்வதை கேட்க வேண்டும் என்பதுதான் இந்த சீரிஸ் கற்றுத்தந்திருக்கும் பாடம்.