Saturday, August 13, 2022

பொன்னி என்கிற பெயர் ஏ.ஆர்.இரகுமானுக்குள் ஏற்படுத்தியுள்ள தாக்கம்!


 ரகுமான் அவருடைய இசைப் பயணத்தில் புதியதோர் தளத்தை கண்டடைந்திருக்கிறார் எனக் கருதுகிறேன். அவருடைய சமீபத்திய அதை என்னால் உணர முடிகிறது. அவருடைய இசையில் கொண்டாட்டங்கள் இருந்தாலும் அதற்குள் மிகப் பெரிய உணர்வுக் குவியலை நிரப்பி வைக்கிறார். எம்.எஸ்.வி, இளையராஜா இருவரும் இதில் மாஸ்டர்கள். ஏ.ஆர்.இரகுமானும் அவர்கள் பயணித்துள்ள பாதையில் தன் பாணியில் நுழைந்துள்ளார்.

பொன்னி நதி பாக்கணுமே பாடலில் உற்சாகத்துடன் மென்சோகம் போன்ற ஒரு நுண்ணிய உணர்வு அடையாளம் காண முடியாதபடி கலந்திருக்கிறது. அந்தப் பாடலின் வெற்றிக்கு அதுவே காரணம் என்பது என் எண்ணம்.

இது இப்படி என்றால் மலையன்குஞ்சு வேறு இரகம். அதில் சித்ராவின் குரலில் பொன்னி மகளே என்றொரு பாடல் வருகிறது. எவராக இருந்தாலும் ஏதோ ஒரு நொடியில் யாருமற்ற தனிமையை நேசிப்பார்கள். அந்த நொடியில் இந்த உலகின் ஒவ்வொரு உயிரையும் நேசிப்போம். இந்தப் பாடல் அந்த உணர்வைக் கொடுக்கிறது. படத்தின் பலமே அந்தப் பாடலும், அதை ஒட்டிய பிண்ணனி இசையும். கேட்டுவிட்டால் அந்தப் பாடலில் இருந்து மீளவே முடியாது.


பொன்னி என்ற வார்த்தையில் ஒரு மாயம் இருக்கிறது. இரகுமானின் பியானோவை பொன்னி என்ற வார்த்தை எங்கோ அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. அது அவருக்குப் பிடித்த வார்த்தையாக தற்செயலாகவே அமைந்துவிட்டது என நினைக்கிறேன்.

அதன் இசை விளைவுதான் பொன்னி நதி பாக்கணுமே மற்றும் பொன்னி மகளே பாடல்கள்.

லவ் யூ இரகுமான்!

நகையே உனக்கொரு நமஸ்காரம் (13.8.1976)

நகையே உனக்கொரு நமஸ்காரம் (13.8.1976)

46 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோ கலை மன்றத்தின் சார்பாக அரங்கேறிய வி.எஸ்.ராகவனின் மேடை நாடகம் இது.


எழுபதுகளின் முற்பகுதியை மேடை நாடகங்களின் பொற்காலம் என்று கூறலாம். சினிமாவிற்கு இணையாக நாடக அரங்கங்களும் நிரம்பி வழியும். டிக்கெட் கிடைக்காது.

நகையே உனக்கொரு நமஸ்காரம் நாடகத்திற்கு தன் மனைவி வி.என்.ஜானகியுடன் நேரில் வந்திருந்து துவக்கி வைத்தவர் எம்.ஜி.ஆர். நேரில் வந்திருந்து வாழ்த்திய மற்றொரு பிரபலம் ஏ.பி.நாகராஜன்.


நாடகத்தில் V S ராகவனுடன் வாதிராஜ் மாலி ஜெகதீஷ் நடரா‌ஜ், S N லஷ்மி C K சரஸ்வதி நடித்திருந்தனர். இந்நாடகம் பற்றி எத்தனை பேருக்கு நினைவிருக்கும் எனத் தெரியவில்லை.



இளங்கோ கலை மன்றத்தை நடத்திய திரு. இளங்கோ வீரப்பன் அவர்கள் இந்த புகைப்படங்களையும், தகவல்களையும் அனுப்பி வைத்தார். அவருக்கு ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் சார்பில் எமது நன்றி.

#StagePlay #VSRaghavan #MGR #VNJanaki #APNagarajan #ElangoKalaiMandram 

கார்த்தி - மருதநாயகம் படம் நின்று போன வலியை விடவா என்னுடைய வலி பெரியது?

மருதநாயகம் படம் நின்று போன வலியை விடவா என்னுடைய வலி பெரியது?

”பருத்தி வீரன் வெளியாகுமா என்று சந்தேகம் வளர்ந்து கொண்டே இருந்தது. ஆயிரத்தில் ஒருவன் நடக்குமா? பாதியிலேயே நின்று விடுமா என்று மனது தளர்ந்து போயிருந்தது. அந்த சமயத்தில் மனம் சோர்ந்து போனபோது என்னை தூக்கி நிறுத்தியது கமல் சாரின் மருதநாயகம் காட்சிகள்தான்.
பருத்தி வீரன் துவக்க விழாவிற்கு அழைக்க அப்பாவுடன் கமல் சார் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது அவர் மருதநாயகம் டிரையலரையும், ஷுட்டிங் ஸ்பாட் காட்சிகளையும் காட்டினார். மிரண்டு போய்விட்டேன். உலக சினிமாக்கள் எதிலும் நான் பார்த்திராத காட்சி அமைப்பு, உடை, ஷாட் என பிரமிக்க வைத்தது.
மருதநாயகம் படத்தின் துவக்க விழாவுக்கு அப்பாவுடன் நான் சென்றிருந்தேன். விழாவெல்லாம் முடிந்து அடுத்த நாள் யாரோ என்னை இடித்துவிட்டுச் சென்றார்கள். அது இரும்பு கொண்டு என்னை இடித்தது போலிருந்தது. திரும்பிப் பார்த்தால் கமல் சார். இடுப்பு வரை நீள முடியுடன், உடலை இரும்பு போல வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
ப்பா... அசுர உழைப்பு. கமல் சார் இவ்வளவு உழைத்த அந்தப் படம் நின்று போய்விட்டது. அது நின்று போய்விட்ட வலியை விடவா, என்னுடைய வலி என்று தோன்றியது. எப்போது நான் துவண்டு போனாலும் மருதநாயகம் நின்று போனாலும், தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கமல் சாரின் உழைப்புதான் எனக்கு உற்சாகம் தருகிறது. என்னை தோளில் தட்டி தூக்கி நிறுத்துகிறது.
- பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி
கார்த்தியின் இந்த வார்த்தைகளில் ஜெயிக்கக் காத்திருக்கும் ஒவ்வொருக்கும் செய்தி இருக்கிறது. ஒவ்வொரு வெற்றியும் ஆயிரம் வலிகளைத் தாண்டித்தான் சாத்தியமாகியிருக்கிறது. துவண்டு போகாமல் அடுத்தடுத்து செயல்படுபவன்தான் குடும்பத்தாலும், மக்களாலும் கொண்டாடப்படுகிறான். இந்த நம்பிக்கையில்தான் நாங்கள் யாதெனக்கேட்டேன் படத்தை தயாரித்திருக்கிறோம். விரைவில் திரையைத் தொடுவோம். இரசிகர்களின் இரசனைகளுக்கு உணவளிப்போம். வெற்றி பெறுவோம்.
இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்