Monday, July 14, 2014

கேப்போம்ல : மோடி சர்க்காருக்கு கோப்புகளை கொளுத்துவதில் அவசரம் ஏன்?

குவிந்திருக்கும் கோப்புகளை தூசி தட்டி அடுக்கி வைப்பது நல்லதுதான். ஆனால் அவற்றை அழிப்பதற்கு முன்பு வீட்டிலிருக்கும் அனைவரையும் இது தேவையாக என கேட்டுக்கொள்வது வழக்கம். ஆனால் இது போல எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் மோடி சர்க்கார் பழையதை ஒழிப்பதாகச் சொல்லி போகி கொண்டாடியிருக்கிறது.

ஒரு நாடு தொடர்புடைய எந்த கோப்பும் மோடிக்கு மட்டும் சொந்தமல்ல. அது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தொடர்புடையது. சொல்லப்போனால் அதை வெறும் கோப்பு என ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் அவற்றில் உள்ளவை நாட்டின் வரலாற்றுப்பதிவுகள். எனவே கோப்புகளை அழிப்பது என்பதும், வரலாற்றை அழிப்பது என்பதும் ஒன்றுதான். இது மோடி அரசுக்கு தெரியாதது அல்ல.

எனவே பழைய கோப்புகளை அழிப்பது தொடர்பாக தன்னிச்சையாக முடிவெடுத்ததும்,  அவசரம் அவசரமாக அழித்தபின் அறிவித்திருப்பதும் பல சந்தேகங்களை எழுப்புகிறது. BIG DATA என யார் யாரோ செல்ஃபி எடுத்துக்கொள்வதையெல்லாம் இந்த உலகம் ஆடியோ, வீடியோவாக பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறது. அதற்கான டெக்னாலஜியும், வாய்ப்பும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது அழிப்பதற்கு முன் அவற்றை டிஜிட்டலாக பிரதி எடுக்க ஏன் மோடி சர்க்கார் முயற்சிக்கவில்லை?
யாரையும் கேட்காமல் பழைய கோப்புகளை அழிக்க முடிவெடுத்தது ஏன்?
எந்தெந்த கோப்புகள் அழிக்கப்பட்டன என்பதற்கு பட்டியல் உள்ளதா?
அந்தக் கோப்புகள் இருப்பதால் இப்போதைய இந்திய அரசுக்கு என்ன பிரச்சனை?
அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தால் அதற்கு அழிப்பு ஒன்றுதான் தீர்வு என்ற முடிவை பரிந்துரைத்தது யார்?
இதற்காக யார் யாரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது?

தற்போதைய மோடி அரசுக்கு ஒரு விண்ணப்பம். அடுத்த முறை கோப்புகள் எதையாவது அழிக்க முடிவெடுத்தால் மக்களுக்கு ஒரு கடுதாசி போடுங்கள். எத்தனையோ மில்லியன் இந்தியர்கள் அவற்றை பத்திரப்படுத்தி வைக்கத் தயாராக இருக்கிறோம். கேட்டுக்கொண்டால் நாங்களே கூட அவற்றை டிஜிட்டலாக மாற்றித்தருகிறோம்.

கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் மோடி சர்க்கார் இந்திய வரலாற்றின் சில பக்கங்களை அழித்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. அந்த வரலாறு முக்கியமா? இல்லையா என்பதை தனியாக விவாதிக்கலாம்.

இப்போதைக்கு ஒரே ஒரு எளிய கேள்வி. அவசரம் அவசரமாக நாட்டு மக்களுக்குத் தெரியாமல் அழிக்கவேண்டிய அவசரம் என்ன?

#கேப்போம்ல

Sunday, July 13, 2014

Good bye Brazil. I miss you!

உலகின் மிகப்பெரிய ஓட்டை பிரேசிலின் கோலுக்கு முன்புதான் இருக்கிறது. எங்கிருந்து யார் அடித்தாலும் ஒரு கோல் விழுந்துவிடுகிறது. இவ்வளவு பெரிய ஓட்டையை பூசி மெழுக குறைந்தபட்சம் இரண்டு உலகக்கோப்பைகள் தேவைப்படும்.

உலகக்கோப்பை முடிந்ததும் அழுத்தி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் மற்றும் ஊழல் பிரச்சனைகள் விசுவரூபமெடுக்கும்போது, பிரேசிலின் கால்பந்து இன்னமும் நசுங்கிப்போகும்.

வழக்கமாக பிரேசிலின் ஆட்டத்தில் ஒரு ஹார்மனி இருக்கும். வீரர்களின் ஓட்டத்திலும் பந்தை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதிலும் ஒரு நடனத்தின் நளினம் இருக்கும். தற்போதைய பிரேசில் அணியிடம் அந்த ஒத்திசைவு மிஸ்ஸிங்.

நெய்மரின் கால்கள் ஒரு மேஜிக்தான். ஆனால் அது அவரின் தனித்துவம். ஒரு குழுவாக பிரேசில் சாதாரண அணியாகத்தான் விளையாடியது. எப்படி அட்டாக் செய்வது என்பது பற்றிய தீர்மானமான வியூகங்கள் இல்லை. பந்தை நெய்மரிடம் கொடுத்தால் போதும். கோலடிப்பது பற்றி அவர் கவனித்துக்கொள்வார் என்பதே அவர்களுடைய வெளிப்படையான வியூகமாக இருந்தது. அதனால்தான் எதிரணியினர் அனைவரும் ஒருவர் விடாமல் நெய்மரை சுற்றி வளைத்து வேட்டையாடிவிட்டார்கள்.

அட்டாக் இப்படி என்றால் தடுப்பாட்டத்திற்கென வியூகம் எதுவுமே இல்லை. கோலுக்கு இடமோ வலமோ பந்து வந்தால் திக்கித் திணறி சமாளிக்கிறார்கள். கோலுக்கு மத்தியில் பந்து விழுந்துவிட்டால், பதற்றமாகி கோல்கீப்பரை அம்போவென்று தவிக்கவிட்டுவிட்டு தடுப்பாட்டவீரர்கள் எல்லாம் எங்கேயோ காணாமல் போய்விடுகிறார்கள். ஜெர்மனி இந்த பலவீனத்தைத்தான் துல்லியமாக பயன்படுத்தி 7 கோல்களை அடித்தது. நெதர்லாந்தும் கிட்டத்தட்ட ஜெர்னியைப்போல பிரேசிலின் பலவீனத்தை குறிவைத்து அடித்து நொறுக்கிவிட்டது.

இவ்வளவு பலவீனமான அணியை வைத்துக்கொண்டு டாப் - 4 அணிகளில் ஒன்றாக வந்ததே அதிர்ஷ்டம்தான். என் கண்முன்னாலேயே பிரேசில் என்ற அற்புதமான அணி சொந்த மண்ணிலேயே காணாமல் போய்விட்டது. அதை கண்டுபிடித்துக்கொடுக்கப்போவது யார்? இந்தக் கேள்வியில்தான் பிரேசிலின் அணியின் எதிர்காலம் உள்ளது.

கிரிக்கெட்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணி வீழ்ந்தது போல தற்போது பிரேசிலின் கால்பந்தாட்ட அணியும் வீழ்ந்துகிடக்கிறது. நெய்மர் பிரேசிலின் கடைசி சூப்பர்ஸ்டாராக இருக்கலாம். மன்னாதிமன்னர்கள் வீழ்வதைப்பார்க்கும்போது கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்வது... காலமும் வெற்றியும் மன்னர்களுக்காக காத்திருப்பதில்லை.

Bye! Bye! Brazil. I miss you!

தங்ஸ்வீட்ஸ் - ஜீலை பௌர்ணமி



அழும் அக்காள் குழந்தைக்கு 

தாலாட்டு பாடிக்கொண்டே,
உஷ்ஷ்ஷ் பேசாதே என சுட்டு விரலாலே 
சத்தமின்றி ஆணையிட்டு,
பாத்திரம் ஒதுக்கி, துணி மடிக்க வைத்து
வீட்டை சுத்தம் செய்ய வைத்தபின்,
குழந்தையை தொட்டிலில் கிடத்தி
சைகையாலேயே 
அது உறங்கும் அழகை இரசிக்கச்சொல்லி,
தேவதைகள் உலகிற்கு அழைத்துச் செல்வாள் தங்கை!