Showing posts with label அங்கும் இங்கும். Show all posts
Showing posts with label அங்கும் இங்கும். Show all posts

Friday, August 31, 2012

சொந்தநாட்டிலேயே அகதிகளான இந்தியவடமாநிலத் தொழிலாளர்கள்


1990களுக்குப் பிறகு உலகமயமாக்கல் என்ற பெயரில் சர்வதேச சந்தை இந்தியாவிற்குள் நுழைந்ததும், விளை நிலங்கள் கட்டிடங்களாகின. பறவைகளும், மரங்களும் நிறைந்த வனங்கள், வாகனங்களும், சாலைகளும் நிறைந்த கான்க்ரீட் ஜங்கிள்கள் ஆகின. ஐடி என்கிற புதிய துறை பணத்தை வாரி இறைத்தது. இந்திய இளைஞர்கள் அலட்சியமாக செலவு செய்யத் துவங்கினார்கள். 25 பைசாவுக்கு விற்றுக் கொண்டிருந்த டீ, இன்று 7 ரூபாய் ஆகிவிட்டது. 50 பைசாவுக்கு கிடைத்த ஒரு இட்லி இன்று 12 ரூபாய் ஆகிவிட்டது. கிராம் 600க்கு விற்றுக் கொண்டிருந்த தங்கம் இன்று 3000ம் ரூபாயை தொட்டுவிட்டது. சில ஆயிரங்களுக்கு கிடைத்த நிலங்கள் இன்று கோடிகளைத் தொட்டுவிட்டன. சுருக்கமாகச் சொன்னால் வளர்ச்சி என்று நினைத்தால் அது வீக்கமாக உயர்ந்து நின்றுவிட்டது. விளை நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்டு தொழிற்சாலைக்கும், நெடுஞ்சாலைக்கும் முதலீடு செய்த பெரும்பணக்காரர்களிடம் சென்று விட்டது. இந்த கால மாற்றத்தை ஓரளவுக்கு புரிந்து கொண்டார்கள் தென்னிந்தியர்கள். அவர்களுடைய ஆங்கில அறிவும், கற்கும் திறனும் தந்த வாய்ப்புகளை பயன்படுத்தி மளமளவென்று இந்த ஓட்டத்துடன் ஐக்கியமாகிவிட்டார்கள். சுதாரிக்காத வட இந்தியர்கள் பின் தங்கிப்போனார்கள்.

பணத்தின் மினுமினுப்பு ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் குடிபுகுந்ததும், 2000ம் ஆண்டின் பின்பகுதியில் உடல் உழைப்பு தேவைப்படுகிற வேலைகளை நிராகரிக்கத் துவங்கினார்கள் தென் இந்தியர்கள். இதனால் ஹோட்டல்கள், கட்டுமானப் பணிகள், காவல் பணிகள் போன்றவற்றில் ஆள் பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்தது. அதே நேரத்தில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் இந்த பற்றாக்குறையை நிரப்ப ஆரம்பித்தார்கள். தென் இந்தியா முழுவதும் குறிப்பாக ஐ.டியால் முன்னேறிய கர்நாடகா, ஹைதராபாத் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இவர்களின் குடியேற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது. வாய்ப்பும், வறுமையும் துரத்த தமிழக கட்டிடத் தொழிலாளிக்கு கொடுப்பதில் பாதியைக் கொடுத்தால் கூடப்போதும் என்று அவர்கள் இறங்கி வரவே, சுரண்டல் முதலாளிகள் மீன்களை கொத்து கொத்தாக வலை வீசி பிடிப்பது போல, அவர்களை கூட்டம் கூட்டமாக இங்கு குடியமர்த்தினார்கள். கடன் வாங்கி, அதில் முன் பணம் கொடுத்து வேலை தேடி, வட்டி கட்டியபடியே கடின வாழ்க்கை வாழ்பவர்களும் உண்டு. ஒரு காலத்தில் துபாய் போன்ற அரவு நாடுகளில் நிறைய மலையாளிகளும், கணிசமான தமிழர்களும் இப்படித்தான் குறைந்த சம்பளத்திற்கு தங்கள் வாழ்க்கையை உறிஞ்சிய முதலாளிகளிடம் அடிமைப்பட்டுக்கிடந்தார்கள். தற்போது இந்தியர்கள் சுதாரித்துக்கொள்ள, பிலிப்பினோக்களும், இலங்கை தமிழர்களும் அதே போன்ற அடிமை வாழ்வை அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிலைதான் தென் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும்.

நெருங்கி பேசிப்பார்த்தால் அவர்களுக்கு கொடுக்கப்படும் கூலியில் பாதிதான் அவர்களை சேருகிறது. பாதியை புரோக்கர்கள் அபகரிக்கிறார்கள். குறிப்பாக கட்டிடத் தொழிலாளர்களின் நிலை இதுதான். சுரண்டும் முதலாளிகள், வட இந்தியர்கள் என ஒதுக்கும் தென் இந்தியர்கள், வறுமை, கடன், ஆரோக்கியமற்ற சூழல் போன்றவற்றால் எப்போதுமே ஒரு அபத்திர சூழலில்தான் வாழ்கிறார்கள். இந்த அவநம்பிக்கை மேலோங்கியிருக்கும் வாழ்க்கை அவர்களை எப்போதும் இனம் புரியாத பயத்தில்தான் வைத்திருக்கிறது போலும். அதனால்தான் ஒரு வதந்தி SMS-ஐ படித்துவிட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக, கையில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு தாங்கள் பிறந்து வளர்ந்த ஊருக்கே புறப்பட்டு ஓடினார்கள்.

நதிக்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும்தான் சமூகங்கள் குடியேறியதாகச் சொல்கிறது உலக வரலாறு. பருவம் பொய்க்கும்போது மக்கள் கூட்டம் கூட்டமாக நகர்ந்திருக்கிறார்கள், புதுப்புது நாகரீகங்கள் உருவாகியுள்ளன. ஆனால் இலங்கையும், அஸ்ஸாமும் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் இயற்கை அல்ல, அரசியல். இலங்கைத் தமிழர்களை பார்த்து சிங்களர்கள் வெறுப்பை உமிழ்ந்ததைப் போல, தற்போது இங்கு வந்து குடியேறும் வட இந்தியர்களை வேண்டா வெறுப்பாக அனுமதிக்கும் தென் இந்தியர்களைப் போல, அஸ்ஸாம் மாநிலம் வங்கதேச முஸ்லிம்களை ஒருகாலத்தில் அனுமதித்தது. போடோ இன மக்கள்தான் அஸ்ஸாம் மாநிலத்தின் பூர்வீகக் குடிமக்கள். ஆனால் வங்கதேசத்திலிருந்து அகதிகளாக வந்த முஸ்லிம்கள், எண்ணிக்கையில் அதிகமாகி, அந்தஸ்திலும், அதிகாரத்திலும் உயரத்துவங்கியதும், எத்தனையோ வருடங்களாக சிறிய நெருடலாக இருந்த உணர்வுகள், கடந்த மாதம் பெரும் கலவரமாக உருவெடுத்துவிட்டது.

தென் இந்திய முஸ்லிம்கள், அஸ்ஸாம் முஸ்லிம்களுக்கு ஆதரவாக, தென் இந்தியாவில் குடியேறியிருக்கும் வடமாநிலத்தவரை அடித்து உதைத்து ஊரை விட்டே துரத்துகிறார்கள் என்ற ஒரு பொய் வதந்தீயாக, SMS மூலம் பரவியது. பயந்து போன அவர்கள் ஒரே இரவில் கூட்டம் கூட்டமாக ஒடிசா, அஸ்ஸாம், உ.பி, பீகார் போன்ற தங்கள் சொந்த மாநிலங்களுக்கு விரையத் துவங்கினார்கள். பஸ் நிலையங்களும், இரயில் நிலையங்களும் நிரம்பி வழிந்தன. அரசாங்கம் சுதாரிப்பதற்குள் வதந்தீ காட்டுத் தீயாக பரவ ஆரம்பித்துவிட்டது. கர்நாடகாவில் பரவத் துவங்கிய இந்த பதற்றம், தமிழகத்தையும் தொற்றிக் கொண்டுவிட்டது. பயப்படாதீர்கள் என்று கர்நாடக, கேரள, தமிழக அரசுகள் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தன. ஆனால் அவர்களின் பதற்றம் தணியவில்லை. அச்சம் குறையவில்லை. ஒருவர் மேல் ஒருவர் அமர்ந்து கொண்டும், படுத்துக்கொண்டும் சொற்ப உடமைகளையும் அப்படியே விட்டுவிட்டு தங்கள் ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்கள்.

உளவியல் ரீதியாக இதை பார்த்தோம் என்றால், உலகம் முழுவதும் மக்கள் தனித் தனி குழுவாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் இன்னொரு குழுவை நண்பனாகத்தான் ஏற்றுக் கொள்கிறார்களே தவிர, உடன் வாழ்பவர்களாக ஏற்க மறுக்கிறார்கள். இந்த மறுக்கும் உணர்வுக்கு காரணமாக எப்போதுமே பணமும், அந்தஸ்தும், அதிகாரமும் சார்ந்த அரசியல்தான் காரணமாக இருந்து வந்திருக்கிறது. தங்களிடமிருந்த இவை பறிபோய்விடும், குடியேற வந்தவர்கள் கவர்ந்து கொள்வார்கள் என்ற எண்ணம் வந்ததும், நெருடல் அதிகமாகிறது.

கேரளத்திலும், கர்நாடகத்திலும் எப்படியோ? ஆனால் தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்களின் மேல் இரக்கமே இல்லாமல் திட்டமிட்ட வெறுப்பை வளர்த்தது தமிழக அரசு. இந்த அரசு பதவி ஏற்றதும், தொடர்ந்து நடந்த கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும் காரணம் தன் கையாலாகாத்தனம் என்பதை மறைக்க, இதற்கெல்லாம் காரணம் வட மாநிலத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள்தான் என்று அரசு மக்களிடையே எண்ணத்தை விதைத்தது. வடமாநிலத்தவர் ஒவ்வொருவரும் தங்கள் புகைப்படம் உள்ளிட்ட அடையாளங்களை போலீஸ் ஸ்டேஷனில் பதிய வேண்டும் என்று மிரட்டியது. வடமாநிலத்தவர் மட்டுமல்ல, யாரை வாடகைக்கு வைத்தாலும், அவர்கள் பற்றிய தகவலை காவல் நியைலத்துக்கு தர வேண்டும். இல்லையேல் சிறை தண்டனை என்று தமிழக மக்களையும் பதற்றத்துக்கு உள்ளாக்கியது.

சமீபகாலமாக அரசுக்கு பயந்தோ ஆதரவாகவோ, பூசிமெழுகி எழுதிக் கொண்டிருக்கும் ஆனந்தவிகடன் கூட தைரியமாக ஒரு கருத்தை சென்ற வார இதழில் பதிவு செய்துள்ளது.

‘வேளச்சேரி ஐந்து பேர் என்கவுன்டருக்குப் பிறகு, வட மாநிலத்தவர்கள் எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனில் பதிவுசெய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி, அரசே இவர்கள் மீது வெறுப்பைக் கட்டமைத்ததையும் நாம் மறந்துவிட முடியாது.‘, என்று குறிப்பிட்டுள்ளது விகடன். இந்த ஒரே ஒரு வரிக்காக ஆனந்தவிகடனின் (அவதூறு வழக்குக்கு பயப்படாத) தைரியத்தை மெச்சுகிறேன்.

வடமாநில மக்கள் இரு வாரங்களுக்குப் பின் பயம் தெளிந்து மீண்டும் தென் மாநிலங்களுக்கு பணிசெய்ய வந்துவிட்டார்கள். ஆனாலும் அரசியல்வாதிகளின் தூண்டுதலாலும், அதற்கு பலியாகும் மக்களாலும் மீண்டும் மீண்டும் அகதிகள் உருவாகிக்கொண்டேதான் இருப்பார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயரும் - Exodus - அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். சமீபத்திய உதாரணம், நம்மை பாதித்திருக்கும் உதாரணம், நம் கையாலாகாத்தனத்திற்கு உதாரணம், நம்மிடம் தீர்வு இல்லாத உதாரணம் . . . ஈழ தமிழ் மக்கள்!

அகதிகள் இல்லாத உலகே என் கனவு!

சொந்தநாட்டிலேயே அகதிகளான அமெரிக்க விவசாயிகள்!


1931 - டெக்ஸாஸ், கொலராடோ, ஓக்லஹோமா, புதிய மெக்ஸிகோ உள்ளிட்ட பகுதிகளில் மழை தன் வரவை முற்றிலுமாக நிறுத்திக்கொண்ட வருடம். விவசாயிகள் வானத்தை அண்ணாந்து பார்த்து மழை ஏக்கங்களுடன் ஏழ்மையை தழுவிக்கொண்டிருந்தபோது, வானத்தை நிறைத்தன கரும்பூதங்கள். அவை கருத்த மழை மேகக் கூட்டங்களாக இருக்கும் என நினைத்த விவசாயிகளை, அலறி அடித்துக்கொண்டு ஓட வைத்தன புழுதிப்படலங்கள். ஒரு சில நிமிடங்கள்தான்... எத்தனையோ நூற்றாண்டுகளாக, விளை நிலங்களாக பரந்திருந்த பூமியை கரும்புழுதிகள் விழுங்கின.

‘புழுதிக் கோப்பை‘ (Dust Bowl) - புழுதிக்குள் புதைந்த அப்பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்ற ஒரு பத்திரிகையாளர்  இப்படித்தான் குறிப்பிட்டார். குடிநீர், உணவு, காற்று என எதிலும் புழுதி. காற்றை சுவாசிப்பதே மரணத்தை சுவாசிப்பது போல ஆகிவிட்டது. வயிற்றுக்குள்ளும், சுவாசக் குழாயிலும் தேங்கிவிட்ட புழுதிப்படலத்தால், பறவைகளும் விலங்குகளும் கூட்டம் கூட்டமாக மாண்டு போயின. மரணம் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களையும் தின்னத் துவங்கியபோது, வங்கிகள் முடங்கின. கடைகள் சாத்தப்பட்டன. சாலைகள் புதைந்தன. அரசு மட்டுமல்ல, அப்பிரதேசம் முழுவதுமே இயக்கமற்று நின்றது. ஆனாலும் புழுதிபுயலின் தாக்கம் நிற்கவில்லை. தூசிக்கு தப்பிக்க ஈரத்துணிகளை வாசலில் கட்டி வைத்தார்கள். வீட்டின் அனைத்து துவாரங்களையும் கையில் கிடைத்தவற்றைக் கொண்டு அடைத்தார்கள். ஆனாலும் தொடர்ந்து நுண்துகள் தூசிகள் நாசி துவாரத்தை அடைக்க ஆரம்பித்தபோது, மூச்சுவிடவே திணறிய மக்கள் சிறு சிறு கூட்டங்களாக உயிர் தப்பி கலிஃபோர்னியாவுக்கு செல்லத்துவங்கினார்கள். 1940ம் வருடத்துக்குள் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் மக்கள் தாங்கள் வசித்தபகுதியை அப்படியே விட்டுவிட்டு, கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு அகதிகளாக அப்படியே புலம் பெயர்ந்திருந்தார்கள்.

முதலில் பரிதாபத்துடனும், பதைபதைப்புடனும் அவர்களை வரவேற்று அடைக்கலம் தந்தது கலிஃபோர்னியா. ஆனால் எண்ணிக்கை அதிகமானதும் திணற ஆரம்பித்தது. திணறல் கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சலாக உருமாறி, பிறகு கோபமாக நிலைகொண்டது. மக்கள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டார்கள். உள்ளே வராதீர்கள் என்று எச்சரிக்கப்பட்டார்கள். மீறி வந்தவர்கள் தாக்கப்பட்டார்கள். இந்த செய்தி பரவியதும், ஏற்கனவே கலிஃபோர்னியாவுக்குள் வந்து தங்கியவர்களுக்கும் சிக்கல் ஆரம்பித்தது. அவர்களையும் வெளியே போ என துரத்தியது கலிஃபோர்னியா! வாழ்க்கை தேடி வந்தவர்களை உள்ளே நுழையவிடாமல் துரத்தியடிப்படிப்பதற்காக, எல்லைகளில் போலீஸ் படை நிறுத்தப்பட்டது.

சொந்த மண்ணில் இயற்கையும், வந்த மண்ணில் இரக்கமற்ற சமூகமும் திரும்பத் திரும்ப துரத்தினாலும், வேறு வழியின்றி அங்கேயே தங்கியவர்களின் உழைப்பை பணக்கார சுரண்டல்காரர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். சொற்ப தொகைக்கு நாள் முழுவதும் உழைக்கும் அடிமைகளாக அவர்கள் மாற்றப்பட்டார்கள். பசியின் கொடுமை... வெறும் 75 சென்ட் முதல் 1.5 டாலர் வரை மட்டுமே பெற்றுக்கொண்டு உயிர்பிழைக்க போராடினார்கள். இந்த சொற்ப தொகையிலும் 25 சென்டுகளை அவர்கள் வீட்டு வாடகையாக தரவேண்டியதிருந்தது. வீடு என்றவுடன் ஏதோ பெரிதாக நினைத்துவிடாதீர்கள். கிழிந்த பாலிதீன் பேப்பர்களால் போர்த்தப்பட்ட கதவுகளற்ற குடிசைகள்தான் வீடு. சுகாதாரமற்ற சூழலால், அவர்கள் வசித்த பகுதி சேரிகளாக மாறி, காலரா, டிபி, மலேரியா, அம்மை உள்ளிட்ட நோய்கள் அவர்கை வாட்டி வதைத்தது.

யாருக்காகவோ தங்கள் உயிரையும், உழைப்பையும் இழந்து கொண்டிருப்பதை உணர்ந்த சிலர் முதுகு நிமிர்ந்து ஏன் என்று தட்டிக்கேட்டபோது, பண முதலைகளும், அரசாங்கமும் கை கோர்த்து அவர்களை தாக்கினார்கள். தீவிரவாதத்தில் ஈடுபடும் கம்யூனிஸ்டுகள் என முத்திரை குத்தி தண்டிக்கப்பட்டார்கள். மனிதர்கள் மேன்மேலும் அரக்கர்களாகி தண்டிக்கத் துவங்கியபோது, இயற்கை மென்மையாகியிருந்தது. மக்கள் அண்ட வந்த பூமியை விட்டு, பிறந்த பூமியை நோக்கி மீண்டும் புலம் பெயர்ந்தார்கள்.

அங்குதான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. எத்தனையோ நூற்றாண்டுகளாக அவர்கள் பிறந்து, வாழ்ந்து, கொண்டாடி, போராடி விளைநிலங்களாக வைத்திருந்த பூமி அபகரிக்கப்பட்டிருந்தது. இயற்கையின் தாக்குதலுக்கு அஞ்சி அவர்கள் அண்டைய பிரதேசங்களுக்கு தப்பிச் சென்று திரும்பி வந்த சில வருடங்களுக்குள், கார்ப்பரேட் பண முதலலைகள் அந்த ஏழை விவசாயிகளின் பூமியை தங்கள் வசமாக்கி கட்டிடங்களாக மாற்றிவிட்டிருந்தார்கள். அவர்கள் சொந்த மண்ணிலேயே வந்தேறிகளானார்கள். தாங்கள் உழுது பண்படுத்தி தன் வசம் வைத்திருந்த பூமியை இழந்து, அங்கு கால்பதிப்பதற்கே வாடகை தந்தார்கள். மண்ணின் சொந்தக்காரர்கள் சொந்த மண்ணிலேயே அடிமைகளாகிப்போனார்கள். இன்று அவர்களில் எவ்வளவோ பேர் படித்து, தெளிந்து, முன்னேறிவிட்டார்கள். ஆனாலும் அவர்களை Okies, Arkies என்று அடிமை முத்திரைகளால்தான் குறிப்பிடுகிறது, அமெரிக்க வரலாறு!

Tuesday, August 14, 2012

அங்கும் இங்கும் - கனவுகள்


சித்த மருத்துவக் கனவு

‘ஒருமுறை பஸ்ஸில் பயணம் செய்யும்போது, ஒரு பெண் தன்னிடமிருந்த ஆரஞ்சை எடுத்து அதன் சுளையை தன் சுத்தமாக கர்சிப்பில் வைத்துச் சுற்றி அதன் கூர் முனையை தன் 7 மாத கைக் குழந்தைக்கு கொடுத்தாள். குழந்தை தாய்ப்பால் அருந்துவது போல, பழச்சாற்றை துணியில் சப்பி சாப்பிட்டது. தாகமும் தணித்து, ஊட்டமும் தரும் அந்த தாயின் வித்தை ஒரு கிதை போல் மனதில் இன்னமும் இருக்கிறது.‘

மருத்துவர் சிவராமன்
(வலது முதல் நபர் )
டாக்டர் கு. சிவராமன் எழுதியுள்ள ‘மருந்தென வேண்டாவாம் . . .‘ என்ற புத்தகத்தின் இந்த அறிமுக வார்த்தைகளை படித்து அசந்து போனேன். பொதுவாக உணவுப் பழக்கம் பற்றிய புத்தகங்கள், திகட்டிப் போன திருமண விருந்து போல இருக்கும். ஆனால் இந்த நூலின் பின் அட்டையில் இதைப் படித்ததும், முழு புத்தகத்தையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட்டேன்.

முதல் அத்தியாயமே அருமை! அன்னைக்கான உணவு! பொதுவாக நமக்கு உணவு ஊட்டுபவள் அன்னை. அவளுக்கு உணவு ஊட்டுவது எப்படி? எந்த வகையான உணவு ஊட்ட வேண்டும் என்று முதல் அத்தியாயமே வித்தியாசமாக இருக்கிறது.

‘ஒரு கவள சோற்றை நாம் சாப்பிட்டாக வேண்டும் என்பதற்காக, எத்தனை மணி நேரம் கால் கடுக்க நின்று, கதை சொல்லி காக்காய் காண்பித்து, இப்போதைய நமது ‘சிக்‘ அல்லது ‘சிக்ஸ் பேக்‘ உடம்பிற்கு அவர்கள் அடித்தளம் போட்டிருப்பார்கள்? அவர்களுக்காக வயோதிக சங்கடங்களை பொறுத்து நம்மோடு இணைத்து வைத்திருப்பதில்தான் அவர்கள் நல்வாழ்வு துவங்கும். காக்கை கதை கேட்கும்போதே, நம்மையறியாமல் உணவு உள்ளே இறங்கிவிடும். அது போல இது போல அழகான பகிர்வுகளுடன் அவர் உணவுப் பழக்கங்கள் பற்றிச் சொல்லும்போது, இலகுவாக மனதில்பதிகிறது. சினிமா மால்களுக்கு செல்வதை குறைத்து, மாதத்தில் ஒரு நாள் புத்தகக் கடைகளுக்கு சென்று இது போல புத்தகங்களை வாசிக்கலாம்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். நான் சொல்ல வந்த விஷயம் வேறு. இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். Inaguration of 'Society for Integrative Health Research' என்ற தலைப்பில் நடந்த ஒரு கருத்தரங்கிற்கு சென்றிருந்தேன். அங்குதான் இந்த புத்தகமும், அதை எழுதிய மருத்துவர் கு.சிவராமனும் அறிமுகமானார்கள். ஓரிரு வார்த்தைகள்தான். அதற்குள் அவரை கருத்தரங்கிற்கு வந்தவர்கள் கவர்ந்து கொண்டுவிட்டார்கள். கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயம் இந்த புத்தகத்தைப் போலவே மிக முக்கியமானது. மேற்கத்திய மருந்து நிறுவனங்கள், திட்டமிட்டு எப்படி நமது சித்த மருத்துவ முறைகள் மக்களிடம் அண்ட விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி பேசினார்கள். சித்த மருத்துவத்தில் சாதாரண அரிப்பு முதல் கான்சர் வரை மருந்து உள்ளது என்பதை ஆர்வத்துடனும், ஆதங்கத்துடனும் பகிரந்து கொண்டார்கள்.

ஆதங்கத்துக்கு காரணம், மக்களிடம் சித்த மருத்துவத்தின் மேல் உள்ள நம்பிக்கை குறைவாக உள்ளது என்பதுதான். ஆனால் குறைபட்டுக் கொள்வதுடன் நின்றுவிடாமல், மக்களிடம் சித்த மருத்துவம் பிரபலமாக என்ன வழி என்றும் பல கருத்துகளை கூறினார்கள். அதில் ஒரு அம்சம் கவனிக்கத்தக்கது. சித்த மருத்துவம், மேற்கத்திய மருந்துகளைப் போல பிராண்டடாக கிடைப்பதில்லை. சைதாப்பேட்டை சித்த மருத்துவரும், கோயமுத்தூர் சித்த மருத்துவரும் மருத்துவத்தில் சிறந்தவர்களாக இருந்தாலும், தங்களுக்குள் ஒருங்கிணைந்து இருப்பதில்லை. சித்த மருந்து சாப்பிடும் ஒரு சைதாப்பேட்டைவாசி கோயமுத்தூர் செல்கிறார் எனக் கொள்வோம். வயிற்று வலி வந்தால் சைதாப்பேட்டை மருத்துவருக்குதான் ஃபோன் செய்வாரே தவிர, கோயமுத்தூர் மருத்துவரை நம்ப மாட்டார். ஆனால் அவரே மேற்கத்திய மருந்து சாப்பிடுபவராக இருந்தால், சைதாப்பேட்டையில் வாங்கிய அதே டோலோபாரை, கோயமுத்தூர் பார்மஸியில் வாங்கிக் கொள்வார். பிராண்ட் பெயர் ஒரு நம்பிக்கையை தருகிறது.

சித்த மருத்துவர்கள் தனித் தனியாக ஒரு தீவு போல இயங்குவதால், மருந்துகள் ஒரு குறிப்பிட்ட பிராண்டாக வெளிவருவதில் சாத்தியமே இல்லை. இதுவே அவர்கள் ஒன்றுபட்டு இந்த வியாதிக்கு இதுதான் தீர்வு என்று ஒரு மருந்து பட்டியல் தயாரித்து, மக்கள் எங்கு சென்றாலும் எளிதாக கிடைக்க வழி செய்தால், நம்பகத்தன்மை பெருகும். மேற்கத்திய மருந்துகளைப் போல பணம் பிடுங்காமல், பக்க விளைவுகள் இல்லாமல் மக்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும். ஆனால் இதற்கு சித்த மருத்துவர்கள் அனைவரும் ஒரே அமைப்பின் கீழ் இணைய வேண்டும், அதற்காகத்தான் இந்த அமைப்பு என்று அந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. சித்த மருத்துவர்கள் ஒன்றிணையும் அந்த நாள் எப்போது வரும் என்று, மருத்துவர் சிவராமன் போலவே நானும் காத்திருக்கிறேன்.

ஈழக் கனவு
கருணாநிதி டெசோ மாநாடு நடத்தி முடித்துவிட்டார். இது வெற்றி-தோல்வி, பலன்-பலனில்லை என பல விவாதங்கள், இணையச் சண்டைகள் அடுத்த பத்து நாட்களை அபகரித்துக்கொள்ளும்.

இந்த மாநாட்டில் ராம்விலாஸ் பஸ்வான் பேசியது கவனிக்கத்தக்கது. அடுத்தடுத்த டெஸோ மாநாடுகளை வட மாநிலங்களிலும் நடத்துங்கள். அப்போதுதான் இந்தியாவின் பிற பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் ஈழத் தமிழர்களின் பிரச்சனை புரியும் என்று பேசினார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் ஒரு இனப்பிரச்சனை தமிழகத்தை தவிர, இந்தியாவின் பிற பகுதிகளில் உணரப்படவே இல்லை என்பதுதான் இதன் சாராம்சம். இன்று வரை தமிழக அரசியல்வாதிகளின் ஓட்டு வங்கிப் பிரச்சனையாக மட்டுமே ஈழப் பிரச்சனை சுருங்கிவிட்டது.

எனவே கருணாநிதி,ஜெயலலிதா,வை.கோ,நெடுமாறன் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும்.இந்திய அரசை ஈழத்தமிழர் விஷயத்தில் நிர்ப்பந்திக்க ஒரே வழி, இந்தப் பிரச்சனையை தமிழகம் தாண்டியும், இந்தியா முழுவதும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாடு அல்லாத பிற மாநில இந்திய தலைவர்களின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். பாராளுமன்றத்தின் விவாதங்களை சர்வதேச அளவில் எதிரொலிக்கச் செய்ய வேண்டும். ஐ.நா.வில் குரல் எழுப்பக் கூடிய நாடுகளின் நட்பையும், ஆதரவையும் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் திரட்ட வேண்டும். இறுதியாக ஐ.நா.வின் நிர்பந்தத்துடன் இலங்கை அரசை ஈழம் தொடர்பான நியாயமான அரசியல் முடிவுகள் எடுக்கச் செய்ய வேண்டும்.

ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டுமென்றால், மிக மிக முக்கியமாக, இலங்கையில் உள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒரு வலுவான அரசியல் தலைவரை உருவாக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் கருணாநிதி, ஜெயலலிதாவையே நம்பிக் கொண்டிருக்க கூடாது. தாங்களே முடிவெடுக்கக் கூடிய, தாங்களே தங்களை வழிநடத்திக் கொள்ளக் கூடிய ஒரு ஈழத் தமிழ் தலைவர் காலத்தின் கட்டாயம். அப்படி ஒரு தலைவர் உருவாக வேண்டும். அந்த தலைவரின் கீழ் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஒரு வேளை தனி ஈழமே கிடைத்தாலும், அதனை தக்க வைத்துக் கொள்ள வலுவும், ஈர்ப்பும், எதிர்கால திட்டமும் உள்ள ஈழ தமிழ் அரசியல் தலைமையே இப்போதைய தேவை. இதெல்லாம் ஒரே நாளில் நடக்காது என்றாலும், இதெல்லாம் நடந்தே ஆக வேண்டும். 

எத்தனை எத்தனை உயிர்கள், விவரிக்க முடியாத தியாகங்கள்! இவற்றிற்கெல்லாம் ஒரு அர்த்தம் கிடைக்க வேண்டுமென்றால், தமிழக அரசியல் தலைவர்களையே நம்பிக் கொண்டிருக்கும் போக்கை கைவிட்டு, தங்களைத் தாங்களே வழிநடத்திக் கொள்ள ஒரு ஈழ அரசியல் தலைமை விரைவில் வடிவமெடுக்க வேண்டும். அப்படி வடிவமெடுக்காவிட்டால், ஈழம் என்கிற நெடும் கனவு, வெறும் கனவாகப் போய்விடும். ஆனால் அப்படி ஆகிவிடக் கூடாது. விரைவில் ஈழத் தமிழர்களின் கனவு மெய்ப்பட வேண்டும். இதுவே என் எண்ணம், இதுவே என் பிராத்தனை!

www.aanthaireporter.comல் வெளியான கட்டுரை!

Sunday, July 15, 2012

குமுதம் ராதாவை சொர்ணாக்கா என்கிறது. நானோ . . .

மீடியாக்களின் மேல் உள்ள நம்பகத்தன்மை குறைந்துவிட்டதா?
  1. ஆம்
  2. இல்லை
இரண்டில் ஒரு பதிலை சொல்லிவிட்டு அடுத்த பாராவுக்குச் செல்லுங்கள்

-----------------------------------------------------------------------------------------------------

லண்டன் டெலிகிராஃப் பத்திரிகை நொடித்துப் போயிருந்த சமயம். பெரிய வருமானம் இருக்காது எனத் தெரிந்தும், பிரிட்டிஷ் மீடியா மன்னர் பீவர்புரூக் அதை விலைக்கு வாங்கினார். அனைவருக்கும் ஆச்சரியம். ஏன் வாங்கினீர்கள் என்று கேட்டபோது ஒற்றை வார்த்தையில் அவர் சொன்ன பதில் ‘அதிகாரம்‘

ஆம்! இன்று பத்திரிகை என்பது செய்திகளைப் பகிர்வதோடு மட்டும் அல்லாமல், அரசாங்க அளவில் அதிகாரங்களைப் பகிரவும் முற்படுகின்றன. ஒரு பத்திரிகையால் அதிகார மையத்தை ஊடுருவ முடியுமா என்பவர்களுக்கு, நீராகேட் என்று வர்ணிக்கப்பட்ட டெலிஃபோன் உரையாடல்களை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.  டாடா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி என்று சொல்லிக் கொண்ட நீரா ராடியாவுடன் இணைந்து மீடியா பிரபலங்களான வீர்சிங்வி (ஹிந்துஸ்தான் டைம்ஸ்) மற்றும் பர்காதத் (என்டிடிவி) ஆகிய இருவரும் நடத்திய அரசியல் பேரங்கள் இன்னமும் நெட்டில் கிடக்கின்றன. மன்மோகன்சிங் மந்திரி சபை தொடர்பாக, கனிமொழி, ராஜாத்தியம்மாள் உள்ளிட்டோரிடம் அவர்கள் பேரம் பேசுவதை இப்போதும் கேட்கலாம்.

ஒரு ஜனநாயக நாட்டின் நான்காவது தூணாக பத்திரிகை துறை வர்ணிக்கப்படுகிறது. ஆனால் தற்போது இந்தியா போன்ற ஒரு நாட்டில், அது தூணாக இல்லாமல் ஒரு அரசியல் கடப்பாறையாக பல நேரம் செயல்படுகிறது. ஒரு புதிய அரசு உருவாவதற்கும், இருக்கின்ற அரசை அசைக்கவும் பத்திரிகைகள் தற்போது முனைப்பு காட்டுகின்றன. தங்களுக்குப் பிடித்த தலைவர்களை உயர்த்தி, பிடிக்காதவர்களை எந்த முகாந்திரமும் இன்றி விமர்சிக்கின்றன. எனவே அரசியல்வாதிகள் பத்திரிகைகளை தங்கள் வசப்படுத்த முயல்கிறார்கள். விளைவு... இன்று ஒரு கட்சிக்கோ, தலைவருக்கோ சார்பு நிலை எடுக்காத மீடியாவே இல்லை. நடுநிலை என்பதெல்லாம் பம்மாத்து.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், எங்கள் கட்சி தொடர்பான செய்திகளை, போராட்டங்களை எந்த பத்திரிகையும் வெளியிடுவதிலலை. தொலைகாட்சிகளும் கண்டு கொள்வதில்லை என்று அடிக்கடி குற்றம் சாட்டுவார். இத்தனைக்கும் அவரிடமே மக்கள் தொலைகாட்சி என்றொரு தொலைகாட்சி நிறுவனம் உண்டு.

சமீபத்தில் ஆனந்தவிகடனுக்கு பேட்டியளித்த திருமாவளவன் கூறியிருப்பதை வாசியுங்கள். ராமதாஸ் போலவே அவருக்கும் ஆதங்கம். மீடியாக்கள் எங்களைப் பற்றிய செய்திகளை புறக்கணிக்கிறார்கள். எனவே நாங்களே சொந்தமாக டெலிவிஷன் சேனல் துவங்குவோம் என்று கூறியுள்ளார். காரணம் என்ன? பீவர் புரூக் குறிப்பிட்டுள்ளது போல, அதிகாரம். கட்சிகள் அதிகாரத்திற்கு வருவதற்கும், நிலைப்பதற்கும் விலக்கப்படுவதற்கும் மீடியாக்களின் துணை தேவைப்படுகிறது.

அதிகார மையங்களில் தாங்கள் அழுத்தமாகப் பதிந்து கொள்ள, பத்திரிகைகள் இரு வகையாக அரசியல் செய்கின்றன. வலிந்து வலிந்து சிலரைப் பற்றி தொடர்ந்து (Paid news) எழுதி, அவரைப் பற்றிய மெகா பிம்பங்களை மக்கள் மனதில் விதைக்கின்றன. அல்லது சிலரைப் பற்றி கண்டு கொள்ளாமல், அவர்களைப் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்வது இன்னொரு வகை. எந்த வகையாக இருந்தாலும், வலிமையான மீடியாவை கையில் வைத்திருப்பவர்கள் அனைவருமே தனிக்காட்டு ராஜாக்கள்தான்.

மன்மோகன் சிங்கை Under Achiever என வர்ணித்து டைம் பத்திரிகை இந்த வாரம் ஒரு கட்டுரை வடித்துள்ளது. உடனே இங்கே பிரதான கட்சிகள் ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டு ஒருவரையொருவர் தாக்க ஆரம்பித்துவிட்டன. இதே போல வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது நடக்க முடியாமல் சக்கர நாற்காலியை பயன்படுத்தினார். அப்போதும் இதே டைம் பத்திரிகை வாஜ்பாய் ஆட்சியைப் பற்றி ‘Asleep at the Wheel‘ என்று கேலி செய்தது. அவர்களுடைய கணிப்பு சரியா? தவறா? அது தொடர்பான சர்ச்சைகள் தேவையா? இல்லையா? என்பது ஒரு புறம் இருக்கட்டும். இக்கட்டுரைகள் வெளியாகும் தருணங்கள்தான் கவனிக்கப்படவேண்டியவை. இந்தியாவின் அடுத்த பிரதமர் யாராக இருக்கக்கூடும் என்று மக்கள் யோசிக்கத் துவங்கும்போது, இவர் வேண்டாம், அவர் வேண்டும் என்று மக்கள் மனதில் சில எண்ணங்களை விதைக்கிற வேலையை இக்கட்டுரைகள் கச்சிதமாகச் செய்கின்றன. எதற்கு? வேறெதற்கு? அதிகாரம்தான்.

அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால், அவர்களுக்கே அதிகாரம் கிடைத்தது போலத்தானே.

--------------------------------------------------------------------------------------------------------

சர்வதேச அளவில் டைம் பத்திரிகை ஒரு அதிர்வை ஏற்படுத்தியது என்றால், கடந்தவாரம் கோடம்பாக்க அளவில் ஒரு அதிர்ச்சியை குமுதம் உண்டாக்கியது. நடிகை ராதாவை, சொர்ணாக்கா என்று விமர்சித்திருந்தது. தனது மகள் கார்த்திகாவுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, பெரிய பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை எல்லாம் தன் செல்வாக்கால் மடக்குகிறாராம். ஏற்கனவே யாராவது தேர்வாகி இருந்தால், அவர்களை படத்தைவிட்டே தன் செல்வாக்கால் தூக்கிவிட்டு தன் மகளை நடிக்க வைக்கிறாராம்.

இது போன்ற ‘.....றாராம்‘ என எழுதப்படும் யூகச் செய்திகளை நான் பெரும்பாலும் படிப்பதில்லை. ஆனால் அம்பிகா-ராதா சகோதரிகள் எங்கள் குடும்பத்திற்கு ஓரளவுக்கு பழக்கமானவர்கள் என்பதால் அந்த கட்டுரையை வாசித்தேன். இந்த நேரத்தில் நான் அம்பிகா-ராதா சகோதரிகள் பற்றி ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1991ம் வருடம். பிப்ரவரி 6. பாரத் பந்த். ஊரே அமைதியாக இருந்தது. விஹெச்எஸ் டேப்பில் நண்பர்களுடன் ஏதோ ஒரு அல்பசினோ படம் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்துக்கெல்லாம் இனம் புரியாத மனக் குழப்பம். சிறிது நேரத்திலேயே கும்பகோணத்திலிருந்து ஒரு ஃபோன். மோகமுள் திரைப்படக் குழுவிலிருந்து யாரோ பேசினார்கள்.

‘நீங்க ஐ.எஸ்.ஆரின் பையன் தானே?‘
‘ஆமாம்‘
‘உங்கள் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. உடனே கும்பகோணம் வாருங்கள்.‘ இதுதான் தகவல்.

தகவல் கிடைத்ததும், என் அம்மாவிற்கு அழுகை வந்துவிட்டது.
‘உடனே கும்பகோணம் புறப்படு, நானும் உடன் வருகிறேன்‘ என்று கண்ணீர்.
தங்கைகள் அழ ஆரம்பித்துவிட்டார்கள். குடும்பத்தில் சகஜநிலை சடுதியில் காணாமல் போனது. வேறுவழியில்லை, உடனே புறப்பட்டாக வேண்டிய கட்டாயம். அன்று பாரத் பந்த் என்பதால் பஸ், இரயில் எதுவும் இல்லை. மோட்டர் பைக்கிலேயே போகலாமா என்கிறான் என் தம்பி ரவி. சில நண்பர்கள் தடுத்துவிட்டார்கள்.

அப்போது ராதாவிடமிருந்து ஃபோன்.
‘ஏன் கவலைப் படறீங்க. எங்க காரை எடுத்துட்டுப் போங்க‘
முற்றிலும் எதிர்பாராத உதவி. கேட்காமலேயே கிடைத்த உதவி. விறுவிறுவென்று புறப்படுகிறோம். தங்கைகளுக்கு துணையாக என் தம்பியை வீட்டிலேயே விட்டுவிட்டு என் அம்மா மற்றும் ஒரு நண்பனுடன் நான் புறப்பட்டேன். கார் புறப்படும்போது,
‘சார், பெட்ரோல் பத்தாது‘ என்றார் டிரைவர்.
பெட்ரோலா? பெட்ரோலுக்கு எங்கே போவது. பந்த் காரணமாக பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டிருந்தன. மீண்டும் அம்பிகா-ராதா இல்லத்திலிருந்து உதவி. யாரிடமோ சொல்லி, எங்கிருந்தோ பெட்ரோல் வந்து சேர்ந்தது. ஒருவழியாகப் புறப்படும்போது கிட்டத்தட்ட மாலையாகிவிட்டது. டிரைவர் தயங்கினார்.

‘சார் எனக்கு கும்பகோணத்துக்கு வழி தெரியாது. அது மட்டுமில்லாம ஹைவேஸில் இரவில் வண்டி ஓட்டி பழக்கமில்லை‘ என்றார்.
மீண்டும் தயக்கமே இல்லாமல் அம்பிகா-ராதா இல்லத்தில் இருந்து உதவி. டிரைவர் மாற்றப்பட்டு புது டிரைவருடன் புறப்பட்டோம். கார் சிறிது தூரம் சென்றவுடனேயே தடால் என்று சத்தம். திடீரென்று துள்ளி நடுரோட்டுக்கு வந்துவிட்ட காளைமாட்டின் மேல் கார் மோதி நின்றுவிட்டது. முற்றிலும் எதிர்பாராமல் காரின் ரேடியேட்டரே பங்ச்சர் ஆகிவிட்டது.

ராதாவுடன் என் தம்பி ரவிகுமார்
‘கார் நகரவே நகராது சார் என்றார் டிரைவர்.
என்னுடைய அம்மா மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டார். வீடு திரும்பவும் வழி இல்லை, கும்பகோணம் செல்லவும் வழி இல்லை. என்ன செய்வது? உடைந்த காரில் என் அம்மாவுக்கு நண்பனை துணைக்கு வைத்துவிட்டு, யாருக்கு எப்படி தகவல் தெரிவிப்பது எனப் புரியாமல் ஆளுக்கு ஒரு திசையில் நானும் டிரைவரும் நடந்தோம். ஃபோன் வசதி தேடி எவ்வளவு தூரம் நடந்தேன் எனத் தெரியாது. ஒரு விறகுக் கடையை கண்டுபிடித்தேன். அவர் அருகிலிருந்த ஒரு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, யாரையோ எழுப்பி, சம்மதம் வாங்கி, ஃபோன் செய்ய அனுமதி பெற்றுத் தந்தார்.

புதுகார் விபத்துக்குள்ளாகிவிட்டதே, என்று தயங்கித் தயங்கி விஷயத்தை சொன்னேன். மனம் முழுக்க அப்பாவின் உடல் நிலைபற்றிய அபத்திரம், கார் விபத்து பற்றிய அதிர்ச்சி. நான் என்ன பேசினேன் என்பது ஞாபகமில்லை. என்ன ஆச்சரியம், காரைப் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை.

‘நீங்கள் பத்திரமாக இருக்கிறீர்களா‘ என்ற விசாரிப்புதான் அதிகமாக இருந்தது.

‘நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்‘ எனக் கேட்டார்கள். எனக்குத் தெரியவில்லை. விறகுக் கடைக்காரர்தான் ஏதோ அடையாளம் சொன்னார்.
‘அங்கேயே இருங்கள். இன்னொரு காரை அனுப்பி வைக்கிறோம்‘ எனச் சொன்னார்கள்.

என்னால் இன்று வரை நம்ப முடியவில்லை. அவசரத்துக்கு உதவியாகக் கொடுத்த கார் விபத்துக்குள்ளான பின்னும், அது பற்றிக் கவலை இன்றி, இன்னொரு காரை அனுப்பி உதவிய அந்த நல்ல மனதை இன்னமும் நான் வியக்கிறேன்.

எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர்
அதிர்ச்சி, சோகம், வியப்பு என பல உணர்வுகள் குவியலாக என்னை புரட்டி எடுத்துக் கொண்டிருக்க மறுநாள் என் தந்தையை மருத்துவமனை படுக்கையில் சந்தித்தோம். அதுவே அவருடன் கழித்த இறுதி நாள். ஒரு இரவு முழுக்க மருந்து, மாத்திரை, ஊசி, வலி, மூச்சிறைப்பு என ஒரு உயிரின் இறுதி அவஸ்தைகளை அருகிலிருந்து கவனித்தேன். அதிகாலை எட்டுமணிக்கு எங்கள் தந்தை எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்.

‘முடிச்சுட்டியாடா . . . ‘
அவர் இறுதியாக என்னிடம் கேட்ட கேள்வி இதுதான். குட்டி பத்மினி நிறுவனத்துக்காக என்னை ஒரு ஸ்க்ரிப்ட் எழுதச் சொல்லியிருந்தார். அவர் அதைக் குறித்துதான் என்னைக் கேட்டார். நான் அந்த ஸ்க்ரிப்டை மட்டுமல்ல, இன்னும் எவ்வளவோ விஷயங்களை முடிக்கவே இல்லை.

அதில் ஒன்று, அம்பிகா-ராதா குடும்பத்தினருக்கு தகுந்த நேரத்தில் நன்றி கூற வேண்டும் என்பது.

எங்கள் தந்தையை அவர் மூச்சு நிற்பதற்குள் ஒரே ஒரு முறையாவது சந்திக்க உதவி செய்த அவர்களின் நல்ல உள்ளங்களை, கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கடந்த பின், இந்தக் கட்டுரையின் மூலம் உலகுக்குச் சொல்ல ஒரு வாய்ப்பு.

நன்றி! உள்ளத்தில் நல்ல உள்ளங்களுக்கு!

Tuesday, June 26, 2012

அங்கும் இங்கும் - 01 : திடீர் நகரில் திடீர் தமிழ் டெஸ்ட்!


திடீர் நகரில் திடீர் தமிழ்தாய் வாழ்த்து டெஸ்ட்!
இன்று காலையில் சைதாப்பேட்டை திடீர் நகரில் ஒரு பள்ளிக்கூட விழா. நமது சென்னை மேயர் சைதையார்தான் சிறப்பு விருந்தினர். விழா நிறைவடையும்போது, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் யாராவது ஐந்து பேர் மேடைக்கு வந்து தமிழ்தாய் வாழ்த்து பாடுங்கள் என்றார். மாணவ தயக்கங்கள், ஆசிரியர் வடிகட்டல்களுக்குப் பின் ஒரு சிறுமி மேடை ஏறினாள். எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெறும் என்று தயங்கி, இழுத்து, மூச்சு வாங்கி வாழ்த்துதுமே.. என்று முடித்தாள். தொடர்ந்து கைதட்டல்கள். உடனே மேயர் தனது பாக்கெட்டிலிருந்து 500 ரூபாய் எடுத்து தலைமை ஆசிரியரிடம் கொடுத்தார். கொடுக்கும்போதே அந்த மாணவி பாடும்போது எத்தனை பிழை செய்தாள் என்று தெரியுமா எனக் கேட்டார். நான்கைந்து என்றார் ஆசிரியை. ம்ம்ம்ம்... இதுதான் நடக்கக் கூடாது என்கிறேன். தமிழ்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் எந்தப் பிழையும் இன்றி மாணவர்களுக்கு பாடத் தெரிய வேண்டும். இதை கவனத்துல வைச்சுக்கோங்க. இந்த 500 ரூபாயை ஆளுக்கு 100 ரூபாயா அந்த மாணவர்களுக்கு கொடுத்துடுங்க என்று சொல்லிவிட்டு, தேசிய கீதத்துக்கு அட்டென்ஷனில் நிற்க ஆரம்பித்துவிட்டார்.

நான் காமிரா மேன் அவதாரம் எடுத்திருந்ததால், மேயரை விழுங்கிக் கொண்டு காமிரா ஓடிக் கொண்டிருக்கும்போதே நினைவுகளை ரீவர்ஸ் கியர் போட்டு 6 மாதத்திற்கு முந்திய குற்றாலம் இசக்கி ரிசாட்ஸ்சுக்கு ஓட விட்டேன். பசுமை விடியல் என்ற நான் சம்பந்தப்பட்ட மரம்நடு விழா. சிறப்பு விருந்தினராக அம்பா சமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா. அவரும் நானும் பள்ளி படித்த நாட்களில் இருந்து நண்பர் என்பதால் நட்பின் அடிப்படையில் விழாவுக்கு சம்மதித்திருந்தார். தேசிய கீதத்திற்குப் பின் விழா நிறைவடையும்போது, மேயரைப் போலவே உச்சரிப்பு பிழைகளை சுட்டிக்காட்டி, தேசிய கீதத்தை ஒழுங்கா பாடணும் என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.

அம்மா பாசறையில் தமிழ்தாய் வாழ்த்து பாடச் சொல்லி எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி, மேயர் உட்பட அனைவரையும் டெஸ்ட் பண்ணுவார்களோ. இருவரும் ஒரே மாதிரி நடந்து கொண்டதைப் பார்த்ததால் இப்படி எண்ணத் தோன்றுகிறது.

ஓகே... ஃபிளாஷ்பேக் முடிந்து இப்போது உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என் காமிரா. எங்கே பிழையின்றி பாடுங்கள் பார்க்கலாம்!
நீராருங் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில் . . .

சகுனியும் - பாபாவும்
சென்னை ஆழ்வார்திருநகரிலிருந்து ராமாவரம் செல்லும் வழியில் நடிகர் திரு. சிவகுமார் அவர்களுக்கு சொந்தமான ஒரு நிலம் உள்ளது. நிலத்தைச்சுற்றி உள்ள காம்பவுண்டு சுவரில் சூர்யா-கார்த்தியை வாழ்த்தி, பிறந்தநாள் மற்றும் வெற்றி பெற வாழ்த்துகள் சுவரொட்டிகள் அவ்வப்போது முளைத்துக் கொண்டே இருக்கும். தற்போது சகுனி வெற்றி பெற கார்த்தி போர்படை தளபதிகள் சுவற்றை ஆக்கிரமித்திருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு, இந்த நிலத்தை தலைவர் கட்சியினர் அபகரிக்க முயன்றதாகவும், பின்னர் ஆட்சி மாறி தலைவி கட்சியினர் மீட்டுத் தந்ததாகவும் அவ்வளவாக பிரபலமாகாத வதந்தி ஒன்று நிலவியது. நிலம் பிரச்சனையில் சிக்கி இருந்த காலத்தில், திரு.சிவகுமார் மற்றும் அவருடைய உற்ற கோவை நகர நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு இயக்கம் ஆரம்பித்து இரண்டே நாட்களில் (மிரட்டல்கள் காரணமாக) கலைக்கப்பட்டதாகவும் வதந்தி போன்ற ஒரு செய்தி உலவியது. நான் மறந்து போயிருந்த அந்த வதந்திகளை நேற்றிரவு பார்த்த சகுனி படம் ஞாபகப்படுத்திவிட்டது. இந்த வரியிலேயே சொல்லிவிடுகிறேன் படம் குப்பை. கார்த்தியின் குடும்ப சொத்தாக இருக்கும் ஒரு வீட்டை, மாநில முதல்வர், பாலம் கட்டுவதாகச் சொல்லி அபகரித்துவிடுகிறார். அவரை சகுனி வேலை பார்த்து கார்த்தி எப்படி வெல்கிறார் என்பதே இந்த குப்பையின் கதை. சிவகுமார் குடும்பத்தினரின் சொந்தப் படம் இது. ஒரு வேளை சொந்த அனுபவம் அரசியல் படமாகிவிட்டதோ... டவுட்டு.

டவுட்டே இல்லாமல் சொல்வதென்றால் ரஜினியின் பாபா படத்திலும் இதே போல ஒரு காட்சி வரும். அவருடைய வீட்டை ஒரு தலைவர் அபகரிப்பார். அதுவரை மனிஷா கொய்ரலாவின் பின்னால் தெரியும் ரஜனி, உடனே சொடக்குப்போட்டு, கவுண்டவுன் சொல்லி வில்லனுடன் மோத ஆரம்பித்துவிடுவார். பாட்ஷா காலத்தில் ரஜினியின் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை தலைவி கட்சியினர் அபகரிக்க முயன்றபோது ஏற்பட்ட கசப்பையே ரஜினி காட்சிகளாக்கினார் என்பது பழைய தகவல்.

சகுனி வேறு, பாபா வேறு என்றாலும், இரண்டுக்கும் அடிப்படை காரணம் தனிப்பட்ட அரசியல் கசப்போ?

சூட்டைக் கிளப்பும் அதிபர் தேர்தல்கள்
நமது அடுத்த ஜனாதிபதி பிரணாப்தான் என்பதில், அவரது போட்டியாளர் சங்மா உட்பட எவருக்கும் சந்தேகமில்லை. திரு.அப்துல்கலாம் அவர்களை பெரும்பாலான அரசியல் தலைவர்கள் ஆதரிக்காத நிலையில், பி.ஜே.பி தனது சார்பாக யாரை நிறுத்துவது என குழம்பிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் சுயேச்சையாக பி.ஜே.பியின் துணையுடன் நின்று தேர்தலை எதிர்கொள்ள முயற்சித்ததாக சில செய்திகள் கசிந்திருக்கின்றன. இதற்கு அத்வானி, ஜெயலலிதா மற்றும் பிஜிபட்நாயக்கும் கூட ஒப்புக் கொண்டதாகத் தகவல். அரசியல் தலைவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், நாடெங்கிலும் இளைஞர்களின் ஆதரவு அவருக்கு இருந்ததால், அவர்களை திரட்டி, அவர்களின் துணையுடன், அண்ணா ஹசாரே பாணியில் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் வீட்டு வாசலில் கலாமுக்கு ஆதரவான கூட்டங்கள் நடத்தி, மீடியாக்கள் துணையுடன் ஒரு பரபரப்பை உண்டு பண்ணலாம். அது தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்பை தராவிட்டாலும், நாடு முழுவதும் ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தும் என அவரது ஆலோசகர்கள் கூறினார்களாம். ஆனால் தனது ஆசிரியர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை ஆலோசித்தபின், இந்த எண்ணத்தைக் கைவிட்டாராம்.

எகிப்தில் சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்திருக்கிறது. தாஹீர் சதுக்கத்தில் மக்கள் முழக்கமிட முகமது மோர்ஸி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். சர்வாதிகாரியாக எகிப்தை தனது விரல் நுனியில் வைத்திருந்த முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின், முகமது மோர்ஸி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எகிப்திய அதிபராக பதவி ஏற்கிறார். கிட்டத்தட்ட 80 நீண்ட வருடங்கள். முபாராக் வீழ்ந்த பின்னும், அவருக்கு கட்டுப்பட்டிருந்த எகிப்திய ராணுவம், நீதி மன்றம் மட்டும் அரசியல் சட்டங்கள் அவ்வளவு எளிதாக மோர்ஸியை பதிவி ஏற்கவிடவில்லை. ஏகப்பட்ட தில்லுமுல்லுகளை செய்து, அவர் கட்சியினர் வென்ற தொகுதிகளை செல்லாது என்று அறிவித்தது முபாரக்கின் நிழல் படிந்த அதிகாரம். ஆனால் சர்வதேச அளவில் கவனம் பெற்றுவிட்டதால், உலகம் முழுக்க உற்றுப்பார்க்கத் துவங்கியதும், சர்வாதிகாரம் நிறைய தயக்கங்கள் மற்றும் கோபத்துடன் தனது பிடியை தளர்த்திக் கொண்டிருக்கிறது. எகிப்திய அரசு சர்வாதிகாரத்திலிருந்து மக்களாட்சிக்கு மாறப்போகிறது. அது அவ்வளவு எளிதல்ல. அதற்கான சட்டங்களை இயற்றி அதை கடைபிடிப்பதுதான் மோர்ஸிக்கு முன்னிருக்கும் சவால். அந்த சவாலில் அவர் வெல்லுவதற்கு, இந்தியா என்கிற மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் குடிமகனாக இருந்து என் வாழ்த்துகள்!


கடைசி பாரா - கடைசி கேள்வி
இந்தியாவில் ஆள் துளையில் சிக்கி இறந்து போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் . . .
1. பெற்றோர்களின் கவனமின்மை
2. நிர்வாகத்தின் பொறுப்பின்மை
இந்த இரண்டில் உங்கள் கருத்து எது?