Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

Thursday, July 24, 2014

அரசியல்வாதிகளின் சொத்துக்கணக்கு என்பது எப்போதும் ஒரு மோசடிக்கணக்கு

கோபாலபுரம் வீட்டைத்தவிர தனக்கு வேறு ஏதும் சொத்துகள் இல்லை என்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. 

அகில இந்தியாவிலும் எந்த அரசியல் தலைவரைக் கேட்டாலும் அவர்களுடைய சொத்துக் கணக்கு இந்த ரீதியில்தான் இருக்கும். சாதாரண நடுத்தர மக்களே பினாமியில் டெபாசிட் பண்ணுவதும், சொத்து வாங்குவதும், அதன் மதிப்பை குறைத்து பதிந்து கொள்வதும் சகஜமாகிவிட்டது. அப்படி இருக்கையில் நம்மை விட படு உஷாரான அரசியல்வாதிகள் தங்கள் பெயரில் சொத்துக்களை வாங்கி, அதை கணக்கிலும் காட்டுவார்கள் என்பது வெறும் கற்பனையாகத்தான் இருக்க முடியும்.

அதனால் கருணாநிதி இப்படிச் சொன்னதில் எனக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை. தற்போதைய பரபரப்பு நாயகர் கட்ஜீ இதே போல மற்ற அரசியல் தலைவர்களையும் கணக்கு கேட்டால் பல வியப்பான போலி சொத்துத் தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

அவ்வளவு ஏன்... பதிலுக்கு பதில் கட்ஜீவை சொத்துக் கணக்கு கேட்கிறார் கருணாநதிதி. ஒருவேளை கருணாநிதியின் கேள்வியை ஏற்று கட்ஜீ கணக்கு காட்டினால், கட்ஜீவின் சொத்துக்கணக்கே நம்மால் நம்ப முடியாத குறைச்சலான கணக்காகத்தான் இருக்கும்.

Thursday, August 16, 2012

ஃபேஸ்புக் நண்பர் கலைஞர் அவர்களுக்கு ஒரு கடிதம்

வணக்கம் கலைஞர் அவர்களே, 

பல தலைமுறைகள் கண்ட நீங்கள், இன்றைய இணைய தலைமுறையையும் நேரடியாக சந்திக்க வந்ததை பலத்த கைதட்டல்களுடன் வரவேற்கிறோம்.

சரியோ, தவறோ இயன்றவரை பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்தித்து உங்கள் கருத்துகளை எங்களிடம் கூறிவருகி
றீர்கள்.

அரசியல் களம் பல கண்டது உங்கள் பேனா! நாட்டின் தலையெழுத்தை புரட்டிப் போட்ட பல விவாதங்களை துவக்கியும், நடத்தியும் வைத்திருக்கிறது உங்கள் பேனா! உங்களுடைய அனுபவம் வாய்ந்த பேனா, இனி எங்களுடைய கேள்விகளுக்கும் பதில் சொல்லும் என்பது இனிய அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

உங்கள் மீதும், உங்கள் இயக்கம் மீதும் இங்கே எத்தனையோ விமர்சனங்கள் உண்டு, ஆதரவுக் குரல்களும் உண்டு. இவற்றையெல்லாம் சமாளிக்கத்தான் நீங்கள் இணையம் வந்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

உங்களை நாங்கள் கேள்வி கேட்க முடியுமா? என தயக்கமும், எங்கள் விமர்சனங்களை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? என அச்சமும் எங்களில் சிலருக்கு இருக்கிறது. அவற்றை களைவீர்கள், எங்களுடன் கலந்து உரையாடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இதை எழுதுகிறேன்.

வரலாற்றின் ஒவ்வொரு நிகழ்வையும் உங்கள் பேனா நுனியில் வைத்திருப்பவர் நீங்கள். கட்டற்ற சுதந்திரம் தந்திருக்கும் இணையம், உங்களைப் போன்ற மாபெரும் தலைவர்களையும் சந்திக்க, உரையாட வாய்ப்பு தந்திருக்கிறது. இதனை நாங்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்வோம்.

உங்களைத் தொடர்ந்து, உங்களைப் போன்ற இதர தலைவர்களும் இணையத்திற்கு வர வேண்டும். விவாதங்களில் ஈடுபட வேண்டும். அதில் நாங்களும் பங்கு கொள்ள வேண்டும். மக்களுக்கும், அரசியலுக்கும் உள்ள தூரம் இதனால் குறையும்.

அப்படி ஒரு நிலையை நீங்கள் விரைவில் ஏற்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன், மீண்டும் ஒரு முறை உங்களை இணைய உலகிற்கு அன்புடனும், ஆரவாரத்துடனும் வரவேற்கிறேன்.

இப்படிக்கு உங்கள் ஃபேஸ்புக் நண்பன்.
(ஃபேஸ்புக் எல்லோரையும் இப்படித்தான் அறிமுகம் செய்து வைக்கிறது)

Tuesday, August 14, 2012

அங்கும் இங்கும் - கனவுகள்


சித்த மருத்துவக் கனவு

‘ஒருமுறை பஸ்ஸில் பயணம் செய்யும்போது, ஒரு பெண் தன்னிடமிருந்த ஆரஞ்சை எடுத்து அதன் சுளையை தன் சுத்தமாக கர்சிப்பில் வைத்துச் சுற்றி அதன் கூர் முனையை தன் 7 மாத கைக் குழந்தைக்கு கொடுத்தாள். குழந்தை தாய்ப்பால் அருந்துவது போல, பழச்சாற்றை துணியில் சப்பி சாப்பிட்டது. தாகமும் தணித்து, ஊட்டமும் தரும் அந்த தாயின் வித்தை ஒரு கிதை போல் மனதில் இன்னமும் இருக்கிறது.‘

மருத்துவர் சிவராமன்
(வலது முதல் நபர் )
டாக்டர் கு. சிவராமன் எழுதியுள்ள ‘மருந்தென வேண்டாவாம் . . .‘ என்ற புத்தகத்தின் இந்த அறிமுக வார்த்தைகளை படித்து அசந்து போனேன். பொதுவாக உணவுப் பழக்கம் பற்றிய புத்தகங்கள், திகட்டிப் போன திருமண விருந்து போல இருக்கும். ஆனால் இந்த நூலின் பின் அட்டையில் இதைப் படித்ததும், முழு புத்தகத்தையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட்டேன்.

முதல் அத்தியாயமே அருமை! அன்னைக்கான உணவு! பொதுவாக நமக்கு உணவு ஊட்டுபவள் அன்னை. அவளுக்கு உணவு ஊட்டுவது எப்படி? எந்த வகையான உணவு ஊட்ட வேண்டும் என்று முதல் அத்தியாயமே வித்தியாசமாக இருக்கிறது.

‘ஒரு கவள சோற்றை நாம் சாப்பிட்டாக வேண்டும் என்பதற்காக, எத்தனை மணி நேரம் கால் கடுக்க நின்று, கதை சொல்லி காக்காய் காண்பித்து, இப்போதைய நமது ‘சிக்‘ அல்லது ‘சிக்ஸ் பேக்‘ உடம்பிற்கு அவர்கள் அடித்தளம் போட்டிருப்பார்கள்? அவர்களுக்காக வயோதிக சங்கடங்களை பொறுத்து நம்மோடு இணைத்து வைத்திருப்பதில்தான் அவர்கள் நல்வாழ்வு துவங்கும். காக்கை கதை கேட்கும்போதே, நம்மையறியாமல் உணவு உள்ளே இறங்கிவிடும். அது போல இது போல அழகான பகிர்வுகளுடன் அவர் உணவுப் பழக்கங்கள் பற்றிச் சொல்லும்போது, இலகுவாக மனதில்பதிகிறது. சினிமா மால்களுக்கு செல்வதை குறைத்து, மாதத்தில் ஒரு நாள் புத்தகக் கடைகளுக்கு சென்று இது போல புத்தகங்களை வாசிக்கலாம்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். நான் சொல்ல வந்த விஷயம் வேறு. இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். Inaguration of 'Society for Integrative Health Research' என்ற தலைப்பில் நடந்த ஒரு கருத்தரங்கிற்கு சென்றிருந்தேன். அங்குதான் இந்த புத்தகமும், அதை எழுதிய மருத்துவர் கு.சிவராமனும் அறிமுகமானார்கள். ஓரிரு வார்த்தைகள்தான். அதற்குள் அவரை கருத்தரங்கிற்கு வந்தவர்கள் கவர்ந்து கொண்டுவிட்டார்கள். கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயம் இந்த புத்தகத்தைப் போலவே மிக முக்கியமானது. மேற்கத்திய மருந்து நிறுவனங்கள், திட்டமிட்டு எப்படி நமது சித்த மருத்துவ முறைகள் மக்களிடம் அண்ட விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி பேசினார்கள். சித்த மருத்துவத்தில் சாதாரண அரிப்பு முதல் கான்சர் வரை மருந்து உள்ளது என்பதை ஆர்வத்துடனும், ஆதங்கத்துடனும் பகிரந்து கொண்டார்கள்.

ஆதங்கத்துக்கு காரணம், மக்களிடம் சித்த மருத்துவத்தின் மேல் உள்ள நம்பிக்கை குறைவாக உள்ளது என்பதுதான். ஆனால் குறைபட்டுக் கொள்வதுடன் நின்றுவிடாமல், மக்களிடம் சித்த மருத்துவம் பிரபலமாக என்ன வழி என்றும் பல கருத்துகளை கூறினார்கள். அதில் ஒரு அம்சம் கவனிக்கத்தக்கது. சித்த மருத்துவம், மேற்கத்திய மருந்துகளைப் போல பிராண்டடாக கிடைப்பதில்லை. சைதாப்பேட்டை சித்த மருத்துவரும், கோயமுத்தூர் சித்த மருத்துவரும் மருத்துவத்தில் சிறந்தவர்களாக இருந்தாலும், தங்களுக்குள் ஒருங்கிணைந்து இருப்பதில்லை. சித்த மருந்து சாப்பிடும் ஒரு சைதாப்பேட்டைவாசி கோயமுத்தூர் செல்கிறார் எனக் கொள்வோம். வயிற்று வலி வந்தால் சைதாப்பேட்டை மருத்துவருக்குதான் ஃபோன் செய்வாரே தவிர, கோயமுத்தூர் மருத்துவரை நம்ப மாட்டார். ஆனால் அவரே மேற்கத்திய மருந்து சாப்பிடுபவராக இருந்தால், சைதாப்பேட்டையில் வாங்கிய அதே டோலோபாரை, கோயமுத்தூர் பார்மஸியில் வாங்கிக் கொள்வார். பிராண்ட் பெயர் ஒரு நம்பிக்கையை தருகிறது.

சித்த மருத்துவர்கள் தனித் தனியாக ஒரு தீவு போல இயங்குவதால், மருந்துகள் ஒரு குறிப்பிட்ட பிராண்டாக வெளிவருவதில் சாத்தியமே இல்லை. இதுவே அவர்கள் ஒன்றுபட்டு இந்த வியாதிக்கு இதுதான் தீர்வு என்று ஒரு மருந்து பட்டியல் தயாரித்து, மக்கள் எங்கு சென்றாலும் எளிதாக கிடைக்க வழி செய்தால், நம்பகத்தன்மை பெருகும். மேற்கத்திய மருந்துகளைப் போல பணம் பிடுங்காமல், பக்க விளைவுகள் இல்லாமல் மக்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும். ஆனால் இதற்கு சித்த மருத்துவர்கள் அனைவரும் ஒரே அமைப்பின் கீழ் இணைய வேண்டும், அதற்காகத்தான் இந்த அமைப்பு என்று அந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. சித்த மருத்துவர்கள் ஒன்றிணையும் அந்த நாள் எப்போது வரும் என்று, மருத்துவர் சிவராமன் போலவே நானும் காத்திருக்கிறேன்.

ஈழக் கனவு
கருணாநிதி டெசோ மாநாடு நடத்தி முடித்துவிட்டார். இது வெற்றி-தோல்வி, பலன்-பலனில்லை என பல விவாதங்கள், இணையச் சண்டைகள் அடுத்த பத்து நாட்களை அபகரித்துக்கொள்ளும்.

இந்த மாநாட்டில் ராம்விலாஸ் பஸ்வான் பேசியது கவனிக்கத்தக்கது. அடுத்தடுத்த டெஸோ மாநாடுகளை வட மாநிலங்களிலும் நடத்துங்கள். அப்போதுதான் இந்தியாவின் பிற பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் ஈழத் தமிழர்களின் பிரச்சனை புரியும் என்று பேசினார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் ஒரு இனப்பிரச்சனை தமிழகத்தை தவிர, இந்தியாவின் பிற பகுதிகளில் உணரப்படவே இல்லை என்பதுதான் இதன் சாராம்சம். இன்று வரை தமிழக அரசியல்வாதிகளின் ஓட்டு வங்கிப் பிரச்சனையாக மட்டுமே ஈழப் பிரச்சனை சுருங்கிவிட்டது.

எனவே கருணாநிதி,ஜெயலலிதா,வை.கோ,நெடுமாறன் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும்.இந்திய அரசை ஈழத்தமிழர் விஷயத்தில் நிர்ப்பந்திக்க ஒரே வழி, இந்தப் பிரச்சனையை தமிழகம் தாண்டியும், இந்தியா முழுவதும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாடு அல்லாத பிற மாநில இந்திய தலைவர்களின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். பாராளுமன்றத்தின் விவாதங்களை சர்வதேச அளவில் எதிரொலிக்கச் செய்ய வேண்டும். ஐ.நா.வில் குரல் எழுப்பக் கூடிய நாடுகளின் நட்பையும், ஆதரவையும் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் திரட்ட வேண்டும். இறுதியாக ஐ.நா.வின் நிர்பந்தத்துடன் இலங்கை அரசை ஈழம் தொடர்பான நியாயமான அரசியல் முடிவுகள் எடுக்கச் செய்ய வேண்டும்.

ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டுமென்றால், மிக மிக முக்கியமாக, இலங்கையில் உள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒரு வலுவான அரசியல் தலைவரை உருவாக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் கருணாநிதி, ஜெயலலிதாவையே நம்பிக் கொண்டிருக்க கூடாது. தாங்களே முடிவெடுக்கக் கூடிய, தாங்களே தங்களை வழிநடத்திக் கொள்ளக் கூடிய ஒரு ஈழத் தமிழ் தலைவர் காலத்தின் கட்டாயம். அப்படி ஒரு தலைவர் உருவாக வேண்டும். அந்த தலைவரின் கீழ் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஒரு வேளை தனி ஈழமே கிடைத்தாலும், அதனை தக்க வைத்துக் கொள்ள வலுவும், ஈர்ப்பும், எதிர்கால திட்டமும் உள்ள ஈழ தமிழ் அரசியல் தலைமையே இப்போதைய தேவை. இதெல்லாம் ஒரே நாளில் நடக்காது என்றாலும், இதெல்லாம் நடந்தே ஆக வேண்டும். 

எத்தனை எத்தனை உயிர்கள், விவரிக்க முடியாத தியாகங்கள்! இவற்றிற்கெல்லாம் ஒரு அர்த்தம் கிடைக்க வேண்டுமென்றால், தமிழக அரசியல் தலைவர்களையே நம்பிக் கொண்டிருக்கும் போக்கை கைவிட்டு, தங்களைத் தாங்களே வழிநடத்திக் கொள்ள ஒரு ஈழ அரசியல் தலைமை விரைவில் வடிவமெடுக்க வேண்டும். அப்படி வடிவமெடுக்காவிட்டால், ஈழம் என்கிற நெடும் கனவு, வெறும் கனவாகப் போய்விடும். ஆனால் அப்படி ஆகிவிடக் கூடாது. விரைவில் ஈழத் தமிழர்களின் கனவு மெய்ப்பட வேண்டும். இதுவே என் எண்ணம், இதுவே என் பிராத்தனை!

www.aanthaireporter.comல் வெளியான கட்டுரை!

Monday, March 19, 2012

சங்கரன் கோவிலும் அடுத்த பிரதமரும்

சங்கரன் கோவில்!
மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு சாதாரண இடைத்தேர்தல். ஆனால் இது இந்திய அளவில் அரசியல் மாற்றங்களை உண்டு பண்ணக் கூடிய சில அம்சங்களை உள்ளடக்கியது.

முதலில் தேர்தல் நடைபெறும் சூழலைப் பார்ப்போம். விலைவாசி, மின்சாரப் பற்றாக்குறை என மக்களின் கடும் அதிருப்தியுடன் அதிமுக தேர்தலை சந்திக்கிறது. எனவே ஏற்கனவே இத் தொகுதியை தன் வசம் வைத்திருக்கும் அதிமுக, இந்த தேர்தலை அது வென்றே ஆக வேண்டும். இல்லையென்றால் இந்த ரிசல்ட் பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். இதை வென்றால் மட்டுமே கூட்டணிக் கட்சிகள் அதிமுகவின் சொல்பேச்சை கேட்கும்.

பிரதான எதிர்கட்சிகள் எல்லாமே இம்முறை தனித்தனியாக தேர்தலை சந்திக்கின்றன. ஆளும்கட்சியை அதிகார பலம், பண பலத்தை மீறி இவர்களால் வெல்ல முடியாது. சிதறிக்கிடப்பதால் அதிமுகவுக்குதான் லாபம். ஆனால் தங்கள் சுய பலம் என்ன என்பதை ஓரளவுக்கு அறியவும், எதிர்காலத்தில் தங்களுக்குள்ளோ அதிமுகவுடனோ கூட்டணி அமைத்தால் கடுமையாக பேரம் பேசவும் இவர்களுக்கு உதவும்.


பாராளுமன்றத்துக்குள் குறைந்தபட்சம் 30 எம்பிக்களுடன் நுழைவதற்கான முன்னோட்டமாக அதிமுக இதைப் பார்க்கிறது. அகில இந்திய அளவில் தேர்தல் நடக்கும்போது, காங்கிரஸ் தோற்று பிஜேபி ஆட்சியை பிடிக்கக்கூடிய நிலை வந்தால், யார் பிரதமர் என்ற மோதல் அங்கே அதிகரிக்கும். அகில இந்திய அளவில் நரேந்திர மோடிதான் இப்போதைக்கு பிரபலம். ஆனால் அத்வானி கோஷ்டி மோடியை குஜராத்துக்குள்ளேயே முடக்க முயற்சிக்கும். ஏனென்றால் அத்வானிக்கு இதுதான் கடைசி வாய்ப்பு. ஆனால் அவருக்கு கட்சியில் அவ்வளவாக ஆதரவு இல்லை.

இந்த சமயத்தில் 30 எம்பிக்களுடன் ஜெயலலிதா தனது ஆதரவைத் தந்து, தன்னை பிரதமாராக முன்னிறுத்தினால் பிஜேபி ஆதரிக்குமாம். இது பத்திரிகையாளர் சோவின் கணக்கு. எனவே தேவகவுடா பிரதமர் ஆனது போல ஜெயலலிதாவும் பிரதமராவார் என்று சோ தலைமையில் ஒரு அரசியல் சாணக்ய குழு ஒன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.  இந்தப் பிரச்சாரம் ஜெயிக்க வேண்டுமென்றால் சங்கரன் கோவிலில் அதிமுக ஜெயித்தே ஆக வேண்டும்.

இனி திமுகவுக்கு வருவோம். இலங்கையில் மனித உரிமைப் பிரச்சனை நாளுக்கு நாள் சூடாகிக் கொண்டிருக்கிறது. ஐ.நா சபையில், அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் உட்பட சொல்ல ஆரம்பித்துவிட்டன. ஆனால் இந்திய அரசு இன்னும் இது தொடர்பாக முடிவெடுக்கவில்லை. ஒரு வேளை அதிமுக தோற்றால், திமுக உடனே தனது வாபஸ் ஆயுதத்தை கையிலெடுக்கும். வழக்கம்போல பூச்சாண்டி காட்டுவதாக அல்லாமல் உண்மையிலேயே வாபஸ் வாங்கும். காங்கிரஸ் ஆட்சி கவிழும்.

உத்திரப் பிரதேசத்தில் அகிலேஷ் மூன்றாவது அணி என்ற ஒரு திரியை கொளுத்திப் போட்டிருக்கிறார். திமுக அதற்கு எண்ணெய் ஊற்றி அதே தேவகவுடா ஃபார்முலாவில், முலயாம்சிங்கை பிரதமராக முன்னிறுத்தி, மாநில அளவில் வலிமையான கட்சிகளை இழுத்து,  3வது அணிக்கு முயற்சிக்கும்.

(பதிவை எழுதியபின் இரண்டாவது அப்டேட்...  திமுகவின் பயமுறுத்தல் இந்த முறை வேலை செய்துவிட்டது. உடனடி தேர்தல், 3வது அணி, இலங்கை விவகாரத்தில் தமிழக கட்சிகளின் அழுத்தம், இவற்றின் காரணமாக இலங்கைக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.)

இதனால் இலங்கைப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடுமா என்று கேட்காதீர்கள். அதைப்பற்றி யாருக்கும் உண்மையான அக்கறை இல்லை. அதே போலத்தான் கூடங்குளம் பிரச்சனையும். அதிமுக ஓட்டு குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே  வழவழா கொழ கொழவாக தேவையா இல்லையா எனச் சொல்லாமல் இது வரை அரசு மழுப்பிக் கொண்டிருக்கிறது.

(இது முதல் அப்டேட்... இந்தப் பதிவை எழுதியபின் வந்த செய்தி.தமிழக அமைச்சரவை கூடங்குளத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறது. வாக்குப் பதிவு முடிந்தபின் இந்த அறிவிப்பு வந்திருப்பதை கவனிக்கவும்)

ஜெயித்தால் போராட்டக்காரர்களை இந்த அரசு சிறையில் தள்ளும். ஆனால் இன்றே பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுமானால், போராட்டக்காரர்களுடன் வெட்கமே இன்றி மீண்டும் சாதாரணமாகப் பேசும்.

எனவே சங்கரன் கோவில் சாதாரண கோவிலல்ல... அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விகளை துவக்கி வைத்திருக்கும் அரசியல் கோவில்.

Tuesday, July 19, 2011

மு.க வுக்கு ஆதரவா, ஜெ. வுக்கு வக்காலத்தா, நம் குழந்தைகளுக்கு கல்வியா? எது முக்கியம்? தீர்மானியுங்கள்.


சமச்சீர் கல்வி விவகாரத்தை இரு கழகங்களுக்கான சண்டை என்ற மனோபாவத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை. 

கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் வக்காலத்து வாங்கி வீணாகப் போனது போதும். இது அரசியல் பிரச்சனை அல்ல. அடிப்படைக் கல்வி பிரச்சனை. நமது குழந்தைகளின் எதிர்காலத்தை பாழடித்துக் கொண்டிருக்கும் பொறுப்பற்ற அரசியல் வர்க்கத்தை நாம் சீற்றத்துடன் கேள்வி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நமது அருமையான குழந்தைகளை இதைவிடக் கொடுமையாக கேவலப்படுத்த முடியாது. அவர்களுக்கு பள்ளி உண்டு. ஆனால் கல்வி இல்லை. வேறு எந்த நாட்டிலாவது இது போலக் குளறுபடி உண்டா?

நமது குழந்தைகள் பாடம் படித்து 2 மாதங்களாகிவிட்டன. உலக வரலாற்றிலேயே கல்வி விஷயத்தில் இந்த அளவுக்கு பொறுப்பே இல்லாமல் நடந்து கொண்ட அரசு எதுமே இல்லை.
எங்கள் குழந்தைகளுக்கு ஏன் கல்வியை மறுக்கிறீர்கள் என்று இந்த அரசாங்கத்தை ஒரே குரலில் நாம் கேள்வி கேட்டே ஆக வேண்டும். நல்லதோர் வீணையாக இருக்கும் நம் குழந்தைகள் புழுதியில் எறியப்படுவதற்கு முன் நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காக, நம் குழந்தைக்கு கல்வி தர மறுக்கும் இந்த அரசு உடனே பதவி விலக வேண்டும். அல்லது நாளை முதல் பாடங்களை நடத்த வேண்டும்.

Thursday, November 11, 2010

ராஜாவை கை கழுவினால், காங்கிரசுக்கு ஆதரவு - ஜெவின் ஓப்பன் பல்டி!

ராஜாக்களும், ராணிக்களும் முழுவீச்சில் களமிறங்க ஆரம்பித்துவிட்டார்கள். இனி இந்திய அரசியலில் எல்லா கூத்துகளும் நடக்கும். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடிபடும் தொகையைக் கேட்டால் தலையை சுற்றுகிறது. அதை விட தலை சுற்றல் ஜெயலலிதாவின் காங்கிரஸ் ஆதரவு பேட்டி

நேற்று இரவு வரை காங்கிரசை திட்டிக் கொண்டிருந்தார் ஜெ. அதை நம்பி அதிமுக எம்பி மைத்ரேயனும் காலையில் ஆங்கில டிவிக்களில் காங்கிரசை வசைபாடிக் கொண்டிருந்தார். திடுமென மதியம் ஜெ TIMES NOW சேனலில் தரிசனம் தந்தார்.  என்னிடம் 18 எம்பிக்கள் இருக்கிறார்கள். எனவே ராஜாவை கை கழுவினால் தி.மு.க ஆதரவை விலக்கி விடும் என்று காங்கிரஸ் அஞ்ச வேண்டாம். நான் காங்கிரசின் ஆட்சி கவிழாமல் இருக்க நாடு முழுக்க பல கட்சிகளிடம் பேசி மெஜாரிட்டிக்குத் தேவையான 18 எம்.பிக்களை திரட்டி ஆதரவு தருகிறேன் என்று பரபரப்பான பல்டி அடித்தார்.


இந்த டிவி பேட்டியே ஒரு TIMES NOW சேனலின் டிராமா போல இருந்தது. அதாவது ஜெ தனது பதில்களை எழுதி வைத்து வாசித்தார். இடையிடைய திறமையாக நடித்து தனது கேள்விகளை எடிட்டிங்கில் ஒட்டிக் கொண்டார், பேட்டி கண்ட அர்னாப். இது எனது கணிப்பு.

மீண்டும் அந்த பேட்டி ஒளிபரப்பானால் கவனித்துப் பாருங்கள். ஜெயலலிதா நேர்பார்வை பார்க்காமல் அடிக்கடி காமிராவிற்கு கீழ் இருக்கும் பிராம்ப்டரை பார்த்து படிப்பது தெரியும். ஆக திமுகவிற்கு எதிராக, ஜெயலலிதாவிற்கு ஆதரவாக ஒரு ஆங்கில சேனல் களம் இறங்கிவிட்டது. பேட்டி என்ற பெயரில் ஒரு ஒத்திகை பார்க்கப்பட்ட பேச்சை ஒளிபரப்பியுள்ளது. எப்பவுமே ஜெவிற்கு ஆங்கில சேனல்களில் மவுசு அதிகம். அதிலும் TIMES NOW சேனல் ஜெவிற்கு ஸ்பெஷல் கவரேஜ் தரும். சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது அவரை குயின் என்று வர்ணித்து மகிழ்ந்தது.

காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று ஜெயலலிதாவிற்கு கவலையாக இருக்கிறதாம். அதனால்தான் இந்த ஆதரவாம். அட..அட... ஜெவிற்கு காங்சிரசின் மேல் ஏன் இந்த திடீர் பாசம்? வேறென்ன தமிழகத்தில் கோட்டையை பிடிக்க காங்கிரஸ் தேவை. அதற்க்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் அவர்.

இந்திய அரசியலில் இதெல்லாம் சகஜம். நாளையே ஜெவும், சோனியாவும் கைகுலுக்கி போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தாலும் எனக்கு நிச்சயமாக ஆச்சரியமாக இருக்காது.

ஈழப் பிரச்சனையில் தனக்கு எதிராக கருத்துகள் உருவானாலும், விடாப் பிடியாக கருணாநிதி ஏன் காங்கிரஸ் திண்ணையை விட்டு இறங்காமல் இருந்தார் என்று இப்போது புரிகிறதா? ஜெவும் அதே திண்ணைக்குதான்  தொடர்ந்து குறிவைத்துக் கொண்டிருக்கிறார். வலியப் போய் ஒரு டிவி பேட்டி வழியாக காங்கிரசுக்கு ஆதரவு தருகிறேன் என்று ஜெ சொல்லியிருப்பதுதான் உண்மையான தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் முகம். ஈழப் பிரச்சனையில் ஜெ, கருணாநிதி, வை.கோ உட்பட எவருக்கும் உண்மையில் அக்கறை கிடையாது. தமிழகத்தில் ஆட்சியில் பிடிப்பதுதான் அவர்களுடைய உண்மையான இலட்சியம்.

இப்போதாவது ஈழ சகோதர சகோதரிகள் இந்த உண்மையை புரிந்து கொண்டு, தமிழக அரசியல்வாதிகளை நம்பாதிருக்க பழக வேண்டும்!

Friday, October 23, 2009

41,685 தமிழர்கள் முகாம்களில் இருந்து வீடு திரும்பினார்கள் - தமிழ் பதிவர்கள் மௌனம்


காலையில் The Hindu இணையதளத்தில் இந்த செய்தியை பார்த்தேன். அப்புறம் நக்கீரனில் பார்த்தேன். பின்னர் சன் செய்திகளில் பார்த்தேன். சந்தோஷமாக இருந்தது. நான் அறிந்தவரை இந்தச் செய்தியின் சாராம்சம் இதுதான்.

முகாம்களில் இருந்து திருப்பி அனுப்பபட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 இலங்கை ரூபாயும், ரூ. 20,000க்கான வங்கி வைப்பு நிதியும் வழங்கப்பட்டது. அது தவிர, 6 மாதத்திற்கான ரேஷன் பொருட்களும், அவசர தேவைக்கான துணிகளும் வழங்கப்பட்டன. வவுனியா, மன்னார், முல்லைத் தீவு, கிளிநொச்சி போன்ற இடங்களுக்கு மக்கள் திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.

இதற்க்கான விழாவில் பேசிய மஹிந்த ராஜபக்ஷே, தமிழக முதல்வருக்கும், பாரதப் பிரதமருக்கும் நன்றி தெரிவித்தாராம்.

ஆனால் இந்த செய்தி குறித்த சந்தோஷமோ பரபரப்போ பகிர்தலோ, தமிழ் பதிவர்களிடையே துளி கூட இல்லை. டிவிட்டரில் கூட இந்தச் செய்தி தமிழர்களிடையே உலவவில்லை.  ஆதவன் ரிலீசுக்கு மாய்ந்து மாய்ந்து பதிவு எழுதியவர்களும், டிவிட்டரில் கமெண்ட் அடித்தவர்களும், கிட்டத்தட்ட 40 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் இருந்து விடுதலை ஆகிறார்கள் என்பதை ஏனோ கண்டு கொள்ளவில்லை!!! Facebookல் மட்டும், இந்தச் செய்தியைப் பற்றி சந்தேகம் தெரிவித்து ஒரு பதிவை பார்த்தேன். மற்றபடி பதிவர் உலகில் இந்தச் செய்தி எந்தச் சலனமும் இல்லாமல் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளது.

கொஞ்சமாவது சந்தோஷம் தரக்கூடிய இந்தச் செய்தி குறித்து ஏன் மௌனமாக இருக்கிறோம் என்று தமிழ் பதிவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

Sunday, October 18, 2009

ஈழத் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

”இலங்கைக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்றுத் தந்த கலைஞருக்கு பாராட்டு”
தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் இலங்கைக்கு சென்று வந்த பின் சென்னையில்  மேற்கண்ட வாசகங்களுடன் சில போஸ்டர்கள் முளைத்தன.

இதை கண்டித்து, Facebookல் சிலர், முக்கியமாக இலங்கைத் தமிழர்கள் கலைஞரை காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நல்லது. அவர்களுடைய கோபம் நியாயமானதே. ஆனால் கோபப்படுவது மட்டுமே நியாயமாகிவிடுமா?


வயிற்று வலி எனக்கு என்றால், நான்தானே மருந்து சாப்பிட வேண்டும். கசப்பு என்பதால் எனக்காக இன்னொருவர் மருந்து சாப்பிட முடியுமா? பிரபாகரனின் (இன்னும் சிலரால் உறுதி செய்யப்படாத) முடிவுக்குப் பின்னால், ஈழத் தமிழர்களின் ஒருங்கிணைந்த தலைவர் யார்? யாராக இருந்தாலும் அவர் ஈழத்தில்தானே இருக்க வேண்டும். தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் தி.க தலைவர்கள் அந்தந்த கட்சிக்குதான் தலைவர்களே தவிர, ஈழத் தமிழர்களின் தலைவர்கள் அல்ல. அப்படி இருக்கவும் முடியாது.

ஆனால் அதை மறந்துவிட்டு, சில ஈழத் தமிழர்கள் தங்களது தலைவர்களை தமிழ்நாட்டில் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு ”நான்கே நாட்களில் இலங்கை பிரச்சனையைத் தீர்த்த கலைஞர்” போஸ்டர்கள் கண்களில் படுகின்றன. அவர் கலைஞர் அல்ல, கொலைஞர் என்று அனல் கக்குகிறார்கள். மீண்டும் சொல்கிறேன். உங்கள் கோபம் நியாயமானதே. ஆனால் கலைஞர் அல்லது கொலைஞரின் மேல் கோப்படுவது மட்டுமே நியாயமாகிவிடுமா?


  • உங்கள் விடுதலைக்கு உங்கள் பங்கு என்ன?
  • இலங்கையில் உள்ள தமிழ்கட்சிகள் ஏன் தனித் தனி கட்சிகளாக இயங்குகின்றன? 
  • ஏன் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை? 
  • ஏன் அவர்களுக்குள் பொதுத் தலைமை இல்லை? 
  • அவர்களில் எந்தக் கட்சியை அல்லது அமைப்பை இலங்கைக்கு வெளியே உள்ள தமிழர்கள் ஆதரிக்கிறார்கள்?
  • ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலைக்கு இவர்களுக்கு பங்கே இல்லையா?

தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கருணாநிதியை அல்லது பிரபாகரனை திட்டித் தீர்த்துவிட்டு பொழுதை போக்குவதும், பிறகு ”மானாட மயிலாட” பார்ப்பதும் வாடிக்கை தான்.

தற்போது இலங்கைத் தமிழர்களும் பிரபாகரனை அல்லது கருணாநிதியைத் திட்டிவிட்டால் தங்கள் கடமை முடிந்தது என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நினைப்பு மாறி, இது தங்கள் பிரச்சனை என்று நினைத்து ஒற்றுமையுடன் போராடும் வரை, தனி ஈழம் என்பது கனவாகவே நீடிக்கக் கூடிய அபாயம் உண்டு.

ஈழத் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
தமிழ்நாட்டு போஸ்டர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களை குறி வைத்து ஒட்டப்படுகின்றன. அதைப் படித்து நேரத்தை வீணடிக்காதீர்கள்.
”மானாட மயிலாட” நிகழ்ச்சிகள் எங்கள் (தமிழ்நாட்டு தமிழர்களின்) நேரத்தை  வீணடிக்கப் பிறந்த நிகழ்ச்சிகள். அதைப் பார்த்துவிட்டு கோபப்படாதீரகள். கலைஞர் மீதும், நமீதாக்கள் மீதும் கோபப்படுவதுதான் ஈழப்போராட்டம், தனி ஈழ உணர்வு என்று (கொச்சையாக) வரைமுறைப் படுத்தாதீர்கள்.



உங்கள் தலைவர் யார்? அவரை கண்டுபிடியுங்கள். அவரைக் கண்டுபிடிக்க உங்கள் கோபம் உதவட்டும். தனி ஈழம் பிறக்கட்டும்.

Tuesday, December 2, 2008

ஒரே காரில் தமிழகத்தின் முதல் குடும்ப வாரிசுகள்

தமிழகத்தில் நம்முடைய புலனாய்வு பத்திரிகைகள் மும்பை தீவிரவாதிகளையும், நிஷா புயலையும் துரத்திக் கொண்டிருந்தபோது, சத்தமே இல்லாமல் தமிழகத்தின் முதல் குடும்பம் சண்டை சச்சரவுகளை மறந்து(மறைத்து) ஒன்று சேர்ந்துவிட்டார்கள். பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்துவிட்டு,  மாறன் சகோதரர்களும், அழகிரி மற்றும் ஸ்டாலின் சகோதரர்களும் ஒரே காரில் பயணம் செய்தார்களாம்.

இதே போல மின்வெட்டுத்துறை ஆற்காடு வீராசாமி, ஸ்பெக்ட்ரம் துறை ராஜா, அவாளின் பேரன் தயாநிதி ஆகியோரும் ஒரே காரில் பயணம் செய்வார்களா? குறைந்தபட்சம் ஒரே ஹோட்டலில் சாப்பிடுவார்களா? சந்தேகம்தான்.

Monday, October 27, 2008

ஜெ, வை.கோ, விஜயகாந்த், சூப்பர் ஸ்டார்களுக்கு த.பாண்டியனின் யோசனை

தமிழ் சினிமாவைப் போலவே, தமிழக அரசியலிலும் கிளாமருக்குத்தான் மரியாதை. அந்த வகையில் தமிழக கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டு மீடியாக்களுக்கு கடைசி பட்சம்தான். அதனாலேயே பல நேரங்களில் அவர்களின் தெளிவான உருப்படியான சிந்தனைகள் மற்றும் யோசனைகள் தமிழக மக்களைப் போய்ச் சேருவதில்லை. இலங்கைத் தூதர் பேசில் ராஜபக்ஷே சென்னை வந்து சென்ற பின்னர் இலங்கைப் பிரச்சனை மீண்டும் வெறுமனே கருணாநிதியை மட்டும் சுற்றும் பிரச்சனையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. அதைத் தாண்டி த.பாண்டியன் அருமையான சில யோசனைகளைச் சொல்லியிருக்கிறார்.

அடுத்த கட்டமாக கருணாநிதி இந்த யோசனைகளை பரிசீலித்து ஆவண செய்ய முயற்சிக்கலாம்.

  • இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் தொடர்பாக நேஷனல் செக்யூரிட்டி அட்வைஸர் எம்.கே. நாராயணன், ஃபாரின் செக்ரட்டரி ராகவன் ஆகியோரின் பரிந்துரைகளைக் கேட்பதை இந்திய அரசு உடனே நிறுத்தவேண்டும். அவர்களுக்குப் பதிலா தமிழர்களை அந்தப் பொறுப்பில் அமர்த்த வேண்டும்.
  • இலங்கை அரசு அனுமதித்தால் இரண்டு தமிழக மத்திய மந்திரிகள் அல்லது தமிழக எம்.பிக்கள் இருவரை பிரணாப் முகர்ஜியுடன் இலங்கைக்கு அனுப்பி நேரடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
  • அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் சாராத மருத்துவர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், பெளத்த மத பிட்சுக்கள், மெளல்விகள், கிறித்துவ பாதிரியார்கள், இந்துசாதுக்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து, நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு, அவர்களுடைய கண்காணிப்பில் வழங்க வேண்டும்
  • திரை இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரின் பேச்சு, வெறுமனே உணர்ச்சி வசப்பட்ட பேச்சே தவிர அரசியல் அறிக்கைகள் அல்ல. அதனால் அரசு அவர்கள் விஷயத்தில் கடுமையைக் குறைக்கலாம்
கருணாநிதியை காய்ச்சி எடுக்கும் பதிவர்கள் இந்த யோசனையை உரக்கச் சொல்லலாம்.
தமிழக போலீஸ் என்னை கைது செய்ய முயற்சி செய்கிறது என்று போலிக் கூச்சல் போடாமல் ஜெயலலிதா இந்த யோசனைகளை கருணாநிதிக்குச் சொல்லலாம்.
வருங்கால முதல்வர் என்று தன்னை வருணித்துக் கொள்ளும் விஜயகாந்த், மிக முக்கியமான ஒரு விஷயத்தில் மக்கு மாதிரி பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்காமல், இதை அப்படியே காப்பியடித்து, கருணாநிதியை நிர்பந்திக்கலாம்.
வை.கோ ஜெயிலுக்குள்ளிருந்துகொண்டே, புலிகள் ஆதரவை விடாமல், அ.தி.மு.க அம்மாவை கெட்டியாக பிடித்துக் கொண்டு இந்த யோசனைகளை செய்யச் சொல்லி கர்ஜிக்கலாம்.
நவம்பர் 1ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போகும் நடிகர்கள், சீமான், அமீர் கைதுகளால் தொடை நடுங்கி மெளனவிரதமிருக்காமல், இந்த யோசனைகளை தமிழக முதல்வருக்கு ஒரு வசனமாக அவரவர் ஸ்டைலில் படித்துக் காட்டலாம்.

இலங்கைப் பிரச்சனையில் கருணாநிதியின் அரசியல்

கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்!

இது சில அல்லது பல இலங்கைத் தமிழர்களின் குற்றச்சாட்டு.

மின்வெட்டு பிரச்சனையிலிருந்து தப்பிக்கவே கருணாநிதி இலங்கைப் பிரச்சனையை கையிலெடுத்தார்!

இது சில அல்லது பல தமிழகத் தமிழர்களின் குற்றச்சாட்டு.

இந்தக் குற்றச்சாட்டுகள் எந்த அளவிற்கு நியாயானவை?

எம்.பி.க்கள் ராஜினாமாவிற்கு 28ந் தேதி கெடு கொடுத்திருந்தீரகளே. தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில் அது தேவையில்லை என்று கருதுகிறீர்களா?
இன்றைக்கு நடைபெற்ற நிகழ்ச்சியை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிராணப் முகர்ஜி விளக்கியிருக்கிறார். அதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள். அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அப்போது எடுத்த முடிவில் அந்த கட்சிகளுக்கிடையே மாறபட்ட கருத்துகள் இருப்பதால்அவர்களையும் கலந்துகொண்டுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

பிரணாப் முகர்ஜி சென்னை வந்து சென்றபின், வெளியான கலைஞர் பேட்டி இது. இதிலிருந்து ஒரு விஷயத்தை யூகிக்க முடிகிறது. கருணாநிதி அறிவித்தபடி 28ம் தேதி தி.மு.க எம்பிக்கள் ராஜினாமா செய்தாலும், காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜினாமா செய்யமாட்டார்கள். கருணாநிதியோ,முகர்ஜியோ இதை பத்திரிகையாளர்களிடம் தெளிவாகச் சொல்லவில்லை என்றாலும், கருணாநிதியின் சூசகமான பதில் இதை சொல்லாமல் சொல்கிறது. இரண்டு கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க மற்றும் பா.ம.க எம.பிக்களின் நிலை என்னவென்று இன்னும் அக் கட்சித் தலைவர்கள் முடிவாகச் சொல்லவில்லை.

ஏற்கனவே தங்கபாலு என்கிற காங்கிரஸ் பொம்மை, டெல்லியைக் கேட்டுத்தான் முடிவு செய்வோம் என்று பின்வாங்கிவிட்டது. ராமதாஸ் 28ம் தேதி வரட்டும், அப்போது பார்க்கலாம் என்று அப்போதே சொல்லிவிட்டார். இன்னமும் அ.தி.மு.க ஆதரவு நிலையிலிருந்து மாறாத ம.தி.மு.க என்ன செய்யும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. கம்யூனிஸ்டுகள் இந்த வினாடி வரை ராஜினாமா பற்றி வாயைத் திறக்கவேயில்லை.

இந்த நிலையில் தி.மு.க மட்டும் எம்.பிக்கள் ராஜினாமா செய்வது மிகப் பெரிய அரசியல் முட்டாள்தனமாக இருக்கும்.

தி.மு.க எம்.பிக்கள் ராஜினாமா செய்து, மத்திய அரசு கவிழ்ந்தால் அடுத்த வினாடியே இங்கே காங்கிரஸ் எம்.எல்ஏக்கள் தமிழக அரசை கவிழ்ப்பார்கள்.

கருணாநிதியும், சோனியாவும் தொலைபேசியில் இதைத்தான் பேசியிருப்பார்கள். பிரணாப் முகர்ஜி நேரில் வந்து அதை நேரில் வந்து கருணாநிதியிடம் உறுதி படுத்திவிட்டுக் கிளம்பிவிட்டார்.

அப்படியென்றால் இலங்கைப் பிரச்சனை ?

காங்கிரஸ் எம்.எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படாத ஒரு தி.மு.க மெஜாரிட்டி அரசு அமைய வேண்டும்.

இப்போது போலவே மத்திய அரசின் குடுமி, தமிழக அரசின் கையில் இருக்கவேண்டும்.

இருந்தால் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக மேலும் ஸ்திரமான முடிவுகள் எடுக்க முடியும்.

இப்போதைக்கு . . .
  • இராணுவ உதவிகளை செய்ய மாட்டோம் என இந்தியா உறுதி.
  • ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கைத் தூதர் உறுதி
  • 800 டன் நிவாரண பொருட்களை இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்று பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்க உறுதி
  • நார்வே போன்ற நாடுகளின் உதவியுடன் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு முயற்சி
  • தமிழக மீனவர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்த மாட்டோமென இலங்கை உறுதி.

இன்றைய தி.மு.கவின் அரசியல் நிலையை மனதில் கொண்டு பார்த்தால், தற்போதைக்கு கருணாநிதியால் இந்த அளவுக்குத்தான் முடியும் எனத் தோன்றுகிறது.

தி.மு.க எம்.பிக்களையும் இழந்து, தமிழ்நாட்டில் ஆட்சியையும் இழந்தபின் இலங்கைப் பிரச்சனையை தீர்க்க வழியுண்டு என்றால், அதனை தாராளமாக கருணாநிதிக்கு சிபாரிசு செய்யலாம், இல்லையென்றால் முதலிரண்டு குற்றச் சாட்டுகளையும் தொடரலாம்.