Showing posts with label love. Show all posts
Showing posts with label love. Show all posts

Friday, October 30, 2015

#மல்லிகைக்கிழமை


காற்றின் திசையை
மல்லிகைக்கு தந்துவிட்டு
நீ பார்க்கும் திசையெங்கும்
எனை வீசியடிக்கிறாய்.

Friday, October 23, 2015

‪#‎மல்லிகைக்கிழமை‬


மல்லிகையைப் போல்
சிரிக்கிறாள் அவள்!
அவளைப் போல
மணக்கிறது மல்லிகை!


Friday, October 9, 2015

‪#‎மல்லிகைக்கிழமை‬



மல்லிகையால் தன் முகம் செய்து 
கூந்தலில் அணிகிறாளோ! 
அவள் சூடியிருக்கும் மல்லிகை 
என்னை பார்க்கும்போதெல்லாம் 
அவளே என்னை பார்ப்பது போல் ஒரு மயக்கம்!
‪#‎மல்லிகைக்கிழமை‬

Friday, October 2, 2015

#மல்லிகைக்கிழமை


கண்ணாடி பார்த்து மல்லிகை சூடும்போது
அவள் தன்னைப் பார்ப்பது போல்
இரகசியமாய் என்னைப் பார்க்கிறாள் என்பது
பின்னால் நிற்கும் எனக்கும் தெரியும்
என்னை வரவழைத்த மல்லிகைக்கும் தெரியும்.
#மல்லிகைக்கிழமை

Saturday, September 26, 2015

#மல்லிகைக்கிழமை



அவள் கழுத்துக் கதகதப்பில் 

ஈர மல்லிகைச் சரம் உலர்ந்து மலரும்போது
பூமிப் பந்தே மல்லிகைப் பந்தானது போல்
ஒரு மாய வாசம் எனைச் சூழ்ந்தணைக்கிறது!

#ப்ரியம் என்பது



‪#‎ப்ரியம்‬ என்பது
ரயில் நிலையத்தில் யாரையோ தேடும் பாவனையில்
நான் உன்னையே சுற்றிச் சுற்றி வருவதும்,
தோழிகளிடம் விடைபெறும் பாவனையில்
நீ என்னிடம் கையசைத்து விடைபெறுவதும்.

Friday, September 4, 2015

#மல்லிகைக்கிழமை

அவள் கூந்தலில் மயங்கிய 
பூக்கள் சரியாமலிருக்க
ஹேர் பின்களையும்,
அவள் கூந்தல் மயக்கிய 
நான் சரியாமலிருக்க
தன் கண்களையும் பிரயோகிக்கிறாள்.

#மல்லிகைக்கிழமை

Monday, August 31, 2015

#ப்ரியம் என்பது

#ப்ரியம் என்பது
திரையரங்க இருளில் வரிசை எண் தேடும்போது
அனிச்சையாக நீ என் கரம் பற்றிக்கொள்வதும்
சலனப்படம் முடிந்து இருள் கலையும்வரை
பற்றிய உன் கரங்களை நான் விடாதிருப்பதும்.

Thursday, August 20, 2015

#ப்ரியம் என்பது

#ப்ரியம் என்பது
அவள் தோளிலிருந்து அருவி போல் சரியும் துப்பட்டாவை
தயக்கத்துடன் நான் நேர் செய்வதும்.
உதடு கடித்தபடி ஈர மருதாணி விரல்களால் 
வெட்கத்துடன் அவள் என் கன்னம் கிள்ளுவதும்.

Wednesday, August 19, 2015

#ப்ரியம் என்பது

#ப்ரியம் என்பது
கடற்கரை மணலில் கிறுக்கிய உன்பெயரை
யாரும் பார்க்கும் முன் 
நான் கலைப்பதும்,
உள்ளங் கைகளில் கிறுக்கிய என் பெயரை
யாரும் பார்க்கும் முன் 
முத்தமிட்டு நீ பொத்தி வைப்பதும்.

Friday, May 22, 2015

‪#‎மல்லிகைக்கிழமை‬

ஒரே சரத்திலிருந்து
மணப்பது எது மயக்குவது எது
என எப்படியோ தரம் பிரித்து,
மணக்கும் மல்லிகையை
சாமிக்கு கிள்ளிக்கொடுத்துவிட்டு
மயக்கும் மல்லிகையால்
என்னை அள்ளிச் செல்கிறாள் அவள்!
‪#‎மல்லிகைக்கிழமை‬

Thursday, May 14, 2015

#ப்ரியம் என்பது


‪#‎ப்ரியம்‬ என்பது

மழைதான் ஆனால் கவலையில்லை என்று
நான் ஃபோனில் சொல்லிக் கொண்டிருப்பதும்,
உன் துப்பட்டா குடைக்குள்
மழை நனைக்காமல்
என்னை நீ அணைத்திருப்பதும்.

Sunday, April 26, 2015

#முத்தகம்



அவளுடைய
வாயாடி என்ற பட்டத்தைக் 
களவாடினேன், 
பேசவேவிடாமல்
தொடர் இதழ் முத்தங்களால்!
#முத்தகம்

Wednesday, April 15, 2015

#ப்ரியம் என்பது



#ப்ரியம் என்பது
மருதாணிக் கைகள் காட்டி
எப்படி இருக்கு என  
குழந்தையைப் போல நீ குதூகலிப்பதும்,

உன் உள்ளங்கைகளை தொட்டிலாக்கி
குழந்தைகளைப் போல
என் கன்னங்களை நான் படுக்க வைப்பதும்.

Friday, March 20, 2015

#மல்லிகைக்கிழமை



நான் எத்தனை தொலைவில் இருந்தாலும்
என்னை கூந்தல் எல்லைக்குள் இழுத்து வருகின்றன  
அவள் சூடும் மல்லிகைச் சரங்கள்!
#மல்லிகைக்கிழமை

Thursday, March 19, 2015

#‎ப்ரியம்‬ என்பது



#‎ப்ரியம்‬ என்பது
நான் இரசித்த பொட்டை
கண்ணாடி பார்த்து
நீ விதம் விதமாக 
இட்டுப் பார்ப்பதும்,

நீ இரசித்த சட்டையை
கண்ணாடி பார்த்து
நான் மீண்டும் மீண்டும் 
அணிந்து பார்ப்பதும்.

Wednesday, March 11, 2015

‪#‎ப்ரியம்‬ என்பது

‪#‎ப்ரியம்‬ என்பது
பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல
முதலில் நான் வரவேண்டும் என
நீ காத்திருப்பதும்,
நண்பர்கள் விடைபெறட்டும் என
நம் தனிமைக்காக
நான் காத்திருப்பதும்.