Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Friday, March 9, 2012

ஒய் திஸ் உலை வெறி - பட்டாசாய் ஒரு பாட்டு!

கூடங்குளம் போல ஒரு அணு உலையை நிறுவினால் 50 வருடங்களுக்கு மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால் அதனால் ஏற்படும் கழிவுகளை 1,00,000 வருடங்களுக்கு பத்திரமாக எங்காவது பதுக்கி வைக்க வேண்டும். அதற்காக செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் மனிதனின் வாழ்வாதாரம் நிச்சயமாக பாதிக்கப்படும் என்கிறார்கள் அணுஉலைக்கு எதிராகப் போராடும் விஞ்ஞானிகள்.

உலக சமாதானத்துக்காக நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய விஞ்ஞானி (Physicist) திரு. ஹேன்ஸ் பீட்டர் தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். அவர் சொல்வதை கவனியுங்கள். எந்த அணுஉலையும் 100 சதவிகிதம் பாதுகாப்பானது அல்ல. அதற்கு உத்தரவாதம் தரும் எந்த வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்.

அணு உலையால் ஏற்படும் ஆபத்துகளை விட, அதன் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து அதிகம் என்கிறார். சுற்றுப்புறச் சூழல் பாதிப்பது ஒரு புறம் இருக்கட்டும். மறுபுறம் தீவிரவாதிகள் கைகளில் சிக்கினால், அணுக் கழிவுகளைக் கொண்டு அணு குண்டு தயாரிக்கும் அபாயம் உள்ளது என்கிறார்.

அணு உலை பாதுகாப்பானது என்று வைத்துக் கொண்டாலும், இன்னும் சில 100 வருடங்களில் அது இயங்கத் தேவையான யுரேனியமும் தீர்ந்துவிடும். அப்போது இந்த அணுஉலைகள் அனைத்தும் இயங்காமல் நின்றுவிடும். அப்படி இயங்காமல் போகக்கூடிய அணுஉலைகளை மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்காமல், எப்படி இடித்துத் தள்ளுவது? அதற்கு திட்டங்கள் என்ன? அதனால் ஏற்படக் கூடிய பாதிப்பு என்ன? என்று தொடர் கேள்விகள் எழுப்புகிறார். எனவே மாஃபியா கொள்ளைக்காரர்களைப் போல பூமியிடமிருந்து இயற்கை கனிமங்களை திருடி, மக்களுக்கு தொல்லை ஏற்படுத்துவதை உடனே கைவிடுவோம். சூரியக் கதிர்களை நோக்கி நம் கவனத்தை செலுத்துவோம் என்கிறார்.

சூரியக் கதிர்களை உள்வாங்கி, சேமித்து அதனால் மின் சக்தி உட்பட வித விதமான சக்திகளை உருவாக்கக் கூடிய தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பக்கவிளைவுகள் இல்லாத இவற்றில் நம் கவனத்தை செலுத்துவோம் என்கிறார்.

கூடங்குளம் எதிர்ப்பாளர்களை தேசப்பற்று இல்லாத தீவிரவாதிகள் என்று அரசுகள் முத்திரை குத்த முயற்சித்து வருகின்றன. ஆனால் மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசுகளின் இந்த சூழ்ச்சிக்கு அஞ்சாத இளைஞர்கள் சிலர் ஒரு அருமையான மியூசிக் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

அணு உலைக்கு எதிரான இந்த அருமையான முயற்சியில் இறங்கியுள்ள இளைஞர்களை நான் மனமார வரவேற்கிறேன். இவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் சிந்திக்க வைக்கக் கூடிய படைப்புகளை தர வேண்டும்.

எரிதழல் படைப்பகம் மற்றும் அதன் குழவினர் அனைவருக்கும் என் அன்பும், ஆதரவும்.

Saturday, December 10, 2011

ராஜா-வாலி-மனசு-இசை

இரண்டு மாதங்களுக்கு முன்பு, நண்பர் ஒருவர் டிஸ்கவரி புக் பேலசுக்கு வா என்றார். வந்தேன். ஆனால் அவர் வரவில்லை. அரை மணி காத்திருந்து, ஒரு டீ குடித்து வீடு திரும்ப முடிவெடுத்தபோது,. வணக்கம் தலைவரே என்று நண்பர் கேபிள் சங்கரின் குரல். அவ்வளவுதான், தொடர்ந்து நான்ஸ்டாப் டாக்கிங். வாய் வலித்தாலும் பரவாயில்லை, கால் வலிக்கக் கூடாது என நண்பர் வேடியப்பன் (டி.பு.பே) சேர் போட்டுத் தரும்போது, எனக்கு சுரேகா அறிமுகமானார்.

ஊர் கதையெல்லாம் பேசி, சொந்தக் கதை பேசும்போது, கேபிள் பிளாகில் எழுதிய சிறுகதைகள் பற்றி பேச்சு வந்தது. குறிப்பாக பிரியாணி என்ற சிறு கதையைப் பற்றி சுரேகா மிகவும் சிலாகித்தார். ரொம்ப டச்சிங்கா இருந்தது, படிச்சவுடனே கண்ணு கலங்கிடுச்சு என்றார்.

சுரேகாவின் அந்த விமர்சனம் என் மனதிலேயே தங்கிவிட்டது. அதனால் கதையை படிக்காமலேயே அடுத்த குறும்படத்திற்கான கதை, கேபிளின் பிரியாணிதான் என்று தீர்மானித்தேன். அடுத்த சில நாட்களில் கேபிள் கதையை அனுப்பி வைக்க, நான் திரைக்கதை எழுதினேன். முக்கியமான கதாபாத்திரத்தில் டிவிட்டர் நண்பர்(@iamkarki) நடிக்க உற்சாகமான டீம் உருவானது. பிரியாணி என்ற டைட்டிலுடன் ஆரம்பித்த ரிகர்சல், மனசு என்ற புது டைட்டிலுடன் நிறைவுற்றது.

என்னைப் பொறத்தவரையில், நான் வேலைசெய்யும் புராஜக்டுகளில், இசைக்காக மிகவும் மெனக்கெடுவேன். சும்மா இசை, ஏதோ ஒரு டிராக் என்பதில் எனக்கு எப்போதும் திருப்தி இல்லை. நண்பர் இசையமைப்பளார் விவேக் நாராயணிடம் கதையை விவரித்தேன். (பிரியாணி)உணவு  இந்தக் கதையில் பிரதானமாக இருப்பதால், பசி தொடர்புடைய ஸ்ரீஇராகத்தில் பிண்ணனி இசை அமைத்து தந்தார். எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கிறதா என்று கேட்டுச் சொல்லுங்கள்.

தீம் மியூசிக் - 1 


தீம் மியூசிக் - 2



இசை உருவாகிற கணங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் இரண்டு மேதைகள் ஒன்றாக இணைகிறபோது பரவசம்... பரவசம்... பரவசம்.

காற்றில் வரும் கீதமே பாடலுக்கு உருகாதவர் இருக்க முடியாது. அது இளையராஜாவின் மாஸ்டர் பீஸ். அந்தப் பாடல் உருவாகும் விதத்தை கேளுங்கள். ராஜா மெட்டமைக்க, வாலி வார்த்தைகள் கொடுக்க, ஒரு குழந்தையின் ஜனனம் போல, விவரிக்க முடியாத ஒரு உன்னதத்தை உணர்வீர்கள்.

Monday, October 5, 2009

வானவில் உலகில் “லலிதம் சுதர்ஸனம்”

நான் தற்போது ”அவர்” திரைப்படத்தை இயக்குகிறேன் என்பது ஒரு ரிப்பீட் செய்தியாகிவிட்டது. ஆனாலும் வேறு வழியில்லை. ”அவர்” திரைப்படம் வெள்ளித் திரையில் ஒளிரும் வரை நான் அடிக்கடி அவரைப் பற்றி பேசிக் கொண்டுதான் இருப்பேன். ஏனென்றால் தற்போது என்னை முழுவதும் ஆக்கிரமித்திருப்பவர் அவர் தான்.

படத்திற்கான ஸ்கிரிப்ட் தான் முதல் படி. வசனம் உட்பட ஸ்கிரிப்ட்டை எழுதிவிட்டுதான் மற்ற எதுவும் என்பதில் உறுதியாக இருந்தேன். திருப்தி வரும் வரையில் ஸ்கிரிப்டை செதுக்கிக் கொண்டே இருந்தேன். எழுதும்போதே எங்கெங்கே எதுபோன்ற இசை தேவை என்பதையும் குறித்துக் கொண்டே வந்தேன். அதனால் ஸ்கிரிப்ட்டை முடித்த கையோடு பாடல் மற்றும் பிண்ணனி இசை கோர்ப்பு பற்றிய விவாதத்தில் இறங்கிவிட்டேன்.

படத்தில் ”வானவில் உலகம்” என்ற பாடல் வருகின்றது. முழுக்க மேற்கத்திய பாணியில் அமைந்த ஒரு மெலடி. அந்த மெலடிக்கு இடையே ஒரு Divine Feel தேவைப்பட்டது. தெய்வீக உணர்வு தேவை என்றவுடன் அதற்கான வார்த்தைகளை சில நாட்கள் தேடினேன். கடைசியாக ரெய்கி மாஸ்டர் திரு.பாலகுமார் அவர்களை நாடினேன். அவர் ”லலிதம் ... சுதர்ஸனம்” என்ற இரு அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய வார்த்தைகளை கொடுத்தார். சுதர்ஸனம் என்றால் பேரொளி. அது ஆண் சக்தி. லலிதம் என்றால் பெண் சக்தி. இரு சக்திகளும் இணையும்போது, அதனால் ஏற்படக்கூடிய தெய்வீக அதிர்வுகள் பூரணமாக இருக்கும் என்று விளக்கத்தையும் திரு.பாலகுமார் அவர்கள் சொன்னார்.

அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன், அளப்பறிய ஆற்றல் பொருந்திய ஒன்றை நாம் கையாளப் போகிறோம். அதை கவனமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது. இந்த வார்த்தைகளையும், அதற்கான அர்த்தங்களையும் கூறியவுடன், எனது நண்பரும் இசையமைப்பாளருமாகிய விவேக் நாராயண் மௌனமாகிவிட்டார். பிறகு முதலில் டியுனை ஓ.கே. பண்ணு. பிறகு லலிதம் சுதர்ஸனத்திற்கென தனியாக ஸ்பெஷலாக சிந்திக்கலாம் என்றார். நானும் அவர் சொன்ன படியே ஒரு மெட்டை தேர்ந்தெடுத்து ஓ.கே செய்தேன்.

இன்னைக்கு நைட் feed பண்ணிடறேன். நாளைக்கு காலையில பாட்டு ரெடியா இருக்கும் என்றார். சரி என்று சொல்லிவிட்டு நான் வீட்டுக்கு வந்த ஒரு மணி நேரத்தில் அவர் பின்னாடியே வந்துவிட்டார்.
என்ன?
பாட்டு ரெடி!
”வானவில் உலகம்” பாட்டு நான் ஓ.கே செய்த மெட்டில் இல்லை. ஆனால் என்ன ஆச்சரியம்? இன்னும் அருமையான ஒரு டியுனில் இருந்தது. அதை விட ஆச்சரியம். அசத்தலான வெஸ்டர்ன் பாணி இசைக்கு இடையில் இழைந்த சாமவேத மெட்டு. வெஸ்டர்ன் இசையுடன் சாமவேதமா? எப்படி? ஏன்? என்று தோன்றுகிறதா?

இசையின் ஆரம்பமே சாமவேதம் தான். அதனால்தான் ஆற்றல் பொருந்திய ”லலிதம் . . . சுதர்ஸனம்” என்ற வார்த்தைகளை சாமவேத மெட்டில் பொருத்தினேன் என்றார் விவேக் நாராயண். இது பற்றிய விளக்கங்களை அவரே பிளாக் ஒன்றில் எழுதியுள்ளார்.

முதல் முறை கேட்டபோது, ”லலிதம் . . . சுதர்ஸனம்” என்ற வார்த்தைகள் ஏற்படுத்திய தெய்வீக அதிர்வுகளை வார்த்தைகளால் வருணிக்க முடியாது.

”அவர்” பாடல்கள் விரைவில் வெளியாகும். அப்போது நீங்களும் அந்த இனிய அதிர்வை உணர்வீர்கள் என்பது என் நம்பிக்கை.

ஏ.ஆர்.இரகுமான் எம்.எஸ்.வியை காப்பியடித்து ஆஸ்கார் வென்றாரா?


இந்த வாரம் இசை வாரம் போலிருக்கின்றது. என்னுடைய பல பதிவுகள் இசையை பற்றியே பதிவாகியிருக்கின்றது. சரி, விஷயத்திற்க வருகின்றேன்.

வலையுலகின் மிகப்பிரபல பதிவர் அதிஷா ஒரு பதிவு எழுதியுள்ளார். அட்டைக் காப்பிக்கு ஆஸ்கர் - இதுதான் தலைப்பு! இளையராஜாவின் இன்னும் வெளிவராத சிம்பொனி மீதும், ரஹ்மானின் ஜெய்ஹோ மீதும் இன்னமும் பல (ராஜா/ரகுமான்) வெறி பிடித்த இரசிகர்கள் ஆசிட் ஊற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். இவர்கள் இசையின் இரசிகர்களாக அல்லாமல் இசையமைப்பாளர்களின் இரசிகர்களாக இருப்பதால் தான் இந்த விபரீதம். அதிஷாவின் இந்தப் பதிவும் ஏ.ஆர்.இரகுமானை பிடிக்காத ஒருவரின் வெளிப்பாடுதான்.

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் ”அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை” என்ற அற்புதமான மறக்கமுடியாத பாடலை எம்.எஸ்.வி இசையமைத்திருக்கின்றார். இந்தப் பாடலின் மெட்டும் ஏ.ஆர்.இரகுமான் இசையமைத்து ஆஸ்கர் வென்ற ஜெய்ஹோ பாடலின் மெட்டும் ஒரே மெட்டுதான். எம்.எஸ்.வியை காப்பியடித்துதான் இரகுமான் ஆஸ்கர் ஜெயித்திருக்கின்றார் என்று ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை அதிஷா முன் வைக்கின்றார்.

எம்.எஸ்.வி தின்று போட்ட எச்சிலைத்தான் இன்று இருக்கும் இசை அமைப்பாளர்கள் கையாள்கிறார்கள் என்று எஸ்.பி.பி ஒரு விழாவில் உணர்ச்சி வசப்பட்டு சொன்னார். அது உண்மைதான் என்றாலும், மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகளால் எஸ்.பி.பி பலத்த கண்டனத்துக்கு உள்ளானார் (குறிப்பாக வலையுலகில் இளையராஜா இரசிகர்கள் எஸ்.பி.பியை வறுத்தெடுத்துவிட்டார்கள்). ஒரு பேட்டியில், இது குறித்து ஏ.ஆர்.இரகுமானை கேட்ட போது, இதை ஏன் ஒரு பாராட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டார். இதற்கு என்ன அர்த்தம் என்றால், திரை இசையை பொறுத்தவரை, எம்.எஸ்.வியின் பாதிப்பு அவருக்கும் இருக்கிறது என்று அவர் மறைமுகமாக ஒப்புக் கொண்டார் என்றுதான் அர்த்தம்.

எம்.எஸ்.வியின் பாதிப்பு இருக்கிறது என்பதாலேயே, இரகுமான் எம்.எஸ்.வியை காப்பி அடித்து ஆஸ்கர் வென்றுவிட்டார் என்று குற்றம் சாட்ட முடியாது. எம்.எஸ்.வியின் ”அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை” பாடலின் சாயல் இரகுமானின் ஜெய்ஹோவின் ஆரம்ப வரிகளில் இருப்பது போல இருக்கிறது, அவ்வளவுதான். அதிஷா அட்டைக் காப்பி என்று புலம்புவது போல ஜெய்ஹோ பிரதியெடுக்கப்பட்ட பாடல் இல்லை. இருந்தாலும் இதைப் பற்றி இசை தெரிந்த ஒருவர் சொன்னால்தான் நன்றாக இருக்கும். எனவே இது குறித்து என்னுடைய நண்பர், இசையமைப்பாளர் திரு.விவேக் நாராயணன் அவர்களை கேட்டேன். அவர் அதிஷாவின் குற்றச்சாட்டுக்கு பதிலாக ஒரு பதிவையே எழுதிவிட்டார். இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

அதிஷா பிரபல பதிவர், குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் பதிவர் அல்ல. எனவே இன்னும் பல இசை வல்லுனர்களை கேட்டு, சந்தேகங்களை களைந்து தனது தவறான குற்றச்சாட்டுக்கு மறுப்பு  எழுதுவார் என்று நம்புகிறேன். ஜெய்ஹோ!

Saturday, October 3, 2009

மூன்றே ஸ்வரங்களில் ஒரு பாடல் - எம்.எஸ்.வி, இளையராஜா, எல்.வைத்தியநாதன்


இசை என்பதே ஒரு அதிசயம். ஸ முதல் நி வரை உள்ள ஏழே ஏழு ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டு எத்தனையோ கோடி பாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

நான்கு ஸ்வரங்களை வைத்து மெட்டமைத்து முதலில் சாதித்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இந்த அதிசயத்திலும் அதிசயம் மூன்று அல்லது நான்கு ஸ்வரங்களை மட்டும் வைத்துக் கொண்டு உருவான பாடல்கள். முதலில் இதை சாதித்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ”அதிசய ராகம்” என்று தொடங்கும் பாடலின் முதல் பகுதி ச...க...ப...நி என்ற நான்கே ஸ்வரங்களில் அமைந்த பாடல். என்னுடைய ஞாபகமும், இசை அறிவும் சரியாக இருந்தால் அந்த ராகத்தின் பெயர் மஹதி. பாடல் மஹதி ராகத்தில் துவங்கி பின்னர் ஒரு ராகமாலிகாவாக மலரும். மெல்லிசை மன்னரின் இந்த தைரியமான சோதனை முயற்சி மாபெரும் வெற்றி பெற்றது. திரை இசையில் இன்றைய பல்வேறு சோதனை முயற்சிகளுக்கு விதை விதைத்தவர் மெல்லிசை மன்னர்தான்.



இரண்டாவதாக மூன்றே ஸ்வரங்களை வைத்து மெட்டமைத்து சாதித்தவர் எல்.வைத்தியநாதன்
கார்டுனிஸ்ட் ஆர்.கே.இலட்சுமணனின் மால்குடி டேய்ஸ் ஒரு டெலிவிஷன் தொடராக வெளிவந்தபோது அதற்கு புதுமையான டைட்டில் இசை தந்தார் எல்.வைத்தியநாதன். ”தா னா னா தனா தனா னா . . .” என்று ஆண் ஹம்மிங்கில் துவங்கும் அந்தப் பாடல் ச. . . ரி . . . க என்ற மூன்றே ஸ்வரங்களில் உருவான பாடல். அதற்கு முன்பும் சரி பின்பும் சரி எந்த நாட்டுப் புறப் பாடலும் மூன்றே ஸ்வரங்களில் அமைந்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால் இந்தப் பாடலில் அந்த ஹம்மிங்கைத் தவிர மற்ற பகுதிகளில் வேறு ஸ்வரங்களும் வருகின்றன.



அடுத்ததாக மூன்றே ஸ்வரங்களில் மெட்டமைத்து அசத்தியவர் இசைஞானி இளையராஜா
ஜெயா டிவி சார்பில் நடத்தப்பட்ட ஒரு மெகா இசை நிகழ்ச்சியில்
இளையராஜா ச . . . ரி . . . க என்ற மூன்றே ஸ்வரங்களில் அமைந்த அட்டகாசமான மெட்டை இசையமைத்து பாடிக் காட்டினார். பாடலுக்கான ஆர்கெஸ்ட்ரேஷனில் நான்கு நோட்டுகள் வருவதாக யு டியுபில் சில சந்தேகங்களை படித்தேன். என்னுடைய சிற்றறிவுக்கு அது புலப்படவில்லை.



மெல்லிசை மன்னரிடம் இயக்குனர் பாலசந்தர் மிகவும் புதுமையாக ஒரு பாடல் பண்ணலாம் என்று கூறினாராம். என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த எம்.எஸ்.வி தற்செயலாக ஒரு நாள் திரு. பால முரளி கிருஷ்ணாவை சந்தித்தாராம். அப்போது அவர் எடுத்துக் கொடுத்த ராகம்தான் மஹதி
. இந்த தகவலை நான் எப்போதோ ஒரு முறை விகடன் அல்லது குமுதத்தில் படித்தேன்.சர்வஸ்ரீ இராகம் என்பது மூன்று ஸ்வரங்களில் அமைந்தது. அதே போல நான்கு ஸ்வரங்களில் அமைந்த இராகங்களும் உண்டு. லாவங்கி, மஹதி, சுமுகம் என அந்த இராகங்களுக்குப் பெயர். இந்த இராகங்கள் அனைத்தையும் உருவாக்கியவர் திரு. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்.

மால்குடி டேய்ஸ் டைட்டில் இசையும், இளையராஜா தந்த இசையும் எந்தெந்த இராகங்களில் அமைந்தன என்று எனக்கு யாரும் சொல்லவில்லை. அதனால் எனக்குத் தெரியவில்லை. இசையில் இருக்கும் ஆர்வத்தால் இந்த தகவல்களை திரட்டியிருக்கின்றேன். இதில் தவறு ஏதும் இருந்தால் தெரியப்படுத்துங்கள். அல்லது என்னுடைய நண்பர் மற்றும் இசையமைப்பாளர் திரு.விவேக் நாராயண் அவர்களை அணுகுங்கள். இசை நுணுக்கங்களைச் சொல்வதில் அவர் வல்லவர்.

ஒன்று மட்டும் நிச்சயம், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், எல்.வைத்தியநாதன், இசைஞானி இளையராஜா இவர்கள் அனைவரும் பிறவி இசை மேதைகள். இன்றைய தலைமுறை மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையும் இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய நுணுக்கங்கள் ஏராளமாக இருக்கின்றன.

இந்த இசை மேதைகள் வாழும் காலத்திலேயே நானும் வாழ்வதை ஒரு வரமாக நான் நினைக்கின்றேன்.

வாழ்க நமது இசை மேதைகள்! வளர்க அவர்கள் புகழ்! மேலும் பெருகட்டும் அவர்களுடைய இசை!