Wednesday, July 17, 2013

மனசு - கேபிள் சங்கரின் பிரியாணி சிறுகதை குறும்படமாக!

கடந்த வருடம் . . . அதற்கும் முந்தைய வருடமாகக் கூட இருக்கலாம். டிஸ்கவரி புக் பேலஸில் ஒரு சந்திப்பு. கேஆர்பி. செந்தில், சுரேகா, கேபிள் மற்றும் நான்.

பேச்சை கேபிளின் சிறுகதைகள் பற்றிய பகிர்வுகள் ஆக்கிரமித்தன. அப்போது சுரேகாவும், செந்திலும் பிரியாணி என்ற சிறுகதையைப் பற்றி சிலாகித்தனர். கதையின் முடிவை வாசித்ததும் கண்கலங்கிவிட்டதாக செந்தில் குறிப்பிட்டார். அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அதை குறும்படமாக எடுத்தால் என்ன என்ற எண்ணம் எனக்கு எழுந்துவிட்டது.



கேட்டேன். கேபிள் உடனே அனுமதி தந்தார். திரைக்கதை உருவானதும் கேபிளிடம் வாசித்துக்காட்டினேன். தனக்குப் பிடித்திருக்கிறது என்று அவர் கூறியதும் ரிகர்சலில் ஈடுபட்டேன். யார்யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது தனது குறுகுறு படங்களால் கலக்கிக் கொண்டிருந்த கார்க்கி, நடிகராக குழுவுக்குள் வந்தார். ரிகர்சலின்போது ஞாயிறுதோறும் கலகலப்புதான். அந்த ஜாலி வீடியோக்களை யுடியூபில் பார்க்கலாம்.

படம் தயார் ஆனதும், ஈரோடு பதிவர் சந்திப்பில் கேபிள், கார்க்கி இல்லாமலேயே அவசரம் அவசரமாக ஒரு வெளியீடு நடந்தது. அவ்வளவுதான். விருதுகளுக்கு யோசித்து, தாமதித்து பிறகு மறந்தே போனேன். அதன்பின் வித்தையடி நானுனக்கு திரைப்படத் தயாரிப்பில் இறங்கிவிட்டதால் மனசு குறும்படம் என் மனதுக்குள் வரவே இல்லை.

போனவாரம் ஹார்டு டிஸ்க்கை தூசி தட்டிக் கொண்டிருந்தபோது மனசு மீண்டும் பூக்க ஆரம்பித்தது. யோசிக்காமல் பட்டென்று அடுத்த அரைமணியில் யுடியூபில் ஏற்றிவிட்டேன். தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து வெளியான ஒரே குறும்படம் இதுவாகத்தான் இருக்கும்.

படத்தை பார்த்த பலருக்கு கார்க்கியின் நடிப்பு பிடித்திருக்கிறது. கேபிள் ஏற்கனவே இயக்குனர் ஆகிவிட்டார். எனவே தமிழ் திரையுலகின் அடுத்த பிரபலங்களை இப்போதே இந்தக் குறும்படத்தில் பார்த்து இரசியுங்கள்.

Saturday, July 6, 2013

விஜய்க்கு உள்ள வாய்ப்பு கூட வைகோவுக்கு இல்லை!

ஆதரவுக் கரம் நீட்டுவீர்; நிதி அள்ளித் தருவீர்!

தனது கட்சிக்கு நிதி கேட்டு ஆனந்த விகடனில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்திருக்கிறார் வை.கோ.

நிதி அளித்தவருக்கு, தனது கையொப்பமிட்ட ரசீதை அனுப்பி வைப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

என்னவோ தெரியவில்லை அந்த விளம்பரத்தை பார்க்கையில் வை.கோவின் மேல் ஒரு பச்சாதாபம் ஏற்பட்டது. எப்பேர்பட்ட திறமைசாலி! கச்சிதமாக செயல்பட்டிருந்தால் தமிழக அரசியலே மாறியிருக்கும்.

கருணாநிதியை விட்டு விலகியபோது தலைநிமிர்ந்த வை.கோ, ஜெயலலிதாவிடம் மண்டியிட்டதும் அவருக்கான சுய அடையாளங்களை இழந்தார்.

கட்சிக்காக மக்களிடம் கையேந்தும் இந்த விளம்பரம் கூட பரவாயில்லை. . . ஆனால் கிடைப்பதை வாங்கிக் கொண்டு மீண்டும் ஏதோ ஒரு கழகத் தலைவர் (அ) தலைவிக்காக மேடையில் முழங்கும் படம் வரும் பாருங்கள்.. அதுதான் சகிக்காது.

விஜயகாந்த்தை விடுங்கள். இன்னும் அரசியலில் இறங்காத விஜய் கூட தான் முதலமைச்சர் ஆகிவிட முடியும் என்று அவர் இரசிகர்களை நம்ப வைக்கிறார். ஆனால் வை.கோவுக்கும் அவருடைய கட்சியினருக்கும் இது போல எந்த நம்பிக்கையும் இல்லை என்பதுதான் காலக் கொடுமை.

மிஸ்டர் வை.கோ! வரப்போகும் நாட்களில் ஒரே ஒரு முறையாவது உங்களின் பலத்தை நீங்களே உணர்வீர்களா?

தொலைபேசி : 044-28516565 (அ) mdmkdonationquery@gmail.com இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்பு கொண்டு மதிமுகவிற்கு நிதி அளிக்கலாம். (இதை அறிவிப்பது மட்டுமே நம்மால் இயன்றது)