Thursday, December 15, 2011

செர்ரி முத்தம்!



செர்ரி புளிப்பை - அவள் 
விழிகள் சுருக்கி ருசிக்கையில், 
சிலிர்த்து மூடும் உதடு கவ்வி,
இனிப்பைத் தேடி சுவைக்கப் பிடிக்கும்.

Wednesday, December 14, 2011

உம்மன்சாண்டிக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒரு கேள்வி!

Supreme court asked Tamil Nadu and Keral not to arouse people’s feelings and create a fear psychosis.


Justice Lodha regretted that both parties, instead of dousing the fire, were adding fuel to it.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தவறு யார் பக்கம்? இதன் முடிவு என்ன என்பதை நாம் தமிழராக அல்ல, மலையாளிகளை எதிர்க்கிறவராக யோசிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம். கேரள அரசும் இதே தந்திரத்தை பயன்படுத்துகிறது. இது மிகவும் மோசமான, குள்ளநரித்தனமான அரசு தந்திரம்.

கடந்த ஒரு வாரமாக கேள்விப்படும் செய்திகள் எதுவுமே நல்லதற்கல்ல. தமிழக கேரள எல்லைகளில் சர்வசாதாரணமாக மாற்று மாநிலத்தாரின் உடமைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. அப்பாவி மக்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட அனைவரும் ஓட ஓட விரட்டப்படுகிறார்கள். பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்படுகின்றன. கடைகள் அடைக்கப்படுகின்றன. போக்குவரத்து முடங்குகிறது. ரயில் மறிக்கப்படுகிறது. 25,000ம் பேர் ஒன்றாக அணி திரள்கிறார்கள். அவர்களை போர்வையாக வைத்துக்கொண்டு ஒரு கும்பல் மாற்று மாநிலத்தவர் மீது கல்லெறிகிறது, அடித்து நொறுக்குகிறது.

இதை தட்டிக் கேட்க வேண்டிய போலீசார் கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள். நான்காவது தூண் என்று வர்ணித்துக் கொள்ளும் மீடியாக்களோ, இந்த ரௌடிகளின் அட்டகாசத்தை மொழி உணர்வாகவும், மாநில உணர்வாகவும் உயர்த்திப் பிடிக்கின்றன.

இதன் பின்னணி என்ன? எங்கே இருந்து வந்தது இந்த திடீர் விரோதம்? பிரச்சனையை தீர்க்க திராணியில்லாத அரசுகள் மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. தங்களது இயலாமையை மறைக்க மக்களை மோதிக் கொள்ள வைக்கின்றன. மக்களும் ஆட்டு மந்தைகளைப் போல, அரசின் இந்த விபரீத தந்திரங்கள் புரியாமல் அணி திரள்கிறார்கள். உடனே எதிர்கட்சிகள் பதறிவிட்டன. மக்கள் விலைவாசி பிரச்சனை, அடிப்படை வசதிக் குறைவு பிரச்சனைகளை மறந்து அரசாங்கத்தை ஆதரிக்க ஆரம்பித்துவிடுவார்களோ என்ற பதற்றத்தில், தாங்களும் உண்ணாவிரதம், போராட்டம், அணிவகுப்பு என்று தங்கள் பங்குக்கு மக்களை தூண்டிவிடுகிறார்கள்.

இதைச் செய்யாதே என்று கண்டிப்பாகச் சொல்ல இந்த அரசாங்கங்களுக்கு நாதி இல்லை (ஏனென்றால் மறைமுகமாக தூண்டிவிடுவதே அரசும், அரசியல்கட்சிகளும்தான்). நான் இதைச் செய்ய மாட்டேன், என்று சிந்தித்து முடிவெடுக்கும் அறிவும் அந்த கும்பலுக்கு இல்லை. (ஏனென்றால் அரசாங்கமே அனுமதிக்கிற ஒரு அராஜகத்தை அனுபவிக்கும் ஆசை)

உம்மன்சாண்டிக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒரு கேள்வி. மனிதாபிமானங்களையும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலைத்துவிட்டு, விரோதங்கள், கோரமாக இளிக்கும்போது, நீங்கள் என்ன சாதித்துவிட முடியும் என நினைக்கிறீர்கள்?

நீங்கள் முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனையை தீர்ப்பது இருக்கட்டும். ஓவ்வொரு கேரள தமிழனும், தமிழக மலையாளியும், பயமின்றி இரவில் தூங்க நினைக்கின்றான். உங்களால் அதற்கு உத்திரவாதம் தர முடியுமா? முடியாது என்றால், பதவியை விட்டு ஓடுங்கள்.

எங்களுக்கு எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களை பார்த்துக் கொள்ளத் தெரியும். அவர்கள் மலையாளியாக இருந்தாலும், தமிழராக இருந்தாலும்.

Tuesday, December 13, 2011

தாவணிதேச முத்தம்




தாவணி மறைத்த
இடைப் பிரதேசத்தில்

விரல்களை போராட அனுப்பிவிட்டு,
இதழோடு இதழ்களால்
உறவாடினேன்.

செல்நம்பர் முத்தம்



பேனா கேட்டேன்
இல்லையென்றாள்!
தாள் கேட்டேன்
இல்லையென்றாள்!
அதனால் இதழோடு இதழ் பதித்து
முத்தங்களின் எண்ணிக்கையால்
என் தொலை பேசி எண்களை குறித்து வைத்தேன்.

ஒத்திகை முத்தம்




மல்லிகை உலவிய தோள்களிலும்,
என் விரல்கள் உலவிய கன்னங்களிலும் 
ஒத்திகை பார்த்து,
அவள் இதழ்களில் என் இதழ்களின் 
நடன அரங்கேற்றம் செய்தேன்.

Monday, December 12, 2011

ரஜினி - (அனைவருக்கும் பிடித்த) முரண்பாடுகளின் மூட்டை!

எனக்கு குளிர் பிடிக்கும், இசை பிடிக்கும், நீலம் பிடிக்கும், பறவைகள் பிடிக்கும், குழந்தைகள் பிடிக்கும் என்பது போல, இரஜினியையும் பிடிக்கும்.

30 வருடங்களாக, இந்த மனிதன் நடித்த படங்களும், செய்திகளும் எனக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சில நேரம் சே.. இதென்ன தனி மனித நேசிப்பு என்று அறிவு ஒதுக்கித் தள்ள முயற்சித்தாலும், மீண்டும் ரஜினி என்ற பெயர் காந்தமாக ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.

 டிவி, ரேடியோ, பத்திரிகைகள் என ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு மிகை பிம்பம் என்று விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் 30 வருடங்களுக்கு மேலாக ஒரு பிம்பம் அப்படியே நிலைத்து நிற்பதும், மேலும் விசுவரூபம் எடுப்பதும், ஒதுக்கித் தள்ள நினைப்பவர்களையும், அது பற்றி தொடர்ந்து பேச வைக்கிறது.

ரஜினி நல்ல நடிகரா? ரஜினி மோசமான நடிகரா? ரஜினி நல்ல மனிதனா? ரஜினி கெட்ட மனிதனா? ரஜினிக்கு அரசியல் ஆசை இருக்கிறதா? ரஜினிக்கு அரசியல் ஆசை இல்லையா? ரஜனி பழைய தலைமுறையா? ரஜினி புதிய தலைமுறையா? ரஜினி லேட்டா? ரஜினி லேட்டஸ்டா?

நீங்கள் இதில் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் என் பதில் ஆம் என்பதுதான். ரஜினி என்கிற பலமான பிரமாண்ட பிம்பத்தை இரசிக்கிறவர்கள், அவருடைய முரண்பாடுகள் மிக்க நிஜ வாழ்வையும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் விசித்திரம்.

பாபாவின் தோல்வியும், எந்திரனின் வெற்றியும் ஒரே அளவு பரபரப்பாகிறது. புகை, குடி என்ற அவரின் குறையும், ஆன்மீகம், யோகா என்ற ஒழுக்கமும், ஒரே விகிதத்தில் ஏற்கப்படுகிறது.

பலமும் பலவீனமும் கலந்த அவர், முரண்பாடுகளின் மூட்டை. ஆனாலும் அவரைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சுட்டி டிவி குழந்தைகள் முதல் என்டிடிவி பெரிசுகள் வரை, எல்லோரையும் ஈர்க்கிறார்.

ஏன் என்று காரணம் தேடுவதை விட, இரசிப்பது எளிதாக இருக்கிறது. அதனால் தான் நான் ரஜினி இரசிகனாக இருக்கிறேன்.

ஹேப்பி பர்த்டே தலைவா... உங்க அடுத்த படம் எப்போ?
(இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இதே கேள்விதான்)

Saturday, December 10, 2011

ராஜா-வாலி-மனசு-இசை

இரண்டு மாதங்களுக்கு முன்பு, நண்பர் ஒருவர் டிஸ்கவரி புக் பேலசுக்கு வா என்றார். வந்தேன். ஆனால் அவர் வரவில்லை. அரை மணி காத்திருந்து, ஒரு டீ குடித்து வீடு திரும்ப முடிவெடுத்தபோது,. வணக்கம் தலைவரே என்று நண்பர் கேபிள் சங்கரின் குரல். அவ்வளவுதான், தொடர்ந்து நான்ஸ்டாப் டாக்கிங். வாய் வலித்தாலும் பரவாயில்லை, கால் வலிக்கக் கூடாது என நண்பர் வேடியப்பன் (டி.பு.பே) சேர் போட்டுத் தரும்போது, எனக்கு சுரேகா அறிமுகமானார்.

ஊர் கதையெல்லாம் பேசி, சொந்தக் கதை பேசும்போது, கேபிள் பிளாகில் எழுதிய சிறுகதைகள் பற்றி பேச்சு வந்தது. குறிப்பாக பிரியாணி என்ற சிறு கதையைப் பற்றி சுரேகா மிகவும் சிலாகித்தார். ரொம்ப டச்சிங்கா இருந்தது, படிச்சவுடனே கண்ணு கலங்கிடுச்சு என்றார்.

சுரேகாவின் அந்த விமர்சனம் என் மனதிலேயே தங்கிவிட்டது. அதனால் கதையை படிக்காமலேயே அடுத்த குறும்படத்திற்கான கதை, கேபிளின் பிரியாணிதான் என்று தீர்மானித்தேன். அடுத்த சில நாட்களில் கேபிள் கதையை அனுப்பி வைக்க, நான் திரைக்கதை எழுதினேன். முக்கியமான கதாபாத்திரத்தில் டிவிட்டர் நண்பர்(@iamkarki) நடிக்க உற்சாகமான டீம் உருவானது. பிரியாணி என்ற டைட்டிலுடன் ஆரம்பித்த ரிகர்சல், மனசு என்ற புது டைட்டிலுடன் நிறைவுற்றது.

என்னைப் பொறத்தவரையில், நான் வேலைசெய்யும் புராஜக்டுகளில், இசைக்காக மிகவும் மெனக்கெடுவேன். சும்மா இசை, ஏதோ ஒரு டிராக் என்பதில் எனக்கு எப்போதும் திருப்தி இல்லை. நண்பர் இசையமைப்பளார் விவேக் நாராயணிடம் கதையை விவரித்தேன். (பிரியாணி)உணவு  இந்தக் கதையில் பிரதானமாக இருப்பதால், பசி தொடர்புடைய ஸ்ரீஇராகத்தில் பிண்ணனி இசை அமைத்து தந்தார். எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கிறதா என்று கேட்டுச் சொல்லுங்கள்.

தீம் மியூசிக் - 1 


தீம் மியூசிக் - 2



இசை உருவாகிற கணங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் இரண்டு மேதைகள் ஒன்றாக இணைகிறபோது பரவசம்... பரவசம்... பரவசம்.

காற்றில் வரும் கீதமே பாடலுக்கு உருகாதவர் இருக்க முடியாது. அது இளையராஜாவின் மாஸ்டர் பீஸ். அந்தப் பாடல் உருவாகும் விதத்தை கேளுங்கள். ராஜா மெட்டமைக்க, வாலி வார்த்தைகள் கொடுக்க, ஒரு குழந்தையின் ஜனனம் போல, விவரிக்க முடியாத ஒரு உன்னதத்தை உணர்வீர்கள்.

Friday, December 9, 2011

ஒஸ்தி - விமர்சனம்

ஹிந்தில தபாங் என்றால், தமிழில்ல ஒஸ்தியாம்லே..  சரியான போங்கு. டிரையலரில் ச்சுட்டே போடுவேன் என்றார் சிம்பு. சொன்னதைச் செய்ஞ்சுட்டாருல்லே.. படம் பாத்த அவ்ளவு பேரும் காலிலே..

டர்ட்டி பிக்சரில் வித்யாபாலன் தமிழில் பேசுவதைப் பார்க்க கோயம்பேடு ரோகிணி காம்ப்ளசுக்குள் நுழைந்தோம். கருவாட்டு வாடையுடன் காத்திருந்த போது நண்பர் கணேஷ் டிக்கெட் வாங்கி வந்துவிட்டார். காரை பார்க் பண்ணிவிட்டு வந்த ஜெயராஜ், கார் பார்க்கிங்ல போட் நிக்குது சார் என்றார். இது மீன் மார்கெட்டா, தியேட்டரா என்று சந்தேகித்துக் கொண்டிருக்கும்போது, திமு திமுவென்று டாஸ்மாக் வாசனையுடன் கூட்டம். நண்பர் கணேஷ் திடீரென அலறினார். ஐயையோ 3 டிக்கெட்டுக்கு பதில் ரெண்டுதான் வாங்கினேன். இப்ப என்ன பண்றது என்று பதறிக் கொண்டே மீண்டும் வரிசைக்கு ஓடினார். 5 நிமிடம் கழித்து புன்னகையுடன் வந்தார். அண்ணே ஒரு ட்விஸ்ட். டர்ட்டி பிக்சர் கான்சலாம். அதுக்கு பதிலா ஒஸ்தி டிக்கெட் கொடுத்துட்டான் என்றார். இதுதான் நான் ஒஸ்தி பார்த்த கதை.

ஒஸ்தியில என்ன கதை என்று நீங்கள் கேட்டுவிட்டால் நான் என்னத்த சொல்ல முடியும். அதனால்தான் ஒஸ்தியை பார்க்கப் போன கதையை நீட்டி முழக்கியிருக்கிறேன்.

Young Super Star என்று தனக்குத் தானே பட்டம் கொடுத்துக் கொண்டிருக்கும் சிம்பு, படம் முழுக்க கவர்ச்சி நடிகைகள் டை்டாக பிளவுஸ் போடுவது போல சட்டை அணிந்து கொண்டு, கூலிங் க்ளாஸ் இருட்டில் திக்குத் தெரியாமல் திரிந்து கொண்டே,  திருன்னவேலி ஸ்லாங் பேசிக் கொல்கிறார் (வில்லன்களையும், நம்மையும்).

கடைசியில் ஒரு லே போட்டுவிட்டால் அது திருநெல்வேலி ஸ்லாங் என்பது ஒஸ்தி வசனகர்த்தாவின் கண்டுபிடிப்பு. இசையமைப்பாளர் தமன், கீபோர்டை ஆன் செய்துவிட்டு அதன் மேல் பேப்பர் வெயிட்டை வைத்துவிட்டார் போலிருக்கிறது. நான் ஸ்டாப்பாக டிஜிட்டல் கதறல்கள், காதில் இன்னமும் ஙொய்ங்.

திரும்பவும் ஒரு முறை சொல்றேன். கதையைக் கேட்காதீங்க. ஏன்னா படம் முழுக்க கதாசிரியரும் தூங்கிட்டார், நடுநடுவுல நானும் தூங்கிட்டேன். சாயமுடியாத கிழிந்து போன சேரில், 90 டிகிரி செங்குத்தாக உட்கார்ந்து கொண்டு அவ்வளவாக தூங்க முடியவில்லை, பக்கத்து சீட் டாஸ்மாக்கர் வேறு அவ்வப்போது வாந்தி எஃபக்ட் கொடுத்துக் கொண்டிருந்ததால், பயத்தில் கண் விழித்து சில சீன்களை பார்த்ததன் பலன்தான் இந்த விமர்சனம்.

சந்தானத்துக்கு யங் கவுண்டமணி என்று பட்டம் கொடுத்துவிடலாம். சகட்டு மேனிக்கு எல்லோரையும் வாடா போடா என்கிறார். விட்டால் காமிராவைப் பார்த்து நம்மையும் என்னடா என்பார் போலிருக்கிறது. சிம்பு கேப் விடும்போதெல்லாம் இவர் யாரையாவது கலாய்த்துக் கொண்டே இருக்கிறார்.

இவர்கள் அதிகம் பேசித் தள்ளிவிட்டதால், நாயகி ரிச்சா கங்கோபாத்யாயவிற்கு டயலாக் கட். கிட்டத்தட்ட கிளைமேக்ஸ் வரை, முந்தானையை சரியவிட்டு, இடுப்பை காண்பித்துக் கொண்டே இருக்கிறார். மயக்கம் என்ன படத்துக்கு முன் இது ரிலீஸாகியிருந்தால், ஃபீல்ட் அவுட் ஆகியிருப்பார். பாடல் காட்சிகளில் கூட இவருக்கு பதில் சிம்வுவே ஆடித் தள்ளிவிட்டார் என்பதால், அவ்வப்போது ஃபுல் மேக்கப்பில் முழிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை.

ரேவதி, நாசர், கணேஷ், ஜித்தன் ரமேஷ், நிழல்கள் ரவி அப்புறம் சரண்யா என்று இன்னும் யார் யாரோ வந்து போகிறார்கள்.

சிக்ஸ் பேக் வைத்துக் கொண்டு மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டால், பட்டன்கள் தெறிக்க சட்டை தானாக கழன்று கொள்ளும் என்பதும், டிராக்டரை ஆன் செய்து, புகை கக்கும் எக்ஸாட் பைப்பை வாய்க்குள் சொருகினால் ஆள் காலி என்பதும், ஒஸ்தி நமக்குத் தரும் கிளைமாக்ஸ் மெசேஜ்கள்.

சிம்பு வெறியர்களும், மசாலா பிரியர்களும் மட்டும் இந்தப் படத்தை 30 நிமிடங்கள் பார்க்கலாம்.

சிவாஜி த பாஸ் மாதிரி, ஒஸ்தி த மாஸ்! சிம்புவைத் தவிர வில்லன் உட்பட எல்லா கேரக்டர்களும் இந்த வசனத்தை சொல்லிவிட்டுப் போகிறார்கள்.
மாஸ்னா என்னாலே, கொசு கடிக்காம இருக்க தடவுவோமே அந்த ஓடோமாஸாலே..

கடைசியில் டைட்டில் போடும்போது, சிம்பு ஒரு பெரிய சிக்கன் லெக் பீஸை கடிக்கிறார்.

ஒஸ்தி, கடி என்பதை சிம்புவே சிம்பாலிக்காக சொல்லும்போது நான் வேறு தனியாக சொல்லணுமாலே. அன்லிமிட்டெட் கடிலே..

Saturday, December 3, 2011

கனிமொழி இனி ஜெயலலிதாவை பின்பற்ற வேண்டும்!

கனிமொழி நினைத்தே பார்த்திருக்கமாட்டார். கிட்டத்தட்ட 192 நாட்கள் திஹார் சிறை வாசம். அதுவும் ஊழல் செய்த குற்றச்சாட்டுக்காக. கருணாநிதி போன்ற அரசியல்வாதியின் மகளாக இருப்பதின் சௌகர்யம், அசௌகர்யம் இரண்டையும் ஒரு சேர அனுபவித்திருக்கிறார் கனிமொழி.

அவர் ஜாமீனில்தான் வெளியே வந்திருக்கிறார். இன்னமும் சட்டத்தின் முன்னால் அவர் குற்றம்சாட்டப்பட்டவர்தான். இதிலிருந்து அவர் மீண்டு வருவது ஒரு நெடிய போராட்டமாக இருக்கும். மீண்டு வரமுடியாமலும் போகலாம்.

அவர் சென்னைக்கு வந்திறங்குகிற வேளையில் இரண்டு அரசியல் வதந்திகள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒன்று, அவருடைய வருகையை ஒட்டி திமுகவின் கொண்டாட்டங்களை பாதிக்கும் வகையில் ஸ்டாலினை நில அபகரிப்பு வழக்கில் கைது செய்வது. இரண்டு, சென்னை சங்கமம் தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்து கனிமொழியையே கைது செய்வது. முதலாவது வதந்திக்கு முகாந்திரம் அதிகம். இரண்டாவது நடந்தாலும் நடக்கலாம்.

தனது அரசியல் எதிரி கருணாநிதியை பழிவாங்க, ஜெயலலிதாவுக்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடையாது. இதை கருணாநிதியை விட கனிமொழி நன்றாக உணர வேண்டும். இல்லையென்றால் அவர் நசுக்கப்படுவார். கனிமொழி உடனே என்ன செய்ய வேண்டும்?

சென்னை வந்ததும், அப்பாடா என ஓய்வெடுக்காமல் தமிழக அரசியல் கோதாவில் இறங்க வேண்டும். ஜெயலலிதா சார்பில் திமுகவிற்கு எதிராக முடுக்கிவிடப்படும் வழக்குகளையும், நெருக்கடிகளையும் நேரடியாக சந்திக்க வேண்டும்.

கனிமொழி இனி எப்படி இருக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கு விடை  ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைதான் உதாரணம். பெண்ணாக இருந்தாலும், நெருக்கடி வந்த போதெல்லாம், முன் எப்போதையும் விட மேலும் வலிமையுடன் ஜெயலலிதா களம் இறங்கியிருக்கிறார். ஓடி ஒளியவில்லை. அவரையே முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு, ஜெயலலிதாவை அரசியல் களத்தில் சந்திக்க கனிமொழி தயாராக வேண்டும்.

தான் ஒரு அரசியல்வாதியா? அரசியல்வாதியின் மகள் மட்டுமா? என்பதை அவர் தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது. திஹாரிலிருந்து அவருடைய தனி விமானப் பயணம் சென்னையைத் தொடும்போது அவர் இந்தக் கேள்விகளுக்கான விடையுடன் தரையிறங்க வேண்டும்.

அவர் ஒரு வெற்றிகரமான அரசியல்வாதியாக தன்னை முன்னிலைபடுத்திக் கொள்ள இதை விட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது.

காலம் கேள்விகளை மட்டுமே வீசும். பதில் மட்டுமே நாம். உங்கள் பதில் என்ன கனி?

Thursday, December 1, 2011

பாலை - விமர்சனம்

இந்த வரியை எழுதிக் கொண்டிருக்கும்போது, பாலை திரைப்படம் திரையரங்குளை விட்டுப் போயிருக்கலாம்.

Canon 5D, 7D ஸ்டில் காமிராக்களை வைத்து, வசதி குறைவான லைட்டிங்கில் படம்பிடித்து, ஒரு லாப்டாப்பில் எடிட் செய்யப்பட்ட படம். அந்த வகையில் இந்தப் படத்துக்கும், அதன் குழுவினருக்கும் பாராட்டுகள்.

கதைக் களம் வித்தியாசமானது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என நிலங்கள் வகுக்கப்பட்டு தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் நடக்கும் கதை. முல்லை நிலத்தில் வசிக்கும் தமிழர்களை, வந்தேறிகள் பாலை நிலத்துக்கு துரத்தியடிக்கிறார்கள். ஓடி ஒளிந்த தமிழர்கள் போரிட்டு மீண்டும் முல்லை நிலத்தை வெல்கிறார்கள்.

அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரத்தில் சுருக்கமாக சொல்ல வேண்டியதை, இரண்டு மணி நேரத்துக்கு இழு இழு என்று இழுத்துவிட்டார்கள். சம்பவங்களோ, திருப்பங்களோ இல்லாத திரைக்கதை. படம் பார்த்து முடிக்கும்போது அசதியாக இருக்கிறது. மனதில் எதுவுமே தங்கவில்லை.

நாட்டிய நாடகத் தன்மை படம் முழுவதும் இழையோடுகிறது. வெள்ளைத் துண்டுகளும், மலர் கிரீடங்களும்தான் மேக்கப். சில நேரங்களில் ஃபேஷன் ஷோ ராம்ப் வாக் போல இருக்கிறது. குறிப்பாக காயாம்பூ என்கிற பெண் பாத்திரம் தோன்றும்போதெல்லாம் அப்படி இருக்கிறது. அந்தப் பெண் ஈர்க்கிறார். அவர் ஏற்கனவே இரு தமிழ் படங்களில் நடித்திருக்கிறாராமே..

மற்ற நடிகர்களில் எவருடைய முகமும் மனதில் தங்கவில்லை. எல்லோரும் ஒரே மாதிரி வந்து மறைகிறார்கள். தமிழர்களும், வந்தேறிகளும் மோதுகிற காட்சிகளில், இருவருமே ஒரே மாதிரி வெள்ளை துண்டுகளை அணிந்து கொண்டு, இருட்டிலும், மணல் புழுதியிலும் மோதும்போது, யார் யாரை தாக்குகிறார்கள் என்றே புரியவில்லை.

பழந் தமிழர்கள் போர் செய்வதைத் தவிர வேறெதுமே செய்யவில்லையா? இவ்வளவு நீளமான படத்தில் தமிழர்களின் மற்ற குணாதிசயங்களையும் கொஞ்சமாவது காட்டியிருக்கலாம்.

இந்தப் படம் தியேட்டர்களை விட்டு போகக் காரணம், சினிமாவை கையில் வைத்திருக்கும் பெரிய பண முதலைகள் என இயக்குனர் சில பேட்டிகளில் குற்றம்சாட்டியிருந்தார்.

சுவாரசியமில்லாத காட்சியமைப்புகள் நிறைந்த பாலையை எவ்வளவு பெரிய பண முதலையும் ஓட வைக்க முடியாது என்பதுதான் என் கருத்து.

வித்தியாசமான படங்கள் எல்லாம், நல்ல படங்கள் அல்ல. - உதாரணம் பாலை.

மயக்கம் என்ன - விமர்சனம்


கமலா தியேட்டரில் படத்தைப் போட்டுவிட்டு கதவுக்கு வெளியே கார்பெண்டருக்கு வேலை கொடுத்துவிடுகிறார்கள். DTS 5.1 ஐயும் மீறி அவர் ரம்பம் போடுகிற சத்தம் உள்ளே வருகிறது. இத்தனைக்கும் நைட் ஷோ!

நல்லவேளை படத்தில் ரம்பம் இல்லை. ஆனால் அக்மார்க் செல்வராகவன் பிராண்ட் கோடாலி இருக்கிறது. எடுத்தவுடன் நண்பனின் காதல் பிளக்கப்படுகிறது. நண்பனின் காதலி அறிமுகமான இரண்டாவது காட்சியிலிருந்தே, கொஞ்சம் கொஞ்சமாக எப்படி கதாநாயகனின் காதலியாகிறாள் என்பதுதான் (வழக்கமான) முதல்பாதி.

இரண்டாவது பாதியில் நாயகன் திடீர் மனநோயாளியாக மாறுவதும் வழக்கமான செல்வராகவன் ஸ்டைல்தான். ஒரே மாற்றமாக, இதில் காதலி, மனைவியாகி, நாயகனை அவன் இலட்சியம் நிறைவேற உதவுகிறாள்.

தனுஷ் நன்றாக நடித்திருக்கிறார். ரிச்சா கங்கோபாத்யாய அவருக்கு ஈடு கொடுக்கிறார். கொஞ்சம் தெலுங்கு வாடையடிக்கும் முகம் என்றாலும், பூசினாற் போல இருப்பதால் அம்மணி கோடம்பாக்கத்தில் ஒரு ரவுண்டு வருவார் என நினைக்கிறேன்.

படம் முழுவதும், மாற்றான் மனைவி மற்றும் மாற்றான் காதலியின் மேல் ஆசைப்படுபவர்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் நண்பர்களாகவும் இருக்கிறார்கள். திரும்பத் திரும்ப அனைத்துப் படங்களிலும் செல்வராகவனின் இதே பாத்திரப் படைப்புகளால், கோபமாகவும், சலிப்பாகவும் இருக்கிறது.

படம் பார்க்கும்போது, சில காட்சிகள் பிடிக்கிறது. அதுவும் வீடு வந்ததும் மறந்து விடுகிறது. படம் முழுக்க தனுஷ் தயங்கித் தயங்கி காதலிக்கிறார், தயங்கித் தயங்கி போட்டோகிராபராக முன்னேறுகிறார். மயக்கம் என்ன என்பதற்கு பதில் தயக்கம் என்ன என்று டைட்டில் வைத்திருக்கலாம்.

புது தயாரிப்பாளர் (மனைவி) என்பதால் செல்வராகவனிடம் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. அடுத்த படத்துக்கு புது உதவியாளர்களுடன் புதிய களத்தை அவர் தேடிப் பிடிக்க வேண்டும்.

மயக்கம் என்ன... மயக்கவில்லை!

Monday, November 28, 2011

எண் முத்தம்!





பேனா கேட்டேன்
இல்லையென்றாள்!


தாள் கேட்டேன்
இல்லையென்றாள்!


அதனால் இதழோடு இதழ் பதித்து
முத்தங்களின் எண்ணிக்கையால்
என் தொலை பேசி எண்களை புரிய வைத்தேன்.

Saturday, November 26, 2011

சிறு தயாரிப்பாளர்களுக்கு இனி சினிமாவில் இடமில்லை?

திரு. செந்தமிழன் இயக்கத்தில் பாலை என்கிற திரைப்படம் பற்றி கேள்விப்பட்டீர்களா? 

நான் டிரையலர் பார்த்தேன். நிச்சயம் ஈர்க்கிறது. இன்று புதிய தலைமுறை சானலில் படம் பற்றிய சிறு நிகழ்ச்சியை பார்த்தேன். படம் சிறப்பாக இருப்பதாக, பார்த்தவர்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூறினார்கள். ஆனால் படத்தை பெரும்பாலானவர்கள் பார்க்க முடியாத சூழல். 


காரணம் . . . பாலை இயக்குனர் திரு. செந்தமிழன் எழுதியுள்ள நீண்ட உருக்கமான கடிதத்தில் இருந்து சில வரிகளை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். 

‘முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம். ‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது. ‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே. ‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்.‘

அவருடைய கடிதம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

'தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை.

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன'


ஏன் இப்படி? சினிமா வெளியீடு ஒரு மிக முக்கியமான மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமிக்கும் Umbrella release பாணி, இந்திய சினிமா வியாபாரத்திலும் நுழைந்து விட்டது. ஆனால் இந்த வியாபார முறையினால், எல்லா சிறு தயாரிப்பாளர்களின் படங்களும் இப்படித்தான் சிக்கித் திணறுகின்றன.

வால்மார்ட் வந்தால் எப்படி சிறு வணிகர்கள் காணாமல் போவார்களோ, அது போல இந்த புதிய வியாபாரச் சூழலால் சிறு தயாரிப்பாளர்களும் காணாமல் போகத்தான் வேண்டுமா? இந்த சூழலை சிறு தயாரிப்பாளர்கள் எப்படி சமாளித்து எதிர்கொள்வது?

சினிமா வியாபார நுணுக்கம் அறிந்தவர்கள் கூறலாம்.

பாவம் சில்க் ஸ்மிதாக்கள்!

டர்ட்டி பிக்சர் என்ற ஹிந்திப் படத்தில் சில்க் ஸ்மிதாவாகத் தோன்றுகிறார், வித்யா பாலன்.

 மீடியாக்கள் சிலிர்த்து எழுந்துவிட்டன. சில்க் உயிருடன் இருந்தபோது, தாங்கள் எழுதிய வக்ரமான கிசுகிசுக்கள், கற்பனையாக புனைந்த செய்திகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, சில்க் ஸ்மிதா ஒரு பெண் என்றும் அவர் அப்பாவி என்றும் திடீரென கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்தக் கரிசனம் கூட சில்க்காக தோன்றுவது வித்யாபாலன் என்பதால்தான். சில்க்கின் வேடத்தில் அனுராதா ஒப்பந்தமாகி இருந்தால், மீடியாக்களின் ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதுதான் ஊடகங்களின் உண்மையான கோர முகம்.

சில்க் ஸ்மிதாவின் உயர்வுக்கும், புகழுக்கும், கடைசி காலத்தில் அவர் அனுபவித்த மன அழுத்தங்களுக்கும், மீடியாக்களின் பொறுப்பற்றதனத்துக்கும் பங்கு உண்டு.

இன்று காலை கூட அங்காடித் தெரு புகழ் அஞ்சலி ஒரு பத்திரிகையில் புலம்பியிருந்தார். சில வருடப் போராட்டங்களுக்குப் பின் இப்போதுதான் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. அதற்குள் நடிகர் ஜெய்யுடன் என்னை இணைத்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது எனக்கு வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

உற்று கவனியுங்கள், அஞ்சலியை புலம்ப வைத்திருப்பது நீங்களோ நானோ அல்ல. அகோரப் பசியுடன் திரியும் பொறுப்பற்ற பத்திரிகைகள்.

பாவம் சில்க் ஸ்மிதாக்கள்!

ஒரு லிட்டர் சன் லைட்

அரசு கேபிள் வழியாக ஜெயா டிவியில் விலைவாசி ஏற்றத்தை அறிவித்துவிட்டு ஜெயலலிதா ஹெலிகாப்டர் ஏறி பெங்களுரு பறந்துவிட்டார். அவருக்கு அவர் பிரச்சனை.

ஆனால் தமிழகம் முழுவதும் விலைவாசி மற்றும் மின்சாரம் காரணமாக அணுஉலை முதல் அடுக்களை வரை செம ஹாட். இப்படி விலை ஏற்றினால் நாங்க எப்படி வாழறது என்று டாஸ்மாக் தமிழன் முதல் ஐபேட் தமிழன் வரை புலம்ப ஆரம்பிச்சாச்சு.

நேற்று கூட பெங்களுரில் இருந்து ஹெலிபேடில் இறங்கிய கையோடு, தமிழக முதல்வர் மின்கட்டணத்தையும் கன்னா பின்னாவென்று உயர்த்திவிட்டார்.

அரசு எப்பவுமே அப்படித்தான். கஜானா காலி என்ற அறிக்கையுடன் ஓடி மறைந்துவிடும். மக்கள் முதலில் புலம்புவார்கள் பின்னர் அதுவே பழகிப்போய்விடும். இது சாதாரண மக்களின் நிலை. சில அசாதாரணர்கள் இருக்கிறார்கள். கையில் கிடைப்பதை வைத்து தங்களுக்கு வேண்டியதை உருவாக்கிக் கொள்வார்கள்.

கென்யாவில் வாழும் சேரி மக்கள் 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டு 60 வாட்ஸ் பல்பை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அணு உலை கிடையாது, சோலார் பேனல் கிடையாது, அனல் மின் அலட்டல்கள் கிடையாது. ஒரே ஒரு இரண்டு லிட்டர் பாட்டில், அதில் நிரப்பப்பட்ட நீர், கொஞ்சம் ப்ளீச்.... அவ்வளவுதான் 60 வாட்ஸ் அளவுக்கு வெளிச்சம் பளிச்.

குடிசைகளின் கூரை வழியாக நீர் நிரப்பப்பட்ட பாட்டில் தொங்கவிடப் படுகிறது. பாதி பாட்டில் கூரைக்கு மேல், மீதி கூரைக்கு உள்ளே, அதாவது வீட்டுக்கு உள்ளே. கூரைக்கு மேல் உள்ள பாட்டில் வழியாக சூரிய ஒளி உள்ளே இறங்குகிறது. அது ஒளிச் சிதறல் காரணமாக உள்ளே இறங்கியதும் வீடு முழுவதும் சிதறுகிறது. சிதறலை அதிகரிக்க, தண்ணீரில் கரைக்கப்பட்ட ப்ளீச் உதவுகிறது. வெளிச்சத்தை மேலும் அதிகப்படுத்திக் காட்ட, நைலான் துணிகள் (சினிமாவில் ரிஃப்ளடக்டர்கள்) போல பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிம்பிள் செட்டப் வழியாக அந்த பாட்டிலில் 50 முதல் 60 வாட்ஸ் பல்பை போல வெளிச்சம் பெற முடிகிறது. பைசா செலவில்லை, ஷாக் இல்லை, மின்சாரமும் இல்லை, மின்கட்டண மிரட்டலும் இல்லை. ஆனால் அறை முழுக்க வெளிச்சம்.

இரவு நேரத்தில் என்ன செய்வது? பௌர்ணமி காலங்களில் பிரச்சனை இல்லை. மற்றபடி விடியும் வரை காத்திருதான்.

தண்ணீர் பாட்டில் பல்பை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவரின் பெயர் மோஸர். 2002ல் பிரேசில் சேரிகளில்  இதை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தற்போது Koch Hope என்ற இளைஞர் பட்டாளம் கென்யாவின் இருண்ட சேரிகளில் 100 வீடுகளில் இதை இலவசமாக செய்து தந்திருக்கிறார்கள். மேலும் விரிவுபடுத்த டோனர்களுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களுடைய திட்டத்திற்குப் பெயர் 'Isang Litrong Liwanag' தமிழல் கூறினால் ஒரு லிட்டர் சன்லைட்‘

சன்லைட் என்ற வார்த்தை தமிழா என்று என் காதை திருகாதீர்கள். ச்ச்ச்சும்மா ஒரு ஸ்டைலுக்காக எழுதினேன். நம்ம ஊர்லயும் இதை யாராவது கொண்டு வாங்கப்பா... அம்மா கரண்ட் சார்ஜையும் ஏத்திட்டாங்களாம்.

இதை வாசித்த பின் க.பாலாஜி -ஒரு யுடியூப் வீடியோ இணைப்பு தந்திருந்தார். அதையும் இந்தப் பதிவில் சேர்த்துக் கொண்டுள்ளேன்

Thursday, November 3, 2011

முதல்வர் அவர்களுக்கு ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களுக்கு,

உங்கள் மேல் எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் உங்களை 'அம்மா' என்றே குறிப்பிடுகின்றோம். அந்த உரிமையில் கேட்கிறேன். தயவு கூர்ந்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றவோ, மூடவோ வேண்டாம்.

உலகில் சச்சரவுகள் இல்லாத இடம் என்று எதுவுமே கிடையாது, நூலகங்களைத் தவிர.
நூலகங்களில் மட்டும்தான் வாசிப்பதும், சக மனிதனை நேசிப்பதும் ஒரு சேர நிகழ்கின்றன.
எங்களுக்கு நூலகம் வேண்டும்.

விரைந்து நல்ல முடிவெடுங்கள். உங்களை மேலும் நேசிக்க வாய்ப்பு தாருங்கள்.

அன்புடன்

தமிழக மக்களில் ஒருவன்
செல்வகுமார்.

Sunday, September 4, 2011

எல்லாம் மறந்த தருணம்

ஒலித்துக் கொண்டிருந்த தொலை பேசி,
தொலைக்காட்சியில் திரைப்படம்,
கொறித்துக் கொண்டிருந்த சிப்ஸ்,
அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை - உட்பட
எல்லோரும் எல்லாமும் மறந்து போனது!

அந்தப் பட்டாம்பூச்சி
மின்விசிறியில் அடிபடாமல்
ஜன்னல் வழியாக வெளியேறும் வரை!

Saturday, September 3, 2011

ஆப்பிள் வெளியிட்ட (போலி) விண்டோஸ்?

அடுத்த வரிக்குச் செல்வதற்கு முன் ஒரு வார்த்தை. இந்தப் பதிவு முழுவதும் பின்வரும் தளத்தில் வெளியான ஒரு கற்பனைச் செய்தியை உண்மை என நினைத்து எழுதப்பட்ட தவறான பதிவு
http://www.it-reporter.com/news-flash/849_apple-admits-providing-fake-windows-8-beta-downloads/

இதை வாசித்து முடித்தபின் கோபித்துக் கொள்ளப் போகும் ஆப்பிள் நிறுவனத்தார் மற்றும் ஆப்பிள் பயனாளர்களிடம் முன் கூட்டியே என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்! எதற்க்காக இதை குறிப்பிடுகின்றேன் என்றால் இன்று மீடியாக்களை விட வேகமாக சுவையாக, பிளாக்ஸ், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற alternate mediaக்கள் செயல்படுகின்றன. அவற்றில் உறுதி செய்யப்படாத தகவல்களின் அடிப்படையில் பல விவாதங்களும், செய்திகளும் வெளியாகிவிடுகின்றன. அவ்வாறு நிகழ்ந்த தவறுகளில் ஒன்றுதான் இந்தப் பதிவு.

எதற்க்காக பகிரங்கமாக இங்கு ஒப்புக் கொள்கிறேன் என்றால், இன்று பல வலைப்பூக்களுக்கு வாசகர்களிடமும், பத்திரிகைகளிடமும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்த நம்பகத் தன்மை தொடர வேண்டும் என்றால், நாம் மேலும் ஜாக்கிரதையாக, பொறுப்புடன் செயல்பட வேண்டும். கற்பனைச் செய்தியை உண்மை என நம்பி பதிவு எழுதியதற்க்காக மீண்டும் ஒரு முறை வருந்துகிறேன்.



என் தவறை சுட்டிக் காட்டிய நண்பர் ஸ்ரீஜிக்கு நன்றி!

முன்னொரு காலத்தில் 24 வரி கருப்புத் திரையில் A> என்ற இரண்டே எழுத்துக்கள் மட்டும் தான் கம்ப்யூட்டர் திரையில் இருக்கும். அதைப் பார்த்து குழம்பி, என்ன செய்வது என சாதரண மக்கள் மிரண்டு கொண்டிருந்த காலத்தில் விண்டோஸ் வந்தது.

கிளிக், டிராக், டிராப் என்ற கான்செப்டுடன் முதன் முதலில் விண்டோஸை அறிமுகப்படுத்தியது பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல மைக்ரோசாஃப்ட் அல்ல, ஆப்பிள்.

வறண்ட கமாண்ட் பிராம்ப்டுகள் மட்டும் இருந்த காலத்தில் கம்ப்யூட்டர் என்றால் மக்களுக்கு அலர்ஜியாகத்தான் இருந்தது. ஆனால் விஷிவலாக விண்டோஸ் கான்செப்டை ஆப்பிள் அறிமுகப்படுத்தியபின், அதுவரையில் ஒதுங்கிய பலரும், படத்துடன் காமிக்ஸ் புக் படிக்கிற குதூகலத்துடன் கம்ப்யூட்டரை பயன்படுத்தத் துவங்கினார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்த ஆரம்பித்தது ஆப்பிள் கம்ப்யூட்டர்களைத்தான். மைக்ரோசாஃப்டின் டாஸ் அடிப்படையிலான கம்ப்யூட்டர்கள் தங்களது மவுஸை இழக்கத் துவங்கின. அப்போதுதான் பில்கேட்ஸின் விளம்பர மூளை அபாரமாக வேலை செய்தது. கொஞ்சமும் தயங்காமல், ஆப்பிளின் விண்டோஸ் கான்செப்டை திருடி, மாற்றி அதை விட மலிவான விலையில் சந்தையில் இறக்கினார். வியாபாரம் சூடு பிடித்ததும், தொடர்ச்சியான அடுத்தடுத்த பதிப்புகளை(Version) இறக்கினார். நான் படித்த காலத்தில் விண்டோஸ்-98 மிகப் பிரபலம். அதற்குப் பின் விண்டோஸ்-XP நன்றாக இருந்தது எனச் சொல்லலாம். விண்டோஸ் ME, Vista இவையெல்லாம் சொதப்பல். விண்டோஸ்-7 பரவாயில்லை. தற்போது விண்டோஸ் 8 பீட்டா பதிப்பு டவுன்லோடு செய்து கொள்ள கிடைக்கிறது.

பில்கேட்ஸ்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பெரும்பாலும் அடுத்தவர் கான்செப்டை திருடி மாற்றி தனது பெயரில் வெளியிடுவதைத்தான் இத்தனை வருடங்களும் செய்து வந்திருக்கிறது. பில்கேட்ஸின் ஒரே பலம், அசுரத்தனமான மார்க்கெட்டிங் திறமை. அதனால் விண்டோஸ் கான்செஃப்டை ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருந்தாலும், ஆப்பிளுக்குரிய பெயர், வியாபாரம் என அனைத்தையும் விண்டோஸ் தட்டிப் பறித்துக் கொண்டுவிட்டது. விண்டோஸ் என்றாலே மைக்ரோசாஃப்டின் பெயர் மட்டுமே ஞாபகம் வருகிற அளவிற்கு செய்துவிட்டது. ஆப்பிளின் பெயரையே மறக்கடிக்க வைத்துவிட்டது. விண்டோஸ்-7ன் வெற்றியைத் தொடர்ந்து விண்டோஸ்-8ஐ செப்டம்பரில் அறிமுகப்படுத்தப் போவதாக சில மாதங்களுக்கு முன் மைக்ரோசாஃப்ட் அறிவித்தது.

ஆனால் ஜீன் மாதமே விண்டோஸ்-8 பீட்டா பதிப்பு இணையத்தில் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் மைக்ரோசாஃப்டுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் மைக்ரோசாஃப்டுக்கு தெரியாமலேயே இது இணையத்தில் கிடைத்தது என்பதுதான். திருடனுக்கே திருடன் என்பது போல மைக்ரோசாஃப்ட் இதை யார் செய்திருப்பார்கள் என விழித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட திருட்டு விசிடி போன்ற ஒரு சிக்கல். தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்குள், பலரும் விண்டோஸ்-8 பீட்டாவை டவுன்லோடு செய்து பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இன்ஸ்டால் ஆகும்போது சிக்கல் ஏதுமில்லை என்றாலும், அதற்குப் பின் செம படுத்தல். விண்டோஸ்-8 சந்தைக்கு வரும் முன்பே அதன் பெயர் கெட ஆரம்பித்தது.

இதை யார் செய்திருப்பார்கள் என்று மைக்ரோசாப்ட் துப்புத் துலக்கியதில், முதலில் தெரியவந்த உண்மை என்ன தெரியுமா? இணையத்தில் கிடைத்தது அசல் விண்டோஸ்-8 பீட்டா பதிப்பு அல்ல. அது போலவே இருந்த ஒரு போலி. மைக்ரோசாஃப்டின் பெயரைக் கெடுப்பதற்க்காகவே திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஒரு போலி. விசாரணை அப்படி இப்படி என நீண்டதில், இதைச் செய்தது ஆப்பிள் நிறுவனம்தான் என்ற (உறுதிப்படுத்தப்படாத) தகவல் கிடைத்தது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தது. ஆனால் ஒரு கட்டத்தில் தற்போது ஓய்வு பெற்ற ஸ்டீவ் ஜாப்ஸ், ஒரு ஆப்பிள் மீட்டிங்கில் பின்வருமாறு கூறினாராம்.

“நான் அப்பவே சொன்னேன், வேண்டாம் வேண்டாமென்று. மார்க்கெட்டை பிடிக்க வேறு உத்தியை பயன்படுத்தலாம் என்று எவ்வளவோ சொன்னேன். ஆனால் செவி கொடுக்கவில்லை. இப்போது பெரும் பிரச்சனை வரும் போலிருக்கிறதே”

அவர் பேசியதாக வெளியான இந்தத் தகவலும், விண்டோஸ்-8 போலி பீட்டா பதிப்பை ஆப்பிள்தான் வெளியிட்டது என்பதற்கும் உறுதிபடுத்தப் பட்ட தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் நிச்சயம் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், இரண்டு ஐடி பூதங்கள் பல வருடங்களாக மோதிக் கொண்டிருக்கின்றன. இத்தனை வருடங்களாக நல்லவனாக இருந்த ஆப்பிள் என்ற பூதம், தற்போது கெட்டவனாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான். இது ஒரு சந்தைப் போர்.  நீங்க விண்டோஸ்-8 பீட்டா பதிப்பை டவுன்லோடு பண்ணிட்டீங்களா?

Monday, August 29, 2011

தங்கை செங்கொடிக்காக




பெண் ஒரு வீட்டின் மகிழ்ச்சி!
இன்றோ ஒரு தேசத்தின் துயராக செந்தழலில்!
மலர்கள் உதிர்வது இயல்பு - ஆனால்
மலர்கள் எரிவது வேதனை!

ஒரு கயிறு சில உயிர்களை முறிக்கும் என்றால்,
ஓர் உயிர் அந்தக் கயிற்றை எரிக்காதா?

விதைகள் மலராகும் -ஆனால்
ஒரு மலரே விதையான தருணமிது!

மலரே,
உன் மரணத்தால்
மரண தண்டனை முற்றாக ஒழியும் நாளன்று
நீ மீண்டும் உயிர்த்தெழுவாய்!

அந்த நாள் வரும் வரையில்
உன் குடும்பத்தில் ஒருவராக,
நானும் இந்த தேசமும்
உன் தியாகத்தின் சுடர் அணையாமல் காத்திருப்போம்!

(சகோதர சகோதரிகளுக்கு வேண்டுகோள்! 
மரணதண்டனை போலவே தீக்குளிப்பதும் கொடுமையானது.
அதை விட்டொழிப்போம்!)

Friday, August 19, 2011

மழையில் நனைந்த மனசு!



முதலில் “ம“ வந்தது
பிறகு “ழை“ வந்தது
தொடர்ந்து
“மழை மழை மழை மழை மழை!“

-----------------------------


மழைக் காலையில்
பூக்களைப் பறிக்கும்போது,
குழந்தைகளின் முத்தம் போல,
முகமெங்கும் இலை மழை!

------------------------------


நனைக்கும் போது
மேகங்களில் இருக்கிற மழை,
நனைந்தபின்
அவள் இதழ்களில் வந்துவிடுகிறது!

Tuesday, August 16, 2011

அன்னா ஹசாரே - செய்திச் சேனல்களின் TRP பூஸ்டர்


அன்னா ஹசாரே கைது! என்று அதிகாலையிலேயே செய்திச் சானல்காரர்கள் அலற ஆரம்பித்துவிட்டார்கள்

இதென்ன எமர்ஜென்சியா? என்னை கைது செய்து ஒரு பஸ்ஸில் அழைத்துச் செல்கிறார்கள். எங்கே என்று தெரியவில்லை - இது கிரண்பேடியின் ட்வீட்

செய்திச் சேனல்களின் பாட்ஷா அன்னா ஹசாரேவுக்கு, ஆகஸ்டு 15 அன்றே டிரையலர்கள் துவங்கிவிட்டன. உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டம் என்று கூவாத குறையாக மீடியாக்கள் பில்ட் அப் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இன்று காலை 8 மணியிலிருந்து ஆங்கில செய்திச் சானல்களை பார்த்தால் நாடெங்கும் ஒரே கலவரம். மக்கள் ஊழலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து கொண்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக தெருவெங்கும் கூடிக் கொண்டிருக்கிறார்கள். அரசு மக்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. எமர்ஜென்சியை விட படு மோசமான அடக்கு முறை என்று ஸ்க்ரோலிங்கும், வாய்ஸ் பைட்டுகளும் பயமுறுத்தின.

இது போதாது என்று அதிரடி டிவிட்டுகளும், ஃபார்வர்டு செய்யப்பட்ட SMSகளும், அங்கே வாருங்கள், இங்கே வாருங்கள், ஊழலுக்கு எதிராக கூடுவோம் போராடுவோம் என்று படு ஆக்ரோஷமாக ஆட்களை திரட்டிக் கொண்டிருந்தன.

ஆனால் வீட்டை விட்டு வெளியே வந்தால், மீடியாக்களின் எந்த பரபரப்பும் இன்றி களைத்துப் போய் நண்பர் நின்று கொண்டிருந்தார். ஸாரிடா நீ சைடுல பணம் வெட்டாமல் உங்க வீட்டுக்கு த்ரீ ஃபேஸ் கனெக்ஷன் கிடைக்காதாம் என்றார்.

டிவிக்களில் சொல்லிக் கொண்டிருப்பது போல எந்த எமர்ஜென்சி அடக்கு முறையும் இல்லை. பஜ்ஜியில் எண்ணை அதிகமாக இருக்கிறது என்ற சில்லறை முறைப்புகளும், யோவ் உள்ள போய்யா என்ற ஃபுட்போர்டு பஸ் போராட்டங்களும்தான் இருந்தன.

மீடியாக்கள் இத்தனை உசுப்பியும், ஏன் அன்னா ஹசாரேவின் லோக்பல் மக்களை பரவலாகச் சென்றடையவில்லை. டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் பிளாகுகளில் பரபரவென எவ்வளவோ எழுதியும் ஏன் ஊழலுக்கு எதிராக மக்கள் ஒன்று சேர மாட்டேன்கிறார்கள்.

மிக முக்கியமான காரணம், இதை எழுதியிருக்கும் நான் உட்பட, இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் உட்பட, எல்லோருமே அடிப்படையில் லஞ்சத்துக்கு பழகியவர்கள். நான் செய்தால் தப்பு இல்லை, தப்பு செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று சமாதானமடைந்தவர்கள். ஆனாலும் மனசாட்சி உறுத்துவதால் அவ்வப்போது சாமிக்கு தேங்காய் உடைப்பதைப் போல, அன்னா ஹசாரேக்களுக்கு வாழ்க கோஷம் போட்டுவிட்டு மறந்துவிடுகிறோம். ஸ்கூல் ஃபீஸ், மின்சாரக் கட்டணம், மளிகை பாக்கி, மகளின் திருமணம் என்ற தினசரி தனிமனித நெருக்கல்களின் காரணமாக, சமூகப் போராட்டங்களுக்கு உடலும், உள்ளமும் ஒத்துழைப்பதில்லை. எனவே தான் ஊழலையும், ஊழலுக்கு எதிரான போராட்டங்களையும் சினிமா பார்ப்பது போல, வேடிக்கை பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம்.

அடுத்த காரணம், சுனாமி பரிதாபங்கள், அன்னா ஹசாரே கோபங்கள் என எல்லாவற்றையும் ஊதிப் பெரிதாக்கி, இடை இடையே ஷாம்பூ விளம்பரங்கள் மற்றும் டெலிஷாப்பிங் அபத்தங்களை ஒளிபரப்பி எதையும் பூதாகரமாக்கி பணம் சம்பாதிக்கும், TRP டிவி உத்திகள். எனவே அடடா இவ்வளவு பெரிய போராட்டமா? நமக்கு இடம் கிடைக்காது என்று ஒதுங்குதல் அல்லது இவங்க சொன்ன மாதிரி பெரிசா ஒண்ணும் இல்லையே என்று நிராகரித்தல் ஆகிய இரு மனநிலைக்குத் தள்ளப்பட்டு ஒதுங்கிவிடுகிறோம்.

மூன்றவாது மிக முக்கிய காரணம். அன்னா ஹசாரே லோக்பல் மசாதாவை இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று வர்ணிக்கிறார். ஆனால் மகாத்மா காந்திக்கும், அன்னா ஹசாரேவுக்கும் மிகப்பெரிய வேற்றுமைகள் உள்ளன. காந்தி காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை முன்னிறுத்தி அதன் போராட்டத் தலைவராக தன்னை நியமித்துக் கொண்டு இயங்கினார். ஆனால் ஹசாரே அப்படி எந்த ஒரு இயக்கத்தையும் சார்ந்தவர் இல்லை. ஆனால் தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். அன்னா ஹசாரே சொல்வது எவ்வளவுதான் நல்ல விஷயமாக இருந்தாலும், எத்தனைதான் மீடியா ஆதரவு இருந்தாலும், ஈர்க்கப்பட்டு திரளும் மக்கள் கூட்டத்தை ஒருங்கிணைக்க ஒரு அமைப்பு தேவை. அது நாடு முழுவதும் கிராமம் கிராமமாக இயங்க வேண்டும். மத்திய தலைமையாக அன்னா ஹசாரே இருக்கும்போது, அவர் பேச்சுக் கேட்டு நடக்கும் கிளைத் தலைவர்கள் இருக்க வேண்டும். ஆனால் அன்னா ஹசாரே விஷயத்தில் அப்படி எதுவும் இல்லை.

இதை பிஜேபி தனக்கு சாதகமாக்கப் பார்க்கிறது. எங்களை அழைத்தால் நாடு முழுவதும் ஆதரவு தருகிறோம் என்கிறது. சுப்பிரமணியன் சுவாமி, நான் வரவா என்கிறார். பாபா ராம்தேவ் ஏற்கனவே குட்டையைக் குழப்பியது ஞாபகமிருக்கலாம்.

எனவே என்னதான் நியாயமான காரணங்களுக்காக அன்னா ஹசாரே போராடினாலும், அது நாடு தழுவிய இயக்கமாக இயங்க வேண்டும் என்றால், நாடு தழுவிய அமைப்பு அவருக்கு வேண்டும். அது தற்சமயம் இல்லாததால், ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற இந்தப் போராட்டம், காங்கிரஸை தேர்தலில் தோற்கடிக்கும் போராட்டமாக மட்டும் சுருங்கிவிடும். அன்னா ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்களின் உழைப்பை ஏதோ ஒரு கட்சி கபளிகரம் செய்து கொண்டு போய்விடும். மிஞ்சிப் போனல் ஆட்சி மாறும்! ஆனால் ஊழலும் அதை எதிர்க்கும் போராட்டங்களும் அப்படியேதான் இருக்கும். அன்னா ஹசாரே செய்திச் சேனல்களின் TRP பூஸ்டராக இருந்து பதவி இறக்கம் செய்யப்படுவார். யோசிங்க மக்காஸ்! யோசிங்க ஹசாரே!

Monday, August 15, 2011

களவாணி வேலை செய்ய சம்பளம் - Hacking படியுங்கள்

ஒரு அமைப்புக்காகச் செய்தால் அது உளவு, நீங்களே செய்தால் அது களவு!

இந்த இரட்டை வரிகள்தான் தற்போதைய ஐடி நிறுவனங்களின் உளவுத்துறை மந்திரம். ஐடி நிறுவனங்களில் உளவுத்துறை எதற்கு என நீங்கள் யோசிக்கலாம். இன்றைய கால கட்டத்தில் மிகப்பெரிய திருட்டு எது தெரியுமா? தங்கத்தை கொள்ளையடிப்பதோ, கரன்சியை சுருட்டுவதோ இல்லை. இது தகவல் யுகம் என்பதால், தகவல்தான் இன்று பணம். எனவே நிறை தகவல்களை அதாவது டாட்டாக்களை கொள்ளையடிக்க முடிந்தால் அதுவே மிகப்பெரிய திருட்டு. இந்த திருட்டையும், திருட்டை பிடிப்பதையும் ஐடி நிறுவனங்கள் இன்று லீகலாகவே செய்து வருகின்றன.

சட்டத்துக்கு உட்பட்டு களவா? 

இதென்ன விசித்திரம் என்று நீங்கள் யோசிக்கலாம். விசித்திரம்தான் ஆனால் நிச்சயம் தினந்தோறும் நடந்து கொண்டே இருக்கிறது. டெக்னிகலாகச் சொல்வதென்றால் இந்த களவாணி வேலைக்கு Hacking என்று பெயர். இந்த வேலையைச் செய்ய ஐடி நிறுவனங்கள் பணத்தை அள்ளி இரைத்துக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் தற்போதைய ஐடி நிறுவனங்கள் அனைத்துமே ஏதோ ஒரு நாட்டில் இருக்கும், ஏதோ ஒரு நிறுவனத்தை கணிணி வழியாக நிர்வகித்துக் கொண்டிருக்கின்றன. எனவே அந்நிறுவனங்களின் மிகப்பெரிய சொத்தே மற்ற நிறுவனங்களைப் பற்றிய டேடாக்கள் தான். அந்த டாட்டாக்களில், பெயரிலிருந்து, பாங்க் இரகசியங்கள் வரை அனைத்தும் உண்டு. இவை வெளியே கசிந்துவிட்டால், நம்பிக்கை போய், பிசினசும் போய், பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலையும் போய்விடும். எனவே இந்த டாடாக்களை பாதுகாக்க ஐடி நிறுவனங்கள், உளவாளிகள்-களவாணிகள்-அல்லது Hackerகளை சம்பளம் கொடுத்து பணியில் அமர்த்துகின்றன.

இந்தக் களவாணி ஹேக்கர்கள் என்ன வேலை செய்வார்கள்? 

வாசலில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு, வேப்பங்குச்சியில் பல் குத்திக் கொண்டிருகும் காவலாளியை இரண்டு நாள் தொடர்ந்து பார்த்து, சினேகமாகச் சிரித்துவிட்டு, மூன்றாவது நாள் சிங்கிள் டீ வாங்கிக் கொடுத்தால், நான்காவது நாள் நம்மை சல்யூட் அடித்து உள்ளே விட்டுவிடுவான். சில அபார்ட்மெண்ட் வாசல்களில் இது போன்ற அபத்திரமான காவலாளிகள் இருக்கிறார்கள். இவர்களை நம்பி நாம் நம் வீட்டை விட்டுவிட்டுச் செல்ல முடியாது இல்லையா? அதே போல ஐடி நிறுவனங்களில் இருக்கும் டாடாக்களை பாதுகாக்க, பாஸ்வேர்டு, நெட்வொர்க் இரகசியங்கள்,ஃபயர்வால்கள் என என்னென்னவோ அடுக்கடுக்கான போலீஸ் வேலைகள் உண்டு. ஆனால் இவை அனைத்தையும் சுலபமாக உடைத்துக் கொண்டு, டாடாக்களை திருடும் ஹாக்கர்கள் அதிகரித்துவிட்டார்கள். தங்கள் வீட்டுக் கணிணியில் அமர்ந்து கொண்டு, கோக் குடித்துக் கொண்டே, பன்னாட்டு நிறுவனங்களின் டாடாக்களை திருடி விற்று சம்பாதிக்கிறார்கள். சமீபத்தில் இந்திய சீன அரசுகளின் சில வெப்சைட்டுகள் மற்றும் அமெரிக்க அரசின் இராணுவ இணைய தளங்களுக்குள்ளும் புகுந்து தங்கள் கை வரிசையைக் காட்டிவிட்டார்கள். ஒரு உளவாளிக்குதான் இன்னொரு உளவாளியின் நடமாட்டம் நன்றாகத் தெரியும் என்பதால், இந்த உளவாளிகளைத் தடுக்க, தனக்கே தனக்கு என உளவாளிகளை ஐடி நிறுவனங்கள் வைத்துக் கொள்கின்றன. அதாவது ஹேக்கிங்கை தடுக்க, ஹேக்கர்களை வேலைக்கு வைத்துக் கொள்கின்றன.

ஐடி நிறுவனங்களிடம் சம்பளம் வாங்கி உளவுகளை தடுப்பவர்களும், உளவு பார்ப்பவர்களும் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள். அதாவது ஒரு நிறுவனம் யாரும் உள்ளே புக முடியாத ஒரு ஃபயர்வால் நெட்வொர்க்கை தனது நிபுணர்களை வைத்து உருவாக்குகிறது என வைத்துக் கொள்வோம். அதை சோதித்துப் பார்க்க, நிஜ ஹேக்கர்கள் வரும் வரை காத்திருப்பதில்லை. தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஹேக்கர்களையே திருட்டுத்தனமாக உள்ளே போக முடியுமா என சவால் விடுகிறார்கள். அவர்கள் உள்ளே புகுந்துவிட்டால், அந்த ஓட்டை கண்டுபிடிக்கப்பட்டு அடைக்கப்படும். எனவே நீங்கள் ஒரு ஹேக்காராக ஒரு நிறுவனத்துக்குள் நுழைந்தால், அந்த நிறுவனத்தையே ஹேக் செய்தால்தான் நீங்கள் திறமைசாலி. இல்லையென்றால் உங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். இந்த வேலைக்கு ஆங்கிலத்தில் Ethical Hackers என்று பெயர். உங்களின் கள்ளச்சாவி செய்யும் திறமையைப் பொறுத்து, அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. நீங்கள் அதிக பூட்டுகளைத் திறந்தால், அதிக திறக்க முடியாத பூட்டுகளை நிறுவனம் செய்து கொண்டே இருக்கும். இது அந்த நிறுவனத்தின் டாட்டா பாதுகாப்புக்கு நல்லது. 

உங்களால் வலிமையான நெட்வொர்க்குளை உடைத்து டேடாக்களை நெருங்க முடிந்தால், உங்களைப் போலவே வலிமையான, திறமையான நிஜ ஹாக்கர் வெளியிலும் இருக்கிறார், அவரும் உள்ளே வர வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். எனவே அதை மனதில் கொண்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். எனவே ஹாக்கர் என்றால் நெகட்டிவ்வாக யோசித்து அதைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். ஹேக்கிங் என்பது இன்று எல்லா சட்ட திட்டங்களுக்கும் உட்பட்ட, ஒரு white hat தொழில். களவை வைத்தே களவாணிகளை ஓரம்கட்டுவதுதான் ஒரு திறமையான ஹேக்கரின் வேலை. இதை ethical hacking அல்லது penetration testing என்று சொல்கிறார்கள்.

தங்கள் நிறுவன டேடாக்களை பாதுகாக்க 3வது நபர் வருவதை விட, தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஹாக்கர்களே பாதுகாப்பானவர்கள் என்று ஐடி நிறுவனங்கள் நம்புகின்றன. உலக அளவில் இன்று ஹேக்கர்களுக்கு செம டிமாண்ட். இன்றைய தேதியில் 60,000 ஹேக்கர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் திருட்டுத்தனமாக ஹேக்கர்கள் இருக்கிறார்களே தவிர, சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்யும் white hat ஹேக்கர்கள் இல்லை. என்ன கொடுமைசார் இது! கை நிறைய சம்பளம், ஏசி, கார்.. இந்த வேலைக்கு உடனே தயார் ஆகுங்கள். விப்ரோ, ஐபிஎம், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், ஏர்டெல் என எல்லா பெரிய ஐடி தொடர்புள்ள, நிறைய தகவல்களை கையில் வைத்துக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் ஹேக்கர்களுக்காக காத்திருக்கின்றன. எனவே உடனே ஒரு பயோ டாட்டாவுடன் புறப்படுங்கள்.

ஹேக்கிங் படித்தால் எந்த மாதிரியான வேலைகள் கிடைக்கும்?

  • Ethical Hacker/Penetration Tester
  • Security Auditor
  • Web Security Administrator
  • Cryptographer
  • Secured Programmer
  • Network Defence Analyst
  • Network Defence Infrastructure support,
  • Network Security Administrator
  • Server Administrator,
  • Application Security Tester.
ஐடி நிறுவனங்களில் தற்போது இந்த வேலைகளுக்கு 100 பேர் தேவை என்றால் 10 பேர்தான் கிடைக்கிறார்கள். ஏனென்றால் இது பற்றிய போதிய விபரங்களும், படிப்புகளும் இல்லை. எனவே எல்லோரும் ஒரே திசையை நோக்கி பயணிக்காமல்,ஹேக்கிங் பக்கம் தன் கவனத்தை திருப்பினால், பெருகி வரும் ஐடி வேலைப் போட்டியில், எளிதில் வெல்லலாம்.

சம்பளம் எப்படி இருக்கும்?
வழக்கமான ஐடி வேலைகளுக்கு கிடைப்பதை விட 25-30 சதவிகிதம் கூடுதலாகவே சம்பளம் கிடைக்கும். எனவே உடனே முந்துங்கள். உங்கள் திறமையை நிரூபித்துவிட்டால் உலகம் முழுவதும் உங்களுக்கு டிமாண்ட் இருக்கிறது. பரபரப்பாக இருக்கிற கூகுள், யாகூ, ஃபேஸ்புக், டிவிட்டர் இவர்களிடமிருந்து யாராவது டாட்டாவை திருடி விட்டால் என்ன ஆகும். அவ்வளவு பரபரப்பும் அடங்கி, உலகமே இயக்கத்தை நிறுத்திவிடும். இந் நிறுவனங்களை பாதுகாப்பது என்றால், சாதாரண வேலையா? எனவே உடனே ஹேக்கிங் திசையில் கவனம் திருப்புங்கள்.

ஹேக்கிங் படிக்க அடிப்படை தகுதிகள் என்ன?
கணிணி பட்டதாரிகள் எல்லோருமே படிக்கலாம். புரோகிராமிங்கும், நெட்வொர்க்கிங்கும் தெரிந்திருந்தால், நச்சென்று இந்த கோர்ஸில் பொருந்திவிடுவீர்கள்.

என்னென்ன கோர்ஸ்கள் உள்ளன?

  • Certified Ethical Hacker (EC - Council)
  • Cerfified Hacking Forensic Investigator (EC- Council)
  • GIAC Certified Penetration Tester (GPEN) offered by SAN
  • GIAC Certified Intrusion Analyst (GCIA)
உங்களுடைய முதன்மைத் தகுதிக்கு ஏற்ப 5 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரை கோர்ஸ் படிக்க வேண்டியதிருக்கும். பத்தாயிரம் முதல் 15000 வரை கட்டணங்கள் இருக்கக்கூடும். நேரமிருப்பவர்கள் இன்ஸ்டடியூட் போய் படிக்கலாம், மற்றவர்கள் ஆன்லைன் வழியாகவும் படிக்கலாம்.

கோர்ஸ் நடத்துவோர் பற்றிய சில விபரங்கள்
(உங்களில் யாருக்கேனும் தெரியுமென்றால் விபரங்களைக் கொடுங்களேன்)

Appin Knowledge Solutions

Adept Technology

Jodo Institute

InnoBuzz Knowledge Solutions

Ankit Fadia Certified Ethical Hacker course

(கம்ப்யூட்டர் உலகம், ஆகஸ்டு இதழில் இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன்)

Saturday, August 13, 2011

ஆன்லைன் சதி வலைகளில் சிக்கும் பெண்கள் - எச்சரிக்கை - 02

 விபரீதம் - 1 - திருப்பம்
'சூரியா? ஜெயம் ரவி? யாரைப் போல இருப்பான்? '
அவள் ஆர்வத்துக்கு தொடர்பே இல்லாமல் ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஆள் கதவைத் திறந்தான்.
'விலாசம் மாறி வந்துவிட்டோமோ.. அவள் புன்னகை சட்டென சுருங்கியது. 'இங்கே.. இங்கே..'

'நான்தான் அவன்.. உள்ள வா..'நரைத்த தலை முடியுடன் வயதான ஒரு ஆணைப் பார்த்ததும் அவளுக்கு அதிர்ச்சி.. 'இந்த ஆளா..'
'இல்ல நான் அப்புறம்...''அப்புறமாவா? என்ன திடீர்னு பயமா இருக்கா? பயப்படாத.. உள்ள வா..'வளுக்கு இதற்கு முன் இப்படி வியர்த்ததே இல்லை.'அம்மா தேடுவாங்க.. நான் போறேன்.''போகலாம்.. இந்த ஜீஸ் குடிச்சுட்டுப் போ..''இல்ல வேண்டாம்.'
கதவு படக்கென்று மூடிக் கொண்டது.

விபரீதம் - 2 - திருப்பம்
'நீ அனுப்பிய காதல் கவிதை சூப்பர்' என்றது மறுமுனை.
'நானா? நான் அனுப்பவே இல்லையே..' என்று இவள் அதிர்ச்சியானாள்.
'இவ்வளவு அடக்கமா? உன்னுடைய ஃபோட்டோவும் சூப்பர். செம அழகு.'
'என்னது என்னுடைய ஃபோட்டோவா? நான் உனக்கு அனுப்பவே இல்லையே..'
'ஹா..ஹா..நல்லா ஜோக் அடிக்கிற.. நேத்து நைட் 2 மணி வரைக்கும் பேசிக்கிட்டிருந்தியே.. தூக்க கலக்கமா? அதான் எனக்கு அனுப்பினதே உனக்கு மறந்துடுச்சு.'
'பிராமிஸா நேத்து நான் உன் கூட சாட் பண்ணல. ஃபோட்டோவும் அனுப்பல..'
'இங்க பார் இது நீ அனுப்பாமல் எனக்கு எப்படி வரும்?'

புகைப்படங்களைப் பார்த்தவுடன் அதிர்ந்தாள். விதம் விதமான காணக்கூடாத கோணங்களில், மொபைல் போனில் எடுக்கப்பட்ட புகைப் படங்கள். எனக்குத் தெரியாமல் என்னை யார் புகைப்படம் எடுத்திருப்பார்கள். குழப்பத்துடன் யோசிக்கும்போதே, மங்கலாக ஃபோட்டோக்களின் பிண்ணனியில் அவளை உசுப்பேற்றிய நண்பர்கள். அவள் மிரண்டு போனாள். அதற்குப் பின் மறுமுனையிலிருந்து அவன் அனுப்பிய வரம்பு மீறிய வார்த்தைகளைக் கொண்ட கவிதையைப் பார்த்ததும் உறைந்தே போனாள்.

'
இல்ல.. இது நான் எழுதல.. அவள் அலறல் கேட்டு அறைக் கதவு திறந்து கொண்டது.'

கவர்ச்சியான, ஆனால் அபாயகரமான, தவிர்க்க முடியாத, ஆனால் ஜாக்கிரதையாக உலவ வேண்டிய ஆன்லைன் உலகம் பற்றிய ஒரு சிறு புள்ளி விபரம்.

இன்டர்நெட்டில் உலவுதல்
93% டீன்ஏஜ் மாணவர்கள் நெட்டில் உலவுகிறார்கள்.
80% டீன் ஏஜ் மாணவர்கள் வாரம் இரு முறையாவது ஆன் லைன் உலகில் வலம் வருகிறார்கள்

செல்போன் பயன்பாடு
75% டீன்ஏஜ் மாணவர்கள் மொபைல் போன் வைத்திருக்கிறார்கள்
1500 SMS அனுப்புகிறார்கள் மாதந்தோறும்.
4% இளைஞர்கள் விரும்பி ஆபாச SMS அனுப்புகிறார்கள்
15% இளைஞர்கள் விரும்பி ஆபாச SMS படிக்கிறார்கள்.

ஆன்லைன் தொல்லையில் சிக்கும் டீன்ஏஜ்கள்
மூன்றில் ஒரு டீன் ஏஜ் பெண் தொல்லைக்கு உள்ளாகிறாள்.
38% பெண்களும், 26% ஆண்களும் தொல்லைக்கு உள்ளாகிறார்கள்.

ஆன்லைன் விளையாட்டு
97% டீன்ஏஜ்கள் ஆன்லைன் விளையாட்டு விளையாடுகிறார்கள்.
27% டீன்ஏஜ் மாணவர்கள், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் விளையாடுகிறார்கள்.

ஆன்லைன் வேட்டைக்காரர்கள்
25 பேரில் ஒரு இளைஞர் இளைஞியை இன்டர்நெட்டுக்கு வெளியே சந்திக்கிறார்கள்.
27% பேரிடம் அவர்களை வைத்தே ஆபாச புகைப்படங்கள் எடுக்கிறார்கள்.

சோஷியல் நெட்வொர்க்கிங்
73% தங்களது உண்மை விபரங்களை ஃபேஸ்புக் போன்ற தளங்களில் வெளியிடுகிறார்கள்.
47% தங்கள் புகைப்படங்களை நண்பர்கள் அல்லாதவருக்கும் அனுப்புகிறார்கள்.
27% தங்கள் வீடியோக்களை நண்பர்கள் அல்லாதவருக்கும் அனுப்புகிறார்கள்.

விபரீதம் -1- இறுதிக்கட்டம்
கதவு தானாக மூடிக் கொண்டதா, யாராவது சாத்தினார்களா எனத் தெரியவில்லை. ஆனால் அப் பெண்ணின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்துவிட்டன. பேச்சு எழவில்லை. தலையை குனிந்து கொண்டாள். அல்லது எதிரில் நிற்கும் அந்த ஆளை பார்க்க மறுத்தாள். கால்கள் துவண்டு கொண்டிருந்தன. இன்னும் சில வினாடிகளே நிற்க முடியும் எனத் தோன்றியது. கையிலிருந்த பூங்கொத்தும், புதுச் சட்டையும் பொத்தென கீழே விழுந்தன. ஓடிவிடலாமா என்று ஒரு கேள்வி எழ, அதற்க்கான திராணி இல்லாமல் உடலே பாரமாகிவிட்டது போல அவள் தவித்த வேளையில், கழுத்தருகில் அந்த ஆளின் சூடான மூச்சுக்காற்றை உணர்ந்தாள். ஒரு கெட்ட நறுமண செண்ட் அவளை சூழ, அம்மா எனக் கதறியபடி அவள் ஓட, அவளை துரத்திக் கொண்டு அந்த ஆளும் வந்தான். சடாரென ஒரு சத்தம். கதவைத் திறந்தபடி, அவளின் பெற்றோர்களும், போலீசும்.

விபரீதம் -2- இறுதிக்கட்டம்
கதவைத் திறந்து கொண்டு, அந்தக் கள்ள நண்பர்கள் கூட்டம் உள்ளே வந்தது. 
நான் இந்த ஆபாசக் கவிதையை எழுதல, ஏடாகூடமான ஆங்கிள்ல இருக்கிற என்னுடைய .போட்டோவை அனுப்பல. இதை யார் செய்தது?
நாங்கதான். உன்னுடைய பாஸ்வேர்டு எங்க எல்லாருக்கும் தெரியும். அதனால உனக்குத் தெரியாம, உன் பாஸ்வேர்டை பயன்படுத்தி நீ பேசற மாதிரி அவன் கூட பேசி அவனை மயங்க வைச்சோம். அப்பப்போ எங்க விலாசத்துக்கு கிஃப்ட் அனுப்ப வைச்சோம். எவ்வளவோ பணம் வாங்கியிருக்கோம்.
அடப்பாவிங்களா.. நான் இதை எங்கப்பா கிட்ட சொல்லிடுவேன்.
சொல்லு.. நாங்க உன்னை அப்பப்போ ஃபோன்ல ஏடாகூடமா எடுத்த ஃபோட்டோஸை அவருக்கும் காட்டுவோம். அவரு அதைப் பார்த்ததும் தற்கொலையே பண்ணிக்குவாரு.
அப்படியெல்லாம் நடக்காது.
அப்படி எதுவும் நடக்கலன்னா, இப்பவே இமெயிலை திறந்து பாரு. உன் சார்பில நாங்களே சாட் பண்ணி அதை வீடியோ பண்ணியிருக்கோம். இமேஜாவும் இருக்கு. நீதான் இப்படி பேசினேன்னு உலகம் முழுக்க பரப்புவோம்.
விளையாட்டுன்னு நினைச்சு உங்களை நம்பினேனே.. ஏண்டா இப்படி செய்தீங்க...
இன்னும் நிறைய பேரை பலியாக்கப்போறோம். பணம் பறிக்கப்போறோம். அவங்க எல்லாத்துக்கும் நீதான் தூண்டில். நீ இதுக்கு ஒத்துக்கலன்னா, முதல் பலி நீதான். உன் ஃபோட்டோ, ஆபாசப் பேச்சு எல்லாம் இன்டர்நெட்டில் பறக்கும்.
ஐயோ எனக் கதறியபடி அவள் மயக்கமடைந்த போது போலீசும், பெற்றோர்களும் உள்ளே நுழைந்தார்கள்.

இரண்டு கேஸிலுமே, பெற்றோர்கள் ஏதோ ஒரு முன் ஜாக்கிரதையாக அப் பெண்களிடம் பாஸ்வேர்டை வாங்கி வைத்திருந்திருக்கிறார்கள். அதனால் அதை திறந்து பார்த்து தூண்டில் வீசிய அத்தனை கபடதாரிகளையும், அவர்களுடைய இமெயிலையும் மற்ற தகவல்களையும் படித்து, பார்த்து அவர்களை எளிதாக வளைத்துவிட்டார்கள்.

ஆனால் முதல் சம்பவத்தில் சிக்கிக் கொண்ட பெண்ணின் நிலை பரிதாபம். அவளுடைய வீட்டில் அவளை ஏற்றுக் கொண்டாலும், உறவினர்கள் பக்கத்துவீட்டுக்காரர்களின் கேலியைத் தாங்காமல், வேறு ஊருக்கு செல்ல முயன்று கொண்டிருக்கிறார்கள். கல்வி நின்றுவிட்டது.

இரண்டாவது பெண்ணின் நிலையும் அத்தனை திருப்திகரமாக இல்லை. அப் பெண் எங்கு சென்றாலும் சந்தேகம், யாருடனாவது போனில் பேசினாலே சந்தேகம் என அவளுடைய வீடே அவளை சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முன் ஜாக்கிரதை நடவடிக்கைகள்
  • குழந்தைகள், டீன் ஏஜ் மாணவர்களின் பாஸ்வேர்டுகளை பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  • அவ்வப்போது அந்த பாஸ்வேர்டு மாறாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • ஃபேஸ்புக் போன்ற தளங்களில், தங்கள் மகன்கள், அல்லது மகள்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதை அறிந்து நீங்களும் அவர்களுடன் பழக வேண்டும்.
  • யாராவது சந்தேகத்துக்கு இடமாக பழகுவதாகத் தெரிந்தால், அனைவரும் பார்க்கும்படியாக, மற்றவர்களுக்கும் உதவும்படியாக, ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுவிட்டு, அவர்களை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்குங்கள்.
  • சந்தேகப்படும் ஆன் லைன் நண்பர்களை ஆன் லைனிலேயே வைத்திருங்கள், வீடு வரை அழைக்காதீர்கள்.
  • தித்திப்பான வார்த்தைகளுக்கு மயங்காதீர்கள். கபடதாரிகளின் முதல் தூண்டில் அதுதான்.
  • குறிப்பாக உனக்குப் பிடித்த உடை, உணவு, நிறம், தோற்றம் பற்றி விசாரிப்பவர்களை உடனே ஒதுக்குங்கள்.
  • உங்கள் அந்தரங்கங்களை யார் கேட்டாலும் சொல்லாதீர்கள்.
  • உங்கள் குடும்ப விபரங்கள், விலாசங்கள், பாங்க் விபரங்களை சொல்லாதீர்கள்.
  • யாரையாவது சந்தித்தே ஆக வேண்டுமென்றால், முதலில் பெற்றோர்கள் அல்லது உறவினர்களுடன் சந்தியுங்கள்.
  • ஆபாசமாக பேசும் உரையாடல்களில் விளையாட்டாகக் கூட பங்கு பெறாதீர்கள்.
தங்களுக்கென்று சுய அடையாளம் தேடும் பெண்கள் அனைவருக்கும் அதைத் தருகிற சோஷியல் நெட்வொர்க்கிங் எனப்படும் ஆன்லைன் தளங்கள், அவற்றின் இருண்ட பக்கங்களையும் சேர்த்தே தருகிறது. அங்கு பெண்கள் மிகக் கொடுரமாக தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களின் அழகும், அறிவும், கேலிக்குள்ளாக்கப்படுகிறது. அவர்களின் வெகுளியான பழகும் தன்மை கொச்சைப்படுத்தப்படுகிறது. சடுதியில் போட்டோக்களையும், வீடியோக்களையும் உலகமெங்கும் பரப்பிவிடும் மொபைல் மற்றும் ஆன்லைன் வசதிகளால், பெண்களைப் பற்றிய மதிப்பீடுகளும், மனரீதியான தாக்குதல்களும் பரப்பப்படுகின்றன.

இப்படி தாக்குதலுக்கு உள்ளாகிற பெண்கள், வீட்டிலும், பள்ளியிலும், பொது இடங்களிலும் ஆதரவின்றி அலைக்களிக்கப்படுகிறார்கள். அரவணைக்க வேண்டிய நண்பர்களும், தோழிகளும், உறவினர்களும் அவர்களை மேலும் காயப்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு கோபம், பச்சாதாபம், எதைக் கண்டும் பதுங்குதல், வீட்டுக்குள்ளேயே ஒடுங்குதல் அல்லது எதற்கும் மதிப்பு தராமல் எதையும் எதிர்த்தல் என மிகப் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகிவிடுகிறார்கள்.

பொது வாழ்க்கையில் எந்தக் காரணத்துக்காக பெண்களை நோக்கி வலை வீசப்படுகிறதோ, அதே நோக்கத்துக்காகத்தான் ஆன்லைனிலும் வலை வீசப்படுகிறது. ஆனால் ஆன்லைனில் பாதிப்பு அதிகம். உலகமெங்கும் ஒரு பெண்ணைப் பற்றி ஒரே வினாடியில் கொச்சைப்படுத்தி அவள் தொடர்புடைய புகைப்படத்தையோ, வீடியோவையை பரப்பிவிட முடியும். இதை எதிர்கொள்ள அந்தப் பெண்ணுக்கும், அவள் சார்ந்தவர்களுக்கும் சக்தியும், மனதைரியமும் இல்லையென்றால் மிகக் கடினம்தான்.

12 வயதிலிருந்து 30 வயதுப் பெண்கள்தான் மிகச் சுலபமாக இரையாகிறார்கள் என்று ஒரு சர்வே சொல்கிறது. 30-45 வயதுக்குள்ளான பெண்கள், தர்க்க ரீதியாக, அறிவு ரீதியாக, உணர்வு ரீதியாக ஈர்க்கப்பட்டு பலியாகிறார்கள். ஃபேஸ்புக் பயன்படுத்தும் டீன் ஏஜ் பெண்களுக்கு அதிகமான ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் அனுப்புவது யார் தெரியுமா? 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்தான். அதாவது டீன் ஏஜ் பையன்களும், இளவட்டங்களும் இந்தக் குற்றப்பிரிவில் குறைவாகத்தான் இருக்கிறார்கள்.

தெரியாமல் சிக்கிக் கொள்கிற பெண்கள் ஒருபுறம். ஓரளவுக்கு தெரிந்தே ரிஸ்க் எடுக்கிற பெண்கள் இன்னொரு புறம். இவ்வகைப் பெண்கள் தினசரி வாழ்க்கையிலேயே மனரீதியான, உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அதை வெளியே சொல்ல பயந்து, இன்டர்நெட்டுக்குள் நுழையும்போது, வெளியில் திரியும் கள்வர்களே உள்ளேயும் திரிவதை கண்டுகொள்கிறார்கள். அவர்கள் கள்வர்கள் என்று தெரிந்தே பழகுகிறாரகள். அது அவர்களுக்கு ஒரு சவாலான சாகஸமாக இருக்கிறது. இதில் தப்பி வெளியே வருபவர்களும் இருக்கிறார்கள். மீண்டும் சறுக்கி மேலும் பாதாளத்தில் வீழ்பவர்களும் இருக்கிறார்கள்.

எனவே ஆன்லைனுக்குள் போய் அப்படி ஆகிவிடாதே, இப்படி ஆகிவிடாதே என்று எச்சரிப்பதை விட, தினசரி வாழ்விலேயே ஒரு ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழல்களை உருவாக்கிவிட்டால், அதே போன்ற நல்ல துணையுள்ள ஒரு சூழல் பெண்களுக்கு ஆன்லைனிலும் வாய்க்கிறது என்பதும் உண்மை.
(இக் கட்டுரை கம்ப்யூட்டர் உலகம், ஆகஸ்டு மாத இதழில் வெளிவந்துள்ளது)

இனிய சகோதரிகளுக்கு!



தாலாட்டு கேட்டு வளர்ந்தவள்,
தாலாட்டிய அன்னைக்கே
அன்னையாகும் மாயங்கள்,
தினம்தோறும் நம்வீட்டில் நடக்கின்றன.

சிலர் வீட்டில் அவளுக்குப் பெயர் தங்கை!
சிலர் வீட்டில் அவளுக்குப் பெயர் அக்கா!

வணக்கம் சகோதரிகளே!
என் வீட்டில் உங்கள் பெயர் தேவதைகள்!

Friday, August 12, 2011

ஆன்லைன் சதி வலைகளில் சிக்கும் பெண்கள் - எச்சரிக்கை - 01


விபரீதம் - 1
நான் ஃபிரண்டு வீட்டுக்கு போயிட்டு வந்துடறேம்மா, என்று அவள் புறப்பட்ட போது ஞாயிறு காலை 11 மணி. யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. ஆனால் மதிய உணவுக்கு வரவில்லை என்றதும் சிறிய பரபரப்பு தொற்றிக் கொண்டது. அவள் சொன்ன தோழி வீட்டுக்கு ஃபோன் செய்ததும் வீடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது... அவள் தோழியின் வீட்டுக்கு போகவே இல்லை. அப்படியானால் 15 வயது இளம் பெண் திடீரென எங்கே போனாள்?

விபரீதம் - 2
ச்ச்ச்ச்சும்மா விளையாட்டுக்குதான். அவனை காதலிப்பது போல நடி என்றார்கள் ஆன்லைன் தோழர்கள். முதலில் தயங்கினாலும் விளையாட்டுதானே என்று சமரசமானாள் அந்தப் பெண். சாட்டிங்கில் தூண்டில் வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. சில நேரம் வார்த்தைகள் அத்து மீறின. விளையாட்டுதானே என்று அவளும் அப்பாவியாகத் தொடந்தாள். ஆனால்..... இவள் பெயரைப் போட்டு, புகைப்படங்களை இணைத்து, இவள் விளையாட்டாக உதிர்த்த வார்த்தைகளுக்கு விபரீத அர்த்தங்கள் தந்து, திடீரென ஒரு நாள் இ-மெயில் உலகமெங்கும் பரவியபோது, அவள் மட்டுமல்ல... அவள் குடும்பமே அதிர்ந்தது.

இந்தச் சம்பவங்கள் இரண்டும் கற்பனை அல்ல. தினந்தோறும் நடப்பவையும் அல்ல. ஆனால் எப்போது வேண்டுமானாலும் நடக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ள சம்பவங்கள்.

விபரீதம் - 1 - முன்கதை
அக்காவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்பதால், குடும்பத்தினரின் மொத்த கவனமும் இவள் மேல் இல்லை. தனிமை முதலில் சோர்வையும் பிறகு இன்டர்நெட்டில் உலவ நிறைய நேரத்தையும் தந்தது. சாட்டிங்கில் வந்த அந்த முகம் தெரியாத ஆண், அந்த சின்னஞ் சிறு பெண்ணின் சோர்வை போக்கினான். ஸ்வீட் டாக்கிங். அந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆணின் மேல் ஈர்ப்பு ஏற்படத் துவங்கியது. முதலில் சாதாரணமாக ஆரம்பித்த சாட்டிங், கொஞ்சம் கொஞ்சமாக இரகசியமாகி, எப்போதும், எங்கும் எனத் தொடரத் துவங்கியது.

'நீ என்னை பார்க்கணுமா? '
'ஆமாம்.. உடனே..'
'அப்படின்னா, ஞாயிற்றுக் கிழமை காலையில வீட்டுல பொய் சொல்லிட்டு, 12 மணிக்கு நான் சொல்ற இடத்துக்கு வந்துடு. கவனம்.. யாருக்கும் தெரியக் கூடாது.'
'சரி..'

விபரீதம் தெரியாமல் அந்தப் பெண், வீட்டில் பொய் சொன்னாள். மனதில் இரகசியப் படபடப்பு. இயல்பாக இருக்க பெரும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.



'அம்மா நான் ஃபிரண்டு வீட்டுக்கு போயிட்டு வந்துடறேம்மா.'



விபரீதம் - 2 - முன்கதை

வெவ்வேறு நாட்டிலிருந்து புதுப்புது சிநேகங்கள். அவளின் அழகு அவளை விஐபியாக்கியது. அதனால் தினசரி அவளுடைய ஆன்லைன் பக்கங்களை விதம் விதமான ஹலோக்களும், குட்மார்னிங்குகளும் நிறைத்தன. அவளின் சந்தோஷங்களை பெருக்கிய சிலரில் விபரீதமானவர்களும் இருந்தார்கள். குறிப்பிட்ட ஒரு இளைஞனுடன் முடிச்சுப் போட்டு, 'அவன் உன்னைக் காதலிக்கிறானா' என்றார்கள். அந்த வார்த்தை அவளுக்குள் பலவிதமான கிளர்ச்சிகளை உண்டு பண்ணியது. 'இல்லையே' என்றாள் வெட்கத்துடன். 'இல்லாவிட்டால் என்ன... அவனை காதலிக்க வைத்துவிடுவோம்' என்றார்கள்..
'ஐயோ எதற்கு' என்றாள்.
'ச்ச்ச்ச்சும்மா விளையாட்டுக்குதான். அவனை காதலிப்பது போல நடி' என்றார்கள் ஆன்லைன் தோழர்கள். முதலில் தயங்கினாலும் விளையாட்டுதானே என்று சமரசமானாள் அந்தப் பெண்.



ஆன்லைன் என்பது விபரம் தெரியாத, அப்பாவியான ஆண்கள் பெண்கள் என இருபாலருக்குமே விபரீதமான களம்தான். ஆனால்,பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக இளம் பெண்கள். அவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். இது தெரியாமல், தங்கள் மேல் கவனம் குவிவதால், அதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் எண்ணி, சதிகாரர்களின் மாய வலைகளில் எளிதாகச் சிக்கிவிடுகிறார்கள்.


பல புள்ளிவிபரங்கள் டீன் ஏஜ் பெண்களைப் பற்றித்தான் அதிகம் கவலை தெரிவிக்கின்றன. டீன் ஏஜ் பருவத்தில் புதிது புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், அதற்க்காக எதற்கும் அஞ்சாத சாகஸ உணர்வும், அழகை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆடம்பர உணர்வும் பெண்களுக்கு அதிகம் இருக்கின்றன. வெளிஉலகத்தில் அவ்வளவாக வாய்ப்பு இல்லாத காரணத்தால், எந்தக் கட்டுப்பாடும் இல்லாத இணைய உலகம் அவர்களை எளிதாக வசீகரிக்கிறது. ஒரு கிளிக், ஒரு ஃபோட்டோ, ஒரு அப்லோட். அவ்வளவுதான் உலகம் முழுக்க இருக்கும் இணைய சதிகாரர்களின் பார்வையில் தானே போய் விழுகிறார்கள்.

விபரீதம் - 1 - நடுக்கதை

வீட்டில் பெற்றோர்கள் சுதாரிக்கும் முன், அந்த ஆண் சொன்ன முகவரியை, அவள் அடைந்துவிட்டாள். கையில் ஒரு பூங்கொத்து, அந்த ஆணுக்குப் பிடித்த நிறத்தில் பரிசாக புது சட்டை. எல்லாமே அவ்வப்போது புதுக்கம்மலும், சாக்லேட்டும் வாங்க சேர்த்து வைத்த காசிலும், அப்பாவுக்குத் தெரியாமல் இதற்க்காகவே திருடிய பணத்திலும் வாங்கியது. அவள் திருடுவதும், கடைக்கு வந்து எதையாவது வாங்குவதும், இத்தனை தூரம் தனியாக வந்ததும், அவளுக்கு இதுதான் முதல் முறை. அவளுக்கே ஆச்சரியம். எப்படி இவ்வளவு தைரியம் வந்தது. தைரியம் என்பதை விட, இனம் புரியாத படபடப்பான ஈர்ப்பு. இத்தனை பயமாக இருந்தாலும் இது பிடித்திருக்கிறதே ஏன்? இந்த இரகசிய தவிப்பைத் தந்த அவனை உடனே பார்க்க வேண்டுமே. தினமும் இனிக்க இனிக்கப் பேசும் அவனை இப்பவே பார்க்கணுமே..

யார் அவன்? யார் அவன்? அவன் எப்படி இருப்பான்? சூர்யா மாதிரியா? ஜெயம் ரவி மாதிரியா? பூங்கொத்துடனும், இந்தக் கேள்விகளுடனும், அந்த விலாசத்தை அவள் அடைந்த போது, மெல்லிய நடுக்கம் பரவுவதை அவள் உணர்ந்தாள். இருந்தாலும் ஆர்வம் உந்தித் தள்ள, மெல்லிய இருளாக இருந்த அந்த வீட்டுக்கதவை தட்டினாள்.

விபரீதம் - 2 - நடுக்கதை
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று டைப் செய்யவே கைகள் நடுங்கின. 
'விளையாட்டுதானே...பயப்படாதே..டைப் பண்ணுஎன்றார்கள் சுற்றியிருந்த தோழர்கள்.
'என்னமோ ஸ்பெஷலா சொல்லணும்னு சொன்னியே.. என்ன அது' என்றன மறுமுனை சாட்டிங் விரல்கள்.



'நான்..'
'அப்புறம்'
'உன்னை'
'அப்புறம்'
அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது.
'எனக்கு பயமா இருக்கு' என்றாள்.
'என்ன பயம்.. நானே டைப் பண்ணிடவா?' என்றான் ஒருவன்.
'ஹையோ வேண்டாம்...'
'அப்படின்னா சீக்கிரம் டைப் பண்ணு' என்றான் இன்னொருவன்.
'அப்புறம்..அப்புறம்...' என்று படபடத்தது எதிர்முனை
'நான்..உன்னை..காதலிக்கிறேன்...' என்று அவள் நடுங்கியபடியே டைப் செய்து முடித்தாள்.
'ஹைய்ய்யா...' என்று எதிர் முனை பரவசமானது.. 

அவளே தன் வசம் ஆனது போல தொடர்ந்து வந்த வார்த்தைகள் விளிம்புகளைத் தாண்டிக் கொண்டிருந்தன. அவளைச் சுற்றி நின்ற நண்பர்கள், மொபைல் போனில் அவள் டைப் செய்த அத்தனையும் படம் படித்துவிட்டு, சூப்பர்...சூப்பர் என்று துள்ளிக் குதித்தார்கள்.

'ஹேய் எதுக்கு வீடியோ எடுத்தீங்க.. '
'வீடியோ இல்லை ஃபோட்டோ..'
'எதுக்கு?'
'ச்ச்ச்ச்சும்மா ஃபன்..'
'ஐயம் ரியலி ஹேப்பி' என்றது எதிர் முனை
'சே..பாவம் அவன்' என்றாள் அவள்.
மீண்டும் சொல்கிறேன், ஆன்லைன் உலகம் என்பது இவ்வளவு அபாயகரமானதா என்று அஞ்சிவிட வேண்டாம். ஆனால் அது ஒரு மாய உலகம். அதே சமயம் ஒதுக்க முடியாத உலகம். அதில் நல்லவை போலவே கெட்டவையும் இருக்கும். அதனால் ஜாக்கிரதையாக இருங்கள் என்று எச்சரிக்கை செய்யவே இந்தக் கட்டுரை.

இந்த மாய வலையில் பெண்களுக்கு கிடைக்கின்ற சுதந்திரமும், புதுப்புது சிநேகிதங்களும், கனவிலும் நினைக்க முடியாத வாய்ப்புகளும் அவர்களுக்கு ஒரு பலத்தை தந்திருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.


பெண்களுக்கு ஆன்லைன் உலகம் தந்திருக்கும் பலங்கள்.
  • வேலை வாய்ப்பு, வியாபாரத் தொடர்புகள்
  • கலந்துரையாடல், விவாதங்களில் பங்கேற்பது
  • உலகம் முழுவதும் புதிய சிநேகிதங்கள்.
  • கல்வி
  • பொது அறிவு
பெண்களுக்கு ஆன்லைன் உலகம் தந்திருக்கும் பலவீனங்கள்
  • முகம் தெரியாதவருடன் இரகசியம்
  • நேர விரயம்
  • உணவு, உடை, ஆரோக்கியங்களில் தர இறக்கம்
ஆன் லைன் விவாதங்களில் பல பெண்கள் அரசியல் பேசுவதைப் பார்க்கலாம். பொது விவாதங்களில் கலந்து கொள்வதை கவனிக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களால் இது போன்ற விவாத அரங்குகளுக்கு செல்ல முடியாது. ஆனால் ஆன்லைன் அமர்ந்த இடத்திலேயே இதைச் செய்ய வாய்ப்பளிக்கிறது. சில பெண்கள் தேர்தல் காலங்களில் பிரச்சாரத்தில் ஈடுபவதைக் கூட பார்க்கலாம். இந்த வாய்ப்பும், பழகும் சுதந்திரமும் அவர்களுக்கு புது சிநேகிதங்களையும், எதிரிகளையும், அவர்களின் பலவீனத்தை சுரண்டக் காத்திருப்பவர்களையும் ’சேர்த்தே அவர்களுக்கு தருகிறது. குறிப்பாக இளம் பெண்களும், வெளியில் செல்ல அதிக வாய்ப்பு இல்லாத, வேலைக்குச் செல்லாத பெண்களும் இதில் எளிதாக வந்து சிக்கிவிடுகிறார்கள். பலமா? பலவீனமா? என கணிக்க முடியாத ஒரு உலகில் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

- அடுத்த பதிவு : இரண்டாம் பாகம்

Tuesday, July 19, 2011

மு.க வுக்கு ஆதரவா, ஜெ. வுக்கு வக்காலத்தா, நம் குழந்தைகளுக்கு கல்வியா? எது முக்கியம்? தீர்மானியுங்கள்.


சமச்சீர் கல்வி விவகாரத்தை இரு கழகங்களுக்கான சண்டை என்ற மனோபாவத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை. 

கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் வக்காலத்து வாங்கி வீணாகப் போனது போதும். இது அரசியல் பிரச்சனை அல்ல. அடிப்படைக் கல்வி பிரச்சனை. நமது குழந்தைகளின் எதிர்காலத்தை பாழடித்துக் கொண்டிருக்கும் பொறுப்பற்ற அரசியல் வர்க்கத்தை நாம் சீற்றத்துடன் கேள்வி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நமது அருமையான குழந்தைகளை இதைவிடக் கொடுமையாக கேவலப்படுத்த முடியாது. அவர்களுக்கு பள்ளி உண்டு. ஆனால் கல்வி இல்லை. வேறு எந்த நாட்டிலாவது இது போலக் குளறுபடி உண்டா?

நமது குழந்தைகள் பாடம் படித்து 2 மாதங்களாகிவிட்டன. உலக வரலாற்றிலேயே கல்வி விஷயத்தில் இந்த அளவுக்கு பொறுப்பே இல்லாமல் நடந்து கொண்ட அரசு எதுமே இல்லை.
எங்கள் குழந்தைகளுக்கு ஏன் கல்வியை மறுக்கிறீர்கள் என்று இந்த அரசாங்கத்தை ஒரே குரலில் நாம் கேள்வி கேட்டே ஆக வேண்டும். நல்லதோர் வீணையாக இருக்கும் நம் குழந்தைகள் புழுதியில் எறியப்படுவதற்கு முன் நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காக, நம் குழந்தைக்கு கல்வி தர மறுக்கும் இந்த அரசு உடனே பதவி விலக வேண்டும். அல்லது நாளை முதல் பாடங்களை நடத்த வேண்டும்.

Tuesday, June 7, 2011

GPS - நம்மைப் பற்றிய தகவல்களை எப்படி சேகரிக்கிறது? (பாகம் - 3)

நாம் போகும் இடம் அறிந்து, நாம் தேடும் விஷயம் கண்டுபிடித்து, நாம் விரும்பி வைத்திருக்கும் மொபைல் அல்லது ஐ-பேட் அல்லது லேப்டாப்புக்கு தானாக விஷயம் வந்து சேர்வது எப்படி?

இது வண்ணாரப் பேட்டையில் உட்கார்ந்து கொண்டு, ஏற்காடு மலை உச்சியில் இடம் வாங்குவது போலத்தான். வண்ணாரப் பேட்டையில் உள்ள வாங்குபவருக்கும், ஏற்காடு மலை உச்சியில் இருக்கும் விற்பவருக்கும் இடையில் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாங்குபவர், விற்பவர் என இருவருக்குமே விஷயங்களை லீக் செய்து வியாபாரத்தை நடத்துகிறார்கள். அதே போல, இணையத்தில் உலவுபவர்களின் தேவைகளை அறிந்து கொள்வதில் சமூக வலைத் தளங்களில், நமது விருப்பங்கள் கண்காணிக்கப்படுகின்றன. அப்படி பெறப்படும் தகவல்கள், GPSடன் இணைக்கப்பட்டு நமக்கு கிடைக்கின்றது.



ஊர்விட்டு ஊர் செல்லும்போது, நீங்கள் தற்போது எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்ற செய்தியை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் கவனித்திருப்பீர்கள். இதனை வெறும் ஒரு வழித் தகவலாக இல்லாமல், உங்களிடமிருந்தும் ஏதாவது தகவல் வாங்குவதன் மூலம் நீங்கள் எங்கிருந்து, என்ன செய்கிறீர்கள் என்ற விபரம் சேகரிக்கப்டுகிறது. இந்த தகவலை சேகரிப்பவர்கள், ஃபேஸ்புக், ஃபோர்ஸ்கொயர், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள். ஆரம்பத்தில் ஒரு துளியாக இருக்கும் தகவல், ஒரு கட்டத்தில் ஒரு கடல் போல விரிவடைந்துவிடுகிறது.

மாயவரத்தில் பிரயாணம் செய்வோர், பானிபூரியும், பேல்பூரியும் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். நெல்லூர் செல்பவர்கள், மருந்து கிடைக்கவில்லை என்று அலுத்துக் கொள்கிறார்கள். சேலம் அம்மா பேட்டையில் ரியல் எஸ்டேட் பற்றி விசாரிக்கிறார்கள், என விதவிதமான தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ரியல்எஸ்டேட், மருந்து சப்ளை செய்வோர், உணவுவிடுதி நடத்துவோரின் விளம்பரங்கள் பெறப்பட்டு அனுப்பப்டுகிறது. இதனால் நமக்கும்  Location specificஆக, அந்த ஊருக்குள் நுழைந்ததுமே , அனைத்தும் தேடாமலேயே கிடைக்கிறது. நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்கள் தொடர்பு கிடைக்கிறது, வியாபாரம் பெருகுகிறது.

ஆன்லைன் போட்டோ தளங்களில் Location
தற்போது ஆன்லைனில் போட்டோக்களை ஏற்றி சேமித்து வைப்பது மிகச் சுலபம். அப்படி ஏற்றும் போது loation என்ற ஒரு கேள்விக்கு பதில் சொல்லியிருப்பீர்கள். இதன் பிண்ணனி இதுதான். சென்னைக்காரர்கள் அடிக்கடி ECR ரோடில் புகைப்படம் எடுத்துப் போடுகிறார்கள் என்றால், அங்கே வியாபார வாய்ப்பு அதிகம் உள்ளது என வியாபார நிறுவனங்களுக்கு உங்களை அறியாமல் தகவல் தருகிறீர்கள். 

டிவிட்டரில் Hash(#) Tag
Twitter தளத்தில் Hash tag பிரபலம். கோ படத்தில் நடிகை ராதாவின் மகள் சூப்பராக நடித்துள்ளார் #karthika என்று நீங்கள் டிவிட்டுவீர்கள். அச்சு அசலாக அவர் சிறு வயது ராதா போலவே உள்ளார் #karthika என இன்னொருவர் டிவிட்டுவார். அவருடைய கண்கள் அழகு. #karthika என மற்றுமொருவர் டிவிட்டுவார். ஆளாளுக்கு ஒரு ட்வீட் (அதாவது ஒரு குறுஞ்செய்தி) ஒருவர் அமெரிக்காவில், ஒருவர் அம்மா பேட்டையில், ஒருவர் வண்ணாரப் பேட்டையில். வெவ்வேறு நேரத்தில் அனுப்பிய ட்வீட் ஆனாலும் #karthika என்ற அடையாளத்தை க்ளிக்கினால், அத்தனை பேரின் ட்வீட்டுகளும் ஒன்றாக வரும். ஒரு இலட்சம் பேர் #karthika வை பயன்படுத்தியிருந்தாலும், அத்தனை பேரின் ட்வீட்டுகளும் ஒன்றாக வரும்.

இது போல #tn_election #rajini #2G #fb #samsung #nokia என பல்வேறுவிதமான ஹேஷ்(#) டேகுகளை நாம் டிவிட்டரில் கவனிக்கலாம். இதனை ஹேஷ்(#) டிரண்ட் என்கிறார்கள். அதிகம் பயன்படுத்தப்படும் ஹேஷ்(#) டேகுகளை வைத்து மார்க்கெட்டிங் நிறுவனங்கள் உள்ளே புகுகின்றன.

FourSquareல் மேயர் விளையாட்டு
இந்த தளத்தில் காட்பரி நிறுவனம் தனக்கென ஒரு பக்கத்தை திறக்கும். அதில் தனது லேட்டஸ்ட் விளம்பரங்களை ஒளி ஒலி பரப்பும். தனது புதிய சாக்லேட் பற்றி தகவல் தரும். டிஸ்கௌண்ட் அறிவிப்புகளை வெளியிடும். இதனை பார்வையிடுவதோடு நில்லாமல், இந்த பக்கத்துக்கு வந்து பார் என தன் நண்பர்களையும் அழைத்து வருபவர்களை இந்த விளம்பரப் பக்கம் ஸ்பெஷலாக கவனிக்கிறது. அதிக நண்பர்களை அழைத்து வந்து பார்க்க வைத்தவருக்கு மேயர் என்ற பதவி தரப்படுகிறது. மேயருக்கு ஸ்பெஷல் கவனிப்பாக டிஸ்கவுண்ட் மற்றும் இலவசங்கள்  தரப்படும். இதைப் பார்த்து ஆர்வமடைபவர்கள் தாங்களும் மேயராக விருப்பப்படுவார்கள். எனவே அதிக நண்பர்களை அவர்களும் திரட்டுவார்கள். அவர்களின் ஆர்வம் மறைமுகமாக வியாபாரத்தை வளர்க்கும்.

விமர்சனம் வழியாக வியாபாரம்
உதாரணமாக Samsung ஒரு வியாபாரப் பக்கத்தை திறக்கிறது என வைத்துக் கொள்வோம். அதில் நீங்கள் உங்கள் கருத்துகளைச் சொல்ல அனுமதி தரப்படும். எனக்கு இந்த புதிய மாடல் மொபைல் போன் பிடித்திருக்கிறது. ஏன் பிடித்திருக்கிறது என்றால், என்று சில வரிகளை எழுதுவீர்கள். இதைப் படித்துவிட்டு, உங்கள் கருத்துகளை ஆமோதித்து மற்றொருவர் தன் கருத்தை சொல்வார். சிலர் தனக்கு அந்த குறிப்பிட்ட மாடலால் பிரச்சனை என்பார். உடனே நீங்கள் அந்த குறிப்பிட்ட பிரச்சனையை தீர்ப்பது எனறு அவருக்கு தீர்வு சொல்வீர்கள். நன்றாக கவனியுங்கள். Samsung கிற்குப் பதிலாக நீங்கள் யாரோ ஒரு Samsungவாடிக்கையாளரின் பிரச்சனையை தீர்க்க உதவிக் கொண்டிருக்கின்றீர்கள். இதை கவனிக்கும் samsung உங்களுக்கு தள்ளுபடி ஆஃபர், ஞாயிற்றுக் கிழமை பார்ட்டி, இலவச கூப்பன் என எதையாவது தந்து உங்களை தன் வசத்திலேயே வைத்திருக்கும். இந்த சேவையில் மகிழ்ந்து நீங்களும் பலரை samsungகிற்கு மாறச் செய்வீர்கள்.

Facebook - Googleன் தாமதமான என்ட்ரி.
ஃபேஸ்புக் இன்றைய தேதியில் மிகப்பிரபலமான சமூக வலைத் தளம். ஆனால் இந்த வகை மார்க்கெட்டிங் இலாபத்தை புரிந்து கொள்வதில் தாமதம் செய்துவிட்டது. அதனால் ஃபேஸ்புக் ஸ்பெஷல் என்று நவீன உத்தி எதையும் குறிப்பிட்டுச் சொல்வதற்க்கில்லை.

கூகுள் தனக்கென ஒரு புதிய சமூக வலைத்தளத்தை வெளிக்கொண்டு வரப்போவதாக பல நாள் வதந்தி ஒன்று உண்டு. அதில் GoogleMapல் உள்ள சகல அம்சங்களுடன், மேலும் ஸ்பெஷலாக இன்னும் பல விஷயங்கள் வரப்போகிறதாம். பார்க்கலாம்...