Friday, June 13, 2014

தங்ஸ்வீட்ஸ் - ஜீன் பௌர்ணமி


அம்மா போல சமைக்க கற்கும்போது

சாப்பிட்டுப் பார்ப்பதற்கும்
அப்பா போல அதட்டக் கற்கும்போது
திட்டு வாங்குவதற்கும்
தோழியைப் போல பழகக் கற்கும்போது
இன்பதுன்பம் பகிர்வதற்கும்
துணைக்கு வைத்துக்கொண்டு
அண்ணனை தான் விரும்புவது போல
எல்லாமுமாய் வரித்து இரசிப்பாள் தங்கை!



#தங்ஸ்வீட்ஸ்

Wednesday, June 11, 2014

விசா விவகாரம் - மிரட்டிய சைனா! பதுங்கிய மோடி!

 தங்கள் நாட்டு முத்திரையை நமது பாஸ்போர்டில் பதித்து உள்ளே வரலாம் என்று அனுமதித்தால் அது சாதாரண விசா. தனியாக ஒரு பேப்பரில் தங்கள் நாட்டு முத்திரையை பதித்து அந்த தாளை நமது பாஸ்போர்டுடன் இணைத்தால் அது Stapled visa.

அதாவது Stapled Visa பெற்றவர் அந்த நாட்டை விட்டு வெளியேறியவுடன் அந்த விசாவை கிழித்து எறிந்துவிடலாம். எனவே நாம் சம்பந்தப்பட்ட நாட்டுக்குள் சென்று வந்த எந்த அடையாளமும் நமது பாஸ்போர்ட்டில் இருக்காது.

Stapled Visa எதற்கு?
எதற்கு என்றால் எல்லைக்கு அந்தப்பக்கம் இருக்கும் அடுத்தநாட்டு அரசை வெறுப்பேற்ற. அடுத்தநாட்டின் சிலபகுதிகளை பிடித்துவைத்துக்கொண்டு இது உன்னோடதல்ல என்னோடது என்று  கடுப்பேற்ற. அதாவது இது எங்க ஏரியா உள்ள வராத என்று மிரட்டுவது. எங்கோ ஊர்ப்பக்கம் உள்ள நமது நிலத்தில் லோக்கல் குண்டர்கள் அமர்ந்து கொண்டு இந்த இடம் எங்களோடது என்பார்களே அது போலத்தான் இதுவும்.

எல்லைப்பிரச்சனை உள்ள நாடுகளில் விசா வழி வெறுப்பேற்றும் கலாச்சாரம் உள்ளது. உதாரணமாக சைனா. தனது எல்லையைத் தொடும் அருணாச்சலப்பிரதேசத்தை என்னுடையது என்கிறது. சைனா ஒரு முரட்டு பக்கத்துவீடு. அதனிடம் ஏற்கனவே இந்தியா உதை வாங்கியிருக்கிறது. அதனால் சண்டைக்குப் போக முடியாமல் அவ்வப்போது அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் தொடர்ந்து சைனா இந்தியாவை வெறுப்பேற்றிக்கொண்டே இருக்கிறது. அதாவது இந்தியராக இருந்தாலும்  அருணாசலப்பிரதேசத்துக்குள் நுழைந்தால் எங்கள் நாட்டுக்கு வருக என்று சீனா வரவேற்கிறது. வருகைக்கு அத்தாட்சியாக stapled visa வழங்குகிறது. அதாகப்பட்டது இந்தியாவிற்குள்ளேயே இந்தியர்கள் விசா பெற்று நுழைய வேண்டியதிருக்கிறது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்த விஷயத்தில் சைனாவுக்கு பயந்து பதுங்கிவிட்டார், மோடி வந்தால் சைனாவை நொறுக்கிவிடுவார் என்றார்கள் அரசியல் நோக்கர்கள். ஆனால் நடந்தது வேறு. இந்தியாவிற்கு வந்து இந்தியாவில் இருந்து கொண்டே இந்தியாவிற்கு எதிராக பேசிவிட்டுச் சென்றார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்.

கடந்த வாரம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங்(Wang) நமது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்தார். சந்திப்பின்போது மிகவும் உறுதியாக அருணாச்சலப் பிரதேசத்திற்கு வரும் இந்தியர்கள் அனைவருக்கும் Stapled Visa கொடுப்போம். இது ஒரு நல்லெண்ண அடிப்படையிலான விஷயம் என்று பகிரங்கமாக சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். அதாவது அருணாச்சலப்பிதேசம் எங்களுடையது. எனவே இந்தியர்கள் உள்ளே வந்தால் எங்களிடம் விசா வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்று சிரித்துக்கொண்டே மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். இந்தியா அரண்டு போய் கப்சுப் என்று இருந்துவிட்டது. அதனை எதிர்த்து இது வரை ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மீடியாக்களும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு இந்தியாவின் இமேஜைவிட மோடியின் இமேஜைக் காப்பாற்றுவதுதான் முக்கியம்.


Tuesday, June 10, 2014

இரசிகரம்

புன்னகை மாறாமல் உரையாடிக்கொண்டே, 
இலாவகமாக பட்டர்ஃபிளை க்ளிப்பை நீக்கி,
கூந்தலைத் தளர்த்தி காற்றுக்குத் தந்து 
இருபுறமும் கோதும்போது
விலகும் ஆடையை துரிதமாக சீர்செய்து
செல்லமாக ஒரு முறை கூந்தலை தோளில் தவழவைத்து 
விரல்களால் தழுவி மெல்ல இறுக்கி
மீண்டும் க்ளிப்பை பொருத்தியபின்,
அப்புறம் சொல்லுங்க என்று
ஒயிலாய் தலை சாய்த்து
வீணையாய் பேச்சைத் தொடரும் பெண்கள்
அழகோ அழகு!

#இரசிகரம்

கேம்பகோலா! விதிமுறைகளை மீறியதால் 25 வருடங்கள் கழித்து வீடுகளை இழந்த கதை!

 கேம்பா கோலா அடுக்குமாடி வளாகத்தில் குடியிருக்கும் அனைவரும் இன்றே வீட்டை காலி செய்துவிட வேண்டும்! அந்தக் கட்டிடங்கள் முழுக்க இடித்துத்தள்ளப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித்தீர்ப்பால் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட வீட்டுக்கு சொந்தக்காரர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேல் அங்கேயே வாழ்ந்த குடும்பங்கள் திடீரென வீடு இல்லாமல் தவிக்கின்றன. இந்த தவிப்புக்கும் தீர்ப்புக்கும் சொல்லப்படும் காரணம்... அந்த கேம்பாகோலா வளாகம் முழுவதுமே விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது என்பதுதான்.

பாம்பே டிரேட் என்று ஒரு விளையாட்டு. சிறுவயதில் நிச்சயம் விளையாடியிருப்போம். ஊர்களை வாங்குவதும் விற்பதும், அங்கு வீடு கட்டி வாடகைக்கு விடுவதும் சம்பாதிப்பதும்தான் விளையாட்டு. அந்த விளையாட்டில் மிகப்பிரலமான ஊர் ஒன்று உண்டு. அதன் பெயர் ஒர்லி. கூகுள் மேப்பில் தேடினால் தெற்கு மும்பையில் அந்த ஊரைப்பார்க்கலாம். அந்த ஊரில் தற்போது சர்சைக்குள்ளாகியிருக்கும் நிலம் Pure Drinks Ltd என்ற நிறுவனத்திற்கு 1955ல் லீசுக்கு வழங்கப்பட்டது. 1980ல் அந்த நிலத்தில் அடுக்குமாடி வீடு கட்டிக்கொள்ள பாம்பே முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன் (BMC) அனுமதி வழங்கியது. அனுமதி என்னமோ 5 மாடிகள் கட்டிக்கொள்ளத்தான். ஆனால்  20 மாடிகள் வரை கட்டப்பட்டன.

கட்டிங்கள் உயரமாகிக் கொண்டிருக்கும்போதே வேலையை நிறுத்தச்சொல்லி பாம்பே முனிசிபாலிட்டி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் வழக்கம்போல யார்யாருக்கோ பணம் கொடுத்து சரிகட்டி கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்டன.
மிகவும் மதிப்பு வாய்ந்த நிலம் என்பதால் பிரச்சனை உள்ளது எனத்தெரிந்தும் பரபரவென அத்தனை வீடுகளும் விற்றுத்தீர்ந்தன. இதில் அதிசயம் என்னவென்றால் விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்டது எனத் தெரிந்தும் மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும், சாலைகளும் அமைத்துத்தந்தது அரசு இயந்திரம்.

2005ல் விஷயம் விஸ்வரூபமெடுத்து கோர்ட்டுக்குச் சென்றது. அரசுக்கும், அங்கே வசிப்பவர்களுக்கும் யுத்தம் துவங்கியது. இலஞ்சம் தந்து அரசையும், மக்களையும் ஏமாற்றி பணம் சம்பாதித்த நிறுவனங்களும், லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்த அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் தப்பித்துக்கொண்டார்கள். அவர்கள்மேல் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அவர்களுக்கு தண்டனை ஏதும் இல்லை. ஆனால் ஏதுமறியாமல் பணம் கொடுத்து ஏமாந்தவர்களும், தெரிந்தே அங்கு வீடு வாங்கியவர்களும் இன்று தங்குவதற்கு வீடு இல்லாமல் இருக்கிறார்கள்.

மக்களும், மீடியாக்களும், சில சமூக ஆர்வலர்களும் அவர்களுக்காக பரிதாபப்பட்டு ஆதரவளித்தார்கள். அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் எதிராக போராட உதவினார்கள்.  தற்காலிகமாக தேர்தல் களேபரங்களும் பிரச்சனையை ஒத்திப்போட உதவியது. ஆனால் இனியும் தள்ளிப்போட வழியில்லை. எல்லா சட்டத்தடை உத்தரவுகளும் அவர்களுடைய நம்பிக்கைகளுடன் நொறுங்கிப்போய்விட்டன. உச்சநீதி மன்றம் கட்டிடங்களை இடிக்கச் சொல்லிவிட்டது.

அதே வளாகத்தில் ஒரு ஃபிளாட்டை வாங்கியுள்ள லதா மங்கேஷ்கர் கடைசியாக மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். ஆனாலும் அந்த மக்களுக்கு வேறு வழியில்லை. கேம்பாகோலா வளாகம் நொறுங்கப்போகிறது. அவர்கள் வீடின்றி சாலைகளில் நிற்கத்தான் போகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இன்று அடம்பிடிக்கும் மும்பை முனிசிபாலிட்டி கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. அதாவது கேம்பாகோலா வளாகம் போலவே விதிமுறை மீறிக்கட்டப்பட்ட 56332 கட்டிடங்கள் உள்ளன. கேம்பாகோலா வளாகம் போலவே அவையும் இடிக்கப்படுமா?

இதற்கான பதில் நீதிமன்றங்களில் கிடைக்கலாம். ஆனால் லஞ்சம் தந்து விதியை வளைத்துக்கொள்ளலாம் என்று விரும்பும் மனங்களுக்கு இது புரியுமா எனத்தெரியவில்லை. இந்த வினாடி கூட விதிமுறைகளை மீறிய கட்டிடங்கள் எங்காவது ஒரு மூலையில் எழுந்து கொண்டுதான் இருக்கும்.


Monday, June 9, 2014

உலகக்கோப்பையின் முதல் கோலை அடிக்கப்போவது ஒரு செயற்கைக்கால்

உலகக்கோப்பை என்றாலே ஸ்பெஷல்தான். இந்த வருடக் கோப்பை இன்னும் ஸ்பெஷல். வழக்கமாக யாராவது பிரபலம் கால்பந்தை உதைத்து போட்டியை துவக்கி வைப்பார். ஆனால் இந்த வருடம் செயற்கைக் கால்கள் அணிந்த ஒரு மாற்றுத்திறனாளி பந்தை உதைக்கப்போகிறார்.

குறிப்பிடும்படியாக இது அவ்வளவு ஸ்பெஷலாக இல்லையே எனத் தோன்றலாம். ஆனால் அந்தக் கால்களில் பொருத்தப்பட்டுள்ள BMI என்ற தொழில்நுட்பம் பற்றி அறிந்தால் அசந்துபோவோம். BMI என்பது Brain Mind Interface என்பதின் சுருக்கம்.

வழக்கமாக செயற்கை உடல்பாகங்கள் ஒரு மரக்கட்டை போல இருக்கும். அந்த பாகங்களால் தொடுதல், படுதல், உரசுதல் போல எதையும் உணர முடியாது. ஆனால் BMI தொழில் நுட்பம் பொருத்தப்பட்ட கால்களால் பந்தை உதைத்ததும் பந்தை உதைத்த உணர்வை அந்தக் கால்களை அணிந்திருக்கும் நபர் உணர்வார்.

நியூரோ சயின்ஸில் இது ஒரு மகத்தான சாதனை. இது இன்னும் விரிவுபடுத்தப்படுமானால் எதிர்காலத்தில் செயற்கை பாகங்களுக்கும், இயற்கை பாகங்களுக்கும் உள்ள வித்தியாசம் குறையும். பந்தை உதைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன் மூளையில் ஒரு அதிர்வு ஏற்படும். அந்த அதிர்வை மூளையில் பதிக்கப்பட்டுள்ள சிலிக்கான் சில்லுகள் ஒரு கட்டளையாக மாற்றும். அந்தக் கட்டளைகள் மின் அலையாக மாற்றப்பட்டு ஒயர்லெஸ் ரிசீவர் பொருத்தப்பட்டுள்ள கால்களுக்கு அனுப்பும். உடனே பாட்டரியில் இயங்கும் கால்கள் அந்தக் கட்டளையை ஏற்றி பந்தை உதைக்கும். பந்தை உதைக்கும்போது கால்களில் பொருத்தப்பட்டுள்ள Infra Red - சிவப்புக் கதிர்கள் சில மோட்டர்களை இயக்கி அந்த அதிர்வுகளை மூளைக்கு திரும்ப அனுப்புகின்றன. அது ஒருவிதமான தொடு உணர்வை மூளைக்குத் தருகின்றன. எனவே பந்தை உதைத்த உணர்வை அந்த மாற்றுத்திறனாளி பெறுவார்.


பிரேசிலில் நடைபெறும் உலகக்கோப்பையில் ஒரு செயற்கைக்கால் பந்தை உதைக்கும். அது BMI தொழில்நுட்பத்துக்கு மேலும் ஒரு பாய்ச்சலைத் தந்து, செயற்கைக்கும் இயற்கைக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைக்கும். மூளைக்கு கட்டுப்படும் ரோபோக்கள் உலகை உருவாக்கும்.

GOAL என்று உலகமே அதிரும்போது அது இந்த சாதனைக்கும் சேர்த்த கொண்டாட்டமாக இருக்கும்.