Monday, December 22, 2008

அபினவ் - கமாண்டோக்கள் - ஒரு SMS

ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்க பதக்கம் வாங்கிய அபினவிற்கு (abhinav bindra) 6 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது அரசாங்கம்..
இத்தனைக்கும் அவர் ஏற்கனவே பணக்காரர்..

ஆனால் மும்பை தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான எங்கள் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 5 லட்சம்.. பாதுகாப்புக்கு படை வீரர்களின் மதிப்பு அவ்வளவு தானா?

பாதுகாப்பு படை வீரரின் உயிரின் மதிப்பு 5 இலட்சம்.. ஆனால் ஒலிம்பிக் தங்கத்தின் மதிப்பு 6 கோடியா???....

மேலே காணப்படும் இந்த வரிகள், கடந்த சில வாரங்களாக எஸ்.எம்.எஸ், வலைப்பூ, இமெயில் என பல உருவங்களில் உலவிக்கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் நான் இதே கேள்வியை உங்களை நோக்கி கேட்க விரும்புகிறேன்.
  • ஏ.சியில் சுகமாக அமர்ந்து கொண்டு வேலை செய்யும் உங்களில் பல பேருக்கு, இறந்து போன அந்த வீரர்களை விட மாதச் சம்பளம் அதிகம். யார் உசத்தி? நீங்களா? இறந்து போன அந்த வீரர்களா? 
  • யாருக்கு சொகுசு தேவை? உங்களுக்கா? எப்போதும் மரணத்தின் விளிம்பில் நிற்கும் அந்த வீரர்களுக்கா?


என்ன செய்வது மை டியர் பிரண்ட்ஸ். தாஜ், டிரைடண்ட் போன்ற ஸ்டார் ஹோட்டலில் வடை சுடுபவருக்கு, எல்லையில் துப்பாக்கி சுடுகின்ற ஜவானை விட சம்பளம் அதிகம்தான். அதே போல இந்த எஸ்.எம்.எஸ்ஸை முதன் முதலில் எழுதியவருக்கும், இதை பரப்பிய பலருக்கும், இதை எழுதிக்கொண்டிருக்கின்ற எனக்கும் கிடைக்கின்ற மாதச் சம்பளம் நமது பாதுகாப்பு படை வீரர்களின் மாதச் சம்பளத்தை விட நிச்சயம் அதிகம்தான். இதை நான் ஒப்புக்கொள்கிறேன். வாசிக்கின்ற நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

அந்த வீரர்களைவிட கிட்டத் தட்ட நாம் எல்லோரும் அதிக மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை என்றைக்காவது நாம் உணர்ந்திருக்கிறோமா?

எல்லையில் காவல் சாமிகளாக வெயிலிலும், மழையிலும், பனியிலும் உயிரை உருக்கிக் கொண்டிருக்கும் அந்த ஜவான்களை விட, நாளை முதல் உங்களுக்கு சம்பளம் கம்மியாகத்தான் தருவேன் என்று அரசாங்கமோ, உங்கள் நிறுவனமோ சொன்னால் தியாக மனப்பான்மையுடன் ஒப்புக்கொள்வீர்களா?

ஒன்று மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே. யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். கேலி பேசலாம். ஆனால் அதே கேள்வி நம்மை நோக்கித் திரும்பும்போது, நம்முடைய பதில் என்ன?

என்னைப் பொறுத்தவரையில், எல்லாவற்றையும் பணத்தால் அளந்து பார்க்கிற பழக்கம் ஒழிய வேண்டும். பணம் என்பது இடைவெளியை நிரப்புகிற பாலம் அல்ல. மேலும் பெரிதாக்குகிற கோடாலி. பணம் எப்போதுமே சரியான அளவுகோல் அல்ல.

மனிதர்களை பணத்தால் அலங்கரிக்காதீர்கள். நல்ல மனதால் தொடுங்கள் போதும்.

Friday, December 12, 2008

எல்லாம் கொலைச் செயல்! - திரை விமர்சனம்

நான் கல்லூரி படிக்கும்போது பாக்கெட் (கிரைம்) நாவல்கள் பிரபலம். எல்லா பாக்கெட்டுகளிலும் ஒரே ஸ்டைல்தான். 50 பக்கம் வந்தவுடன் பட்டென எல்லா முடிச்சுகளும் அவிழ்ந்துவிடும். அடுத்த 5 பக்கங்களில், கொலைகாரன் அகப்படுவான், கதை முடிந்துவிடும் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் முதல் பக்கத்தில் 'சார் போஸ்ட்' என்ற தபால்காரர்தான் உண்மையான கொலைகாரன் என்று புது திருப்பம் தந்து நாவலை முடிப்பார்கள்.

அதே ஸ்டைலில் 'சிந்தாமணி கொல கேஸ்' என்று மலையாளத்தில் வந்த படம் தமிழில் 'எல்லாம் அவன் செயல்' ஆகியிருக்கிறது. விஜயகுமார், ரகுவரன், விசு, தலைவாசல் விஜய், சுகன்யா, ரோஜா, வடிவேலு, மணிவண்ணன், சங்கிலி முருகன் என்று பல பெருந்தலைகள் படத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஆளுக்கு இரண்டு சீன்தான்.

மற்ற காட்சிகளை ஆர்.கே என்ற (புரொடியுசர்)புதுமுகம் ஜே.கே.ரித்திஷ் ஸ்டைலில் ஆக்கிரமிக்கிறார். சில நேரம் கையில் கருப்பு கிளவுஸிம், சில நேரம் வக்கில் கோட்டும் போட்டுக் கொண்டு, கேரக்டர்களை மறந்துவிட்டு முக்கால்வாசி நேரம் இரசிகர்களைப் பார்த்தே டயலாக் பேசுகிறார், அல்லது டயலாக் வாசிக்கிறார். இவருடைய பாதிப்பில் சுகன்யாவும் விசுவும் கூட எப்போதுமே விரைத்துக் கொண்டு அடித்தொண்டையில் பேசுகிறார்கள்.

கடமை தவறாத போலீஸ் அப்பாவை, சிறுவர்களான மகன் மற்றும் மகளின் கண்ணெதிரில் போட்டுத் தள்ளுகிறான் ஒரு கொலைகாரன். வெகுண்டெழும் மகன் வளர்ந்து பெரியவனாகி அந்த கொலைகாரனை பழிவாங்குவது பழைய ஸ்டைல். பெரியவனாகி வக்கீலாகி, கிரிமினல்களுக்காக வாதாடி, ஜெயித்து, விடுதலை வாங்கித் தந்து, அடுத்தநாளே அவர்களை கொலை செய்வதுதான் எல்லாம் அவன் ஸ்டைல்.

வழக்கமாக தமிழ்பட மசாலாக்களில் இது போல கொலை செய்யும் ஹீரோ, கடைசி காட்சியில் மட்டும் கையில் விலங்கோடு உள்ளே போவார். இதில் வழக்கத்திற்கு மாறாக, உங்களைப் போல இன்னும் பல பேர் வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி ஆபீசர் கொலைகாரனை வாழ்த்தி சல்யூட் அடிப்பது போல படம் முடிகிறது.

எல்லா குற்றங்களுக்கும் தீர்வு, கொலைதான் என்று தவறாகச் சொல்லித்தரும் படம். மெடிக்கல் காலேஜ் ஊழல், ராக்கிங் என சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளை இனிப்பு போல தடவி, மக்களை கொலைகாரனாக மாற கொம்பு சீவும் படம். அதை மேலும் நியாயப் படுத்த ஆங்காங்கே ஏதேதோ ஸ்லோகங்கள்.

இந்தப் படத்தின் ஹீரோவும் புரொடியுசருமான ஆர்.கே எனப்படும் ராதாகிருஷ்ணன், வி-கேன், ஸ்கைவேஸ் 2000, காந்தப் படுக்கை என விதவிதமாக மல்டி லெவல் மார்கெட்டிங் செய்து (உள்ளே போய் வெளியே வந்து) பிரபலமானவர். எதை விற்கிறோம், எதை வாங்குகிறோம் என்பதைப் பற்றி கவலை இல்லை. பணம் சம்பாதிக்க வேண்டும். அதுமட்டுமே நமது குறிக்கோள் என்று மல்டி லெவல் மார்கெட்டிங்கில் பிரெயின் வாஷ் செய்வார்கள். இந்தப் படம் அது போல, எல்லா குற்றங்களுக்கும் தண்டனையாக கொலையை சிபாரிசு செய்கிறது.

கடவுளே! இது போன்ற தவறான போதனைகளிலிருந்து இளைஞர்களை காப்பாற்று!

Tuesday, December 9, 2008

மகேஷ் சரண்யா மற்றும் ஜவ்வு மிட்டாய் - திரை விமர்சனம்

55 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி சூரியன் தியேட்டரில், திரையிலிருந்து நான்காவது வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்தால் நல்ல படம் கூட கெட்ட படமாகிவிடும்.

"நல்லாத்தான்யா யோசிச்சிருக்கான், ஆனா எடுக்கத் தெரியல. "

திரையில் மகேஷிம் சரண்யாவும் தோன்றும்போது, மற்றும் சிலராக (அடுத்த சீட்டில்) வாய்ப்பு கிடைக்காத அஸிஸ்டெண்ட் டைரக்டர்கள் இருந்தால் . . அவர்களின் தொடர் கமெண்டுகள்(கடுப்புகள்), ஒரு சில நல்ல சீன்களையும் மொக்கை சீன்களாக்கிவிடும்.

பி. ரவி எனப்படும், லிங்குசாமியின் சிஷ்யருக்கு இது முதல் படம். படித்து முடித்த பின் வாத்தியாராகி தவிக்கும் பாதி மாணவன் + மீதி லெக்சரர் போல தடுமாறியிருக்கிறார். படம் முழுக்க மகேஷிம், சரண்யாவும் வருகிறார்கள். கூடவே திறமையும், அனுபவமின்மை வருகின்றன.

யாராவது ஐஸ் கிரீம் சாப்பிட ஆரம்பித்தால் சாப்பிட்டு முடிக்கும் வரை படு நிதானமாக டயலாக் வைக்கிறார். வீட்டுக்கு யாராவது வந்தால், தெரு முனையில் கார் நுழைவதில் ஆரம்பித்து, வந்து, நின்று, கார் கதவை திறந்து, மூடி, கேட்டை திறந்து, சிரித்து, கை கூப்பி, வணக்கம், வாங்க என்று சொல்வதற்குள் . . .ஸ்ஸ்ஸ்...அப்பாடா! (டேய் ஏன்டா இந்தப்படத்துக்கு கூட்டிட்டு வந்தே? என்று எட்டாவது வரிசை ஆளை புலம்ப வைத்துவிடுகிறார்)

ஒரு காட்சி முடிந்தவுடன், அடுத்த காட்சிக்கு சட்டென போக மாட்டேன்கிறார். கோனார் நோட்ஸ் போல 'என்ன ஆச்சு தெரியுமா?' என்று இன்னொரு கேரக்டரை வைத்து முந்தைய காட்சியை ஒரு வரி விடாமல் விளக்குகிறார். அதுவும் பத்தாது என்று வெறும் லிப் மூவ்மெண்ட் போட்டு நமத்துப்போன பிண்ணனி இசையால் சில நிமிடங்களை கடத்துகிறார் (இன்னாடா டப்பிங் பண்ண காசு பத்தலையா? - பத்தாவது வரிசைக் குரல்)

ஆனாலும் லிங்குசாமியிடம் ரவி கிளாஸ் அட்டெண்ட் செய்திருக்கிறார் என்பதற்கு சில முத்திரைகள் படத்திலிருக்கின்றன. சரண்யாவின் ஓபனிங் சாங், காதலைத் தெரிவிக்கும் ரிங்டோனாக வரும்போது (மச்சான்! என்னடா திடீர்னு பின்றான் - முன் வரிசை) தியேட்டரில் முதன் முதலாக கை தட்டல். அப்பா நான் டிரெயினை மிஸ் பண்ணிட்டேன் என்ற சாதாரண வசனம், கிளைமாக்ஸில் ஒரு திருப்பு முனை வசனமாக வரும்போது இயக்குனர் முதன் முறையாக கடைசி 10 நிமிடங்களில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார். (பரவால்லடா, ஏதோ இருக்கு - அடுத்த ஸீட்),

சக்திக்கு இது இரண்டாவது படம். ஓகே!ஜோதிகாவை காப்பியடிக்கும் சந்தியா கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விட்டால் அசத்தப் போவது யாரு குழுவில் ஒருவராக்கிவிடுவார்கள்! சரண்யாவுக்கு முகத்தில் சகல எக்ஸ்பிரஷன்களும் நன்றாக வருகிறது. ஆனால் இதே போன்ற பாத்திரத்தில் தொடர்ந்து நடித்தால், தமிழ் சினிமாவின் நிரந்தர தங்கச்சியாக மாறிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது.

வித்யா சாகர் வரவர போரடிக்கிறார். படம் முழுக்க டைட்டானிக் பாதிப்பு!

ஏற்கனவே மலையாளத்தில் மோகன்லால் நடித்து, தமிழில் (விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையில்) சத்யராஜ் நடித்த ஒரு சாதாரண கதைக்கு, நல்ல திரைக்கதை அமைத்துவிட்டு, படு சொதப்பல்களான ஜவ்வு மிட்டாய் காட்சிகளால், இயக்குனர் நம்மை படம் முழுக்க கடுப்பேற்றுகிறார்.

கிளைமாக்ஸ் ஒரு எதிர்பாராத சஸ்பென்ஸ்!

ஆனால் அந்த ஒரு சில காட்சிகளுக்காக 'மகேஷ், சரண்யா மற்றும் பலரில் ஒருவனாக' மாட்டிக் கொண்டு முழிக்க நீங்கள் தயார் என்றால், இந்தப் படத்திற்குப் போகலாம்.

Friday, December 5, 2008

பணக்காரருக்கு கொடுத்தால் அது subsidy. ஏழைக்கு கொடுத்தால் அது இலவசம்

சென்ற மாதத்தில் ஒருநாள்! சென்னை புரசைவாக்கம்! வழக்கம் போல காருக்குள் அமர்ந்து கொண்டு நாங்கள் டிராபிக்கில் வியர்த்துக்கொண்டிருந்தோம். சைக்கிள்காரர்கள் திரும்பிப் பார்க்காமல் குறுக்கே பாய்ந்து லாரி மற்றும் மாநகரப் பேருந்துகளின் பிரேக்குகளுக்கு டெஸ்ட் வைத்துக் கொண்டிருந்தார்கள். மோட்டர் பைக்கர்கள் காதுக்கும், தோள் பட்டைக்கும் இடையில் மொபைல் போனை பதுக்கி, யாரிடமோ இன்னும் ஐந்து நிமிடங்களில் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு சிவப்பு சிக்னல்களைத் தாண்டினார்கள். ஷேர் ஆட்டோவில், பிதுங்கி வழிந்த லேட் ஆபீசர்களுக்குப் பயந்து நாங்கள் பயணம் செய்த கார் இடது பக்கம் ஒதுங்க, எதிரில் மிரண்டு போன மாடு ஒன்று வலது பக்கம் சாலைக்குள் பாய்ந்து மொத்த டிராபிக்கையும் நிறுத்தியது.

பிரேக்கையும், ஹாரனையும் ஒரே அமுக்காக அமுக்கிய நண்பர், "சை! இப்பவே இப்படி இருக்கிறது. இன்னும் ஒரு லட்ச ரூபாய்க்கு கார் வந்திடுச்சின்னா அவ்வளவுதான்" என்றார்.
"ஏன்?", இது நான்.
"ஏன்னா? இப்பவே பாருங்க ரோடுல இடமில்ல. டாடா நேனோ காரை கொண்டு வந்துட்டான்னா, அவனவன் ஒரு லோனை போட்டிருவானுங்க. எல்லாம் ஆளுக்கொரு காரை வச்சுக்கிட்டு தெருவை அடைச்சுக்குவானுங்க"
"அதுதான் நிறைய பிரிட்ஜ், சப்-வேல்லாம் கட்டுறாங்களே?"
"எத்தனை கட்டுனாலும், ஒரு லட்ச ரூபா கார் வந்தா நாஸ்திதான். அதனால் ரோடு ஃபிரியா இருக்கணும்னா, இந்த ஒரு லட்ச ரூபா கார் வரக் கூடாது. இவனுங்க கார் வாங்க கூடாது"
"நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?"
"என்னது?"
"ஒரு லட்ச ரூபா கார் வரட்டும்"
"ம்.."
"அவனுங்க பஸ்ல, பைக்ல போறத நிறுத்திட்டு கார் வாங்கட்டும்"
"ம்.."
"இதே தெருவுல கன்னா பின்னான்னு என்ஜாய் பண்ணி ஓட்டட்டும். "
"ரோட்டுல இடமிருக்காது அண்ணே!"
"அதுக்குதான் நான் இப்ப ஐடியா சொல்றேன் தம்பி! நாமளும், அவனுங்களும் ஆளுக்கொரு கார்ல போனாதான இடமிருக்காது. இனிமே அவனுங்க மட்டும் கார் ஓட்டட்டும். நாம கார்ல போறத விட்டுட்டு பஸ்லயும், பைக்லயும் போகலாம். ஓகேவா?"

என் நண்பர் பதில் சொல்லவில்லை. பதிலுக்குப் பதிலாக கோபமாக ஆக்ஸிலேட்டரை அழுத்தி சரக்கென வேகமெடுத்தார். இந்தியாவின் தற்போதைய ஸோ கால்டு பணக்காரர்கள் என் நண்பரின் ஜெராக்ஸ் காப்பிகள்தான். இந்தியாவின் சந்தோஷங்கள், வளர்ச்சிகள், செல்வாக்குகள் எல்லாம் தங்களுக்கு மட்டும்தான் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை விட பண அந்தஸ்தில் கீழாக இருப்பவர்களுக்கு இவற்றில் எந்தப் பங்கும் இல்லை என்று கூசாமல் சொல்கிறார்கள்.

இவர்கள் அரசாங்கத்திடம் உதவி கேட்டால் அதற்குப் பெயர் 'Subsidy'. ஏழைகள் கேட்டால் 'இலவசம்' என்று ஒரு விளக்கம் வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் 'மும்பை தாஜ் ஹோட்டலில்' தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டால் மொத்த இந்தியாவையும் பொங்கியெழுந்து போராடச் சொல்கிறார்கள். மற்றவர்கள் 'சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில்' பாதிக்கப்பட்டால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றக் கூட மறக்கிறார்கள்.

எப்போதுமே தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் இந்த சிந்தனைதான் 'தீவிரவாதத்தின் முகம்'. இந்த தீவிரவாத முகங்கள் இந்தியா முழுவதும் நிறைய உள்ளன.

கடுப்'பூ' அல்ல சலிப்'பூ' - விமர்சனம்

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் காலில் எடைக் கல் விழுந்தால் கூட சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் பெண், கடைசிக் காட்சியில் கதறி அழுகிறாள். ஏன்? இதுதான் படத்தின் ஒன் லைன்.

சிறுகதையை நெடுங்கதையாக்கும்போது மூலக்கதையை சிதைக்காத பல சம்பவங்கள் தேவைப்படும். அது திரைக்கதையாகும்போது சுவாரசியமான காட்சியமைப்புகள் தேவைப்படும். பூவில் சுவாரசியமான காட்சியமைப்புகள் உண்டு. ஆனால் தொடர்ச்சியான சம்பவங்கள் இல்லை. அதனால் ஒரு நல்ல ஒரு பக்கச் சிறுகதையை இரண்டு மணிநேரம் படித்த ஒரு சலிப்பு ஏற்படுகிறது.

90களில் தமிழ்சினிமாவின் நிரந்தர காலேஜ் ஸ்டூடண்ட் முரளி என்ன செய்தாரோ, அதை பூவின் நாயகி காயத்ரி செய்திருக்கிறார். தன்னுடைய முறை மாமனின் மேலிருக்கும் காதலைச் சொல்ல முடியாமல் படம் முழுவதும் தவிக்கிறார், தவிக்கிறார்... படம் முடிந்த பின்னும் தவித்துக்கொண்டே இருக்கிறார்.

ஒரு இளம் மனைவியின் மறக்க முடியாத (திருமணத்திற்கு முந்திய) காதலைச் சொல்ல தைரியம் வேண்டும். அந்த தைரியத்திற்காக இயக்குனருக்கு சபாஷ். ஆனால் அவர் சொன்னது காதலை அல்ல. காதலைச் சொல்ல முடியாத வெறும் தவிப்பு என்பதுதான் படத்தின் மைனஸ்.

நகரப் பிண்ணனியிலிருந்து விலகி (பருத்தி வீரன் கொடுத்த தைரியத்தில்) வித்தியாசம் காட்டுவதற்காக வேட்டுக் கம்பெனிகளையும், கள்ளிப் பூக்களையும் காட்டுகிறார்கள். ஆனாலும் 'அழகிகளும், ஆட்டோ கிராப் நாயகிகளும்' ஞாபத்திற்கு வந்து படத்தில் ஒன்ற விடாமல் கெடுக்கிறார்கள். என் கூட வந்த நண்பர் படத்தை மிகவும் இரசித்தார். நான் யூகிக்கின்ற முக்கிய காரணம் அவர் 'அழகி, ஆட்டோ கிராப்' போன்ற படங்களை பார்க்கவில்லை.

படத்தில் வரும் அத்தனை உப பாத்திரங்களும் புது முகங்கள். ஆனாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 'பேனாக்காரர்', 'அலோ டீ கடைக்காரர்', 'மாரியின் அண்ணன்', 'மாரியின் கணவன்', 'மாரியின் தோழி', 'சூப்பர்வைஸர்' என எல்லோருமே மனதில் நிற்கிறார்கள். (அகத்தியனின் கோகுலத்தில் சீதை படத்தைப் போல) எல்லோரும் நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் . . .

சொந்தத்தில் கல்யாணம் செய்தால் பிறக்கும் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்கின்ற கிளைமாக்ஸ் வாதத்துடன் பூவின் முறைமாமன் காதல் நிறைவேறாமல் போகும்போது, அழகியலுடன் அறிவியல் மிக்ஸ் ஆகி சட்டென படத்தின் மேல் ஒரு கடுப்'பூ' வருகிறது.

"தேவதைகள் வானத்திலிருந்து குதித்து விடுவதில்லை. மாமனுக்கு மகளாக பிறக்கிறார்கள். தேவதைகளை கைப்பிடிக்கும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. மீதி பேர் 'பூ' படத்தின் நாயகன் தங்கராசுவை போல மனமறுந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விடுங்கள், நமக்கே நமக்கென ஒரு மாரியம்மாள் இனிமேல் புதியதாகவா பிறந்து வரவேண்டும்?" என்று லக்கிலுக் ஆன்லைனில் விமர்சனம் படித்தேன். தங்கராசுவின் பார்வையில் சினிமா நகர்ந்திருந்தால் ஒருவேளை நானும் லக்கிலுக் போல நெகிழ்ந்திருப்பேன். ஆனால் நாயகி மாரியின் நோக்கில் கதை நகரும்போது என்னால் பெரிதாக ஒன்ற முடியவில்லை.

"பூ படத்தில ஓர் இடத்தில் மாரி “ கல்யாணமாயிருச்சுன்னா எல்லாத்தையும் மற்ந்துரனுமா என்னா? “ என்று கேட்பது காதல் வயப்பட்டு கைகூடாமல் போன எல்லா காதலர்கள் மனதிலும் எழும்பும் கேள்விதான்.. . ஓரு பெண்ணின் பார்வையில் அவளின் காதலை சொல்லும் பூ படத்துக்கு பெரிய வசூல் இல்லை என்பது இந்த ஆண் ஆதிக்க சமுதாயத்தினால்தானோ.. என்று தோன்றுகிறது.." என்று கேபிள் சங்கர் விமர்சித்திருந்தார். அவர் சொல்வது போல எனக்கோ பார்வையாளர்களுக்கோ தோன்றவில்லை. அதைப் பொறுத்தவரையில் இயக்குனருக்கு வெற்றிதான். ஆனால் காதலுக்குத் தொடர்பில்லாத, சொந்தத்தில் கட்டக் கூடாது என்ற ஒரு கருத்து திணிக்கப்பட்டவுடன், அடச் சே இதுக்காகத்தானா இவ்வளவு நேரம் . . . என்று தோன்றுகிறது.

படத்தின் டைட்டில் 'பூ'. ஆனால் எந்த இடத்திலும் பூவைக் காட்டவில்லை. பூக்களுக்குப் பதிலாக ஒரு கள்ளிப்பூவைப் போல படம் முழுக்க நிறைகிறார் நாயகி காயத்ரி. அபார திறமை.

இசை சுமார். இசையமைப்பாளர் இது போன்ற படங்களுக்கு இசையமைக்க உட்காரும்போது, பிண்ணனி இசை ஆசான் இளையராஜாவின், படங்களை பார்த்துவிட்டு அமர்வது நல்லது.

எத்தனை நொட்டைகள் சொன்னாலும், இது இயக்குனர் சசியின் சீரியஸ் முயற்சி என்பதில் சந்தேகமில்லை. வாரணம் ஆயிரம் படத்தை பார்த்தபின்னும் கெளதமின் மேல் எனக்கு இதே எண்ணம்தான் தோன்றியது.

இரண்டுக்கும் ரிசல்ட் ஒன்றுதான். ஆழமில்லை!

Thursday, December 4, 2008

விஜயகாந்தின் ரியல் பேட்டியும் - ரீல் பேட்டியும்

கட்டுப்பாடு, ஒழுக்கம்னு சொல்ற நீங்க ஊழல் செய்தவங்களுக்கு கட்சியில இடம் கொடுத்திருக்கீங்களே?

எங்க கட்சியில பொன்னுசாமி வந்தபிறகுதான் இப்படிச் சொல்றாங்க. நான் கேட்கறேன்.. எந்தக் கட்சியிலதான் ஊழல்வாதிங்க இல்ல.. முந்தின கலைஞர் ஆட்சியில குற்றம் சாட்டப்பட்ட சேடப்பட்டி முத்தையாவும், இந்திரகுமாரியும் இப்போ தி.மு.கவுலதானே இருக்காங்க. ஆக, பெரியவங்க செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரி.. ஆனா நான் செய்தா தப்பு. என்ன நியாயங்க இது? பொன்னுசாமி செய்த தப்புக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்து அதை அவரும் முழுசா அனுபவிச்சுட்டாரு. தண்டனை கொடுக்கறது எதுக்கு? தப்பு பண்ணினவங்க திருந்தறதுக்குத்தானே. பிறகு ஏன் கட்சியில சேர்க்கக்கூடாதுன்னு கேட்கறேன்.. எத்தனையோ குர்த் இன மக்களைக் கொலைசெய்த சதாம் உசேனுக்கே தூக்கு தண்டனை தரக்கூடாதுன்னு சொல்றாங்க. இவர் என்ன, லஞ்சம் தானே வாங்கினாரு.
2006ல் விஜயகாந்த் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி இந்தியா 360 டிகிரி


இனிமேல் 2011ல் விஜயகாந்த் கொடுக்கப் போகும் பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி விஜயகாந்த்

கட்டுப்பாடு, ஒழுக்கம்னு சொல்ற நீங்களே லஞ்சம் வாங்கியிருக்கீங்களே?
எங்க கட்சி சார்புல நான் லஞ்சம் வாங்கின பிறகுதான் இப்படி சொல்றாங்க. நான் கேட்கறேன். எந்தக் கட்சியிலதான் லஞ்சம் வாங்கல. இதுக்கு முன்ன ஆட்சி செய்த கருணாநிதி லஞ்சம் வாங்கலையா? ஜெயலலிதா லஞ்சம் வாங்கலையா? பெரியவங்க செஞ்சா பெருமாள் மாதிரி... நான் செஞ்சா தப்பா, என்ன நியாயங்க இது? கருணாநிதி, ஜெயலலிதா செஞச் தப்புக்கு தண்டனையா அவங்கள ஆட்சிய விட்டு அனுப்பியாச்சு. அவங்களும் அதை ஏத்துக்கிட்டாங்க. தண்டனை கொடுக்கிறது எதுக்கு? தப்பு பண்ணினவங்க திருந்தறதுக்குதான? பிறகு ஏன் லஞ்சம் வாங்கக் கூடாதுன்னு கேட்கறேன். லஞ்சம் வாங்கினாதான திருந்த முடியும். எத்தனையோ குர்த் இன மக்களைக் கொலைசெய்த சதாம் உசேனுக்கே தூக்கு தண்டனை தரக்கூடாதுன்னு சொல்றாங்க. நான் என்ன லஞ்சம் தான வாங்கினேன். இது பெரிய தப்பா?

- அடுத்ததும் 2006ல் விஜயகாந்த் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி இந்தியா 360 டிகிரி
நிறையப்பேர் புதிதாக உங்கள் கட்சியில் சேருகிறார்கள். எந்த எதிர்பார்ப்பில் வருகிறார்கள்? பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலா?

‘உங்களோட கொள்கை பிடிச்சிருக்கு.. நீங்க எடுக்கற திடகாத்திரமான முடிவு பிடிச்சிருக்கு.. அதனாலதான் வந்தோம்'னுதான் சொல்றாங்க. இதைக் கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. உண்மையில அவங்களுக்கு இப்போ நடக்குற அரசியல் பிடிக்கவே இல்லீங்க. அவங்க ஒரு புதிய பாணி அரசியலைத் தேடி என் கட்சிக்கு வர்றாங்க. அப்படி மாற்றுக் கட்சியில இருந்து வர்றவங்க ஏற்கெனவே அவங்க இருந்த கட்சிகள்ல எந்த ஆதாயமும் இல்லாம வெறுத்துப்போய் இருக்கறவங்களா தெரியறாங்க. அவங்களுக்கு ஏதாவது செய்தே ஆகணுங்கற பொறுப்பும் பயமும் எனக்கு வந்திருக்கு. அவங்களோட தேவை என்ன.. எதிர்பார்ப்பு என்னன்னு பார்த்து அதைக் கண்டிப்பா பூர்த்தி பண்ணுவேன். ஆனா என் கட்சிக்கு வர்றவங்க ஒழுக்கமாகவும், கட்சியோட கொள்கைக்கு கட்டுப்பட்டும் நடந்துக்கணுங்கறதுதான் என்னோட எதிர்பார்ப்பு. என் ரசிகர்களை அப்படி வளர்த்ததுதான் இன்னிக்குக் கட்சியை கட்டுக்கோப்பா நடத்த உதவுது.

- இதுவும் இனிமேல் 2011ல் விஜயகாந்த் கொடுக்கப் போகும் பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி விஜயகாந்த்

நிறையப்பேர் புதிதாக உங்கள் கட்சியில் லஞ்சம் வாங்குகிறார்கள். எந்த எதிர்பார்ப்பில் வாங்குகிறார்கள்? மாட்டிக் கொள்ள மாட்டோம் என்ற நம்பிக்கையிலா?

‘உங்களோட கொள்கை பிடிச்சிருக்கு.. நீங்க வாங்குற லஞ்சம் பிடிச்சிருக்கு.. அதனாலதான் வாங்கறோம்'னுதான் சொல்றாங்க. இதைக் கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. உண்மையில அவங்களுக்கு இப்போ மத்த கட்சிகள் வாங்குற லஞ்சம் பிடிக்கவே இல்லீங்க. அவங்க ஒரு புதிய பாணி லஞ்சத்தை தேடி என் கட்சிக்கு வர்றாங்க. அப்படி மாற்றுக் கட்சியில இருந்து வர்றவங்க ஏற்கெனவே அவங்க இருந்த கட்சிகள்ல மூலமா எந்த லஞ்சமும் வாங்க முடியாம வெறுத்துப்போய் இருக்கறவங்களா தெரியறாங்க. அவங்களுக்கு லஞ்சம் கிடைக்க ஏதாவது செய்தே ஆகணுங்கற பொறுப்பும் பயமும் எனக்கு வந்திருக்கு. அவங்களோட தேவை என்ன.. எதிர்பார்ப்பு என்னன்னு பார்த்து அதைக் கண்டிப்பா பூர்த்தி பண்ணுவேன். ஆனா என் கட்சிக்கு வர்றவங்க லஞ்சத்துக்கும், ஊழலுக்கும் கட்டுப்பட்டு் நடந்துக்கணுங்கறதுதான் என்னோட எதிர்பார்ப்பு. என் ரசிகர்களை அப்படி வளர்த்ததுதான் இன்னிக்குக் கட்சியை கட்டுக்கோப்பா நடத்த உதவுது.


- இதுகூட 2006ல் விஜயகாந்த் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி இந்தியா 360 டிகிரி

அடுத்த மாநாடு எப்போது?

மாநாடுங்கறது என்னோட தொண்டர்களை ஸ்டடி பண்றதுக்காக நடத்தறதுதான். அதேசமயம் அடிக்கடி மாநாடு போட்டு தொண்டர்களுக்கு அதிக செலவு வைக்க எனக்கு விருப்பமில்ல. அதனாலதான் தேர்தல் பிரச்சாரத்துல எல்லோருமே ஸ்டேஜ் போட்டப்போ நான் டெம்போ வேன்ல பிரச்சாரம் பண்ணினேன். மீட்டிங் போட்டா அடிமட்ட தொண்டர்களுக்குத்தான் நிறைய செலவாகும். அதன்பிறகு என்னை முன்னுதாரணமா வச்சு எல்லோரும் டெம்போ டிராவலர்ல வந்தாங்க.

- இதுகூட இனிமேல் 2011ல் விஜயகாந்த் கொடுக்கப் போகும் பேட்டியின் ஒரு பகுதி - நன்றி விஜயகாந்த்

அடுத்த மாநாடு எப்போது?

மாநாடுங்கறது என்னோட தொண்டர்களை (குவார்டர் அடிச்சுட்டு வந்தாலும்) ஸ்டடி பண்றதுக்காக நடத்தறதுதான். அதேசமயம் அடிக்கடி மாநாடு போட்டு தொண்டர்களையும் லஞ்சம் வாங்கி அதிக வசூல் செய்ய வைக்க எனக்கு விருப்பமில்ல. அதனாலதான் தேர்தல் பிரச்சாரத்துல எல்லோருமே ஸ்டேஜ் போட்டப்போ லஞ்சப் பணம் வெளியில தெரிஞ்சிடுமேன்னு நான் டெம்போ வேன்ல பதுக்கி வச்சுட்டு பிரச்சாரம் பண்ணினேன். கட்டிங் போட்டா அடிமட்ட தொண்டர்களுக்குத்தான் நிறைய செலவாகும். அதன்பிறகு என்னை முன்னுதாரணமா வச்சு எல்லோரும் டெம்போ டிராவலர்ல வந்தாங்க.

2006ல் கல்கிக்கு அளித்த ஒரு பேட்டியின் இன்னொரு பகுதி

நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களைக் கவர என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

என்னோட திட்டங்கள் எதையும் நான் வெளில சொல்லப் போறதில்ல. அப்படி சொன்னா அதை மத்த கட்சிக்காரங்க எடுத்துகிட்டு, ‘நான்தான் செய்தேன்‘னு சொல்லிடறாங்க.

2011ல் நமக்கு அளிக்கப் போகும் பேட்டியின் இன்னொரு பகுதி
நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களைக் கவர என்ன ஊழல் வைத்திருக்கிறீர்கள்?

என்னோட ஊழல்கள் எதையும் நான் வெளில சொல்லப் போறதில்ல. அப்படி சொன்னா அதை மத்த கட்சிக்காரங்க எடுத்துகிட்டு, ‘நான்தான் செய்தேன்‘னு சொல்லிடறாங்க.

Tuesday, December 2, 2008

ஒரே காரில் தமிழகத்தின் முதல் குடும்ப வாரிசுகள்

தமிழகத்தில் நம்முடைய புலனாய்வு பத்திரிகைகள் மும்பை தீவிரவாதிகளையும், நிஷா புயலையும் துரத்திக் கொண்டிருந்தபோது, சத்தமே இல்லாமல் தமிழகத்தின் முதல் குடும்பம் சண்டை சச்சரவுகளை மறந்து(மறைத்து) ஒன்று சேர்ந்துவிட்டார்கள். பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்துவிட்டு,  மாறன் சகோதரர்களும், அழகிரி மற்றும் ஸ்டாலின் சகோதரர்களும் ஒரே காரில் பயணம் செய்தார்களாம்.

இதே போல மின்வெட்டுத்துறை ஆற்காடு வீராசாமி, ஸ்பெக்ட்ரம் துறை ராஜா, அவாளின் பேரன் தயாநிதி ஆகியோரும் ஒரே காரில் பயணம் செய்வார்களா? குறைந்தபட்சம் ஒரே ஹோட்டலில் சாப்பிடுவார்களா? சந்தேகம்தான்.

Friday, November 28, 2008

இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்!!!

"We request Advani and other politicians not to come to Mumbai at this moment. We don't want our security forces run behind them to safe guard them. We need them for our Mumbai"

என்று எழுத்தாளர் ஷோபா டே NDTV 24x7 சேனலில் குமுறிக் கொண்டிருந்தார்.

ஒரு புறம் தீவிரவாதிகளின் பிடியில் ஓபராய், தாஜ் ஹோட்டல்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, இன்னொரு புறம் மும்பை தூசு தட்டி எழுந்து நிற்க ஆரம்பித்துக் கொண்டிருந்தது. உயிரை துச்சமாக மதித்து தைரியமாக கூடி நின்ற மக்கள் மேலும் மேலும் வந்து இறங்கிய இராணுவத்தினரையும், போலீசாரையும், கமாண்டோக்களையும் கைதட்டி உற்சாகமாக வரவேற்றார்கள். "பாரத் மாதா கி ஜே", "வந்தே மாதரம்" என்ற கோஷங்கள் துப்பாக்கி சத்தங்களை மீறி ஒலித்தன.

அதே நேரத்தில் (நேற்று) அத்வானி அங்கு வந்து சென்றார். அவரைத் தொடர்ந்து (இன்று) மோடி வந்திறங்கிச் சென்றார். இன்னும் பல அரசியல்வாதிகள் வந்து செல்லக் கூடும். அவர்கள் வருவது ஓட்டுக்காகவா? அரசாங்கத்தை திட்டவா? இக்கட்டான நேரத்தில் மக்களை சந்திக்கும் அக்கறையா? என்ற விவாதத்தில் இறங்க வேண்டாம். அது தற்போதைய தேவையும் அல்ல.

ஒவ்வொரு துப்பாக்கியும், ஒவ்வொரு பாதுகாவலரும், ஒவ்வொரு பாதுகாப்பு நடவடிக்கையும் மும்பையை ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகளை குறி வைத்து இயங்கும்போது, இந்த அரசியல் வி.ஐ.பிக்களின் வருகை நிச்சயம் ஒரு தடங்கல்தான். இந்த அரசியல்வாதிகளைத் தொடரும் கார்களும், கைத்தடிகளும், இந்த நேரத்தில் மிகப்பெரிய கவனச் சிதறல்தான்.

ஒவ்வொரு நொடியும் நாட்டின் பாதுகாப்புக்கு தேவைப்படும்போது, இந்த அரசியல் வி.ஐ.பிக்களின் பாதுகாப்புக்காக சில நிமிடங்களாவது அந்த பாதுகாப்பு திசை திரும்புகிறது. எனவே அவர்களுடைய வருகை இந்த தருணத்தில் தேவையற்றது.

எனவே 'இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்!!! தயவு செய்து சில நாட்களுக்கு மும்பை பக்கம் வராதீர்கள். நாட்டின் காவலர்களுக்கு தற்போது மக்களை காப்பதே முக்கியம். உங்களைக் காப்பது அல்ல."

ஷோபா டே இதைத்தான் சொன்னார். நான் வழி மொழிகிறேன்.

Wednesday, November 26, 2008

சிறிய விஷயம் - பெரிய தவறு

நீங்கள் என்றைக்காவது 'கண் சொட்டு மருந்து' வாங்கியிருக்கிறீர்களா? சமீபத்தில் எனது பெண்ணுக்காக நான் வாங்கினேன். டாக்டர் எழுதிக்கொடுத்த "MOISOL EYE DROPS" மற்றும் "OCUPAL EYE DROPS" ஆகிய இரண்டு சொட்டு மருந்துகளும் மருந்துக்கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. ஆனால் பிரச்சனை மருந்தை வாங்கிய கணத்திலிருந்து ஆரம்பிக்கிறது. மருந்தை சொட்டு சொட்டாக கண்களில் விடவேண்டுமென்றால் பாட்டிலின் பிளாஸ்டிக் முனைகளில் ஒரு சிறிய துளை தேவைப்படுகிறது.

என்னுடைய மகளும், மனைவியும் அதில் துளையிடுவதற்க்காக முதலில் ஒரு கூரிய பேனா முனையை முயற்சித்திருக்கிறார்கள். அது சரிப்படவில்லை என்றதும் ஒரு ஹேர்பின்னை வைத்து முயற்சித்திருக்கிறார்கள். அதுவும் சரிப்படவில்லையென்றதும் என்னிடம் வந்தார்கள். நான் ஹேர்பின்னையும், பேனா முனையையும் வீசி எறிந்துவிட்டு,  பாட்டில் மூடியை இடமிருந்து வலமாக ஒரு முறை இறுகச் சுற்றினேன். அடுத்த வினாடி சொட்டு மருந்துக்கான துளை ரெடியாகிவிட்டது. எப்படி? இது எப்படி? என்று ஏதோ மேஜிக்கை பார்த்ததுபோல எனது மனைவிக்கும் மகளுக்கும் ஆச்சரியம்.

விஷயம் ரொம்ப சிம்பிள். பாட்டில் மூடியின் உள் உச்சியில் ஒரு பிளாஸ்டிக் ஊசியின் கூர் முனை உள்ளது. பாட்டிலை மூடிவிட்டு, இடமிருந்து வலமாக மேலும் இறுக்கும்போது, உள் உச்சியிலிருக்கும் பிளாஸ்டிக் ஊசியின் கூர்
முனை குத்தி துளை ஏற்படுகிறது. இனி அந்த துளை வழியாக மருந்து சொட்டு சொட்டாக எளிதாக வெளிவரும்.

'உங்களுக்கு மட்டும் எப்படி இது தெரிந்தது?" என்று என் மகள் ஆச்சரியம் பொங்கக் கேட்டாள். நான் அமைதியாக மருந்து வைக்கப்பட்டிருந்த மேல் அட்டைப் டப்பாவைக் காட்டினேன். அதில் 'எப்படித் துளையிடுவது என்பது பற்றி' படத்துடன் ஆங்கில விளக்கமும் இருந்தது.

எதற்க்காக இதைச் சொல்கிறேன் என்றால், ஹேர்பின், பேனா முனைகளை வைத்து துளையிடும்போது அவற்றில் உள்ள அழுக்குகள் துளையின் முனையில் ஒட்டிக்கொள்ளும். கண்களில் அந்தத் துளைகளின் வழியாக மருந்திடும்போது, மருந்துடன் சேர்ந்து அழுக்கும் கண்களில் இறங்கும். இதனால் கண்கள் மேலும் பாதிப்புக்குள்ளாகும்.

படித்த நடுத்தர வர்க்க மக்களுக்கே இப்படி ஒரு விஷயம் இருப்பது தெரியவில்லை.படிக்காத ஏழை எளிய மக்கள் இதனால் எந்த அளவு பாதிப்படைவார்கள் என்பதை நான் தனியே விளக்கத் தேவையில்லை.

எனவே மருந்து எழுதித் தரும் டாக்டர்களும், மருந்தை விற்பனை செய்யும் கடைக்காரர்களும் 'சொட்டு மருந்து மூடியில் பாதுகாப்பாக துளையிடுவது எப்படி?' என்பது பற்றி ஒரு முறை விளக்குவது நல்லது.

Friday, November 21, 2008

தேவாதி தேவர்களுக்காக பயப்படும் விகடனும், குமுதமும்

'இணைய தளத்தில் பல விஷயங்களை உடைத்து எழுதும் வசதி இன்னும் பத்திரிகை உலகத்திற்கு வந்து சேரவில்லை. அப்படிப் பட்ட விஷயங்களில் ஒன்று சட்டக் கல்லூரி வன்முறை'

இந்த வார ஓ பக்கங்களின் ஓஹோ ஆரம்பம் இதுதான். தன்னை நடுநிலையின் மனித பிம்பமாக மகா அகம்பாவத்துடன் வெளிப்படுத்திக் கொண்டு வரும் ஞாநியின் வாக்கு மூலம் இது. இவர் எதை எழுத நினைத்தார்? எழுத நினைத்ததை குமுதத்தில் யார் தடுத்தார்?

இந்த மாநிலத்தின் முதல்வருக்கு வாரம் தவறாமல் தைரியமாக குட்டு வைத்த 'எந்த ஜாதிக்கும் உட்படாத ஞாநியை', சட்டக் கல்லூரி விவகாரத்தில் தலையில் குட்டி, 'உன் போக்கில் எழுதாதே' என்று அடக்கி பயமுறுத்தி வைத்த அந்த 'முரட்டு ஜாதி' கரங்கள் எவை?

சட்டக் கல்லூரி வன்முறைக்கு காரணம் 'ஜாதி' என்பதும், அது கல்லூரிக்கு வெளியே ஆரம்பித்தது என்பதையும் அறிந்துகொள்ள எந்த விசாரணை கமிஷனும் தேவையில்லை. ஆனால் எந்த ஜாதியால் பிரச்சனை ஆரம்பித்தது என்பதை போலீசோ, அரசோ, விசாரணை கமிஷனோ தைரியமாகச் சொல்லுமா என்பது சந்தேகம்தான். ஆனால் எதற்கும் அஞ்சாத ஞாநி, யாருக்கும் அஞ்சாத ஞாநி இதைப் பற்றி தைரியமாகச் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஞாநி வெறும் சோனி ஆகிவிட்டார்.

இந்தவாரம் 'ஞாநியின் ஓ பக்கங்கள்' பிரச்சனையின் வேர்களை பயத்தோடும் ஜாக்கிரதையோடும் தேடியிருக்கிறது. உண்மையை எழுதியிருந்தாலும், உரக்க பல விஷயங்களை சொல்ல முடியாமல் பயந்திருக்கிறது. பயம் என்று சொல்லக் காரணம் தெரியவேண்டுமானால் இந்த வார ஆனந்தவிகடனின் 'சட்டம் - சதி - சாதியை' படியுங்கள்.

'சமீபத்தில் நடந்து முடிந்த தேவர் ஜெயந்திதான் இதற்கான பிள்ளையார் சுழி' என்று தைரியமாக எழுதப்பட்ட அல்லது தெரியாமல் உளறிவிட்ட ஒரு வரி ஆனந்த விகடனின் கட்டுரையில் வருகிறது. ஒரு தரப்பு மாணவர்கள் அடித்த போஸ்டரில் 'டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி' என்ற கல்லூரியின் பெயரில் 'டாக்டர் அம்பேத்கர்' பெயர் மிஸ்ஸிங் என்று இன்னொரு வரி இருக்கிறது. ஆனால் அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்த, இப்படி ஒரு வன்முறைக்கு ஆரம்ப காரணமாக இருந்த அந்த ஒரு தரப்பு மாணவர்கள் 'எந்த ஜாதியைச் சேர்ந்த வெறியர்கள்' என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. மிஸ்டர் தைரியம் என்று பெயரெடுத்த - ஞாநி அவர்களும் தொடை நடுங்கிப் போய் 'மிஸ்டர் உபதேசமாக' மாறி பொத்தாம் பொதுவாக எழுதி நழுவிட்டார்.

தேவர் ஜெயந்தி வருடா வருடம் 'பயங்கர அமைதியுடன்' நடந்து முடியும் அரசியல்வாதிகளின் 'ஜாதி ஓட்டு ஜெயந்தி'யாக நடந்து முடியும். இந்த வருடம் அந்த நாள், ஜெயலலிதா காரின் மேல் கல்லெறியப் பட்ட நாளாக அறியப்பட்டது. ஆனால் அதே நாளில் அல்லது அதற்கு முந்தை நாட்களில் இந்த போஸ்டர்களில் 'அம்பேத்கர் பெயர்' இருட்டடிப்பு சம்பவமும் தொடர்ந்து மோதலும் நடந்திருக்கிறது.

விகடன் ஒரு நாலு பக்க கட்டுரையும், ஒரு தலையங்கமும் எழுதியிருக்கிறது. குமுதம் தன் பங்குக்கு ஒரு ஷாக் ரிப்போர்ட் கொடுத்துவிட்டு, தலையங்கத்தில் குமுறிவிட்டு, ஞாநியை 'தட்டிக் கொடுத்து' எதையோ எழுத வைத்திருக்கிறது.

தமிழகத்தின் பாரம்பரியமிக்க பண்பாட்டைக் காக்கும், வெள்ளிவிழா, பொன்விழாவையெல்லாம் கண்ட பத்திரிகைகள். சட்டக் கல்லூரி வன்முறை விஷயத்துக்காக கிட்டத்தட்ட 10 பக்கங்களை ஒதுக்கியுள்ளன. ஆனால் ஒரே ஒரு வரியில் கூட இந்த வன்முறையின் ஆரம்ப வித்துக்கு காரணமான 'தேவர்'களைப் பற்றி எழுத தைரியமில்லை.

தேவர் ஜெயந்தியன்று, அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்தவர்கள் தேவர்கள், அதை தட்டிக் கேட்டவர்கள் தலித்துகள்.

இந்த ஒரு வரியை எழுத முடியாமல்தான் ஞாநி தொடை நடுங்குகிறார். ஆனந்த விகடன் கலர் படம் போட்டு விட்டு 'இரண்டு ஜாதிகளுக்குள் மோதல்' என்று மையமாக சொல்லிவிட்டு ஜகா வாங்குகிறது.

ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? இந்த ரெண்டு பத்திரிகைகளும் என்ன ஜாதி? ஏதாவது ஒரு விசாரணை கமிஷன் வைச்சு சொல்லுங்கப்பா!

Sunday, November 16, 2008

சூர்யாயிரம் : திரை விமர்சனம்

'காக்க காக்க'வை சேரன் இயக்கியிருந்தால் எப்படி இருக்கும்? சூர்யா ஹீரோயினாகி, ஜோதிகா ஹீரோவாகியிருப்பார். ஆட்டோகிராபை கெளதம் இயக்கியிருந்தால் எப்படி இருக்கும்? சேரன் காதல் தோல்வியில் கஞ்சா அடித்து, டெரரிஸ்ட் ஆகி இன்னொரு காதல் செய்திருப்பார்.

இது கிண்டல் கிடையாது, என்னடா இது, நல்ல முயற்சி, ஆனா . . இப்படி இருக்கேன்னு ஒரு ஆதங்கம்.

சேரனின் தவமாய் தவமிருந்தின் பாதிப்பு வாரணம் ஆயிரத்தில் இருக்கக்கூடும் என்று கெளதம் சில மாதங்களுக்கு முன்பு ஏதோ ஒரு பத்திரிகை பேட்டியில் கூறியிருந்தார். அவர் சொன்னது போல பாதிப்பு இருக்கிறது, ஆனால் பாதிதான் இருக்கிறது. மீதியை காக்க காக்க கமாண்டோக்களும், வேட்டையாடு விளையாடு டெரரிஸ்டுகளும், டிரக் அடிக்டுகளும் ஆக்கிரமித்துவிட்டார்கள்.

அமெரிக்காவுக்கு எம்.எஸ் படிக்கப் போகும் மேக்னாவை, ஒரு இரயில் பயணத்தில் பார்த்தவுடன் காதலிக்கிற சூர்யா, அமெரிக்காவிற்கே சென்று காதலில் ஜெயிக்கிறார். ஆனால் அமெரிக்காவிலேயே ஏதோ ஒரு குண்டு வெடிப்பில் மேக்னா இறந்துவிட, இந்தியா திரும்பும் சூர்யா சோகத்தை மறக்க Drug addictஆக மாறி, பின்னர் திருந்தி இந்திய இராணுவத்தில் சேர்கிறார். சேர்ந்த கையோடு பள்ளிக்காலத்தில் கூட படித்த பிரியாவை மணக்கிறார்.

இவருடைய இந்த முடிவுகளுக்கும், வெற்றி(?)களுக்கும் காரணம் தன்னுடைய அப்பாதான் என்று படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி ஃபிரேம் வரைக்கும் சூர்யா சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அந்த உறவின் ஆழத்தைச் சொல்ல ஒரே ஒரு காட்சி கூட படத்தில் இல்லை.

படத்தின் ஆரம்ப டைட்டில் முடிந்தமே சூர்யாவின் ஆதிக்கம் கொடி கட்ட ஆரம்பித்துவிடுகிறது. எழுபதுகளின் பள்ளி மாணவனாக சூர்யா. எண்பதுகளின்
காதலனாக சூர்யா, 90களின் தகப்பனாக சூர்யா, 2000த்தின் இளைஞனாக சூர்யா, என வயதின் பல பரிமாணங்களை இளமை, முதுமை - காதல், கவர்ச்சி - துள்ளல்,மோதல் - பயம்,வீரம் என பல சுவைகளுடன் வெளிக்காட்டியிருக்கிறார். எனக்குத் தெரிந்து எந்த ஒரு நடிகனுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததில்லை. சூர்யாவைப் போல உணர்ந்து மெனக்கெட்டு நடித்ததுமில்லை.

ஆனால் அழுத்தமான காட்சிகள் இல்லாததால், அர்த்தமில்லாத கவிதையை வாசிப்பது போல இருக்கிறது.

சிம்ரன் அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டார். காதலியாக, மனைவியாக, அம்மாவாக, கணவனை இழந்து கொண்டிருப்பவளாக வெகு இயல்பு.

மேக்னா நாயுடு, சிரிக்கிறார். . . சிரிக்கிறார் . . சிரித்துக்கொண்டே இருக்கிறார். முதலில் இந்தியாவில், அப்புறம் அமெரிக்காவில். டிரெயினில் அவரைக் கண்டதும் சூர்யாவின் கண்டதும் காதல் ஒரு ஸ்வீட் எபிசோட்.

பக்கத்துவீட்டு ப்ரியாவாக வரும் ரம்யாவுக்கு பெரிதாக வாய்ப்பில்லை.

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் ஏற்கனவே டாப் 10ல் கலக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிண்ணனி இசையில் ஏமாற்றமே.

சூர்யாதான் கமலின் வாரிசு என்பதையும், கெளதம் மேனனுக்கு - Gangsters, Drugs, Encounter இவற்றைத் தவிர வேறு எதையும் அழுத்தமாகச் சொல்ல முடியாது என்பதையும் நிரூபித்திருக்கிற படம்.

Friday, November 14, 2008

மாணவர்களே எங்களை மன்னியுங்கள்!!

எனது இனிய(?) மாணவர்களே,

இன்றைக்கு உங்கள் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் கல்வியோ, கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளோ அல்ல. 
 இளகிய மனம் படைத்தவர்கள் இதைப் பார்க்க வேண்டாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ஒளிபரப்பான 'கொலை வெறி' தாக்குதலில் உங்கள் அனைவரையும் பார்த்தேன். சிலர் உதடுகளில் மிரட்டல்,சிலர் உதடுகளில் இரத்தம்.சிலர் கையில் கத்தி, சிலர் கையில் உயிர்.

உங்கள் கல்லூரி மூடப்பட்டதற்கு உங்கள் கையிலிருந்த கத்தியும், சிலரின் உடலில் இருந்த இரத்தமும்தான் காரணம் என்று இந்த ஊரும், உலகமும் நினைத்துக் கொண்டிருக்கிறது. ஏன் நீங்களே அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.  ஆனால் நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.

பின் யார்தான் காணரம்?

ஜாதி, மதம், இனம் என நமது சமூகத்தின் அத்தனை அழுக்குகளையும், நாற்றங்களையும் கல்லூரி கட்டிடங்களுக்குள்ளும், வகுப்பறைக்குள்ளும் நாங்கள் பரப்பி வைத்திருக்கிறோம். நீங்கள் அட்மிஷன் வாங்கும்போதிலிருந்தே உங்களை அறியாமல் அதில் காலை வைத்து அழுக்காகிப் போகிறீர்கள்.

இன்றைக்கு ஒவ்வொரு கட்சியிலும் மாணவரணி என ஒன்று உள்ளது. நீங்கள் அதில் ஒரு அங்கம், இதில் தவறில்லை. ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு கல்லூரியிலும் எல்லாக்கட்சிகளுக்கும் ஒவ்வொரு அணி உருவாகியுள்ளது. இதுதான் கோளாறு.

கட்சித் தலைவர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்களோ, எப்படியெல்லாம் முறைகேடு செய்கிறார்களோ, எப்படியெல்லாம் வன்முறை செய்கிறார்களோ, எப்படியெல்லாம் அவற்றிலிருந்து தப்பிக்கிறார்களோ அவற்றையெல்லாம் நீங்கள் கல்லூரியில் படிக்கும்போதே அனுபவித்துக் கற்றுக் கொள்கிறீர்கள்.

நாங்கள் எடுக்கிற சினிமாக்களும், சின்னத்திரை சீரியல்களும் வகை வகையான கத்திகளையும், துப்பாக்கிகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. விதம் விதமான கொலைவெறிகளை தூண்டியிருக்கிறது. வெறி கொண்டவன் வெற்றி பெறுவான் என்று போதித்திருக்கிறது.

நாங்கள் தேர்ந்தெடுத்த நாடாளும் அரசியல்வாதிகளும், அவர்களை எதிர்க்கின்ற அரசியல்வாதிகளும் அந்த துப்பாக்கிகளையும், கத்திகளையும் நிஜ வாழ்க்கையிலும் வெற்றிகரமாக பயன்படுத்தி ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களைக் காட்டித்தான் உங்களை வளர்த்தோம்.

காந்தி கூட மாணவர்களை அரசியலுக்கு அழைத்தார். ஆனால் அவர்களை வைத்து வெற்று கோஷம் போடவில்லை. அவர்களை வைத்து ஓட்டு சேகரிக்கவில்லை. அவர்களை வைத்து புதிய கல்வி முறைகளையும், திட்டங்களையும் உருவாக்கி சோதித்துப் பார்த்தார்.  ஆனால் நாங்கள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டோம்.
இன்று எங்களைப் பார்த்து நீங்கள் கத்தியை பயன்படுத்துகிறீர்கள்.
சுருக்கமாகச் சொன்னால் நாங்கள் கற்றுக்கொடுத்ததைத்தான் நீங்கள் கற்றுக் கொண்டிருக்கிறீரகள்.


மாணவர்களாகிய நீங்கள் தனியான இனமோ சமூமோ அல்ல. நாங்கள் தான் நீங்கள், நீங்கள்தான் நாங்கள்.

அதனால் நீங்கள் குற்றவாளிகள் அல்ல. உங்களைக் குற்றவாளிகளாக வளர்த்த நாங்கள்தான் குற்றவாளிகள்.

அதனால் எங்களை கத்தியின்றி, இரத்தமின்றி மன்னியுங்கள்.

Monday, November 3, 2008

மேகம் - கொக்கு - கார்டூன் - இந்தியா

ஆரம்பத்தில் கலைந்து போன மேகம் போல இருந்தது.
பிறகு இலங்கை போல தெரிந்தது.
சிறிது நேரம் கழித்து போகோ சேனல் கார்டூன் முகம் போலத் தெரிந்தது.
அப்புறம் ஆப்ரிக்கா போல மாறியது.
கடைசியாக இந்தியா மேப் போல மாறி நிலைத்துவிட்டது.

நான் வளசரவாக்கம் லாமெக் உயர்நிலை பள்ளியில் ஏழாவது படிக்கும்போது தமிழ் வாத்தியார் சட்டையில் எப்போதும் தாடி வைத்த தாத்தா அல்லது கொக்கு அல்லது ஒரு மேகம் இருக்கும். அவருடைய எல்லா சட்டையிலும் பாக்கெட்டின் கீழ் விளிம்பில் அவை இருக்கும். 7பி செக்ஷனில் படித்த எல்லா மாணவர்களுக்கும் தமிழ் வாத்தியாரைப் போலவே, சட்டை முழுக்க யானை, கொம்பு சண்டை, காளை மாடு, கத்தி என வகை வகையாக இருக்கும். ஆனால் அனுமந்தராவ் என்கிற முதல் ராங்க் வாங்குகிற பையன் மற்றும் நீல பாவாடை தாவணியில் வரும் மாணவிகள், இவர்கள் சட்டையிலோ தாவணியிலோ நான் எட்டாவது முடிக்கும் வரை கொக்கு, மேகம் என எதையும் பார்த்ததில்லை.

இன்றைக்கு காலையில் எதிர்பாராத விதமாக என்னுடைய ஜெல் பேனாவை மூட மறந்து பாக்கெட்டில் வைத்துவிட்டேன். காலை 10 மணிக்கு முதல் வகுப்பு முடியும்போது, ஒரு மாணவி பார்த்துவிட்டுச் சொன்னாள். சார் உங்க சட்டையில 'மேகம்'.

பாக்கெட்டின் கீழ் விளிம்பில் இங்க் ஊறி ஊறி ஒரு மேகம் போல பரவியிருந்தது.
பிறகு இலங்கை போல தெரிந்தது.
சிறிது நேரம் கழித்து போகோ சேனல் கார்டூன் முகம் போலத் தெரிந்தது.
அப்புறம் ஆப்ரிக்கா போல மாறியது.
கடைசியாக இந்தியா மேப் போல மாறி நிலைத்துவிட்டது.

இது போல, உங்க சட்டையில என்னைக்காவது மூட மறந்த பேனா, உங்களால் வரைய முடியாத படத்தை வரைஞ்சிருக்கா?

Friday, October 31, 2008

Times of India-யாவா? Crimes of India-யாவா?

சென்னையில் டிஸ்கோதெ கிளப்புகள் எங்கே இருக்கின்றன. அவற்றில் குடித்துவிட்டு இரவு முழுக்க கூத்தடிப்பவர்கள் யார் யார்? அவர்களைப்போல நாமும் எப்படி கூத்தடிப்பது, என்பது பலகாலம் சென்னை வாழ், தமிழ் மக்களுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் டெக்கான் கிரானிக்கிள் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய இரு செய்தித்தாள்களும் வந்தவுடன், அந்த இராத்திரி இரகசியங்களுக்கு ஒரு ஸ்டேட்டஸ் கிடைத்துவிட்டது. தினமும் அர்த்த இராத்திரி வரை ஆடும் அர்த்தமற்ற கும்மாளங்களுக்கு தினமும் ஒரு பக்க கவரேஜ். வாழ்க டெக்கான் கிரானிக்கிள் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா!

சில மாதங்களுக்கு முன்பு ஈ.சி.ஆர் ரோடில் உள்ள ரெசாட்டுகளில் போலீஸ் திடீர் ரெய்டு நடத்தினார்கள். அரை குறை ஆடைகளுடன் இளைஞர்களும், இளைஞிகளும் கும்பல் கும்பலாக மாட்டினார்கள். ஒரு ரெய்டில் சில பெண்கள் குடித்துவிட்டு ஆடையே இல்லாமல் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தார்களாம். இந்தக் கண்றாவிக்கெல்லாம் செக் வைத்தவுடன், டெக்கான் கிரானிகள் சிலிர்த்துக் கொண்டது. போலீஸ் ஏன் அத்து மீறி ரெசாட்டுகளுக்குச் செல்கிறது? என்று கேள்வி எழுப்பியது. சில டெக்கிகள் (முழுக்கப் படித்துவிட்டு அரை குறை உடைகளுடன் கூத்தடிப்பவர்களை இந்த ஆங்கிலப் பத்திரிகைகள் இப்படித்தான் செல்லமாக அழைக்கின்றன), போலீசின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதாக பேட்டி கொடுத்ததும், அதை டெக்கான் வெளியிட்டதும் கேலிக் கூத்தின் உச்சகட்டம்.

அதே போல இரவு 11 மணிக்கு மேல் குடித்துவிட்டு ஆடக் கூடாது, அப்படி ஆடினால் அந்த கிளப்புகளுக்கு தடை என்று சில மாதங்களுக்கு முன்பு அரசாங்கம் உத்தரவு போட்டது. அவ்வளவுதான் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பொறுக்கவில்லை. தினமும் அரை மயக்கத்தில் வீடு திரும்பும் உயர் மட்ட(மான) குடி மகன்கள் பலரை பேட்டி கண்டு, 'தனி மனித உரிமையில் தலையிட நீ யார்?', 'எங்கள் சுதந்திரத்தை ஏன் பறிக்கிறாய்?' என்று செய்தி வெளியிட்டது. எது உரிமை? எது சுதந்திரம்? டைம்ஸ் ஆஃப் இந்தியா பதில் சொல்லட்டும்.

அக்டோபர் 25ம் தேதி, இலங்கைத் தமிழர்களின் படுகொலையை கண்டித்து, சென்னையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் ஒரே ஒரு பகுதியை கீழே கொடுத்திருக்கிறேன்.

Most of the students, drenched in the rain and shivering, stood for hours for a cause they had no clue about.

மழையில் நனைந்து நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்த மாணவர்களுக்கு ஏன் நிற்கிறோம் என்றே தெரியவில்லையாம்.

எதுவும் தெரியாமல் நின்றார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியே நின்றிருந்தாலும் அதில் என்ன தவறு. டிஸ்கோதெ கிளப்புகளிலும், ஈ.சி.ஆர் ரெசார்ட் மறைவுகளிலும் அரை குறை ஆடைகளுடன் திரிவதைக் காட்டிலும் இது மேலானதே. அந்த மாணவர்களுக்கு இலங்கைப் பிரச்சனையின் தீவிரம் தெரியாமல் போனதற்கென்ன காரணம்?

சிவாஜி','தசாவதாரம்' போன்ற படங்கள் ரிலீசின் போது மணிக்கணக்கில் நின்று டிக்கெட் வாங்கியவர்களை ஒரு சாதனையாளர்களைப் போல வருணித்தது யார்? டிஸ்கோ இரவுகளில் சிரிப்பவர்களை கலர் போட்டோக்களாக வெளியிட்டு கெளரவப் படுத்துவது யார்? இலங்கைப் பிரச்சனை பற்றி மூடி மறைப்பது யார்? டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஊடகங்கள்தான். இந்த பொறுப்பற்ற ஊடகங்களால்தான் இளைஞர்கள் சமூகத்தைப் பற்றி எந்தச் சுரணையுமின்றி வளர்கிறார்கள்.

எனவே டைம்ஸ் ஆஃப் இந்தியா எதுவும் தெரியாமல் நின்ற அந்த மாணவர்களுக்காக ஒரே ஒரு நாள் டிஸ்கோதெ பக்கங்களை நிறுத்தட்டும். நிறுத்திவிட்டு இலங்கைப் பிரச்சனை என்றால் என்ன என்று, ஒரு ஸ்பெஷல் எடிஷன் போடட்டும். தமிழக இளைஞர்களுக்கு எது சுதந்திரம்? எது உரிமை என்று புரிய இது உங்களால் ஆன சிறு முயற்சியாக இது இருக்கட்டும்.

அப்படிச் செய்தால்தான் நீங்கள் Times of India, இல்லையென்றால் நீங்கள் Crimes of India.

Thursday, October 30, 2008

அவர் !!!

இறுதி யாத்திரைக்கு வருபவர்களில் பலரும் மறுநாள் 'பால்' எனப்படும் நிகழ்வுக்கு வருவதில்லை. என் தந்தை மரணமடைந்த போதும் அப்படித்தான். முதல்நாள் பெருகிவந்து தோள் கொடுத்த ஒருவர் கூட, என் தந்தை சடலமாக தீயில் கருகிய அடுத்தநாள் வரவில்லை. சடலத்தை எரிக்கும் தீயை விடத் தகிக்கும் தனிமை உணர்வு என்னை அப்போது வாட்டியது.

ஆறுதலாக மறுநாளும் அவர் மட்டும் வந்திருந்தார். சிதையில் சாம்பல்களுக்கிடையில் எலும்புத் துண்டுகளை சிறு குச்சிகளை வைத்துக் கிளறி தேடிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் மட்டும் வந்தது எனக்கு பெரிதாகத் தோன்றவில்லை.

சிதையின் சாம்பல் படிந்த கைகளில் ஒவ்வொரு எலும்புத்துண்டாக எடுத்து மண் சட்டியில் வைத்து சூடு ஆற தண்ணீர் ஊற்றினார். அந்த சமயத்தில் கூட அவர் வந்தது எனக்கு பெரிதாகத் தோன்றவில்லை.

என் தந்தையின் மறைவுக்கு முன்னும் பின்னும், எனக்கு இன்னொரு தந்தையாகவே இருந்து என்னை அவர் வழி நடத்தினார். சில நேரங்களில் ஒரு தோழனைப் போல பழகினார். என்னுடன் மட்டுமல்ல, அந்தக் காலனியில் வசித்த என் நண்பர்கள் ஒவ்வொருவருடனும் இருபத்தைந்து வருடங்களாக அப்படித்தான் பழகினார். அரை டிராயர் போட்ட பருவத்திலிருந்து, மணமாகி ஒரு குழந்தை பெற்ற பின்பும் கூட, கிட்டத்தட்ட நான் அவர் வீட்டில்தான் வளர்ந்தேன் என்று சொல்லலாம். பக்கத்து வீட்டு மாமா என்பதைக் கடந்த அந்த உறவுக்கு தமிழில் தனியாக வார்த்தைகள் இல்லை.

திடீரென ஒருநாள் வீடு மாற்றிச் செல்லப் போவதாகக் கூறினார். வீடு தேடி வந்து எங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டுச் சென்றார். மனதில் வார்த்தைகளில் வராத ஒரு வெறுமை. அவர் வீட்டைக் காலி செய்த கடைசி நாளன்று அவர் வீட்டிலிருந்து ஒரே ஒரு செடியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஏனோ தெரியவில்லை பறித்த செடிகளை என் வீட்டுத் தோட்டத்திற்கு எடுத்துச் செல்லவில்லை.

தினமும் இரவு, அவர் வீட்டைக் கடக்கும் முன் அவரைப் பார்த்து 5 நிமிடம் பேசிவிட்டுத்தான் என் வீடு செல்வேன். ஆனால் அவர் இல்லாத அந்த வீட்டை தினமும் கடக்க நேர்ந்தபோது, அவரிடம் செலவழிக்க முடியாத 5 நிமிடங்கள் பெருகிப் பெருகி வெறும் தனிமையின் மூட்டையாகிப் போனது. அதைச் சுமக்க சுமக்க, என் தந்தையின் மரணத்தின் போது என்னை எரித்த தனிமைத் தீ மீண்டும் கொளுந்து விட்டு எரிவது போல ஒரு தகிப்பு. அவர் வீட்டிலேயே நான் விட்டுவிட்டு வந்த செடிகளைப் போல நாட்கள் கருகிக் கொண்டிருந்தன. அவர் வீடு மாற்றிப் போய் 3 மாதங்களாகியும் நான் அவரை சந்திக்கவே இல்லை, குறைந்தபட்சம் டெலிபோன் உரையாடல் கூட இல்லை என்பதை நான் திடீரென உணர்ந்தேன். ஏன்?

ஏன்? என்று எனது நண்பர்(அவருடைய மகன்)ஒருநாள் என்னைக் கேட்டார். நண்பரின் குரலில் 'அவர்' நேரடியாக என்னைக் கேட்டது போல உணர்ந்தேன். நாளையே பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்தேன். ஆனால் நாளை என்பது அடுத்த 2 மாதங்களுக்கு வரவேயில்லை. ஏனோ தெரியவில்லை . . . நான் அவரை பார்க்கவில்லை, பேசவில்லை. மனதின் ஓரத்தில் தினமும் ஒரு உறுத்தல் என்னைத் தின்று கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் உறுத்தல், குற்ற உணர்வாக மாறி, தயக்கமாக நிலைத்துவிட்டது. என்ன விசித்திரம்!!! என்னை ஒரு தந்தையைப் போல பார்த்துக்கொண்ட அவரைப் பார்ப்பதில் எனக்கென்ன தயக்கம்?

நல்லவேளையாக என்னுடைய நீண்ட நாளைய நண்பன், 'அவரை' பார்ப்பதற்க்காகவே சென்னை வந்திருந்தான். பட்டென ஒட்டிக்கொண்டேன். 'அவர்' வீட்டுக்கு வருகிறேன் என்று அவரைத் தவிர எல்லோரிடமும் சொல்லிவிட்டு என் நண்பன் கூடவே 'அவர்' வீட்டுக்குச் சென்றேன். அவர் எப்போதும் போல அதே உரிமையுடன் 'ஏண்டா கடன்காரா என்னை பார்க்க இத்தனை நாளா வரல?' என்று திட்டோ திட்டென திட்டினார். அவர் திட்டத்திட்ட நான் தனிமைச் சுமைகள் குறைந்து இலகுவாகிக் கொண்டு வந்தேன்.

'சரி எல்லோரும் லஞ்ச் போலாமா?' நண்பன் கேட்டான்.
'ஓ.எஸ் போலாமே . .' என்று அவரும் ஒரு நண்பனைப் போல இயல்பாக கூட வந்தார்.
15 வருடங்களுக்கு முன்பு, என் தந்தையின் மரணத்தின் போதும் இப்படித்தான் இயல்பாக வந்தார். அப்போது எனக்கு அது பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் எதனாலோ தொடர்ந்து அவரைத் தவிர்த்து வந்த என்னை, எப்போதும் போல ஏற்றுக்கொண்டு, எங்களுடன் ஹோட்டலுக்கு வந்தபோது, அவருடைய வருகை எனக்கு பெரிதாகப் பட்டது.

Monday, October 27, 2008

ஜெ, வை.கோ, விஜயகாந்த், சூப்பர் ஸ்டார்களுக்கு த.பாண்டியனின் யோசனை

தமிழ் சினிமாவைப் போலவே, தமிழக அரசியலிலும் கிளாமருக்குத்தான் மரியாதை. அந்த வகையில் தமிழக கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டு மீடியாக்களுக்கு கடைசி பட்சம்தான். அதனாலேயே பல நேரங்களில் அவர்களின் தெளிவான உருப்படியான சிந்தனைகள் மற்றும் யோசனைகள் தமிழக மக்களைப் போய்ச் சேருவதில்லை. இலங்கைத் தூதர் பேசில் ராஜபக்ஷே சென்னை வந்து சென்ற பின்னர் இலங்கைப் பிரச்சனை மீண்டும் வெறுமனே கருணாநிதியை மட்டும் சுற்றும் பிரச்சனையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. அதைத் தாண்டி த.பாண்டியன் அருமையான சில யோசனைகளைச் சொல்லியிருக்கிறார்.

அடுத்த கட்டமாக கருணாநிதி இந்த யோசனைகளை பரிசீலித்து ஆவண செய்ய முயற்சிக்கலாம்.

  • இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் தொடர்பாக நேஷனல் செக்யூரிட்டி அட்வைஸர் எம்.கே. நாராயணன், ஃபாரின் செக்ரட்டரி ராகவன் ஆகியோரின் பரிந்துரைகளைக் கேட்பதை இந்திய அரசு உடனே நிறுத்தவேண்டும். அவர்களுக்குப் பதிலா தமிழர்களை அந்தப் பொறுப்பில் அமர்த்த வேண்டும்.
  • இலங்கை அரசு அனுமதித்தால் இரண்டு தமிழக மத்திய மந்திரிகள் அல்லது தமிழக எம்.பிக்கள் இருவரை பிரணாப் முகர்ஜியுடன் இலங்கைக்கு அனுப்பி நேரடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
  • அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் சாராத மருத்துவர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், பெளத்த மத பிட்சுக்கள், மெளல்விகள், கிறித்துவ பாதிரியார்கள், இந்துசாதுக்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து, நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு, அவர்களுடைய கண்காணிப்பில் வழங்க வேண்டும்
  • திரை இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரின் பேச்சு, வெறுமனே உணர்ச்சி வசப்பட்ட பேச்சே தவிர அரசியல் அறிக்கைகள் அல்ல. அதனால் அரசு அவர்கள் விஷயத்தில் கடுமையைக் குறைக்கலாம்
கருணாநிதியை காய்ச்சி எடுக்கும் பதிவர்கள் இந்த யோசனையை உரக்கச் சொல்லலாம்.
தமிழக போலீஸ் என்னை கைது செய்ய முயற்சி செய்கிறது என்று போலிக் கூச்சல் போடாமல் ஜெயலலிதா இந்த யோசனைகளை கருணாநிதிக்குச் சொல்லலாம்.
வருங்கால முதல்வர் என்று தன்னை வருணித்துக் கொள்ளும் விஜயகாந்த், மிக முக்கியமான ஒரு விஷயத்தில் மக்கு மாதிரி பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்காமல், இதை அப்படியே காப்பியடித்து, கருணாநிதியை நிர்பந்திக்கலாம்.
வை.கோ ஜெயிலுக்குள்ளிருந்துகொண்டே, புலிகள் ஆதரவை விடாமல், அ.தி.மு.க அம்மாவை கெட்டியாக பிடித்துக் கொண்டு இந்த யோசனைகளை செய்யச் சொல்லி கர்ஜிக்கலாம்.
நவம்பர் 1ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போகும் நடிகர்கள், சீமான், அமீர் கைதுகளால் தொடை நடுங்கி மெளனவிரதமிருக்காமல், இந்த யோசனைகளை தமிழக முதல்வருக்கு ஒரு வசனமாக அவரவர் ஸ்டைலில் படித்துக் காட்டலாம்.

இலங்கைப் பிரச்சனையில் கருணாநிதியின் அரசியல்

கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்!

இது சில அல்லது பல இலங்கைத் தமிழர்களின் குற்றச்சாட்டு.

மின்வெட்டு பிரச்சனையிலிருந்து தப்பிக்கவே கருணாநிதி இலங்கைப் பிரச்சனையை கையிலெடுத்தார்!

இது சில அல்லது பல தமிழகத் தமிழர்களின் குற்றச்சாட்டு.

இந்தக் குற்றச்சாட்டுகள் எந்த அளவிற்கு நியாயானவை?

எம்.பி.க்கள் ராஜினாமாவிற்கு 28ந் தேதி கெடு கொடுத்திருந்தீரகளே. தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில் அது தேவையில்லை என்று கருதுகிறீர்களா?
இன்றைக்கு நடைபெற்ற நிகழ்ச்சியை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிராணப் முகர்ஜி விளக்கியிருக்கிறார். அதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள். அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அப்போது எடுத்த முடிவில் அந்த கட்சிகளுக்கிடையே மாறபட்ட கருத்துகள் இருப்பதால்அவர்களையும் கலந்துகொண்டுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

பிரணாப் முகர்ஜி சென்னை வந்து சென்றபின், வெளியான கலைஞர் பேட்டி இது. இதிலிருந்து ஒரு விஷயத்தை யூகிக்க முடிகிறது. கருணாநிதி அறிவித்தபடி 28ம் தேதி தி.மு.க எம்பிக்கள் ராஜினாமா செய்தாலும், காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜினாமா செய்யமாட்டார்கள். கருணாநிதியோ,முகர்ஜியோ இதை பத்திரிகையாளர்களிடம் தெளிவாகச் சொல்லவில்லை என்றாலும், கருணாநிதியின் சூசகமான பதில் இதை சொல்லாமல் சொல்கிறது. இரண்டு கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க மற்றும் பா.ம.க எம.பிக்களின் நிலை என்னவென்று இன்னும் அக் கட்சித் தலைவர்கள் முடிவாகச் சொல்லவில்லை.

ஏற்கனவே தங்கபாலு என்கிற காங்கிரஸ் பொம்மை, டெல்லியைக் கேட்டுத்தான் முடிவு செய்வோம் என்று பின்வாங்கிவிட்டது. ராமதாஸ் 28ம் தேதி வரட்டும், அப்போது பார்க்கலாம் என்று அப்போதே சொல்லிவிட்டார். இன்னமும் அ.தி.மு.க ஆதரவு நிலையிலிருந்து மாறாத ம.தி.மு.க என்ன செய்யும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. கம்யூனிஸ்டுகள் இந்த வினாடி வரை ராஜினாமா பற்றி வாயைத் திறக்கவேயில்லை.

இந்த நிலையில் தி.மு.க மட்டும் எம்.பிக்கள் ராஜினாமா செய்வது மிகப் பெரிய அரசியல் முட்டாள்தனமாக இருக்கும்.

தி.மு.க எம்.பிக்கள் ராஜினாமா செய்து, மத்திய அரசு கவிழ்ந்தால் அடுத்த வினாடியே இங்கே காங்கிரஸ் எம்.எல்ஏக்கள் தமிழக அரசை கவிழ்ப்பார்கள்.

கருணாநிதியும், சோனியாவும் தொலைபேசியில் இதைத்தான் பேசியிருப்பார்கள். பிரணாப் முகர்ஜி நேரில் வந்து அதை நேரில் வந்து கருணாநிதியிடம் உறுதி படுத்திவிட்டுக் கிளம்பிவிட்டார்.

அப்படியென்றால் இலங்கைப் பிரச்சனை ?

காங்கிரஸ் எம்.எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படாத ஒரு தி.மு.க மெஜாரிட்டி அரசு அமைய வேண்டும்.

இப்போது போலவே மத்திய அரசின் குடுமி, தமிழக அரசின் கையில் இருக்கவேண்டும்.

இருந்தால் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக மேலும் ஸ்திரமான முடிவுகள் எடுக்க முடியும்.

இப்போதைக்கு . . .
  • இராணுவ உதவிகளை செய்ய மாட்டோம் என இந்தியா உறுதி.
  • ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கைத் தூதர் உறுதி
  • 800 டன் நிவாரண பொருட்களை இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்று பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்க உறுதி
  • நார்வே போன்ற நாடுகளின் உதவியுடன் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு முயற்சி
  • தமிழக மீனவர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்த மாட்டோமென இலங்கை உறுதி.

இன்றைய தி.மு.கவின் அரசியல் நிலையை மனதில் கொண்டு பார்த்தால், தற்போதைக்கு கருணாநிதியால் இந்த அளவுக்குத்தான் முடியும் எனத் தோன்றுகிறது.

தி.மு.க எம்.பிக்களையும் இழந்து, தமிழ்நாட்டில் ஆட்சியையும் இழந்தபின் இலங்கைப் பிரச்சனையை தீர்க்க வழியுண்டு என்றால், அதனை தாராளமாக கருணாநிதிக்கு சிபாரிசு செய்யலாம், இல்லையென்றால் முதலிரண்டு குற்றச் சாட்டுகளையும் தொடரலாம்.

Saturday, October 25, 2008

'கருப்பு எம்.ஜி.ஆர்' என்பவரை காணவில்லை

அன்புடையீர்,

எங்கள் அன்பு கேப்டன் விஜயகாந்த்தை ஈழத் தமிழர்கள் பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து மூன்று நாட்களாக காணவில்லை.

முதலமைச்சர் மற்றும் பிரதமர் ஆகக் கூடிய வயது. பார்ப்பதற்கு கருப்பாக எம்.ஜி.ஆர் போலவே இருப்பார். நான்தான் கேப்டன் கேப்டன் என்று சொல்லிக்கொண்டு திரிவார்.

வடிவேலு வீட்டில் கல்லெறிந்துவிட்டு, சன் டிவியில் லைவ் பேட்டியில் கருணாநதியை திட்டியபோது அவரை நீங்கள் பார்த்திருக்கலாம்.

இளைஞர் மாநாட்டிற்காக சென்னையில் ஒவ்வொரு இரண்டடிக்கும் ஒரு பேனரில் இரண்டு கையையும் விரித்தபடி சிரித்து போஸ் கொடுத்திருந்தாரே அதிலாவது அவரை நீங்கள் பார்த்திருக்கலாம்.

இலங்கைப் பிரச்சனையைப் பற்றி 'இவரைத் தவிர வேறு யாரும் பேசியதில்லை' என்று அவருடைய மனைவியும், தே.மு.தி.கவின் அண்ணியும் கொடுத்த சர்டிபிகேட் ஒன்று அவர் கையில் உள்ளது.

கடைசியாக ஆனந்தவிகடன் நிருபர்கள் மற்றும் மச்சினன் சுதிஷிடன் கோயம்பேடு மார்கெட் பக்கத்தில் நின்றுகொண்டு அரிசிப் பிரச்சனையை ஏதோ ஒரு நோட்டில் எழுதிக்கொண்டிருந்தார்.

ஆனால் இலங்கையில் பிரச்சனை ஆரம்பித்தவுடன், எங்கள் அன்பு கேப்டன், கிரிக்கெட் மேட்சில் டிரிங்ஸ் கொடுக்க வந்த சின்னப் பையனைப் போல திடீரென்று மாயமாக மறைந்துவிட்டார்.

எப்போதுமே நான் தனியாகத் தான் நிற்பேன் என்று அலறிக்கொண்டிருப்பார். அதனால் நேற்று 60 கிலோ மீட்டருக்கும் மேல் நீண்டிருந்த மனிதச் சங்கிலியைத் தாண்டி, 61வது கிலோ மீட்டரில் ஏதாவது ஒரு இடத்தில் தனியாக இருப்பார் என்று நிறைய டி.வி. கேமராக்கள் மற்றும் பத்திரிகை கேமராக்கள் உதவியுடன் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. எங்கேயோ போய் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

அவரை யாராவது பார்த்தால், 2011ல் தேர்தல் முடியும் வரை, இந்திய எல்லைகளுக்கு அப்பால், யார் கண்ணிலும் படாமல் ஒளித்து வைக்கும்படி அன்புடன் வேண்டி, கெஞ்சி, கூத்தாடி கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் ஆசான் விஜயகாந்தை 2011 வரை ஒளித்து வைப்பவர்களுக்கு இலவச முதல்வர் பதவி உண்டு. அது எப்படி இலவசமாக கொடுக்க முடியும் என்று கேட்காதீர்கள், சொன்னால் கருணாநிதி அதை காப்பி அடித்து மீண்டும் முதல்வர் ஆகிவிடுவார் என்பதால் அதைச் சொல்ல மாட்டோம்.


இப்படிக்கு
இலங்கைத் தமிழர்கள் பற்றி கவலைப் படும் தமிழர்கள் (தெலுங்கர்கள் அல்ல)

Thursday, October 23, 2008

மனிதச் சங்கிலி தொடர்பாக அறிவுச் சங்கிலி ஞாநிக்கு சில கேள்விகள்

நடக்கவிருக்கும் மனித சங்கிலியைக் குறித்து, 1987ல் நடந்தது, 'போராட்டம்', இப்போது நடப்பது வெறும் 'அணிவகுப்பு'. அன்றைய கோரிக்கை 'இந்திய அரசே தலையிடாதே', இன்றைய கோரிக்கை 'இந்திய அரசே தலையிடு', என்று உலக மகா ஞாநி வழக்கம் போல பிதற்றலை ஆரம்பித்திருக்கிறார்.

முதலில் அவருடைய வார்த்தை ஜாலத்திற்கு வருகிறேன்.

சிறுவயதில் வெளியே செல்லும்போது எனது தந்தை என் கையை பிடித்துக்கொண்டு, 'டேய் என் கையை விட்டுட்டு எங்கயும் போயிடாத' என்பார், சில நேரம் 'டேய் என் கையை விடாம கூடவே வா' என்பார். இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். சின்னக் குழந்தைக்கு கூட இது தெரியும். ஆனால் ஞாநி இரண்டுக்கும் வெவ்வெறு அர்த்தங்கள் என்கிறார்.

'இந்திய அரசே இலங்கை தமிழர்களுக்கு எதிராக தலையிடாதே'
'இந்திய அரசே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தலையிடு'

இந்த இரண்டு கோஷங்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? ஆனால் இருக்கிறது என்கிறார் ஞாநி. அதற்கு வசதியாக இலங்கை தமிழர்களுக்கு எதிராக, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஆகிய இரு சொற்றொடர்களையும் நீக்கிவிட்டார். நீக்கி விட்டு படித்தால் என்ன வருகிறது பாருங்கள். 'இந்திய அரசே தலையிடாதே', 'இந்திய அரசே தலையிடு' என்று வருகிறது. அதாவது இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் அதன் ஆதரவாளர்கள் நிலையை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்று போலி குற்றம் சாட்டுகிறார்.

1987ல் நடந்தது, 'போராட்டம்', இப்போது நடப்பது வெறும் 'அணிவகுப்பு' அதற்குச் செல்லாதீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார். ஞாநி சொல்வது போல நடக்கவிருக்கும் மனிதச் சங்கிலி தி.மு.க தலைமையில் நடைபெறும் வெறும் அணிவகுப்புதான் என்று வைத்துக்கொண்டாலும், அப்படி 'வெறும் அணிவகுப்பாக' தோற்றமளிக்க யார் காரணம்?

யார் காரணம் என்று சுட்டுவிரலை நீட்ட மாட்டார். ஏனென்றால் அவருடைய விரல் அவருக்குப் பிடித்த ஜெயலலிதாவை நோக்கி நீள வேண்டும். அன்றும், இன்றும், என்றும் இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் எதிர் பக்கத்திலேயே ஜெயலலிதா நிற்கிறார், நிற்பார். அம்மாவைத் திட்ட மனமின்றி, புது அரசியல்வாதி விஜயகாந்த்தை திட்டவும் மனமின்றி மீண்டும் கருணாநிதியின் மேலேயே பாய்கிறார். ஜெவும், விஜயகாந்தும் மனித சங்கிலிக்கு வரவேண்டாம், ஆனால் குறைந்தபட்சம் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தங்கள் கைத்தடிகளையாவது அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. ஏன் என்று கேட்டு குட்டவும் ஞாநிக்கு மனமில்லை.

குமுதம் தலையங்கத்திலும் இதே வழவழாதான். 'இலங்கை அரசுக்கு இதுவரை பல உதவிகளைச் செய்திருக்கிற மத்திய அரசு, இனியாவது அதை அடியோடு நிறுத்தி அங்குள்ள தமிழர்களின் எதிர்காலம் குறித்து உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்' என்று சில வரிகள் உள்ளன. "உரிய நடவடிக்கை" என்றால் என்ன? அதற்கு குமுதம் பதில் சொல்லுமா? இல்லை ஞாநி தனியே பதில் சொல்வாரா?

ஞாநி அதற்கும் முயற்சித்திருக்கிறார். 'போரை விட்டு விட்டு ஜனநாயகத்திற்கு வாருங்கள்' என்று பிரபாகரனுக்கு கோரிக்கை வைக்கிறார். சபாஷ்! சரியான குள்ள நரி சிந்தனை! 'இந்தியாவை தலையிடு' என்று சொன்னால் அது 'போர் நிறுத்ததிற்கு வலியுறுத்துவதற்காகத்தான்' இருக்க முடியும். அப்படிச் செய்தால் அது சூழ்நிலை காரணமாக புலிகள் ஆதரவாகத்தான்' இருக்க முடியும். ஆனால் அப்படி வெளிப்படையாக சொல்ல முடியாது என்பதால் பிரபாகரனை போரை நிறுத்திவிட்டு வந்து 'மகாபலிபுரத்தில் நடனம்' பார்க்கச் சொல்கிறார். ரஜினி கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டதற்கே தமிழினத் துரோகி என்று கடிதம் எழுதிய ஞாநி, பிரபாகரனை சிங்கள அடக்குமுறைக்கு எதிராக போரை நிறுத்திவிட்டு வாருங்கள் என்று கூசாமல் சொல்கிறார். இந்தியாவை போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்த திராணியின்றி, ஜெயலலிதா வகையறாக்களுடன் சேர்ந்துகொண்டு, பிரபாகரனை நிறுத்தச் சொல் என்கிறார். யார் துரோகி?

பிரபாகரனின் இராணுவ நடவடிக்கைகளை விட ஜெயலலிதா, கருணாநிதியின் ஊழல் அரசாங்கள் மக்களுக்கு அதிகம் பலனளித்திருக்கிறதாம். மிஸ்டர் ஞாநி, அடிப்படையை மறந்துவிட்டார். தமிழ்நாடு என்பது சுதந்திர பூமி. இங்கு வடிவேலு முதலமைச்சரானால் கூட, மக்கள் எப்படியோ வாழ்ந்து கொள்வார்கள். ஆனால் ஈழம் என்பது, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் கொடுமை. தற்போது நடந்துகொண்டிருப்பது அந்தக் கொடுமைக்கெதிரான கடைசி யுத்தம். யுத்தத்தை நிறுத்த இந்தியாவால் முடியும். ஆனால் பிரபாகரனால் முடியாது. பாலியல் கொடுமை வழக்கில் ஜெயிலுக்குப் போன நடிகனுக்கு கூட இந்த வரலாற்று உண்மை தெரியும். ஞாநியும் இதெல்லாம் தெரியாத முட்டாள் அல்ல.

அவரே கூறியிருப்பது போல மெய்யான மனிதச் சங்கிலி என்பது கைகளை இணைப்பது அல்ல, மனங்களை இணைப்பதுதான் என்றால், முதற்கட்டமாக அவர் தமிழகத்தின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்கு வைத்திருக்கும் ஜெ, மற்றும் விஜயகாந்தின் மனதை மாற்ற முயற்சிக்க வேண்டும். அவர்களையும் இணைந்து குரல் கொடுக்கச் சொல்ல வேண்டும். செய்வாரா?

செய்யமாட்டார் என்பதால் ஞாநிக்கு 2011 குட்டுகள் பரிசளிக்க முடிவு செய்திருக்கிறேன். ஞாநி தன்னைத்தானே குட்டிக் கொள்ள முடியாது என்பதால், இதைப் படிக்கும் நண்பர்கள் அனைவரும் அன்பாக ஞாநியின் தலையில் ஒரே ஒரு குட்டு குட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். முதல் குட்டு என்னுடையது 'டங்'. நிறைய குட்ட வேண்டும் போலிருந்தால் ஜெயலலிதா மற்றும் விஜயகாந்தின் தலையில் குட்டுமாறு வேண்டுகிறேன். மேக்கப் போடுவதற்க்காக ஜெயலலிதா மற்றும் விஜயகாந்திற்கு கண்ணாடி பார்க்கும் பழக்கம் உண்டு. எனவே ஒவ்வொரு முறை கண்ணாடியை பார்க்கும்போதும், தலையை தடவும்போதும், உண்மையான தமிழ் மக்கள் குட்டிய இடம் வலிக்கும் உணர்ச்சி ஏற்படும். வலி கோபமாகி 'என்ன ஞாநி இது? எல்லாம் உன்னாலதான?' என்று அவர்கள் எகிறும் நிலை வரும்.

Wednesday, October 22, 2008

ல.ச.ரா : வாழ்க்கையே ஒரு பேத்தல்

"நீங்க எப்படி சார் டீச்சிங் கத்துக்கிட்டீங்க?"
"டீச்சிங் பண்ணித்தான்"

இவைதான் என்னுடைய வகுப்புகளில் அவ்வப்போது கேட்கப்படும் கேள்வியும், நான் எப்போதும் சொல்லும் பதிலும்.

Learn by teaching என்பது என்னுடைய கல்வி கற்கும் முறையாக இருந்துவருகிறது. இப்போது நான் வலைப்பூக்களில் பல விஷயங்களை எழுதுவற்க்கான காரணம், அவை எனக்கு தெரிந்திருப்பதால் மட்டுமல்ல, தெரிந்துகொள்வதற்க்காகவும்தான்.

ஒரு விஷயத்தைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்திராமல் அது பற்றி எழுதலாமா? வகுப்பறையில் மாணவர்களுக்குச் சொல்லலாமா?

இதற்கு நான் பதில் எழுதி அதை படிப்பதை விட சாகித்ய அகாடமி விருது பெற்ற போது, 1990ல் லா.ச.ரா ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியை படியுங்கள்.

உங்க எழுத்துக்கள் புரியாத தன்மை (Obscurity) கொண்டவை என்று பேசப்படுவது பற்றி?
"லா.ச.ரா. புக்ஸ் நான் படிச்சேன். அது புரியலை" என்று சொல்லிக்கொள்வது ஃபாஷனா போச்சு. என் எழுத்துக்கள் புரியாதுன்னு இவா புரிஞ்சுண்டாளாம். நான் உங்களை ஒண்ணு கேக்கறேன். எழுத்தாளன் எழுதும்போது எல்லாத்தையும் புரிஞ்சுண்டுதான் எழுதறானா என்ன? எழுதணும்னு ஆர்வமும், வேகமும் இருக்கு. இருக்கறதைக் கொட்டிடறோம். எழுதறவனுக்கே நிறைய விஷயம் புரியறதில்லை. அதே மாதிரிதான் படிக்கறவனுக்கும்.

இன்னைக்குப் புரியாததது, நாளைக்குப் புரியலாம். நாளைக்குப் புரியாதது, நாளை மறுநாள் புரியலாம். என்றைக்காவது ஒருநாள் கட்டயாம் புரிந்துபோகும்! அப்படியே புரியாவிட்டால் தான் என்ன? வாழ்க்கையே ஒரு பேத்தல் தானே!

நன்றி : ஆனந்தவிகடன், 14.1.90

கேள்வியில் உள்ள Obscurity என்ற வார்த்தைக்கு அகராதியில் அர்த்தம் தேடியபோது, Deficiency or absence of light, darkness, condition of being unknown, being unclear or hard to understand என்று பல அர்த்தங்கள் காணப்பட்டன.

ஒரு வார்த்தைக்கே இத்தனை அர்த்தங்கள் இருக்கும்போது, ஒரு வாழ்க்கைக்கு எத்தனையோ அர்த்தங்கள் இருக்கக்கூடும். அதில் ஒரு அர்த்தம், ல.சா.ரா கூறியதுபோல 'வாழ்க்கை என்பது ஒரு பேத்தல்'

என்னைப் பொறுத்தவரையில் கற்றதும் கற்பதும்தான் வாழ்க்கை. அதனால் எனக்கு Learn by teach வசதியாக இருக்கிறது.

Monday, October 20, 2008

பாவம் பாதசாரிகள்

வயசு மற்றும் பராமரிப்பின்மை காரணமாக என்னுடைய ஹீரோ ஹோண்டா சிடி 100, ஸ்டார்ட் ஆக மறுத்துவிட்டது. அதனால் நடந்தே ஆபீஸ் கிளம்பினேன். வீட்டிலிருந்து திருவள்ளுவர் சாலையை தொட்டதுமே, பாம்..பாம் என்று ஒரு மணல் லாரி என்னை மிரட்டி ஒதுக்கியது. மாட்டுச் சாணம் மற்றும் மழைச் சேருக்குப் பயந்து துள்ளிக் குதித்ததில் ஒரு குட்டிக் கருங்கல் செருப்பை மீறிக் காலைக் குத்தியது.

"என்னடா இது ஆரம்பமே இவ்வளவு கஷ்டமா இருக்கு. லேட்டானா கூட பரவாயில்லை, பேசாம திரும்பப் போய் பைக்கை சரி பண்ணிட்டு மெதுவா போகலாமா?"

"நோ! ஐ வாண்ட் யு ஹியர் ரைட் நெள", காதில் ஹெட் செட்டுடன் ஒரு மொபைல் பெண் என் மேல் மோதிக் கொண்டாள். அடடா ஒரு பெண்ணை இடித்துவிட்டோமே என்று நான் பதறிப் போனேன். அவளோ என் மேல் மோதிக்கொண்ட எந்த சொரணையுமின்றி "மீட் மி அட் சிக்ஸ்" என்று எவனுடனோ மொபைலிக் கொண்டே சென்றாள்.

"ஹலோ கண்ணாடிகாரரே சீக்கிரம் கிராஸ் பண்ணுங்க", இது ஆழ்வார் திருநகர் ஜங்ஷன் போலீஸ்காரர். நான் பரபரவென ஓடினேன். கூடவே ஒரு வயதான தாத்தா மற்றும் சில ஆபீஸ் பெண்மணிகள் ஆபீஸ் கைப்பைகளுடன் ஒரு ரேஸ் போல ஓடிக் கடந்தார்கள். ஆனால் போலீஸ் காரரின் ஸ்டாப் கையை பற்றி எந்தக் கவலையே இல்லாமல் ஒரு ஆட்டோ எங்களுக்கிடையே புகுந்து, நான், தாத்தா, அந்தப் பெண்மணிகள் என அனைவரையும் ஆளுக்கொரு திசையில் துரத்திவிட்டது. "ஓய்" என்று யாரோ கத்தினார்கள். அதற்குள் ஆட்டோ பறந்த திசையை பஸ்களும், மோட்டர் பைக்குகளும் நிறைத்துக் கொண்டன.

என்னுடைய வீடு இருக்கும் ஆழ்வார் திருநகரிலிருந்து வடபழனி 3 கிலோ மீட்டர். சத்யா கார்டன் 2 கிலோ மீட்டர்தான். 80களில் நடந்துபோய்தான் ஆவிச்சி ஸ்கூலில் பத்தாவது படித்தேன். இரண்டு மணி நேரத்திற்கொரு பஸ் வரும். எப்போதாவது கோடம்பாக்க சினிமாக்காரர்களின் வெள்ளைக் கலர் அம்பாசிடர் கார்கள் ஆற்காடு சாலையை கடக்கும்.

அப்போதும் நடைபாதை கிடையாது. இப்போதும் நடைபாதை கிடையாது. இதுதான் 20 வருடங்களில் மாறாது இருக்கும் ஒரே விஷயம்.

தற்போது இரவு 2 மணி ஆனாலும் பஸ்களும், கார்களும் பறக்கின்றன. தெருவை இலகுவில் கடக்க முடிவதில்லை. குறைந்த பட்சம் மோட்டர் சைக்கிள் தேவைப்படுகிறது. சைக்கிளில் செல்வது கூட ரிஸ்க் தான். நடந்து செல்பவர்களுக்குத்தான் துளியும் பாதுகாப்பு கிடையாது.

போரூரிலிருந்து வடபழனிவரையிலும், பாதசாரிகளுக்கென பிளாட்பாரம் எங்குமே கிடையாது. நடந்து செல்லும், நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகளும், அவர்தம் தாய்மார்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் பள்ளிக்குச் சென்று வருகிறார்கள். பஸ், ஆட்டோ, கார், மோட்டர் பைக் என அத்தனை வாகனங்களும் ஹார்ன் அடித்தே பாதசாரிகளை பீதி அடைய வைக்கிறார்கள். வண்டிகளில் வரும் எவருக்கும் அரை வினாடி கூட காத்திருக்க பொறுமையில்லை.

அதுவும் வயதானவர்கள் சாலையைக் கடந்து உயிருடன் வந்துவிட்டால் அது அவர்கள் செய்த புண்ணியம்.

அதுவும் நேற்று மழைநாள். பள்ளம் எது? மேடு எது? எனத் தெரியவில்லை. அதற்குப் பயந்து, பிளாட்பாரம் இல்லாததால் நடுரோட்டில் நடக்கும் பயங்கரத்தை நேற்றுதான் உணர்ந்தேன். ஈவு இரக்கமின்றி வாகனக்காரர்கள் பாதசாரிகளை உரசியபடி ஓட்டுகிறார்கள். அதிர்ஷ்டமிருந்தால் நலமாக வீடு . . . இல்லையேல் . . .

சென்னை நகர் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது. புதுப்புது பாலங்கள். வாகன நெரிசலைக் குறைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பாலங்கள் வந்தவுடன் அந்தப் பகுதியில் இருந்த நடைபாதைகளும் காணாமல் போய்விட்டனவே? பாதசாரிகள் எங்கே நடப்பார்கள்?

சாலைகளில் பாதசாரிகள் நடப்பதற்கென ஒரு தனி சங்கமோ ஒரு இயக்கமோ இருந்தால் சொல்லுங்கள். சேர்ந்து கொடி பிடிக்க தயாராக இருக்கிறேன்.

"யோவ் ஓரம் போய்யா", என்று எவனோ ஒருவன் திட்டிய திட்டும், பஸ், லாரி என அத்தனை வாகனங்களும் வாரி இறைத்த சேரும் இன்னமும் என்னில் இருக்கின்றன. நாளை நான் நடந்து போகப்போவதில்லை. ஆனால் பலருக்கு நடப்பதைத் தவிர வேறு வழியில்லை. பாவம் அவர்கள்!

காதலில் (20 நாள் கழித்து) விழுந்தேன் : விமர்சனம்

பாரதிராஜா கண்களால் கைது செய்ய முடியாததை, பார்த்திபன் குடைக்குள் மழையாக்க முடியாததை, பி.வி. பிரசாத் காதலில் விழுந்து இம்ப்ரஸ் செய்திருக்கிறார்.

ஊர் அடங்கிய நடு இரவில், வீல் சேரில் சுனைநாவை வைத்து தள்ளிக் கொண்டு நகுல் ஓடுவதும், ஒரு கோஷ்டி துரத்துவதும், யூகிக்க முடியாத பெர்பெக்ட் ஓபனிங். தப்பித்து டிரெயினில் ஏறியதும், ஹீரோவும், ஹீரோயினும் கொஞ்சிக் கொள்ளும் சின்ன உரையாடல், படத்தின் சஸ்பென்சை இடைவேளை வரை யூகிக்க விடாமல் நீட்டிக்கிறது.

டி.டி.ஆராக வரும் லிவிங்ஸ்டன்தான் படம் பார்க்கும் நாம். ஓடும் இரயில் பிண்ணனியில் நகுல் அவருக்கு கதையைச் சொல்லச் சொல்ல படம் பார்க்கும் நாமும் காதலில் விழுகிறோம்.

சுநைனாவும், நகுலும் காதலில் விழும் ஆரம்பம் புதுசு. சுநைனா இளமையான நதியாவை ஞாபகப் படுத்துகிறார். அளவாக சிரித்து, அளவாக கவர்ச்சி காண்பித்து, நகுலுக்கு முத்தம் கொடுத்து விரசமில்லாத இளமையை அள்ளித் தெளித்திருக்கிறார்.

படத்தின் மிகப் பெரிய ஆச்சரியம் 'நகுல்'. 'பாய்ஸ்ல குண்டா வருவான்ல அவன்தான் இவன்', 'அவனா?' என்ற ஆச்சரியக் குரல்கள் தியேட்டரில் ஒலிக்கும்போதே படு யூத்தாக நம்ம மனசுக்குள் நாக்கு முக்க ஆட ஆரம்பித்துவிடுகிறார். சுறுசுறுப்பு, ஆக்சன், காதல் இதை எல்லாம் பார்த்தால் கல்லூரி இளசுகளின் அடுத்த போஸ்டர் பாய் நகுல்தான்.

கண்களால் கைதுசெய், குடைக்குள் மழை இந்த இரண்டின் (தோல்வியடைந்த) மையக் கருவும் காதலில் விழுந்தேன் மையக் கருவும் ஒன்றுதான். ஆனாலும் தைரியமாக மீண்டும் தொட்டு, தன்னுடைய ஸ்கிரீன் பிளே சாமர்த்தியத்தால் இயக்குனர் வென்றிருக்கிறார். அவருடைய சாமர்தியத்திற்கு படத்தின் ஓபனிங் ஒரு சான்று. லிவிங்ஸ்டன் கதை கேட்பதாக கதையை நகர்த்தி, நம்மையும் ஒரு கதை கேட்கும் மனநிலைக்குத் தள்ளியது இன்னொரு சான்று. குணாவும், காதல் கொண்டேனும் இயக்குனர் பி.வி.பிரசாத்தை வெகுவாக பாதித்திருக்கிறது.

ஆனாலும் நிச்சயம் பி.வி.பிரசாத் சரக்கு உள்ள இயக்குனர்தான். வெறும் பாதிப்பில் படமெடுக்கிற இயக்குனர் அல்ல. ஆங்காங்கே பழைய படங்களின் சாயல் இருந்தாலும், நறுக்கென்று ஸ்கிரீனில் கதை சொல்லும் வித்தை தெரிந்தவராக இருக்கிறார்.

நகுல் கடத்தி வந்திருப்பது தன் காதலியை அல்ல, ஒரு பிணத்தை என்பதை அறியும் போது லிவிங்ஸ்டனும் நாமும் அதிர்ந்து போகிறோம். நகுலை துரத்தி வந்தது ஏதோ கும்பல் அல்ல, போலீஸ் என்பது தெரிந்ததும், படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆனால் அதற்கப்புறம் புதுசாக ஹீரோயினின் சித்தப்பாவை வில்லனாக காட்டி, நகுலை பல கொலைகள் செய்ய வைத்து, திரையை இரத்தக் களறியாக்கியது ஏன்? படம் ஆரம்பத்தில் போணியாகமல் பெட்டிக்குள்ளே இருந்ததற்கு இந்த இரத்தமும் காரணமாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

யாருடைய நல்ல வேளையோ, நாக்கு முக்க ஹிட்டாகி, ரீ மிக்ஸ் ஆகி, ரீ ஷீட் ஆகி, சன் பிக்சர்ஸ் ஆகி, மதுரையில் பிரச்சனையாகி, படம் வெளியாகி ஹிட் ஆகிவிட்டது.

படத்தின் சைலண்ட் பெர்பாமர் ஹீரோயின் சுநைனா. படத்தின் இரண்டாம் பாதி முழுக்க பிணமாக நடிக்க எந்த நடிகையும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். ஆனால் தைரியமாக அந்த பாத்திரத்தை ஏற்று வெற்றிகரமாக நடித்ததற்க்காக அவருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் அதிரடியான பெர்பாமர், ஹீரோ நகுல். ஆடிப் பாடி, அழுது, உருகி, அடித்து, அடிவாங்கி, கொலை செய்து, ஒன்றுமே தெரியாமல் பாசாங்கு செய்து அசத்தல் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பை கொடுத்த விஜய் ஆன்டனிக்கு ஒரு சபாஷ்.

மிக முக்கியமாக ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். பின்னி எடுத்திருக்கிறார். சொல்லப்போனால் இவர் இன்னொரு ஹீரோ.

கடைசியாக இயக்குனர் பி.வி.பிரசாத். திறமைசாலி என்று நிருபித்திருக்கிறார்.

ஆனால் . . . நல்ல கதையாக எடுங்கள் பாஸ் ... எல்லா லாஜிக்குகளையும் மீறிக் கொண்டு, காதலியின் பிணத்தை தூக்கிக் கொண்டு ஓடுகின்ற மன நோயாளியின் கதையைச் சொல்வதால் யாருக்கு என்ன மெசேஜ் போய் சேருகின்றது என்று புரியவில்லை. மனதை சுண்டுகிற விதமாக படம் பிடிக்கத் தெரிந்திருக்கிற நீங்கள் அடுத்து படத்தில் நல்ல ஆரோக்யமான கதைக் களனை, நாயக நாயகிகளை தேரந்தெடுத்து வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

Sunday, October 12, 2008

இளையராஜாவின் இரசிகர்களுக்கு ஏ.ஆர்.இரகுமானின் பாடல்களை விட, ஏ.ஆர்.இரகுமான் மேல் ஏன் அதிக வெறுப்பு?

எம்.எஸ்.வி இரசிகர்களுக்கு இளையராஜாவை பிடிப்பதில்லை. நன்றாகக் கவனிக்கவும் இளையராஜாவைத்தான் பிடிப்பதில்லை, ஆனால் இளையராஜாவின் பாடல்களைப் பிடிக்கும். அதே போல இளையராஜா இரசிகர்களுக்கு ஏ.ஆர்.இரகுமானைப் பிடிப்பதில்லை, ஆனால் ஏ.ஆர்.இரகுமான் பாடல்களைப் பிடிக்கும்.

ஆனால் பிடிக்கும் என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

அதே போல கருணாநிதியின் உடன் பிறப்புகளுக்கு ஜெயலலிதாவை பிடிக்காது. ஆனால் 'மழை நீர் சேகரிப்பு' போன்ற திட்டங்கள் பிடிக்கும். அதுபோல ஜெயலலிதாவின் இரத்தத்தின் இரத்தங்களுக்கு கருணாநிதியை பிடிக்காது. ஆனால் 'இலவச டிவி மற்றும் ஒரு ரூபாய் அரிசி பிடிக்கும்"

ஆனால் பிடிக்கும் என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

உளவியல் ரீதியாக இதை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இளையராஜாவின் பாடல்கள் பிடிக்கும் என்பதால், இளையராஜாவையே பிடித்துப்போய்விடுவதில் பெரிய அதிசயமில்லை. ஆனால் இளையராஜாவை விட சினிமா மார்க்கெட்டில் ஏ.ஆர்.இரகுமான் அதிகம் எடுபடுகிறார் என்றதும் ஏன் எனக்கு ஏ.ஆர்.இரகுமானையே பிடிக்காமல் போய்விடுகிறது? முன்பு எம்.எஸ்.வியின் இரசிகர்கள் இளையராஜாவின் மேல் இப்படி ஒரு வெறுப்பு கொண்டிருந்தார்கள். இன்று இளையராஜாவின் இரசிகர்கள் ஏ.ஆர்.இரகுமான் மேல் அதே போல ஒரு வெறுப்பு வைத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் சரோஜா பட ஆடியோ ரிலீசுக்கு ஏ.ஆர்.இரகுமான்தான் சிறப்பு விருந்தினர். ஆனால் அதை ஒரு பெரிய அதிசயம் போல பரபரப்பாக்கினார்கள். காரணம் ஏ.ஆர்.இரகுமான் மற்றும் இளையராஜா இரசிகர்கள். யுவனை, ஒரு இசை அமைப்பாளராக மட்டும் பார்க்காமல், வணிக ரீதியாக ஏ.ஆர்.இரகுமானுக்கு இளையராஜாவின் சார்பில் ஒரு போட்டியாக சில இரசிகர்கள் வரித்திருக்கிறார்கள். அதுதான் அந்த பரபரப்பிற்கு காரணம். முன்பு ஒரு முறை ஏ.ஆர்.இரகுமானும், இளையராஜாவும் ஒரே மேடையில் முதன் முதலாக சந்தித்தபோதும், இதே பரபரப்பு நேர்ந்தது. அந்த மேடைக் காரணம் எனக்கு நினைவில்லை, ஆனால் குமுதம் போன்ற பத்திரிகைகள் அந்த மேடையில் ஏ.ஆர்.இரகுமான் இளையராஜாவிற்கு பரிசளித்த மோதிரத்திற்கு ஏதேதோ காரணம் கற்பிக்க முயன்ற அபத்தங்கள் ஞாபகம் இருக்கிறது. 80களில் 'ஓரம் போ ருக்குமணி வண்டி வருது' பாட்டிற்கு இளையராஜா அழைத்து, எம்.எஸ்.வி பாட மறுத்த போதும் இதே போல சலசலப்புகள் ஏற்பட்டன. மூச்சு விடக் கூட நேரமின்றி இளையராஜா பிஸியாக இருந்த கால கட்டத்தில், ஏதோ ஒரு படத்திற்கு எம்.எஸ்.வி அவருக்கு உதவி செய்ய நேர்ந்ததாக, இன்று வரை ஒரு உறுதி செய்யப்படாத ஒரு தகவலைக் கேள்விப்பட்டு, எம்.எஸ்.வியின் இரசிகர் ஒருவர் தன்னையே மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவமும் நடந்தது.

தற்போது விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை பிடிக்காதவர்களில் கணிசமான பேர், ரஜினி இரசிகர்கள்தான். காரணம், வணிக ரீதியாக ஏ.ஆர்.இரகுமான் இளையராஜாவை முந்தியது போல, ரஜினியை விஜயகாந்த் முந்திவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். அப்படி தனக்குப் பிடித்தவர்களை வேறொருவர் முந்திவிட்டதாக நினைக்கும் போது, அவர் மேல் தன்னையே அறியாமல் ஒரு வெறுப்பு வந்து அப்பிக் கொள்கிறது.

ஏ.ஆர்.இரகுமானை விடுங்கள், வணிக ரீதியாக இளையராஜாவை விட அவருடைய இளைய மகன் யுவனுக்கு டிமாண்ட் அதிகம். ஆனால் அவர் மேல் இளையராஜா இரசிகர்களுக்கு கோபமில்லை. ஏனென்றால் இளையராஜாவின் மேலிருக்கும் அசாத்திய இரசிப்பத் தன்மை காரணமாக, யுவனை சங்கர் ராஜாவையே இன்னொரு இளையராஜாவின் ஹிட் பாடலாகத்தான் பார்க்கிறார்கள். அதாவது ஏ.ஆர்.இரகுமானுக்கு இணையாக மார்க்கெட்டில் போட்டி போடக் கூடிய இன்னொரு பாடலாகப் பார்க்கிறார்கள்.

அதே போல ஏ.ஆர்.இரகுமான் வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் நுழைந்தபோது, அவரை எந்தக் கேள்வியும் கேட்காமல் அணைத்து ஏற்றுக் கொண்டவர்கள் எம்.எஸ்.வியின் இரசிகர்கள்தான். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை, வணிக ரீதியாக எம்.எஸ்.வியை முந்திய இளையராஜாவை, வெல்ல வந்தவர் ஏ.ஆர்.இரகுமான்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜனி-கமல் இரசிகர்கள் அனைவரும் இது போல இரசிப்புத் தன்மையைத் தாண்டிய விருப்பு வெறுப்புகளை உடையவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். அதே போல எம்.எஸ்.வி - இளையராஜா - ஏ.ஆர். இரகுமான் இரசிகர்களும் இருக்கிறார்கள்.

சொல்லப் போனால் நானும் அந்த இரசிகர்களில் ஒருவன்.

Saturday, October 11, 2008

இயற்கை அவஸ்தைகள்! நமது மாநகர்களின் இன்னொரு பக்கம்

ஸ்பென்சர் பிளாசா வந்திருந்த புதிது. சென்னை கே.கே.நகரில் ஏதோ ஒரு பின்னிரவில் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
"மெட்ராஸ் அமர்க்களமா மாறிகிட்டிருக்கில்ல?", இது நான்.

"மண்ணாங்கட்டி! அவசரமா ஒன் பாத் ரூம் வந்தா, ஒதுங்கறதுக்கு இடமில்ல. மவுண்ட்ரோடுல சாந்தி தியேட்டர்ல இருந்து சஃபையர் வரைக்கும் ஒரு பத்து மூத்திர சந்து இருக்கு. ஆனா ஒரு பப்ளிக் டாய்லெட் கிடையாது. இதுக்குப் பேரு சிட்டியா?", பல்லைக் கடித்துக்கொண்டு பயங்கர கோபத்துடன் பேசியது, நண்பர் ஆந்தைக் குமார் (அப்போதைய ஜீ.வி. ஆந்தையார்)

"அட ஆமா, போனவாரம் கூட நான் இப்படித்தான் அவசரமா . . .", என இன்னொரு நண்பர் தன் ஒன் பாத்ரூம் அவஸ்தையை விவரிக்க . . . ஆந்தைக் குமார் குறுக்கிட்டு,
"உங்க கதையை விடுங்க, எத்தனை பொம்பளைங்க இந்த மாதிரி சிட்டிக்குள்ள அவஸ்தைப் படறாங்க தெரியுமா? நீயாவது ஏதாவது சந்துக்குள்ள புகுந்திடுவ, பொம்பளைங்க என்னய்யா செய்வாங்க? ஏதோ ஸ்பென்சர் பிளாஸா அது இதுன்னு அலட்டறீங்களே... அதுல எத்தனை டாய்லெட் இருக்குன்னு சொல்லுங்க.. அப்புறம் சொல்றேன் அது அலட்டலா? குமட்டலான்னு?"

ஆந்தைக் குமாரின் அதே நியாயமான கோபத்தை, சென்ற வார ஆனந்த விகடனில் தீதும் நன்றும் பகுதியில் நாஞ்சில் நாடன் வெளிப்படுத்தியிருந்தார். அவர் தொட்டிருந்தது இன்னொரு சென்சிடிவ் ஏரியா. பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் இயற்கை உபாதை அவஸ்தைகளை கோபமும் வலியும் கலந்து எழுதியிருந்தார். ஆண்கள் ஏதோ ஒரு நிறுத்தத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். ஆனால் பெண்கள்? காட்டு வழியில் இருளில் பஸ்ஸை நிறுத்தி லைட்டை அணைத்து, பெண்களின் இயற்கை அவசரங்களை கழிக்க நேரும் அவலமான, அபாயமான தருணங்களை நாஞ்சில் நாடன் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

பஸ் பயணத்தில் வாந்தியைக் கட்டுப்படுத்த, மாதவிலக்கை தள்ளிப் போட மாத்திரைகள் உண்டு. அதே போல மூத்திரத்தை கட்டுப்படுத்த மாத்திரைகள் கண்டு பிடிப்பதைப் பற்றி மருந்து கம்பெனிகள் சிந்திக்கலாம் என்று அவர் யோசனை சொல்லியிருந்தார்.

ஆனால் மருந்துக் கம்பெனிகளை நாடுவதை விட, எதிர் வரும் தேர்தல்களில் அனைத்துக் கட்சிகளையும் (வாக்குச் சீட்டு வழியாக) முகத்தில் குத்தி இந்த 'இயற்கை உபாதை பிரச்சனையை' பற்றி ஒரு தீர்வு சொல்லச் சொல்லலாம்.

ஆனந்த விகடன் மூலமாக இந்த பிரச்சனை பற்றி பலரும் சீரியஸாக சிந்திக்க வைத்ததற்க்காக நாஞ்சில் நாடனுக்கு நன்றி!

அப்புறம் . . .
(ஆந்தை) குமார் தற்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

Friday, October 10, 2008

தமிழகத் தேர்தலின் கருப்பு குதிரைகள்

பொதுவாக தமிழக அரசியல் என்பது, கருணாநிதியை எதிர்க்கும் அல்லது ஆதரிக்கும் அரசியல். அதனால் தேர்தலை பொருத்தவரை அனைத்துக் கட்சிகளுமே கூட்டணி விஷயத்தில் கருப்பு ஆடுகள்தான். ஜெயிப்பது மட்டுமே குறிக்கோள் என்பதால், எல்லா அசிங்கங்களும் தேர்தல் நேரத்தில் நடக்கத்தான் செய்யும்.

தற்போதைய நிலவரப்படி விஜயகாந்த் எந்தக் கழகத்துடன் இணைந்தாலும், எதிர் கழகம் காலி. தனியாக நின்றால் விஜயகாந்த் காலி.

தி.மு.க
தற்போது DMK is in back foot. ஷாக் அடிக்கும் மின்சாரப் பிரச்சனையும், மதுரையிலிருந்து கொண்டு அதிரவைக்கும் அழகிரியும், தி.மு.கவின் தனிப்பெரும் மைனஸ் பாயிண்டுகள். எதிர்க்கட்சிகளை விட மோசமாக ஆளும்கட்சியை தாக்கும் விவகாரங்கள் இவை. ஆனால் ஸ்டாலின் சத்தம் போடாமல் மக்களை சந்தித்துக்கொண்டிருக்கிறார். சொல்லப்போனால் அவர் மேல் குற்றச்சாட்டுகளே இல்லை. உள்ளாட்சித் துறையை கையில் வைத்துக்கொண்டு படு வேகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். வேண்டுமென்றே மீடியா வெளிச்சங்களைத் தவிர்க்கிறாரா அல்லது மீடியா வெளிச்சத்தை தன் மேல் விழ வைக்கத் தெரியாமல் தவிக்கிறாரா? என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. தி.மு.கவின் ஒரே பிளஸ் தற்போது அவருடைய செயல்பாடுகள்தான்.

அ.தி.மு.க
விஜயகாந்த், இளைய எம்.ஜி.ஆர் பக்தர்களை கவர்ந்துவிட்டதில், அம்மா கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார். கட்சியின் பலம் பலவீனம் இரண்டுமே ஜெயலலிதாதான். அவர், ஆக்டிவ் பாலிடிக்ஸிலிருந்து கிட்டத்தட்ட 4 மாதங்கள் தொடர் ரெஸ்டில் இருந்ததும், சட்டசபையை தவிர்த்ததும், அக்கட்சியின் மிகப் பெரிய மைனஸ். அந்த இடைவெளியில் விஜயகாந்தும், ராமதாசும் ஸ்கோர் பண்ணிவிட்டார்கள். ஆனால் வீட்டுக்குள் சாக்கடை அடைத்த பிரச்சனைக்கு கூட (சன் டிவி உதவியுடன்) தொடர் போராட்டங்களை நடத்தி கட்சியை லைம் லைட்டில் வைத்திருந்தார். ஆரம்பத்திலும் இப்போதும் கிண்டல் செய்யப்படுகின்ற சமாச்சாரம் இது. ஆனால் இதை மிகப்பெரிய பிளஸ்ஆக நான் நினைக்கிறேன். தேர்தல் நெருக்கத்தில் அந்த துக்கடா போராட்டங்கள், கணிசமான வாக்குகளை பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்.

தே.மு.தி.க
விஜயகாந்த்தை தவிர வேறு யாரையுமே மக்களுக்கு தெரியாது. விஜயகாந்த்தான் மீடியாக்களின் புதிய டார்லிங். கருணாநதி எதிர்ப்பு பாலிடிக்ஸில் முன்பு ஜெயலலிதாவை சுற்றி வந்த டிவி மைக்குகளும், தினசரி பேனாக்களும், தற்போது விஜயகாந்த் பக்கம் வந்துவிட்டன. அவரும் சளைக்காமல் மீடியாக்களுக்கு நொறுக்குத் தீனி போட்டுக் கொண்டே இருக்கிறார். இதுதான் தே.மு.தி.கவின் பிளஸ். தன்னுடைய எதிரிகள் என்று தி.மு.வையும், அ.தி.மு.கவையும் கை காட்டிவிட்டார். ஆனால் நண்பர்கள் யார் என்று அவரால் யாரையும் கை காட்ட முடியவில்லை. யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொல்லிச் சொல்லியே வளர்ந்துவிட்டதால், நண்பர்களாக யாரை எப்படி தேர்ந்தெடுத்து கூட்டணி வைப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார். மீடியாக்கள் அவருடைய குழப்பத்தை மறைத்து வைத்தாலும், இதுதான் அவருடைய பெரிய மைனஸ்.

கூட்டணி எதுவாக இருந்தாலும், உள்துறை அமைச்சராக ஸ்டாலினின் ஆர்ப்பாட்டமில்லாத பெர்ஃபாமன்சும், அ.தி.மு.கவின் சின்சியரான வார்டு லெவல் போராட்டங்களும், விஜயகாந்தின் 'தில்லான ஆள்' என்கிற அதிரடி கவர்ச்சியும், தமிழகத் தேர்தலின் கருப்பு குதிரைகள். இந்த மூன்று குதிரைகளும்தான் கடைசி நேரத்தில் வாக்காளரை எந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்க வைக்கப் போகின்றன.

Thursday, October 9, 2008

வணக்கம் கேப்டன்!

எனக்கு கபில்தேவை மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எந்த புரொமோட்டரும் இல்லாமல், லாபி செய்ய ஆளில்லாமல் வெறும் திறமையால் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான தலைவனாக திகழ்ந்த ஒரே வீரன் கபில்தேவ்.

இந்திய கிராமத்து இளைஞனுக்கே உரிய 'வெள்ளேந்தியான போராடும் குணம்' கபில் தேவின் குணம். கபிலை பொறுத்தவரை, ஜெயிப்பதை விட தொடரந்து போராடுவதுதான் முக்கியம். 1983ல் புரொடன்ஷியல் கப்பில் ஜிம்பாப்வேவிற்கு எதிராக 175 ரன்கள் குவித்ததது கபிலின் அசாத்திய போராட்ட குணத்திற்கு கிடைத்த வெற்றி. பிறிதொரு சந்தர்ப்பத்தில் இங்கிலாந்திற்கு எதிராக 15 ரன்கள் எடுத்தால் ஃபாலோ ஆனை தவிர்க்கலாம் என்ற நிலை. கபில் அசரவில்லை. தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை விளாசித் தள்ளினார்.

அவருடைய ஐ.சி.எல், அவரைப் போன்ற முத்துக்களை கண்டெடுக்கும் முயற்சி. வாய்ப்பு கிடைக்காமல் முடங்கிக் கிடக்கும் எத்தனையோ இளைய கிரிக்கெட் திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே ஐசிஎல் உதயத்திற்கு காரணம் என்று கபில் பிரகடனம் செய்தார். சொன்னபடி செய்தார். லொட்டு லொட்டு என்று கிழட்டு நடை பயின்று கொண்டிருந்த கிரிக்கெட்டுக்கு 20-20 வடிவம் கொடுத்து புத்துயிர் பெறவைத்தார். சாதாரண கிளப் போட்டிகளிலும், லீக் போட்டிகளிலும் மின்னிக் கொண்டிருந்த இளம் நட்சத்திரங்களை, இன்டர்நேஷனல் நட்சத்திரங்களுடன் விளையாட விட்டு, மாற்று இந்திய அணியை உருவாக்கும் அளவிற்கு புதுத்திறமைகளை அடையாளம் காட்டினார்.

உலகமே அதிசயித்தது. ஆனால் இந்திய கிரிக்கெட்போர்டுக்கு மட்டும் வயிறெறிந்தது. கபிலை நிராகரித்தது மட்டுமல்லாமல், ஐசிஎல் போட்டி நடத்த முடியாதபடி, அனைத்து விளையாட்டு மைதானங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கபில் அசரவில்லை. மேலும் வேகமெடுத்தார். சாதாரண கிளப் மைதானங்களில், சர்வதேச தரத்தில் போட்டிகளை நடத்தி வெற்றி கண்டார். ஐசிஎல்லின் வெற்றியைக் கண்டதும், பதிலுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு பணத்தை வாரியிறைத்து ஐபிஎல்லை ஆரம்பித்தது. கிரிக்கெட்டையும், சினிமாவையும் கலந்து கவர்ச்சிகரமான பிரமாண்ட வெற்றி பெற்றது ஐபிஎல்.

இனி ஐசிஎல் அவ்வளவுதான் என்றார்கள். கபில் என்பவன் ஒரு போராட்ட வீரன். அவ்வளவு எளிதில் தோற்கடிக்க முடியாது. இதோ ஐசிஎல்லின் சீஸன் 2 தொடங்கிவிட்டது. "ICL is better in cricket but IPL was better in marketing,"என்று கபில் ஓபன் ஸ்டேட்மெண்ட் விடுத்தார். ஐபிஎல்லின் வெற்றியை மறுக்கவில்லை. சுத்தமான வீரன் எப்போதும் எதிராளியை குறைத்து மதிப்பிட மாட்டான். அதே போல மேலும் சிறப்பான மார்கெட்டிங் உத்திகளுடன் ஐசிஎல் சீஸன் 2ஐ கபில் துவக்கிவிட்டார்.

கிரிக்கெட்டை பொறுத்தவரை, ஒரு பந்தில் 6 ரன்கள் தான் அதிக பட்ச ரன்கள். ஆனால் இனி 9 ரன்கள் அதாவது "Niners" ஆட்டத்தின் விறுவிறுப்பை மேலும் அதிகப் படுத்தும். அதே போல கால்பந்து விளையாட்டில் இருப்பது போல "sky camera"க்கள் மேலும் உற்சாகமான அனுபவத்தை தரும். ஐசிஎல் சீஸன் 2ல் இதுபோன்ற கிரிக்கெட் சுவாரசியங்களுக்கு பஞ்சம் இல்லை.

கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியங்கள் ஐசிஎல்லை ஆதரிப்பதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளன. ஐசிசி எனப்படும் உலக கிரிக்கெட் வாரியமும் தற்போது ஐசிஎல்லை செவி மடுக்க ஆரம்பித்துள்ளது.

சென்ற முறை விளையாட மைதானங்களே இல்லாமல் தடுமாறிய ஐசிஎல் இம்முறை 50 கோடி ரூபாய் செலவில் அகமதாபாத்தில் ஒர விளையாட்டு மைதானத்தையே வாங்கி, சர்வதேச தரத்திற்கு மாற்றி விளையாடத் தயாராகிவிட்டது.

1983 உலகக் கோப்பை வெற்றியின் மூலம், இந்திய கிரிக்கெட்டிற்கு பெரிய அண்ணன் இமேஜை பெற்றுத் தந்தார் கபில். தற்போது ஐசிஎல்லின் ஆக்கமும் வளர்ச்சியும் உலக கிரிக்கெட்டையே மாற்றி யோசிக்க வைத்துள்ளது.

கபில் தேவின் இறக்கமும் ஏற்றமும், ஆர்வமும் போராட்ட குணங்களும் முன்னேற விரும்பும் ஒவ்வொரு இந்திய இளைஞனுக்கும் பாடம்.

அதனால்தான் இந்திய இராணுவம் கபிலுக்கு கெளரவ லெப்டினன்ட் கர்னல் பட்டம் கொடுத்து கெளரவித்துள்ளது. அந்த பதக்கத்தை நெஞ்சில் ஏந்தும் போது கபிலின் முகத்தில் தெறித்த உணர்ச்சிகள் அனைத்து இந்திய இளைஞனுக்கும் நாட்டுக்காக போராடும் துணிவையும், ஆர்வத்தையும் தரும்.

சல்யூட் கேப்டன் கபில்தேவ்!

Tuesday, October 7, 2008

பார்வையற்றோர் தாஜ்மகாலை பார்க்க முடியுமா?

புது தில்லி பயணம். சென்ட்ரல் ஸ்டேஷன் பத்தாவது பிளாட்பாரத்தில் நின்றிருந்த ஜி.டி.யில் ஏறி அமர்ந்தேன். தண்ணீர் பாட்டில்கள் வந்திருக்காத 15 வருடங்களுக்கு முன், தாகத்துக்கு வாட்டர் பேகைத் திறந்தேன். ஏதோ ஒரு கவனக் குறைவில் பக்கத்து சீட்டுக்காரரின் மேல், தண்ணீர் சிதறிவிட்டது.

"ரொம்ப ஸாரி ... தெரியாம . . . அட சார் நீங்களா?"
"ஓ... செல்வக்குமாரா? எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன் சார். ஒரு சாஃப்ட்வேர் விஷயமா டெல்லி போயாகணும் அதான் இந்த டிரெயினைப் பிடிச்சேன்"
"நாங்க 20 பேர் டூர் போயிட்டு இருக்கோம்"
"டூரா? டெல்லியில எங்க?"
"நாங்க ஆக்ரா போறோம். ரெண்டு நாள் தங்கி ஆசை தீர தாஜ்மகாலை தரிசிக்கப் போறோம்"
"தாஜ்மகாலை பார்க்கப் போறீங்களா?", அதிர்ச்சியில் எனக்கு பேச்சே வரவில்லை.

அவர்கள் தாஜ்மகாலை பார்க்கப்போனால் எனக்கென்ன அதிர்ச்சி என்கிறீர்களா? விஷயம் தெரிந்தால் நீங்களும் அதிர்ச்சியடைவீர்கள்.

அவர்கள் அனைவரும் பார்வையிழந்தோர்.

அவர்கள் தாஜ்மகாலைப் பார்க்க தாஜ்மகால் வரை செல்ல வேண்டியதில்லை. அவர்கள் திரும்பும் திசை எல்லாம் தாஜ்மகால் தான்.
நீங்களும் நானும் தாஜ்மகாலை குறைந்த பட்சம் ஒரு போட்டோவிலாவது பார்த்திருப்போம். அழகில் மனதை பறிகொடுத்திருப்போம். அதனால் தாஜ்மகாலை நேரில் பார்க்க ஆவல் வருவது இயல்பானது. ஆனால் பிறவியிலேயே பார்வையிழந்த அவர்கள், வெளிச்சத்தையே பார்த்திராத அவர்கள், அழகு என்று எதைச் சொல்கிறார்கள்? தாஜ்மகால் என்று இருள் சூழ்ந்த விழிகளுக்குள் எதைக் காண்பார்கள்?

பார்வையில்லாத அவர்களால் தாஜ்மகாலை பார்க்க முடியுமா?
முடியும் என்று நான் நம்புகிறேன்.
இசையை எழுத்தால் எழுத முடியும் என்றால், வண்ணங்களை காற்றில் உணர முடியும்.
மொழி திரைப்படத்தில், காது கேளாத ஜோதிகா, பிருத்விராஜின் இசைப்பின்னல்களை வெறும் அதிர்வுகளால் உணர்கின்ற அற்புதமான காட்சி வரும். அந்தக் காட்சியுடன், இந்தப் பார்வையற்ற நண்பர்கள் தாஜ்மகாலை பார்த்து இரசிப்பதாகப் பொருத்திப் பாருங்கள். ஒரு வேளை நீங்களும் நானும் பார்வைக்குப் பதிலாக, ஒரு பரவச அதிர்வை உணர நேரிடலாம்.

பார்வையற்ற அந்த நண்பர்களை "Psychological problems of the blinds" என்கிற ஒரு சிம்போசியத்தில் நான் முதன் முதலில் சந்திக்க நேர்ந்தது. திரு. ருத்ரன் அவர்கள் தலைமையில் நடந்த அந்த நிகழ்வில், நான் தான் தொகுப்பாளர்.

டெல்லி டிரெயினில் நான் தண்ணீர் சிந்திய அந்த நண்பர்தான் முதலில் மேடை ஏறியவர். பிறவியிலேயே பார்வையின்றி பிறந்த அவர், எனது குரலை வைத்தே "மாநிறம் உள்ள நீங்கள் உயரமானவர் அல்ல, சராசரி உயரம்தான்." என்று கூறி என்னையும் பார்வையாளர்களையும் ஆச்சரியப்படுத்தினார்.

அதைவிட பெரிய ஆச்சரியம், பார்வையற்ற அவர் தலைமையில் 20 பார்வையற்றவர்கள் தாஜ்மகாலைப் பார்க்க கிளம்பியது. அந்த ஆச்சரியத்துடன், விடை தெரியாத கேள்விகளுடன், நான் சந்தித்த நபர்களும், கிடைத்த அனுபவங்களும் தனிக்கதை. அதை பின்னர் எழுதுகிறேன். ஆனால் முடிவில் ஒன்று உணர்ந்து கொண்டேன். அது . . .

பார்வை என்பது கண்களில் இல்லை!

Saturday, October 4, 2008

குமுதம் - நல்ல பத்திரிகைக்கான தகுதியை இழந்துவிட்டது

தற்கால இளைஞர்களின் கிளர்ச்சிப் போக்கு ஒரு நோயின் அறிகுறியா? அல்லது அதுவே ஒரு நோயா?

இந்தக் கேள்வி 20 வருடங்களுக்கு முன்னால் கேட்கப்பட்ட கேள்வி! கேள்வி கேட்டவர் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி. இன்று அவர் நம்மிடையே இல்லை. ஆனால் அந்தக் கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது, எந்தப் பதில்களும் இல்லாமல்.

இரவிலும் வேலை, வழிய வழிய பணம், வீக் எண்ட் பார்ட்டி, லிவிங் டு கெதர், லேட்டஸ்ட் கார், டிரிபிள் பெட் ரூம் ஃபிளாட் என இந்திய இளைஞர்கள் தற்போது ஒரு வித கிளர்ச்சியில் இருக்கிறார்கள்.

"இளைஞர் கிளர்ச்சிப் போக்கு என்பது நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தலைவிரித்தாடுகின்றன. அவற்றை விளக்குவது கூட வியாதி பரப்புகிற முறை என்று நான் அறிந்திருப்பதனால் அதனை விவரிக்காமல் தவிர்க்கிறேன்."

20 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி எழுதியிருப்பது வேறு யாருமல்ல, நமது ஜெயகாந்தன். அவருடைய எழுத்து எவ்வளவு பொறுப்புடனும், அக்கறையுடனும் இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். "ஓர் ஆன்மீக ஆய்வுக்கு முன்னால் . . ." என்ற கட்டுரையில் அவ்வாறு எழுதியுள்ளார். என்னுடைய ஞாபகம் சரி என்றால், அந்தக் கட்டுரை 20 வருடங்களுக்கு முன்னால் குமுதத்தில் வெளிவந்தது.

ஆனால் இவ்வளவு பொறுப்புள்ள எழுத்துக்களையும், எழுத்தாளர்களையும் ஆதரித்த குமுதம் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறது?
பெத்தாபுரம் செக்ஸ் பற்றி கவர் ஸ்டோரி போடுகிறது. கிகல்லோ பாய்ஸ் பற்றி டிப்ஸ் தருகிறது. தமிழகத்தில் மறைவாக நடக்கும் செக்ஸ் கூட்டணிகளை இடங்களைக் குறிப்பிட்டு எழுதுகிறது. டுரிஸ்ட் ஸ்பாட்டுகளில் பொதுஜன கவனிப்புக்கு உள்ளாகாத தகாத உறவுகளை சந்து முனை அடையாளத்துடன் எழுதுகிறது. அதாவது பொது மக்களுக்கும், இளைஞர்களுக்கும் தெரியாமல் நடக்கும் தவறுகளுகளை மீடியா வெளிச்சம் காட்டி, அனைவருக்கும் அறிமுகம் செய்கிறது. ஒவ்வொரு கட்டுரையின் கடைசிவரியிலும், "ஐயோ பாவம் இளைஞர்கள், அவர்களை சீரழிவிலிருந்து யார் காப்பாற்றுவார்கள்" என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறது. இந்த வார குமுதத்தின் (அக் 08) முதல் இரண்டு பக்கங்களில் கிட்டத்தட்ட 10 உதடு கடிக்கும் காட்சிகள். அதற்கு அடுத்த பக்கத்திலேயே தமிழகத்தை சீரழிக்கும் டாப் 10 சமாச்சாரங்கள் என்று ஒரு போலி அலட்டல் சர்வே. சீரழிப்பதில் முதலிடத்தில் இருப்பது குமுதம்தான்.

காந்தி படத்தில் ஒரு அற்புதமான வசனம். "சுதந்திரம் பெறுவது முக்கியமல்ல. சுதந்திரத்தை பெறுவதற்க்கான தகுதியை அடைவதுதான் முக்கியம்", என்று காந்தி மக்களை நோக்கிச் சொல்கிறார். அதே போல பத்திரிகை நடத்துவது முக்கியமல்ல, நடத்துவதற்க்கான தகுதியை விடாதிருப்பதே முக்கியம். குமுதம் தற்போது ஒரு நல்ல பத்திரிகைக்கான தகுதியை இழந்துவிட்டது.

Friday, October 3, 2008

துரை - இன்னொரு சிக்ஸ் பேக்

  • பின்னி லொகேஷன்!
  • சிக்ஸ் பேக்கில் ஹீரோ உடம்பைக் முறுக்குதல்!
  • விவேக் ஐயர் பாஷை பேசுதல் - டிராபிக் கான்ஸ்டபிளைக் கலாய்த்தல்!
  • ரீ மிக்ஸ் என்ற பெயரில் பழைய மெட்டுக்களை கெடுத்தல்!
  • போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, திடீரென ஒரு டிவி ஸ்டேஷனுக்குள் நுழைந்து ஹீரோ மக்களிடம் லைவாக பேசுதல்!
  • சுவிட்சர்லாந்து போன்ற அழகான நாடுகளில், அரைக் கிறுக்கு நடனம் ஆடுதல்!
  • ஹீரோ அம்னீஷியாவில் பழைய வாழ்க்கை மறந்திருத்தல்!
  • ஹீரோயின் டபுள் மீனிங் டயலாக் பேசுதல்!

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பது போல மேற்காணும் ஐயிட்டங்களும் படத்தில் இல்லையென்றால் வரிவிலக்கு என்று தமிழக அரசு அறிவித்தால் தமிழ் சினிமா தப்பிப் பிழைக்கும்.

ஆனால் இந்த அபத்தங்கள் இல்லையென்றால் துரை என்ற படமே இல்லை.

சிக்ஸ் பேக்கில் முகத்தில் லைட்டான சுருக்கங்களுடன் வரும் அர்ஜீன் தான் துரை. அப்பாடி டைட்டில் justified. இடைவேளை வரை, அம்னீஷியாவால், தான் யாரென்று தெரியாமல், ராஜா என்ற பெயரில் விவேக்கின் ஹோட்டலில் வேலை செய்கிறார் அர்ஜீன். துரத்தி துரத்தி காதலிக்கும் கிரத்திடம் (என்ன பேரோ) முத்தம் வாங்குகிறார். திடீரென படுக்கையில் இருந்து எழுந்து, வியர்த்து, தலையைக் கசக்கி உண்மையிலேயே தான் யார் என்று யோசிக்கிறார். லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் போய் விசாரிக்கிறார். திடீரென ஒரு வில்லன் கும்பல் துரத்த, தப்பித்து தண்ணீருக்குள் ஓடும்போது ஆரம்பிக்கிறது பிளாஷ்பேக்.

தொடர்ந்து ஒரு எதிர்பாராத தருணத்தில் இடைவேளை வரும்போது மட்டும், அட பரவாயில்லையே என்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஆனால் பிளாஷ்பேக், பிளாஷ்பேக்குக்குள் இன்னொரு பிளாஷ்பேக் என்று கதை உள்ளே போய்விட்டு வெளியே வரும்போது, திரைக்கதை நொண்டி அடிக்க ஆரம்பித்துவிடுகிறது. படத்தின் மொத்த சஸ்பென்சும் அப்போதே முடிந்துவிடுவதால், படம் இன்னும் எவ்வளவு நேரத்தில் முடியும் என்று வாட்சைப் பார்க்க வைத்துவிடுகிறார்கள். ஆனால் நம்முடைய கஷ்டம் புரியாமல், அர்ஜீன் தான் கஷ்டப்பட்டு பில்ட்அப் செய்த சிக்ஸ் பேக்கை காட்டுவதற்க்காக நம்மை ரொம்ப நேரம் அடிதடிகளை பார்க்க வைக்கிறார். அதுவும் கிளைமாக்ஸில் வில்லன் உட்பட அத்தனை அடியாட்களும், சட்டையைக் கழட்டிவிட்டுதான் சண்டை போடுகிறார்கள். சண்டை முடிவதற்குள் தியேட்டரில் ஏ.சியை ஆஃப் செய்துவிடுவதால், வியர்வையில் நாமும் சட்டையைக் கழட்டும் நிலைக்கு வந்துவிடுகிறோம்.

மகனுக்கு வாய்ப்பு தராமல், தொண்டர் திலகம் அர்ஜீனை கட்சியின் அடுத்த தலைவராக்க முடிவுசெய்கிறார், கட்சித் தலைவர். கோபமாகும் மகன், அப்பாவைக் கொன்று பழியை தொண்டர் அர்ஜீனின் மேல் போடுகிறார். போலீஸ் அவரை என்கவுண்டர் செய்ய முயற்சிக்க, என்கவுண்டரில் தப்பிக்கிற அர்ஜீன், மண்டையில் அடிவாங்கி அம்னீஷியா கேஸாகி, பிறகு அம்னீஷியாவிற்கும் தப்பித்து, வில்லனை பழிவாங்குகிறார்.

ஒரே ஒரு பாடலில் மட்டும் வந்தாலும் கஜாலா தான் நல்ல நடிகையாக வரக்கூடியவர் என்று மீண்டும் நிருபிக்கிறார். ஹீரோயின் கிரத்தை அம்னீஷியா இல்லாமலே எளிதில் மறந்துவிடலாம். வரிசையாக ஜோக் அடிப்பது மட்டுமே காமெடி கிடையாது என்று அனுபவஸ்தர் விவேக்கிற்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் இப்போதெல்லாம், அந்த லெவலை தாண்டி வரமாட்டேன்கிறார்.

'ராஜா, ராஜாதி ராஜனிந்த ராஜா' இது இளையராஜாவின் மாஸ்டர் பீஸ். வெறும் ரிதம் பேடை வைத்துக்கொண்டே, அற்புதமாக இசை அமைத்திருப்பார். அதை சொல்லிவிட்டுக் கெடுத்திருக்கிறார் இமான். அது போலவே 'Boney-M'ன் ரஸ்புதின் பாடலை சொல்லாமல் கெடுத்திருக்கிறார்.

இயக்குனரைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. கதை, திரைக் கதை இரண்டுக்கும் அர்ஜீனே பொறுப்பேற்றிருக்கிறார். உண்மையைச் சொன்னால் நம்மை வெறுப்பேற்றியிருக்கிறார்.

காம்ரேட்களுக்கு நோஸ்கட் கொடுத்த ஜெயலலிதா!

அ.தி.மு.க நடத்துகிற ஆர்ப்பாட்டங்களுக்கே ஜெயலலிதா ஆஜராகமாட்டார். அவருடைய எடுபிடிகள்தான் வருவார்கள். இந்த இலட்சணத்தில் இந்திய கம்யூனிஸ்டுகள் நடத்துகிற ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க சப்போர்ட் என்பது பெரிய அரசியல் திருப்புமுனையாக அ.தி.மு.க ஆதரவு மற்றும் தி.மு.க எதிர்ப்பு மீடியாக்களால் சித்தரிக்கப்பட்டன.

ஜெயலலிதா வழக்கம்போல தன்னுடைய டிபிக்கல் ஸ்டைலில் அனைவருக்கும் நோஸ்கட் கொடுத்துவிட்டார். போராட்ட பந்தலுக்கு தன்னுடைய எடுபிடி அ.தி.மு.க., அமைப்புச் செயலர் முத்துச்சாமியைக் கூட அனுப்பவில்லை. அதுமட்டுமல்ல அதற்க்கான காரணத்தைக் கூட இந்த வினாடி வரை யாரையும் மதித்துச் சொல்லவில்லை. இத்தனைக்கும் வலியவந்து, அ.தி.மு.க பங்கேற்கும் என்று எழுத்து மூலம் அறிவித்தவர் அவர்தான்.

சுயமரியாதைச் சிங்கங்களான வை.கோ. மற்றும் காம்ரேட்கள் ஜெயலலிதாவின் இந்த அவமரியாதை அட்டாக்கை எப்படி மீசையில் மண் ஒட்டாமல் சமாளிக்கிறார்கள் என்பதைக் காண ஆவலோடு இருக்கிறேன்.

ஜெயலலிதா மாறிவிட்டார். கட்சித்தொண்டருடன் அமர்ந்து உணவு சாப்பிடுகிறார், அனைவரையும் மதிக்கிறார் என்று அவருடைய கைத்தடி நாளிதழ் தினமலர், பத்து நாளைக்கு முன்பே பொய் பிரச்சாரத்தை துவக்கியது. இதை நானும் குறிப்பிட்டிருந்தேன்.

இதில் ஐயோ பாவம் யார் தெரியுமா? ஜெயா ஆதரவு மீடியாக்களின் பிரச்சாரத்தை நம்பி ஏமாந்த இலங்கை தமிழ் எம்.பிக்கள்தான். ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தர தயாராகிவிட்டார் என்று அவர் பங்கேற்கும் முன்பே, ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டதாக அவசரப்பட்டு ஜெயாவை புகழ்ந்து தள்ளிவிட்டார்கள்.

நான் இப்பவும் சொல்கிறேன், விஜயகாந்த் - கம்யூனிஸ்ட் கூட்டணி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்க்காக ஜெயலலிதா மேற்கொண்ட கீழ்த்தரமான நாடகம்தான் இந்த போராட்டத்திற்கான சம்மதமும், வாபசும்.

கருணாநிதியை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு ஜெயலலிதாவை ஆதரிக்கும் அனைவருக்கும் இது ஒரு சரியான அவமரியாதை 'பஞ்ச்'.

சுய புத்தியும், சுய மரியாதையும் உள்ளவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை!

Thursday, October 2, 2008

வெற்றிகரமான பதிவர் சந்திப்புக்கு 10 யோசனைகள்

ஒரே ஒரு பிளாக் எழுதுவதன் மூலம் ஒரு பதிவர் சந்திப்பை அறிவித்துவிட முடியும். ஆனால் வெற்றிகரமான சந்திப்பிற்கும், மீண்டும் மீண்டும் சந்திப்பதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும். இதோ என்னுடைய 10 யோசனைகள். வெளிநாடுகளில் இது போன்ற பதிவர் சந்திப்புகள் "வெற்றிகரமான பிசினஸ் நெட்வொர்க் சந்திப்புகளாகவும்" நிகழ்த்தப்படுகின்றன. கலந்துகொண்ட அனுபவம் எனக்கு உண்டு. இதன் மூலம் வெறும் வெட்டிச் சந்திப்பாக இல்லாமல், ஏதோ ஓரளவிற்கு உபயோகமான சந்திப்பாக மாற்றிக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு ryze.com
  1. மீண்டும் . . . மீண்டும் . . .சந்திப்பை முன் நின்று நடத்துபவர் யார் என்பது அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
  2. அவருடன் உரையாட வசதியாக ஒரு தொலைபேசி எண் அவசியம் தேவை
  3. நடத்துபவரும், அவருடைய குழுவும் அறிவிக்கப்படவேண்டும்
  4. சந்திப்பின் காரணம் பொத்தாம் பொதுவாக இருக்கக் கூடாது.
    உதாரணமாக ஒரு டாப்பிக் - "பதிவுகளின் பலன்களும், பாதகங்களும்"
  5. இது குறித்து யார், யார் பேசலாம் என்பதை முன் கூட்டியே உறுதி செய்ய வேண்டும்.
  6. சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் கட்டாயம் தேவை. உதாரணமாக . .
    வரவேற்புரை
    விருந்தினர் அறிமுகம்
    இன்றைய தலைப்பு ஒரு அறிமுகம்
    முதல் 5 பேச்சாளர்கள்
    டீ பிரேக்
    அடுத்த 5 பேச்சாளர்கள்
    நன்றியுரை மற்றும் முடிவுரை
  7. யார் வரவேற்புரை, யார் தலைப்பை அறிமுகம் செய்வது, யார் பேச்சாளர்களை அறிமுகப்படுத்துவது, யார் நன்றியுரை மற்றும் முடிவுரை வழங்குவது போன்ற அனைத்தும் முதலிலேயே தீர்மானிக்கப்படவேண்டும்.
  8. சந்திப்பிற்கான செலவுகளை எப்படி பகிர்ந்து கொள்வது என்ற தெளிவான சிந்தனை தேவை.
  9. அடுத்த பதிவர்கள் சந்திப்பு எப்போது இருக்கலாம் என்பதற்க்கான உத்தேச தேதிகள் இருக்க வேண்டும்.
  10. பதிவர் சந்திப்பிற்கென 'தனி வலைப்பூ' இருக்க வேண்டும்.

விஜயகாந்த் சார், போலீஸ் யூனிஃபாரம் என்றால் அருவருப்பு, முதல்வர் நாற்காலி என்றால் தகதகப்பா?

விஜயகாந்த் வாய்விட்டு சொன்னது
தமிழக போலீஸ் அராஜகங்களைப் பார்க்கும்போது,
திரைப்படத்தில் கூட யூனிஃபார்ம் அணியும்போது அருவருப்பாக இருக்கிறது.

விஜயகாந்த் மனசுக்குள் ஜபிப்பது
முதல்வர் நாற்காலியிலிருப்பவர் செய்யும் அட்டகாசங்களைப் பார்க்கும்போது,
2011ல் நான் எப்படியாவது முதல்வராகிவிடவேண்டும் போலிருக்கிறது.

அதாவது . . .
போலீசெல்லாம் கெட்ட போலீசாம்.
அதனால் போலீஸ் வேஷம் போடக்கூட அருவருப்பாக இருக்கிறதாம்.
அதே போல தற்போதைய முதல்வர் நாற்காலியும் கெட்ட நாற்காலியாம்.
ஆனால் அந்த நாற்காலி 2011ல் வேண்டுமாம்.

போலீஸ் உடை என்றால் அருவருப்பு, முதல்வர் பதவி என்றால் தகதகப்பா? அட்டுழியம் செய்வதாகச் சொல்லி போலீஸ் என்றாலே அருவருக்கும் விஜயகாந்த், அதே போல அட்டூழியம் செய்வதாகச் சொல்லும் முதல்வர் பதவியைக் கண்டும் அருவருப்பாக இருக்கிறது ஏன் சொல்லவில்லை?

வெரி சிம்பிள் லேடீஸ் அண்டு ஜென்டில்மென்.
பதவி என்பது ஒரு வெறி. விஜயகாந்துக்கு அந்த வெறி தலைக்கேறிக்கொண்டிருக்கிறது.

Wednesday, October 1, 2008

ஞானி வைக்க மறுத்த குட்டு

"விஜயகாந்த்துக்கும் இவருக்கும் தனிப்பட்ட தகறாறு வந்தால், அதற்க்காக இவரும் தேர்தலில் குதித்து, அவருக்கு எதிராக போட்டி போட்டு, நம்மையெல்லாம் வம்புக்கு இழுப்பாராம். அய்யா எங்களை வெச்சு காமெடி ஒண்ணும் பண்ணலியே?"

இது ஞானி வடிவேலுவுக்கு வைத்த குட்டு

"இவருக்கும், வடிவேலுவுக்கும் தனிப்பட்ட தகறாறு வந்தால், அதற்க்காக கருணாநிதியை சன் டிவி லைவ் பிரஸ் மீட் வைத்து திட்டுவாராம்.  படத்துல கூட  யூனிபாரம் போடவே அருவருப்பா இருக்கு என்று தமிழக போலீஸை அசிங்கப்படுத்துவாராம்.அய்யா எங்களை வெச்சு காமெடி ஒண்ணும் பண்ணலியே?"

இது ஞானி விஜயகாந்துக்கு வைக்க மறுத்த குட்டு

அதனால் அந்தக் குட்டை நான் ஞானிக்கே வைக்கிறேன்.  'டங்'

Tuesday, September 30, 2008

ரஜனி, சாருநிவேதிதா, காதல் இல்லாவிட்டால் . . .

ரஜினி
கருணாநிதி
விஜயகாந்த்

சன் டிவி
கலைஞர் டிவி

குமுதம்
விகடன்

சரக்கு

சாருநிவேதிதா

காதல்

இந்தப் பட்டியலில் உள்ள இவர்களும் - இவைகளும் இல்லாவிட்டால், (என்னையும் சேர்த்து) 90 சதவிகிதம்பேர் மறுமொழி எழுதக்கூட வழியின்றி விழிப்பார்கள். பதிவு போடுவதை மறப்பார்கள்.