Saturday, July 14, 2012

கவுஹாத்தி சம்பவம் சென்னையிலும் நடக்கும் அபாயம் - No to 24x7 Bar


தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு,

அசாம் தலைநகர் கவுஹாத்தியில் நடந்த சம்பவத்தை தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள்.

ஒரு இளம் பெண்ணை போதையில் இருந்த 20 முரட்டு இளைஞர்கள் நடுரோட்டில் வைத்து மானபங்கம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை  படம் பிடித்த செய்தி நிறுவன காமிராவுக்கு போஸ் கொடுத்தபடி தங்களின் கொடும் செயலை தொடர்ந்தார்கள் என்பது இன்னும் அதிர்ச்சியாக உள்ளது. இது எல்லாவற்றுக்கும் அடிப்படை, குடி போதை!

இனி 24 மணி நேரமும் மது சப்ளை செய்யலாம், பார்களை திறந்து வைக்கலாம், என்று சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அனுமதி தந்திருக்கிறீர்கள். வருமானம் பெருகும், தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டினர் மது அருந்த வசதியாக இருக்கும் என்று ஒரு அற்ப காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.

குடித்து சீரழியும் தமிழக இளைஞர்களை விட, குடிக்க முடியாமல் அவதிப்படும் வெளிநாட்டினரின் மேல் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கரிசனம் வியப்பளிக்கிறது.

இருபத்தி நான்கு மணி நேரமும் மது கிடைக்குமானால், கவுஹாத்தி சம்பவங்கள் தமிழகத்திலும் நிழக வாய்ப்பு உள்ளது. எனவே உடனே 24 மணி நேர மது சேவையை நிறுத்த ஆணையிடுங்கள்.

டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். 24 மணி நேர பார்களுக்கு பூட்டு போடுங்கள்!

வெளிநாட்டினர்கள் எப்படியாவது குடித்துக் கொள்வார்கள். தமிழக இளைஞர்களை போதையிலிருந்து நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.


Friday, July 13, 2012

ஆண்டோ பீட்டர்

ஆண்டோ பீட்டர்!
என் நண்பர். ஆனால் அதிகம் பேசிப் பழகாத நண்பர். சில நட்புகள் அப்படி அமைந்துவிடும். எப்போதும் நினைவில் இருப்பார்கள். ஆனால் பேசிக் கொள்கிற சந்தர்ப்பம் வாய்க்காது.

அந்தக்கால Tiff முதல் இன்றைய Tam, Tab மற்றும் Unicode வரை தமிழ் எழுத்துருக்களை(font) உருவாக்குவதில் நிறைய பங்காற்றியவர். சிங்கப்பூரில் TI Internet 2000 தமிழ் இணைய மாநாடு நடந்தபோது, கொஞ்சம் நெருக்கமாகப் பழகினோம். அப்போதுதான் www.tamilcinema.com துவங்கியிருந்தார். மாநாட்டில் The future of Tamil ezines பற்றிப் பேச வேண்டும். எதிர்காலத்தில் இணையப் பத்திரிகைகள் நிச்சயம் கொடிகட்டிப் பறக்கும். பல பத்திரிகைகள் உருவாகும் என்று அப்போதே கணித்து சொன்னார். இன்று வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்சினிமா.காம் அதற்கு சாட்சி.



ஆண்டோ பீட்டர், கம்ப்யூட்டர் உலகம் பத்திரிகை ஆசிரியர் மகேந்திரன் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானார். அதனால் பெரும்பாலான சந்திப்புகள் மகேந்திரன் இருக்கும்போதுதான் நிகழ்ந்திருக்கிறது. ஒவ்வொரு சந்திப்பின் போதும், ஏதாவது புத்தகம் எழுத வேண்டும், கைடு தயாரிக்க வேண்டும், விஸ்காம் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும், சாஃப்ட் வியூ நிறுவனத்துக்கு விளம்பரம் எடுக்க வேண்டும் என்று ஏதாவது காரணங்கள் இருக்கும். ஆனால் என்னவோ தெரியவில்லை, இதுவரை அவருடன் இணைந்து எந்த புராஜக்டும் செய்ய வாய்க்கவில்லை.

ஆனால் என்ன விசித்திரம் பாருங்கள். CSC நிறுவனர் திரு.ஐயம்பெருமாள் அவர்கள் மறைந்தவுடன் அவரைப் பற்றி ஒரு புத்தகம் எழுத வாய்ப்பு கிடைத்தது. அந்த புத்தகத்திற்கு அணிந்துரை ஆண்டோ பீட்டர்தான். நான் இன்னும் அந்த அணிந்துரையை வாசிக்கவில்லை. அடுத்தவாரம் வெளியிடப்படுவதாக தேதி குறிக்கப்பட்டுள்ள அந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு அவர் வரவேமாட்டார் என்பது என்பது வாழ்வின் விசித்திரங்களைச் சொல்வதாக இருக்கிறது.

கடந்த வாரம் ஃபேஸ்புக்கில் உலவிக் கொண்டிருந்த போது, Add Friend என்ற அறிவிப்புடன் ஆண்டோ பீட்டரின் புகைப்படத்தை பார்த்தேன். ஒரு நிமிடம் நிதானித்து அப்புறம் என்று ஒத்தி வைத்துவிட்டேன்.

ஆனால் இன்று அவர் மறைந்துவிட்டார். அவரை ஃபேஸ்புக்கில் நண்பராக ஏற்றுக் கொண்டிருந்திருக்கலாமோ? கடைசியாக ஒரு ஹலோ சொல்லும் வாய்ப்பை இழந்துவிட்டேன்.

அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்!

Wednesday, July 11, 2012

நான் ஈ - விமர்சனம்

ஒரு சின்ன ஈ அளவு கதை! ஆனால் பிரமாண்டமான CLAN திரைக்கதை! காட்சிக்கு காட்சி சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. நாயகி சமந்தா, கடைசிக் காட்சியில் வரும் சந்தானம், இவர்களைத் தவிர, எவருமே பழகிய முகம் இல்லை. இருந்தாலும் அலுப்பே இன்றி தியேட்டர் கை தட்டல்களால் பரபரக்கிறது.


நண்பர் ஜெயராஜ் சத்யம் தவிர வேறு எந்த தியேட்டரிலும் படம் பார்க்க விரும்ப மாட்டார். தும்..தும்... என்று இதில் உள்ளது போல சவுண்ட் குவாலிடி வேறு எதிலும் இல்லை என்பார். எனவே தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் சத்யம் குழுமத்தினர், எங்களுடன் ஜெயராஜ் பேசிக் கொண்டிருக்கும்போது கேண்டிடாக எடுத்து ஒரு க்ளிப் போடலாம். நேற்று ராயப்பேட்டை சத்யத்தில் கிடைக்கவில்லை என்று புதிதாக வந்திருக்கும் பெரம்பூர் சத்யத்துக்கு(S2) டிக்கெட் எடுத்துவிட்டார். எடுத்துவிட்டாரே தவிர, கூகுள் மேப் 13 கிலோ மீட்டர் காட்டுதே, எத்தனை மணிக்கு புறப்படறது என்றார் சற்றே டிராபிக் கிலியுடன்.


படத்தைப் பற்றி சொல்லாமல் தியேட்டரைப் பற்றிச் சொல்கிறேனே என நினைக்காதீர்கள். ராயப்பேட்டை சத்யத்தில் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற வரி ஒரு சேதி சொல்கிறது. திங்கட்கிழமை இரவுக்காட்சி ஒரு படம் ஹவுஸ் ஃபுல் ஆகிறது என்றால் அது டாப் டக்கர் படமா இல்லையா?

ஒரு ஈயாம்.. அது தான் ஹீரோவாம்... தூங்கறதுக்குன்னே படம் தேர்ந்தெடுத்து போறாரு என்று புறப்படும்போது வீட்டில் கிண்டல்.  இது போதாமல் டிராபிக் பயத்தால் பூந்தமல்லி ஹைரோடு தவிர்த்து, பாடி பிரிட்ஜ் ஏறி, வழி தெரியாமல் சுற்றி பெரம்பூர் S2வை அடைந்தபோது, கிட்டத்தட்ட தூக்கம் வந்துவிட்டது. ஆனால் எல்லாம் டைட்டில் போடும் வரைக்கும்தான். அதற்குப் பின் ஈடா.. ஈடா.. ஈடா.. என்று அதிரும் இசையுடன் ஒரு குதூகல உலகில் துள்ள வைக்கிறார் இயக்குனர்.



தூங்கப் போகும் முன் ஒரு குழந்தை அப்பாவிடம் கதை கேட்கிறது. ஒரு ஊர்ல என்று ஆரம்பிக்கும்போதே, இது வேண்டாம்பா, எப்ப பார்த்தாலும் இதையே சொல்ற என்று குழந்தை அலுத்துக் கொள்ள, அப்பா ஈ கதை சொல்ல ஆரம்பிக்கிறார். காட்சி கிடையாது. டைட்டிலுடன் வெறும் ஒலிதான். அந்தக் குழந்தையுடன் நாமும் ஈ கதை கேட்க தயாராகிவிடுகிறோம்.


இயக்குனரின் சாமர்த்தியத்தை புரிந்து கொள்ள, இந்த துவக்கம் போதும். எந்த லாஜிக்கும் இல்லாமல் ஒரு சாதாரண ஈயை சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு நம்மால் பார்க்க முடிகிறது என்றால் ரசிகனை தயார்படுத்தும் இது போன்ற சின்னச் சின்ன உத்திகள்தான் காரணம்.


படம் ஈயை விடச் சிறியதான ஒரு காதலில் அழகாகத் துவங்குகிறது. தொண்டு நிறுவனம் நடத்தும் சமந்தாவை, எதிர் வீட்டு நானி துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் இனிமையான ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் போல.. லைக்.. லைக்... லைக்! 

எந்தப் பெண்ணையும் வளைத்துப்போடும் பிசினஸ் தாதா சுதிப், சமந்தாவை தற்செயலாகப் பார்க்க, தடையாக இருக்கும் நானியை கொடூரமாகக் கொல்கிறார். நானி ஈயாக மறுபிறவி எடுத்து சுதிப்பை பழிவாங்குவதுதான் கதை.


ராஜமௌலியின் மகதீரா படத்தில், துபாயில் இருந்த எனது நண்பர்கள் அனிமேஷன் மற்றும் காம்போசிட்டிங் செய்திருக்கிறார்கள். அச்சமயத்தில் துபாயில் இருந்த நான், அது உருவாகத்தில் இருக்கும்போதே அதன் துல்லியத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் நான் ஈ, நான் வியந்த மகதீராவையே மிஞ்சிவிட்டது. ஒரு ஈயை வைத்துக்கொண்டு, ஆக்ஷன் படம் எடுப்பதற்கு மகா சாமர்த்தியமான கற்பனையும், திட்டமிடலும், செயல் திறனும் வேண்டும். ராஜமௌலி அண்டு டீம், பின்னி எடுத்துவிட்டார்கள். குறிப்பாக அனிமேஷன் டீம்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டரில் சிரிக்காதவர்களே இல்லை. சபாஷ்... சபாஷ்... சபாஷ்.... குஷியில் கைக்குழந்தையை கீழே தவற விட்டுவிட்டு பக்கத்து இருக்கை கணவன்-மனைவி சண்டை போடுகிற அளவுக்கு சில காட்சிகள் அபாரம். அதே போல கிளைமாக்ஸில் சீட்டு நுனிக்கு அழைத்துச் செல்கிறார். (S2வில் உள்ள இருக்கைகள் சாய்வதற்கு அவ்வளவு தோதாக இல்லை)


காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்கிற காட்சி, இன்று வரை சூப்பர் ஹிட். தியேட்டரே குலுங்கும். அதற்கு காரணம் நாகேஷ் மட்டுமல்ல, நாகேஷின் ஆக்ஷனுக்கு இணையான பாலைய்யாவின் அசராத விதம் விதமான ரியாக்ஷன். அதே இந்தப் படத்தில் கிராபிக் ஈ அதகளம் பண்ணுகிறது என்றால், அது எடுபடக் காரணம் வில்லன் சுதிப். (டப் செய்தவர்களுக்கு ஒரு ஷொட்டு. அபார குரல் செலக்ஷன்) ஒரே பார்வையில் பெண்களை வீழ்த்தும் கோடீஸ்வர பிசினஸ்மேனாக அவர் துப்பாக்கியில் குறிபார்த்து நம்மையும் வீழ்த்துகிறார். அடேங்கப்பா அபார நடிப்பு! கம்பீரமாக அறிமுகமாகி, ஒரு ஈயால் சின்னா பின்னமாகி கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் அளவுக்கு மாறுவதை நறுக்கென்று செய்திருக்கிறார். ஈயின் வெற்றிக்கு அவர் ஒரு மிக முக்கியக் காரணம்.


முதன் முதலாக சந்தானம்  நண்பேண்டா டிராக்கிலிருந்து மாறியிருக்கிறார். இரசிக்க முடிகிறது. சந்தானம் இந்த டிரெண்டை பிடித்துக் கொள்ள வேண்டும். இன்னும் பல வருடங்கள் தாக்குப்பிடிக்க இதுதான் சிறந்த வழி. படத்தில் அவர் வரும் பகுதி ஒரு இலவச இணைப்புதான் என்றாலும் சரியான சிரிப்பு மசாலா. படம் முடிந்து டைட்டில் ஓடும்போதுதான் சந்தானத்தின் காட்சிகளே வருகின்றன. எனவே பார்க்கிங்கில் இருந்து காரை எடுக்கும் அவசரத்தில் இந்தக் காட்சிகளை தவறவிட்டுவிட வேண்டாம்.

பென்சில் சீவும் பெண்சிலையே என சுவாரசியமான வார்த்தைகளை மரகதமணியின் மெட்டுகளுக்குள் அமர்த்தியிருக்கிறார் கார்க்கி.


படத்தில் வந்த ஈ அளவிற்கு மகா சுறுசுறுப்பாக பார்க்கிங்கில் ஒரு பெரியவர் இயங்கிக் கொண்டிருந்தார். 61 வயதில் அசராத சுறுசுறுப்பு. முன்பு ராயப்பேட்டை சத்யத்தில் இருந்தாராம். இரண்டு குழந்தைகள், ஏதோ காலேஜ் படிக்கிறார்கள். என்னால முடிஞ்சது சம்பாதிச்சு தர்றேன் என்று சொல்லிவிட்டு, ஒரு சல்யூட்டுடன் அடுத்த காரை பார்க்கப் போய்விட்டார்.


நமது சமூகத்தில் ஈக்களையம், முதியவர்களையும் எவரும் மதிப்பதில்லை. ஆனால் கிளைமாக்ஸில் காதலிக்காக தன்னை இழக்கிற ஈயும், தன் குழந்தைகளுக்காக தன்னை இழந்து கொண்டிருக்கிற பார்க்கிங் பெரியவரும் இன்னமும் என் மனதில் இருக்கிறார்கள். உண்மையான அன்பு மறு ஜென்மம் எடுத்தாவது உலகை வெல்லும். படம் சொல்லும் செய்தி இதுதான்.

ஈடா... ஈடா... ஈடா... ரெண்டு நாளாச்சு, மரகதமணியின் பாட்டு இன்னமும் மனசுக்குள் அதிர்ந்து கொண்டிருக்கிறது.