Friday, June 29, 2018

சிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சந்தோஷம்!
ஆனாலும் பிடிவாதமாக நடந்த சிவாஜிகணேசனின் சிலை அகற்றம், ஏனோ தானோவென நடந்த அவரது மணி மண்டபத் திறப்புவிழா, என சிவாஜிகணேசனின் புகழுக்கு நேர்ந்த பல அவமரியாதைகள், மனதில் நெருடுவதை தவிர்க்க இயலவில்லை. அதனால் உண்மையிலேயே இந்த அரசு அவரது பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுவார்கள் என்பதைக் காணும் வரை பெரிதாக மகிழ்வதற்கு ஒன்றுமில்லை.
பல்வேறுதரப்பு மக்களின் அதிருப்திகளை சம்பாதித்திருக்கும் இந்த அரசு, வரப்போகும் தேர்தலில் எல்லோருடைய வாக்குகளையும் கவர பல முயற்சிகள் செய்யும் என்பது அனைவரும் அறிந்த இரகசியம். அதில் ஒன்றாக சில ஆயிரம் வாக்குகளாவது இந்த அறிவிப்பின் மூலம் கிடைக்கும் என்று இந்த அரசு நினைத்திருக்கலாம். அந்த வகையில் அகற்றப்பட்ட சிவாஜி கணேசனின் சிலைக்கு இது முதல் வெற்றி.
திரும்பவும் அதே இடத்தில் அவரது சிலை வைக்கப்பட்டால்தான் அது அவரது கலைக்கு செய்யப்படும் மரியாதை!
ஆனாலும் அரசின் இந்த அறிவிப்பு நடிகர்திலகத்தின் இரசிகர்களுக்கு ஆறுதல் தரும்.

Saturday, June 23, 2018

காலத்தின் தேவை கிராமங்கள்தான் - எட்டு வழிச்சாலைகள் அல்ல

எல்லா விவாதங்களும் மோடி ஆதரவு (அ) மோடி எதிர்ப்பு என்கிற கண்ணாடியை மாட்டிக் கொண்டு எதிர்கொள்ளப்படுகிறது. தொலைக்காட்சி விவாதங்கள் முதல் சமூக வலைத்தளங்கள் வரை இந்த கண்ணாடிதான் உண்மைகளை திரிக்கிறது.
ஆனால் இந்தியாவும், அதனுடைய ஆன்மாவான கிராமங்களும், விவசாய வாழ்க்கை முறையும், எளிய மக்களும் மோடிக்கு முன்பும் இருந்தார்கள், மோடிக்குப் பின்பும் இருப்பார்கள்.
எனவே தற்போது மோடிக்குப் பதில் மகாத்மா காந்தியே இந்தியப் பிரதமராக இருந்தாலும், எட்டு வழிச்சாலைகள் திணிக்கப்படும்போது நான் எனது சந்தேகங்களைக் கேட்பேன், அதுகுறித்து விமர்சனங்களை எழுப்புவேன்.
என்னைப் பொறுத்தவரையில் விவசாயமும், இயற்கை வளங்களும் பாதுகாக்கப்படும் திட்டங்கள் தான் காலத்தின் தேவை. வளர்ச்சி என்கிற பெயரில் கான்க்ரீட் காடுகளை உருவாக்குவதை விட இருக்கிற காடுகளை பாதுகாப்பதும் வளர்ப்பதும்தான் உடனடித் தேவை. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ளும் மற்ற நாடுகளுக்கும் பொருந்தும்.
இந்தியா இயல்பாகவே பசுமையான விவசாய நாடு. அதை அமெரிக்கா போல சாலைகளும், கட்டிடங்களும் நிறைந்த நரகமாக மாற்றிவிட்டு, பிறகு மொட்டை மாடியில் பயிர் செய்கிறேன் என்பதும், பூமியிலிருந்து தப்பித்துப் போய் செவ்வாய் கிரகத்தில் குடியமர்வேன் என்பதும் அபத்தம்.
அமீபா முதல் மனிதன் வரை வாழ்க்கை என்பது சுத்தமான நீரிலும், நிலத்திலும், மாசுபடாத காற்றிலும் ஆகாயத்திலும்தான் இருக்கிறது. கான்க்ரீட்டுகளில் அல்ல.
நம் குழந்தைகளின் எதிர்கால வாழ்வு வளமாக இருக்க வேண்டுமென்றால், இந்தியாவின் ஆன்மாவான கிராமங்களும், விவசாயமும் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான திட்டங்கள் எந்த அரசாங்கத்திடம் இருந்தாலும் சொல்லுங்கள். காவல் துறையின் அதட்டல்கள் இல்லாமல் மக்களே இரு கரம் கூப்பி வரவேற்பார்கள்.

Saturday, June 2, 2018

காவிரி ஆணையம் அமைந்ததில் ஏன் எவருக்கும் மகிழ்ச்சி இல்லை?

கொஞ்சம் விநோதமாகத்தான் இருக்கு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கணும். அமைந்ததும், அதைப் பற்றி மத்திய அரசிதழ்ல வெளியிடணும் அப்படின்னு போராட்டம், பந்த் அது இதுன்னு என்னென்னமோ நடந்தது.
இப்போ கேட்டது கிடைச்சிருக்கு. மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, மத்திய அரசிதழ்லயும் வெளியாகி, அதனுடைய நகல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உட்பட நான்கு மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கு. ஒவ்வொரு மாநிலத்துல இருந்தும் வாரிய உறுப்பினர்களா இரண்டு பேரை நியமிக்கணும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதுக்கும் 2 பேரை பரிந்துரை பண்ணிட்டாங்க.
இதுக்காகத்தான் வருடக்கணக்கில் போராட்டங்கள் நடந்தது. இப்போ பலன் கிடைச்சிருக்கு. இது கொண்டாட வேண்டிய நேரம். குறைந்தபட்சம் அது பற்றி பேச வேண்டிய நேரம். ஆனால் இதைப்பற்றி பேச்சே காணோம். அரசும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை, எதிர்கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை, இதற்காக தொடர்ச்சியாக போராடியவர்களும் கண்டு கொள்ளவில்லை. மீடியாவும் கண்டுகொள்ளவில்லை. ஏன்?

Tuesday, May 29, 2018

அரசியல் வெற்றிடம் - வாய்ப்பு இருந்தும் நிரப்ப முடியாமல் தடுமாறும் ஸ்டாலின்

அஞ்சி நடுங்க வேண்டிய ஆளும்கட்சி சட்டசபையில் சிரிப்பும் கும்மாளமுமாக மேஜையை தட்டிக் கொண்டிருக்கிறது.
அடித்து ஆட வேண்டிய எதிர்கட்சிகள் சபைக்குவெளியே பரிதாபமாக நின்று கொண்டிருக்கின்றன.
இந்த இலட்சணத்தில் இனிமேல் திமுக சட்டசபைக்கு போகாது என்று ஸ்டாலின் பேட்டி கொடுக்கிறார். அவருடைய முடிவு, பெருத்த ஏமாற்றமளிக்கிறது. இதற்கா மக்கள் ஓட்டு போட்டார்கள். இந்த சமயத்தில் கூட ஆளும்கட்சியை கேள்வி கேட்டு மக்கள் மன்றத்தின் முன் மண்டியிட வைக்க முடியாத ஸ்டாலின் இனிமேல் சட்டசபைக்கு போனால் என்ன, போகாவிட்டால் என்ன?
துணை வட்டாச்சியர்களுக்கு அதிகாரம் தந்து துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கும் ஆளும்கட்சியை கேள்வி கேட்க, ஸ்டாலினும் வட்டம், மாவட்டம் ரேஞ்சில் ஆட்களைப் பிடித்து அவர்களை அனுப்பி கேள்வி கேட்க வைக்கலாம். நிச்சயம் அவர்கள் ஸ்டாலினை விட சிறப்பாக பங்காற்றுவார்கள் எனத் தோன்றுகிறது.
திமுகவில் செயலாற்றவும் ஆட்கள் இல்லை, அட்வைஸ் கொடுக்கவும் ஆட்கள் இல்லை எனத் தோன்றுகிறது.
மக்கள் சார்பில் கேள்வி கேட்க வேண்டிய ஊடகமும் கப்சுப், எதிர்கட்சிகளும் கப்சுப். இவர்கள் ஊமையாக இருந்தாலும் ஆளும்கட்சி மக்கள் எதிர்ப்பை உணர்ந்திருக்கிறது. அதற்கு ஒரே காரணம் ஃபேஸ்புக்கும், டிவிட்டரும்தான். எதிர்கட்சிகள் செய்ய வேண்டியவேலையை மக்களே இந்த சமூக வலைத்தளங்கள் வழியாகச் செய்கிறார்கள். ஆனால் இதெல்லாம் ஓரளவுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது.
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஆளும்கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தார்கள். தற்போது ஸ்டாலின் உட்பட எவரையும் அவர்களுக்கு இணையாகக் கருத முடியவில்லை.
நிச்சயமாக தமிழக அரசியலில் ஒரு அரசியல் வெற்றிடம் இருக்கிறது. இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அமைப்பு ரீதியாக இதை மறுக்கவும், மாற்றவும் வாய்ப்பு உள்ள ஒரே நபர் ஸ்டாலின்தான். ஆனால் அவர் சரியான திசையில் பயணம் செய்யவில்லை என்பது என் கருத்து.

Sunday, May 27, 2018

கோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்

COBRA POST - OPERATION 136 
PAID NEWS செய்தி நிறுவனங்களை அம்பலப்படுத்த முயற்சி செய்திருக்கும் இந்த ஆபரேஷன் பற்றிய சிறுகுறிப்பு
மக்களை மூளைச்சலவை செய்ய பணம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடுபவர்களை அம்பலப்படுத்தியது யார்?
COBRA POST
போலிகளை தோலுரித்த அந்த தைரியமான நடவடிக்கைக்கு பெயர் என்ன?OPERATION 136
OPERATION 136 -ன் நோக்கம் என்ன?பணம் வாங்கிக் கொண்டு, செய்திகளை திரித்து மக்களிடையே குழப்பத்தையும், சண்டைகளையும் உருவாக்கி, குறிப்பிட்ட ஒரு சாராருக்கு ஆதரவு திரட்டும் களவாணி வேலையை பல ஊடக நிறுவனங்கள் செய்து வருகின்றன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதுதான்.
எத்தனை செய்தி நிறுவனங்கள் இந்த ஆபரேஷனில் கண்காணிக்கப்பட்டார்கள்?இந்தியா முழுவதும் (டிவி, எஃப்.எம், செய்தித்தாள் உட்பட) மொத்தம் 25.
தமிழகத்தில் அம்பலப்பட்டு நிற்கும் செய்தி நிறுவனங்கள் எவை?(இதுவரை) தினமலர், சன்நெட்வொர்க்
https://youtu.be/9ZnIkMwo68g
https://youtu.be/nFE2I32j-jk
போலிச் செய்திகளை வெளியிட செய்தி நிறுவனங்களுக்கு பேசப்பட்ட தொகை எவ்வளவு?50 முதல் 500 கோடி வரை
செய்தி நிறுவனங்கள் எதைச் செய்ய விலைபேசப்பட்டார்கள்?தேர்தல் நெருங்க நெருங்க...
1. ராமாயணம், மகாபாரதம் என்றால் சிக்கல். எனவே பகவத்கீதையை பரப்பி மறைமுகமாக மக்களை பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்துத்துவா பற்றி பேச வைப்பது.
2. பிஜேபி தலைவர்களின் இமேஜ் உயரும்வகையில் செய்திகளை வெளியிடுவது.
3. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் ராகுல் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களின் இமேஜ் பாதிக்கும் வகையில் செய்திகள் வெளியிடுவது.
கோப்ரா போஸ்ட் பகுதி பகுதியாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அதில் வெகு சில நிறுவனங்கள் எடுத்தவுடனேயே எங்களை விலைபேச முடியாது என்று மறுத்திருக்கிறார்கள். சிலர் உடனே ஒப்புக்கொள்ள முடியாது என்கிறார்கள். சில நிறுவனங்கள் பணத்தை கருப்பாக கொடுக்க முடியுமா என்கிறார்கள். சிலர் பளிச்சென்று வாயெல்லாம் பல்லாக நாங்கள் எதற்கும் ரெடி என்கிறார்கள்.
வீடியோக்கள் வெளியானதும், இந்த ஆபரேஷன் போலி, ஒருதலைபட்சமானது என்று சில நிறுவனங்கள் மறுத்திருக்கிறார்கள். குறிப்பாக டைம்ஸ் குழுமமும், இந்தியா டுடே குழுமமும் இதை மறுத்திருக்கிறார்கள். போகப் போக எல்லா நிறுவனங்களும் அந்த வீடியோவில் இருப்பது எங்க ஆள் அல்ல, எங்கள் குரல் அல்ல என்று மறுப்பார்கள். ஆனால் ஊடகத் துறை கரை படிந்தது என்பதையோ, பணத்துக்கு விலைபோய் விட்டது, அதிகாரத்தின்முன் மண்டியிட்டுவிட்டது என்பதையோ, மிச்சமிருக்கும் நேர்மையாளர்கள் உட்பட, எவராலும் மறுக்க முடியாது.
வெல்டன் கோப்ராபோஸ்ட்!
பின் குறிப்பு - இதே போல பணம் கொடுத்து மீடியாவை வளைத்துப்போடும் வேலையை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் செய்யும், செய்திருக்கும் என்று தீர்மானமாக நம்புகிறேன் அதையும் யாராவது அம்பலப்படுத்தினால் வரவேற்கிறேன்.