Friday, November 28, 2008

இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்!!!

"We request Advani and other politicians not to come to Mumbai at this moment. We don't want our security forces run behind them to safe guard them. We need them for our Mumbai"

என்று எழுத்தாளர் ஷோபா டே NDTV 24x7 சேனலில் குமுறிக் கொண்டிருந்தார்.

ஒரு புறம் தீவிரவாதிகளின் பிடியில் ஓபராய், தாஜ் ஹோட்டல்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, இன்னொரு புறம் மும்பை தூசு தட்டி எழுந்து நிற்க ஆரம்பித்துக் கொண்டிருந்தது. உயிரை துச்சமாக மதித்து தைரியமாக கூடி நின்ற மக்கள் மேலும் மேலும் வந்து இறங்கிய இராணுவத்தினரையும், போலீசாரையும், கமாண்டோக்களையும் கைதட்டி உற்சாகமாக வரவேற்றார்கள். "பாரத் மாதா கி ஜே", "வந்தே மாதரம்" என்ற கோஷங்கள் துப்பாக்கி சத்தங்களை மீறி ஒலித்தன.

அதே நேரத்தில் (நேற்று) அத்வானி அங்கு வந்து சென்றார். அவரைத் தொடர்ந்து (இன்று) மோடி வந்திறங்கிச் சென்றார். இன்னும் பல அரசியல்வாதிகள் வந்து செல்லக் கூடும். அவர்கள் வருவது ஓட்டுக்காகவா? அரசாங்கத்தை திட்டவா? இக்கட்டான நேரத்தில் மக்களை சந்திக்கும் அக்கறையா? என்ற விவாதத்தில் இறங்க வேண்டாம். அது தற்போதைய தேவையும் அல்ல.

ஒவ்வொரு துப்பாக்கியும், ஒவ்வொரு பாதுகாவலரும், ஒவ்வொரு பாதுகாப்பு நடவடிக்கையும் மும்பையை ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகளை குறி வைத்து இயங்கும்போது, இந்த அரசியல் வி.ஐ.பிக்களின் வருகை நிச்சயம் ஒரு தடங்கல்தான். இந்த அரசியல்வாதிகளைத் தொடரும் கார்களும், கைத்தடிகளும், இந்த நேரத்தில் மிகப்பெரிய கவனச் சிதறல்தான்.

ஒவ்வொரு நொடியும் நாட்டின் பாதுகாப்புக்கு தேவைப்படும்போது, இந்த அரசியல் வி.ஐ.பிக்களின் பாதுகாப்புக்காக சில நிமிடங்களாவது அந்த பாதுகாப்பு திசை திரும்புகிறது. எனவே அவர்களுடைய வருகை இந்த தருணத்தில் தேவையற்றது.

எனவே 'இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்!!! தயவு செய்து சில நாட்களுக்கு மும்பை பக்கம் வராதீர்கள். நாட்டின் காவலர்களுக்கு தற்போது மக்களை காப்பதே முக்கியம். உங்களைக் காப்பது அல்ல."

ஷோபா டே இதைத்தான் சொன்னார். நான் வழி மொழிகிறேன்.

Wednesday, November 26, 2008

சிறிய விஷயம் - பெரிய தவறு

நீங்கள் என்றைக்காவது 'கண் சொட்டு மருந்து' வாங்கியிருக்கிறீர்களா? சமீபத்தில் எனது பெண்ணுக்காக நான் வாங்கினேன். டாக்டர் எழுதிக்கொடுத்த "MOISOL EYE DROPS" மற்றும் "OCUPAL EYE DROPS" ஆகிய இரண்டு சொட்டு மருந்துகளும் மருந்துக்கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. ஆனால் பிரச்சனை மருந்தை வாங்கிய கணத்திலிருந்து ஆரம்பிக்கிறது. மருந்தை சொட்டு சொட்டாக கண்களில் விடவேண்டுமென்றால் பாட்டிலின் பிளாஸ்டிக் முனைகளில் ஒரு சிறிய துளை தேவைப்படுகிறது.

என்னுடைய மகளும், மனைவியும் அதில் துளையிடுவதற்க்காக முதலில் ஒரு கூரிய பேனா முனையை முயற்சித்திருக்கிறார்கள். அது சரிப்படவில்லை என்றதும் ஒரு ஹேர்பின்னை வைத்து முயற்சித்திருக்கிறார்கள். அதுவும் சரிப்படவில்லையென்றதும் என்னிடம் வந்தார்கள். நான் ஹேர்பின்னையும், பேனா முனையையும் வீசி எறிந்துவிட்டு,  பாட்டில் மூடியை இடமிருந்து வலமாக ஒரு முறை இறுகச் சுற்றினேன். அடுத்த வினாடி சொட்டு மருந்துக்கான துளை ரெடியாகிவிட்டது. எப்படி? இது எப்படி? என்று ஏதோ மேஜிக்கை பார்த்ததுபோல எனது மனைவிக்கும் மகளுக்கும் ஆச்சரியம்.

விஷயம் ரொம்ப சிம்பிள். பாட்டில் மூடியின் உள் உச்சியில் ஒரு பிளாஸ்டிக் ஊசியின் கூர் முனை உள்ளது. பாட்டிலை மூடிவிட்டு, இடமிருந்து வலமாக மேலும் இறுக்கும்போது, உள் உச்சியிலிருக்கும் பிளாஸ்டிக் ஊசியின் கூர்
முனை குத்தி துளை ஏற்படுகிறது. இனி அந்த துளை வழியாக மருந்து சொட்டு சொட்டாக எளிதாக வெளிவரும்.

'உங்களுக்கு மட்டும் எப்படி இது தெரிந்தது?" என்று என் மகள் ஆச்சரியம் பொங்கக் கேட்டாள். நான் அமைதியாக மருந்து வைக்கப்பட்டிருந்த மேல் அட்டைப் டப்பாவைக் காட்டினேன். அதில் 'எப்படித் துளையிடுவது என்பது பற்றி' படத்துடன் ஆங்கில விளக்கமும் இருந்தது.

எதற்க்காக இதைச் சொல்கிறேன் என்றால், ஹேர்பின், பேனா முனைகளை வைத்து துளையிடும்போது அவற்றில் உள்ள அழுக்குகள் துளையின் முனையில் ஒட்டிக்கொள்ளும். கண்களில் அந்தத் துளைகளின் வழியாக மருந்திடும்போது, மருந்துடன் சேர்ந்து அழுக்கும் கண்களில் இறங்கும். இதனால் கண்கள் மேலும் பாதிப்புக்குள்ளாகும்.

படித்த நடுத்தர வர்க்க மக்களுக்கே இப்படி ஒரு விஷயம் இருப்பது தெரியவில்லை.படிக்காத ஏழை எளிய மக்கள் இதனால் எந்த அளவு பாதிப்படைவார்கள் என்பதை நான் தனியே விளக்கத் தேவையில்லை.

எனவே மருந்து எழுதித் தரும் டாக்டர்களும், மருந்தை விற்பனை செய்யும் கடைக்காரர்களும் 'சொட்டு மருந்து மூடியில் பாதுகாப்பாக துளையிடுவது எப்படி?' என்பது பற்றி ஒரு முறை விளக்குவது நல்லது.