Thursday, March 27, 2014

மீடியா என சொல்லிக்கொள்ளும் செய்தி வியாபாரிகள்

நேற்று வேந்தர் டிவியின் துவக்க நாள். வாழ்த்திப்பேசிய மோடி, செய்தி வியாபாரிகள் என்று மீடியாக்களை கடுமையாக விமர்சித்தார். கேஜ்ரிவாலும் இதே குற்றச்சாட்டைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் இதை உண்மை என்று மீடியாக்கள் தாமாகவே நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

இதோ அதோ என்று இழுத்தடித்துவிட்டு ஒரு வழியாக ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் தனது வாதத்தை துவங்கினார் அரசு வழக்கறிஞர் பவானி சிங். ஜெயலலிதா சுமார் ரூ.4000 கோடி அளவிற்கு சொத்து சேர்த்துள்ளார் என்று நீதிபதியிடம் பட்டியலிட்டார். 


இதனை நீங்கள் யாரும் செய்தியாக வெளியிடமாட்டீர்கள் என்று கருணாநிதி தனது தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாகவே மீடியாக்களிடம் கூறினார். அவர் கூறியது போலவே மறுநாள் பெரும்பாலான பத்திரிகைகள் இதை பெட்டிச் செய்தியாகக்கூட வெளியிடவில்லை. தமிழ் இந்து மட்டும் கொசுறுச் செய்தியாக இதை குறிப்பிட்டிருந்தது. அதில் கூட 4000ம்கோடி என்பதை கவனமாக மறைத்திருந்தது. ஆனால் செய்தி தொலைக்காட்சிகள் எதுவும் இதைப்பற்றி பேசவே இல்லை.

அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பொருளாதார நிலைக்கும், வாங்கிய நிலங்களின் மதிப்புக்கும் சம்மந்தம் இல்லை. அதிகாரிகளை பயன்படுத்தி, மிகக் குறைந்த விலையில்நிலங்களை வாங்கினார் என்பது பவானிசிங்கின் குற்றச்சாட்டு

மாதம் ஒரே ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்ற காலத்தில் ஜெயலலிதா வாங்கிக் குவித்த சொத்துக்கள் பற்றி, அரசு வழக்கறிஞர் பவானி சிங் வெளியிட்ட பட்டியல்:

1. வாலாஜாபாத் அருகே 600 ஏக்கர் நிலம்.
2. கொட நாடு - 800 ஏக்கர் நிலம் மற்றும் பங்களா
3. சிறுதாவூர் 25 ஏக்கர் அளவில் பங்களா
4. நீலாங்கரையில் 2 ஏக்கர் நிலம்
5. கன்யாகுமரி அருகே, மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளங்குளம், அருகே 1190 ஏக்கர் நிலம்
6. காஞ்சிபுரம் அருகே 200 ஏக்கர் நிலம்
7. தூத்துகுடி அருகே வைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர் நிலம்
8. ரெவரோ அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர் நிலம்.
9. ஜெயலலிதாவுக்கு 30 கார்கள், டிரக்கர்கள் உள்ளது.
10. ஹைதராபாத்தில் திராட்சை தோட்டம்.

இந்தச் செய்தியை ஏன் பல பத்திரிகைகள் வெளியிடவில்லை. ஏன் தொலைகாட்சி சேனல்கள் கண்டு கொள்ளவில்லை? ஒரே காரணம்தான். நரேந்திரமோடியும், கேஜ்ரிவாலும் கூறுவது போல இவர்கள் அனைவருமே செய்தி வியாபாரிகள். இந்தச் செய்தியால் அவர்களுடைய வியாபாரம் பாதிக்கப்படக்கூடும். அதனால் மறைத்துவிட்டார்கள்.

ஆனால் ஃபேஸ்புக், டிவிட்டர் என மக்கள் பங்குபெறும் மீடியாக்கள் இன்று வலிமையாக இருக்கின்றன. எனவே 2G, சொத்துக்குவிப்பு வழக்கு, நிலக்கரி பேர ஊழல் என


அவர்கள் எதை மறைத்தாலும் அதை மக்களே வெளியே கொண்டுவருவார்கள். மேலே உள்ள இந்தப்பட்டியலே ஃபேஸ்புக் நண்பர்கள் பகிர்ந்துகொண்டதுதான். சமூகவலைத்தளங்களால் அரசியல்வாதிகளின் முகத்திரை மட்டுமல்ல, இந்த செய்தி வியாபாரிகளின் முகத்திரையும் கிழியும்.

Sunday, March 23, 2014

மதிப்பிற்குரிய அதிமுக கட்சித்தலைவியே

மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு என்றுதான் எழுத நினைத்தேன். ஆனால் அம்மா என்பது அரசாங்க இட்லி கடையின் பெயர் மட்டுமே. அது உங்களை குறிக்கவில்லை என்று தேர்தல் கமிஷன் கூறிவிட்டதால் அப்படி எழுதமுடியவில்லை.

பிறகு மதிப்பிற்குரிய முதலமைச்சர் என்று எழுத நினைத்தேன். ஆனால் உங்கள் கட்சிக்காரர்களே நீங்கள் முதல்வரல்ல, வருங்காலப்பிரதமர் என்று சொல்வதால் அதையும் தவிர்த்துவிட்டேன்.

அதனால் அதிமுக கட்சித்தலைவியே என்று ஆரம்பித்து ஒரு விண்ணப்பம். மேடைக்கு மேடை திமுகவிடமிருந்தும், காங்கிரசிடமிருந்தும் எங்களை காப்பாற்றப்போவதாக முழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம்.. ஆனால் அதற்கும் முன்பே, எங்களை டாஸ்மாக் சாக்கடையிலிருந்தும், பவர்கட் இருட்டிலிருந்தும், கொசுக்கடி வியாதியிலிருந்தும் காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக மக்கள் அனைவரையும் காப்பாற்ற முடியவில்லை என்றாலும் உங்கள் ஹெலிகாப்டர் வானத்தில் பறக்கும்போதே தரையில் உருண்டு புரண்டு வணக்கம் தெரிவிக்கும் அடிமைகளை மட்டுமாவது காப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இவண்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சிக்காக வாக்கு சேகரித்தவர்களில் ஒருவன்.