Saturday, May 17, 2014

டியர் மோடி! உங்களை இன்னமும் நம்பாத என்னிடமிருந்து ஒரு கடிதம்

மோடியின் வெற்றியை தன்னுடைய வெற்றியாகவே பலரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேச்சில் தெறிக்கும் சந்தோஷமும், பிரகாசிக்கும் நம்பிக்கையும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 

உண்மையைச் சொன்னால் இந்த வினாடி வரையில் மோடியின் மேல் எனக்கு எந்த ஈர்ப்பும் இல்லை. எதிர்கட்சிகளை மட்டுமல்ல, தன் கட்சி சீனியர்களையும் சாமர்த்தியமாக சாய்த்துவிட்டு, கார்ப்பரேட் விளம்பர ஏஜென்சிகளின் துணையுடன் தன்னை வளர்த்துக் கொள்ளும் முரட்டு சிந்தனைகள் கொண்ட முரட்டு அரசியல்வாதி. இதுதான் மோடியைப் பற்றிய எனது கருத்து.

எனது கருத்து தவறோ? சரியோ? என்னையும், அவரையும், நம் எல்லோரையும் உள்ளடக்கிய நமது நாட்டை இனி ஆளப்போவது அவரே. எனவே அவரை ஆராதிக்கும் ஆதரவாளர்களைப் போலவே, நானும் அவரை வரவேற்கிறேன்.

இனி..
அவரை நம்பும் ஆதரவாளர்களையும், அவரை இன்னமும் நம்பாத என்னைப் போன்றவர்களையும், தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நம்பும் அப்பாவி பொதுமக்களையும் ஒரு சேர திருப்தியடைய வைக்கவேண்டிய பொறுப்பு திரு.மோடி அவர்களுக்கு உள்ளது. மோடியைத் தவிர எவருமே கற்பனை செய்திராத மாபெரும் வெற்றிக்கு அவர் செய்ய வேண்டியவை ஏராளம்.

புன்னகையுடன் காத்திருக்கிறேன். வருக மோடி! உங்கள் மேலிருக்கும் சந்தேகங்களைத் தகர்த்து தருக நம்பிக்கைகள் கோடி!