Friday, December 5, 2008

பணக்காரருக்கு கொடுத்தால் அது subsidy. ஏழைக்கு கொடுத்தால் அது இலவசம்

சென்ற மாதத்தில் ஒருநாள்! சென்னை புரசைவாக்கம்! வழக்கம் போல காருக்குள் அமர்ந்து கொண்டு நாங்கள் டிராபிக்கில் வியர்த்துக்கொண்டிருந்தோம். சைக்கிள்காரர்கள் திரும்பிப் பார்க்காமல் குறுக்கே பாய்ந்து லாரி மற்றும் மாநகரப் பேருந்துகளின் பிரேக்குகளுக்கு டெஸ்ட் வைத்துக் கொண்டிருந்தார்கள். மோட்டர் பைக்கர்கள் காதுக்கும், தோள் பட்டைக்கும் இடையில் மொபைல் போனை பதுக்கி, யாரிடமோ இன்னும் ஐந்து நிமிடங்களில் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு சிவப்பு சிக்னல்களைத் தாண்டினார்கள். ஷேர் ஆட்டோவில், பிதுங்கி வழிந்த லேட் ஆபீசர்களுக்குப் பயந்து நாங்கள் பயணம் செய்த கார் இடது பக்கம் ஒதுங்க, எதிரில் மிரண்டு போன மாடு ஒன்று வலது பக்கம் சாலைக்குள் பாய்ந்து மொத்த டிராபிக்கையும் நிறுத்தியது.

பிரேக்கையும், ஹாரனையும் ஒரே அமுக்காக அமுக்கிய நண்பர், "சை! இப்பவே இப்படி இருக்கிறது. இன்னும் ஒரு லட்ச ரூபாய்க்கு கார் வந்திடுச்சின்னா அவ்வளவுதான்" என்றார்.
"ஏன்?", இது நான்.
"ஏன்னா? இப்பவே பாருங்க ரோடுல இடமில்ல. டாடா நேனோ காரை கொண்டு வந்துட்டான்னா, அவனவன் ஒரு லோனை போட்டிருவானுங்க. எல்லாம் ஆளுக்கொரு காரை வச்சுக்கிட்டு தெருவை அடைச்சுக்குவானுங்க"
"அதுதான் நிறைய பிரிட்ஜ், சப்-வேல்லாம் கட்டுறாங்களே?"
"எத்தனை கட்டுனாலும், ஒரு லட்ச ரூபா கார் வந்தா நாஸ்திதான். அதனால் ரோடு ஃபிரியா இருக்கணும்னா, இந்த ஒரு லட்ச ரூபா கார் வரக் கூடாது. இவனுங்க கார் வாங்க கூடாது"
"நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?"
"என்னது?"
"ஒரு லட்ச ரூபா கார் வரட்டும்"
"ம்.."
"அவனுங்க பஸ்ல, பைக்ல போறத நிறுத்திட்டு கார் வாங்கட்டும்"
"ம்.."
"இதே தெருவுல கன்னா பின்னான்னு என்ஜாய் பண்ணி ஓட்டட்டும். "
"ரோட்டுல இடமிருக்காது அண்ணே!"
"அதுக்குதான் நான் இப்ப ஐடியா சொல்றேன் தம்பி! நாமளும், அவனுங்களும் ஆளுக்கொரு கார்ல போனாதான இடமிருக்காது. இனிமே அவனுங்க மட்டும் கார் ஓட்டட்டும். நாம கார்ல போறத விட்டுட்டு பஸ்லயும், பைக்லயும் போகலாம். ஓகேவா?"

என் நண்பர் பதில் சொல்லவில்லை. பதிலுக்குப் பதிலாக கோபமாக ஆக்ஸிலேட்டரை அழுத்தி சரக்கென வேகமெடுத்தார். இந்தியாவின் தற்போதைய ஸோ கால்டு பணக்காரர்கள் என் நண்பரின் ஜெராக்ஸ் காப்பிகள்தான். இந்தியாவின் சந்தோஷங்கள், வளர்ச்சிகள், செல்வாக்குகள் எல்லாம் தங்களுக்கு மட்டும்தான் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை விட பண அந்தஸ்தில் கீழாக இருப்பவர்களுக்கு இவற்றில் எந்தப் பங்கும் இல்லை என்று கூசாமல் சொல்கிறார்கள்.

இவர்கள் அரசாங்கத்திடம் உதவி கேட்டால் அதற்குப் பெயர் 'Subsidy'. ஏழைகள் கேட்டால் 'இலவசம்' என்று ஒரு விளக்கம் வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் 'மும்பை தாஜ் ஹோட்டலில்' தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டால் மொத்த இந்தியாவையும் பொங்கியெழுந்து போராடச் சொல்கிறார்கள். மற்றவர்கள் 'சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில்' பாதிக்கப்பட்டால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றக் கூட மறக்கிறார்கள்.

எப்போதுமே தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் இந்த சிந்தனைதான் 'தீவிரவாதத்தின் முகம்'. இந்த தீவிரவாத முகங்கள் இந்தியா முழுவதும் நிறைய உள்ளன.

கடுப்'பூ' அல்ல சலிப்'பூ' - விமர்சனம்

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் காலில் எடைக் கல் விழுந்தால் கூட சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் பெண், கடைசிக் காட்சியில் கதறி அழுகிறாள். ஏன்? இதுதான் படத்தின் ஒன் லைன்.

சிறுகதையை நெடுங்கதையாக்கும்போது மூலக்கதையை சிதைக்காத பல சம்பவங்கள் தேவைப்படும். அது திரைக்கதையாகும்போது சுவாரசியமான காட்சியமைப்புகள் தேவைப்படும். பூவில் சுவாரசியமான காட்சியமைப்புகள் உண்டு. ஆனால் தொடர்ச்சியான சம்பவங்கள் இல்லை. அதனால் ஒரு நல்ல ஒரு பக்கச் சிறுகதையை இரண்டு மணிநேரம் படித்த ஒரு சலிப்பு ஏற்படுகிறது.

90களில் தமிழ்சினிமாவின் நிரந்தர காலேஜ் ஸ்டூடண்ட் முரளி என்ன செய்தாரோ, அதை பூவின் நாயகி காயத்ரி செய்திருக்கிறார். தன்னுடைய முறை மாமனின் மேலிருக்கும் காதலைச் சொல்ல முடியாமல் படம் முழுவதும் தவிக்கிறார், தவிக்கிறார்... படம் முடிந்த பின்னும் தவித்துக்கொண்டே இருக்கிறார்.

ஒரு இளம் மனைவியின் மறக்க முடியாத (திருமணத்திற்கு முந்திய) காதலைச் சொல்ல தைரியம் வேண்டும். அந்த தைரியத்திற்காக இயக்குனருக்கு சபாஷ். ஆனால் அவர் சொன்னது காதலை அல்ல. காதலைச் சொல்ல முடியாத வெறும் தவிப்பு என்பதுதான் படத்தின் மைனஸ்.

நகரப் பிண்ணனியிலிருந்து விலகி (பருத்தி வீரன் கொடுத்த தைரியத்தில்) வித்தியாசம் காட்டுவதற்காக வேட்டுக் கம்பெனிகளையும், கள்ளிப் பூக்களையும் காட்டுகிறார்கள். ஆனாலும் 'அழகிகளும், ஆட்டோ கிராப் நாயகிகளும்' ஞாபத்திற்கு வந்து படத்தில் ஒன்ற விடாமல் கெடுக்கிறார்கள். என் கூட வந்த நண்பர் படத்தை மிகவும் இரசித்தார். நான் யூகிக்கின்ற முக்கிய காரணம் அவர் 'அழகி, ஆட்டோ கிராப்' போன்ற படங்களை பார்க்கவில்லை.

படத்தில் வரும் அத்தனை உப பாத்திரங்களும் புது முகங்கள். ஆனாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 'பேனாக்காரர்', 'அலோ டீ கடைக்காரர்', 'மாரியின் அண்ணன்', 'மாரியின் கணவன்', 'மாரியின் தோழி', 'சூப்பர்வைஸர்' என எல்லோருமே மனதில் நிற்கிறார்கள். (அகத்தியனின் கோகுலத்தில் சீதை படத்தைப் போல) எல்லோரும் நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் . . .

சொந்தத்தில் கல்யாணம் செய்தால் பிறக்கும் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்கின்ற கிளைமாக்ஸ் வாதத்துடன் பூவின் முறைமாமன் காதல் நிறைவேறாமல் போகும்போது, அழகியலுடன் அறிவியல் மிக்ஸ் ஆகி சட்டென படத்தின் மேல் ஒரு கடுப்'பூ' வருகிறது.

"தேவதைகள் வானத்திலிருந்து குதித்து விடுவதில்லை. மாமனுக்கு மகளாக பிறக்கிறார்கள். தேவதைகளை கைப்பிடிக்கும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. மீதி பேர் 'பூ' படத்தின் நாயகன் தங்கராசுவை போல மனமறுந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விடுங்கள், நமக்கே நமக்கென ஒரு மாரியம்மாள் இனிமேல் புதியதாகவா பிறந்து வரவேண்டும்?" என்று லக்கிலுக் ஆன்லைனில் விமர்சனம் படித்தேன். தங்கராசுவின் பார்வையில் சினிமா நகர்ந்திருந்தால் ஒருவேளை நானும் லக்கிலுக் போல நெகிழ்ந்திருப்பேன். ஆனால் நாயகி மாரியின் நோக்கில் கதை நகரும்போது என்னால் பெரிதாக ஒன்ற முடியவில்லை.

"பூ படத்தில ஓர் இடத்தில் மாரி “ கல்யாணமாயிருச்சுன்னா எல்லாத்தையும் மற்ந்துரனுமா என்னா? “ என்று கேட்பது காதல் வயப்பட்டு கைகூடாமல் போன எல்லா காதலர்கள் மனதிலும் எழும்பும் கேள்விதான்.. . ஓரு பெண்ணின் பார்வையில் அவளின் காதலை சொல்லும் பூ படத்துக்கு பெரிய வசூல் இல்லை என்பது இந்த ஆண் ஆதிக்க சமுதாயத்தினால்தானோ.. என்று தோன்றுகிறது.." என்று கேபிள் சங்கர் விமர்சித்திருந்தார். அவர் சொல்வது போல எனக்கோ பார்வையாளர்களுக்கோ தோன்றவில்லை. அதைப் பொறுத்தவரையில் இயக்குனருக்கு வெற்றிதான். ஆனால் காதலுக்குத் தொடர்பில்லாத, சொந்தத்தில் கட்டக் கூடாது என்ற ஒரு கருத்து திணிக்கப்பட்டவுடன், அடச் சே இதுக்காகத்தானா இவ்வளவு நேரம் . . . என்று தோன்றுகிறது.

படத்தின் டைட்டில் 'பூ'. ஆனால் எந்த இடத்திலும் பூவைக் காட்டவில்லை. பூக்களுக்குப் பதிலாக ஒரு கள்ளிப்பூவைப் போல படம் முழுக்க நிறைகிறார் நாயகி காயத்ரி. அபார திறமை.

இசை சுமார். இசையமைப்பாளர் இது போன்ற படங்களுக்கு இசையமைக்க உட்காரும்போது, பிண்ணனி இசை ஆசான் இளையராஜாவின், படங்களை பார்த்துவிட்டு அமர்வது நல்லது.

எத்தனை நொட்டைகள் சொன்னாலும், இது இயக்குனர் சசியின் சீரியஸ் முயற்சி என்பதில் சந்தேகமில்லை. வாரணம் ஆயிரம் படத்தை பார்த்தபின்னும் கெளதமின் மேல் எனக்கு இதே எண்ணம்தான் தோன்றியது.

இரண்டுக்கும் ரிசல்ட் ஒன்றுதான். ஆழமில்லை!

Thursday, December 4, 2008

விஜயகாந்தின் ரியல் பேட்டியும் - ரீல் பேட்டியும்

கட்டுப்பாடு, ஒழுக்கம்னு சொல்ற நீங்க ஊழல் செய்தவங்களுக்கு கட்சியில இடம் கொடுத்திருக்கீங்களே?

எங்க கட்சியில பொன்னுசாமி வந்தபிறகுதான் இப்படிச் சொல்றாங்க. நான் கேட்கறேன்.. எந்தக் கட்சியிலதான் ஊழல்வாதிங்க இல்ல.. முந்தின கலைஞர் ஆட்சியில குற்றம் சாட்டப்பட்ட சேடப்பட்டி முத்தையாவும், இந்திரகுமாரியும் இப்போ தி.மு.கவுலதானே இருக்காங்க. ஆக, பெரியவங்க செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரி.. ஆனா நான் செய்தா தப்பு. என்ன நியாயங்க இது? பொன்னுசாமி செய்த தப்புக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்து அதை அவரும் முழுசா அனுபவிச்சுட்டாரு. தண்டனை கொடுக்கறது எதுக்கு? தப்பு பண்ணினவங்க திருந்தறதுக்குத்தானே. பிறகு ஏன் கட்சியில சேர்க்கக்கூடாதுன்னு கேட்கறேன்.. எத்தனையோ குர்த் இன மக்களைக் கொலைசெய்த சதாம் உசேனுக்கே தூக்கு தண்டனை தரக்கூடாதுன்னு சொல்றாங்க. இவர் என்ன, லஞ்சம் தானே வாங்கினாரு.
2006ல் விஜயகாந்த் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி இந்தியா 360 டிகிரி


இனிமேல் 2011ல் விஜயகாந்த் கொடுக்கப் போகும் பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி விஜயகாந்த்

கட்டுப்பாடு, ஒழுக்கம்னு சொல்ற நீங்களே லஞ்சம் வாங்கியிருக்கீங்களே?
எங்க கட்சி சார்புல நான் லஞ்சம் வாங்கின பிறகுதான் இப்படி சொல்றாங்க. நான் கேட்கறேன். எந்தக் கட்சியிலதான் லஞ்சம் வாங்கல. இதுக்கு முன்ன ஆட்சி செய்த கருணாநிதி லஞ்சம் வாங்கலையா? ஜெயலலிதா லஞ்சம் வாங்கலையா? பெரியவங்க செஞ்சா பெருமாள் மாதிரி... நான் செஞ்சா தப்பா, என்ன நியாயங்க இது? கருணாநிதி, ஜெயலலிதா செஞச் தப்புக்கு தண்டனையா அவங்கள ஆட்சிய விட்டு அனுப்பியாச்சு. அவங்களும் அதை ஏத்துக்கிட்டாங்க. தண்டனை கொடுக்கிறது எதுக்கு? தப்பு பண்ணினவங்க திருந்தறதுக்குதான? பிறகு ஏன் லஞ்சம் வாங்கக் கூடாதுன்னு கேட்கறேன். லஞ்சம் வாங்கினாதான திருந்த முடியும். எத்தனையோ குர்த் இன மக்களைக் கொலைசெய்த சதாம் உசேனுக்கே தூக்கு தண்டனை தரக்கூடாதுன்னு சொல்றாங்க. நான் என்ன லஞ்சம் தான வாங்கினேன். இது பெரிய தப்பா?

- அடுத்ததும் 2006ல் விஜயகாந்த் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி இந்தியா 360 டிகிரி
நிறையப்பேர் புதிதாக உங்கள் கட்சியில் சேருகிறார்கள். எந்த எதிர்பார்ப்பில் வருகிறார்கள்? பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலா?

‘உங்களோட கொள்கை பிடிச்சிருக்கு.. நீங்க எடுக்கற திடகாத்திரமான முடிவு பிடிச்சிருக்கு.. அதனாலதான் வந்தோம்'னுதான் சொல்றாங்க. இதைக் கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. உண்மையில அவங்களுக்கு இப்போ நடக்குற அரசியல் பிடிக்கவே இல்லீங்க. அவங்க ஒரு புதிய பாணி அரசியலைத் தேடி என் கட்சிக்கு வர்றாங்க. அப்படி மாற்றுக் கட்சியில இருந்து வர்றவங்க ஏற்கெனவே அவங்க இருந்த கட்சிகள்ல எந்த ஆதாயமும் இல்லாம வெறுத்துப்போய் இருக்கறவங்களா தெரியறாங்க. அவங்களுக்கு ஏதாவது செய்தே ஆகணுங்கற பொறுப்பும் பயமும் எனக்கு வந்திருக்கு. அவங்களோட தேவை என்ன.. எதிர்பார்ப்பு என்னன்னு பார்த்து அதைக் கண்டிப்பா பூர்த்தி பண்ணுவேன். ஆனா என் கட்சிக்கு வர்றவங்க ஒழுக்கமாகவும், கட்சியோட கொள்கைக்கு கட்டுப்பட்டும் நடந்துக்கணுங்கறதுதான் என்னோட எதிர்பார்ப்பு. என் ரசிகர்களை அப்படி வளர்த்ததுதான் இன்னிக்குக் கட்சியை கட்டுக்கோப்பா நடத்த உதவுது.

- இதுவும் இனிமேல் 2011ல் விஜயகாந்த் கொடுக்கப் போகும் பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி விஜயகாந்த்

நிறையப்பேர் புதிதாக உங்கள் கட்சியில் லஞ்சம் வாங்குகிறார்கள். எந்த எதிர்பார்ப்பில் வாங்குகிறார்கள்? மாட்டிக் கொள்ள மாட்டோம் என்ற நம்பிக்கையிலா?

‘உங்களோட கொள்கை பிடிச்சிருக்கு.. நீங்க வாங்குற லஞ்சம் பிடிச்சிருக்கு.. அதனாலதான் வாங்கறோம்'னுதான் சொல்றாங்க. இதைக் கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. உண்மையில அவங்களுக்கு இப்போ மத்த கட்சிகள் வாங்குற லஞ்சம் பிடிக்கவே இல்லீங்க. அவங்க ஒரு புதிய பாணி லஞ்சத்தை தேடி என் கட்சிக்கு வர்றாங்க. அப்படி மாற்றுக் கட்சியில இருந்து வர்றவங்க ஏற்கெனவே அவங்க இருந்த கட்சிகள்ல மூலமா எந்த லஞ்சமும் வாங்க முடியாம வெறுத்துப்போய் இருக்கறவங்களா தெரியறாங்க. அவங்களுக்கு லஞ்சம் கிடைக்க ஏதாவது செய்தே ஆகணுங்கற பொறுப்பும் பயமும் எனக்கு வந்திருக்கு. அவங்களோட தேவை என்ன.. எதிர்பார்ப்பு என்னன்னு பார்த்து அதைக் கண்டிப்பா பூர்த்தி பண்ணுவேன். ஆனா என் கட்சிக்கு வர்றவங்க லஞ்சத்துக்கும், ஊழலுக்கும் கட்டுப்பட்டு் நடந்துக்கணுங்கறதுதான் என்னோட எதிர்பார்ப்பு. என் ரசிகர்களை அப்படி வளர்த்ததுதான் இன்னிக்குக் கட்சியை கட்டுக்கோப்பா நடத்த உதவுது.


- இதுகூட 2006ல் விஜயகாந்த் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி
- நன்றி இந்தியா 360 டிகிரி

அடுத்த மாநாடு எப்போது?

மாநாடுங்கறது என்னோட தொண்டர்களை ஸ்டடி பண்றதுக்காக நடத்தறதுதான். அதேசமயம் அடிக்கடி மாநாடு போட்டு தொண்டர்களுக்கு அதிக செலவு வைக்க எனக்கு விருப்பமில்ல. அதனாலதான் தேர்தல் பிரச்சாரத்துல எல்லோருமே ஸ்டேஜ் போட்டப்போ நான் டெம்போ வேன்ல பிரச்சாரம் பண்ணினேன். மீட்டிங் போட்டா அடிமட்ட தொண்டர்களுக்குத்தான் நிறைய செலவாகும். அதன்பிறகு என்னை முன்னுதாரணமா வச்சு எல்லோரும் டெம்போ டிராவலர்ல வந்தாங்க.

- இதுகூட இனிமேல் 2011ல் விஜயகாந்த் கொடுக்கப் போகும் பேட்டியின் ஒரு பகுதி - நன்றி விஜயகாந்த்

அடுத்த மாநாடு எப்போது?

மாநாடுங்கறது என்னோட தொண்டர்களை (குவார்டர் அடிச்சுட்டு வந்தாலும்) ஸ்டடி பண்றதுக்காக நடத்தறதுதான். அதேசமயம் அடிக்கடி மாநாடு போட்டு தொண்டர்களையும் லஞ்சம் வாங்கி அதிக வசூல் செய்ய வைக்க எனக்கு விருப்பமில்ல. அதனாலதான் தேர்தல் பிரச்சாரத்துல எல்லோருமே ஸ்டேஜ் போட்டப்போ லஞ்சப் பணம் வெளியில தெரிஞ்சிடுமேன்னு நான் டெம்போ வேன்ல பதுக்கி வச்சுட்டு பிரச்சாரம் பண்ணினேன். கட்டிங் போட்டா அடிமட்ட தொண்டர்களுக்குத்தான் நிறைய செலவாகும். அதன்பிறகு என்னை முன்னுதாரணமா வச்சு எல்லோரும் டெம்போ டிராவலர்ல வந்தாங்க.

2006ல் கல்கிக்கு அளித்த ஒரு பேட்டியின் இன்னொரு பகுதி

நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களைக் கவர என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

என்னோட திட்டங்கள் எதையும் நான் வெளில சொல்லப் போறதில்ல. அப்படி சொன்னா அதை மத்த கட்சிக்காரங்க எடுத்துகிட்டு, ‘நான்தான் செய்தேன்‘னு சொல்லிடறாங்க.

2011ல் நமக்கு அளிக்கப் போகும் பேட்டியின் இன்னொரு பகுதி
நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களைக் கவர என்ன ஊழல் வைத்திருக்கிறீர்கள்?

என்னோட ஊழல்கள் எதையும் நான் வெளில சொல்லப் போறதில்ல. அப்படி சொன்னா அதை மத்த கட்சிக்காரங்க எடுத்துகிட்டு, ‘நான்தான் செய்தேன்‘னு சொல்லிடறாங்க.

Tuesday, December 2, 2008

ஒரே காரில் தமிழகத்தின் முதல் குடும்ப வாரிசுகள்

தமிழகத்தில் நம்முடைய புலனாய்வு பத்திரிகைகள் மும்பை தீவிரவாதிகளையும், நிஷா புயலையும் துரத்திக் கொண்டிருந்தபோது, சத்தமே இல்லாமல் தமிழகத்தின் முதல் குடும்பம் சண்டை சச்சரவுகளை மறந்து(மறைத்து) ஒன்று சேர்ந்துவிட்டார்கள். பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்துவிட்டு,  மாறன் சகோதரர்களும், அழகிரி மற்றும் ஸ்டாலின் சகோதரர்களும் ஒரே காரில் பயணம் செய்தார்களாம்.

இதே போல மின்வெட்டுத்துறை ஆற்காடு வீராசாமி, ஸ்பெக்ட்ரம் துறை ராஜா, அவாளின் பேரன் தயாநிதி ஆகியோரும் ஒரே காரில் பயணம் செய்வார்களா? குறைந்தபட்சம் ஒரே ஹோட்டலில் சாப்பிடுவார்களா? சந்தேகம்தான்.