Saturday, October 4, 2008

குமுதம் - நல்ல பத்திரிகைக்கான தகுதியை இழந்துவிட்டது

தற்கால இளைஞர்களின் கிளர்ச்சிப் போக்கு ஒரு நோயின் அறிகுறியா? அல்லது அதுவே ஒரு நோயா?

இந்தக் கேள்வி 20 வருடங்களுக்கு முன்னால் கேட்கப்பட்ட கேள்வி! கேள்வி கேட்டவர் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி. இன்று அவர் நம்மிடையே இல்லை. ஆனால் அந்தக் கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது, எந்தப் பதில்களும் இல்லாமல்.

இரவிலும் வேலை, வழிய வழிய பணம், வீக் எண்ட் பார்ட்டி, லிவிங் டு கெதர், லேட்டஸ்ட் கார், டிரிபிள் பெட் ரூம் ஃபிளாட் என இந்திய இளைஞர்கள் தற்போது ஒரு வித கிளர்ச்சியில் இருக்கிறார்கள்.

"இளைஞர் கிளர்ச்சிப் போக்கு என்பது நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தலைவிரித்தாடுகின்றன. அவற்றை விளக்குவது கூட வியாதி பரப்புகிற முறை என்று நான் அறிந்திருப்பதனால் அதனை விவரிக்காமல் தவிர்க்கிறேன்."

20 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி எழுதியிருப்பது வேறு யாருமல்ல, நமது ஜெயகாந்தன். அவருடைய எழுத்து எவ்வளவு பொறுப்புடனும், அக்கறையுடனும் இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். "ஓர் ஆன்மீக ஆய்வுக்கு முன்னால் . . ." என்ற கட்டுரையில் அவ்வாறு எழுதியுள்ளார். என்னுடைய ஞாபகம் சரி என்றால், அந்தக் கட்டுரை 20 வருடங்களுக்கு முன்னால் குமுதத்தில் வெளிவந்தது.

ஆனால் இவ்வளவு பொறுப்புள்ள எழுத்துக்களையும், எழுத்தாளர்களையும் ஆதரித்த குமுதம் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறது?
பெத்தாபுரம் செக்ஸ் பற்றி கவர் ஸ்டோரி போடுகிறது. கிகல்லோ பாய்ஸ் பற்றி டிப்ஸ் தருகிறது. தமிழகத்தில் மறைவாக நடக்கும் செக்ஸ் கூட்டணிகளை இடங்களைக் குறிப்பிட்டு எழுதுகிறது. டுரிஸ்ட் ஸ்பாட்டுகளில் பொதுஜன கவனிப்புக்கு உள்ளாகாத தகாத உறவுகளை சந்து முனை அடையாளத்துடன் எழுதுகிறது. அதாவது பொது மக்களுக்கும், இளைஞர்களுக்கும் தெரியாமல் நடக்கும் தவறுகளுகளை மீடியா வெளிச்சம் காட்டி, அனைவருக்கும் அறிமுகம் செய்கிறது. ஒவ்வொரு கட்டுரையின் கடைசிவரியிலும், "ஐயோ பாவம் இளைஞர்கள், அவர்களை சீரழிவிலிருந்து யார் காப்பாற்றுவார்கள்" என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறது. இந்த வார குமுதத்தின் (அக் 08) முதல் இரண்டு பக்கங்களில் கிட்டத்தட்ட 10 உதடு கடிக்கும் காட்சிகள். அதற்கு அடுத்த பக்கத்திலேயே தமிழகத்தை சீரழிக்கும் டாப் 10 சமாச்சாரங்கள் என்று ஒரு போலி அலட்டல் சர்வே. சீரழிப்பதில் முதலிடத்தில் இருப்பது குமுதம்தான்.

காந்தி படத்தில் ஒரு அற்புதமான வசனம். "சுதந்திரம் பெறுவது முக்கியமல்ல. சுதந்திரத்தை பெறுவதற்க்கான தகுதியை அடைவதுதான் முக்கியம்", என்று காந்தி மக்களை நோக்கிச் சொல்கிறார். அதே போல பத்திரிகை நடத்துவது முக்கியமல்ல, நடத்துவதற்க்கான தகுதியை விடாதிருப்பதே முக்கியம். குமுதம் தற்போது ஒரு நல்ல பத்திரிகைக்கான தகுதியை இழந்துவிட்டது.

Friday, October 3, 2008

துரை - இன்னொரு சிக்ஸ் பேக்

  • பின்னி லொகேஷன்!
  • சிக்ஸ் பேக்கில் ஹீரோ உடம்பைக் முறுக்குதல்!
  • விவேக் ஐயர் பாஷை பேசுதல் - டிராபிக் கான்ஸ்டபிளைக் கலாய்த்தல்!
  • ரீ மிக்ஸ் என்ற பெயரில் பழைய மெட்டுக்களை கெடுத்தல்!
  • போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, திடீரென ஒரு டிவி ஸ்டேஷனுக்குள் நுழைந்து ஹீரோ மக்களிடம் லைவாக பேசுதல்!
  • சுவிட்சர்லாந்து போன்ற அழகான நாடுகளில், அரைக் கிறுக்கு நடனம் ஆடுதல்!
  • ஹீரோ அம்னீஷியாவில் பழைய வாழ்க்கை மறந்திருத்தல்!
  • ஹீரோயின் டபுள் மீனிங் டயலாக் பேசுதல்!

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பது போல மேற்காணும் ஐயிட்டங்களும் படத்தில் இல்லையென்றால் வரிவிலக்கு என்று தமிழக அரசு அறிவித்தால் தமிழ் சினிமா தப்பிப் பிழைக்கும்.

ஆனால் இந்த அபத்தங்கள் இல்லையென்றால் துரை என்ற படமே இல்லை.

சிக்ஸ் பேக்கில் முகத்தில் லைட்டான சுருக்கங்களுடன் வரும் அர்ஜீன் தான் துரை. அப்பாடி டைட்டில் justified. இடைவேளை வரை, அம்னீஷியாவால், தான் யாரென்று தெரியாமல், ராஜா என்ற பெயரில் விவேக்கின் ஹோட்டலில் வேலை செய்கிறார் அர்ஜீன். துரத்தி துரத்தி காதலிக்கும் கிரத்திடம் (என்ன பேரோ) முத்தம் வாங்குகிறார். திடீரென படுக்கையில் இருந்து எழுந்து, வியர்த்து, தலையைக் கசக்கி உண்மையிலேயே தான் யார் என்று யோசிக்கிறார். லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் போய் விசாரிக்கிறார். திடீரென ஒரு வில்லன் கும்பல் துரத்த, தப்பித்து தண்ணீருக்குள் ஓடும்போது ஆரம்பிக்கிறது பிளாஷ்பேக்.

தொடர்ந்து ஒரு எதிர்பாராத தருணத்தில் இடைவேளை வரும்போது மட்டும், அட பரவாயில்லையே என்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஆனால் பிளாஷ்பேக், பிளாஷ்பேக்குக்குள் இன்னொரு பிளாஷ்பேக் என்று கதை உள்ளே போய்விட்டு வெளியே வரும்போது, திரைக்கதை நொண்டி அடிக்க ஆரம்பித்துவிடுகிறது. படத்தின் மொத்த சஸ்பென்சும் அப்போதே முடிந்துவிடுவதால், படம் இன்னும் எவ்வளவு நேரத்தில் முடியும் என்று வாட்சைப் பார்க்க வைத்துவிடுகிறார்கள். ஆனால் நம்முடைய கஷ்டம் புரியாமல், அர்ஜீன் தான் கஷ்டப்பட்டு பில்ட்அப் செய்த சிக்ஸ் பேக்கை காட்டுவதற்க்காக நம்மை ரொம்ப நேரம் அடிதடிகளை பார்க்க வைக்கிறார். அதுவும் கிளைமாக்ஸில் வில்லன் உட்பட அத்தனை அடியாட்களும், சட்டையைக் கழட்டிவிட்டுதான் சண்டை போடுகிறார்கள். சண்டை முடிவதற்குள் தியேட்டரில் ஏ.சியை ஆஃப் செய்துவிடுவதால், வியர்வையில் நாமும் சட்டையைக் கழட்டும் நிலைக்கு வந்துவிடுகிறோம்.

மகனுக்கு வாய்ப்பு தராமல், தொண்டர் திலகம் அர்ஜீனை கட்சியின் அடுத்த தலைவராக்க முடிவுசெய்கிறார், கட்சித் தலைவர். கோபமாகும் மகன், அப்பாவைக் கொன்று பழியை தொண்டர் அர்ஜீனின் மேல் போடுகிறார். போலீஸ் அவரை என்கவுண்டர் செய்ய முயற்சிக்க, என்கவுண்டரில் தப்பிக்கிற அர்ஜீன், மண்டையில் அடிவாங்கி அம்னீஷியா கேஸாகி, பிறகு அம்னீஷியாவிற்கும் தப்பித்து, வில்லனை பழிவாங்குகிறார்.

ஒரே ஒரு பாடலில் மட்டும் வந்தாலும் கஜாலா தான் நல்ல நடிகையாக வரக்கூடியவர் என்று மீண்டும் நிருபிக்கிறார். ஹீரோயின் கிரத்தை அம்னீஷியா இல்லாமலே எளிதில் மறந்துவிடலாம். வரிசையாக ஜோக் அடிப்பது மட்டுமே காமெடி கிடையாது என்று அனுபவஸ்தர் விவேக்கிற்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் இப்போதெல்லாம், அந்த லெவலை தாண்டி வரமாட்டேன்கிறார்.

'ராஜா, ராஜாதி ராஜனிந்த ராஜா' இது இளையராஜாவின் மாஸ்டர் பீஸ். வெறும் ரிதம் பேடை வைத்துக்கொண்டே, அற்புதமாக இசை அமைத்திருப்பார். அதை சொல்லிவிட்டுக் கெடுத்திருக்கிறார் இமான். அது போலவே 'Boney-M'ன் ரஸ்புதின் பாடலை சொல்லாமல் கெடுத்திருக்கிறார்.

இயக்குனரைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. கதை, திரைக் கதை இரண்டுக்கும் அர்ஜீனே பொறுப்பேற்றிருக்கிறார். உண்மையைச் சொன்னால் நம்மை வெறுப்பேற்றியிருக்கிறார்.

காம்ரேட்களுக்கு நோஸ்கட் கொடுத்த ஜெயலலிதா!

அ.தி.மு.க நடத்துகிற ஆர்ப்பாட்டங்களுக்கே ஜெயலலிதா ஆஜராகமாட்டார். அவருடைய எடுபிடிகள்தான் வருவார்கள். இந்த இலட்சணத்தில் இந்திய கம்யூனிஸ்டுகள் நடத்துகிற ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க சப்போர்ட் என்பது பெரிய அரசியல் திருப்புமுனையாக அ.தி.மு.க ஆதரவு மற்றும் தி.மு.க எதிர்ப்பு மீடியாக்களால் சித்தரிக்கப்பட்டன.

ஜெயலலிதா வழக்கம்போல தன்னுடைய டிபிக்கல் ஸ்டைலில் அனைவருக்கும் நோஸ்கட் கொடுத்துவிட்டார். போராட்ட பந்தலுக்கு தன்னுடைய எடுபிடி அ.தி.மு.க., அமைப்புச் செயலர் முத்துச்சாமியைக் கூட அனுப்பவில்லை. அதுமட்டுமல்ல அதற்க்கான காரணத்தைக் கூட இந்த வினாடி வரை யாரையும் மதித்துச் சொல்லவில்லை. இத்தனைக்கும் வலியவந்து, அ.தி.மு.க பங்கேற்கும் என்று எழுத்து மூலம் அறிவித்தவர் அவர்தான்.

சுயமரியாதைச் சிங்கங்களான வை.கோ. மற்றும் காம்ரேட்கள் ஜெயலலிதாவின் இந்த அவமரியாதை அட்டாக்கை எப்படி மீசையில் மண் ஒட்டாமல் சமாளிக்கிறார்கள் என்பதைக் காண ஆவலோடு இருக்கிறேன்.

ஜெயலலிதா மாறிவிட்டார். கட்சித்தொண்டருடன் அமர்ந்து உணவு சாப்பிடுகிறார், அனைவரையும் மதிக்கிறார் என்று அவருடைய கைத்தடி நாளிதழ் தினமலர், பத்து நாளைக்கு முன்பே பொய் பிரச்சாரத்தை துவக்கியது. இதை நானும் குறிப்பிட்டிருந்தேன்.

இதில் ஐயோ பாவம் யார் தெரியுமா? ஜெயா ஆதரவு மீடியாக்களின் பிரச்சாரத்தை நம்பி ஏமாந்த இலங்கை தமிழ் எம்.பிக்கள்தான். ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தர தயாராகிவிட்டார் என்று அவர் பங்கேற்கும் முன்பே, ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டதாக அவசரப்பட்டு ஜெயாவை புகழ்ந்து தள்ளிவிட்டார்கள்.

நான் இப்பவும் சொல்கிறேன், விஜயகாந்த் - கம்யூனிஸ்ட் கூட்டணி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்க்காக ஜெயலலிதா மேற்கொண்ட கீழ்த்தரமான நாடகம்தான் இந்த போராட்டத்திற்கான சம்மதமும், வாபசும்.

கருணாநிதியை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு ஜெயலலிதாவை ஆதரிக்கும் அனைவருக்கும் இது ஒரு சரியான அவமரியாதை 'பஞ்ச்'.

சுய புத்தியும், சுய மரியாதையும் உள்ளவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை!

Thursday, October 2, 2008

வெற்றிகரமான பதிவர் சந்திப்புக்கு 10 யோசனைகள்

ஒரே ஒரு பிளாக் எழுதுவதன் மூலம் ஒரு பதிவர் சந்திப்பை அறிவித்துவிட முடியும். ஆனால் வெற்றிகரமான சந்திப்பிற்கும், மீண்டும் மீண்டும் சந்திப்பதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும். இதோ என்னுடைய 10 யோசனைகள். வெளிநாடுகளில் இது போன்ற பதிவர் சந்திப்புகள் "வெற்றிகரமான பிசினஸ் நெட்வொர்க் சந்திப்புகளாகவும்" நிகழ்த்தப்படுகின்றன. கலந்துகொண்ட அனுபவம் எனக்கு உண்டு. இதன் மூலம் வெறும் வெட்டிச் சந்திப்பாக இல்லாமல், ஏதோ ஓரளவிற்கு உபயோகமான சந்திப்பாக மாற்றிக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு ryze.com
  1. மீண்டும் . . . மீண்டும் . . .சந்திப்பை முன் நின்று நடத்துபவர் யார் என்பது அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
  2. அவருடன் உரையாட வசதியாக ஒரு தொலைபேசி எண் அவசியம் தேவை
  3. நடத்துபவரும், அவருடைய குழுவும் அறிவிக்கப்படவேண்டும்
  4. சந்திப்பின் காரணம் பொத்தாம் பொதுவாக இருக்கக் கூடாது.
    உதாரணமாக ஒரு டாப்பிக் - "பதிவுகளின் பலன்களும், பாதகங்களும்"
  5. இது குறித்து யார், யார் பேசலாம் என்பதை முன் கூட்டியே உறுதி செய்ய வேண்டும்.
  6. சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் கட்டாயம் தேவை. உதாரணமாக . .
    வரவேற்புரை
    விருந்தினர் அறிமுகம்
    இன்றைய தலைப்பு ஒரு அறிமுகம்
    முதல் 5 பேச்சாளர்கள்
    டீ பிரேக்
    அடுத்த 5 பேச்சாளர்கள்
    நன்றியுரை மற்றும் முடிவுரை
  7. யார் வரவேற்புரை, யார் தலைப்பை அறிமுகம் செய்வது, யார் பேச்சாளர்களை அறிமுகப்படுத்துவது, யார் நன்றியுரை மற்றும் முடிவுரை வழங்குவது போன்ற அனைத்தும் முதலிலேயே தீர்மானிக்கப்படவேண்டும்.
  8. சந்திப்பிற்கான செலவுகளை எப்படி பகிர்ந்து கொள்வது என்ற தெளிவான சிந்தனை தேவை.
  9. அடுத்த பதிவர்கள் சந்திப்பு எப்போது இருக்கலாம் என்பதற்க்கான உத்தேச தேதிகள் இருக்க வேண்டும்.
  10. பதிவர் சந்திப்பிற்கென 'தனி வலைப்பூ' இருக்க வேண்டும்.

விஜயகாந்த் சார், போலீஸ் யூனிஃபாரம் என்றால் அருவருப்பு, முதல்வர் நாற்காலி என்றால் தகதகப்பா?

விஜயகாந்த் வாய்விட்டு சொன்னது
தமிழக போலீஸ் அராஜகங்களைப் பார்க்கும்போது,
திரைப்படத்தில் கூட யூனிஃபார்ம் அணியும்போது அருவருப்பாக இருக்கிறது.

விஜயகாந்த் மனசுக்குள் ஜபிப்பது
முதல்வர் நாற்காலியிலிருப்பவர் செய்யும் அட்டகாசங்களைப் பார்க்கும்போது,
2011ல் நான் எப்படியாவது முதல்வராகிவிடவேண்டும் போலிருக்கிறது.

அதாவது . . .
போலீசெல்லாம் கெட்ட போலீசாம்.
அதனால் போலீஸ் வேஷம் போடக்கூட அருவருப்பாக இருக்கிறதாம்.
அதே போல தற்போதைய முதல்வர் நாற்காலியும் கெட்ட நாற்காலியாம்.
ஆனால் அந்த நாற்காலி 2011ல் வேண்டுமாம்.

போலீஸ் உடை என்றால் அருவருப்பு, முதல்வர் பதவி என்றால் தகதகப்பா? அட்டுழியம் செய்வதாகச் சொல்லி போலீஸ் என்றாலே அருவருக்கும் விஜயகாந்த், அதே போல அட்டூழியம் செய்வதாகச் சொல்லும் முதல்வர் பதவியைக் கண்டும் அருவருப்பாக இருக்கிறது ஏன் சொல்லவில்லை?

வெரி சிம்பிள் லேடீஸ் அண்டு ஜென்டில்மென்.
பதவி என்பது ஒரு வெறி. விஜயகாந்துக்கு அந்த வெறி தலைக்கேறிக்கொண்டிருக்கிறது.

Wednesday, October 1, 2008

ஞானி வைக்க மறுத்த குட்டு

"விஜயகாந்த்துக்கும் இவருக்கும் தனிப்பட்ட தகறாறு வந்தால், அதற்க்காக இவரும் தேர்தலில் குதித்து, அவருக்கு எதிராக போட்டி போட்டு, நம்மையெல்லாம் வம்புக்கு இழுப்பாராம். அய்யா எங்களை வெச்சு காமெடி ஒண்ணும் பண்ணலியே?"

இது ஞானி வடிவேலுவுக்கு வைத்த குட்டு

"இவருக்கும், வடிவேலுவுக்கும் தனிப்பட்ட தகறாறு வந்தால், அதற்க்காக கருணாநிதியை சன் டிவி லைவ் பிரஸ் மீட் வைத்து திட்டுவாராம்.  படத்துல கூட  யூனிபாரம் போடவே அருவருப்பா இருக்கு என்று தமிழக போலீஸை அசிங்கப்படுத்துவாராம்.அய்யா எங்களை வெச்சு காமெடி ஒண்ணும் பண்ணலியே?"

இது ஞானி விஜயகாந்துக்கு வைக்க மறுத்த குட்டு

அதனால் அந்தக் குட்டை நான் ஞானிக்கே வைக்கிறேன்.  'டங்'

Tuesday, September 30, 2008

ரஜனி, சாருநிவேதிதா, காதல் இல்லாவிட்டால் . . .

ரஜினி
கருணாநிதி
விஜயகாந்த்

சன் டிவி
கலைஞர் டிவி

குமுதம்
விகடன்

சரக்கு

சாருநிவேதிதா

காதல்

இந்தப் பட்டியலில் உள்ள இவர்களும் - இவைகளும் இல்லாவிட்டால், (என்னையும் சேர்த்து) 90 சதவிகிதம்பேர் மறுமொழி எழுதக்கூட வழியின்றி விழிப்பார்கள். பதிவு போடுவதை மறப்பார்கள்.

Monday, September 29, 2008

கேள்வி நான் - பதில் நீங்கள் : கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவு!!! ஜெயலலிதாவின் இந்த முடிவு, விஜயகாந்த்துடன் கட்டிப்பிடி பயிற்சியா? வெட்டிவிடும் முயற்சியா?

இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்காக அக்டோபர் 2ம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அ.தி.மு.க.,வும் ம.தி.மு.க.,வும் பங்கேற்கிறது.

தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க மார்க்சிஸ்ட் கட்சி முயற்சித்துவரும் நிலையில், அ.தி.மு.க.வின் இந்த முடிவு எதைக் காட்டுகிறது?

ஜெயலலிதாவின் இந்த முடிவு . . .
(கம்யூனிஸ்ட் கதவுகள் வழியாக) விஜயகாந்த்துடன் கூட்டணி ஜோடி போடும் முயற்சியா?
(கம்யூனிஸ்ட் கதவுகளை அடைத்து) விஜயகாந்த்தை தனிமை ஜாடியில் அமுக்கி வைக்கும் முயற்சியா?