Wednesday, September 17, 2008

Soft Targets

"Being a celebrity I'm a soft target"

ஏதோ ஒரு பாலிவுட் படத்தின் ஆடியோ வெளியீடு.  நாங்கள் உத்திரப் பிரதேசத்துக்காரர்கள், அதனால் நாங்கள் கண்டிப்பாக இந்தியிலே பேச வேண்டும்" என்று ஜெயாபச்சன் பேசிவிட்டார். தொடர்ந்து பிரியங்கா சோப்ராவும் இந்தியில்தான் பேசினார்.

உடனே மஹாராஷ்டிராவின் 'தாதா வகையறா' காவலர்களான பால் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் வெகுண்டு எழுந்துவிட்டார்கள். "பச்சன் குடும்பத்துக்கு உப்பு போட்டது, சோறு போட்டது, குழம்பு ஊத்துனது எல்லாமே மஹாராஷ்டிராதான், அப்படி இருக்கும்போது நீங்க மராத்தியில பேசாம ஏன் இந்தியில பேசி மராத்தியர்களை அவமதிச்சீங்க" என்று பச்சன்களை எதிர்த்து வெறியாட்டம் போட ஆரம்பித்துவிட்டார்கள்.

மஹாசாஷ்டிரா நவ்நிர்மான் சேனாவும், சிவசேனாவும் ஒரே நேரத்தில் அமிதாப் குடும்பத்தை வார்த்தைகளால் குதறி எடுத்தன. அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் படங்களை வெளியிட முடியாதபடி தியேட்டர்களை சூறையாடின.

நொந்துபோன அமிதாப் டிவி வாயிலாகவும், பத்திரிகை வாயிலாகவும் மராத்தியர்களிடம் மன்னிப்பு கோரினார்.  அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்தான் மேலே காணப்படுபவை.

நம்ம ஊரிலும் அப்படி ஒரு சாஃப்ட் டார்கெட் இருக்கிறார். 
அவர் பெயர் ரஜினிகாந்த்.

Tuesday, September 16, 2008

இது மாறன் சகோதரர்களின் வியூகமா? யூகமா?

மதுரை தினகரன் அலுவலகம் நொறுக்கப்பட்டபோது, அதை முதலில் கண்டித்தவர் கருணாநிதியின் மருமகன் செல்வம் (கலைஞரின் மகள் செல்வியின் கணவர்). மாறன் பிரதர்ஸ் தாத்தாவுக்கு எதிராக, அதாவது தனது மாமனாருக்கு எதிராக வாளை சுழற்றுகிற இன்றைய சூழலில் கூட அவர் மாறன் சகோதரர்களுடன்தான் இருக்கிறார். அதற்கு காரணம் செல்வத்திற்கு அழகிரியின் மேல் இருக்கிற கோபமா? அல்லது மாறன் பிரதர்ஸ் மேலிருக்கிற பாசமா என்பது ஒரு விடுகதை.

ஆனால் தினமலர் கார்ரடூன் விவகாரத்தில், சன் டிவியின் மேல் சட்டம் பாயத் தயாரான போது, கேடயமாக செல்வம் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார். முடிந்தால் உன் மருமகனை தண்டித்துக்கொள் என்று மாறன் பிரதர்ஸ் தாத்தா கருணாநிதிக்கு செக் வைத்திருக்கிறார்கள் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். தனது மாமனார் கலைஞரை சங்கடத்தில் ஆழ்த்த, இது செல்வமே முன்வைத்த ஒரு யோசனை என்று இன்னொரு சாரார் சொல்கிறார்கள்.

நான் என்ன யோசிக்கிறேன் என்றால், இது அழகிரி விவகாரம் என்றால், கோபத்தில் செல்வம் அப்படி ஒரு முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் தினமலர் விவகாரம் அவர் மூக்கை நுழைக்காமல் விட்டு விடக் கூடிய ஒரு பிரச்சனை. இதில் தப்பித்த நபர் என்றால் சன் நியுஸ் எடிட்டர் ராஜா. சங்கடத்தில் இருப்பவர் என்றால் கலைஞர். செல்வம் நிச்சயமாக எடிட்டர் ராஜாவுக்காக தன்னை பலிகடா ஆக்க முன்வந்திருக்க மாட்டார் என்பது நிச்சயம். அதே சமயம் கலைஞரை நோகடிக்க தன்னையே குற்றவாளியாக அறிவித்துக் கொள்ளும் அளவிற்கு கலைஞரின் மேல் செல்வத்திற்கு கோபமிருப்பதாகவும் தெரியவில்லை.

அழகிரியை எதிர்த்து மாறன் சகோதரர்களுக்காக சண்டை போட்டது ஓகே. ஆனால் கலைஞரை விட்டுவிட்டு சகோதரர்களுடன் இருப்பது ஏன்? தினமலர் விவகாரத்தில் தன்னையே சன் டிவி சார்பாக ஒரு குற்றவாளியாக முன் நிறுத்திக் கொள்ள காரணம் ஏன்?

இப்படிச் செய்வதால் கலைஞரை பின் வாங்க வைத்துவிடலாம் என்று கணக்குப் போட்டது, வியூகமா? யூகமா?

சன் டிவியை நிகழ்ச்சிகளை விட, சன் டிவி பற்றிய செய்திகள்தான் பரபரப்பாக இருக்கின்றன.

தமிழ்நாட்டுக்கு இன்னும் நிறைய அரசியல் பரபரப்புகள் காத்திருக்கின்றன என்பது மட்டும் உறுதி.

Monday, September 15, 2008

ஜெயம் கொண்டான் - திரை விமர்சனம் (நேற்றுதான் பார்த்தேன்)

ரீ மேக் இரண்டுவகை.
சொல்லிவிட்டு ரீ மேக் செய்வது, நம்மை அறியாமலேயே ரீ மேக் செய்வது.
அந்த வகையில் ஜெயம் கொண்டான் இரண்டாவது வகை. இயக்குனர் கண்ணனுக்கு இது முதல் படம். மணிரத்தினத்தின் சீடர். அதனால் அவர் தன்னை அறியாமலேயே அக்னி நட்சத்திரத்தை ரீ மேக் பண்ணியிருக்கிறார்.

ஆனால் ரீ மேக் என்று சொல்லி சாதாரணமாக புறம் தள்ள முடியாத ஸ்கிரீன் பிளே, பக்கா ஸ்கிரிப்ட்.  அப்பா இறந்தபின் வேலையை உதறிவிட்டு இலண்டனில் இருந்து இந்தியா திரும்புகிறார் மகன். வந்தவருக்கு தொடரந்து அதிர்ச்சிகள். முதல் அதிர்ச்சி, அப்பாவுக்கு இருக்கும் இரகசிய இரண்டாவது குடும்பம். இரண்டாவது அதிர்ச்சி, சொந்த வீட்டை  விற்று பிசினஸ் துவக்க  முடியாமல் முட்டுக்கட்டை போடும் (இரகசிய அம்மா வழி) தங்கச்சி.

சொத்துக்காக சண்டை போடும், அண்ணன் தங்கச்சி குடும்பக்  கதையில் அட்டகாசமாக கிரைம் மசாலா தடவியிருக்கிறார் இயக்குனர்.  இருவரும் போட்டி போட்டுக் கொண்டு வீட்டை விற்க முயலும்போது, இயல்பாக கிரிமினல் பார்டிகள் கதையில் வந்து இணைந்து கொள்கிறார்கள்.

படத்தில் உறவுகள் இருவருக்கும், அண்ணன் தங்கை எனத் தெரியாமலேயே முதல் சந்திப்பு நிகழ்கிறது. படத்தில் அப்பா என்பவரின் போட்டோ கூட காட்டப்படவில்லை. ஆனால் அதை இரசிகர்கள் உணர முடியாத அளவிற்கு வேகமாக கதை நகர்கிறது. காரணம் சுறுசுறுப்பான, சின்னச் சின்ன சுவாரசியங்கள் நிறைந்த சம்பவங்கள்.

படத்தில் முதல் பாதியில் மறைந்துவிட்டு, பிற்பாதியில் இணையும் விவேக்கைத் தவிர முக்கிய கதா பாத்திரங்கள் அனைவரும் ஏதோ ஒரு திருப்பத்திற்கு உதவுகிறார்கள். படத்தின் ஆரம்பம் மற்றும் இடையில் வரும் சின்னச் சின்ன ஷாட்டுகளை பிற்பாதியில் இணைக்கும்போது, இயக்குனர் லேசுப்பட்டவர் இல்லை என்பது புரிகிறது.  உதாரணமாக மதுரைக்கார தாதாவுக்கு வைப்பாட்டியாகும் பெண், ரெஜிஸ்டிரார் ஆபீசில் கார் கண்ணாடியை ஏற்றும் காட்சியும், அதைத் தொடர்ந்துவரும் சண்டைக்காட்சியில் கண்ணாடியை சுத்தி பதம் பார்ப்பதும்.  சுத்தி பதம்பார்ப்பது அந்தக் கண்ணாடியை அல்ல, அந்தப் பெண்ணை என்பது படம் பார்க்கும் அனைவருக்கும் வலியுடன் உரைக்கிறது. ஆக்ஸிடெண்டைக் காட்டாமலேயே அதை உணர வைத்துவிட்டார் இயக்குனர்.

படம் முழுக்க அடிக்கடி மழை வருவது மணிரத்னம் பிராண்ட், விட்டுக் கொடுக்காத பிடிவாதமான ஆனால் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் கேரக்டர்களும் மணிரத்னம் ஸ்பெஷாலிட்டிதான்.  மெளனராகம் கார்த்திக், தளபதி அரவிந்த் சாமி மற்றும் குரு மாதவன்களின் இன்னொரு பதிப்பு தான் இந்தப் படத்தின் ஹீரோ வினய்.

சிட்டி வாசனை அடிக்கும் அரைகுறை வில்லேஜ் ஹீரோயின்கள் இந்தப் படத்திலும் உண்டு. ரோஜா மதுபாலா, பாம்பே மணிஷா கொய்ரலா மற்றும் குரு ஐஸ்வர்யாராய் போல இந்தப் படத்தில் பாவனா.

அதே போல கனமான ஆண்குரலுடைய பெண்கள், மணிரத்தினத்தின் படங்களில் தொடரந்து வருவார்கள். இந்தப் படத்திலும் 'பிளாட் ஆண்டி' 90 சதவிகதம் ஆண் குரலில்தான் பேசுகிறார். ஹீரோயின் பாவனாவும் கிட்டத்தட்ட ஆண்குரலில்தான் பேசுகிறார்.

அண்ணனுடன் மோதும் 'லேகா', படிச்ச தங்கச்சிக்கு ஏற்ற தோற்றம். சிம்பு ஏன் தனது படத்திலிருந்து கழற்றிவிட்டார் என்று என்னால் யூகிக்க முடிகிறது. லேகா இன்னும் பல படங்களில் தங்கச்சி அல்லது அக்காவாக வரலாம். அல்லது ஹீரோயின் கூட வரலாம். இந்தப்படத்தில் நல்ல பெர்மாமன்ஸ், ஆனாலும் கதாநாயகியாக பிரகாசிப்பது கடினம்.

விவேக் இல்லாத நேரங்களை, சந்தானம் நிரப்புகிறார். சந்தானத்திற்கு நம்பிக்கை கூடி தைரியம் ஜாஸ்தியாகிவிட்டது தெரிகிறது. சகட்டு மேனிக்கு கவுண்டமணி ஸ்டைலில் அனைவரையும் ஏசுகிறார், எட்டி உதைக்கிறார்.

நேற்று வந்த நடிகர்கள் எல்லாம் 'புரட்சி தளபதி' ,'இளைய தளபதி' என்று தங்களைத் தாங்களே ஒரு கட்டத்திற்குள் அடைத்துக் கொண்டுவிட்டார்கள்.  வினய் முயன்றால் அவர்களை சைலண்டாக முந்தலாம். அலுக்காத முகவெட்டும், மோல்டிங் ஆகக் கூடிய திறமையும் இருக்கிறது.

வித்யாசாகர் பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை இரண்டும் சுமார்தான்.

மணிரத்னம் அடுத்தடுத்த தளங்களுக்கு உலக அளவில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, அவருடைய சிஷ்யர்கள்தான் தமிழ்நாட்டில் அவருடைய இடத்தை நிரப்ப வேண்டும். அறிமுக இயக்குனர் கண்டிப்பாக சாதிப்பார்.

இந்தப் படத்தின் ஜெயம் கொண்டான், இயக்குனர்தான்.