Friday, February 20, 2015

இயக்குநர் வசந்தபாலனுடன் மனம் திரும்புதே!

மற்றவர்களுக்காக ஒரு நான்
எனக்காக ஒரு நான்
என இரண்டு ”நான்”களாகத்தான்
நம்மில் பலர் இருக்கிறோம்.

இரண்டு நான்களாக அல்லாமல் ஒற்றை நானாக இருப்பது மிகுந்த சிக்கலானது. நம்மைப்பற்றி நாமே சதா முரண்பட்டுக்கொண்டிருப்போம். ஆனாலும் வெகு சிலர் விரும்பி அப்படி ஒரு நிலையை ஏற்கிறார்கள். அவர்களைப் புரிந்து ஏற்கும் நண்பர்களையும், உறவினர்களையும் அடைகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் இயக்குநர் வசந்தபாலன் என்பது என் கருத்து.

”மனம் திரும்புதே” நிகழ்ச்சிக்காக சந்தித்த சில நிமிடங்களைத்தவிர அவருடன் எனக்கு எந்த நேரடித்தொடர்பும் இல்லை. ஆனாலும் அவர் அப்படிப்பட்டவர், எதற்காகவும் தன்னை சமரசம் செய்து கொள்ளாத முழுமையான ”நான்” அவர். மனிதர்களிடம் மட்டுமல்ல, இயந்திரங்களிடம் கூட இதயங்களை எதிர்பார்க்கிற சிறந்த மனிதர் என்பது என் கருத்து. நேற்று மனம் திரும்புதே நிகழ்ச்சியில் தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டார். தனது நண்பர் வரதன் பற்றி அவர் குறிப்பிட்ட வார்த்தைகள் மிகவும் நெகிழ்வானவை.

இந்த நிகழ்ச்சி தன்னை நெகிழ வைத்துவிட்டது என மனமார பாராட்டினார். இனி அவரை நான் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே கூட போகலாம். ஆனால் ஒரே ஒரு முறை அவருடைய இதயத்தை தொட்டுவிட்டேன். அதுவே எங்கள் நிகழ்ச்சிக்கும், எனக்கும் கிடைத்த வெற்றி. அவர் இன்றும் என்றென்றும் மனநிறைவோடு தொடர்ந்து இயங்கவும், இயக்கவும் வாழ்த்துகள்!

”மனம் திரும்புதே” நிகழ்ச்சி சனிக்கிழமை(21.02.2015) இரவு 9 மணிக்கு.