Friday, December 21, 2012

நேரடி மானியம் - Direct Cash Transfer - ஜாக்கிரதை மக்களே!

இதுவரை
கேஸ் சிலிண்டர்களின் அசல் விலை 900 சொச்சம் ரூபாய். ஆனால் மத்திய அரசு மானிய விலையில் (Subsidy) நமக்கு 450 சொச்ச ரூபாய்க்கு தருகிறது. மீதி பணத்தை சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு தந்துவிடுகிறது.

இனி
நாம் கேஸ் சிலிண்டர்களை முழு விலையான 900 கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். மீதி மானிய பணத்தை அரசு நமது பாங்க் அக்கவுண்டில் போட்டுவிடும்.

தற்போது இந்த திட்டம் நடைமுறையில் உள்ளதா?
சோதனை முறையில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், பாண்டிச்சேரி மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. பென்ஷன், பி.எஃப் உள்ளிட்டவை கூட இத்திட்டத்தில் இருப்பதால் மக்கள் இதை வரவேற்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் என்ன இலாபம்?
 ரேஷன் அரிசி, சர்க்கரை, கெரஸின் உள்ளிட்டவையும் இந்த திட்டத்தின் கீழ் வருவதால், ரேஷன் அரிசி இனி மானிய விலையில் கிடைக்காது. எனவே ரேஷன் பொருட்களின் கடத்தல் நீங்கும். போலி ரேஷன் பெறுநர்களுக்கு இடமிருக்காது.  மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிப்பதால் பதவியில் இருப்பவர்களின் ஓட்டு வங்கி காப்பாற்றப்படுகிறது.

யார் யாரெல்லாம் இந்த திட்டத்தை அனுபவிக்க முடியும்?
மத்திய அரசு வழங்கி வரும் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இதனை பெற முடியும். எனவே இந்தியர்கள் அனைவரும் ஆதார் அட்டை வாங்க வேண்டிய கட்டாயம் வரும். ஒவ்வொரு குடும்பத்தலைவரும் பரம ஏழையாக இருந்தாலும் கட்டாயம் வங்கிக் கணக்கு துவங்கினால் மட்டுமே மானியம் கிடைக்கும்.

இதனால் என்ன நஷ்டம்?
அரசாங்கத்துக்கு இதனால் பெரிய நஷ்டம் ஏதுமில்லை. ஆனால் மக்கள் பாடு திண்டாட்டமாக பெருமளவு வாய்ப்பு உள்ளது. முதலாவதாக மக்கள் கையில் பணம் புழங்க ஆரம்பித்துவிடுவதால், வருமானம் அதிகரித்துவிட்டதாக மாயையான எண்ணம் ஏற்படும். அதனால் விலைவாசி எகிறினாலும், கவலையே இன்றி எந்த விலையாக இருந்தாலும் பணம் கொடுத்து வாங்குகிற மனப்பக்குவம் வந்துவிடும். அதே சமயம் மானியமாக நமது வங்கிக்கு வருகிற பணத்தை நாம் நமது தேவைக்கு பயன்படுத்தாமல் வீண் செலவு செய்யும் வாய்ப்புதான் அதிகம். இந்தப் பணத்தை கவர்வதற்காகவே டாஸ்மாக்குகளும், ஷாப்பிங் மால்களும் காத்திருக்கின்றன. எனவே வங்கி வழியாக நேரடியாக பணம் வந்தாலும், பணம் மீண்டும் அரசாங்கத்துக்கும், தனியார் வியாபாரிகளுக்கும் சென்றுவிடும்.