Friday, September 2, 2022

திடீரென மறைந்த சாஹுல் அமீதின் மறைவை பாம்பா பாக்யாவின் மறைவுடன் ஏனோ மனம் ஒப்பிட்டுப் பார்க்கிறது

பாம்பா பாக்யாவின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. நேற்றைய இரவுப் பயணம் ஒன்றில் அவருடைய புள்ளினங்காள் பாடல் ஏனோ ஞாபகம் வந்தது. நண்பர் இயக்குநர் கிரிஷ் கடந்த வாரம்தான் இவருடைய குரலில், தனது படத்துக்கான பாடலை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து வேறு ஒரு பாடலுக்காக அவரை அணுகலாம் என்று இசையமைப்பாளர் ஜனனியுடன் பேசிக் கொண்டிருந்தேன். இது தொடர்பாக நேற்று கூட எங்கள் குழுவினர் அவரிடம் பேசியிருக்கிறார்கள். நான் பயணத்தில் இருந்ததால் பேச இயலவில்லை. இன்று இந்த துயரச் செய்தி.

அடுத்து நடக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் அவரும் பாட திட்டமிருந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் பொன்னி நதி பாடலில் காவிரியாள் நீர் மடிக்கு எனத் துவங்கும் அவருடைய குரலை இனி நேரில் கேட்க முடியாது.

திடீரென மறைந்த சாஹுல் அமீதின் மறைவை ஏனோ மனம் ஒப்பிட்டுப் பார்க்கிறது.

ஆழ்ந்த இரங்கல்!

- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

Wednesday, August 24, 2022

ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு என்னுடைய குறும்படத்தை எப்போது அனுப்பலாம்?

 

ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு என்னுடைய குறும்படத்தை எப்போது அனுப்பலாம்?

தனபால் - விழுப்புரம்
ஆகஸ்டு 27 முதல் செப்டம்பர் 27 வரை எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் வழியாக அனுப்பலாம். அதற்கான ஆன்லைன் இணைப்புகள் ஐ.எஸ்.ஆர்.வென்சர்ஸ் (ISR Ventures) நிறுவனத்தின் ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் வெளியாகும். ஏற்கனவே தொடர்பில் உள்ளோருக்கு வாட்சப் வழியாகவும் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு 9962295636 என்ற எண்ணுக்கு வாட்சப் அனுப்புங்கள்.

Monday, August 22, 2022

ISR 5 நிமிட குறும்படப் போட்டியாளர்களுக்கு இந்தியா எக்ஸைட் நிறுவனம் வழங்கும் டெக்னாலஜி சப்போர்ட்.

5 நிமிட குறும்படப் போட்டியில் பங்கேற்பவர்கள் பதிவு செய்து கொள்ளவும், மற்ற இயக்குநர்களோடு உரையாடவும், தங்கள் அனுபவம் மற்றும் அறிவை பகிர்ந்து கொள்ளவும் தனது டெக்னாலஜி அனுபவத்தை வழங்குகிறது இந்தியா எக்ஸைட்.

இதன் மூலம் பங்கேற்பாளர்கள் நண்பர்களாக மாறவும், போட்டி முடிந்த பின்னும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இயங்கவும் தொழில்நுட்பம் கை கொடுக்கிறது.

இதனை சாத்தியப்படுத்தியுள்ளதற்காக ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், இந்தியா எக்ஸைட் நிறுவனத்துக்கு நன்றி!

Happy for the association with India Excite IT Solutions PVT LTD.

For ISR 5 Minute Short film contest, India Excite will offer remote support for cloud-based interactions and submissions for the contestants via phone, email and chat.

#IndiaExcite #TNOU #StellaMaris #ISRventures #ISR5minuteShortFilmContest #TechSupport

Sunday, August 21, 2022

தோழமை அமைப்பின் ஆதரவுடன் ISR 5 நிமிட குறும்படப்போட்டி

 


ISR 5 நிமிட குறும்படப் போட்டி! கை கொடுத்திருக்கும் ”தோழமை” அமைப்பு!

போட்டியின் மையக்கரு ”குழந்தைகள் உரிமை - CHILD RIGHTS" என்ற அறிவிப்பு வெளியானவுடனேயே அமைப்பின் தலைவர் தேவநேயன் தொடர்பு கொண்டார்.

குழந்தைகள் உரிமை என்றால் என்ன? என்பது பற்றி யுனிசெஃப் என்ன கூறியிருக்கிறது என்பதை அழகான தமிழ் விளக்கங்களுடன் அனுப்பி வைத்தார். போட்டி ஆரம்பித்தபின் போட்டியாளர்களுக்கு குழந்தைகள் உரிமை பற்றி எடுத்துச் சொல்லவும் ஒப்புக் கொண்டுள்ளார்.


எனவே குழந்தைகள் உரிமை பற்றி சந்தேகம் உள்ள போட்டியாளர்கள் அவருடைய ஆலோசனையை கேட்டுக் கொண்டு ஸ்கிரிப்ட் எழுதத் துவங்கலாம். இதற்கான ஒரு ஆன்லைன் சந்திப்பை ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்யும். தோழமைகள் அமைப்பு இதில் மிக மிக முக்கியப்பங்காற்றும். அவர்களுடைய ஆலோசனையும், ஆதரவும் குழந்தைகள் உரிமை பற்றி மிகத் தரமான தெளிவான படங்களை எடுக்க உதவியாக இருக்கும்.

போட்டியைப் பற்றியும், அது என்று நிறைவுக்கு வரும் என்பதையும், பரிசுகள் என்னென்ன என்பதையும் விரைவில் அறிவிக்கிறோம்.

மீண்டும் ஒரு முறை துணையாக கை கொடுத்திருக்கும் தோழமை அமைப்புக்கு நன்றி!

#Thozhamai #TNOU #MovieWood #StellaMaris #ISRventures #isr5minuteshortfilmcontest

Friday, August 19, 2022

ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் வழிகாட்டுதலுடன் ISR 5 நிமிட குறும்படப் போட்டி

 

மற்றும் ஒரு பெருமை! ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியுடன் இணைகிறோம். இது ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு கிடைத்திருக்கும் மற்றும் ஒரு சிறப்பான அங்கீகாரம்.

ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் சமூக சேவைக்கென்றே ஒரு பாடப்பிரிவு உள்ளது. (Department of Social Work). சமூக அக்கறையுள்ள மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஒரு நேர்மறையான சமூகத்தை உருவாக்கும் பாடப் பிரிவு இது.
எனவே குழந்தைகள் உரிமை - CHILD RIGHT பற்றிய குறும்படப் போட்டியின் நல் நோக்கத்தை ஏற்று அதற்கு அங்கீகாரம் தந்து சிறப்பாக நடத்த உற்சாகம் கொடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைக் கழகத்துடன் (Department of Journalism and New Media Studies) இணைந்து செயல்பட ஒப்புதல் பெற்றிருக்கிறோம்.
இவ்விரு பெரும் கல்வி நிலையங்கள் தந்திருக்கும் ஆதரவுடன் ISR 5 நிமிட குறும்படப் போட்டி ஆகஸ்டு 22, 2022 முதல் துவங்குகிறது. முதலில் கலந்து கொள்ள விரும்புபவர்களின் விபரங்களை பதிவு செய்து கொள்வோம். அடுத்தது அவர்களுக்கு குழந்தைகள் உரிமை என்றால் என்ன என்பதை இவ்விரு கல்வி நிலையங்களின் உதவியுடன் தெளிவாக எடுத்துச் சொல்வோம். எனவே இப்போட்டியின் நோக்கம் சிறப்பாக நிறைவேறும் என்று உறுதி கூறுகிறோம்.
இப்போட்டியில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறோம். தேர்வுக்குழுவில் யார் யார் இருப்பார்கள்? பரிசுகள் என்ன? என்பது உள்ளிட்ட விபரங்கள் அடுத்தடுத்து தெரிவிக்கப்படும்.
மீண்டும் ஒரு முறை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி (Department of Social Work) பிரிவுக்கும், எங்களுக்கு சிறப்பான அறிமுகம் தந்த நண்பர் தேவநேயனுக்கும் நன்றி!
மேல் விபரங்களுக்கு வாட்சப் எண் - 9962295636

Thursday, August 18, 2022

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ISR 5 நிமிட குறும்படப் போட்டி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குழந்தைகள் உரிமை - Child Right பற்றி வலியுறுத்தும் படங்கள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும் என்பதால் போட்டியின் நல் நோக்கத்தை கருத்தில் எடுத்துக் கொண்டு இதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்கள்.

ஆகஸ்டு 22ம் தேதி முதல் துவங்கவுள்ள ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு இதன் மூலம் மதிப்பு உயர்ந்திருக்கிறது.
எந்தக் கட்டணமும் இல்லாமல் நடத்தப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் TNOU - School of Journalism and New Media Studies சார்பில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
சிறந்த படங்களுக்கான 3 பரிசுகளுடன் பல்வேறு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படும்.
மேலும் சில முன்னணி கல்வி மற்றும் மீடியா நிறுவனங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் யார் யார் என்பதை தொடர்ச்சியாக அறிவிப்போம். அவர்களுடன் இணைந்து போட்டியாளர்களுக்கு குழந்தைகள் உரிமை என்றால் என்ன என்பதை புரிய வைத்து தரமான படங்களையும், படைப்பாளிகளையும் உருவாக்குதுதான் இப்போட்டியின் நோக்கம்.
இப்போட்டி செப்டம்பர் மாத இறுதியில் நிறைவுக்கு வரும். போட்டியின் இறுதியில் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கு ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்தின் குறைந்தபட்ச பங்களிப்பாக, இது பற்றி நன்கு அறிந்த எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களை அறிமுகம் செய்த திருப்தி எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 9962295636 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு எப்படி பங்கேற்பது போன்ற விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
மீண்டும் ஒரு முறை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்திற்கு நன்றி!

Monday, August 15, 2022

ஆகஸ்டு 16, 1947 படத்தில் சித்தப்பா சோலை

Happy to see my chithappa actor Solai in August 16, 1947 trailer.

அவர் இந்தப் படத்துக்காக 6 மாதங்களுக்கு மேல் தாடி வளர்த்துக் கொண்டிருந்தார். இப்போதும் அந்த தாடி சற்று மட்டுப்பட்டு நீளம் குறைந்து இருக்கிறது. ஒருவேளை தேவைப்படலாம் என்று விட்டுவைத்திருக்கிறார். அவரை இந்த கெட்டப்பில் பார்த்தபின் குஷியாகிவிட்டேன்.

அவர் நகைச்சுவை காட்சிகளில் மட்டுமே நடித்து வந்தார். நான்தான் அவரை முதன் முதலில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன். யாதுமானவள் என்கிற குறும்படத்தில் நெகிழ வைக்கும்படி நடித்திருந்தார். தற்போது நான் இயக்கியுள்ள யாதெனக்கேட்டேன் படத்திலும் மிக முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். படம் பார்த்த அனைவரும் அவர் நடிப்பை பாராட்டியுள்ளார்கள். இந்த நிலையில் ஆகஸ்டு 16, 1947 பட டிரையலர் வெளியாகியுள்ளது. அதைப் பார்த்தவுடன் எனக்கு மட்டுமல்ல, சித்தப்பாவை அறிந்த எல்லோருக்குமே மிகுந்த மகிழ்ச்சி!

அவரால் மிக மிகக் கனமான கதாபாத்திரங்களைக் கூட அனாயசமாக நடிக்க முடியும் என்பது என் கருத்து. பார்க்கலாம். காலம் அவருக்கு என்ன மாதிரியான வாய்ப்புகளை வைத்திருக்கிறது என்று!

அந்த நாலு பேருக்கு நன்றி - எங்கள் நகரில் சுதந்திர தினம்!

 நாங்கள் வசிக்கும் திருநகரில் சுதந்திரதினம். 150 குடும்பங்கள் வசிக்கும் எங்கள் நகரில் கடந்த 20 வருடங்களாக அதிகபட்சம் 15 பேர்தான் கலந்து கொள்வார்கள். அதில் ஏழு முதல் எட்டு பேர் எங்கள் பகுதியை சாராத வழிப்போக்கர்கள் மற்றும் நடைப் பயிற்சிக்கு வந்தவர்களாத்தான் இருப்பார்கள். இன்று வாக்கிங் வந்த அடுத்த காலனி தம்பதிகள் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். இந்தியா பாகிஸ்தான் போரில் பங்கு பெற்ற ஏர் கமாண்டர்களில் ஒருவர் திரு.சண்முகம். எங்கள் நகரில் வசிக்கிறார். நடைப் பயிற்சிக்கு வந்த அவர்தான் இம்முறை துவக்க உரை. எங்களுடன் தன் போர் அனுபவங்களில் ஒன்றை பகிர்ந்து கொண்டார். எனக்கு ஒரு கொடி தருவீங்களா எனக் கேட்டு வந்த ராமச்சந்திரன் என்பவர்தான் இம்முறை கொடியேற்றினார். அவர் 30 வருடங்களாக எங்கள் நகரில் வசிக்கிறார்.

சுகாதாரப் பணியாளர்கள் அன்று மட்டும் எங்களுடன் சற்று அருகில் தயக்கமாக நின்று கொள்வார்கள். அதற்கே சிறு வற்புறுத்தல் தேவைப்படும். இந்த வருடம் கொடி ஏற்றிவிட்டு நாங்கள் புறப்படும்போது வந்த பெண்மணிக்கு இன்று பிறந்தநாளாம். வாழ்த்து சொல்லிவிட்டு சாக்லெட் கொடுத்தோம். மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

கடைசியாக நன்றி உரையில் அடுத்த வருடம் எப்படியும் 50 பேரை வரவைத்துவிட வேண்டும் என்று யாராவது ஒருவர் பேசுவோம். அசோஷியேசன் சார்பில் ஸ்போர்ட்ஸ் டே நடத்துவோம். நல்ல கூட்டம் வரும் என்று ஒருவரும், முப்பது வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா என்று இன்னொருவரும் கூறுவார்கள். இம்முறை எவரும் இந்த சப்ஜெக்டுகளை பேசவில்லை என்பது ஒரு மாற்றம்.
ஃபோட்டோக்களை எங்கள் காலனி வாட்சப் க்ரூப்பில் பகிர்ந்த போது 2 பேர் வாழ்த்தினார்கள். குறிப்பாக எவருக்காகவும் காத்திருக்காமல் கொடிக் கம்பத்துக்கு பெயிண்ட் அடித்து, சாக்லெட் வாங்கி அனைவருக்கும் அழைப்பு தரும் எபினேசரை இருவரும் வாழ்த்தியிருந்தார்கள். அவர் முயற்சி எடுக்காவிட்டால் இது நடக்காது, எல்லோரும் வீட்டுக்குள் டிவியுடன் அமர்ந்துவிடுவோம் என்று எங்கள் எல்லோருக்குமே தெரியும்.
இம்முறை கொடியை இறக்கி பத்திரப்படுத்தும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து ஜனவரி 26க்கும் இதே போல கூடுவோம், என்ற தகவலுடன் அனைவருக்கும் சுதந்திர தின
வாழ்த்துகள்
!

யுத்தகாண்டம் - சிங்கிள் ஷாட் படம் - விமர்சனம்

 யுத்தகாண்டம் - சிங்கிள் ஷாட் மூவி!

எனக்குப் பரிசோதனைகள் பிடிக்கும் என்பதால் இந்த சிங்கிள் ஷாட் பரிசோதனையை ஆர்வத்துடன் பார்த்தேன். படம் எனது ஆர்வத்துக்கு தீனி போட்டது என்பதுதான் உண்மை. பிரிவியூவிற்கு அழைப்பு தந்தது கேபிள் சங்கர்.
நள்ளிரவில் யாரையோ தேடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனில் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் பயணித்து ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைகிறது காமிரா. அந்த நீண்ட நள்ளிரவு சாலைப் பயணம் இது சிங்கிள் ஷாட் படம் என்பதற்கு நம்மை தயார் செய்கிறது.
தன் காதலியைத் தேடும் இளைஞன் எதிர்கொளும் இரவு நேரச் சம்பவங்கள்தான் கதை. ஒன்றிலிருந்து மற்றொன்று என காட்சிகள் தொடர் சங்கிலியாக ஒரு சஸ்பென்சுடன் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நகர்தலை உணர்த்த சிங்கிள் ஷாட் பயன்பட்டிருக்கிறது. அதாவது சிங்கிள் ஷாட் என்பது தேவையற்ற திணிப்பாக இல்லை.
எண்கவுண்டர், அரசியல் பேரம், சேஸிங், அடிதடி, தேடல், டூயட் என இப்படத்தில் எல்லாம் உள்ளது. நாயகியாக க்ரிஷா நடித்திருக்கிறார். இவரை என் இயக்கத்தில் யாதெனக்கேட்டேன் படத்தில் நடிக்க ஓரிரு முறை பேசியிருக்கிறேன், அதனால் அவரை ஞாபகம் உள்ளது. கோலிசோடா 2வில் நடித்திருக்கிறார். இயக்குநர் ராசி அழகப்பன் எனக்கு அறிமுகம் செய்தார் என்று நினைவு. க்ரிஷா பவர்ஃபுல் கதாபாத்திரங்களில் ஸ்கோர் செய்யக் கூடியவர் என்பது என் அனுமானம். இந்தப்படத்தில் அவருக்கான வாய்ப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம். கதையே இவரை மையப்படுத்தி இருந்திருக்கலாம் என்று கூட தோன்றுகிறது.
போலிஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தவுடன் அதில் உள்ள பல்வேறு அறைகள் மற்றும் மாடிப்படிகளில் தடுமாறாமல் ஏறி இறங்குகிறது காமிரா. பிறகு மீண்டும் ஸ்டேஷனை விட்டு வெளியேறிவிட்டு, சிறிது நேரம் கழித்து மறுபடியும் உள்ளே வருகிறது. இப்படியே ஸ்டேஷனின் உள்ளேயும், வெளியேயும் காமிரா நகர்ந்து கொண்டே இருக்கிறது. இவை அலுப்பு தராமல் இருக்க லைட்டிங்கில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். சுரேஷ்மேனனுடன் நடைபெறும் சண்டைக்காட்சியும், இருட்டறைக்குள் நடக்கும் காட்சியும் அக்னிநட்சத்திரம் கிளைமாக்ஸ் சண்டை போல முயற்சி செய்திருந்தார்கள். சுரேஷ்மேனனின் கதாபாத்திரம் பெரிதாக ஏதோ சம்பவம் செய்யப்போகிறது என நினைத்தேன். ஆனால் அந்த பாத்திரத்திரம் பொசுக்கென காணாமல் போய்விட்டது.

ரவுண்ட் டிராலி எஃபக்ட் கூட ஒரு காட்சியில் முயற்சி செய்திருந்தார்கள். ஒரு எண்கவுண்டர் பற்றி பேசிக்கொள்ளும் இந்தக் காட்சியில் இருந்த தீவிரம், எண்கவுண்டர் நடக்கப்போகும்போது இல்லை.
போஸ்வெங்கட் கதை வசனம் எழுதியிருக்கிறார். அதனால் சில கதாபாத்திரங்கள் அவரே நேரடியாக அரசியல் பேசுவது போல இருந்தது. மேக்கிங் பார்க்கும்போது அவர் கிட்டத்தட்ட இயக்குநர் வேலையும் பார்த்திருக்கிறார் எனத் தோன்றியது. படம் நாயகனைச் சுற்றிதான் நடக்கிறது. நாயகன் ஸ்ரீராம் இதை உணர்ந்து இன்னும் முனைப்புடன் நடித்திருக்கலாம்.
டிஜிட்டல் யுகத்தில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட யுத்தகாண்டம் போன்ற நிறைய பரிசோதனைகள் நடந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் டெக்னிக் எதுவாக இருந்தாலும் படத்தின் மையமான கதை என்ன என்பதும், அது எப்படி இரசிகர்களை கவரும் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் யுத்தகாண்டம் படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்கிற வரிசையில் வைக்கலாம்.
மூவிவுட் என்கிற ஓடிடி தளத்தில் ரிலீசாகியிருக்கிறது. நேரமிருக்கும்போது பாருங்கள். யுத்தகாண்டம் படம் வெற்றியடைய படக் குழுவினருக்கு என்
வாழ்த்துகள்
!
இணையதள முகவரி - https://moviewood.io/
#Moviewood ஆண்ட்ராயிட், ஐஓஎஸ் என இரண்டிலும் இயங்கும்.

எனக்கு ஏன் இரகுமான் பாடல்களைப் பிடிக்கிறது?

நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு

தேனைத் தந்தா என்னவாகும்?
Rahman for all my moods. I think I'm in time sync with A.R.Rahman's music. I feel vibrations and deep emotions kindled with all his latest compositions.
கிழக்குச் சீமையிலே பாடல் வெளியானபோது, வாக்மேனில் கேசட்டைப் போட்டுவிட்டு வேலி காத்தான் செடிகள் அடர்ந்த கிரிக்கெட் மைதானத்தில் தனியாக அமர்ந்து இரசித்தேன். காற்றில் பறப்பதைப் போலிருந்தது. நேற்று வெந்து தணிந்தது காடு படத்தின் ”மறக்குமா நெஞ்சம்” பாடல் வெளியானபோதும், மொட்டை மாடியில் தனியனாக அமர்ந்து பாடலுக்குள் அமிழ்ந்தேன். எத்தனை முறை தொடர்ந்து பாடலைக் கேட்டேன் என்று கணக்கே இல்லை.
இதை வாசிக்கும் நீங்கள் தற்போதைய இரகுமான் பாடல்களை எப்படி இரசிக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. ஆனால் நான் முன்பு எப்போதையும் விட இரகுமானின் இசையுடன் மிக நெருக்கமாக உணர்கிறேன். அதற்குக் காரணமாக என் தற்போதைய மன ஓட்டம் மற்றும் தற்போதைய தேடல்களுக்கு இரகுமானின் இசை ஒரு வடிகாலாக இருக்கிறது எனக் கருதுகிறேன்.
எங்கு தொடங்கும்
எங்கு முடியும்
ஆற்றின் பயணம்!


Saturday, August 13, 2022

பொன்னி என்கிற பெயர் ஏ.ஆர்.இரகுமானுக்குள் ஏற்படுத்தியுள்ள தாக்கம்!


 ரகுமான் அவருடைய இசைப் பயணத்தில் புதியதோர் தளத்தை கண்டடைந்திருக்கிறார் எனக் கருதுகிறேன். அவருடைய சமீபத்திய அதை என்னால் உணர முடிகிறது. அவருடைய இசையில் கொண்டாட்டங்கள் இருந்தாலும் அதற்குள் மிகப் பெரிய உணர்வுக் குவியலை நிரப்பி வைக்கிறார். எம்.எஸ்.வி, இளையராஜா இருவரும் இதில் மாஸ்டர்கள். ஏ.ஆர்.இரகுமானும் அவர்கள் பயணித்துள்ள பாதையில் தன் பாணியில் நுழைந்துள்ளார்.

பொன்னி நதி பாக்கணுமே பாடலில் உற்சாகத்துடன் மென்சோகம் போன்ற ஒரு நுண்ணிய உணர்வு அடையாளம் காண முடியாதபடி கலந்திருக்கிறது. அந்தப் பாடலின் வெற்றிக்கு அதுவே காரணம் என்பது என் எண்ணம்.

இது இப்படி என்றால் மலையன்குஞ்சு வேறு இரகம். அதில் சித்ராவின் குரலில் பொன்னி மகளே என்றொரு பாடல் வருகிறது. எவராக இருந்தாலும் ஏதோ ஒரு நொடியில் யாருமற்ற தனிமையை நேசிப்பார்கள். அந்த நொடியில் இந்த உலகின் ஒவ்வொரு உயிரையும் நேசிப்போம். இந்தப் பாடல் அந்த உணர்வைக் கொடுக்கிறது. படத்தின் பலமே அந்தப் பாடலும், அதை ஒட்டிய பிண்ணனி இசையும். கேட்டுவிட்டால் அந்தப் பாடலில் இருந்து மீளவே முடியாது.


பொன்னி என்ற வார்த்தையில் ஒரு மாயம் இருக்கிறது. இரகுமானின் பியானோவை பொன்னி என்ற வார்த்தை எங்கோ அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. அது அவருக்குப் பிடித்த வார்த்தையாக தற்செயலாகவே அமைந்துவிட்டது என நினைக்கிறேன்.

அதன் இசை விளைவுதான் பொன்னி நதி பாக்கணுமே மற்றும் பொன்னி மகளே பாடல்கள்.

லவ் யூ இரகுமான்!

நகையே உனக்கொரு நமஸ்காரம் (13.8.1976)

நகையே உனக்கொரு நமஸ்காரம் (13.8.1976)

46 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோ கலை மன்றத்தின் சார்பாக அரங்கேறிய வி.எஸ்.ராகவனின் மேடை நாடகம் இது.


எழுபதுகளின் முற்பகுதியை மேடை நாடகங்களின் பொற்காலம் என்று கூறலாம். சினிமாவிற்கு இணையாக நாடக அரங்கங்களும் நிரம்பி வழியும். டிக்கெட் கிடைக்காது.

நகையே உனக்கொரு நமஸ்காரம் நாடகத்திற்கு தன் மனைவி வி.என்.ஜானகியுடன் நேரில் வந்திருந்து துவக்கி வைத்தவர் எம்.ஜி.ஆர். நேரில் வந்திருந்து வாழ்த்திய மற்றொரு பிரபலம் ஏ.பி.நாகராஜன்.


நாடகத்தில் V S ராகவனுடன் வாதிராஜ் மாலி ஜெகதீஷ் நடரா‌ஜ், S N லஷ்மி C K சரஸ்வதி நடித்திருந்தனர். இந்நாடகம் பற்றி எத்தனை பேருக்கு நினைவிருக்கும் எனத் தெரியவில்லை.



இளங்கோ கலை மன்றத்தை நடத்திய திரு. இளங்கோ வீரப்பன் அவர்கள் இந்த புகைப்படங்களையும், தகவல்களையும் அனுப்பி வைத்தார். அவருக்கு ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் சார்பில் எமது நன்றி.

#StagePlay #VSRaghavan #MGR #VNJanaki #APNagarajan #ElangoKalaiMandram 

கார்த்தி - மருதநாயகம் படம் நின்று போன வலியை விடவா என்னுடைய வலி பெரியது?

மருதநாயகம் படம் நின்று போன வலியை விடவா என்னுடைய வலி பெரியது?

”பருத்தி வீரன் வெளியாகுமா என்று சந்தேகம் வளர்ந்து கொண்டே இருந்தது. ஆயிரத்தில் ஒருவன் நடக்குமா? பாதியிலேயே நின்று விடுமா என்று மனது தளர்ந்து போயிருந்தது. அந்த சமயத்தில் மனம் சோர்ந்து போனபோது என்னை தூக்கி நிறுத்தியது கமல் சாரின் மருதநாயகம் காட்சிகள்தான்.
பருத்தி வீரன் துவக்க விழாவிற்கு அழைக்க அப்பாவுடன் கமல் சார் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது அவர் மருதநாயகம் டிரையலரையும், ஷுட்டிங் ஸ்பாட் காட்சிகளையும் காட்டினார். மிரண்டு போய்விட்டேன். உலக சினிமாக்கள் எதிலும் நான் பார்த்திராத காட்சி அமைப்பு, உடை, ஷாட் என பிரமிக்க வைத்தது.
மருதநாயகம் படத்தின் துவக்க விழாவுக்கு அப்பாவுடன் நான் சென்றிருந்தேன். விழாவெல்லாம் முடிந்து அடுத்த நாள் யாரோ என்னை இடித்துவிட்டுச் சென்றார்கள். அது இரும்பு கொண்டு என்னை இடித்தது போலிருந்தது. திரும்பிப் பார்த்தால் கமல் சார். இடுப்பு வரை நீள முடியுடன், உடலை இரும்பு போல வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
ப்பா... அசுர உழைப்பு. கமல் சார் இவ்வளவு உழைத்த அந்தப் படம் நின்று போய்விட்டது. அது நின்று போய்விட்ட வலியை விடவா, என்னுடைய வலி என்று தோன்றியது. எப்போது நான் துவண்டு போனாலும் மருதநாயகம் நின்று போனாலும், தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கமல் சாரின் உழைப்புதான் எனக்கு உற்சாகம் தருகிறது. என்னை தோளில் தட்டி தூக்கி நிறுத்துகிறது.
- பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி
கார்த்தியின் இந்த வார்த்தைகளில் ஜெயிக்கக் காத்திருக்கும் ஒவ்வொருக்கும் செய்தி இருக்கிறது. ஒவ்வொரு வெற்றியும் ஆயிரம் வலிகளைத் தாண்டித்தான் சாத்தியமாகியிருக்கிறது. துவண்டு போகாமல் அடுத்தடுத்து செயல்படுபவன்தான் குடும்பத்தாலும், மக்களாலும் கொண்டாடப்படுகிறான். இந்த நம்பிக்கையில்தான் நாங்கள் யாதெனக்கேட்டேன் படத்தை தயாரித்திருக்கிறோம். விரைவில் திரையைத் தொடுவோம். இரசிகர்களின் இரசனைகளுக்கு உணவளிப்போம். வெற்றி பெறுவோம்.
இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

Monday, August 8, 2022

5 minute short film competition for Child Rights!

 


ISR 5 MINUTE SHORT FILM CONTEST

5 minute short film competition for Child Rights

The contest is designed to discover, recognize and foster young talent from around the world while creating a global conversation about Child Rights. 

Three best films will be awarded along with best director, best script writer, best cinematographer, best editor and best performer.

The winners will get cash prize and discount coupons related to media production.

Very soon the details about event beginning date, film submission methods, juries and about award event will be announced.

Remember the 2022 theme for the first edition of 5 minute short film contest is "Child Rights".

- ISR Ventures


கமர்ஷியல் படம் மட்டுமல்ல கருத்துள்ள படமும் எடுப்போம் - துடிப்பான இளைஞர்களுக்காக 5 நிமிட குறும்படப்போட்டி

 

ஐ.எஸ்.ஆர் 5 நிமிட குறும்படப்போட்டி - ISR 5 minute short film contest

இளம் படைப்பாளர்களுக்கு புதிய வாய்ப்பு! குறும்படம் எடுத்து உங்கள் திறமையை நிரூபிக்கலாம்.

ஐ.எஸ்.ஆர் வென்சர் தயாரிப்பு நிறுவனம் 5 நிமிட குறும்படப் போட்டியை அறிவித்துள்ளது.

குறும்படம் எடுப்பவர்கள் எப்போதுமே காதல் படம், திரில்லர் அல்லது பேய்படம்தான் எடுக்கிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் அது உண்மையில்லை. நம் இளைஞர்கள் மிகத் திறமையானவர்கள். அவர்களால் எந்த வகையிலான படத்தையும் எடுக்க முடியும் என்பதை நிரூபிக்கவே இந்தப் போட்டி.

எனவே அவர்களின் சிந்தனையை ஒருமுகப்படுத்தும் வகையில் குறும்படப் போட்டியின் மையக் கருவாக ”குழந்தைகளின் உரிமைகள் - Child Rights" என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

போட்டியாளர்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்கும்போது, அந்தக் குறும்படங்கள் வழியாக குழந்தைகளின் உரிமைகள் என்றால் என்ன? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி பல்வேறு கோணங்களில் கருத்துகள் வெளியாகும்.

குறிப்பாக இளைஞர்களிடமிருந்து அது வெளிப்படும்போது மிக வேகமாக அது அனைவரையும் சென்றடையும். மிக மிக முக்கியமாக நமது இளைஞர்கள் நல்ல சிந்தனைகள் உள்ள படம் எடுக்கும் திறமையுள்ளவர்கள் என்பது நிரூபணமாகும்.

எனவே இளைஞர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். ஐ.எஸ்.ஆர் 5 நிமிட குறும்படப்போட்டியில் கலந்து கொள்ளுங்கள். கமர்ஷியல் படங்களும் எடுப்போம், கருத்துள்ள படங்களும் தருவோம் என்பதை நிரூபியுங்கள்.

போட்டி என்றிலிருந்து துவங்கும், அதில் எப்படி கலந்து கொள்ளலாம், பரிசுத் தொகை என்ன என்பது பற்றிய விபரங்கள் வெகு விரைவில் வெளியாகும்.

ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்திற்கு  9962295636 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மெசேஜ் அனுப்பி, உங்கள் ஆர்வத்தை தெரிவிக்கலாம். 

இளம் குறும்பட இயக்குநர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

ஐ.எஸ்.ஆர் 5 நிமிட குறும்படப் போட்டி! போட்டியாளர்கள் அறிந்து கொள்ள சில முக்கியத் தகவல்கள்!

 


ISR 5 minute short film contest

Announcement : 07
கலந்து கொள்பவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய சில தகவல்கள்.
Theme : Child rights (குழந்தைகளுக்கான உரிமைகள்)
குழந்தைக்கான வயது வரையறை
-------------------------------------------------
18 வயதுக்கு உட்டபட்ட அனைவரும் குழந்தைகள்
18 வயது முடியும் வரை உள்ள பருவம் குழந்தைப்பருவம்
What age is considered a child?
---------------------------------------------
A child means every human being below the age of eighteen years, as defined by Article 1 of the The United Nations Convention on the Rights of the Child.
குழந்தைகளுக்கான உரிமைகள் எவை?
சுருக்கமாகச் சொன்னால் . . .
உணவு, உடை, இருப்பிடம், காற்று, குடிநீர், மருத்துவம், தேவையான தகவல், விளையாட்டு, ஓய்வு மற்றும் பாதுகாப்பு.
What are Child Rights?
Healthy water & food, Quality Education, Family Support, Freedom to express, Access to Child friendly information, Importance of Relaxation & Play, Exposure to culture & Art
Awards : Best 3 films, Best Director, Best Script Writer, Best performers, Best Cinematographer and Best Editor.
Next announcement : 09.08.2022
Hello film makers, keep watching this page for update. Very soon starting date will be announced.
வெகு விரைவில் போட்டி துவங்கும் நாள் அறிவிக்கப்படும். அதுவரையில் மற்ற அறிவிப்புகள் தொடரும்.

Friday, August 5, 2022

சிவாஜியுடன் ஏன் மணிரத்தினம், ஷங்கர் போன்றோர் பணியாற்றவில்லை?

இயக்குநர் ஷங்கர் திருமணத்தில் நடிகர் திலகம், தன் மனைவியுடன் வந்திருந்து வாழ்த்தியபோது எடுத்த படம் இது.

இதைப் பார்த்தவுடன் எனக்குள் எப்போதும் உள்ள கேள்வி மீண்டும் எழுகிறது. சிவாஜி - ஷங்கர், மணிரத்னம், பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்றோரின் காம்பினேஷனெல்லாம் ஏன் நடக்கவே இல்லை என்று எப்போது யோசித்தாலும் புரியவில்லை.

சிவாஜி அவர்களை தவிர்த்தாரா அல்லது சூழல் அவர்களை இணைய விடவில்லையா?

Sunday, July 10, 2022

அசர வைக்கும் கே.பாலச்சந்தர் அறிமுகங்கள் - குற்றால அருவி முதல் சூப்பர் ஸ்டார் வரை

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் அறிமுகங்கள்.

இருமல் தாத்தா முதல், குற்றாலம் அருவி வரை ஒரு பட்டியல் போட்டால் அவருடைய அறிமுகங்களில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இருப்பார், என் தந்தை ஐ.எஸ்.ஆரும் இருக்கிறார்.


இது இயக்குநர் சிகரத்தின் நிகரற்ற சாதனை. இன்னும் அடுத்த 100 வருடங்களுக்கு அவருடைய அறிமுகங்கள் திரை உலகை ஆட்சி செய்வார்கள். 

நான் இயக்கியுள்ள யாதெனக்கேட்டேன் சிறப்புக்காட்சி பார்த்த சிலர், சில இடங்களில் பாலசந்தர் டச் இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். அவருடைய படம் பார்த்து வளர்ந்தவர்களிடம் இந்த டச் இயல்புதான். தவிர்க்கவே முடியாமல் தலைவர் பாலச்சந்தர் நம்மை உள்ளுக்குள் இருந்து இயக்குவார்.

இந்த வீடியோ கே.பி பட டியூன்களை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு மாஷப். இதில் அவருடைய அறிமுகங்கள் டைட்டில் அனிமேஷனாக உள்ளது. கே.பி மறைந்த தினத்தில் நண்பர் ஸ்ரீ படத்தின் இசையமைப்பாளர் முரளியுடன் அமர்ந்து இந்த வீடியோவை உருவாக்கினோம்.

இன்று என் நண்பரும் இல்லை. இயக்குநர் சிகரமும் இல்லை. எனவே இயக்குநர் சிகரம் கே.பி மற்றும் நண்பர் முரளி ஆகியோரின் நினைவாக இந்த வீடியோவை பகிர்ந்து கொள்கிறேன். காலம் மட்டும் உதவியிருந்தால் இருவருக்குமே யாதெனக்கேட்டேன் படத்தை திரையிட்டுக் காண்பித்து மகிழ்ந்திருப்பேன்.

Love and respects to KB Sir, My dad ISR and dear friend Murali.

#KBalachander #ActorISR #Murali

Saturday, July 9, 2022

பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்படி இருக்கும்?

பொன்னியின் செல்வன் எப்படி இருக்கும்?

எதிர்காலத்தில் தமிழ்மண் சார்ந்த பல வரலாறுகளை படமாக்கத் துணிவும், உற்சாகமும் தரும் துவக்கமாக இருக்கும். டீசர் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியான டிரோல் மற்றும் ரியாக்சன் வீடியோக்களை பார்த்தபின் எனக்கு இதுதான் தோன்றியது.
டீசர் வெளியான வினாடியிலிருந்து தற்போது வரை பொன்னியின் செல்வன் தான் டிரெண்டிங். எதிர்பார்த்தபடியே டிரோல்கள் ஊர்வலம் வருகின்றன. என்னுடைய குந்தவையை காணோம், நந்தினியை ஏற்க முடியாது என வகைவகையான டிரோல்கள்.
அதே நேரத்தில் நிறைய டீசர் ஆடியன்ஸ் ரியாக்சன் வீடியோக்கள் பார்த்தேன். அதில் பேசியவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். அவர்கள் அப்படியே நேர்மாறாக உற்சாகமாக இருக்கிறார்கள். வழக்கமாக என் தலைவன், உன் உயிர் என்று நடிகர்களைக் கொண்டாடும் அவர்கள், முற்றிலும் புதிய இரசிகர்களாக வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், என் மொழி... அதை பிரமாண்டமாக பேசும் பொன்னியின் செல்வன் என்று கூறினார்கள். நான்கைந்து பேர் டீசர் வெளியாவதற்கு முன் தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாட்கேஸ்ட் கேட்டு கதையை புரிந்து கொண்டதாகவும் கூறினார்கள்.
மணிரத்னம் இந்த இளைஞர்களை ஏற்கனவே கவர்ந்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். அடுத்தடுத்த டிரெய்லர் மற்றும் டீசர்கள் இந்த இரசிகர் வட்டத்தை நிச்சயம் பெரிதாக்கும் என்றுதான் நினைக்கிறேன்.
ஆனால் என் மண், என் கலாச்சாரம் என் பொன்னியின் செல்வன் என்கிற ஈர்ப்பு மற்ற மொழிகளில் எப்படி எடுபடும் எனத் தெரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம்... விக்ரம் படம் ஏற்படுத்தியிருக்கும் பாக்ஸ் ஆபீஸ் அதிர்வுகளால் இரசிகர்கள் தியேட்டருக்கு திரும்ப வரத் தயார் மன நிலையில் இருக்கிறார்கள். அவர்களை பொன்னியின் செல்வன் படம் மீண்டும் தியேட்டருக்கு குடும்பம் குடும்பமாக வரவேற்கும் என்று நான் நம்புகிறேன்.