Friday, December 12, 2008

எல்லாம் கொலைச் செயல்! - திரை விமர்சனம்

நான் கல்லூரி படிக்கும்போது பாக்கெட் (கிரைம்) நாவல்கள் பிரபலம். எல்லா பாக்கெட்டுகளிலும் ஒரே ஸ்டைல்தான். 50 பக்கம் வந்தவுடன் பட்டென எல்லா முடிச்சுகளும் அவிழ்ந்துவிடும். அடுத்த 5 பக்கங்களில், கொலைகாரன் அகப்படுவான், கதை முடிந்துவிடும் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் முதல் பக்கத்தில் 'சார் போஸ்ட்' என்ற தபால்காரர்தான் உண்மையான கொலைகாரன் என்று புது திருப்பம் தந்து நாவலை முடிப்பார்கள்.

அதே ஸ்டைலில் 'சிந்தாமணி கொல கேஸ்' என்று மலையாளத்தில் வந்த படம் தமிழில் 'எல்லாம் அவன் செயல்' ஆகியிருக்கிறது. விஜயகுமார், ரகுவரன், விசு, தலைவாசல் விஜய், சுகன்யா, ரோஜா, வடிவேலு, மணிவண்ணன், சங்கிலி முருகன் என்று பல பெருந்தலைகள் படத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஆளுக்கு இரண்டு சீன்தான்.

மற்ற காட்சிகளை ஆர்.கே என்ற (புரொடியுசர்)புதுமுகம் ஜே.கே.ரித்திஷ் ஸ்டைலில் ஆக்கிரமிக்கிறார். சில நேரம் கையில் கருப்பு கிளவுஸிம், சில நேரம் வக்கில் கோட்டும் போட்டுக் கொண்டு, கேரக்டர்களை மறந்துவிட்டு முக்கால்வாசி நேரம் இரசிகர்களைப் பார்த்தே டயலாக் பேசுகிறார், அல்லது டயலாக் வாசிக்கிறார். இவருடைய பாதிப்பில் சுகன்யாவும் விசுவும் கூட எப்போதுமே விரைத்துக் கொண்டு அடித்தொண்டையில் பேசுகிறார்கள்.

கடமை தவறாத போலீஸ் அப்பாவை, சிறுவர்களான மகன் மற்றும் மகளின் கண்ணெதிரில் போட்டுத் தள்ளுகிறான் ஒரு கொலைகாரன். வெகுண்டெழும் மகன் வளர்ந்து பெரியவனாகி அந்த கொலைகாரனை பழிவாங்குவது பழைய ஸ்டைல். பெரியவனாகி வக்கீலாகி, கிரிமினல்களுக்காக வாதாடி, ஜெயித்து, விடுதலை வாங்கித் தந்து, அடுத்தநாளே அவர்களை கொலை செய்வதுதான் எல்லாம் அவன் ஸ்டைல்.

வழக்கமாக தமிழ்பட மசாலாக்களில் இது போல கொலை செய்யும் ஹீரோ, கடைசி காட்சியில் மட்டும் கையில் விலங்கோடு உள்ளே போவார். இதில் வழக்கத்திற்கு மாறாக, உங்களைப் போல இன்னும் பல பேர் வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி ஆபீசர் கொலைகாரனை வாழ்த்தி சல்யூட் அடிப்பது போல படம் முடிகிறது.

எல்லா குற்றங்களுக்கும் தீர்வு, கொலைதான் என்று தவறாகச் சொல்லித்தரும் படம். மெடிக்கல் காலேஜ் ஊழல், ராக்கிங் என சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளை இனிப்பு போல தடவி, மக்களை கொலைகாரனாக மாற கொம்பு சீவும் படம். அதை மேலும் நியாயப் படுத்த ஆங்காங்கே ஏதேதோ ஸ்லோகங்கள்.

இந்தப் படத்தின் ஹீரோவும் புரொடியுசருமான ஆர்.கே எனப்படும் ராதாகிருஷ்ணன், வி-கேன், ஸ்கைவேஸ் 2000, காந்தப் படுக்கை என விதவிதமாக மல்டி லெவல் மார்கெட்டிங் செய்து (உள்ளே போய் வெளியே வந்து) பிரபலமானவர். எதை விற்கிறோம், எதை வாங்குகிறோம் என்பதைப் பற்றி கவலை இல்லை. பணம் சம்பாதிக்க வேண்டும். அதுமட்டுமே நமது குறிக்கோள் என்று மல்டி லெவல் மார்கெட்டிங்கில் பிரெயின் வாஷ் செய்வார்கள். இந்தப் படம் அது போல, எல்லா குற்றங்களுக்கும் தண்டனையாக கொலையை சிபாரிசு செய்கிறது.

கடவுளே! இது போன்ற தவறான போதனைகளிலிருந்து இளைஞர்களை காப்பாற்று!

Tuesday, December 9, 2008

மகேஷ் சரண்யா மற்றும் ஜவ்வு மிட்டாய் - திரை விமர்சனம்

55 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி சூரியன் தியேட்டரில், திரையிலிருந்து நான்காவது வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்தால் நல்ல படம் கூட கெட்ட படமாகிவிடும்.

"நல்லாத்தான்யா யோசிச்சிருக்கான், ஆனா எடுக்கத் தெரியல. "

திரையில் மகேஷிம் சரண்யாவும் தோன்றும்போது, மற்றும் சிலராக (அடுத்த சீட்டில்) வாய்ப்பு கிடைக்காத அஸிஸ்டெண்ட் டைரக்டர்கள் இருந்தால் . . அவர்களின் தொடர் கமெண்டுகள்(கடுப்புகள்), ஒரு சில நல்ல சீன்களையும் மொக்கை சீன்களாக்கிவிடும்.

பி. ரவி எனப்படும், லிங்குசாமியின் சிஷ்யருக்கு இது முதல் படம். படித்து முடித்த பின் வாத்தியாராகி தவிக்கும் பாதி மாணவன் + மீதி லெக்சரர் போல தடுமாறியிருக்கிறார். படம் முழுக்க மகேஷிம், சரண்யாவும் வருகிறார்கள். கூடவே திறமையும், அனுபவமின்மை வருகின்றன.

யாராவது ஐஸ் கிரீம் சாப்பிட ஆரம்பித்தால் சாப்பிட்டு முடிக்கும் வரை படு நிதானமாக டயலாக் வைக்கிறார். வீட்டுக்கு யாராவது வந்தால், தெரு முனையில் கார் நுழைவதில் ஆரம்பித்து, வந்து, நின்று, கார் கதவை திறந்து, மூடி, கேட்டை திறந்து, சிரித்து, கை கூப்பி, வணக்கம், வாங்க என்று சொல்வதற்குள் . . .ஸ்ஸ்ஸ்...அப்பாடா! (டேய் ஏன்டா இந்தப்படத்துக்கு கூட்டிட்டு வந்தே? என்று எட்டாவது வரிசை ஆளை புலம்ப வைத்துவிடுகிறார்)

ஒரு காட்சி முடிந்தவுடன், அடுத்த காட்சிக்கு சட்டென போக மாட்டேன்கிறார். கோனார் நோட்ஸ் போல 'என்ன ஆச்சு தெரியுமா?' என்று இன்னொரு கேரக்டரை வைத்து முந்தைய காட்சியை ஒரு வரி விடாமல் விளக்குகிறார். அதுவும் பத்தாது என்று வெறும் லிப் மூவ்மெண்ட் போட்டு நமத்துப்போன பிண்ணனி இசையால் சில நிமிடங்களை கடத்துகிறார் (இன்னாடா டப்பிங் பண்ண காசு பத்தலையா? - பத்தாவது வரிசைக் குரல்)

ஆனாலும் லிங்குசாமியிடம் ரவி கிளாஸ் அட்டெண்ட் செய்திருக்கிறார் என்பதற்கு சில முத்திரைகள் படத்திலிருக்கின்றன. சரண்யாவின் ஓபனிங் சாங், காதலைத் தெரிவிக்கும் ரிங்டோனாக வரும்போது (மச்சான்! என்னடா திடீர்னு பின்றான் - முன் வரிசை) தியேட்டரில் முதன் முதலாக கை தட்டல். அப்பா நான் டிரெயினை மிஸ் பண்ணிட்டேன் என்ற சாதாரண வசனம், கிளைமாக்ஸில் ஒரு திருப்பு முனை வசனமாக வரும்போது இயக்குனர் முதன் முறையாக கடைசி 10 நிமிடங்களில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார். (பரவால்லடா, ஏதோ இருக்கு - அடுத்த ஸீட்),

சக்திக்கு இது இரண்டாவது படம். ஓகே!ஜோதிகாவை காப்பியடிக்கும் சந்தியா கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விட்டால் அசத்தப் போவது யாரு குழுவில் ஒருவராக்கிவிடுவார்கள்! சரண்யாவுக்கு முகத்தில் சகல எக்ஸ்பிரஷன்களும் நன்றாக வருகிறது. ஆனால் இதே போன்ற பாத்திரத்தில் தொடர்ந்து நடித்தால், தமிழ் சினிமாவின் நிரந்தர தங்கச்சியாக மாறிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது.

வித்யா சாகர் வரவர போரடிக்கிறார். படம் முழுக்க டைட்டானிக் பாதிப்பு!

ஏற்கனவே மலையாளத்தில் மோகன்லால் நடித்து, தமிழில் (விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையில்) சத்யராஜ் நடித்த ஒரு சாதாரண கதைக்கு, நல்ல திரைக்கதை அமைத்துவிட்டு, படு சொதப்பல்களான ஜவ்வு மிட்டாய் காட்சிகளால், இயக்குனர் நம்மை படம் முழுக்க கடுப்பேற்றுகிறார்.

கிளைமாக்ஸ் ஒரு எதிர்பாராத சஸ்பென்ஸ்!

ஆனால் அந்த ஒரு சில காட்சிகளுக்காக 'மகேஷ், சரண்யா மற்றும் பலரில் ஒருவனாக' மாட்டிக் கொண்டு முழிக்க நீங்கள் தயார் என்றால், இந்தப் படத்திற்குப் போகலாம்.