Friday, August 24, 2012

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - Song of this Century!

‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது...‘

சற்று முன் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜீனியர் நிகழ்ச்சியில் இந்தப் பாடலை ஒரு சிறுவன் பாடிக் கொண்டிருந்தான். அற்புதமான அனுபவம். 

ஆன்மாவில் தோய்ந்த அச்சிறுவனின் குரலில், கண்ணதாசன் வரிகள் கொஞ்சம் கொ
ஞ்சமாக இதயத்தை பிழிய ஆரம்பித்தபோது, பாடகி அருணா சாய்ராமின் விழியோரத்தில் கண்ணீர். உணர்வுகளை அடக்க முடியாமல், ராஜேஷ் வைத்தியா வீணை மீட்டுவதை நிறுத்திவிட்டு, கண்களின் ஈரத்தை துடைத்துக் கொண்டார்.

அரங்கத்திலிருந்த ஒவ்வொரு இதயமும் விவரிக்க முடியாத உணர்வுகளால், கசிந்துருகியபோது, உயிரற்ற காமிரா கூட உணர்வு பெற்று அழுதது போலத் தோன்றியது.

எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும், குடும்பத்தினருடன் அமர்ந்து இந்த பாடலை பார்த்துக் கொண்டிருந்த என் விழிகளின் ஓரங்களிலும் நீர். தொண்டை அடைத்துக்கொண்டு வார்த்தைகள் எழவில்லை.

அந்தப் பாடலின் மகத்துவம் அப்படி. கர்ணன் போன்று தூய உள்ளம் கொண்டிருந்தாலும், வாழ்வின் இன்பங்களும், துன்பங்களும் அனைவருக்கும் பொது. நல்லவர்களால் ஒப்புக் கொள்ள முடியாத இந்த சித்தாந்தத்தை, கடவுள் கண்ணனே விளக்கிப் பாடுவது போன்ற இந்த பாடல் மிக மிக அபூர்வம்.

இதற்கு முன்பும், பின்பும் இந்தச் சூழல் எந்தப் படத்திலும் வந்ததில்லை. அப்படி ஒரு பாடல் இனிமேல் வந்தாலும் இந்தப் பாடல் போல் வருமா எனத் தெரியவில்லை.

இந்தப் பாடலைக் கவனியுங்கள்! மேதைகளின் சங்கமம்! பி.ஆர்.பந்துலு, சக்தி கிருஷ்ணசாமி, சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், சீர்காழி கோவிந்தராஜன், கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி!

இன்று வரை, இந்தப் பாடல் எல்லா போட்டி மேடைகளிலும் தொடர்ந்து பாடப்படுகிறது. ஒவ்வொரு முறை ஒலிக்கும்போதும், உள்ளங்கள் உருகுவதையும், கண்ணீர் பெருகுவதையும் பார்க்க முடிகிறது. எனக்குத் தெரிந்து வேறெந்த பாடலும் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம், இசையும், வரியும், குரலும் ஆன்மாவை உலுக்கி எடுக்கிறது. எத்துணை கொடிய ஆன்மாவாக இருந்தாலும், மரிக்கும்போது இப்பாடலைக் கேட்டால், தூய்மையாக மாறிப்போகும்.

என் உள்ளத்தின் சலனமற்ற ஆழத்தில் இந்தப் பாடல் எப்போதும் இருக்கிறதென நினைக்கிறேன். எத்தனை முறை இந்த பாடலைக் கேட்டாலும், கண்கள் கசிகின்றன. இதயம் கங்கையில் குளித்து எழுவது போல இனம் புரியா புனித உணர்வை அடைகிறது.

என்னைக் கேட்டால், கடந்த 50 ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த தமிழ் திரை இசைப் பாடல்களில் முதல் இடம், உள்ளத்தில் நல்ல உள்ளம்‘ என்ற இந்தப் பாடலுக்குத்தான். Song of this Century!

என் உள்ளத்தை சுத்திகரிக்கும், இந்த அற்புத பாடலைத் தந்த மேதைகளை சந்திக்க நேர்ந்தால், அவர்களின் பாதம் தொட்டு வணங்குவேன்.

குறிப்பாக தன் இசையின் மேன்மையால் காலத்தின் தோள்களில் ஏறி, அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, இசையால் உருகும் உள்ளங்களின் உள்ளும், வெளியும் பயணித்துக் கொண்டிருக்கும் மெல்லிசை மன்னர் ஐயா எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு என் இதயத்தின் ஒலிகளை சமர்ப்பிக்கிறேன்.

இன்று விஜய் டிவியில் பாடிய அச்சிறுவனின் பெயரை குறித்துக் கொள்ள மறந்துவிட்டேன். நான் மறந்தால் என்ன . . . எத்தனையோ மேதைகளின் பெயர்களுடன் சேர்ந்து, இனி அவன் பெயரும் ஒலிக்கும். இதை விட வேறென்ன பேறு வேண்டும்.

‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது,
வல்லவன் வகுத்ததடா..‘

Tuesday, August 21, 2012

கற்றதும் கற்பதும் : நெருப்பு நரியின் சைலண்ட் தந்திரம்


FireFox எனப்படும் நெருப்பு நரி பிரவுசர், சத்தமே இல்லாமல் ஒரு புரட்சி செய்திருக்கிறது. தற்போது FireFox 14 புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. வெளியான ஒரே வாரத்தில் முந்தைய பதிப்பிலிருந்து புதியபதிப்பிற்கு 46% சதவிகிதம் பயனார்கள் நகர்ந்துவிட்டார்கள். எப்படி இது சாத்தியமானது?

Silent Update Serivce என்றொரு புதிய நுட்பத்தை மோசில்லா பயன்படுத்தியுள்ளது. பயனாளர்கள் ஆன்லைனில் இருக்கும்போது, அவர்களை தொந்திரவு செய்யாமல், இணைய வேகத்தையும் பாதிக்காமல், நாம் வேலை செய்யும்போது காதில் விழும் பாட்டுபோல, சுளுவாக புதியபதிப்பை ஏற்றிவிட்டது.

விண்டோஸில் User Account Control என்றொரு பாதுகாப்பு அம்சம் உள்ளது. இதற்குத் தெரியாமல் எந்த ஒரு புதிய பதிப்பும், தானியங்கியாக நமது கணிணியில் உள்ளிறங்க முடியாது. ஆனால் அதற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, நெருப்பு நரி-14 உள்ளே வந்துவிட்டது என்பதுதான் சூப்பர் செய்தி.

நீங்கள் நெருப்பு நரி பயன்படுத்துபவரா? அப்படியானல் உங்கள் கணிணியில் நெருப்பு நரி-14 இறங்கிவிட்டதா? செக் பண்ணிக் கொள்ளுங்கள்.

கற்றதும் கற்பதும் : சிவப்பு ஆப்பிளும் கருப்பு தொப்பியும்


Black Hat என்பது உலகில் தற்போது தவிர்க்க முடியாத நிறுவனம். ஐடி துறையில் உள்ள அரசுகள், நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் எல்லோரும் ஒரே ஒரு முறையாவது இந்த நிறுவனத்துடன் கைகுலுக்காமல் இனி செயல்பட முடியாது என்கிற அளவுக்கு பிரபலம். அப்படி என்னதான் செய்கிறது கருப்பு தொப்பி நிறுவனம். மென்பொருளோ, இயங்குதளமோ எதுவாக இருந்தாலும் முதலில் அதை தனது புத்திசாலி வல்லுனர்களிடம் தருகிறது. அவர்கள் அதை கச்சிதமாக பிரித்து, ஓட்டைகளை கண்டுபிடித்து, அதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சம்போடுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு ரஷ்ய மென்பொருள் உளவாளி, ஆப்பிளின் iOS இயங்குதளத்துக்குள் புகுந்துவிட்டார். புகுந்தது மட்டுமல்லாமல், காசு கொடுத்தால்தான் வாங்க முடியும் என்றிருந்த சில மென்பொருள்களை ஆன்லைன் வழியாக நூறு சதவிகிதம் ஆடித்தள்ளுபடியில் இலவசமாக வாங்கமுடியும் என்று மாற்றிவிட்டார். அதே போல சில தினங்களுக்கு முன்பு, அதே இயங்குதளத்தை, ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போல, இஷ்டத்துக்கு தகவல்கள் பதியும் தளமாக ஒரு வைரஸ் மாற்றிவிட்டது.

பாதுகாப்பு உளவாளிகளும், வைரஸ்களும் எங்களை நெருங்கவே முடியாது. நாங்கள் இரும்புக் கோட்டை என்று தெம்புடன் இருந்த ஆப்பிள் நிறுவனம், இதனால் அதிர்ச்சியடைந்தது. எனவே இந்த குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பை தயார் செய்திருக்கிறது. ஆனால் சந்தைக்கு வருவதற்கு முன், தயங்கித் தயங்கி Black Hat நிறுவனத்திற்குள் காலடி வைத்திருக்கிறது. இனி பிளாக் ஹாட் நிறுவனத்தின் பிஸ்தாக்கள் மீண்டும் ஒருமுறை iOSல் உள்ள ஓட்டைகளை தேடித் துப்பறிந்து, குறைகளைக் களைவார்கள்.

Black Hat நடத்தப்போகும் சமீபத்திய மாநாட்டில், ஆப்பிள் பங்கு கொள்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் சுடு செய்தி.

கற்றதும் கற்பதும் : ஒரு வார்த்தை சொல்ல முடியாமல் தவிக்கும் மைக்ரோசாஃப்ட்


ஒரே ஒரு வார்த்தை சொல்ல முடியாமல் தவிக்கும் மைக்ரோசாஃப்ட்.

எகிப்து அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்ட போது அவர்களுக்கு உதவியாக இருந்தது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களும், ஸ்கைப் போன்ற குரல் தொடர்பு தளங்களும்தான். எனவே எகிப்திய அரசாங்கத்தின் கணிணி வல்லுனர்கள் தற்போது, ஸ்கைப் வழியாக நடைபெறும் சந்தேக உரையாடல்களை ஒலிப்பதிவு செய்வதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்கைப் வழியாக நடைபெறும் குரல் உரையாடல்கள் அனைத்தையும் அவ்வளவு எளிதாக ஒலிப்பதிவு செய்துவிடமுடியாது.

ஸ்கைப் 2003ல் பிரபலமாகத் துவங்கியதிலிருந்தே, அதன் கட்டமைப்பை உடைத்து, அதை செயலிழக்கச் செய்ய பல முயற்சிகள் நடந்தன. ஆனால் ஸ்கைப் நிறுவனத்தின் சாமர்த்திய பூட்டுகளால் (Encryption) இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. ஆனால் எகிப்து அரசாங்கம் இந்த பூட்டுகளை திறந்து உள்ளே புகுந்திருப்பதாகச் சொல்லப்படுவது உண்மை என்றால், ஸ்கைப்பின் நம்பகத் தன்மையின் மேல் சந்தேகம் வருகிறது. எனவே நமது அந்தரங்கத்துக்குள் வெளியார் நுழைவதை தவிர்க்க விரும்புபவர்கள், ஸ்கைப்பை தவிர்த்துவிட்டு வேறு குரல் தளங்களுக்கு மாறலாம் என்கிறார்கள் சர்வதேச வல்லுனர்கள்.

ஸ்கைப் கட்டமைப்பை அவ்வளவு எளிதாக உடைக்க முடியாது. ஆனால் தற்போது அதன் மேல் சந்தேகம் எழுந்துள்ளதற்கு காரணம், ஸ்கைப்பின் புதிய பங்குதாரரான மைக்ரோசாஃப்ட்தான் என்று சிலர் சொல்லத் துவங்கியுள்ளனர். சர்வதேச நாடுகளில் தனது சந்தை சரியாமல் இருக்க, அந்தந்த நாடுகளின் சொல்பேச்சுக்கு ஏற்ப, ஸ்கைப் கட்டமைப்பை மைக்ரோசாஃப்ட் தளர்த்தியிருக்கலாம் என்கிறார்கள் அதன் போட்டியாளர்கள்.

உலகம் முழுவதும் தேச நலனுக்கு எதிராக நடவடிக்கைகளை முடுக்க ஒவ்வொரு நாடும் முனைப்பாக இருக்கிறது. எனவே அந்த நாடுகளுக்கு ஸ்கைப் போன்ற குரல் தளங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் உள்ளது. ஸ்கைப்பை தன்வசம் தற்போது வைத்துள்ள மைக்ரோசாஃப்டுக்கு சட்ட ரீதியாகவே வேறு வழியில்லை. ஆனால் இதை வெளிப்படையாகச் சொன்னால், தனது வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என்பதால், அது பூசி மெழுகுகிறது என்கிறார்கள், விபரம் அறிந்தவர்கள்.

இந்த யூகம் சரியாக இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. அதன் செய்தித் தொடர்பாளரை நோக்கி வீசப்பட்ட கேள்வி இதுதான். ஸ்கைப் குரல் தளம் தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு சொந்தம். ஆனாலும் அதன் கட்டமைப்புகளை தளர்த்தி குரல் உரையாடல்களை பதிவு செய்யும் நிபுணத்துவம் மைக்ரோசாஃப்டிடம் உண்டா?
இதற்கு ஒரே பதில்தான். ஆமாம் (அ) இல்லை.

ஆனால் இன்னமும் இந்த ஒற்றை வார்த்தைகளை உதிர்க்க தயங்கிக் கொண்டிருக்கிறது.

மியாவ் என்றால் என்ன?


கிட்டத்தட்ட நள்ளிரவு!
சன்னமாக ஒரு ஆணின் அழுகுரல்!

சில வீடுகளின் உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்குகளைத் தவிர, தெருவில் வேறெந்த வெளிச்சமும் இல்லை.

குரல் வந்த திசை மேலும் இருட்டானதாக இருந்தது. அந்த இருட்டை அடையாளம் காட்டும்விதமாக ஒரு மொபைல் ஃபோனின் ஒளி.

நிழலாக ஒரு சைக்கிளும், முகம் தெரியாத அந்த ஆளையும் அவர்களை கடப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு என்னால் பார்க்க முடிந்தது.

‘என் குழந்தையை என்கிட்ட தரப்போறியா இல்லையாடி... ‘
அவனைக் கடக்கும்போது என் காதில் விழுந்த வார்த்தைகள் இவை.

அந்த ‘டி‘ அவனுடைய மனைவியாக இருக்கக் கூடும்... அல்லது...
என்னுடைய யூகங்கள் புதுப்புது வடிவமெடுப்பதற்குள் வீடு வந்துவிட்டது.

வாசலில் ஒரு குட்டிப் பூனை. அதற்கு அம்மாவோ அப்பாவோ கிடையாது. என்னைப் பார்த்ததும் மரத்தில் தொற்றிக் கொண்டது.

அந்தப் பூனை குட்டியைப் போல எங்கோ ஒரு குழந்தை... அந்த மரத்தடி ஆணுக்கும், அவன் கெஞ்சிக் கொண்டிருந்த ‘டி‘க்கும் இடையில் சிக்கிக் கொண்டு இருக்கிறதோ...

அவர்கள் இருவரையும் விடுங்கள். அந்தக் குழந்தை தன் உணர்வுகளை யாரிடம், எப்படிச் சொல்லும்.

மியாவ் என்றது குட்டிப் பூனை, எங்கோ வெறித்தபடி!

மியாவ் என்றால் என்ன? உங்களில் யாருக்காவது அர்த்தம் தெரியுமா?