Thursday, April 1, 2010

சூப்பர் ஸ்டாருக்காக ஒரு பாட்டு

சூப்பர் ஸ்டார் ஆகணும் சார். அதுதான் என் கனவு!

நான் தற்போது ”அவர்” என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருப்பதை உங்களில் சிலர் அறிந்திருப்பீர்கள். ஸ்கிரிப்ட், பாடல் பதிவிற்குப் பின், தற்போது நடிகர் நடிகையர் தேர்வு ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. தேர்வுக்கு ஒரு இளைஞன் வந்தான்.

ஒல்லியாக, மெல்லிய தாடியுடன், உறுத்தாத ஆங்கிலத்தில் பேசிய அந்த 23 வயது இளைஞன் ஜீன்ஸ் அணிந்திருந்தான்.  காரில் வந்து இறங்கிய அவனுக்கு ஏற்கனவே 5 வருட அனுபவம். புரொடக்ஷன் எக்சிகியுடிவ், லைன் புரொடியுசர், அசோசியேட் டைரக்டர், குறும்பட நடிகர் என கலவையான அனுபவம் கலந்த இளமை. 

உன்னுடைய எதிர்காலக் கனவு என்ன என்று கேட்டதற்கு அவன் சொன்ன பதில் இதுதான்.
”சூப்பர் ஸ்டார் ஆகணும் சார். அதுதான் என் கனவு!”

சூப்பர் ஸ்டார் ஆவது என்றால் என்ன?
தொடர்ந்து வசூல் மன்னனாகத் திகழ்வதா?
எம்.கே. தியாகராஜ பாகவதர் போல, பாடியே மக்களைக் கவர்வதா? எம்.ஜி.ஆரைப் போல சண்டைக்காட்சிகளால் மனங்களை வெல்வதா? ரஜினியைப் போல ஸ்டைல்களால் ஈர்ப்பதா?
இதற்கு ஒரு சிலர் ஆம் என சொல்லக் கூடும். அதே கேள்வியை மேலும் நீட்டித்தால்?
சூப்பர் ஸ்டார் ஆவது
எம்.கே. தியாகராஜ பாகவதர் போல, பெண்கள் பின்னால் சுற்றியவர் என பெயரெடுப்பதா?
எம்.ஜி.ஆரைப் போல பிடிக்காத தயாரிப்பாளர்களை, நடிகர்களை ஓரங்கட்டியவர் என்று பெயரெடுப்பதா?
ரஜினியைப் போல அரசியல் ஸ்டண்டுகளால் படங்களை ஓட வைப்பவர் என்று பெயரெடுப்பதா?
இப்படி பெயர் எடுத்தால் அவர் சூப்பர் ஸ்டார் அல்ல என்றுதான் பலரும் சொல்வார்கள். சரி, அதே கேள்வியை மேலும் நீட்டித்தால்?

சூப்பர் ஸ்டார் ஆவது
எம்.கே. தியாகராஜ பாகவதர் போல, 5 தீபாவளி கண்ட வெற்றிப் படத்தை தருவதா?
எம்.ஜி.ஆரைப் போல சினிமாவில் பிரச்சாரம் செய்தே தமிழக முதல்வர் ஆவதா?
ரஜினியைப் போல வெளிநாடுகளிலும் புகழ் பரப்புவதா?

இந்தக் கேள்விக்கு பதிலாக மூன்றையுமே அனைவரும் பதிலாகச் சொல்வார்கள்.
சரி, அதே கேள்வியை மேலும் நீட்டித்தால்?

சூப்பர் ஸ்டார் ஆவது . . .
எம்.கே. தியாகராஜ பாகவதர் போல, கொலை வழக்கில் சிக்கி ஏழையாக வாழ்ந்து மடிவதா?
எம்.ஜி.ஆரைப் போல அட்டைக் கத்தி, வாய் உளறும், நடிக்கவே வராது என்று பெயரெடுப்பதா?
ரஜினியைப் போல மென்டல், கன்னடத்துக்காரன் என்று விமர்சனத்துக்கு உள்ளாவதா?
இந்த மூன்றில் எதையுமே ஒரு சூப்பர் ஸ்டாரின் தகுதியாக எவருமே ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் மேலே உள்ள முரண்பாடுகள் அத்தனையையும் கொண்டவர்கள்தான் சூப்பர் ஸ்டார்களாக நம்மிடையே இருக்கிறார்கள். வெற்றியடையும்போது சிகரங்களையும், தோல்வியின்போது அதல பாதாளங்களையும் அவர்கள் கண்டிருக்கிறாரகள், மீண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சூப்பர் ஸ்டார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் கனவு காணும் ஒவ்வொருவரும் அவர்களுடைய வெற்றிகளை மட்டுமே பார்க்கிறார்கள். அந்த வெற்றிக்கான போராட்டங்களும், இழப்புகளும் மற்றவர்கள் கண்களுக்கு தென்படுவதே இல்லை. அதை விட முக்கியம், வெற்றி பெற்ற பின் அதை தக்க வைக்கும் போராட்டம். அந்த மனப் போராட்டத்தின் விளைவாக அவர்களில் ஏற்படும் தனிமை, இவற்றை அடிப்படையாக வைத்து ஒரு பாடல் உருவாக்கினால் என்ன என்று தோன்றியது. அப்படித் தோன்றக் காரணம் ஃபேஸ்புக்கில் எம்.கே.தியாகராஜ பாகவதரைப் பற்றிய சுவையான உரையாடல்.

எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு சமர்ப்பிக்கப்படும் இந்த இசைக்கு பாடல் வரிகளில் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்று யோசித்தேன். எனவே ஃபேஸ்புக்கில் தொடர்ந்து கவிதை எழுதி வரும் 10 பேரை சில வரிகள் எழுத வைத்து அவற்றை இசை அமைத்தோம்.

எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்களில் ”சொப்பன வாழ்வில் மகிழ்ந்து” என்பது சூப்பர் ஹிட் பாடல். அந்தப் பாடல் தேவநகரி என்ற இராகத்தில் அமைந்த பாடல். அந்தப் பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக் கொண்டு அதே தேவநகரி இராகத்தில் பாடலை இசையமைத்திருக்கின்றோம்.

வெற்றியின் மகிழ்ச்சியை விட, வெற்றியின் உச்சியில் தனிமையில் அதை தக்க வைக்கும் போராட்டங்களையும், தோல்வியடையும்போது எதிர்கொள்ளும் வலிகளையும் உணர்த்தும் விதமாக இந்தப் பாடலை இசையமைத்துள்ளோம். கேளுங்கள்!  ஒரு கனவு உலகம் உங்களுக்குள் விரியும்.


பாடலை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளலாம்

பாடல் வரிகள் - 10 ஃபேஸ்புக் நண்பர்கள்
இசை - விவேக் நாராயண் ("அவர்" படத்தின் இசையமைப்பாளர்)
பாடியவர்கள் - விவேக் நாராயண், அவருடைய தாயார், அவருடைய மகள்
சவுண்ட் மிக்ஸிங் - ராகேஷ்
ஐடியா - அடியேன்!
தூண்டுதல் - அஷாந்தி ஓம்கர், பார்த்திபன் ஷண்முகம்