Monday, January 12, 2009

திருமங்கலத்தில் தி.மு.க வெற்றி ஏன்?

போட்டி கடுமையாகி சில நூறு வித்தியாசங்களில் தி.மு.க வெல்லும் என்று நான் நினைத்தேன். ஆனால் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் வாக்குப்பதிவு, 40000 வாக்குகள் வித்தியாசம் என்று யாரும் நினைத்துப்பார்க்காத ஒரு ரிசல்ட் வந்திருக்கிறது. காரணம் . . . ஏதோ எனக்குத் தோன்றியதை சொல்லியிருக்கிறேன்.
  1. அழகிரியின் அசுர மதுரை பலம்.
  2. ஆளுங்கட்சியின் அருவருப்பான பணப்பட்டு வாடா. அதை நியாயப்படுத்திய எதிரி மற்றும் உதிரிகட்சிகளின் ஏட்டிக்குப் போட்டி பிரியாணியும், பணப் பட்டுவாடாவும்.
  3. வெள்ள நிவாரண 2000ம் ரூபாய் - ஒரு ரூபாய் அரிசி - இலவச டிவி - ரேஷனில் 50 ரூபாய்க்கு மளிகைப் பொருட்கள், இலவச பொங்கல் பொருட்கள். அதைக் கிண்டலடித்த எதிர்க்கட்சிகள்.
  4. தேர்தலுக்கு முன் வரை தூங்கி வழிந்துவிட்டு, திடீரென உறக்கம் கலைந்த ஜெயலலிதா, லட்டு மாதிரியான விலைவாசி, மின்சாரப் பிரச்சனைகளை கையிலெடுத்து (முன்னேறி பாய்வதற்குப்) பதிலாக "ஓட்டு மெஷினில் எல்லா ஓட்டும் தி.மு.கவுக்கே விழற மாதிரி பண்ணிட்டாங்க" என்று (பின்வாங்கிப்) பிதற்றியது.
  5. "எல்லா பிரச்சனைக்கும் என்கிட்ட திட்டமிருக்கு. ஆனா வெளியில் சொன்னா அவங்க காப்பி அடிச்சிடுவாங்க" என்கிற விஜயகாந்தின் 'லூசுத் தனமான' வெற்று உதார்.
  6. எதற்க்காக தி.மு.வை விட்டு அ.தி.மு.கவிடம் வந்தோம் என்பதை கம்யூனிஸ்டுகளால் தெளிவாக சொல்ல முடியாத நிலை.
  7. ஈழம் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, பாலஸ்தீனத்துக்காக குரல் கொடுத்த ஜெயலலிதாவின் தமிழனப் பற்று மற்றும் உலக அறிவு.
  8. சொந்த தொகுதியை கூட்டணிக் கட்சியே பிடுங்கிக் கொண்டதால் ஏற்பட்ட (வெளியில் சொல்லிக்க முடியாத) ம.தி.மு.வின் தளர் நடவடிக்கை.
  9. பேரன்-அண்ணன்-தளபதியின் கூட்டு பிரச்சாரத்தால் தி.மு.வின் வாக்கு தி.மு.கவிடமே நிலை கொண்ட மனநிலை.
  10. கிட்டத்தட்ட 90 சதவிகிதத்தை எட்டிய வாக்குப் பதிவு.
இந்தத் தேர்தலில் பல முரண்பாடுகள். பீகார், மற்றும் உத்திரப் பிரதேசத்தை விட வன்முறை தலை விரித்தாடுகிறது. துணை இராணுவம் இல்லாமல் தேர்தல் நடக்காது, என்று செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும், தேர்தல் கமிஷனும் கூறின. எனவே என்னதான் துணை இராணுவம் இருந்தாலும் வாக்குப்பதிவு மந்தமாக இருக்கும் என்று நினைத்தால் ... இது வரை இல்லாத அளவு வாக்காளர்கள் ஆர்வம் காட்டி வாக்களித்திருக்கிறார்கள்.

பொதுவாக வாக்குப்பதிவுகள் அதிகமானால் அது ஆளுங்கட்சிக்கு ஆப்பு என்று சொல்வார்கள். இங்கேயோ கிட்டத்தட்ட 40000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் தி.மு.க ஜெயித்திருக்கிறது. இத்தனைக்கும் சென்ற தேர்தலில் இது தி.மு.க தோற்ற தொகுதி.

தி.மு.கழக குடும்பங்கள் இணைந்துவிட்டால் இனிமேல் சன் டிவியில் ஜெயலலிதா, வை.கோ, விஜயகாந்த்தை காட்ட மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு தேர்தல் காலங்களில் மீடியா மைலேஜ் கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வரை சன் வழக்கம்போல எல்லோரையும் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் ரிசல்டில் பாதிப்பில்லை.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் திருமங்கலம் தி.மு.கவுக்குத்தான் திருப்புமுனை. மற்ற (அ.தி.மு.க ஆதரவு காங்கிரஸ் உட்பட) எல்லா கட்சிகளுக்கும் இது கடுப்பு முனை.

மேஸ்ட்ரோ ரஹ்மான் - கோல்டன் குளோப் விருது வென்றார்

இந்திய திரை இசையை ஒரு புதிய திசைக்கு அழைத்து வந்த சென்னை மொசார்ட் இந்திய இசைக்கு மேலும் ஒரு புகழ் சேர்த்திருக்கிறார்.

Slumdog Millionaire திரைப்படத்திற்கு அவருடைய இசை பங்களிப்பு ஏற்கனவே உலகமெங்கும் இசை அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது. இசைப்புயலின் அந்த அதிர்வுகள் Gloden Globe விருதுகளையும் விட்டுவைக்கவில்லை. ஞாயிற்றுக் கிழமை கலிஃபோர்னியாவில் நடைபெற்ற 66வது Golden Globe விருது வழங்கும் விழாவில் இந்த விருதை வென்றுள்ளார். இதைத் தொடர்ந்து ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இத் திரைப்படத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் அவர் Andrew Lloyd Webberருடன் இணைந்து பணியாற்றிய இசை நாடகம் "Bombay Dreams" ஒரு இன்டர்நேஷனல் ஹிட். ஆனால் பிரிட்டிஷ் இயக்குனர் Danny Boyleன் "Slumdog" இரகுமானை அடுத்த தளத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது.

"நான் வெளிநாட்டில் விடுமுறைக்குச் சென்றிருந்தபோது இந்தப்படத்தில் பணிபுரிய வாய்ப்பு வந்தது. முழுவதுமாக தீர்மானிப்பதற்கு முன்னரே இந்தப் படத்தில் பணிபுரிய ஆரம்பித்துவிட்டேன். ஆனால் படத்தின் ஸ்கிரிப்ட் எனக்குள் இருந்த இசையை வெளிக் கொணர்ந்துவிட்டது" என்று இரகுமான் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Youtubeல் பார்த்த வீடியோவில், விருதை கையில் வாங்கியவுடன் கூச்சத்துடன் "Unbelievable" என்று (30 வினாடி உரையை) ஆரம்பித்தார். பிறகு எதிர்பார்த்தது போலவே "Thanks to Alimighty God" என்று நன்றியுரையை துவக்கினார். தொடர்ந்து "Thanks to Billion people from India" என்று முடித்தார்.

அவர் அடிக்கடி சொல்வது போல "எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே"


இன்றைய தலைமுறைக்கு தனது இசையால் உலகம் அளந்த இரகுமான் ஒரு வழிகாட்டி. அதனால் எதிர்காலத்தில் இந்திய இசை இன்னும் பலமாக சர்வதேச அளவில் ஒலிக்கும்.
  
இன்று (14.01.09) என்டிடிவியில் ஒளிபரப்பான அவருடைய பேட்டியிலிருந்து சில துளிகள்
"ஸ்பீல்பெர்க் உட்பட நான் யாரையெல்லாம் பார்த்து வியந்து இரசித்தேனோ, அவர்களையெல்லாம் சந்தித்தேன். அவர்களின் கைதட்டலு்க்கிடையே விருது வாங்கினேன்.  இந்த விருது இந்திய இளைஞர்களை மேலும் ஊக்கப்படுத்தும். எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை தரும்."


"ஆஸ்கர் விருது பற்றி பெரிதாக எதிர்பார்க்கவில்லை. தற்சமயம் இந்த வெற்றியை சுவைத்துக் கொண்டிருக்கிறேன்."

"பணம் நம்மதியை தராது. பணத்தை வைத்துக்கொண்டு அமைதியை தொலைத்த சில மில்லியனர்களை பார்த்திருக்கிறேன். உலகின் எந்த மூலையில் வசித்தாலும் மக்கள் சந்தோஷமாக இருந்தால் அதுவே என் சந்தோஷம். "

விருது பற்றி சில குறிப்புகள் :
  • Golden Globe விருது என்பது ஆண்டுதோறும் HFPA என்ற அமைப்பினால் வழங்கப்படுகிறது. HFPA என்பது Hollywood Foreign Press Association என்பதின் சுருக்கம். 1944லிருந்து இந்த விருது வழங்கப்படுகிறது.
  • திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் சிறந்த வெளிநாட்டு (மற்றும் உள் நாட்டுத்) திறமையாளர்களை கண்டுபிடித்து ஊக்குவிப்பதற்க்காக இந்த விருது தோற்றுவிக்கப்பட்டது.
  • ஏ.ஆர்.ரஹ்மான் இந்த விருதை வென்ற முதல் இந்தியர்.
கொசுறு சந்தோஷம் : இரு வருடங்களுக்கு முன் (வரலாறு படம் ரிலீசுக்கு முன்னால்) நான் அவரை சந்தித்திருக்கிறேன். ஒரே ஒரு புராஜக்டில் அவருக்காக அவருடைய ஸ்டுடியோவில் ஒரு வீடியோ செய்திருக்கிறேன்.