Friday, November 21, 2008

தேவாதி தேவர்களுக்காக பயப்படும் விகடனும், குமுதமும்

'இணைய தளத்தில் பல விஷயங்களை உடைத்து எழுதும் வசதி இன்னும் பத்திரிகை உலகத்திற்கு வந்து சேரவில்லை. அப்படிப் பட்ட விஷயங்களில் ஒன்று சட்டக் கல்லூரி வன்முறை'

இந்த வார ஓ பக்கங்களின் ஓஹோ ஆரம்பம் இதுதான். தன்னை நடுநிலையின் மனித பிம்பமாக மகா அகம்பாவத்துடன் வெளிப்படுத்திக் கொண்டு வரும் ஞாநியின் வாக்கு மூலம் இது. இவர் எதை எழுத நினைத்தார்? எழுத நினைத்ததை குமுதத்தில் யார் தடுத்தார்?

இந்த மாநிலத்தின் முதல்வருக்கு வாரம் தவறாமல் தைரியமாக குட்டு வைத்த 'எந்த ஜாதிக்கும் உட்படாத ஞாநியை', சட்டக் கல்லூரி விவகாரத்தில் தலையில் குட்டி, 'உன் போக்கில் எழுதாதே' என்று அடக்கி பயமுறுத்தி வைத்த அந்த 'முரட்டு ஜாதி' கரங்கள் எவை?

சட்டக் கல்லூரி வன்முறைக்கு காரணம் 'ஜாதி' என்பதும், அது கல்லூரிக்கு வெளியே ஆரம்பித்தது என்பதையும் அறிந்துகொள்ள எந்த விசாரணை கமிஷனும் தேவையில்லை. ஆனால் எந்த ஜாதியால் பிரச்சனை ஆரம்பித்தது என்பதை போலீசோ, அரசோ, விசாரணை கமிஷனோ தைரியமாகச் சொல்லுமா என்பது சந்தேகம்தான். ஆனால் எதற்கும் அஞ்சாத ஞாநி, யாருக்கும் அஞ்சாத ஞாநி இதைப் பற்றி தைரியமாகச் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஞாநி வெறும் சோனி ஆகிவிட்டார்.

இந்தவாரம் 'ஞாநியின் ஓ பக்கங்கள்' பிரச்சனையின் வேர்களை பயத்தோடும் ஜாக்கிரதையோடும் தேடியிருக்கிறது. உண்மையை எழுதியிருந்தாலும், உரக்க பல விஷயங்களை சொல்ல முடியாமல் பயந்திருக்கிறது. பயம் என்று சொல்லக் காரணம் தெரியவேண்டுமானால் இந்த வார ஆனந்தவிகடனின் 'சட்டம் - சதி - சாதியை' படியுங்கள்.

'சமீபத்தில் நடந்து முடிந்த தேவர் ஜெயந்திதான் இதற்கான பிள்ளையார் சுழி' என்று தைரியமாக எழுதப்பட்ட அல்லது தெரியாமல் உளறிவிட்ட ஒரு வரி ஆனந்த விகடனின் கட்டுரையில் வருகிறது. ஒரு தரப்பு மாணவர்கள் அடித்த போஸ்டரில் 'டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி' என்ற கல்லூரியின் பெயரில் 'டாக்டர் அம்பேத்கர்' பெயர் மிஸ்ஸிங் என்று இன்னொரு வரி இருக்கிறது. ஆனால் அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்த, இப்படி ஒரு வன்முறைக்கு ஆரம்ப காரணமாக இருந்த அந்த ஒரு தரப்பு மாணவர்கள் 'எந்த ஜாதியைச் சேர்ந்த வெறியர்கள்' என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. மிஸ்டர் தைரியம் என்று பெயரெடுத்த - ஞாநி அவர்களும் தொடை நடுங்கிப் போய் 'மிஸ்டர் உபதேசமாக' மாறி பொத்தாம் பொதுவாக எழுதி நழுவிட்டார்.

தேவர் ஜெயந்தி வருடா வருடம் 'பயங்கர அமைதியுடன்' நடந்து முடியும் அரசியல்வாதிகளின் 'ஜாதி ஓட்டு ஜெயந்தி'யாக நடந்து முடியும். இந்த வருடம் அந்த நாள், ஜெயலலிதா காரின் மேல் கல்லெறியப் பட்ட நாளாக அறியப்பட்டது. ஆனால் அதே நாளில் அல்லது அதற்கு முந்தை நாட்களில் இந்த போஸ்டர்களில் 'அம்பேத்கர் பெயர்' இருட்டடிப்பு சம்பவமும் தொடர்ந்து மோதலும் நடந்திருக்கிறது.

விகடன் ஒரு நாலு பக்க கட்டுரையும், ஒரு தலையங்கமும் எழுதியிருக்கிறது. குமுதம் தன் பங்குக்கு ஒரு ஷாக் ரிப்போர்ட் கொடுத்துவிட்டு, தலையங்கத்தில் குமுறிவிட்டு, ஞாநியை 'தட்டிக் கொடுத்து' எதையோ எழுத வைத்திருக்கிறது.

தமிழகத்தின் பாரம்பரியமிக்க பண்பாட்டைக் காக்கும், வெள்ளிவிழா, பொன்விழாவையெல்லாம் கண்ட பத்திரிகைகள். சட்டக் கல்லூரி வன்முறை விஷயத்துக்காக கிட்டத்தட்ட 10 பக்கங்களை ஒதுக்கியுள்ளன. ஆனால் ஒரே ஒரு வரியில் கூட இந்த வன்முறையின் ஆரம்ப வித்துக்கு காரணமான 'தேவர்'களைப் பற்றி எழுத தைரியமில்லை.

தேவர் ஜெயந்தியன்று, அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்தவர்கள் தேவர்கள், அதை தட்டிக் கேட்டவர்கள் தலித்துகள்.

இந்த ஒரு வரியை எழுத முடியாமல்தான் ஞாநி தொடை நடுங்குகிறார். ஆனந்த விகடன் கலர் படம் போட்டு விட்டு 'இரண்டு ஜாதிகளுக்குள் மோதல்' என்று மையமாக சொல்லிவிட்டு ஜகா வாங்குகிறது.

ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? இந்த ரெண்டு பத்திரிகைகளும் என்ன ஜாதி? ஏதாவது ஒரு விசாரணை கமிஷன் வைச்சு சொல்லுங்கப்பா!

Sunday, November 16, 2008

சூர்யாயிரம் : திரை விமர்சனம்

'காக்க காக்க'வை சேரன் இயக்கியிருந்தால் எப்படி இருக்கும்? சூர்யா ஹீரோயினாகி, ஜோதிகா ஹீரோவாகியிருப்பார். ஆட்டோகிராபை கெளதம் இயக்கியிருந்தால் எப்படி இருக்கும்? சேரன் காதல் தோல்வியில் கஞ்சா அடித்து, டெரரிஸ்ட் ஆகி இன்னொரு காதல் செய்திருப்பார்.

இது கிண்டல் கிடையாது, என்னடா இது, நல்ல முயற்சி, ஆனா . . இப்படி இருக்கேன்னு ஒரு ஆதங்கம்.

சேரனின் தவமாய் தவமிருந்தின் பாதிப்பு வாரணம் ஆயிரத்தில் இருக்கக்கூடும் என்று கெளதம் சில மாதங்களுக்கு முன்பு ஏதோ ஒரு பத்திரிகை பேட்டியில் கூறியிருந்தார். அவர் சொன்னது போல பாதிப்பு இருக்கிறது, ஆனால் பாதிதான் இருக்கிறது. மீதியை காக்க காக்க கமாண்டோக்களும், வேட்டையாடு விளையாடு டெரரிஸ்டுகளும், டிரக் அடிக்டுகளும் ஆக்கிரமித்துவிட்டார்கள்.

அமெரிக்காவுக்கு எம்.எஸ் படிக்கப் போகும் மேக்னாவை, ஒரு இரயில் பயணத்தில் பார்த்தவுடன் காதலிக்கிற சூர்யா, அமெரிக்காவிற்கே சென்று காதலில் ஜெயிக்கிறார். ஆனால் அமெரிக்காவிலேயே ஏதோ ஒரு குண்டு வெடிப்பில் மேக்னா இறந்துவிட, இந்தியா திரும்பும் சூர்யா சோகத்தை மறக்க Drug addictஆக மாறி, பின்னர் திருந்தி இந்திய இராணுவத்தில் சேர்கிறார். சேர்ந்த கையோடு பள்ளிக்காலத்தில் கூட படித்த பிரியாவை மணக்கிறார்.

இவருடைய இந்த முடிவுகளுக்கும், வெற்றி(?)களுக்கும் காரணம் தன்னுடைய அப்பாதான் என்று படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி ஃபிரேம் வரைக்கும் சூர்யா சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அந்த உறவின் ஆழத்தைச் சொல்ல ஒரே ஒரு காட்சி கூட படத்தில் இல்லை.

படத்தின் ஆரம்ப டைட்டில் முடிந்தமே சூர்யாவின் ஆதிக்கம் கொடி கட்ட ஆரம்பித்துவிடுகிறது. எழுபதுகளின் பள்ளி மாணவனாக சூர்யா. எண்பதுகளின்
காதலனாக சூர்யா, 90களின் தகப்பனாக சூர்யா, 2000த்தின் இளைஞனாக சூர்யா, என வயதின் பல பரிமாணங்களை இளமை, முதுமை - காதல், கவர்ச்சி - துள்ளல்,மோதல் - பயம்,வீரம் என பல சுவைகளுடன் வெளிக்காட்டியிருக்கிறார். எனக்குத் தெரிந்து எந்த ஒரு நடிகனுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததில்லை. சூர்யாவைப் போல உணர்ந்து மெனக்கெட்டு நடித்ததுமில்லை.

ஆனால் அழுத்தமான காட்சிகள் இல்லாததால், அர்த்தமில்லாத கவிதையை வாசிப்பது போல இருக்கிறது.

சிம்ரன் அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டார். காதலியாக, மனைவியாக, அம்மாவாக, கணவனை இழந்து கொண்டிருப்பவளாக வெகு இயல்பு.

மேக்னா நாயுடு, சிரிக்கிறார். . . சிரிக்கிறார் . . சிரித்துக்கொண்டே இருக்கிறார். முதலில் இந்தியாவில், அப்புறம் அமெரிக்காவில். டிரெயினில் அவரைக் கண்டதும் சூர்யாவின் கண்டதும் காதல் ஒரு ஸ்வீட் எபிசோட்.

பக்கத்துவீட்டு ப்ரியாவாக வரும் ரம்யாவுக்கு பெரிதாக வாய்ப்பில்லை.

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் ஏற்கனவே டாப் 10ல் கலக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிண்ணனி இசையில் ஏமாற்றமே.

சூர்யாதான் கமலின் வாரிசு என்பதையும், கெளதம் மேனனுக்கு - Gangsters, Drugs, Encounter இவற்றைத் தவிர வேறு எதையும் அழுத்தமாகச் சொல்ல முடியாது என்பதையும் நிரூபித்திருக்கிற படம்.