Sunday, October 26, 2014

I AM WAITING - கத்தி விமர்சனம்!

ஒரு விஜய் துதி பாடலுடன், விவசாயிகளுக்கு சமர்ப்பணம் என்ற டைட்டில் போட்டு படம் முடிவடைகிறது. புதுசா ஒரு நாட். அதை விஜய்யை வைத்து செய்தால் எடுபடும். இது ஒரு சிம்பிள் கமர்ஷியல் கணக்கு. அந்தக் கணக்கை கச்சிதமாக தன்னுடைய ஸ்டைலில் நிறைவேற்றியிருக்கிறார் முருகதாஸ். இது மசாலா படமா என்றால்... ஆமாம். முழுக்க முழுக்க மசாலாவா என்றால்... இல்லை. அடுத்த பாராவுக்கு செல்வதற்கு முன்பே சொல்லிவிடுகிறேன். இந்தப்படம் எனக்குப் பிடித்திருக்கிறது.

எங்கேயோ மனசின் ஆழத்தில் ஈரமிருக்கும் ஒரு கிரிமினல், எங்கேயோ நிலத்தின் ஆழத்தில் நீரிருக்கும் தன்னூத்து என்ற கிராமத்தை  ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடமிருந்து காப்பதுதான் கதையின் ஒரு வரி. கதையின் அடுத்தடுத்த வரிகளாக இன்னொரு விஜய், நண்பன், சமந்தா, முதியோர் விடுதி, சர்வதேச கார்ப்பரேட் குண்டர்கள், ஆள்மாறாட்டம், மோதல், தியாகம் என நிறைய வரிகள் வருகின்றன. 

விஜய் அறிமுகக் காட்சி திடீரென்று என்று ரீவைண்ட் ஆகிறது. அந்த டிவிஸ்டிலேயே தான் ஒரு Nonlinear திரைக்கதை எக்ஸ்பர்ட் என்பதை முருகதாஸ் நிரூபிக்கிறார். சின்னச் சின்ன சம்பவச் சங்கிலிகள் அல்லது சின்னச் சின்ன ஷாட்டுகளில் டபுள் ஆக்சன் விஜய், சமந்தா, சமந்தாவின் அப்பா, முதியோர் இல்லம் என பரபரவென படத்தின் அனைத்து முக்கிய காரெக்டர்களையும் அறிமுகம் செய்துவிடுகிறார். வில்லன் அறிமுகக் காட்சி மட்டும் சுவாரசியமில்லாமல் சப் என்று இருக்கிறது. வழக்கமாக முருகதாஸின் பெண் பாத்திரங்கள் பவர்ஃபுல்லாக இருக்கும்.(அஸின், நயன்தாரா, ஸ்ருதிஹாசன்). ஆனால் இதில் சமந்தா பாடல் காட்சிகளில் மட்டும் வந்துபோகிறார். அப்பா வழியாக ரிங்கை கொடுத்தனுப்பி ஃபோனில் காதலை தெரிவிப்பது மட்டும் க்யூட்.

எல்லா மசாலா பட ஃபிளாஷ்பேக்குகளும் ஹீரோக்கள், ஹீரோயினியிடம் சொல்வதாகத்தான் அமையும். இதில் கொஞ்சம் வித்தியாசமாக ரோட்டரி கிளப் மேடையில் ஒரு டாகுமென்டரி கதை சொல்கிறது. அந்த படத்தைப் பார்த்துதான் இன்னொரு விஜய் யார், தன்னூத்து கிராமத்தின் பிரச்சனை என்ன என்பதை படம் பார்க்கும் நாமும், ஹீரோ விஜய்யும் தெரிந்து கொள்கிறோம். 7ஆம் அறிவு படத்தின் முதல்காட்சியே இப்படி ஒரு விளக்கப்படம்தான். ஆனால் படத்துக்குள் அதற்கான ஸ்பேஸ் இல்லாமல் துண்டாக எடுபடாமல் இருந்தது. ஆனால் முருகதாஸ் இதில் சரியான இடத்தில் கதைக்குள் செருகிவிட்டார். 

கோலா நிறுவனங்கள் தங்கள் பிழைப்புக்காக விவசாய நிலங்களையும், நீர் நிலைகளையும் அபகரிக்கிறார்கள். விவசாயத்தையும் விவசாயக் குடும்பங்களையும் அழிக்கிறார்கள் என்பதை இந்தப் படம் அழுத்தமாகச் சொல்கிறது. அதற்காக ஒரு சபாஷ். ஆனால் அரசாங்கத்தின் துணையின்றி இந்த நிறுவனங்கள் எதையும் செய்ய முடியாது. இதைப் பற்றி இந்தப் படம் பேசவே இல்லை.

கதை போகிற போக்கில் பரபரப்புக்காக மட்டுமே செயல்படும் மீடியாக்களை ஒரு பிடிபிடித்திருக்கிறார்கள். செய்தித் தாள்கள் மற்றும் சானல்களின் கேவலமான முகத்தை படம் நெடுக காண்பித்திருக்கிறார்கள். அதற்கும் ஒரு பலே!

கிளைமாக்ஸில் மீடியாக்களின் கவனத்தை  ஈர்க்க சிட்டி முழுவதற்கும் தண்ணீர் சப்ளையை நிறுத்துகிறார் விஜய். சிட்டியே ஸ்தம்பிக்கிறது. எல்லா மீடியாக்களும் குவிகிறார்கள். ஆனால் பத்துப் பதினைந்து போலீஸ்காரர்களைத் தவிர ஒரு எதிர்கட்சி வார்டு மெம்பர் கூட திரைக்கதையில் வரவில்லை.

”கம்யூனிசம்னா என்ன தெரியுமா? என் பசி தீர்ந்த பிறகு, நான் சாப்பிடும் ஒவ்வொரு இட்லியும் இன்னொருவருடையது” இந்த வசனத்துக்காக தியேட்டரில் எக்கச்சச்க விசில். 

இதற்கு என்னுடைய பதில் என்னவென்றால் . . .”ஜனநாயகம்னா என்ன தெரியுமா? கார்ப்பரேட்டுகளை மட்டும் திட்டிவிட்டு நான் ஆதரிக்கும் (அ) நான் பயப்படும் அரசாங்கத்தை கண்டுகொள்ளாமல் விடுவது”

முதியோர்களை ஆதரிக்கும்போதும், விவசாயிகளின் பிரச்சனைகளை பேசும்போதும், கார்ப்பரேட் கோலாக்களின் தண்ணீர் கொள்ளை பற்றி அனல் கக்கும்போதும் தியேட்டரில் அப்ளாஸ். கை தட்டிய பக்கத்து சீட்டுக்காரர் இடைவேளையில் கோக் வாங்குவதற்கு க்யூவில் நின்று கொண்டிருந்தார். அவருடைய மனைவியும், குழந்தையும் லார்ஜ் கோக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எதை நிராகரிக்க வேண்டும் என்கிறோமோ அதையே ஆதரிக்கும் அபத்தமும், நிர்பந்தமும் படத்திலேயே இருக்கிறது.

உணர்ச்சிகரமான ஒரு காட்சிக்குப் பின் விஜய் சமந்தாவை வா உன்னை ஒரு இடத்திற்கு கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்ஃபி புள்ளே பாட்டு பாடுகிறார். அந்தக் காட்சி முழுவதும் கார்ப்பரேட் காஸினோக்களும், ஃபேஷன் பிராண்டுகளும், காஸ்ட்லி காபி கடைகளும்தான் மின்னுகின்றன. லோக்கல் பிராண்டுகளோ விவசாய அடையாளங்கள் எங்குமே இல்லை. இதுதான் நாம் செய்வதற்கும், செய்ய நினைப்பதற்கும் உள்ள முரண். நரம்பு புடைக்க ஒரு காட்சியில் வசனம் பேசும் இயக்குனர் முருகதாஸின் அடி மனதிலேயே இன்னமும் கார்ப்பரேட்டுகள்தான் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி.

படத்தின் ஆரம்பத்தில் காட்சி ரீவைண்ட் ஆவது போல நிஜத்துக்கும் ரீவைண்ட் ஆகுமானால் விஜய்யும் கோகோ கோலாவை புரமோட் செய்தவர்தான். அதற்காக அவர் மேல் இப்போதே கேலியும், கிண்டல்களும் இருக்கின்றன. இதற்கு மதிப்பு கொடுத்து விஜய் கார்ப்பரேட் கோலாக்களை மறந்தாலும் அவருடைய மகன் கோகோ கோலாவையும், பெப்ஸியையும் வாங்கித் தரச்சொல்லி நெருக்கடி தரக்கூடும்.

படத்தின் இறுதியில் 2G ஊழல் பற்றிக் கூட தைரியமாக விமர்சிக்கிறார்கள். இதற்காக முருகதாசுக்கும், விஜய்க்கும் சபாஷ். ஆனால் நிழல் வேறு, நிஜம் வேறு. நிஜத்திலும் அவர்கள் இருவரும் அப்படி இருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

சினிமாவில் போராளி அவதாரம் எடுத்திருக்கும் முருகதாசுக்கும், விஜய்க்கும் சில கோரிக்கைகள். 
நாங்கள் வணிகக் கலைஞர்கள். பணம் பெற்றுக் கொண்டு கோக் விளம்பரமும் எடுப்போம், கோக்கை எதிர்த்து படமும் எடுப்போம். எங்களுக்கு இரண்டும் ஒன்றுதான் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால் இந்த திரை விமர்சனம் இத்துடன் நிறைவு பெறுகிறது. நாங்கள் அப்படி அல்ல என நீங்கள் நினைத்தால் அடுத்த வரியையும் தொடரலாம்.

முருகதாசுக்கும், விஜய்க்கும் படைப்பாளி என்பதையும் தாண்டி ஒரு போராளி என்கிற இமேஜை தற்காலிகமாவது இந்தப் படம் தந்திருக்கிறது. படத்தின் கலெக்சன் ரிப்போர்ட்டை விட இந்த பாராட்டுகள் உசத்தியானவை. இந்த அதிகப்படியான பாராட்டுகள் நியாயமானவை. உண்மையிலேயே உங்களுக்கு உரியது என்று உங்கள் மனசாட்சி கூறினால் . . 
  • கார்ப்பரேட் என்று பொத்தாம் பொதுவாக பெயரைச் சொல்லாமல் தப்பிக்கக்கூடாது. கத்தி பற்றிய ஏதாவது ஒரு பேட்டி அல்லது அடுத்த படத்திலாவது நீங்கள் விமர்சிக்கும் கார்ப்பரேட்டுகளின் பெயர்களை  சொல்ல வேண்டும்.
  • அரசாங்கத்திற்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் உள்ள தொடர்பு பற்றி பேச வேண்டும்.
  • 2G ஊழல் பற்றி விமர்சித்தது போல, சொத்துக் குவிப்பு வழக்கு பற்றியும் விமர்சிக்க வேண்டும்.
இதெல்லாம் முடியாது என்றால் . . .
  • இந்தப் படம் வெளிவரத் தடையாக இருந்த உண்மையான காரணம் எது? ஆளும் கட்சி தலைவர் இதில் தலையிட்டு யாரிடம் என்ன பேசினார் என்று சொல்ல முடியுமா?
  • ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் அந்தக் கட்சிக்கு நீங்கள் இருவரும் உள்ளிட்ட சினிமாக்காரர்கள் ஏன் பயப்படுகிறீர்கள் என்று (சினிமாவிலாவது) சொல்ல வேண்டும்.
அதுவும் முடியாது என்றால்
  • இன்று முதல் நான் கோக் மற்றும் பெப்ஸி பிராண்டுகளை அருந்த மாட்டேன் என்று உறுதி எடுக்க வேண்டும்
கடைசி ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் சுயமாக தைரியமாக செயல்படுத்த முடியாது என்பதுதான் நிதர்சனம். உங்கள் கத்தி படம் பார்த்துவிட்டு நான் கோக் மற்றும் பெப்ஸி சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். நீங்கள் என்ன முடிவெடுக்கப்போகிறீர்கள்? 

உங்கள் பதிலுக்காக . . . I AM WAITING.