Monday, December 21, 2009

திருவெம்பாவை - திருப்பள்ளி எழுச்சி - 4,5

வாழ்க வளமுடன்!
தமிழின் அமுத வரி எடுத்தேன் ..
திருவெம்பாவை சொல்ல...

இந்த வரிகளை எழுதித்தந்தவள் ஃபேஸ்புக் தங்கை அமுதா. திருவெம்பாவை பற்றி எழுதும்போது,  நமீதாக்களை பற்றிக் குறிப்பிடாமல் பக்தியோடு எழுதுங்கள், என்று செல்லமாக அதட்டி மேற்கண்ட வரிகளைக் கொடுத்தாள். அதிலிருந்து நான் தொடரவேண்டுமாம். 3 நாட்கள் ஆகிவிட்டது. அடுத்த எழுத்து கூட வரமாட்டேன்கிறது.

வெள்ளத்தில் ஏற்படும் சுழி, மெதுவாகத் துவங்கி, துரிதமாக பெருகி, படு குழியாக மாறி, எதையும் உள்ளுக்குள்ளே ஆழ்த்திவிடும். அந்தச் சுழி போன்ற மயக்கத்தில், (நமீதாக்களையும், தமன்னாக்களையும் இரசித்துக்கொண்டு) செல்லும் திசை தெரியாது (ஜொள்ளின்)ஆழத்தில் சிக்கும் (என்னைப் போன்ற ஜீவராசிகளின்) உயிர்களை உணர்வூட்டி, தட்டி எழுப்பி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" (சாமி கும்பிடும்போது, சினிமா நடிகை எதுக்குடா ராஸ்கல்) என்ற பொன்னான வாசகத்தால் கைதூக்கி விடுவதுதான் திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்.

ஸ்ஸ்ஸ் அப்பா, உருப்படியா ஒரு வரி எழுதலாம்னு பார்த்தா இப்பவே கண்ணைக் கட்டுதே . . .

மார்கழி மாதத்தில் நான் மட்டும்தான் 8 மணி போர்வைக்குள் பதுங்குகிறேன் என்று நினைக்காதீர்கள். அந்தக்காலத்திலேயே இறைவனை வழிபடவேண்டிய சில பெண்களே சுணக்கமாகத்தான் இருந்திருக்கிறார்கள். இப்பாடல்களில் வரும் பெண்கள் உய்யும் வகை உய்ந்த அடியார்கள்.(உய் உய்னு சுத்த தமிழ்ல கலக்கறனா?) அந்தப் பெண்கள் என்ன செய்கிறார்கள் ? ஒன்று கூடுகிறார்கள். ஆதியும் அந்தமும் இல்லாதவன், அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன், அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடுகிறார்கள். பிறகு இந்தப் பேரின்பப் பெருவழிக்கு வராது விடுபட்டுப் போன (என்னைப் போல பெட்ஷீட்டுக்குள் அலாரத்தை அணைத்துவிட்டு அரைமயகத்திலிருக்கும்) அக்கம்பக்கத்திலுள்ள தம் எல்லாத் தோழிகளின் துயில் மயக்கத்தைத் தெளிவிக்கிறார்கள்(என் மனைவி எனக்கு காபி தருவது போல), அவரையும் கண்ணுக்கினிய கருணைக் கடலான சிவபெருமானை (மார்கழி மாசத்துலயாவது சாமியைக் கும்பிடுங்க என்று என் வீட்டில் அர்ச்சிப்பது போல) பாடத் தேற்றுகின்றனர்.

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர், இறை மணக்க, தமிழ் மணக்க, உளம் மணக்க திருவண்ணாமலை தரிசனத்தின்போது எழுதியபாடல்கள்.
 நாம் உய்யும் நெறியை உறுதியாகப் பற்றவேண்டும். அதே நேரத்தில் "எம்பிரான் மூலபண்டாரம் வழங்குகின்றான்; வந்து முந்துமினே !" என அறைகூவி அழைத்தும், அறியாதவருடைய இல்லங்களுக்கே சென்று (தங்கை அமுதா என்னை, அண்ணா நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இன்பமாக இம்சிப்பதைப்போல) அவர் வாழ்வையும் அண்ணாமலையாரின் அருள் ஒளி நிறைந்ததாக ஆக்க வேண்டும்.

பெருமானின் திருவருளால் அழியாத இன்பம் பெற்ற நம் ஆன்றொர்கள் செய்தது அது; நாமும் செய்யத் தக்கதும் வேண்டுவதும் அதுவே.

"அரன் நாமமே சூழ்க வையகமுந் துயர் தீர்கவே"

(ஹையா... எழுதி முடிச்சுட்ட்ட்ட்ட்டேன். மைடியர் தங்கை அமுதா . . . எப்ப்பூடி? இந்த சேட்டைக்காரனும் பக்தி கலந்து எழுதுவேன்ல . .)

இனி  திருவெம்பாவை


இங்கே சொடுக்கி டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

 "அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
      அரிதென, எளிதென", அமரும் அறியார்,
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
      எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச
      மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
      எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !

    "அந்தப் பரம்பொருள் பழத்தின் சுவைபோல இனியது,
அமுதம் போன்றது, அறிந்து கொள்வதற்கு அரியது, எளியது" என
அறிவால் உறுதி பெற தேவர்களுக்கும் இயலவில்லை !
(அப்படிப்பட்ட தாங்கள்) "இதுவே அந்தப் பரம்பொருளின் திருவுருவம்.
இவர் தான் அந்தப் பரம்பொருள்." என்று (கூறத்தக்க எளியமுறையில்) எங்களை ஆண்டுகொண்டு இங்கே எழுந்தருளியுள்ளீர் !
தேன் மிகுகின்ற சோலைகள் உள்ள திருஉத்தரகோச மங்கையில் வீற்றிருப்பவனே !
திருப்பெருந்துறைக்கு அரசே ! எது எங்களைப் பணி கொள்ளும் வகை ? அதன்படியே நடப்போம் !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

ஆறு - வழி.

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
      மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
      பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
      திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

முன்னரே இருக்கும் துவக்கமும், இடைனிலையும், இறுதியும் ஆனவரே !
உம்மை மும்மூர்த்திகளும் அறியவில்லை. பிறகு வேறு யார் தான் அறிய முடியும் ?!
(பூமியாகிய) பந்தினை விரலில் அணிந்தவளும் (உமை), நீயும், உன்
அடியார்களின் (பலகாலமாக அன்பு செய்துவந்த) பழைமை வாய்ந்த
(மனத்து) இல்லங்கள்தோறும் எழுந்தருளுகின்ற பரமனே !
சிவந்த நெருப்புப் போன்ற அழகிய மேனியும் காட்டி,
திருப்பெருந்துறையில் கோயிலும் காட்டி, அந்தணனாக அமரும் கோலமும்
காட்டி என்னை ஆண்டாய் ! விரும்பி உண்ணும் அமுதம் போன்றவனே !
பள்ளி எழுந்தருள்க !

மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் - இல்லம்; தழல் - தீ; புரை - போன்ற.

இன்னும் ஒரு திருவெம்பாவை



இங்கே சொடுக்கி டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
      விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
      வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
      கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
      எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !

விண்ணுலகில் உள்ள தேவர்கள் அணுகக் கூட முடியாத மேன்மையான பொருளே !
உமக்கு அடிமை பூண்ட அடியார்களாகிய நாங்கள், இந்த மண்ணுலகில் வந்து
வாழ வழிவகை செய்தவனே ! அழகு மிகுந்த திருப்பெருந்துறையுடையவனே !
வழியடியார்களாகிய எங்கள் கண்ணினுள் நின்று ஆனந்தம் தருகின்ற தேனே !
கடலிலிருந்து தோன்றிய அமுதமாகத் தோன்றுபவனே ! கரும்பே ! விரும்பித்
தொழும் அடியவர்களின் எண்ணத்தில் நிறைந்தவனே ! உலகுக்கு உயிரானவனே !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

நண்ணுதல் - நெருங்குதல்; விழு - மேன்மை; தொழுப்பு (தொழும்பு) -
அடிமைப்பணி; வண் - அழகிய; களி - மகிழ்ச்சி.

"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
      போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
      திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
      படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

"இந்த மண்ணுலகம் சிவபெருமான் வழியாக உய்யக் கொள்கின்றது
(சிறந்த இடம்). அப்படிப்பட்ட இப்பூவுலகில் பிறவாமல் நாம் நாட்களை வீணாகக்
கழித்துக்கொண்டிருக்கிறோம்." என்று திருமால் விருப்பப்பட்டுப் பிறக்குமாறும்,
பிரமன் ஆசைப்படுமாறும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே,  
உம்முடைய மிக மலர்ந்த மெய்க் கருணையுடன் நீங்கள்,
இவ்வுலகில் வந்து எம்மை ஆட்கொள்ள வல்லவர் ! அத்தகைய விருப்பம் தரும்
அமுதமே ! பள்ளி எழுந்தருள்க !

புவனி - பூமி; மலரவன் - பிரமன்; அவனி - உலகம்.

Wednesday, December 16, 2009

திருவெம்பாவை - திருப்பள்ளி எழுச்சி - 3

இன்னைக்கு மார்கழி முதல் நாள்!
காபி போட்டுத் தர்றேன், கோலம் போடும் போது துணைக்கு நில்லுங்க!, இந்த “ங்க” விலிருந்து சொன்னது யாருன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். முதலில் நான் மட்டும் வாசலுக்கு வந்தேன். இன்னும் விடியாத முன் காலையில் சில தினசரி வாக்கர்கள் கான்வாஸ் சரசரக்க கடந்தார்கள். ”ஷ்செல்வம் குட்ஷ்மார்னிங்”, மூச்சிறைக்க விஷ் பண்ணிச் சென்ற அந்த மாமியின் பெயர் எனக்குத் தெரியாது. ”பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ நாடகம் தொல்லையோ” கையில் FMஆ iPODஆ எனத் தெரியவில்லை. அலறவிட்டபடி நடந்த அந்த டி-சட்டையரை கடந்த ஒரு மாதமாகப் பார்க்கிறேன்.
”காபி ரெடி!”, குரல் கேட்டுத் திரும்பும்போது கையில் யோகா கிட்டுடன் அந்த நமீதா நங்கை தெரிந்தாள். நின்று பார்த்துவிட்டு போகலாமா?

”என்னண்ணே, இன்னைக்கு காலையிலேயே . . .”, பக்கத்து வீட்டு காய்கறி எக்ஸ்போர்டர். அவருடைய அண்ணேக்கு திரும்பியதில் நமீதா நங்கை கடந்துவிட்டாள். நானும் காபிக்கு உள் புகுந்தேன். பின்னாடியே பொத்தென்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வந்து விழுந்தது. காபியையும், இந்தியாவையும் கையில் ஏந்தியபோது . . . கடைசி பக்கத்தில் ஜெனிலியாவும், முதல் பக்கத்தில் இலியானாவும் சிரித்தார்கள். சுவைத்தேன் . . . காபியை.

கேட்டில் ”வள்” என ஒரு குரலும், ”டாய்” என பதில் குரலும் கேட்டது. தினமும் அந்தநாய் அந்த டிராக்சூட்டுக்கார பையரை(னை?) இழுத்துக் கொண்டு வாக்கிங் போகும். என்றாவது மிஸ்டர்.வள் எங்கள் வீட்டுச்சுவரின்பக்கம் காலை உயர்த்தும்போது மட்டும் டி.சூ பையரின் கண்கள் அசடு வழிய என்னை பார்க்கும். இன்று எங்கள் கண்கள் சந்திக்கவில்லை.

சீக்கிரம் உள்ள வாங்க . . . உள்ளதான இருக்கேன் என்று சொல்வதற்குள், குரல்வந்த பாத்ரூம் வாசலை அடைந்திருந்தேன். குழாய் உடைத்துக்கொண்டு தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. உடனே சரி பண்ணுங்க . . . நான் சரி என்று சொல்லவில்லை. ஆனால் சரி செய்துவிட்டு நமிரும்போது, வாசலில் கோலம் முடிந்திருந்தது. மார்கழியின் முதல்நாள் இப்படித்தான் விடிந்தது.

இனி திருவெம்பாவை!



இங்கே சொடுக்கி டவுன்லோடு செய்துகொள்ளலாம்!

"பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
      போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
      கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
      சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

    "பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து இருப்பது அல்லாமல்,
இறைவனுக்குத் தோற்றமோ நீக்கமோ இல்லை" என உம்மைப் பண்டிதர்கள்
புகழ்ந்து பாடுவதும் ஆடுவதும் அன்றி, உம்மைக் கண்டு அறிந்தவர்களை
நாங்கள் கேட்டுக்கூடத் தெரிந்துகொண்டதில்லை ! குளிர்ந்த வயல்களுடைய
திருப்பெருந்துறைக்கு அரசே ! நினைத்துப் பார்க்கக் கூட அரியவனே !
(எனினும் எளியவனாகி) எம்முடைய கண் முன்னே எழுந்தருளிக் குற்றங்கள்
நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

சீதம் - குளிர்ச்சி; ஏதம் - குற்றம்/துன்பம்.

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
      பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
      வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
      திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

    விரிந்து செல்லுதல் இல்லாது (ஒருமைப்பட்ட மனத்துடன்),
வீடுபேற்று நிலையில் உணர்கின்ற உம்முடைய அடியவர்கள் பந்தமாகிய
கட்டுக்களை அறுத்தனர். அவர்கள் பலரும் மையணிந்த கண்களை உடைய
பெண்களைப் போலத் தம்மைக் கருதி உம்மைத் தொழுகின்றனர் (காதலனாக),
(உமையாகிய) பெண்ணின் மணவாளனே ! சிவந்த தாமரை கண் விழிக்கின்ற
(இதழ்களை விரிக்கின்ற) குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறைச்
சிவபெருமானே ! இந்தப் பிறவியை நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

பப்பு - பரப்பு; அணங்கு - பெண்; செப்புறு - செம்மை உடைய.

திருவெம்பாவை - திருப்பள்ளி எழுச்சி - 2

தமிழ் தெரியாத சாயாஜி ஷிண்டே பாரதியாரா நடிச்சார். அதே மாதிரி தமிழ் சரியா எழுதத் தெரியாத ஒரு டாக்டர் எனக்கு திருவெம்பாவையை நெட்டில தேடித் தந்தார். டாக்டர்கள் ஏன் எப்பவுமே நமக்குப் புரியாத மாதிரியே எழுதறாங்க அப்படின்ற சந்தேகம் அரை டிரவுசர் காலத்துல இருந்து, பெர்முடாஸ் (இதுவும் அதேதான்) காலம் வரை இருக்கு. ஒரு வேளை அவங்களுக்கு ஸ்பெல்லிங் தெரியாதோ?

சரி மருத்துவரை விட்டுட்டு திருவெம்பாவைக்கு வருவோம்.
வரிகளை அர்த்தங்களுடன் இங்கு தந்திருக்கிறேன்.
நன்றி டாக்டர்! (டாக்டரை வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் டைட்டில் ஸ்டைலில் அலறியபடி வாசிக்கவும்)

எனது நண்பர் விவேக் நாராயண் அபார திறமைசாலி. இதுபோல கிளாசிகல் டச்சுடன் இசையமைக்கச் சொன்னால் நொடியில் செய்துவிடுவார். இந்தப் பாடலும் அப்படி துரிதமாக உருவானதுதான். பிழைகள் இருக்கலாம். இருந்தால் சுட்டிக்காட்டலாம்!

இனி திருவெம்பாவை.


டவுன்லோடு செய்ய இங்கே சொடுக்குங்கள்!

கூவின பூங்குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

குயில்கள் பாடின. கோழிகள் கூவின. பறவைகள் சலசலத்தன;
சங்கு ஒலித்தது. விண்மீன்களின் ஒளி மறைந்தது. காலையின் ஒளி
மேலோங்குகிறது. தேவனே, விரும்பி எங்களுக்கு உம்முடைய நல்ல
செறிந்த கழலணிந்த இரு திருவடிகளையும் காட்டுங்கள் ! திருப்பெருந்துறை
வீற்றிருக்கும் சிவபெருமானே ! யாராலும் அறிவதற்கு அரியவனே !
(அடியவராகிய) எங்களுக்கு எளியவனே ! எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

குருகு - பறவை; ஓவுதல் - மறைதல்; தாரகை - நட்சத்திரம்;
ஒருப்படுதல் - முன்னேறுதல்/மேலோங்குதல்.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

ஒரு பக்கம், வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள்;
ஒரு பக்கம், இருக்கு வேதமும் மற்றும் பல தோத்திரங்களும் சொல்பவர்கள்;
ஒரு பக்கம், நிறைய மலர்களைக் கையில் பிடித்தவர்கள்;
ஒரு பக்கம், தொழுவார்களும், (அன்பின் மிகுதியால்) அழுவார்களும்,
(விடாது அழுது) துவண்ட கைகளை உடையவர்களும் ;
ஒரு பக்கம், சிரத்தின் மேல் கை கூப்பி வணக்கம் செய்பவர்கள்;
திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே !
(இவர்களோடு) என்னையும் ஆண்டுகொண்டு இனிய அருள் செய்கின்ற
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

துன்னிய - செறிந்த; சென்னி - தலை; அஞ்சலி - வணக்கம்.

Sunday, December 13, 2009

திருவெம்பாவை - திருப்பள்ளி எழுச்சி - 1

கோலமும், குளிரும், இசையும் இல்லாமல் மார்கழி மாதமா? ஆழ்வார் திருநகரிலுள்ள எனது வீட்டில் மார்கழி வந்தால் சாணம் தெளித்து, வண்ணப் பொடிக் கோலம் போட்டு பூசணிப்பூ வைக்கிற பழக்கம் இன்றும் சில கால மாற்றங்களுடன் இருக்கிறது. வண்ணப் பொடிகள் ஜிகினா பொடிகளுடன் அதிகரித்து, பூசணிப்பூ எப்போதாவது தலைகாட்டுகிறது. ஆனால் சாணத்தைக் காணவில்லை. பனிகூட குறைந்துவிட்டது. கால மாற்றத்தில் மார்கழிக் காலையில் திருப்பள்ளி எழுச்சிக்குப் பதிலாக அல்லது கூடவே சினிமாக்குத்துகள் கேட்கும் அபஸ்வரங்களும் நடந்து கொண்டிருக்கிறது.

நண்பர் விவேக் நாராயண் இன்று வந்திருந்தார். அவருடைய குருஜி திரு.எட்டியப்பன் ராஜாவின் உத்தரவின் பேரில் திருப்பள்ளி எழுச்சியை பாடி ரெகார்ட் செய்திருப்பதாக ஒரு பென் டிரைவை கொடுத்தார். ஒரே நாளில் வீட்டிலேயே நாம் சாட்டிங் செய்யும் சாதாரண மைக்கில் பாடப்பட்டு ரெக்கார்ட் செய்யப்பட்டது.

உங்களுக்காக இதோ மார்கழி ஸ்பெஷல் திருப்பள்ளி எழுச்சி - 01

போற்றிய என் வாழ் முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின்திருமுகத்து எமக்கு அருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே,
 ஏற்றுயர்கொடி  உடையாய், எனை உடையாய்,
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய்
அகன்றது உதயம், நின் மலர்த் திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ நயனக்
கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன, இவை ஓர்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே,
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே,
அலைகடலே, பள்ளி எழுந்தருளாயே.



இங்கே சொடுக்கி டவுன்லோடு செய்து கொள்ளலாம்
அடுத்தத்தடுத்த பாடல்களை, நாளையும், அதைத் தொடர்ந்தும் இணைக்கிறேன்.

இது ஒரு scratch. பிழைகள் இருக்கலாம். நீங்கள் சுட்டிக்காட்டலாம்.

Thursday, December 10, 2009

தமிழ் உரையை தமிழ் குரலாக மாற்றி ஒலிக்க . . .

உரையை குரலாக மாற்றும் டெக்னிக் பழசு. Acrobat readerல் எது இருந்தாலும் அதை அப்படியாக ஒரு குரல் படித்துக் காண்பித்துவிடும். ஆனால் இந்த Text to Voice டெக்னிக் தமிழில் செல்லாது. போன வருடம் வரை இப்படித்தான். ஆனால் இனி தமிழில் நீங்கள் எதை எழுதினாலும் அதை அப்படியே ஒரு குரல் ஒரு நொடியில் வாசிக்க ஆரம்பித்துவிடும்.


பெங்களூர் IISc இன் Mile ஆய்வுகூடம் முனைவர் A G Ramakrishnan தலைமையில் இந்த செயலியை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இதனை சோதித்துப்பார்க்க http://tinyurl.com/tamiltovoice இங்கே சொடுக்குங்கள்.

அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் டெக்ஸ்ட் பெட்டியில் தமிழில் டைப் செய்யுங்கள். செய்தபின் submit கொடுத்த அடுத்த வினாடி ஒரு ஆண் குரல் உங்கள் உரையை வாசிக்கும். அசத்தல்

Wednesday, December 9, 2009

TED Sixthsense : கண்ணில்படுவதெல்லாம் டேட்டா, விரல் தொடுவதெல்லாம் திரை


யுத்த களத்தில், விமானங்கள் குண்டு வீச ஆரம்பித்தபின் எதிரியின் தூரத்தையும், வேகத்தையும், நகர்தலையும் அளந்து தர ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டது. பச்சைநிறத்தில் ஒளிர்ந்த இந்த டேட்டாக்கள் (அ) புள்ளி விபரங்களை வீடியோ கேம் பிரியர்கள் பார்த்திருப்பார்கள். இடம்-வலம் திரும்பும் நேர விரயத்தை தவிர்த்து துல்லியத்தைக் கூட்ட, நமது கண் முன்னே இது ஒளிரும். இவற்றைத்தான் HUD - Head Up Display என்று சொன்னார்கள். 1952ல் இராணுவத்தின் உதவிக்காக வந்த இந்த சமாச்சாரம், 2000த்தின் துவக்கத்தில் கார்களில் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.


டிரைவர்களுக்கு வழி தேடித்தரும் ஜிபிஎஸ் வரைபடங்கள், டிரைவரின் கண் முன்னே விண்ட் ஷீல்டில் விரியும். அதாவது காற்றுதான் டிஸ்பிளே மானிட்டர். கண்களை மறைக்காதா? என்றால் மறைக்காது, சாலை ஓர வெளிச்சங்கள் கண்ணாடியில் பட்டுத் தெறிப்பதைப் போல மிதமான உறுத்தாத ஒளிப்படமாகத் தெரியும். டிரைவரின் தேவைக்கேற்ப அதை மேலும் பளிச் அல்லது டல்லடிக்க வைக்கலாம்.


HUDயை கூகுள் போன்ற டிஜிட்டல் டேட்டாக்களுடன் இணைக்கும்  அடுத்தகட்டமாக விண்டோஸ் சர்ஃபேஸ் அசத்தலாக உருவானது. நாம் உட்காரும் டைனிங் டேபிள், சாய்ந்து நிற்கும் சுவர் உட்பட அனைத்து தளங்களையும் ஒரு டிஸ்பிளே யுனிட்டாக மாற்றும் வல்லமை பொருந்தியது Windows Surface. அதுவும் தொடுதிரை Touch Screen வசதியுடன். தற்போது Windows 7 இவற்றின் மெல்லிய தொடுதிரை அடையாளத்துடன் வெளியாகியிருக்கிறது.

ஆனால் விண்டோஸ் சர்ஃபேஸ் தலை தூக்குவதற்கு முன்பே ஒரு மாஜிக் போல TED Sixth Sense உருவாகியிருக்கிறது. நமது பார்வையையும், கூகுள் போன்ற டிஜிட்டல் டேட்டாக்களையும்  இணைக்கும் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த டிஜிட்டல் நுட்பம்.


கழுத்தில் நமது கண்களுக்கு பதிலாக ஒரு வெப் காமிரா. அந்தக் காமிரா எதைப் பார்க்கிறதோ அதைப் பற்றி தகவல் தருவதற்கு ஒரு தந்தியில்லா பாக்கெட் இன்டர்நெட் மொபைல். நீங்கள் என்னைப் பார்த்தால் என்னுடைய Blogger, Facebook, Orkut, Twitter, Linkedin உட்பட அனைத்து தகவல்களும் படக்கென தோன்றும். எங்கே தோன்றும் நீங்கள் என் சட்டையைப் பார்த்தால் சட்டையிலும், நீங்கள் சுவரைப் பார்த்தால் சுவரிலும். அதாவது கழுத்தில் தொங்கும் வெப் காமிரா இரு வழி கருவி. என்னை படமெடுத்து உள்ளே விஷிவல்களை அனுப்பி டேட்டா சேகரித்து, ஒரு புரொஜக்டராக மாறி அதை வெளியே அனுப்புகிறது.


இதன் இன்னொரு பரிமாணம் படு இன்டரஸ்டிங்.  ஒரு புத்தகத்தை புரட்டுகிறீர்கள். வாங்கலாமா? வேண்டாமா? என்று குழப்பம். நெட்டில் இதைப்பற்றி வாசகர் கமெண்டுகளை படிக்கலாம் என்று தோன்றுகிறதா?  தொடு உணர்வுடன் கூடிய வளையங்கள் கிடைக்கின்றன. அவற்றை விரல்களில் மாட்டிக் கொண்டு அந்தப் புத்தகத்தை தொடுங்கள் போதும். அந்தப் புத்தகத்திலேயே கூகுள் அல்லது அமேசான் தரும் விபரங்கள் டிஸ்பிளே ஆகும்.


சுருக்கமாகச் சொன்னால் கழுத்தில் ஒரு HUD இருந்தால் ஒரு பார்வையில் இந்த உலகை அளக்கலாம். அதை தரையிலும் சுவற்றிலும் சமர்பிக்கலாம். இந்த கற்பனைக்கும் எட்டாத ஐடியாவின் எளிமையான சொந்தக்காரர் பிரணவ் மிஸ்த்ரி என்கிற இந்திய இளைஞர். உலகின் அத்தனை ஐடி நிறுவனங்களும் இந்த ஐடியாவை வாங்கி அவரை டாலரில் குளிப்பாட்ட அப்ளிகேஷன் போட்டிருக்கின்றன. ஆனால் அவர் சின்னப் புன்னகையுடன் இதை நான் இலவசமாக இந்த உலகுக்கு வழங்கப்போகிறேன் என்று கூறியுள்ளார்.


எத்தனை பிரமாண்ட தொழில் நுட்பங்கள் வந்தாலும் அதையும் மிஞ்சும் ஒன்று வரும் என்பதற்கு பிரணவ் மிஸ்த்ரியின் அறிவு சாட்சி. எந்த தொழில் நுட்பமும் மனித மனதின் ஆழத்தை அளக்க முடியாது என்பதற்கு பிரணவ் மிஸ்த்ரியின் பணத்தாசையை ஒதுக்கிய குணம் சாட்சி.

Saturday, November 28, 2009

ஈழம் - அரசியல் தந்திரங்களுக்கான நேரம்

வரக்கூடாத செய்திகள்
'இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளும் அதற்கான தீர்வும் ’ எனும் தலைப்பில், சிறுபான்மைத் தமிழ்கட்சிகளின் தலைவர்கள் சூரிச் நகரில் ஒன்று  கூடி ஆராய்ந்தனர். இலங்கைத் தமிழ்க்கட்சிகளின்  தலைவர்கள் கலந்து கொண்ட  இந்த சந்திப்பு,  எந்தவித  அரசியல் முடிவும் எடுக்கப்படாமலே முடிவுக்கு வந்ததாக அறியப்படுகிறது..
//எந்த முடிவும் எட்டப்படாமல் குழப்பமான கூட்டங்கள் கூடுவது இனி நிறுத்தப்படவேண்டும். நிச்சயம் அனைவரும் ஒன்று கூட வேண்டும். கூடினால் அது ஒரு முடிவை அறிவிக்க வேண்டும்//



வரவேண்டிய செய்திகள்
நெருங்கிய நண்பர்களாக இருந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும், ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவும் பகைவர்களாக முறுக்கிக்கொண்ட விவகாரம்... இப்போது ராஜபக்ஷே குடும்பத்துக்குள்ளேயே எதிர்பாராத சச்சரவைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
//களங்களில் போராடும்போது எதிரணியின் குழப்பங்கள்தான் முதல் வெற்றி. இராமாயண கதைகளில் இருந்து ஈழப் போராட்டம் வரை இதில் மாற்றம் ஏதும் இல்லை. கருணாவை ராஜபக்ஷே பயன்படுத்தியது போல, ராஜபக்ஷே,பொன்சேகா குழப்பங்களை அணையாமல் விரிவடைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்//

விசித்திரமான செய்திகள்
தமிழக அரசியலின் பிரதான எதிரிகளான கருணாநிதியும், ஜெயலலிதாவும் இன்றைக்கு ஈழ ஆதரவு விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத் தமிழனத் தலைவர்(?) பதவிக்கு போட்டியிடுவோம் என்று ஜெவும் நினைத்திருக்கமாட்டார், கருணாநிதியும் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் இந்திய அரசியல் விசித்திரங்களால், ஜெயலலிதாவும் இன்று தனி ஈழத்தை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார். எதிரெதிர் அணியில் இருந்தாலும், கருத்து வேறுபாடு இருந்தாலும் நெடுமாறன், வை.கோ., மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன், கி.வீரமணி உட்பட அனைவருமே தனி ஈழ ஆதரவாளர்களே!
//கருணாநிதி உட்பட எவருக்கும் இந்தியாவை இலங்கைக்கு எதிராக போர் செய்ய நிர்பந்திக்க முடியாது என்பதை இப்போதாவது உலகத் தமிழர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் இந்த தமிழக அரசியல்வாதிகள் நினைத்தால் இலங்கைத் தமிழ்அரசியல் கட்சிகளை ஒரு குறுகிய காலத்திற்காகவாவது ஒன்றிணைக்க முடியும். குறைந்தபட்சம் ஜனவரி 26 அன்று நடைபெறப்போகும், இலங்கைத் தேர்தல் வரை அவர்களால் ஒன்றிணைக்க முடியும்//


சாதகமான உலகச் செய்திகள்
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கையில் 2010ல் காமன்வெல்த் மாநாடு நடக்கக்கூடாது என்று பகிரங்கமாக பிரிட்டன் குரல்கொடுத்துள்ளது.

அமெரிக்கா சரத்பொன்சேகாவை போர் குற்றங்களுக்காக விசாரிப்போம் என்று அறிவித்தது.

ஆசிய அரங்கில் இந்தியாவிற்கு வெளிப்படையாக நெருக்கடி கொடுக்கும் சீனா.  சீனாவின் இலங்கை ஆதரவு. அதன் காரணமாக மட்டுமே இலங்கையின் மேல் கடுமையை கூட்டியிருக்கும் இந்திய நிலை.

ராஜபக்ஷே வழியாக இந்தியாவிற்கு செக் வைக்க நினைக்கும் சீனா - சரத்பொன்சேகாவை மிரட்டி முன்நிறுத்தி ஆசியாவில் நுழைந்து சீனாவையும், இந்தியாவையும் தொலைவில் நிறுத்தப்பார்க்கும் அமெரிக்கா!

மாவீரர் தினம் முதன் முறையாக, ஈழத்தில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் தமிழர் வசிக்கும் இடங்களில் எல்லாம் கொண்டாடப்பட்ட நிகழ்வுகள்!

//இவையெல்லாம் ஈழப் பிரச்சனை வெவ்வேறு வடிவில் உலக அரசியல் அரங்கில் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள்//




எதிர்பாராமல் குழம்பிப் போயிருக்கும் இலங்கை அரசியலில் தமிழ் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?
தமிழர்களைப் பொறுத்தவரை ராஜபக்ஷே, பொன்சேகா இருவருமே எதிரிகள்தான்.பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் ராஜபக்ஷேவுக்கு மட்டுமல்லாமல், தமிழர்களும் எதிர்பாராததுதான். ஆனால் பொன்சேகாவின் ராஜபக்ஷே எதிர்ப்பால் இலங்கை தமிழ் கட்சிகளுக்கு ஒரு சிறிய அரசியல் இடைவெளி கிடைத்துள்ளது. அதாவது பொன்சேகா வெற்றிபெற்றால், ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் ஆவார் என்று செய்திகள் கசியத் துவங்கியுள்ளன. ராஜபக்ஷே-கருணாவை வென்று, பொன்சேகர்-ரணில் கூட்டணி வெற்றி பெற்றால், அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழ் கட்சிகள் முன் எப்போதையும் விட வலுவாக செயல்பட முடியும். ஏனென்றால் ரணில் ஏற்கனவே பிரபாகரன் இருந்தபோதே, ஈழத் தமிழர்களின் விஷயத்தில் மென்மையான போக்கை கடைப்பிடித்தவர். ஈழத் தமிழர்களை ஒழிப்பதை விட, அவர்களை அரசியல் ரீதியாக இணைப்பது என்பதில் ஆர்வம் காட்டியவர்.

எனவே இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, ஜனவரி 26 தேர்தலின் போது இலங்கை தமிழ் கட்சிகள் தேர்தல்களை புறக்கணிக்காமல், தமக்குள் சண்டையிடாமல், சிதறிவிடாமல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலகமெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் இந்த ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு முனைப்பு காட்ட வேண்டும்.

இதுவே அரசியல் தந்திரங்களுக்கான சரியாண தருணம்.

Wednesday, November 25, 2009

கோடம்பாக்கமும் ரேடியோவும் !!!



எண்பதுகளில் ஒலித்த விவிதபாரதியின் நேயர்விருப்பம் இப்போதும் ஒலிக்கிறதா? தெரியவில்லை. ஆனால் என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. இப்போது ஒரு பாடல் டாப் 10ல் இருந்தால் அந்தப் பாடல் ஹிட். அப்போது வேறு அளவுகோல். பாடலை விரும்பிக்கேட்டவர்களின் பெயர்களை வாசிக்க ஆரம்பித்தால்,  சிலநேரம் இரண்டு அல்லது  மூன்று நிமிடங்களுக்கு நீளும். அப்படி நீண்ண்ண்ண்ட லிஸ்ட் வாசித்தால் அந்தப் பாட்டு சூப்பர் ஹிட் என்று அர்த்தம்.

அப்போதெல்லாம் பொதுவாக படங்கள் வெளியான பின்புதான் பாடல்கள் ரேடியோவிற்கு வரும். தற்போது உல்டா. அன்றைய நேயர் விருப்பம், தேன்கிண்ணங்களை தவற விட்டால் அதற்கப்புறம் சாகுபடிகள், சமையல்கள், குழந்தைகள், செய்திகள் என்று அனைவருக்கும் அரை மணி ஒதுக்கப்பட்டு மறுநாள் காலைதான் மீண்டும் திரைகானம்.

இப்போது மாதிரி சந்துக்கு சந்து பொந்துக்கு பொந்து அப்போதெல்லாம் ரேடியோ கிடையாது. மர்ஃபி குழந்தை பொம்மை போட்ட ரேடியோவை ஊரிலேயே பெரிய வஸ்தாதுதான் வைத்திருப்பார். உலக உருண்டை வடியில் டிரான்ஸிஸ்டர் வைத்து ராஜேஷ் கண்ணா பாட்டு கேட்டார் என்பது அப்போதைய பரபரப்பு (பணக்காரச்) செய்தி. எனவே ரேடியோ கேட்பதே ஒரு நாடகம் பார்ப்பது போல கூட்டமாகத்தான் நடக்கும். அனைவரும் ரேடியோவைச் சுற்றி சமையல், சாப்பாடு, படிப்பு, தினத்தந்தி என்று எல்லாமே டைம் டேபிள் போட்டு நடக்கும். ஞாயிற்றுக் கிழமை ஒலிச்சித்திரம் கேட்பதற்கு ஒரு சின்ன ரேடியோவைச் சுற்றி குடித்தனக்காரர்கள் (30 பேர்) அனைவரும் உட்கார்ந்திருப்பார்கள்.

வீட்டில் ரேடியோ இல்லாதவர்கள் கார்பரேஷன் பார்க்கில் பாட்டு கேட்பார்கள். காசேதான் கடவுளடா படத்தில் இது போல ஒரு காட்சியை பார்க்கலாம். கையில் டிரான்சிஸ்டருடன் ஒருவர் நடந்தால் அது ஸ்டேட்டஸ் சிம்பல். பார்க்கையும் தவறவிட்டால், கல்யாணம், காது குத்து, மஞ்சள் நீராட்டு மற்றும் அரசியல் விழாக்களில் ரெக்கார்டு கேட்கலாம். ரெக்கார்டு போடுபவரின் பந்தா, இந்தக் கால வார்டு கவுன்சிலரை விட படு அலப்பரையாக இருக்கும்.

தம் மாரே தம், நேத்து ராத்திரி யம்மா, வாங்கோண்ணா, எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம், பச்சைக் கிளி முத்துச் சரம், காயா பழமா கொஞ்சம் தொட்டு பார்க்கட்டுமா, அடி என்னடி ராக்கம்மா . . . என்று பல்வேறு பாடல்களை சாகா வரம் பெற்ற பாடல்களாக்கியவர்கள் அந்த ரெக்கார்டு போட்ட பிஸ்தாக்களும், (ரேடியோ)வண்ணச் சுடரில் ஒலிக்க வைத்த அம்மணிகளும்தான்.

ஜி.டி.நாயுடுக்களின் மலிவு விலை கண்டுபிடிப்புகள் வந்தவுடன், ரேடியோ நரிக்குறவர்களின் கைக்குப்போய், வீட்டு ரேடியோக்களை டேப் ரெக்கார்டர்கள் ஓரம் கட்டின. சிங்கப்பூர் போய்விட்டு, லுங்கியும், டேப்ரெக்கார்டரும் வாங்காமல் வந்த தமிழ்நாட்டு டூரிஸ்டுகள் யாருமே கிடையாது. அதற்கப்புறம்தான் ஆடியோ கடைகள் வந்தன. ரெக்கார்டு போடுபவர்களை கேசட்டில் பாடல் பதிவு செய்பவர்கள் ஓவர் டேக் செய்தார்கள். பாடல்களின் லிஸ்டுடன் வரும் தாவணி பெண்களை அவர்கள் சைட் அடிக்கும் ஸ்டைல், தனியான ரொமான்ஸ் கதைகள். இளையராஜா இளைய நிலாவாக பொழிந்து இளைஞர்களை காதலர்களாக மாற்றிய காலம் அது. ப்ரியாவில் ஸ்டீரியோ ரெக்கார்டிங்கை ஆரம்பித்து வைத்தார் இளைஞர் ராஜா.


டேப் ரெக்கார்டுகள் எல்.பி ரெக்கார்டுகளை உடைத்து நொறுக்கிய அந்தக் காலக்கட்டத்தில், டீக்கடைகள் கூட பாட்டுக் கடைகளாக மாறின. விழித்துக் கொண்ட ரேடியோவும், டேப்ரெக்கார்டருடன் போட்டியிட்டு திரை இசைக்கு அதிக நேரத்தை ஒதுக்கியது.  வைரமுத்துவும், பாரதிராஜாவும் இளையராஜாவுடன் கைகோர்த்து நடிகர்களைத் தாண்டி பிரபலமானார்கள். இளையராஜாவுக்காகவே கதைகள் எழுதப்பட்டன.

மணிரத்தினத்தின் வருகைக்குப் பின், திரை இசையில் ஒரு புதிய மின்சாரம் பாய்ந்தது. ஆனால் திடீரென கரகாட்டக்காரன் என்ற ஜாக்பாட் ஹிட்டுக்கப்புறம், ராஜா ராசாவாக மாறிப்போனார். மைக்கேல் ஜாக்சன், ரஸ்புதின், ABBA, ஓசிபிசா என்று மேற்கத்திய இசை கடல்கடந்து இந்தியாவைத் தொட்ட நேரம். ராமராஜன், ராஜ்கிரண் படையெடுப்பில் திடீரென்று ராஜா டிராக் மாறினார். இளைஞர்கள் திடீரென தமக்கான இசை தமிழில் இல்லையென்று முடிவுகட்டி, ஆங்கிலப் பாடல்களில் கரையத் துவங்கினார்கள். (வீடீயோக்களின் ஆதிக்கம் துவங்கிய VHS காலம் அது). ரேடியோக்களில் ஆங்கிலப் பாடல்களுக்காக தனி நிகழ்ச்சிகள் அதிகமானதும் இந்தக் காலக் கட்டம்தான்.


அப்போதுதான் சின்னச் சின்ன ஆசை என்று ஒரு பாடல் வந்தது. ஏ.ஆர்.இரகுமான் என்ற சின்னப் பையன் வந்தான். இந்திய திரை இசையே அதற்கப்புறம் மாறிவிட்டது. ரேடியோக்களும், டேப் ரெக்கார்டர்களும் புத்துயிர் பெற்றன. சாடிலைட் சானல்கள் வந்தன. அவற்றின் துணையுடன் இரகுமானின் இசை கண்டம் விட்டு கண்டம் தாண்டியது. உலகத் தரம் என்ற தேவையை இரகுமான் ஏற்படுத்தியவுடன் பாடல்கள் கேட்பவர்கள் உட்பட அனைவரும் தரமான ஸ்டீரியோ செட்டுகளுக்கு மாறினார்கள்.


சன் டிவியின் ஆக்கிரமிப்பு துவங்கிய இந்தக் காலத்தில் வீட்டுக்குள் சினிமா என்கிற கான்செப்ட் 24 மணி நேர நான் ஸ்டாப் சினிமா என்பது தமிழர்களுக்கு பழகிவிட்டது. இதற்கு வளைந்து கொடுக்காத தூர்தர்ஷனும், ஆல் இந்தியா ரேடியோவும் பழைய பஞ்சாங்கமாக நினைக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. ஒரே காரணம் 24 மணி நேர சினிமா.

டிவியிலும் ஒரு சிக்கல் எழுந்தது. வெரைட்டியின் தேவை அதிகரித்ததால் சினிமாவுக்கென்றும் இசைக்கென்றும் தனித்தனி சேனல்கள் வந்து விட்டன. ஆனாலும் நடக்கும்போதும், பயணிக்கும்போதும் பாட்டு கேட்க முடியவில்லை. உதயமானது FM. அரசு FM வழக்கம் போல தூங்கி வழிய சூரியன் FM வெறும் சினிமா பாடல்களை மட்டும் வழிய விட்டே மக்களை வசீகரித்தது. போட்டிக்கு மிர்சி, ஹலோ, ஆஹா என்று கிட்டத்தட்ட இன்று 10 FM சேனல்கள் இருக்கின்றன.

இன்று FM ரேடியோ என்பது ஒரு அட்வர்டைசிங் டூல். திரும்பும் திசையெல்லாம், நினைத்த நேரத்திலெல்லாம் பாடல்களை ஒலிக்கவிட்டு, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காதில் திணிக்கின்றன. திணிப்பது நடைபெறுவது தெரியாமலேயே நாம் அதை உள் வாங்குகிறோம். காரில், பஸ்ஸில், நடந்து என்று எப்படிச் சென்றாலும் ஏதோ ஒரு வழியாக FM நம் கூடவே வருகிறது.


சினிமாவால் FMஆ? FMஆல் சினிமாவா என்று பட்டி மன்றம் நடத்தலாம். அந்த அளவுக்கு இரண்டும பின்னிப் பிணைந்து விட்டன.

இன்று ipod(வாக் மேனின் புதுவடிவம்), Podcast மற்றும் YouTube ஆகியவை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும், பகிர்ந்து கொள்ளும் ஆடியோ வீடியோ சானல்களாக பரிணமித்திருக்கின்றன்.

எதிர்காலத்தில் சினிமாவும் மாறும், சினிமா இசையும் மாறும், அவை நம்மை வந்து அடையும் முறையும் மாறும். அது எப்படி இருக்கும் என்பதை காலம்தான் கணிக்கும்.

Interactive Radio with Virtual DJ mix வரும் என்று நான் நினைக்கிறேன். இப்போது நாம் போனில் கேட்கிற பாடலை வர்ணனையாளர் கொஞ்சிக் கொண்டே ஒளி ஒலி பரப்புகிறார். எதிர்காலத்தில் நாமும் வர்ணனையாளரும் இணைந்து பிராட்கேஸ்ட் செய்யும் இரு வழி ரேடியோ வரும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.


நான் தற்போது அவர் என்ற படத்தை இயக்கும் பணியில் இருக்கிறேன். பாடல்களை ஹிட்டாக்க FMஐத்தான் நம்பியிருக்கிறேன்.

Thursday, November 12, 2009

2012ல் கிளி ஜோசியமும் மாயன் காலண்டரும்



கிளி ஜோசியக்காரர்கள், குறி சொல்பவர்கள், குடுகுடுப்பாண்டிகள், கைரேகை பார்ப்போர், ஜாதகம் கணிப்போர், ஜோஸ்யம் சொல்பவர்கள் - இவர்களை எல்லாம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இவற்றிற்கெல்லாம் நம்பிக்கை இருப்பது ஓர் அழகாக இருக்கிறது. - ஜெயகாந்தன்

திரு.ஜெயகாந்தன் அவர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்னால் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார். நான் இதை என்னுடைய கருத்தாகவும் ஏற்றுக்கொள்கிறேன். காரணம் என்ன என்பதையும் அவருடைய எழுத்தே விளக்கட்டும்.

”ஒரு நவீன சமுதாயத்தில் சைக்கியாட்ரிஸ்டுகளும், சைக்கோ தெரப்பிஸ்டுகளும் செய்கிற பணியை அவர்களை விடவும் இவர்கள் வெற்றிகரமாக ஒரு புராதான சமுதாயத்தில் செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள்.”

ஆமாம். ஒரு குடுகுடுப்பைக்காரன் நல்லகாலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குது என்றுதான் நம்பிக்கை கொடுத்து எழுப்புகிறான். சாட்சாத் ராமனே தம்பதி சமேதரா வந்திருக்காரு. இனிமே குடும்பத்துல பிரச்சனையே இல்ல என்றுதான் கிளி ஜோசியக்காரன் நம்பிக்கை தருகிறான். அப்படியே கண்ணபரமாத்மா நட்சத்திரம், இனிமே அமோகம்தான் என்று ஜாதகம் கணிப்பவர் சொல்கிறார். இதைக் கேட்கும்போது துவண்டுபோயிருப்பவனின் தலை தானாக நிமிர்கிறது. புதிய நம்பிக்கை பிறந்து நடை சீராகிறது.

ஆனால் இன்று என்ன நடக்கிறது? மாயன் காலண்டர் என்கிற ஒரு சமாச்சாரத்தைச் சொல்லி உலகையே ஒரு கும்பல் மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலண்டரின் பிரகாரம் உலகம் 2012ல் அழிந்துவிடுமாம். இதுவரை எந்த டெலஸ்கோப்பிலும் சிக்காத, நிபிரு(Nibiru) என்கிற கோள் நமது பூமியின் மேல் மோதி பூமியே அழிந்துவிடுமாம். சுமேரியர்கள் காலத்திலேயே அந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டதாக மிரட்டல்பேர்வழிகள் சொல்லிக் கொண்டிருக்க, அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று ஆய்வாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் மக்களில் கணிசமான ஒரு பகுதியினர் இதை நம்பி பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

அதனால்தான் எதற்கும் அசராத நாசா விண்வெளி மையம் கடந்த வாரத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. மாயன் பயமுறுத்தல்கள் விஸ்வரூபம் எடுப்பதை தடுக்கவே மாயா இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ”மாயன் காலண்டரை நம்பாதீர்கள். மாயன்காலண்டர் சொல்வது போல நிபிரு என்ற ஒரு கோளே இல்லை” என்று அந்த அறிக்கை சொல்கிறது.

சந்தடிசாக்கில் சோனி நிறுவனம் கிராபிக்ஸ் உபயத்துடன், 2012 என்று படம் எடுத்து உலகம் அழிவதாக DTSல் மிரட்டி பணம் சம்பாதித்துக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.  சென்னையிலும் நாளை ரிலீஸ்.

ஆன்லைன் நைஜீரியன் லாட்டரி, ஆன்லைன் செக்ஸ் வீடியோக்களைப் போல, இந்த 2012 மாயன் சமாச்சாரமும் ஒரு ஆன்லைன் மோசடி வியாபாரம்தான். சந்தேகம் இருந்தால் இது தொடர்பான பல இணைய தளங்களைப் பாருங்கள். உலகம் அழியும்போது தப்பித்துக்கொள்ள வழி சொல்லித்தருகிறார்களாம். உலகமே அழிந்த பின்னும் நீங்கள் அழியாமலிருக்க, சில டாலர்களை தட்சணையாகத் தாருங்கள் என்று சில தளங்கள் அழைக்கின்றன. ஏமாறாதீர்கள்!

அதோ குடுகுடுப்பைக்காரன் வருகிறான்! 2012ல் இருந்து நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!

Wednesday, November 4, 2009

தலை சுற்ற வைக்கும் கோனார் நோட்சும், தமிழ் Teacherசும்


”இவையும் சிங்கங்களும் மான்களும் புலிகளும், இங்ஙனம் ஒன்றுக்கொன்று பகைமையினையுடைய ஏனைய விலங்குகளும் பறவைகளும் இசையால் மயங்கித் தத்தம் வழியினை அறியாதவனாய் இடந்தோறும் ஒன்றோடொன்று கலந்து சோர்ந்து இசையாகிய வலையின்கண்பட்டன.”

இந்த வரிகளை உளறாமல் படித்துவிட்டால் உங்களுக்கு 5 மதிப்பெண்கள். மனப்பாடம் செய்து மூச்சுத் திணறாமல் ஒப்பித்துவிட்டால் 10 மதிப்பெண்கள். தலையை பிய்த்துக் கொள்ளாமல் உடனே அர்த்தம் கூறிவிட்டால் 15 மதிப்பெண்கள். இல்லாவிட்டால் பிரம்படி மற்றும் பரீட்சையில் ஃபெயில்.

கோனார் நோட்சும், தமிழ் டீச்சரும் சேர்ந்து என் மகளை பாடாய் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தலை வலி என்றால் அனாசின், படுக்கையில் என்றால் ஹார்லிக்ஸ், டிவி என்றால் சன் டிவி என்பது போல, தமிழ் பாடம் என்றால் கோனார் நோட்ஸ் என்பது முப்பது வருடங்களாக மாறாத விதி. பலபேரின் தலை விதியை இந்த கோனார் நோட்ஸ் மாற்றியிருக்கிறது.

கோனார் நோட்ஸ் என்பது மாணவர்களின் உற்ற நண்பன் என்பார்கள். ஆனால் உண்மையில் இது தமிழ் டீச்சர்களின் உற்ற நண்பன். குறிப்பாக இங்கிலீஷ் பள்ளிகளில், தமிழ் நடத்தும் தமிழ் டீச்சர்ஸ் கோனாரின் உற்ற நண்பனாக இருக்கிறார்கள். வகுப்பில் எதையும் சொல்லித்தருவதில்லை. கோனார் நோட்ஸை மனப்பாடம் செய்யச் சொல்லிவிட்டு, சிவப்பு இங்க் பேனாவை எடுத்து மார்க் போடத் தயாராகிவிடுகிறார்கள்.

திருவிளையாடல் படத்தில் ”விறகு வாங்கலையோ விறகு” என்று கூவியபடி சிவன் விறகுவெட்டி வேஷத்தில் நடந்து வருவாரே ஞாபகம் இருக்கா?

”ஆமாம்? “பாட்டும் நானே, பாவமும் நானேன்னு“ ஒரு பாட்டு பாடுவாரே...”

”அதேதான். அவர் பாடறதைக் கேட்டு சிங்கம், மான், புலி போன்ற மிருகங்கள் எல்லாம் மயங்கிடுச்சாம். ”

”மயங்கி . .”

”மயங்கிப் போய் தங்களுக்குள்ள பகையை மறந்து, போற பாதையை மறந்து சொக்கிப்போயிடுச்சாம். இதைத்தான் கோனார் நோட்ஸ்ல எழுதியிருக்காங்க.”

”நிஜமாவா? எங்க மிஸ் இதையெல்லாம் சொல்லலயே!”

”கோனார் நோட்ஸ்லயும் இதைத்தான் எழுதியிருக்காங்க.”

”நீ சொல்றது ஈஸியா இருக்குப்பா. ஆனா இது வேண்டாம்.”

”ஏன்?”

”ஏன்னா? கோனார் நோட்ஸ்ல இல்லாததை நான் எழுதினா மிஸ் எனக்கு மார்க் போட மாட்டாங்க.”

”ரெண்டும் ஒண்ணுதாம்மா.”

”ஆனா கோனார் நோட்ஸ்ல நீ சொன்னது இல்லையே . . . அதனால நானே படிச்சிக்கறேன். என்னை விடு.”

”ஏங்க அவளை கெடுக்காதீங்க. ஏய் அப்பா சொல்றத கேட்காதடி . . .”, உள்ளேயிருந்து அவளுடைய அம்மா.

”பகைமையினையுடைய ஏனைய விலங்குகளும்.... பகைமை.. பகைமை... பகைமையினு... பக்கை..மை..யின..”

மீண்டும் என் மகள் கோனார் நோட்ஸை கையில் எடுத்துவிட்டாள். இனி நான் தடுக்க முடியாது.

வாழ்க கோனார் நோட்ஸ் . . . வளர்க தமிழ் டீச்சர்ஸ்

Tuesday, November 3, 2009

பேராண்மையில்லை - ஆண்மை - விமர்சனம்


 எம்.ஜி.ஆர் தொடங்கி, ரஜனி பிரபலப்படுத்தி, நேற்று வந்த புதிய,இளைய,  புரட்சி தளபதிகள் வரை தன்னைத் தானே சொரிந்து கொள்ளும், புகழ்ந்து கொள்ளும் அருவருப்பான சுய பிரச்சார பாடல்களை, காட்சிகளை எந்த முணுமுணுப்பும் இல்லாமல் கைதட்டி இரசித்திருக்கிறோம். அவற்றையெல்லாம் இரசித்த நாம் பேராண்மை போன்ற ”சில கருத்துகளை” பிரச்சாரம் பண்ணும் படத்தை ஆதரியுங்கள் என்ற வேண்டுகோளுடன் இந்த விமர்சனத்தை ஆரம்பிக்கின்றேன்.

திரைப்படங்கள் வழியாக “தன்” கருத்தைச் சொல்லும் படைப்பாளிகளில் (ஒரே)ஒருவராக ஜனநாதன் தனித்து தெரிகின்றார்.

கதை - மிக நல்ல கதை
(சொல்லாமல் கொள்ளாமல் தழுவிய கதை என்று இணையத்தில் படித்தேன்)

திரைக்கதை - பலவீனமான திரைக் கதை
(சாதிப் பிரச்சனையாக துவங்குகிற படம், தேச பக்தி படமாக முடிகிறது)

வசனம் - கொச்சை
(அந்தப் பெண்களின் விரசமான பாலியல் பேச்சுக்களும், ஜெயம் ரவியின் வீரமில்லாத அரசியல் கருத்துக்களும்)

நடிப்பு - அனைவரும் அபாரமாக நடித்திருக்கின்றார்கள். கடினமான உடல் உழைப்பும், மனோ ரீதியான அர்ப்பணிப்பும் இல்லாமல் இந்தப் படத்தில் வரும் காடுகளுக்குள் நடித்திருக்க முடியாது.

எடிட்டிங் - நறுக்கென்று இல்லை.

ஒளிப்பதிவு - நடிகர்களுக்கு இணையான உழைப்பு.

இயக்கம் - ஆபரேஷன் சக்ஸஸ்.

இந்தப்படத்தில் சென்சாரால் mute செய்யப்பட்ட வசனங்களாலும், சென்சாருக்கு தப்பித்த வசனங்களாலும் இயக்குனர் ஜனநாதன் படம் முழுக்க தனித்து தெரிகின்றார். ”வசனங்களால்” என்று குறிப்பிடக்காரணம் அவருடைய கருத்து வெறும் வசனங்களாகவே வெளிப்பட்டிருக்கின்றது. கருத்துக்களை காட்சியாக்குவதில் கவனம் செலுத்தவில்லை. காட்டுவாசிகளை காட்டை விட்டு துரத்தும் காட்சியிலும் அழுத்தமில்லை. அதனால்தான் திரையரங்குகளில் வெறும் பிரச்சார நெடி அடிக்கிறது.

மேலதிகாரி பொன்வண்ணன் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தும்போது எந்த முணுமுணுப்பும் இல்லாமல் ஏற்றுக் கீழ்படிந்து, ஒரு புழுவைப் போல, கடமையை மட்டும் செய்யும் என்.சி.சி. அதிகாரி துருவனாக ஜெயம் ரவி நடித்திருக்கிறார். தன்னை ஒடுக்கும் ஆதிக்க சக்திகள் யார் எனத் தெரிந்தும் அவர்களை எதிர்த்து ஒரு சிறிய கல்லைக் கூட எறியவில்லை துருவன். ஆனால் முகமற்ற, வெறுமனே வெள்ளைக்காரர்கள் என்ற அடையாளத்துடன் வரும் கூலிப்படையை ஒடுக்க உடனே போரில் இறங்குகிறார்.

உலக அரசியல் சுளிவுகள், மூலதனக் கோட்பாடுகள், காட்டுக்குள் மேப் பார்த்து வழி கண்டுபிடித்தல், கொலை செய்தல் உட்பட அனைத்தையும் ஒரு Demoவாக தன்னிடம் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு செய்து காட்டுகிறார்.

ஆனால் அந்தப் பெண்கள் யார் தெரியுமா? துருவன் ஒரு கீழ்சாதி ஆள் என்பதாலேயே அவனை பிடிக்காமல் கழிவறையை கழுவ வைத்து அவமானப்படுத்தும் ஆதிக்க வெறிபிடித்த பெண்கள். அவர்களையும் துருவன் ஒரு வார்த்தை கூட கடிந்து கொள்வதில்லை.

ஏன் என்று நமக்கு வரும் ஆச்சரியம், அந்தப் பெண்களுக்கும் வருகின்றது. ஏன் எங்கள் மேல் கோபப்படவில்லை என்று அவர்களில் ஒரு பெண் கேட்கிறாள். புன்னகைக்கும் துருவன் ”நமது சக்தியை எதிரிகளிடம்தான் காட்ட வேண்டும்” என்று துப்பாக்கியைக் கையில் கொடுக்கின்றான்.

பிறகு அதே 5 அடாவடி இளம் பெண்களுடன் இணைந்து போராடி முகம் தெரியாத கூலிப்படையினருடன் மோதி தேசம் காக்கிறார்.

அதாவது தேசத்திற்கு ஒரு ஆபத்து என்றால், சாதி மறந்து, ஆதிக்க வெறி மறந்து இணைந்து போராட வேண்டும் என்பது தான் படத்தின மெசேஜ்.  ஆனால் இந்த மெசேஜ் யாருக்கு? ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கா? அடங்கி நடப்பவர்களுக்கா? இதுதான் குழப்பம்.

ஏனென்றால் படம் முழுக்க கருத்து சொல்லும் துருவன், இந்தக் கருத்தைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அதனாலேயே இது பேராண்மையில்லை.

Tuesday, October 27, 2009

அவர் - டைட்டில் டிசைன்ஸ் - உங்களுக்கு எது பிடிச்சிருக்கு?

வடபழனி ராஹத் பிளாசாவில் நான் ஒரு வெஜ் ரோலை சாப்பிட்டு முடிக்கவும், பழனிவேலு பாட்டை கேட்டு முடிக்கவும் சரியாக இருந்தது.

”பாட்டு நல்லா இருக்கு சார். குதம்பாய், மை டியர் எந்திரா, வானவில் அப்படின்னு எல்லாமே தனித்தனி வெரைட்டியா இருக்கு.  கதை எப்படி இருக்கும்னு கெஸ் பண்ண முடியல. கதை என்ன சார்?”, இது எனது நண்பர் டைட்டில் டிசைனர் பழனிவேலு

”கதையை சொல்வதற்கில்லை. வேண்டுமானால் ஒன் லைன் சொல்லுகிறேன்”, இது நான்.

”ம்ம்ம் . . .சொல்லுங்க”

அவர் இது தான் டைட்டில். யார்? இது தான் ஒன் லைன்”

”ஹா.. ஹா.. ஹா... சார் கேட்கறதுக்கு நல்லா இருக்கு. இருந்தாலும் எனக்கு இது பத்தாது சார். இன்னும் கொஞ்சம் டீடெயில் சொல்லுங்க”

”சொல்லிட்டாப் போச்சு. வெவ்வேறு நிறங்களாக இருந்தாலும், ஒன்றாக இணையும்போது அது, அழகான வானவில்லாகிறது. அது போல வெவ்வேறு குணங்கள் உடையவர்களாக இருந்தாலும், வானவில் போல வண்ணமயமாக ஒற்றுமையாக வாழும் ஒரு குடும்பம்.”

”அப்புறம்?”

”அந்தக் குடும்பத்திற்குள் எட்டாவது நிறமாக ஒருவர் வருகிறார். அவர் எதற்க்காக வந்தார்? அவர் யார்? இது தான் முடிச்சு”

 ”ம்..ம்..ம்.. அவர் - இந்த டைட்டில் ஒரே வார்த்தையில நச்சுன்னு இருக்கு. ஆனா கொஞ்சம் வெயிட்டா இருக்கு.”

”கரெக்ட். அதனாலதான் நான் ஒரு விஷயத்தை யோசிச்சு வைச்சிருக்கேன். வானவில் ஷேடிங்கை டைட்டில்ல கொண்டு வந்துட்டா, நீ ஃபீல் பண்ற அந்த வெயிட் குறைஞ்சு பேலன்ஸ் ஆகிடும்.”

”ஓ.கே சார், இன்புட் பத்தல. இருந்தாலும் நானே ஏதாவது டிரை பண்றேன். பார்த்துட்டு சஜெஷன் சொல்லுங்க. அங்கேயிருந்து அப்படியே டிராவல் பண்ணலாம்”

கீழே இருப்பவை அவர் திரைப் படத்திற்க்காக பழனிவேலு முயற்சித்த சில டைட்டில் டிசைன்கள்.

அவர் டைட்டில் டிசைன் - 1


அவர் டைட்டில் டிசைன் - 2



அவர் டைட்டில் டிசைன் - 3



அவர் டைட்டில் டிசைன் - 4


அவர் டைட்டில் டிசைன் - 5


அவர் டைட்டில் டிசைன் - 6


பழனிவேலு மகா திறமைசாலி. நேரம் எடுப்பார். ஆனால் அபாரமான டிசைன்களைத் தருவார். எதை தேர்ந்தெடுப்பதென்று குழம்பிவிடுவோம். நானும் எனது குழுவினரும் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்று கூறுங்கள். அதிகமாக எது உங்களுக்கு பிடிக்கிறதோ, அதை மேலும் மெருகூட்டலாம் என்று முடிவு செய்திருக்கின்றேன். 


அப்புறம் . . . உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக பதிவர்கள்  தேர்ந்தெடுத்த டைட்டில் டிசைன் என்று அலட்டலாமென்றிருக்கின்றேன். என்ன சொல்கிறீர்கள்?

Friday, October 23, 2009

41,685 தமிழர்கள் முகாம்களில் இருந்து வீடு திரும்பினார்கள் - தமிழ் பதிவர்கள் மௌனம்


காலையில் The Hindu இணையதளத்தில் இந்த செய்தியை பார்த்தேன். அப்புறம் நக்கீரனில் பார்த்தேன். பின்னர் சன் செய்திகளில் பார்த்தேன். சந்தோஷமாக இருந்தது. நான் அறிந்தவரை இந்தச் செய்தியின் சாராம்சம் இதுதான்.

முகாம்களில் இருந்து திருப்பி அனுப்பபட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 இலங்கை ரூபாயும், ரூ. 20,000க்கான வங்கி வைப்பு நிதியும் வழங்கப்பட்டது. அது தவிர, 6 மாதத்திற்கான ரேஷன் பொருட்களும், அவசர தேவைக்கான துணிகளும் வழங்கப்பட்டன. வவுனியா, மன்னார், முல்லைத் தீவு, கிளிநொச்சி போன்ற இடங்களுக்கு மக்கள் திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.

இதற்க்கான விழாவில் பேசிய மஹிந்த ராஜபக்ஷே, தமிழக முதல்வருக்கும், பாரதப் பிரதமருக்கும் நன்றி தெரிவித்தாராம்.

ஆனால் இந்த செய்தி குறித்த சந்தோஷமோ பரபரப்போ பகிர்தலோ, தமிழ் பதிவர்களிடையே துளி கூட இல்லை. டிவிட்டரில் கூட இந்தச் செய்தி தமிழர்களிடையே உலவவில்லை.  ஆதவன் ரிலீசுக்கு மாய்ந்து மாய்ந்து பதிவு எழுதியவர்களும், டிவிட்டரில் கமெண்ட் அடித்தவர்களும், கிட்டத்தட்ட 40 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் இருந்து விடுதலை ஆகிறார்கள் என்பதை ஏனோ கண்டு கொள்ளவில்லை!!! Facebookல் மட்டும், இந்தச் செய்தியைப் பற்றி சந்தேகம் தெரிவித்து ஒரு பதிவை பார்த்தேன். மற்றபடி பதிவர் உலகில் இந்தச் செய்தி எந்தச் சலனமும் இல்லாமல் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளது.

கொஞ்சமாவது சந்தோஷம் தரக்கூடிய இந்தச் செய்தி குறித்து ஏன் மௌனமாக இருக்கிறோம் என்று தமிழ் பதிவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

Thursday, October 22, 2009

ஜாலியான அட்வைஸ் கதை - 4


டாஸ்மாக் மூடுகிற நேரத்தில், கடைசியாக நாலு பேர் உள்ளே போனார்கள். சற்றுத் தொலைவில் கான்ஸ்டபிள் காத்துக் கொண்டிருந்தார். இன்னும் ஒரு கேஸ் பாக்கியிருக்கிறது. குடித்துவிட்டு வண்டி ஓட்டியதற்க்காக ஒரே ஒருவன் சிக்கிவிட்டால், இன்றைய கோட்டா ஓவர்.

பதினைந்து நிமிடம் கடந்தது. டாஸ்மாக்கில் விளக்குகள் அணைந்தன. முதல் ஆள் வெளியே வந்தான். அப்படி ஒன்றும் ஆட்டமில்லை. கொஞ்சம் ஸ்டெடிதான். அடுத்த ஆள் வாட்டர் பாக்கெட்டை வீசி எறிந்தபடியே உடனே வந்தான்.  அவனும் பெரிதாகத் தள்ளாடவில்லை. மூன்றாவது ஆளும் நான்காவது ஆளும் ஒன்றாக வெளியே வந்தார்கள். மூன்றாவது ஆளின் கையில் கடைசி பெக். வாசலிலேயே குடித்தான். நான்காவது ஆளுக்கு நிற்கவே முடியவில்லை. அவனை மற்ற அனைவரும் சேர்ந்து தோளில் தாங்கியபடி கார் சீட்டில் உட்கார வைத்தார்கள்.

”மச்சான் பார்த்துடா . . . ஜாக்கிரதையா போயிடுவல்ல”
”ழோ..ழோ..பிழாப்ளம். ழான் பாழத்துழ்கறேன்”, அவனைப் போலவே அவனுடைய குரலும் தள்ளாடியது.

மற்றவர்கள் அவனை விட்டுவிட்டு அவரவர் பைக்கில் தள்ளாடியபடியே ஏறிப் போனார்கள். கடைசி ஆள் இன்னமும் கார் சாவியை துளாவிக் கொண்டிருந்தான்.

”கார் வச்சிருக்கானா? நல்ல வெயிட் பார்ட்டி சிக்கிருச்சி, மீட்டர் போட்டுற வேண்டியதுதான்.” கான்ஸ்டபிள் முகத்தில் புன்னகை.

”மிஸ்டர் காரை விட்டு இறங்கு”
”எழுதுக்கு?”
”நீ குடிச்சிருக்க. குடிச்சிட்டு கார் ஓட்ட உன்னை அனுமதிக்க முடியாது. நல்லா வசமா மாட்டிக்கிட்ட”
”யாழ் சொழ்னது நாழ்ன் குழ்டிச்சிழுக்கேன்னு. நாழ்ன் குழ்டிக்கல”
”மிஸ்டர் நான் நினைச்சா உன் டிரைவிங் லைசென்ஸ்சையே  கேன்சல் பண்ணிடுவேன். ஆயிரம் ரூபா குடுத்துட்டா உன்னை விட்டுடறேன்.  ஓடிப்போயிடு”
”சாழ்ர் . . . நாழ்ன் குழ்டிக்கல”
”டாய் யாருகிட்ட பொய் சொல்ற? ஊதுடா?”

அந்த இளைஞன் ஊதினான். என்ன ஆச்சரியம்? குடி நாற்றத்தை கண்டுபிடிக்கிற மீட்டரில் ஒரு சிறு அசைவு கூட இல்லை.
”டாய் . . . நல்லா ஊதுடா”, இந்த முறை கான்ஸ்டபிள் தனது மூக்காலயே அவன் ஊதியதை மோப்பம் பிடித்தார். துளி கூட சரக்கு நாற்றம் வரவில்லை.
”டேய், உண்மையை சொல்லிடு. கொஞ்சம் கூட வாய் நாறல. எப்படிடா அது?”

”அட அது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்ல சார்”., பேசிக் கொண்டே கார் சாவியை கரெக்டாக செருகினான்.
”தினமும் எல்லாருமே குடிப்போம். ஆனா ஒருத்தர் மட்டும் குடிச்சா மாதிரி நடிப்போம்”
”எதுக்கு?”
”உங்கள மாதிரி ஆளுங்கள ஏமாத்தறதுக்குதான் . . .வரட்டா”, காரை ஸ்டார்ட் பண்ணி ஸ்டைலாகப் பறந்தான் அவன்.

நீதி
மது அருந்தாதீர்கள். மது அருந்தாவிட்டால், நீங்கள் உங்களை மட்டுமல்ல, மது அருந்துபவர்களையும் காப்பாற்றலாம்.

Wednesday, October 21, 2009

வலைபாயுதே - 1 : ஹாரிபாட்டரை முந்திய விண்டோஸ் 7


விண்டோஸ் 7க்கான முன்பதிவு ஹாரிபாட்டருக்கான முன் பதிவையே முந்திவிட்டது, என்று அமேசான் ஆன்லைன் ஸ்டோர் அதிசயிக்கிறது.

”பிசி வேர்ல்டு” மக்களின் ஆர்வத்தைக் கண்டு,   லண்டன் நகரில் உள்ள ஒரு ஸ்டோரில் நள்ளிரவில் இருந்தே விண்டோஸ் 7 விற்பனை உண்டு என போர்டு மாட்டியிருக்கின்றது. இதே பாணியில் ஹாரிபாட்டருக்காக சென்னையில் கூட நள்ளிரவில் ஒரு புத்தகக் கடை திறந்திருந்தது, உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

”டச் ஸ்கிரீன்” மென்பொருள்களுக்குத் தேவையான அனைத்து சமாச்சாரங்களையும் உள்ளடக்கியுள்ள விண்டோஸ் 7, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேஜிக் டச் என்று சொல்லலாம். விண்டோஸ் விஸ்டாவினால் சரிந்திருந்த மைக்ரோசாப்டின் இமேஜ் மற்றும் விற்பனையை விண்டோஸ் 7 உயர்த்தியிருக்கிறது. இத்தனைக்கும் இன்னும் 24 மணி நேரம் கழித்துதான் சந்தைக்கு வரப் போகிறது.

மக்களின் இந்த அதீத ஆர்வத்திற்கு காரணம், மைக்ரோசாப்டின் மார்கெட்டிங் உத்தி. அமெரிக்காவின் புகழ்பெற்ற டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் ஒன்று Family Guy. அந்த நிகழ்ச்சியின் இயக்குனரைக் கொண்டு, அரை மணிநேரத்திற்கு, ஒரு ஸ்பெஷல் விண்டோஸ் 7 புரோகிராமை தயாரித்திருக்கின்றார்கள்.

செயின் ஸ்டோர்ஸ் - இதுதான் சரிந்து கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனத்தை தூக்கி நிறுத்திய உத்தி. மைக்ரோசாப்டும் அதையே பின்பற்றி விண்டோஸ் 7ஐ ஒரு வெற்றிகரமான ஆபரேட்டிங் சிஸ்டமாக மாற்ற முயற்சிக்கின்றது. இந்த வரியை நீங்கள் வாசிக்கும் வரை வெற்றிதான். மக்கள் வாங்கி பயன்படுத்திய பின்தான் உண்மை நிலவரம் தெரியும். அதற்குள் இரண்டு மாதங்கள் ஆகிவிடும்.

உலகில் 93% கம்ப்யுட்டர்களில் மைக்ரோசாப்ட்தான் உள்ளது. ஆனால் தற்போது நிறைய கெட்டப் பெயருடன் உள்ளது. விண்டோஸ் 7 நல்ல பெயரெடுக்க வேண்டும் என்று பிசி நிறுவனங்கள் எல்லாம் கையை பிசைந்து கொண்டிருக்கின்றன. ஏனென்றால் பொருளாதாரச் சரிவால் HP, DELL, Sony போன்ற பெரிய நிறுவனங்கள் எல்லாம் விற்பனை குறைந்து டல்லடித்துக் கொண்டிருக்கின்றன. விண்டோஸ் 7 இதையெல்லாம் மாற்றும் என்று உலகமே காத்திருக்கின்றது.

விண்டோஸ் ஏழா? விண்டோஸ் பாழா? என்று நாளை தெரிந்துவிடும்.

Sunday, October 18, 2009

ஈழத் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

”இலங்கைக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்றுத் தந்த கலைஞருக்கு பாராட்டு”
தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் இலங்கைக்கு சென்று வந்த பின் சென்னையில்  மேற்கண்ட வாசகங்களுடன் சில போஸ்டர்கள் முளைத்தன.

இதை கண்டித்து, Facebookல் சிலர், முக்கியமாக இலங்கைத் தமிழர்கள் கலைஞரை காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நல்லது. அவர்களுடைய கோபம் நியாயமானதே. ஆனால் கோபப்படுவது மட்டுமே நியாயமாகிவிடுமா?


வயிற்று வலி எனக்கு என்றால், நான்தானே மருந்து சாப்பிட வேண்டும். கசப்பு என்பதால் எனக்காக இன்னொருவர் மருந்து சாப்பிட முடியுமா? பிரபாகரனின் (இன்னும் சிலரால் உறுதி செய்யப்படாத) முடிவுக்குப் பின்னால், ஈழத் தமிழர்களின் ஒருங்கிணைந்த தலைவர் யார்? யாராக இருந்தாலும் அவர் ஈழத்தில்தானே இருக்க வேண்டும். தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் தி.க தலைவர்கள் அந்தந்த கட்சிக்குதான் தலைவர்களே தவிர, ஈழத் தமிழர்களின் தலைவர்கள் அல்ல. அப்படி இருக்கவும் முடியாது.

ஆனால் அதை மறந்துவிட்டு, சில ஈழத் தமிழர்கள் தங்களது தலைவர்களை தமிழ்நாட்டில் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு ”நான்கே நாட்களில் இலங்கை பிரச்சனையைத் தீர்த்த கலைஞர்” போஸ்டர்கள் கண்களில் படுகின்றன. அவர் கலைஞர் அல்ல, கொலைஞர் என்று அனல் கக்குகிறார்கள். மீண்டும் சொல்கிறேன். உங்கள் கோபம் நியாயமானதே. ஆனால் கலைஞர் அல்லது கொலைஞரின் மேல் கோப்படுவது மட்டுமே நியாயமாகிவிடுமா?


  • உங்கள் விடுதலைக்கு உங்கள் பங்கு என்ன?
  • இலங்கையில் உள்ள தமிழ்கட்சிகள் ஏன் தனித் தனி கட்சிகளாக இயங்குகின்றன? 
  • ஏன் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை? 
  • ஏன் அவர்களுக்குள் பொதுத் தலைமை இல்லை? 
  • அவர்களில் எந்தக் கட்சியை அல்லது அமைப்பை இலங்கைக்கு வெளியே உள்ள தமிழர்கள் ஆதரிக்கிறார்கள்?
  • ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலைக்கு இவர்களுக்கு பங்கே இல்லையா?

தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கருணாநிதியை அல்லது பிரபாகரனை திட்டித் தீர்த்துவிட்டு பொழுதை போக்குவதும், பிறகு ”மானாட மயிலாட” பார்ப்பதும் வாடிக்கை தான்.

தற்போது இலங்கைத் தமிழர்களும் பிரபாகரனை அல்லது கருணாநிதியைத் திட்டிவிட்டால் தங்கள் கடமை முடிந்தது என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நினைப்பு மாறி, இது தங்கள் பிரச்சனை என்று நினைத்து ஒற்றுமையுடன் போராடும் வரை, தனி ஈழம் என்பது கனவாகவே நீடிக்கக் கூடிய அபாயம் உண்டு.

ஈழத் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
தமிழ்நாட்டு போஸ்டர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களை குறி வைத்து ஒட்டப்படுகின்றன. அதைப் படித்து நேரத்தை வீணடிக்காதீர்கள்.
”மானாட மயிலாட” நிகழ்ச்சிகள் எங்கள் (தமிழ்நாட்டு தமிழர்களின்) நேரத்தை  வீணடிக்கப் பிறந்த நிகழ்ச்சிகள். அதைப் பார்த்துவிட்டு கோபப்படாதீரகள். கலைஞர் மீதும், நமீதாக்கள் மீதும் கோபப்படுவதுதான் ஈழப்போராட்டம், தனி ஈழ உணர்வு என்று (கொச்சையாக) வரைமுறைப் படுத்தாதீர்கள்.



உங்கள் தலைவர் யார்? அவரை கண்டுபிடியுங்கள். அவரைக் கண்டுபிடிக்க உங்கள் கோபம் உதவட்டும். தனி ஈழம் பிறக்கட்டும்.

Saturday, October 17, 2009

ஆதவன் - ஒளிரவில்லை!


”அண்ணே தீபாவளிக்கு ஆதவன் எத்தனை டிக்கெட் வேணும்?”, உதயம் தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவரான செல்வம் எங்கள் குடும்ப நண்பர்.
”10 டிக்கெட் போட்டிருங்க”, என்றேன். அவர் நைட் ஷோவிற்கு டிக்கெட் போட்டுக் கொண்டு வந்தார்.
இதற்கிடையில் எனது சித்தப்பா சோலை வழியாக திரு.சிவகுமார் அவர்களிடமிருந்தே தீபாவளிக்கு முதல் நாளே சத்தியம் தியேட்டரில் மாலை (பிரிவியு) காட்சிக்கான டிக்கெட் கிடைத்துவிட்டது.

சீட்டில் அமர்ந்த கொஞ்ச நேரம் கழித்து, ஒரு குடும்பம் வந்து இது எங்கள் சீட் என்றார்கள். அவர்கள் கையிலும் டிக்கெட், ஆச்சரியகரமாக அதே டிக்கெட் எண்கள். சரியாக டைட்டில் போட்டு படம் ஆரம்பிக்கும் நேரத்தில் இந்த இடைஞ்சல் கடுப்பாக இருந்தது. தியேட்டரில் விசில்கள் பறக்க ஆரம்பித்த வினாடிகளில் நானும் சித்தப்பாவும் தியேட்டரை விட்டு வெளியே வந்தோம்.

”ஹலோ இது என்னங்க கன்பியுஷன்? ஒரே டிக்கெட் நம்பரை எப்படி ரெண்டு பேருக்கு இஷ்யு பண்ணீங்க?”, டிக்கெட்டை வாங்கிப் பார்த்த உதவியாளர் முதலில் ஜெர்க் ஆனார். பிறகு முகத்தில் நமட்டுப் புன்னகையுடன், ”சார், இது சத்தியம் தியேட்டர். நீங்க சாந்தம் தியேட்டரோட டிக்கெட்டை வைச்சிருக்கீங்க. ரெண்டாவது ஃபுளோர் போங்க” என்றார். அசடு வழிந்து கொண்டே ரெண்டாவது புளோருக்கு விரைந்தோம். ”நம்மள விடு. தியேட்டர்காரனுக்கு தெரியாதா? எது சத்யம் டிக்கெட், எது சாந்தம் டிக்கெட்டுன்னு. . .?” இந்த கடுப்பான கேள்விகளுடன் சாந்தம் தியேட்டரில் நுழையவும், சூர்யா திரையில் தோன்றவும் சரியாக இருந்தது.

முதல் Action காட்சி முடிந்து, பிறகு டைட்டில் போட்டு, பிறகு ஒரு பாடலும் முடியும்போது சரிதான் சூர்யா பட்டைய கிளப்ப போகிறார் என்று தோன்றியது.




கூலிக்கு கொலை செய்யும் Paid Killerஆக அறிமுகம் சூர்யா செம பிட். சிக்ஸ் பேக்கை விடாமல் வைத்திருக்கிறார். டைட்டாக உடை அணிகிறார். விதம் விதமாக யோகாசனம் செய்கிறார். அப்புறம் கொஞ்சமாக நடிக்கிறார். மற்ற நேரங்களில் எல்லாம் வடிவேலுவுடன் சேர்ந்து காமெடி செய்கிறார். நயன்தாராவைக் கூட மிகக் கொஞ்சமாகத்தான் கொஞ்சுகிறார். ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு கட்டிடத்திற்கு தாவுகிற ஸ்டண்டை இந்தப் படத்துடன் விட்டுவிடுவது நல்லது. முதலில் பார்த்த ஆச்சரியம் விலகி சலிப்பாக மாறுகிற அளவுக்கு தாவிக் கொண்டே இருப்பது ஓவர் டோஸ்.

மற்ற நேரத்தில் எல்லாம் ஏ.சி பஸ் தேடுபவர்கள், தீபாவளி அவசரத்தில் மட்டும் கிடைக்கிற தகர டப்பா பஸ்ஸில் கூட தொற்றிக் கொண்டு ஊருக்கு விரைவார்கள். அதே போல ஒரு தீபாவளி அவசரத்தில் படம் எடுத்திருக்கிறார்கள். கே.எஸ்.ரவிக்குமாரின் அவசர டச், அல்லது அவுட் ஆஃப் டச் படம் முழுக்க தெரிகிறது. சில காட்சிகளில் பழைய “முத்து“ வாசனை அடிக்கிறது. பல காட்சிகளில் புத்தம் புது டெக்னிகல் ”தசாவதாரம்” வாசனை அடிக்கிறது.

முதல் 15 நமிடங்களுக்குப் பின்  சூர்யாவை விட வடிவேலு அதிகம் ஆக்கிரமிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு புரோமஷன். அதாவது இவருக்கும் கிண்டல் செய்ய ஒரு ஜீவன் சிக்கியிருக்கிறது. அந்த ஜீவன் சரோஜா தேவி. 

அதிக பட்ச மேக்கப்புடன் சரோஜா தேவி ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார். (இது எம்.ஜி.ஆர் காலத்துல வாங்கின லிப்ஸ்டிக்தான)  வடிவேலு அடிக்கடி சரோஜாதேவியின் மேக்கப்பை கிண்டல் செய்து கொண்டே இருக்கிறார்.

நயன்தாரா தனது அழகை இழந்து கொண்டே வருகிறார். கன்னங்கள் ஒட்டிப்போய், ஒட்டாத மேக்கப்புடன் சூர்யாவுடன் டுயட் பாடுவதில் இளமை இல்லை.

ஆடியோ சிடியில் நன்றாக இருந்த பாடல்கள், திரையில் டல்லடிக்கின்றன. முக்கியமான எமோஷனல் காட்சிகளில் எல்லாம் ஆங்கில சோகப் பாடல்களை இசைக்கிறார் ஹேரிஸ் ஜெயராஜ். ஒட்டவில்லை!

மற்றபடி யாரையும், எதையும் குறிப்பிட்டு சொல்லத் தோன்றவில்லை. டப்பிங் குரல்கள் முதல், நடிகர், நடிகையர் தேர்வு வரை எல்லாமே ஒரு படி கம்மிதான்.


அப்புறம் அந்த 10 வயசு மேட்டர். ஒரு ஃபிளாஷ்பேக் காட்சியில் சூர்யா பத்து வயது சிறுவனாகத் தோன்றுகிறார். அது ஒரு கிராபிக்ஸ் நுணுக்கம். (இந்த நுணுக்கத்தின் e-How பற்றி அப்புறம் எழுதுகிறேன்) சூர்யாவை விட டெக்னிகல் டீமிற்குதான் அந்தப் பாராட்டுகள் அதிகம் போய் சேர வேண்டும். டைட்டிலில் அவர்கள் யார் என்று கவனிக்க முடியவில்லை. அவர்கள் யாராக இருந்தாலும், அந்த டெக்னிகல் டீமிற்கு பாராட்டுகள். ஆனாலும் அந்த பத்து வயசு எபிசோட், அழுத்தமில்லாத அறுவையான காட்சிகள்.

சூர்யா சாதாரண நடிகராக இருந்து ஒரு ஸ்டாராக எப்போதோ உயர்ந்துவிட்டார். இது அவருடைய ஸ்டார் ஸ்டேட்ஸை கேஷ் பண்ணுகிற படம். மற்றபடி சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை.

படத்தை விட End Title மகா நீளம். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாருடன் சேர்ந்து படத்தின் புரொடியுசர் உதயநிதி ஸ்டாலினே தோன்றுவதால் கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களுக்கு மேல் டைட்டில் போடுகிறார்கள்.

ஆதவன் ஒளிரவில்லை!!!

பின்குறிப்பு -
இன்றைக்கு உதயம் தியேட்டரில் (தீபாவளி) நைட்ஷோவிற்கான டிக்கெட்டை யாருக்கு கொடுத்து மாட்டிவிடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.

திரு.சிவகுமார் அவர்களிடம் நான் சொல்ல மறந்தது என்ன?


”அறுபது வயசுக்கு மேல ஆச்சு. எத்தனையோ படம் நடிச்சிருக்கார். ஆனா இத்தனை வருஷத்துல இப்பதான் முதன் முதலா ஒரு நல்ல படத்துக்கு டிக்கெட் குடுத்திருக்கார்.”

ஒரு பிரபல நடிகரை இப்படி கலாட்டா செய்தது என் சித்தப்பா சோலை.  அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு இரசித்து சிரித்த அந்த நடிகர், அவருடைய நண்பர், ஓவியர், கம்ப ராமாயணப் பேச்சாளர் திரு. சிவகுமார்.

பெரிய மனிதர்களை நெருக்கத்தில் பார்க்கும்போது, அவர்களிடம் சொல்ல நினைக்கும் பல விஷயங்கள் மறந்துபோகும். இன்றைக்கு என் சித்தப்பாவுடன், திரு.சிவகுமார் அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்தபோது ஒரு விஷயத்தை அவரிடம் மறக்காமல் சொல்ல நினைத்து, கடைசியில் மறந்து போனேன். அது . . .?

”டேய் சிவகுமார் போன் பண்ணினாரு. சத்தியம் தியேட்டர்ல ஆதவன் படத்துக்கு ரெண்டு டிக்கட் இருக்காம். நாலு மணிக்கு கிளம்பி வா. அவரை பார்த்து ரெண்டு வார்த்தை பேசிட்டு, படம் பார்த்துட்டு வந்துடலாம்”, என்று செல்போனில் என் சித்தப்பா சொன்னார்.

”ஓ.கே. சித்தப்பா”, என்று சொன்ன அடுத்த ஒரு மணி நேரத்தில் நாங்கள் திரு.சிவகுமார் வீட்டில் ஆஜர்.

”வந்துட்டியா . . . வாடா. . . வாடா. . .”, என்று சித்தப்பாவை அழைத்தவர், ”இது யாரு? ஐ.எஸ்.ஆர் பையனா? வாப்பா. . . நல்லா இருக்கியா?” என்று என்னையும் நலம் விசாரித்தார்.

எனது சித்தப்பா சோலை, நடிகர் சிவகுமாரின் நெருங்கிய நண்பர். அவரது நெருக்கத்தின் காரணமாகவே, எனது தந்தையின் மறைவுக்குப் பின்னும் எங்கள் வீட்டில் நடந்த அனைத்து குடும்ப விழாக்களுக்கும் திரு.சிவகுமார் அவர்கள் வருகை தந்தார். எனது தங்கை திருமணத்தின் போது அவர் பரிசளித்த, அவரே வரைந்த காந்தி பென்சில் டிராயிங், 15 வருடங்களுக்குப் பின்னும் எங்கள் வீட்டு சுவற்றை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.


”டேய். இன்னைக்கு ஹிண்டு பேப்பர் படிக்க சொன்னேனே, படிச்சியாடா?, இது திரு.சிவகுமார்.
”இல்லையே. நான் போய் வாங்கறதுக்குள்ள எல்லா பேப்பரும் வித்துடுச்சு”, இது என் சித்தப்பா சோலை.
”பாத்தீங்களா? எப்படி இருக்கான்? எடைக்கு எடை போடறதுக்கு கூட சில பேர் பேப்பர் வாங்கறதில்ல. இன்னைக்கு ஹிண்டு பேப்பர்ல என்னை பத்தி வந்திருக்கு. சேலம் சோனா காலேஜ்ல நான் பேசினதபத்தி சினிமா பிளஸ் பகுதியில போட்டிருக்கான். படிடான்னா . . . படிக்காம வந்துட்டு என்னையே கிண்டல் பண்றான். ஆமா நீங்க படிச்சீங்களா?”, அவர் பேசுவதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்த நண்பரும் இல்லையென்றார்.
”க்கும் . . . எல்லாம் ஒரே ரகம்”

தலைவர்கள், சமூக அந்தஸ்தில் பெரியவர்களாக இருப்பவர்கள் போன்றோர் தனது நண்பர்களுடன் ”வாடா...போடா” என்று மனது விட்டு ஜாலியாக பேசும், எந்த பாசாங்கும் இல்லாத, இறுக்கமற்ற நிமிடங்களை நான் எப்போதுமே சுவாரசியமாக படிப்பேன். இன்று திரு.சிவகுமாரும், எனது சித்தப்பாவும் ஒருவரை ஒருவர் கலாட்டா செய்து பேசிக் கொண்டிருந்தபோது நான் என்னை மறந்தேன்.

ஆதவன் படத்தின் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு எழுந்தோம். 
”போய் பார்த்து என்ஜாய் பண்ணுங்க. நானே இன்னும் படம் பார்க்கல. நாளைக்குதான் வீட்டோட போகப்போறேன்”
”ஓ...நீங்க நடிக்கலன்னவுடனே வீட்டோட போய் பார்க்கற தைரியம் வந்திடுச்சா”
”டேய் . . . போடா . . .போடா. . .தம்பி நீ நாளைக்கு மறக்காம விஜய் டிவியில நான் பேசுறதை பாரு”.

”சரி சார்” என்று எழுந்தேன். எழும்போது எதையோ மறக்கிறேன் என்று தெரிந்தது.

நாங்கள் விடை பெற்று வெளியே வந்தோம். தற்செயலாக டிக்கட்டை திருப்பி பார்த்தேன். டிக்கெட்டின் பின்னால் சோலை என்று எழுதியிருந்தது.
”பார்த்தியாடா . . . எவ்வளவு ஆர்கனைஸ்டா இருக்காரு. இத்தனை பிசிக்கு நடுவுலயும், சும்மா ரெண்டு டிக்கட்டை தூக்கி குடுக்காம பேரை எழுதி வச்சு, கரெக்டா குடுக்கறாரு” என்று வியந்தார் என் சித்தப்பா.

அடுத்த வினாடி திரு. சிவகுமார் அவர்களிடம் நான் எதை சொல்ல மறந்தேன் என்பது ஞாபகம் வந்தது. அது . . . தீபாவளி வாழ்த்து! அதனால் என்ன . . . இந்த பதிவின் வழியாக அவருக்கு வாழ்த்து சொல்லிவிடுகின்றேன்.

தீபாவளி வாழ்த்துக்கள்!!!

Friday, October 16, 2009

ஜாலியான அட்வைஸ் கதை - 3



”ஒரே ஒரு முத்தம் ப்ளீஸ்”

சிட்டி சென்டர், பீச், பீட்சா கார்னர் என காலையிலிருந்து தவிர்த்த முத்தம்.
கடைசியாக நைட்ஷோவில் எதிர்பார்த்து கிடைக்காமல் போன முத்தம்.

”முடியாதுன்னா முடியாது”, செல்லச் சிணுங்கலுடன் அவனை தலை கலைத்து இறங்கி நடந்தாள்.

சத்தம் கேட்டு யாரும் விழித்து விடக் கூடாது என்பதற்க்காக தெரு முனையிலேயே மோட்டர் பைக்கை அணைத்திருந்தான் அவன். அதனால் அவளுடைய செல்லச் சிணுங்கல் கூட கூடுதல் டெசிபலில் கான்கிரிட் சுவர்களில் மோதி எதிரொலித்தன.

சன்னமான நிலா வெளிச்சத்தில் அவளது மெல்லிய உதடுகள் ”வா என்னை முத்தமிடு” என்பது போல ஒளிர்ந்தன.  பைக்கை ஸ்டாண்டு போட்டு விட்டு சட்டென அவளை அவள் வீட்டு சுவற்றுடன் அழுத்தினான்.

”ஒரே ஒரு முத்தம் ப்ளீஸ்”

ஆர்வத்தை மீறிய தயக்கம். தயக்கத்தை மீறிய பயம். கிசு கிசுப்பான குரலில் ”ஹையோ சுவத்துல இருந்து கையை எடு. நான் உள்ள போகணும். யாராவது வந்துட்டாங்கன்னா பிரச்சனையாகிடும்” என்றாள்.

அவன் கையை எடுக்கவில்லை. பள பளவென ஒளிர்ந்த அவளுடைய உதடுகளுக்கும், அவனுடைய உதடுகளுக்கும் 10 மில்லி மீட்டர்தான் இடைவெளி. இருவருக்கும் நெருக்கம் தந்த மயக்கத்தில் அவர்களுடைய மூச்சு காற்று கூட புயல் காற்றைப் போல ஒலித்தது.


”ஒரே ஒரு முத்தம் ப்ளீஸ்”

”வேண்டாம். யாராவது பார்த்துடுவாங்க”

”ஒண்ணே ஒண்ணு”

”வேண்டாம் ப்ளீஸ்”

”ஜஸ்ட் ஒரே ஒரு கிஸ்”

”நோ”

”ஏண்டி ராட்சஷி, நோ சொல்ற? அவன் கேட்கிற முத்தத்தை குடுத்து தொலையேன்”

இருவரும் திடுக்கிட்டு திரும்பினார்கள்.  வாசலில் அவளுடைய அக்கா, தம்பி, அம்மா மற்றும் அப்பா. வீட்டில் எல்லா விளக்குகளும் மள மளவென எரிந்தன. அதிர்ச்சியில் விலகக் கூடத் தோன்றாமல் அவளை சுவற்றுடன் அழுத்தியபடியே நின்றிருந்தான் அவன்.


மிலிட்டரி ரிடையர்டு அப்பா கையில் துப்பாக்கியுடன் சர சரவென அருகில் வந்தார். அவர் கண்களில் கொலை வெறி!

”மரியாதையா அவனை சுவத்துல இருந்து கையை எடுக்கச் சொல்லு. 15 நிமிஷமா காலிங் பெல் அடிச்சுக்கிட்டே இருக்கு”

நீதி :
முத்தம் தர ஏற்ற இடம். காலிங் பெல் இல்லாத இடம். எனவே காலிங் பெல் இருக்கிற இடங்களில் முத்தம் தரவோ, பெறவோ முயற்சிக்காதீர்கள்.

Wednesday, October 14, 2009

அன்பே சிவம் வாழ்வே தவம் : கமல் - ரஜினி என்கின்ற இரு மேதைகள்!



”சார் நான் போகணும்?”

அவர்(AVAR) திரைப்படத்திற்கான ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்காக ஒத்திகையுடன் கூடிய தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மிக மும்முரமாக விதம் விதமாக நடித்து அசத்திக் கொண்டிருந்த அந்த இளம் நடிகர், திடீரென ஸ்விட்ச் போட்டது போல நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

”சார் நான் போகணும்?”

”ஏன்?” என் குரலில் நான் வெளிக்காட்டாத ஒரு கோபம் இருந்தது.

”விஜய் டிவியில கமல் புரோகிராம் பார்க்கணும்.”

சட்டென என்னுடைய கோபமும் ஆர்வமாக மாறிவிட்டது.

"OK. Pack Up!"

எவ்வளவு மும்முரமான வேலையாக இருந்தாலும் பாதியில் முடித்துக் கொள்ள தூண்டும் அளவிற்கு விஜய் டிவி இரண்டு நாட்களாக எனது கவனத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டது. காரணம் கமல் என்கிற மகா கலைஞனுக்கு நடந்த பாராட்டு விழா நிகழ்ச்சி. நிகழ்ச்சி முழுவதும் கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்த கமலும், அருகில் அமர்ந்திருந்த ரஜனியும் ஒட்டு மொத்த தமிழகத்தையும் கட்டிப் போட்டுவிட்டார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை.

ஏற்கனவே ரஜினியும், கமலும் என்ன பேசினார்கள் என்பதை நான் பல வலைப்பதிவுகளில் படித்து நெகிழ்ந்து போயிருந்தேன் என்றாலும், இந்த நிகழ்ச்சிக்காக காத்திருந்தேன். குறிப்பாக ஆனந்த விகடனில் வந்திருந்த கட்டுரை படிக்கும்போதே கண்களை பணிக்கச் செய்தது. எத்தனை முறை அந்த கட்டுரையை வாசித்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

இரண்டு நாட்களாக இடையில் வந்த விளம்பர இம்சைகளை பொறுத்துக் கொண்டு, ரிமோட்டை கையிலெடுக்காமல் நிகழ்ச்சியை தொடரந்து இரசித்தேன். கிட்டத்தட்ட நானும் அந்த ஸ்டேடியத்தில் ஒருவனாக அமர்ந்திருப்பது போல உணர்ந்தேன்.

உன்னைப் போல் ஒருவன் படம் வெளியானதிலிருந்தே கமலின் ஆக்கிரமிப்பு எனக்குள் பெருகிக் கொண்டே இருக்கின்றது. காரணம் திரைப்படத்திற்கு வெளியே அதற்கான புரோமஷன் நிகழ்ச்சிகளில் கமலின் ஆத்மார்த்தமான பங்களிப்பு. கலைஞர் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் சேரன், லிங்குசாமி, மிஷ்கின், அமீர் ஆகியோருடனம் கமல் உரையாடியபோது மாணவர்களுடன் ஒரு பேராசிரியர் உரையாடியதைப் போலத்தான் இருந்தது. நானும் என் வீட்டிலேயே ஒரு கடைசி பெஞ்ச் மாணவனாக அமர்ந்து கமல் கூறிய கருத்துக்களை குறிப்பெடுத்துக் கொண்டேன்.


விஜய் டிவியில் இரசிகர்களுடன் உரையாடினார். கமலைக் கண்டதும் மாணவி ஒருத்தி கண்கலங்கி பரவசமடைய, கமலும் குரல் கம்ம விழியோரம் ஒரு துளி கண்ணீர் சிந்தினார். அந்த வினாடியிலிருந்து ஏனோ தெரியவில்லை, கமல் என்கிற மேதை எனக்குள் விஸ்வரூபம் எடுத்து உயர்ந்து கொண்டே இருக்கின்றார். அதைத் தொடர்ந்து கமலின் பல படங்களை நான் தொடர்ந்து பார்த்து பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருக்கின்றேன். இந்த ஞாயிற்றுக் கிழமை குருதிப்புனல் பார்த்தேன்.

இரண்டு நாட்களாக ஒளிபரப்பாகிய இந்த பிரமாண்டமான பாராட்டு விழா, ஒரு தனி மனிதனை திகட்டத் திகட்ட பாராட்டுவதற்க்காக நடந்த நிகழ்ச்சிதான். வெவ்வேறு மனிதர்களிடமிருந்து வெவ்வேறு விதமாக வெளிப்பட்ட ஒரு தனி மனித பாராட்டுதான். கமல் கூட தனது ஏற்புரையில் அதை குறிப்பிட்டார்.

ஆனால் கமல் என்கிற மேதை ஒரு தனி மனிதனல்ல. 50 ஆண்டு கால சினிமா அனுபவம். பல வேதனைகளையும், சாதனைகளையும் ஒரு சேர தாங்கி நிற்கின்ற மகானுபவம். கடந்ததை மறந்து எப்போதும் அடுத்ததை நோக்கிய மாபெரும் தேடல். உழைப்பு! உழைப்பு! உழைப்பு!

அதனால்தான் தென்னிந்தியத் திரை உலகின் அத்தனை ஜாம்பவான்களும் திரண்டு வந்திருந்தார்கள். அவர்கள் முகம் நிறைய சந்தோஷமும் நிறைவும் இருந்தது. அவர்களுடைய உணர்வுகள் என்னையும் தொற்றிக் கொண்ட பின் என்னை நானே புதிதாக உணர்கின்றேன்.

கமல்-ரஜினி போன்ற அடக்கமும், தன்னம்பிக்கையும், துடிப்பும், சாதனையும் நிரம்பிய இரு மாபெரும் கலைஞர்கள் உள்ள தமிழ் சினிமாவில் நானும் நுழையப்போகிறேன் என்பதை நினைக்கும்போது எனக்கே பரவசமாகத்தான் இருக்கின்றது. இவர்களைப் போல மேதைகளை பார்த்துவிட்டு உள்ளே நுழையும்போது கர்வம் தொலைந்து, பணிவு பெருகி மிகச் சிறியவனாக உணர்கின்றேன். நான் கடக்க வேண்டிய தொலைவுகளை எந்த பயமும் இன்றி நம்பிக்கையுடன் அணுகும் மனநிலைக்கு வந்துவிட்டேன். செய்யும் தொழிலே தெய்வம், செய்வன திருந்தச் செய், கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற எண்ணங்கள் மேலோங்க இன்னமும் தன்னம்பிக்கை கூடி துடிப்பாக உணர்கின்றேன்.

”ஷோ எப்படி இருந்தது?”, நான் இரவு மணி 12ஐ நெருங்குகையில் மாலையில் ஒத்திகை பார்த்த நடிகரை செல்போனில் அழைத்தேன்.

”என்னை அறியாமல் கண் கலங்கிட்டேன் சார் . . . கமல் - ரஜினி மாதிரி ஜாம்பவான்கள் இருக்கறி ஃபீல்டுல நானும் ஒரு நடிகனா நுழையப்போறேன்னு நினைச்சா பயமும், பெருமையும் கலந்து வருது சார்”

அதற்கப்புறம் அவர் சொன்னது எதுவும் எனது நினைவில் இல்லை. கிட்டத்தட்ட அவருடைய மன நிலைதான் எனது நிலையும்.

விரைவில் நான் இயக்கும் ”அவர்” திரைப்படம் உங்கள் பார்வைக்கு வெளிவரும். ஒரு ஏகலைவனாக இருந்து கமல்-ரஜினி போன்ற துரோணாச்சார்யார்களிடம் நான் பெற்ற பாடம் ”அவர்” திரைப்படத்தை வெற்றிப்படமாக அமைத்துத் தரும் என்று நம்புகிறேன்.

மிகச் சிறந்த நண்பர்களாக, நடிகர்களாக, மனிதர்களாக மிகப்பெரிய ஆளுமையைக் கொண்டிருக்கும் ரஜினிக்கும் கமலுக்கும் எனது மானசீக வணக்கங்களும், நன்றியும்!

அன்பே சிவம்! வாழ்வே தவம்!

Wednesday, October 7, 2009

கவிதை என்பது . . .



கவிதை!
நினைத்தால் வருவதல்ல.
உள்ளுக்குள் ஊறியிருக்கும்
நினைப்பால் வருவது!

தோற்றவனின் முகச்சுளிப்பு அல்ல.
அகத்தின் ஆழத்தில் பெருகி வரும்
வேதனைகளின் வார்த்தை தெளிப்பு!

நீண்டு விரிந்திருக்கும் பாதை அல்ல
அதில் பதிந்து அழிந்திருக்கும்
பாதச் சுவடுகள்!

புல்லாங்குழலின் துளைகளில் தெறிக்கும்  இசை அல்ல.
இசைப்பவனின் ஆன்மாவில்
அமிழ்ந்து கிடக்கும் ஆரவாரங்களின் முணுமுணுப்பு!

இளநியில் பூசியிருக்கும் பச்சை மினுமினுப்பு அல்ல
நார்களின் உள்ளே பொதிந்திருக்கும்
நீரின் குளுகுளுப்பு!

----------------------------- இந்த வரிகள் 30.4.85ல் எழுதியது

கவிதை என்பது . . .
எழுதியது அல்ல
எழுத நினைப்பது!

----------------------------- இந்த வரிகள் இன்று எழுதியது

Monday, October 5, 2009

வானவில் உலகில் “லலிதம் சுதர்ஸனம்”

நான் தற்போது ”அவர்” திரைப்படத்தை இயக்குகிறேன் என்பது ஒரு ரிப்பீட் செய்தியாகிவிட்டது. ஆனாலும் வேறு வழியில்லை. ”அவர்” திரைப்படம் வெள்ளித் திரையில் ஒளிரும் வரை நான் அடிக்கடி அவரைப் பற்றி பேசிக் கொண்டுதான் இருப்பேன். ஏனென்றால் தற்போது என்னை முழுவதும் ஆக்கிரமித்திருப்பவர் அவர் தான்.

படத்திற்கான ஸ்கிரிப்ட் தான் முதல் படி. வசனம் உட்பட ஸ்கிரிப்ட்டை எழுதிவிட்டுதான் மற்ற எதுவும் என்பதில் உறுதியாக இருந்தேன். திருப்தி வரும் வரையில் ஸ்கிரிப்டை செதுக்கிக் கொண்டே இருந்தேன். எழுதும்போதே எங்கெங்கே எதுபோன்ற இசை தேவை என்பதையும் குறித்துக் கொண்டே வந்தேன். அதனால் ஸ்கிரிப்ட்டை முடித்த கையோடு பாடல் மற்றும் பிண்ணனி இசை கோர்ப்பு பற்றிய விவாதத்தில் இறங்கிவிட்டேன்.

படத்தில் ”வானவில் உலகம்” என்ற பாடல் வருகின்றது. முழுக்க மேற்கத்திய பாணியில் அமைந்த ஒரு மெலடி. அந்த மெலடிக்கு இடையே ஒரு Divine Feel தேவைப்பட்டது. தெய்வீக உணர்வு தேவை என்றவுடன் அதற்கான வார்த்தைகளை சில நாட்கள் தேடினேன். கடைசியாக ரெய்கி மாஸ்டர் திரு.பாலகுமார் அவர்களை நாடினேன். அவர் ”லலிதம் ... சுதர்ஸனம்” என்ற இரு அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய வார்த்தைகளை கொடுத்தார். சுதர்ஸனம் என்றால் பேரொளி. அது ஆண் சக்தி. லலிதம் என்றால் பெண் சக்தி. இரு சக்திகளும் இணையும்போது, அதனால் ஏற்படக்கூடிய தெய்வீக அதிர்வுகள் பூரணமாக இருக்கும் என்று விளக்கத்தையும் திரு.பாலகுமார் அவர்கள் சொன்னார்.

அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன், அளப்பறிய ஆற்றல் பொருந்திய ஒன்றை நாம் கையாளப் போகிறோம். அதை கவனமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது. இந்த வார்த்தைகளையும், அதற்கான அர்த்தங்களையும் கூறியவுடன், எனது நண்பரும் இசையமைப்பாளருமாகிய விவேக் நாராயண் மௌனமாகிவிட்டார். பிறகு முதலில் டியுனை ஓ.கே. பண்ணு. பிறகு லலிதம் சுதர்ஸனத்திற்கென தனியாக ஸ்பெஷலாக சிந்திக்கலாம் என்றார். நானும் அவர் சொன்ன படியே ஒரு மெட்டை தேர்ந்தெடுத்து ஓ.கே செய்தேன்.

இன்னைக்கு நைட் feed பண்ணிடறேன். நாளைக்கு காலையில பாட்டு ரெடியா இருக்கும் என்றார். சரி என்று சொல்லிவிட்டு நான் வீட்டுக்கு வந்த ஒரு மணி நேரத்தில் அவர் பின்னாடியே வந்துவிட்டார்.
என்ன?
பாட்டு ரெடி!
”வானவில் உலகம்” பாட்டு நான் ஓ.கே செய்த மெட்டில் இல்லை. ஆனால் என்ன ஆச்சரியம்? இன்னும் அருமையான ஒரு டியுனில் இருந்தது. அதை விட ஆச்சரியம். அசத்தலான வெஸ்டர்ன் பாணி இசைக்கு இடையில் இழைந்த சாமவேத மெட்டு. வெஸ்டர்ன் இசையுடன் சாமவேதமா? எப்படி? ஏன்? என்று தோன்றுகிறதா?

இசையின் ஆரம்பமே சாமவேதம் தான். அதனால்தான் ஆற்றல் பொருந்திய ”லலிதம் . . . சுதர்ஸனம்” என்ற வார்த்தைகளை சாமவேத மெட்டில் பொருத்தினேன் என்றார் விவேக் நாராயண். இது பற்றிய விளக்கங்களை அவரே பிளாக் ஒன்றில் எழுதியுள்ளார்.

முதல் முறை கேட்டபோது, ”லலிதம் . . . சுதர்ஸனம்” என்ற வார்த்தைகள் ஏற்படுத்திய தெய்வீக அதிர்வுகளை வார்த்தைகளால் வருணிக்க முடியாது.

”அவர்” பாடல்கள் விரைவில் வெளியாகும். அப்போது நீங்களும் அந்த இனிய அதிர்வை உணர்வீர்கள் என்பது என் நம்பிக்கை.

ஏ.ஆர்.இரகுமான் எம்.எஸ்.வியை காப்பியடித்து ஆஸ்கார் வென்றாரா?


இந்த வாரம் இசை வாரம் போலிருக்கின்றது. என்னுடைய பல பதிவுகள் இசையை பற்றியே பதிவாகியிருக்கின்றது. சரி, விஷயத்திற்க வருகின்றேன்.

வலையுலகின் மிகப்பிரபல பதிவர் அதிஷா ஒரு பதிவு எழுதியுள்ளார். அட்டைக் காப்பிக்கு ஆஸ்கர் - இதுதான் தலைப்பு! இளையராஜாவின் இன்னும் வெளிவராத சிம்பொனி மீதும், ரஹ்மானின் ஜெய்ஹோ மீதும் இன்னமும் பல (ராஜா/ரகுமான்) வெறி பிடித்த இரசிகர்கள் ஆசிட் ஊற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். இவர்கள் இசையின் இரசிகர்களாக அல்லாமல் இசையமைப்பாளர்களின் இரசிகர்களாக இருப்பதால் தான் இந்த விபரீதம். அதிஷாவின் இந்தப் பதிவும் ஏ.ஆர்.இரகுமானை பிடிக்காத ஒருவரின் வெளிப்பாடுதான்.

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் ”அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை” என்ற அற்புதமான மறக்கமுடியாத பாடலை எம்.எஸ்.வி இசையமைத்திருக்கின்றார். இந்தப் பாடலின் மெட்டும் ஏ.ஆர்.இரகுமான் இசையமைத்து ஆஸ்கர் வென்ற ஜெய்ஹோ பாடலின் மெட்டும் ஒரே மெட்டுதான். எம்.எஸ்.வியை காப்பியடித்துதான் இரகுமான் ஆஸ்கர் ஜெயித்திருக்கின்றார் என்று ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை அதிஷா முன் வைக்கின்றார்.

எம்.எஸ்.வி தின்று போட்ட எச்சிலைத்தான் இன்று இருக்கும் இசை அமைப்பாளர்கள் கையாள்கிறார்கள் என்று எஸ்.பி.பி ஒரு விழாவில் உணர்ச்சி வசப்பட்டு சொன்னார். அது உண்மைதான் என்றாலும், மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகளால் எஸ்.பி.பி பலத்த கண்டனத்துக்கு உள்ளானார் (குறிப்பாக வலையுலகில் இளையராஜா இரசிகர்கள் எஸ்.பி.பியை வறுத்தெடுத்துவிட்டார்கள்). ஒரு பேட்டியில், இது குறித்து ஏ.ஆர்.இரகுமானை கேட்ட போது, இதை ஏன் ஒரு பாராட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டார். இதற்கு என்ன அர்த்தம் என்றால், திரை இசையை பொறுத்தவரை, எம்.எஸ்.வியின் பாதிப்பு அவருக்கும் இருக்கிறது என்று அவர் மறைமுகமாக ஒப்புக் கொண்டார் என்றுதான் அர்த்தம்.

எம்.எஸ்.வியின் பாதிப்பு இருக்கிறது என்பதாலேயே, இரகுமான் எம்.எஸ்.வியை காப்பி அடித்து ஆஸ்கர் வென்றுவிட்டார் என்று குற்றம் சாட்ட முடியாது. எம்.எஸ்.வியின் ”அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை” பாடலின் சாயல் இரகுமானின் ஜெய்ஹோவின் ஆரம்ப வரிகளில் இருப்பது போல இருக்கிறது, அவ்வளவுதான். அதிஷா அட்டைக் காப்பி என்று புலம்புவது போல ஜெய்ஹோ பிரதியெடுக்கப்பட்ட பாடல் இல்லை. இருந்தாலும் இதைப் பற்றி இசை தெரிந்த ஒருவர் சொன்னால்தான் நன்றாக இருக்கும். எனவே இது குறித்து என்னுடைய நண்பர், இசையமைப்பாளர் திரு.விவேக் நாராயணன் அவர்களை கேட்டேன். அவர் அதிஷாவின் குற்றச்சாட்டுக்கு பதிலாக ஒரு பதிவையே எழுதிவிட்டார். இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

அதிஷா பிரபல பதிவர், குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் பதிவர் அல்ல. எனவே இன்னும் பல இசை வல்லுனர்களை கேட்டு, சந்தேகங்களை களைந்து தனது தவறான குற்றச்சாட்டுக்கு மறுப்பு  எழுதுவார் என்று நம்புகிறேன். ஜெய்ஹோ!

Saturday, October 3, 2009

மூன்றே ஸ்வரங்களில் ஒரு பாடல் - எம்.எஸ்.வி, இளையராஜா, எல்.வைத்தியநாதன்


இசை என்பதே ஒரு அதிசயம். ஸ முதல் நி வரை உள்ள ஏழே ஏழு ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டு எத்தனையோ கோடி பாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

நான்கு ஸ்வரங்களை வைத்து மெட்டமைத்து முதலில் சாதித்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இந்த அதிசயத்திலும் அதிசயம் மூன்று அல்லது நான்கு ஸ்வரங்களை மட்டும் வைத்துக் கொண்டு உருவான பாடல்கள். முதலில் இதை சாதித்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ”அதிசய ராகம்” என்று தொடங்கும் பாடலின் முதல் பகுதி ச...க...ப...நி என்ற நான்கே ஸ்வரங்களில் அமைந்த பாடல். என்னுடைய ஞாபகமும், இசை அறிவும் சரியாக இருந்தால் அந்த ராகத்தின் பெயர் மஹதி. பாடல் மஹதி ராகத்தில் துவங்கி பின்னர் ஒரு ராகமாலிகாவாக மலரும். மெல்லிசை மன்னரின் இந்த தைரியமான சோதனை முயற்சி மாபெரும் வெற்றி பெற்றது. திரை இசையில் இன்றைய பல்வேறு சோதனை முயற்சிகளுக்கு விதை விதைத்தவர் மெல்லிசை மன்னர்தான்.



இரண்டாவதாக மூன்றே ஸ்வரங்களை வைத்து மெட்டமைத்து சாதித்தவர் எல்.வைத்தியநாதன்
கார்டுனிஸ்ட் ஆர்.கே.இலட்சுமணனின் மால்குடி டேய்ஸ் ஒரு டெலிவிஷன் தொடராக வெளிவந்தபோது அதற்கு புதுமையான டைட்டில் இசை தந்தார் எல்.வைத்தியநாதன். ”தா னா னா தனா தனா னா . . .” என்று ஆண் ஹம்மிங்கில் துவங்கும் அந்தப் பாடல் ச. . . ரி . . . க என்ற மூன்றே ஸ்வரங்களில் உருவான பாடல். அதற்கு முன்பும் சரி பின்பும் சரி எந்த நாட்டுப் புறப் பாடலும் மூன்றே ஸ்வரங்களில் அமைந்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால் இந்தப் பாடலில் அந்த ஹம்மிங்கைத் தவிர மற்ற பகுதிகளில் வேறு ஸ்வரங்களும் வருகின்றன.



அடுத்ததாக மூன்றே ஸ்வரங்களில் மெட்டமைத்து அசத்தியவர் இசைஞானி இளையராஜா
ஜெயா டிவி சார்பில் நடத்தப்பட்ட ஒரு மெகா இசை நிகழ்ச்சியில்
இளையராஜா ச . . . ரி . . . க என்ற மூன்றே ஸ்வரங்களில் அமைந்த அட்டகாசமான மெட்டை இசையமைத்து பாடிக் காட்டினார். பாடலுக்கான ஆர்கெஸ்ட்ரேஷனில் நான்கு நோட்டுகள் வருவதாக யு டியுபில் சில சந்தேகங்களை படித்தேன். என்னுடைய சிற்றறிவுக்கு அது புலப்படவில்லை.



மெல்லிசை மன்னரிடம் இயக்குனர் பாலசந்தர் மிகவும் புதுமையாக ஒரு பாடல் பண்ணலாம் என்று கூறினாராம். என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த எம்.எஸ்.வி தற்செயலாக ஒரு நாள் திரு. பால முரளி கிருஷ்ணாவை சந்தித்தாராம். அப்போது அவர் எடுத்துக் கொடுத்த ராகம்தான் மஹதி
. இந்த தகவலை நான் எப்போதோ ஒரு முறை விகடன் அல்லது குமுதத்தில் படித்தேன்.சர்வஸ்ரீ இராகம் என்பது மூன்று ஸ்வரங்களில் அமைந்தது. அதே போல நான்கு ஸ்வரங்களில் அமைந்த இராகங்களும் உண்டு. லாவங்கி, மஹதி, சுமுகம் என அந்த இராகங்களுக்குப் பெயர். இந்த இராகங்கள் அனைத்தையும் உருவாக்கியவர் திரு. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்.

மால்குடி டேய்ஸ் டைட்டில் இசையும், இளையராஜா தந்த இசையும் எந்தெந்த இராகங்களில் அமைந்தன என்று எனக்கு யாரும் சொல்லவில்லை. அதனால் எனக்குத் தெரியவில்லை. இசையில் இருக்கும் ஆர்வத்தால் இந்த தகவல்களை திரட்டியிருக்கின்றேன். இதில் தவறு ஏதும் இருந்தால் தெரியப்படுத்துங்கள். அல்லது என்னுடைய நண்பர் மற்றும் இசையமைப்பாளர் திரு.விவேக் நாராயண் அவர்களை அணுகுங்கள். இசை நுணுக்கங்களைச் சொல்வதில் அவர் வல்லவர்.

ஒன்று மட்டும் நிச்சயம், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், எல்.வைத்தியநாதன், இசைஞானி இளையராஜா இவர்கள் அனைவரும் பிறவி இசை மேதைகள். இன்றைய தலைமுறை மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையும் இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய நுணுக்கங்கள் ஏராளமாக இருக்கின்றன.

இந்த இசை மேதைகள் வாழும் காலத்திலேயே நானும் வாழ்வதை ஒரு வரமாக நான் நினைக்கின்றேன்.

வாழ்க நமது இசை மேதைகள்! வளர்க அவர்கள் புகழ்! மேலும் பெருகட்டும் அவர்களுடைய இசை!



Friday, October 2, 2009

கலைஞர் டிவியில் கமல் தந்த டிப்ஸ்

காந்தி ஜெயந்தி ஸ்பெஷலாக கலைஞர் டிவியில் கமலின் லைவ் Phone-in ஷோ.
பேசி வைத்துக் கொண்டு செய்வது போல இருக்கிறது என்று கமலே கிண்டல் செய்யும் அளவிற்கு, நிறைய வி.ஐ.பி போன்கள்.

யாருடைய கேள்விக்கோ பதில் சொல்லும்போது, ஹே ராம் போன்ற படங்களை திரையிடும்போது, அந்தப் படத்தில் இடம்பெறும் சரித்திர நிகழ்வுகள் பற்றிய டெலிவிஷன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என்றார் கமல். அருமையான வார்த்தைகள். எந்த சப்ஜெக்டாக இருந்தாலும், கொஞ்சம் ஆழமாக படமெடுக்கும் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வார்த்தைகள்.

டெலிவிஷன் ஷோக்களில் கதையைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாம் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் பற்றி ஒரு மினி அறிமுகம் அல்லது விவாதம் ஏற்பாடு செய்யலாம். அது போன்ற நிகழ்ச்சிகள் ஆடியன்ஸை தயார் செய்ய உதவும். நாம் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் பற்றிய அடிப்படை அறிவு கிடைக்கும். அதனால் அந்த படத்தை இரசிப்பது இலகுவாக இருக்கும். படம் இரசிகனுக்கு புரியாமல் போய்விடக்கூடிய அபாயம் தவிர்க்கப்படும்.

காந்தி அஹிம்சை வழியில் போராடி நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார். இந்த அளவிற்குதான் மக்கள் Non-detailஆக சுதந்திரப் போராட்டம் பற்றி அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்றார் கமல். உண்மைதான், நம்மில் பெரும்பாலோர் அவ்வளவுதான் தெரிந்து வைத்திருக்கின்றோம். ஹே ராமின் தோல்விக்கு இது ஒரு முக்கிய காரணம்.

கைபர் போலன் கனவாய், ஆரியர்கள், திராவிடர்கள், சுதந்திரப் போராட்டத்தின் போதிருந்த அரசியல் நிகழ்வுகள் . . . இவை பற்றியெல்லாம் ஒரு சிறிய அறிமுக நிகழ்ச்சியை ஒளிபரப்பிவிட்டு அதன் பின்னர் ஹே ராம் திரையிடப்பட்டால் மக்கள் அந்தப் படத்தை இன்னமும் மனதுக்கு நெருக்கமாக உணர்வார்கள்.

கலைஞர் டிவியிடம் ஹேராம் படத்திற்கான உரிமை தற்போது இருக்கின்றதாம். எதிர்காலத்தில் படம் ஒளிபரப்பப்படும்போது, மேலே குறிப்பிட்டுள்ளது போல சப்ஜெக்ட் பற்றிய அடிப்படை அறிவு Knowledge base உருவாக்கிவிட்டு ஒளிபரப்பினால் மக்கள் எளிதில் இரசிக்க முடியும். இந்த அறிவுறுத்தல் அன்பே சிவம் போன்ற படங்களுக்கும் பொருந்தும் என்றார் கமல். நான் இந்த பட்டியலில் குணா, ஆளவந்தான் போன்ற படங்களையும் சேர்க்க விரும்புகின்றேன்.

திரையுலக வாழ்க்கையில் பொன் விழா கொண்டாடும் நேரத்தில், ஒரு ஆசிரியராக இருந்து கமல் பல கருத்துக்களை அடக்கத்தோடும் ஆதங்கத்தோடும் சொல்லிக் கொண்டு வருகின்றார். திரைத்துறையில் நுழையவிருக்கும் என்னைப் போன்றோருக்கு அவருடைய வார்த்தைகள் ஒரு வழிகாட்டி.

ISR VENTURES மற்றும் ”அவர்” குழுவினர் சார்பாக திரு.கமலஹாசன் அவர்களுக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

Thursday, October 1, 2009

எனக்கு குழந்தைகளையும் பெண்களையும் அதிகம் பிடிக்கும்

கடவுளை நேசிப்பவன்
கடவுளாக முடிவதில்லை!
பெண்ணை நேசிப்பவன்
பெண்ணாகச் சம்மதிப்பதில்லை!
ஆனால்
குழந்தையை நேசிப்பவன்
குழந்தையாகிப் போகிறான்!

எழுதிய நாள் - 28.10.90

நான் எழுதிக் கிழித்துப் போட்ட எத்தனையோ டைரிகளில், கிழியாமல் தப்பிய ஒரே ஒரு டைரி தற்போது என்னை பழைய நினைவுகளில் தாலாட்டிக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்த இன்னுமொரு கவிதைதான் மேலே இருப்பது.

அதென்னமோ தெரியவில்லை, எனக்கு குழந்தைகளையும் பெண்களையும் அதிகம் பிடிக்கும். எனக்குப் பிடித்த பெண்களின் அருகாமை என்னை மேலும் கண்ணியமாக வைக்கின்றது. எனது கற்பனைகளில் உணர்வுகளின் வீச்சை அதிகமாக்குகின்றது. கல்லூரி நாட்களிலும் பின்னர் எனது சிநேகிதிகள் ஒவ்வொருவருக்கும் திருமணம் ஆகும் வரையிலும் நான் எனக்கு மிகவும் பிடித்த நானாக இருந்தேன்.

பெண்களை விட எனக்கு அதிகம் பிடித்தவர்கள் குழந்தைகள். அவர்களின் மழலையும், ஏன் என்கிற கேள்விகளும், சின்ன மழைத்துளிக்கு கூட கண்களின் பரவசம் காட்டும் ஆச்சரியங்களும், எனக்கு உன்னை விட்டால் யாருமில்லை என்பது போல நம் விரல்களை பிடித்துக் கொள்ளும் பத்திர உணர்வும், பரபரவென விளையாடிவிட்டு, சட்டென்று ஒரு நொடியில் நம் தோளிலும் மார்பிலும் உறங்கும் பாசமும் . . .

தேவதைகளும், கடவுள்களும் குழந்தைகளின் உருவத்தில்தான் நேரில் வருகின்றார்கள். பெண்கள் அவர்களை பூமிக்கு அழைத்து வருகின்றார்கள்.

நான் சொல்வது சரிதானே? சரிதான்.

Wednesday, September 30, 2009

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

இங்கே இருக்கையில்
தமிழுக்கு அமுதென்று பேர்!
அங்கே இலங்கையில்
அளவுக்கு மிஞ்சிய அமுதென்று பேர்!

தமிழன் என்று சொல்லி
தலை நிமிரும் போதெல்லாம்
தலை வெட்டப்படுகிறது.

கோவலன் இருந்திருந்தால்
சிலம்பு விற்கப் போகமலேயே
சிரம் இழந்திருப்பான்.

கண்ணகியின் சிலம்புகள்
அவள் கற்புடன்
பறிமுதல் செய்யப்பட்டிருக்கும்.

எழுதிய நாள் - 5.4.85

இன்று பழைய டைரியை புரட்டியபோது, தற்செயலாக கண்ணில் பட்டு நெஞ்சில் தங்கிய வரிகள். கிட்டத்தட்ட 24 நான்கு வருடங்களுக்கு முன் நான் எழுதிய கவிதை. கவிதை என்று கூட சொல்ல மாட்டேன். பொங்கிக் கொப்பளித்த உணர்வு. அந்த உணர்வு அன்று தமிழகத்தில் எல்லா இளைஞர்களுக்கும் இருந்தது. இன்றும் அதே உணர்வு தமிழகத்தில் இருக்கிறதா என்றால், இல்லை. ஆனால் அன்றும் இன்றும் இலங்கையில் நிலை மாறவில்லை.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

Tuesday, September 29, 2009

இனி பதிலடி தர மாட்டேன் - கருணாநிதி

ஜக்குபாய் பாடல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி பின் வருமாறு பேசியிருந்தார்.

”காஞ்சீபுரம் விழாவில் நான் உணர்ச்சிமிக்க சொற்பொழிவு ஆற்றியதாக கேட்டவர்கள் எல்லாம் சொன்னார்கள். பேசும் போது நான் சொல்ல விட்டது- அதை இங்கே சொல்ல நினைப்பது இது வரையிலே என் மீது விழுந்த கணைகளுக்கு பதில் கணைகள் நான் அவர்கள் விடுத்த அதே கணைகளைப் போல் இதுவரையில் நான் விட்டிருந்தால் அதை நீங்கள் எல்லாம் மறந்து விடுங்கள்

நான் வாழ்வில் முக்கால் பகுதியை முடித்து விட்டு, அந்த முக்கால் பகுதியில் முத்தமிழுக்கு, இந்த முத்தமிழ் நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கு, மூன்று புறமும் கடலால் சூழந்துள்ள இந்தியத் தீபகற்பத்திலே உள்ள மக்களுக்கும் என்ன செய்தேன், இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதிலே தான் நான் என்னுடைய கவனத்தைச் செலுத்துவேனே அல்லாமல், யார்-யார் என்ன சொன்னார்களோ, அதற்கு அளிக்க வேண்டிய விளக்கங்களை, அதற்குத் தர வேண்டிய மறுப்புகளை அதற்குத் தர வேண்டிய விவரங்களை இயக்கத்திலே இருக்கின்ற தொடர்புடைய மற்றவர்கள் சொல்லிக் கொள்ளட்டும்- அவர்கள் அந்தப்பணியை ஆற்றட்டும்.

நான் யாருக்கும் அவர்கள் தருகின்ற கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டு யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை என்பதை நேற்று காஞ்சீபுரத்திலே மனதிலே பதிய வைத்துக் கொண்டேன். அதை இன்று அண்ணா அறிவாலயத்திலே கலைஞர் அரங்கத்திலே வெளியிடுகின்றேன். இது தான் உறுதி, உறுதி, உறுதி என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இது அரசியல் அல்ல.”

என்னைப் போன்ற அரை குறை கலைஞர் அபிமானிகளுக்கும், கலைஞர் வெறியர்களுக்கும், கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளுக்கும் கலைஞரிடம் மிகவும் பிடித்ததில் ஒன்று எது தெரியுமா? உடனுக்குடன் சளைக்காமல் தன்னை நோக்கி பாய்ந்து வரும் விமர்சனங்களுக்கு பதிலடி தருவது. ஆனால் சில நேரங்களில் அது தரம் தாழ்ந்து அவரது அபிமானிகளையே முகம் சுளிக்க வைக்கும். எதற்க்காக இப்படியெல்லாம் பேசுகிறார் என்று எண்ண வைக்கும். சமீபத்திய உதாரணம் ஜெயலலிதாவை திருமதி.ஜெயலலிதா என்று விமர்சனம் செய்தது.

கலைஞருக்கு யார் உபதேசம் செய்தார்களோ? இனி அதுபோல் சரிக்கு சரி பதிலடி தர மாட்டேன் என்று கூறிவிட்டார். ஆனால் அந்த வேலையை கட்சியின் மற்ற தலைவர்களும் தனது தொண்டர்களும் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறிவிட்டார். அதுதான் கவலையாக இருக்கிறது. இனி வெற்றிகொண்டான் போன்ற பேச்சாளர்களை கையில் பிடிக்க முடியாது.

ஆக (தரம் தாழந்தாலும்) பதிலடி நிச்சயம் இருக்கிறது. ஆனால் ஒரே வித்தியாசம். இனி கலைஞர் பெயரில் இருக்காது.