Tuesday, July 29, 2014

சேரனின் C2H வெற்றி பெற சில யோசனைகள்

 திரு.சேரன் அவர்களுக்கு,
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் படம் எடுப்பது எளிது. ஆனால் அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகமிகக் கடினம். C2H வழியாக அந்தக் கடினமான முயற்சியில் இறங்கியுள்ளீர்கள். அது வெற்றி பெற வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். எனவே எனது ஆதரவுடன் சில யோசனைகளையும் தெரிவித்திருக்கிறேன். எனது யோசனைகளில் ஒன்றாவது ஏற்கப்படலாம். அல்லது முற்றிலும் நிராகரிக்கப்படலாம். அல்லது ஏற்கனவே இப்படி ஒரு சிந்தனை உங்களுக்கு வந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் மேன்மேலும் சிந்தனைகளைத் தூண்டும் என்ற நம்பிக்கையுடன் எனது யோசனைகளை தந்திருக்கிறேன்.



தியேட்டர்களுக்கு எதிரானது என்ற எண்ணத்தை இப்போதே முறியடிக்கவேண்டும்.
தியேட்டர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பாப்கார்ன் + கோக் காம்போ விற்பது போல பாப்கார்ன் + கோக் + DVD விற்பனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தனித்தனியாகவும் விற்கலாம்.

C2H திட்டத்திற்குள் வராத தயாரிப்பளார்களுடனும் சிநேகிதமாக இருக்க வேண்டும்.
C2H திட்டத்திற்கு வராமல் வழக்கமான முறையில் ரிலீசாகும் படங்களின் டிரெய்லர் மற்றும் Behind the Scenes போன்றவற்றுக்கு தங்கள் DVDயில் இலவசமாக அல்லது சிறு தொகை பெற்று இடம் தரவேண்டும்.

பழைய படங்களும் C2H DVDகளில் கிடைக்க வேண்டும்.
மோஸர்பேர் நிறுவனத்தைப்போல அல்லது அது போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பழைய படங்களையும் விற்பனை செய்ய வேண்டும். பழைய படங்கள் C2H திட்டத்திற்குள் வராத படங்களாகவும் இருக்க வேண்டும்.

தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்ய வேண்டும்
C2H வழியாக விற்பனை செய்யப்பட்டிருந்தாலும் அந்த படங்கள் தியேட்டர்களிலும் ஓரிரு நாட்களாவது ரிலீஸ் செய்யப்படவேண்டும். C2H ஸ்பெஷலாக நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு இரசிகர்களுடன் கலந்துரையாடலுடன் கூடிய திரையிடலாக இருக்க வேண்டும்.  இந்த பிரத்தியேக காட்சிக்கு C2H வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும்.

தொலைக்காட்சி ரிலீசும் கேபிள் டிவி ரிலீசும் அடுத்தடுத்து உடனடியாக நடக்க வேண்டும்
ரிலீசாகும் படத்தின் அத்தனை முன்னணி பின்னணி கலைஞர்களையும் இதன் வழியாக புரமோட் செய்து திரையுலகிலும், மக்கள் மனதிலும் இடம்பிடிக்க உதவ வேண்டும். உடனடியாக 30-60 நாட்களுக்குள் தொலைக்காட்சியிலும், கேபிள் டிவியிலும் ஒளிபரப்புவதை கட்டாயமாக்க வேண்டும். அப்போதுதான் C2H டிவிடி விற்பனையில் ஈடுபடுபவர்களும் துரிதமாக செயல்படுவார்கள்.

படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் தனித்தனி தொகுப்பாக்க வேண்டும்
பாடல்காட்சிகள், நகைச்சுவை காட்சிகள், சண்டைக் காட்சிகள் என தனித்தனியாக தொகுப்பாக்கி தொலைக்காட்சி, IPTV மற்றும் வெப் டிவிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

இணைய தளங்களிலும் ரிலீஸ் செய்ய வேண்டும்.
C2H ஆன்லைன் சேனல் துவக்கப்பட்டு, சந்தா கட்டுபவர்களுக்கு மட்டும் படங்களை ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும் பரவலாக்க IPTV மற்றும் மற்ற வெப் டிவிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

ஷாப்பிங் மால்கள் மற்றும் தியேட்டர்களில் C2H Kiosk (Coffee/Coke + C2H)
C2H Card (அ) Coin (அ) கிரெடிட்/டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பாடல்காட்சிகள், நகைச்சுவை காட்சிகள், சண்டைக் காட்சிகள் என தனித்தனி மெனுக்களை உண்டாக்கி அவற்றை மொபைல்களில் டவுன்லோடு செய்து கொள்ள வழிசெய்யலாம். அல்லது அங்கேயே உள்ள திரைகளில் ஒளிபரப்பாக வழி செய்யலாம்.

மொபைல் இன்டர்நெட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
ஆன் டிமான்ட் முறையில் முழுபடம்/தனித்தனி காட்சி என இன்டர்நெட் (அ) மொபைலில் டவுன்லோடு செய்ய வழிசெய்யலாம்.

C2H திரைத்துறையின் மூத்த கலைஞர்களையும் அரவணைக்க வேண்டும்
மூத்த கலைஞர்களையும் ஆதரித்து அவர்களைப் பற்றிய முறையான ஆடியோ, வீடியோ பதிவுகளை தயார் செய்து ஒரு லைப்ரரி உண்டாக்க வேண்டும். அவற்றை ரேடியோ, டிவிக்களில் ஒளிபரப்ப வேண்டும். தமிழ் சினிமா வரலாற்றை டிஜிட்டலாக எந்த பாகுபாடும் இன்றி திரைத்துறையினர், பத்திரிகைத்துறையினர், விமர்சகர்கள், தொலைக்காட்சிகள் மற்றும் அரசின் ஒத்துழைப்போடு பதிவு செய்வது கட்டாயம்.

அடுத்த தலை முறையினருக்கு வழி காட்ட வேண்டும்
இளைய இரசிகர்கள், விஷிவல் கம்யூனிகேஷன் போன்று முறையாக படித்து வரும் மாணவர்கள் என அனைவருக்கும் அவ்வப்போது Movie appreciation போன்ற வொர்க்ஷாப்களை நடத்தி தரமான படைப்புகளை இனம் கண்டு இரசித்து ஆதரவளிக்க கற்றுத்தர வேண்டும். அவர்களுடைய படைப்புகளையும் C2H வழியாக வெளியிட வேண்டும்.

மற்ற கலை வடிவங்களுடன் ஒருங்கிணைய வேண்டும்
மக்கள் ஆதரவு குறைந்துவிட்டாலும் நாடகம், நடனம் என எவ்வளவோ அபாரமான முயற்சிகள் நடந்துகொண்டே உள்ளன. C2H டிவிடிக்களுடன் அவற்றின் டிக்கெட்டுகளையும் சேர்த்தே விற்பனைக்கு கொண்டுவரும் விற்பனை முறையை அறிமுகப்படுத்த வேண்டும். அவற்றையும் C2H டிவிடி மற்றும் இன்டர்நெட் சேனல்களில் கொண்டு வரவேண்டும்.

C2H ஆடியோ/வீடியோ ஸ்டுடியோக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் நிறுவப்பட்டு இயங்கவேண்டும்.
இவற்றின் வழியாக திரைத்துறையினர் மட்டுமல்லாமல் மாணவர்களும் பயன்பெற வழி செய்ய வேண்டும்.

போட்டியை வரவேற்று எதிர்கொள்ள வேண்டும்
C2H சரியாக வராது என்பார் சிலர். அருமையாக வரும் என்பார் சிலர். இதைவிட நன்றாக ஒன்றை கொண்டு வருகிறேன் என்று களத்தில் இறங்குவார் சிலர். இந்நேரம் பல தந்திரமான பிசினஸ் மூளைகள் விழித்துக் கொண்டிருக்கும். நிச்சயமாக போட்டி அமைப்பு ஒன்று வரும். அப்போது வெறுக்காமல், அசராமல், அஞ்சாமல் மேன்மேலும் தன்னை புதுப்பித்துக்கொண்டு தொடர்ந்து இயங்க வேண்டும்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மக்களை வசீகரித்துக் கொண்டிருக்கும் சினிமா என்ற கலை நவீன வடிவங்களுடன் மேன்மேலும் வாழும், வளரும்! C2H போன்று யார் முயற்சித்தாலும் ஒரு சினிமா ரசிகனாக நிச்சயம் வரவேற்பேன். உங்களிடம் நேரடியாகவே சில புன்னகைகளையும், எண்ணங்களையும் பகிர்ந்திருக்கிறேன் என்பதால் கூடுதல் அன்புடன் வரவேற்கிறேன். சியர்ஸ்!

Monday, July 28, 2014

சதுரங்க வேட்டை - க்ரைம் டெமோ

எப்படி ஏமாந்தேன்னு தெரியல என புலம்புபவர்களுக்கும், எப்படி ஏமாற்றலாம் என யோசிப்பவர்களுக்கும் ஒரு படம்.

கதை, திரைக்கதை என எதுவுமே புதிதல்ல. ஒரு திருடன் ஒரு காதலியால் மனம் திருந்துவதும், திருந்தியபின் மீண்டும் திருட நேர்வதும் மிகப் பழைய ஸ்க்ரிப்ட். ஆனால் அவன் எப்படித் திருடுகிறான், எதைத் திருடுகிறான் என்பதை விவரிக்கும் காட்சிகள் புதுசு.

நூதன திருடர்களை கைது செய்ததும், சம்பவ இடத்தில் வைத்து எப்படி இதை திருடினாய் செய்து காட்டு என போலீஸ் ஒரு டெமோ செஷன் வைக்கும். இந்தப் படம் முழுக்க அப்படிப்பட்ட டெமோக்கள் நிறைந்திருக்கிறது. இந்த செஷன்களுக்கு இடையில் திருடன், கோஷ்டி, எதிர்கோஷ்டி, காதலி, திருந்துதல், திருந்தியபின் சூது கவ்வுதல், அதிலிருந்து மீளுதல் என சில காட்சிகளை சொருகிவிட்டார்கள்.

வீரியம் தரும் மண்ணுள்ளிப் பாம்பு, கோடீஸ்வரனாக்கும் ஈமு கோழி, ஆள் சேர்த்தாலே பணக்காரனாக்கும் எம்.எல்.எம், ஆடித்தள்ளுபடியில் பாதி விலைத் தங்கம், நாட்டுக்கே ராஜாவாக்கும் ரைஸ் புல்லிங். இவை எல்லாம் தொடர்ச்சியாக மக்களை ஏமாளியாக்கிக்கொண்டிருக்கும் கவர்ச்சிகரமான க்ரைம்கள். ஏமாற்று எனத் தெரிந்தும் காலம் காலமாக மக்களை கவருகின்ற பணத்தாசை போதை இவை.

ரஜினி உச்சம் தொட்டபோது ஒரு ”Angry youngman" வெளிப்பட்டான். சாதாரண மக்கள் தட்டிக்கேட்க முடியாத அடாவடி அடக்குமுறைகளை ஒரு சாதாரண இளைஞன் தட்டிக்கேட்டான், ஜெயித்தான் என்பது ஃபார்முலாவாக இருந்தது. இப்போதைய டிரண்ட் அப்படியே வுல்டா. அநியாயத்தைக் கண்டு பொங்குவதில்லை. அவனே அந்த அநியாயத்தை செய்கிறான். ஹீரோவே சாமர்த்தியமான திருடனாக இருக்கிறான். நன்றாக வாழ திருடுவதும், ஏமாற்றுவதும் தவறில்லை என்கிறான். தவறு செய்ய அஞ்சும் மக்கள், தன் சார்பாக ஹீரோ திருடுவதையும், ஏமாற்றுவதையும் இரசிக்கிறார்கள். அவன் திருடி ஜெயிப்பது பிடிக்கிறது. அவனை கொண்டாடுகிறார்கள்.

கல்வி, மருத்துவம், ஆன்மிகம் என எல்லாவற்றிலும் பணம்... பணம்... பணம். பணம்தான் எல்லாம் என்ற காலகட்டத்துக்கு வந்துவிட்டோம். இந்த காலகட்டத்தில் சூது நிறைந்த தலைவர்களும், அவர்களுடைய குண்டர்களும்தான் வசதியாக இருக்கிறார்கள். அவர்கள்தான் நாட்டை ஆளுகிறார்கள் என்பதால், அவர்கள் செய்கிற தவறை நாமும் செய்தால்தான் என்ன என்ற ஏக்கமும், செய்வதற்குரிய பயமும் மக்கள் அனைவரிடமும் உள்ளது.

மக்கள் இரசிகர்களாக படம் பார்க்க வரும்போது அவர்களுடைய பயத்திற்கும், ஏக்கத்திற்கும் ஒரு வடிகாலாக இன்றைய படங்கள் இருக்கின்றன. சூதுகவ்வுமில் துவங்கி சதுரங்க வேட்டை இந்த குணக்கேட்டை புரமோட் செய்யும் படங்கள்தான்.

இடைவேளை வரை சுமார்தான்.. ஆனா ரைஸ்புல்லிங்னு ஒண்ணு இருக்காமே. அதை காமிக்கிற சீன் சூப்பரா இருக்காம் என்று மக்கள் பாப்கார்ன் க்யூக்களில் பேசிக்கொள்கிறார்கள். படத்தின் ஹீரோ ரைஸ்புல்லிங் டெமோதான். நடராஜின் ஒவ்வொரு அசைவிலும் 80களில் அவ்வப்போது தலைகாட்டிய ஆர்ப்பாட்டமில்லாத ரஜினி அமர்ந்திருக்கிறார். குரலும் தோற்றமும் ஒத்துழைக்கிறது. நாயகி இஷாரா பொருத்தமான தேர்வு. கலகலப்பு படத்திற்குப் பின் இளவரசு இதில் கச்சிதமான காமெடி. ரைஸ்புல்லிங் ஏமாற்றை படமாக்கியதில் மட்டும் இயக்குநர் விநோத் குறிப்பிடும்படியாக செய்திருக்கிறார்.

படத்தை தொய்வில்லாமல் உணரவைப்பது திரைக்கதை அல்ல. வசனமும், ஒவ்வொரு க்ரைமுக்கும் முன் வரும் டைட்டில்கார்டும்தான்.

ஃபேஸ்புக், கூகுள் பள்ஸ் மற்றும் டிவிட்டரில் வசிக்கும் சென்னைவாசிகளுக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது. நானும் அங்கே வசிப்பவன்தான் என்றாலும் என்னால் இதை நல்ல படம் என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை. இது நல்ல படம் என்று சொல்லப்படுகிற ஹிட் படம் அவ்வளவுதான்.

படத்தில் காண்பிக்கப்படாத க்ரைம் ஒன்று இருக்கிறது.  ரைஸ்புல்லிங்கை விட மோசமான க்ரைம் அது. அதன் பெயர் ரெவ்யூ ஸ்கோரிங். ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் இந்த க்ரைமில் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.  தங்களுக்கு வேண்டியவர்களின் படமாக இருந்தால் இஷ்டத்துக்கு மார்க்குகளை அள்ளி வீசி, சம்பந்தப்பட்டவர்களின் பேட்டிகளால் பக்கத்தை நிரப்பி ஏதோ காவியம் ஒன்று ரிலீஸ் ஆகிவிட்டது போல இரசிகர்களை நம்ப வைக்கிறார்கள்.

அடுத்த க்ரைம் படத்தில் இந்த போலி விமர்சகர்களை யாராவது அம்பலமாக்கினால் வரவேற்பேன்.