Thursday, November 11, 2010

ராஜாவை கை கழுவினால், காங்கிரசுக்கு ஆதரவு - ஜெவின் ஓப்பன் பல்டி!

ராஜாக்களும், ராணிக்களும் முழுவீச்சில் களமிறங்க ஆரம்பித்துவிட்டார்கள். இனி இந்திய அரசியலில் எல்லா கூத்துகளும் நடக்கும். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடிபடும் தொகையைக் கேட்டால் தலையை சுற்றுகிறது. அதை விட தலை சுற்றல் ஜெயலலிதாவின் காங்கிரஸ் ஆதரவு பேட்டி

நேற்று இரவு வரை காங்கிரசை திட்டிக் கொண்டிருந்தார் ஜெ. அதை நம்பி அதிமுக எம்பி மைத்ரேயனும் காலையில் ஆங்கில டிவிக்களில் காங்கிரசை வசைபாடிக் கொண்டிருந்தார். திடுமென மதியம் ஜெ TIMES NOW சேனலில் தரிசனம் தந்தார்.  என்னிடம் 18 எம்பிக்கள் இருக்கிறார்கள். எனவே ராஜாவை கை கழுவினால் தி.மு.க ஆதரவை விலக்கி விடும் என்று காங்கிரஸ் அஞ்ச வேண்டாம். நான் காங்கிரசின் ஆட்சி கவிழாமல் இருக்க நாடு முழுக்க பல கட்சிகளிடம் பேசி மெஜாரிட்டிக்குத் தேவையான 18 எம்.பிக்களை திரட்டி ஆதரவு தருகிறேன் என்று பரபரப்பான பல்டி அடித்தார்.


இந்த டிவி பேட்டியே ஒரு TIMES NOW சேனலின் டிராமா போல இருந்தது. அதாவது ஜெ தனது பதில்களை எழுதி வைத்து வாசித்தார். இடையிடைய திறமையாக நடித்து தனது கேள்விகளை எடிட்டிங்கில் ஒட்டிக் கொண்டார், பேட்டி கண்ட அர்னாப். இது எனது கணிப்பு.

மீண்டும் அந்த பேட்டி ஒளிபரப்பானால் கவனித்துப் பாருங்கள். ஜெயலலிதா நேர்பார்வை பார்க்காமல் அடிக்கடி காமிராவிற்கு கீழ் இருக்கும் பிராம்ப்டரை பார்த்து படிப்பது தெரியும். ஆக திமுகவிற்கு எதிராக, ஜெயலலிதாவிற்கு ஆதரவாக ஒரு ஆங்கில சேனல் களம் இறங்கிவிட்டது. பேட்டி என்ற பெயரில் ஒரு ஒத்திகை பார்க்கப்பட்ட பேச்சை ஒளிபரப்பியுள்ளது. எப்பவுமே ஜெவிற்கு ஆங்கில சேனல்களில் மவுசு அதிகம். அதிலும் TIMES NOW சேனல் ஜெவிற்கு ஸ்பெஷல் கவரேஜ் தரும். சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது அவரை குயின் என்று வர்ணித்து மகிழ்ந்தது.

காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று ஜெயலலிதாவிற்கு கவலையாக இருக்கிறதாம். அதனால்தான் இந்த ஆதரவாம். அட..அட... ஜெவிற்கு காங்சிரசின் மேல் ஏன் இந்த திடீர் பாசம்? வேறென்ன தமிழகத்தில் கோட்டையை பிடிக்க காங்கிரஸ் தேவை. அதற்க்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் அவர்.

இந்திய அரசியலில் இதெல்லாம் சகஜம். நாளையே ஜெவும், சோனியாவும் கைகுலுக்கி போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தாலும் எனக்கு நிச்சயமாக ஆச்சரியமாக இருக்காது.

ஈழப் பிரச்சனையில் தனக்கு எதிராக கருத்துகள் உருவானாலும், விடாப் பிடியாக கருணாநிதி ஏன் காங்கிரஸ் திண்ணையை விட்டு இறங்காமல் இருந்தார் என்று இப்போது புரிகிறதா? ஜெவும் அதே திண்ணைக்குதான்  தொடர்ந்து குறிவைத்துக் கொண்டிருக்கிறார். வலியப் போய் ஒரு டிவி பேட்டி வழியாக காங்கிரசுக்கு ஆதரவு தருகிறேன் என்று ஜெ சொல்லியிருப்பதுதான் உண்மையான தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் முகம். ஈழப் பிரச்சனையில் ஜெ, கருணாநிதி, வை.கோ உட்பட எவருக்கும் உண்மையில் அக்கறை கிடையாது. தமிழகத்தில் ஆட்சியில் பிடிப்பதுதான் அவர்களுடைய உண்மையான இலட்சியம்.

இப்போதாவது ஈழ சகோதர சகோதரிகள் இந்த உண்மையை புரிந்து கொண்டு, தமிழக அரசியல்வாதிகளை நம்பாதிருக்க பழக வேண்டும்!

Saturday, October 9, 2010

வோறொரு டிவியில் நியுஸ் பார்த்து, தங்கள் டிவியில் நியுஸ் வாசிக்கும் சேனல்கள்!

மீடியாக்களின் நெகடிவ் பிரசாரங்களை தவிடு பொடியாக்கிய இந்திய விளையாட்டு வீரர்கள்.
காமன் வெல்த் போட்டிகளில், நேற்று(அக்டோபர் 8) நம்ம சாய்னா, மலேசியாவின் வோங் மியு சூவை எதிர்த்து 24-26, 21-17 21-14 என்ற கணக்கில் செம த்ரில்லிங் மாட்ச் ஒன்றை ஜெயித்தார். இந்தியாவில் இறகுப் பந்து போட்டியை பிரபலப் படுத்திய பிரகாஷ் படுகோன், அவருடைய மகளும் சினிமா நடிகையுமான தீபிகா படுகோன் உட்பட பிரபலங்கள் காலரியில் உட்கார்ந்திருக்க, இரசிகர்கள் உற்சாகமாகிவிட்டார்கள்.சாய்னா! சாய்னா! என்று அவர்கள் கோரஸாக கிரிக்கெட் வீரர் அல்லாத ஒருவருக்காக குரல் கொடுத்தது, பார்க்கவே பரவசமாக இருந்தது.

அடுத்துதான் நம்ம சூரப்புலி மீடியாக்களின் காமெடி ஆரம்பித்தது. NDTV HINDU மற்றும் SUN NEWS சானல்கள் சாய்னா தங்கம் வென்றுவிட்டதாகவும், இந்தியா மொத்தம் 21 தங்கம் வென்றுவிட்டதாகவும்  ஃப்ளாஸ் நியுஸ் போட ஆரம்பித்துவிட்டன. சாய்னா அடுத்த சுற்றுக்குதான் தகுதி பெற்றுள்ளார் என்பதை அவர்கள் உணர ஒரு மணி நேரம் பிடித்தது.

எதையும் சரிபார்க்காமல், மற்றொரு டிவியை பார்த்தே, தங்கள் டிவியில் நியுஸ் வாசிக்கும் இவர்கள்தான் காமன்வெல்த் போட்டியை குறை சொல்லி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். காமன்வெல்த் போட்டியில் குறைகள் நிச்சயம் உண்டு. ஆனால் அவற்றை மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் மீடியாக்களின் இலட்சணம் இதுதான்.

அவர்களை விட்டுத் தள்ளுங்கள். எத்தனையோ இடர்பாடுகள் இருந்தாலும், குறைகள் இருந்தாலும் உற்சாகம் குறையாமல், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வெற்றி வாகை சூடும் இளைஞர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். காமன்வெல்த் போட்டிகளில் எங்கே சாக்கடை ஒழுகுகிறது என்பதை தேடிக் கொண்டிருக்கும் காமெடி மீடியாக்களை ஒதுக்கிவிட்டு, வியர்வை சிந்தி பதக்கங்களை வெல்லும் இளைஞர்களை கொண்டாடுவோம்.

Thursday, September 9, 2010

லிமெரிக் - அப்பூடின்னா?

தளை, சீர்,
தேமா, புளிமா,
கருவிளம், கூவிளம்
வெண்பா, கலிப்பா
வேண்டாம்பா, விட்ருப்பா
என இலக்கணம் புரியாமல் பல கவிதைகளை, காவியங்களை நாம் வாசிக்காமலேயே விட்டிருக்கிறோம். காரணம் எப்போதும் கையில் பிரம்புடன் மிரட்டிய வாத்தியார்கள். மார்க்குக்கு பயந்து டப்பா அடித்தே எழுதியதில் கடைசி வரை இலக்கணம் புரியாமலேயே போய்விட்டது.

ஆனால் சுஜாதாவின் புண்ணியத்தில் சில இலக்கண சுவாரசியங்கள் மனதிலேயே தங்கிவிட்டன. இவரை மாதிரியே நம்முடைய தமிழ் வாத்தியார்கள் எல்லோரும் இருந்துவிட்டால் என்ற என்ற ஏக்கம் அப்போதும், இப்போதும், எப்போதும் இருக்கிறது.

லிமரிக் என்ற கவிதை வடிவத்தை சுஜாதாதான் எனக்கு அறிமுகப்படுத்தினார். 
 லிமரிக்கின் வடிவம் மிக எளிமையானது.
  • மொத்தம் 5 வரிகள். 
  • 1,2 மற்றும் 5வது வரிகள் ஒரு Rhyme(இயைபுத் தொடை)ல் இருக்க வேண்டும்.
  • 3, 4வது வரிகள் வேறொரு Rhymeல் இருக்க வேண்டும்.
இதைத் தவிர இன்னும் விளக்கங்கள் உள்ளன. மேலும் அறிய விரும்புவர்கள் இங்கே கிளிக்கலாம்.

முதலில் ஆங்கிலத்தில் ஒரு சாம்பிள் பார்ப்போம்.
There was a young lady named Bright
Who travelled much faster than light,
She started one day
In the relative way
And returned on the previous night

அடுத்து தமிழில் ஒரு உதாரணம்
கையில் வில்லில்லாக் காண்டீபன்
கடையில் வாங்கித்தின்றான் கண்ட டிபன்
ராத்திரியில் அடிக்கடி கண்விழிச்சான்
பாத்ரூமில் பாதி இரவு கழிச்சான்
இன்னும் கொஞ்ச நாளைக்கு வெறும் "டீ, பன்"


இந்த உதாரணங்கள் எல்லாம் நெட்டில் சுட்டவையே. இவை முழுமையான லிமரிக்குகளா என்பதிலும் எனக்கு சந்தேகம் உண்டு.

சுஜாதா எழுதச் சொன்னார் ஒரு லிமரிக்கு
சுவையா நான் எழுதி வந்தேன் ஒரு குமரிக்கு
அவ வாயெல்லாம் இங்கிலீசு பேச்சு
அவ முகமெல்லாம் பவுடரு பூச்சு
சும்மா யாருன்னு பார்த்தா அட! நம்ம - ருக்கு !

அடுத்து வரும் லிமெரிக்குகளில் சுவாரசியம் கருதி சில புள்ளி இட்ட இடங்களைத் தருகிறேன். நீங்களே வார்த்தைகளை பூர்த்தி செய்து கொண்டு இரசியுங்கள்.

There once was a pauper named Meg
Who accidentally broke her _______.
She slipped on the ______.
Not once, but thrice
Take no pity on her, I __________.

அதே போல தமிழில் ஒன்று முயற்சி செய்யுங்கள்
ஹார்பர்ல வந்திருக்கு இரும்பு லோடு
பார்பரா வூட்டுல இருக்கான் அந்த பாடு
சைரன் தந்தாச்சு
லாரிங்களும் - - - - -
அவ மடியில கெடக்கான், கூட்டிவா - - !

இப்போ நீங்களே ஒரு லிமெரிக் எழுதுங்க பார்க்கலாம்.

Monday, August 30, 2010

டாய் கடவுளே ...

தர்மபுரியில் பஸ் எரிக்கப்பட்டு 3 மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில், 3 அ.தி.மு.கவினருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இந்த வழக்கில் சாட்சியங்கள் எல்லாம் பின் வாங்கினார்கள். பார்க்கவே இல்லை என்றார்கள். ஃபைல்கள் காணாமல் போயின. மறைமுகமாக மிரட்டினார்கள். வாய்தா..வாய்தா..வாய்தா என்று இழுத்தடித்தார்கள். இரக்கமின்றி செயல்பட்ட அ.தி.மு.வினருக்கு சாதகமாக வழக்கு திருத்தப்பட்டது.

ஆனால் எல்லோரும் கைவிட்டாலும், பின் வாங்கினாலும், அரசியலும், அரசாங்கமும், நியாயங்களும், தர்மங்களும் எதிராக இருந்தாலும், வீராசாமி என்ற ஒரு தனி நபர் மட்டும் தொடர்ந்து போராடினார்.

அவர், அஞ்சவில்லை, அயரவில்லை, சலிக்கவில்லை, விட்டுக் கொடுக்கவில்லை. இந்த சம்பவத்தால் மனைவி மனநிலை பாதிக்கபட்டாலும், கண்ணீருக்கிடையில் கள்ளத்தனங்களை வென்றார்.

அவர்...
அந்த பஸ்ஸில் எரிந்து போன மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி! அவருக்கு என் வணக்கங்கள்!

காலம் கடந்தாலும், சட்டம் வென்றது, நியாயம் வென்றது, தர்மம் வென்றது என்று இந்த சமூகம் மார் தட்டிக் கொண்டாலும், அநியாயமாக பறிபோன உயிர்களுக்கும், அதை நினைத்தே அழுது கொண்டிருக்கும் உயிர்களுக்கும், யார் என்ன ஆறுதல் சொல்ல முடியும்.

டாய் கடவுளே ... எனக்கு உன்னை பிடிக்கவில்லை!

Saturday, June 19, 2010

001 : வலைபாயுதே - 4G வந்தாச்சு!

3Gயே புதுசு. இப்போது புத்தம் புதுசாக 4Gஎலக்ட்ரானிக் உலகில் லேட்டஸ்ட் என்று எதுவுமே கிடையாது. சந்தைக்கு வந்த அடுத்த நாளே அதை மிஞ்சிய புதுசு மறுநாள் வந்துவிடுகிறது. 3G போன்களுக்கும் இதே கதிதான். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே பேசலாம், டிவி பார்க்கலாம் என பல நவீன கவர்ச்சிகளுடன் 3G இப்போதுதான் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. அதற்குள் 4G என்கிற நவீன நுட்பத்தை HTC EVO என்கிற நிறுவனம் ஜீன் மாதமே சந்தையில் இறக்குகிறது. 3Gயை விட பத்துமடங்கு வேகம் அதுவும் குறைந்த சந்தாவிற்கு (மாதம் 1500ல் இருந்து 2000ம் வரை) என்று தகவல் வெளியாகியுள்ளது. வாசித்த அடுத்த வினாடியே உங்களிடம் பகிர்ந்து கொண்டுவிட்டேன். 4G பற்றி மேலும் தகவல் அறிய இங்கே சொடுக்குங்கள்.

தட்டச்சு செய்ததை ஆண்/பெண் குரலில் பேசவைக்கும் இணையதளம்PDF கோப்புகளிலேயே இந்த வசதி உள்ளது என்றாலும், ஆன்லைனில் இந்த வசதி கிடைப்பது கூடுதல் சிறப்பு
.
www.vozme.com

இந்த தளத்திற்குச் சென்று நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யலாம்.
செய்த பின் ஆண்/பெண் குரல் தேர்வும் செய்யலாம்.
பிறகு அதையே MP3 ஆடியோவாக கேட்கலாம்.
நமது கணிப்பொறிக்கு டவுன்லோடும் செய்து கொள்ளலாம்.


விண்டோவை போட்டோ எடுப்பது (Screenshot) எப்படி?பிரவுசிங் செய்யும்போதும் டுடோரியல்களை உருவாக்கும்போதும், சில விண்டோக்களை அப்படியே போட்டோ போல சேமிக்க வேண்டியதிருக்கும். அதை எப்படிச் செய்வது?

பொதுவாக நாம் PrtScr என்ற கீயை அமுக்குவோம்.
பிறகு Paint மென்பொருளில் அதை பேஸட் செய்து தேவையற்ற பகுதிகளை குறிப்பாக ஓரங்களை செதுக்குவோம். இந்த செதுக்குகிற வேலை மகா போர். அதை தவிர்க்க சுலப வழி இருக்கிறது.
  • எந்த விண்டோவை Screen Shot எடுக்க வேண்டுமோ அதை திறந்து கொள்ளுங்கள்.
  • ALT + PrtScrn கீயை ஒன்றாக அழுத்துங்கள்.
  • Paint brush அல்லது Photoshop மென்பொருளை திறங்கள்
  • Ctrl+V - பேஸ்ட் செய்யுங்கள்.
வேலை முடிந்தது. மிகக் கச்சிதமாக, நமக்குத் தேவையான விண்டோ மட்டும் பதிவாகியிருக்கும்.

Friday, June 11, 2010

நீங்கள் ஆன்லைன் பிரபலமா?

‘நண்பராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி எனக்கு எக்கச்சக்கமான  அழைப்புகள் வருகின்றன. அவற்றை ஏற்பதா? நிராகரிப்பதா? தயவு செய்து எனக்கு ஆலோசனை சொல்லுங்களேன்‘

நீங்கள் ஃபேஸ்புக், டிவிட்டர் அல்லது ஆர்குட் மெம்பரா? ஆம் என்றால் இதுபோன்ற  பெருமை கலந்த புலம்பல்களை அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.

பொதுவாக நாம் அனைவருமே நம் மேல் ஒரு ஸ்பாட் லைட் விழுவதை விரும்புபவர்கள். வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எங்கு சென்றாலும் நம்மை மற்றவர்கள் கவனிப்பதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டாவது விரும்புவோம். ஆனால் பிரபலங்களுக்கு கிடைக்கின்ற அந்த கவன ஈர்ப்பு, சாமானியர்களான நமக்கு கிடைப்பதில்லை.

ஆனால் ஆன்லைன் தளங்களில் மெம்பரான சில நாட்களிலேயே அடடா... நாமே ஒரு வி.ஐ.பிதான் என்ற எண்ணம் எழுகிறது. சதா யாராவது வந்து ஹலோ சொல்கிறார்கள். ஆண்களும், பெண்களும் சர்வசாதாரணமாக நண்பராகிறார்கள். குட்மார்னிங் சொன்னால் கூட, என்மேல் உனக்கு இவ்வளவு பாசமா என்று உருகுகிறார்கள். நாமே நிராகரித்த நமது கவிதைகளை  விழுந்து விழுந்து இரகிக்கிறார்கள். அடடா... நீ இவ்வளவு அழகா என்று கசங்கிய உடையில் எடுத்த போட்டோவை புகழ்கிறார்கள். காலையில் எல்.கே.ஜி படிக்கும் சுட்டியிடம் எரிந்து விழுந்தது தெரியாமல், சே... உன்னைப் போல அன்பான மனிதனை இது வரை சந்தித்ததே இல்லை என்று ஆரத் தழுவுகிறார்கள்.

இது சிலரை ஒரு மாயையில் தள்ளிவிடுகிறதாக நான் நினைக்கிறேன். நம்மை யாராவது கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் ஒரு பிரபலம். நமது ஹலோவுக்காக ஒரு நண்பர்கள் கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது என்ற பெருமை கலந்த பிரமை ஏற்பட்டுவிடுகிறது. அதன் பிரதிபலிப்புதான் அந்த வாசகம்.


‘நண்பராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி எனக்கு எக்கச்சக்கமான  அழைப்புகள் வருகின்றன. அவற்றை ஏற்பதா? நிராகரிப்பதா? தயவு செய்து எனக்கு ஆலோசனை சொல்லுங்களேன்‘

உற்றுக் கவனித்தால் எக்கச்சக்கமான அழைப்புகள் என்பதில் ஒரு தற்பெருமையும், நான் பிரபலம் என்கிற எண்ணமும் ஒளிந்திருப்பதை கவனிக்கலாம். அழைப்புகளை ஏற்பதா? நிராகரிப்பதா? என்பதில் இந்த ஆன்லைன் பிரபல்யம் நிரந்தரம் என்ற நம்பிக்கை இருப்பதையும் கவனிக்கலாம்.

தற்போது நான் ஆர்குட்டில் அமைதியாகி, டிவிட்டரில் அவ்வப்போது எட்டிப்பார்த்து, ஃபேஸ்புக்கில் அதிகமாக உலவிக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய அனுபவத்தில் சொல்வதாக இருந்தால் ஆன்லைன் பிரபலம் என்பதும், நம்மை அனைவரும் கவனிக்கிறார்கள் என்பதும் வெறும் பிரமை. ஒரு மாதம் ஆன்லைன் பக்கம் போகாமல் இருந்து பாருங்கள். ஒரு வாரத்திற்கு எங்கே காணோம் என்று வருகிற மெசேஜ்கள் குறைந்து, இனிமே அவன் வரமாட்டான்யா என்று இரண்டாவது வாரத்தில் மறைந்து போவதை கவனிக்கலாம்.

நான் சொல்ல வருவதின் சுருக்கம் இதுதான். ஆன்லைன் நட்பு பலப்பட வேண்டுமென்றால் நிஜத்திலும் சந்தித்து பழகுங்கள். ஆன்லைனிலேயே தொடரும் நட்புகள் ஒரு log offல் முடிந்து போய்விடும். இன்றைய ஸ்பெஷல் என்று ஹோட்டல் வாசல்களில் எழுதி வைப்பார்கள். அதைப் போல தற்காலிகமானதுதான் ஆன்லைன் அழைப்புகளும். அவற்றை ஏற்பதாலும், நிராகரிப்பதாலும் எண்ணிக்கை மாற்றம் ஏற்படுமே தவிர, எண்ணங்களோ, வாழ்க்கையோ மாறப் போவதில்லை.

Monday, May 31, 2010

10-10-10

நான் இந்தப் புத்தகத்தை வாசித்தேன். நான் தன்னம்பிக்கை பெற்று, கோடீஸ்வரனாக மாறியது அதிலிருந்துதான். இப்படி பலர் சொல்வதையும், எழுதியிருப்பதையும் நான் படித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் சொன்ன புத்தகத்தைப் படித்தால் தூக்கம் சொக்கும். அடுத்த வரிக்குப் போகமுடியாமல் ஜவ்வாக ஒரே வரியிலேயே பிசுபிசுக்கும். இதற்கு சுறா படத்தை ரெண்டுவாட்டி பார்க்கலாம் என்று கூட தோன்றும்.

ஏன் இப்படி? சிலரை கண்டவுடன் பிடிக்கும். காதல் கூட வரும். ஆனால் உங்கள் கண்களுக்கு ஆர்யா, மாதவன், அஸின், அனுஷ்கா போல வசீகரித்தவர்கள் என் கண்களுக்கு எடைகுறைப்பு விளம்பரத்தில் வரும் அட்டுகளைப் போலத் தோன்றும்.  அதைப் போலத்தான், சில வரிகளும், வார்த்தைகளும் கண்டதும் ஈர்க்கும். மனதில் தைக்கும். உங்களுக்கு சுண்டல் மடிக்கிற பேப்பராகத் தோன்றும், ஆனால் எனக்கு கீதை போல அட்வைஸ் பண்ணும்.

சிங்கம் படத்தில் வரும் அனுஷ்காவைப் போல சிக்கென்று இந்த வாரம் என் மனதில் ஒட்டியதுதான் 10-10-10. எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோன்னு அன்னைக்கு பாட்ஷா சொன்னார். பத்து பத்தா உன் செயல்களைப் பிரிச்சுக்கோன்னு குமுதம் சொல்லுது. ஆமாம் குமுதத்துல தான் இதை நான் படிச்சேன். ஐயைய்யோ... கதவைத் திறந்து சாமியார் மேட்டர்களை வளர்த்த பத்திரிகையிலிருந்தா என்று ஓட வேண்டாம். இது கொஞ்சம் உருப்படியான மேட்டர்தான்.

எதையும் பிளான் பண்ணாம செய்யக் கூடாது என்ற வடிவேலுவின் பஞ்ச் டயலாக்கை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
எதைச் செஞ்சாலும் அதை 3 பத்தா பிரிச்சுக்கணுமாம்.
முதல் 10 - அடுத்த பத்து நிமிஷத்தைப் பற்றியது.
2வது 10 - அடுத்த 10 மாதங்களைப் பற்றியது.
3வது 10 - அடுத்த 10 வருடங்களைப் பற்றியது.

இப்போ உதாரணத்துக்கு வருகிறேன்.
முதல் 10
அடுத்த 10 நிமிடங்களுக்கு கனவு நாயகன்/நாயகியை முத்தமிட வாய்ப்பு கிடைத்தால்....? என்ஜாய்!!!.
2வது 10
10 நிமிட முத்தத்ததால் பத்து மாத பந்தம் ஏதாவது உருவாகிவிட்டால் சமாளிக்க திறன் இருக்கிறதா? கையளவு சம்பாத்யம், குழந்தையை சமாளிக்கும் திறன், மாமியார், மச்சினன் பிரச்சனை உட்பட எல்லாவற்றையும் யோசியுங்கள்.
3வது 10
பத்து மாத பந்தம் ஓகே. அடுத்த 10 வருடங்களுக்கும் இதே மூஞ்சியைத்தான் பார்க்க வேண்டும். ஒரு நாள் சத்யம், அடுத்த நாள் ஐநாக்ஸ் என்று தியேட்டர் மாற்றியது போல, இந்த உறவை மாற்ற முடியாது. எத்தனை அலுப்பாக இருந்தாலும் தொடர வேண்டும். இதற்கு தயாரா? தயார் இல்லை என்றால் முதல் பத்து நிமிட முத்தத்துக்கு முன்பே விலகி விடுங்கள்.

இப்போது, எதையுமே பிளான் பண்ணாம செய்யக் கூடாது என்ற சாதாரண வடிவேலுவின் சோதா தத்துவம் பளிச்சென்று அட்டகாசமாகத் தோன்றுகிறதா? அப்படியென்றால் எனக்குப் பிடித்த 10-10-10 என்ற தத்துவம் உங்களுக்கும் பிடித்துவிட்டது என்று பொருள். பிடிக்கவில்லையென்றால் காத்திருங்கள், தமன்னாவைப் பிடிக்காதவர்களுக்கு அனுஷ்கா வந்தது போல, 10-10-10 பிடிக்காதவர்களுக்கு ஒரு 20-20 வரும். அதுவரைக்கும் அட்டகாசமா அடிச்சு ஆடு மாமே...!

சைட் அடித்த நேரம் போக, டைம் கிடைச்சா இந்த வெப்சைட்டையும் கண்டுக்கோ நைனா. குமுதம் சுட்டுப் போட்ட மேட்டர் இங்கதான் ஒரிஜினலா இருக்குது. http://www.suzywelch101010.com/

Saturday, May 29, 2010

______________ இன்றி வானத்தில் ஏது நிறம்? கோடிட்ட இடத்தில் எந்த வார்த்தை பொருந்தும்?

தாய்மையின் நிறம் என்ன?
பசுமை நிறம்.
கருணையின் நிறம் என்ன?
வெண்மை நிறம்.
கோபத்தின் நிறம் என்ன?
செம்மை நிறம்.
காணும் நிறமெல்லாம் ஒன்றானால் என்ன நிறம்?
வானவில்!!!

இப்படித் துவங்கும் ஒரு பாடலை ‘அவர்‘ திரைப்படத்தில் நான் எழுதியிருக்கின்றேன். தொடர்ந்து வரும் வரிகளையும் கவனியுங்கள். அந்த வரிகளின் முதல் வார்த்தையை உங்களால் யூகிக்க முடியுமா?

______________ இன்றி அலைகளிலே ஏது நிறம்?
______________ இன்றி தீபத்தில் ஏது நிறம்?
______________ இன்றி வானத்தில் ஏது நிறம்?
காணும் குணமெல்லாம் ஒன்றானால் என்ன நிறம்?
வானவில்!!!


கோடிட்ட இடங்களை ஒரே ஒரு வார்த்தையால் மட்டும் நிரப்புங்கள். உங்கள் கற்பனைகளும், சிந்தனைகளும் எந்த அளவிற்கு என்னுடன் ஒத்துப் போகிறது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றேன்.

Friday, May 14, 2010

+2 ரிசல்ட் - பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இன்று(May 14) ஆவலும் பதட்டமும் நிறைந்த நாள். இன்று பிளஸ் டூ ரிசலட். நேற்றைய இரவிலிருந்தே தூக்கத்தை தொலைத்திருக்கும் பல பெற்றோர்கள் இதை வாசிக்கக் கூடும். உங்களுக்கு சில வார்த்தைகள்.

  • இன்றைய நாள் வழக்கம் போல காலை காபியுடன் துவங்கட்டும்.
  • ரிசல்ட், ரிசல்ட் என்று பிள்ளையாரையும், பிள்ளைகளையும் டென்ஷன் ஆக்கவேண்டாம்.
  • 10 நிமிடம் கழித்து பொறுமையாகப் பார்த்தாலும் அதே ரிசல்ட்தான். எல்லோருக்கும் போனைப் போட்டு, எஸ். எம். அனுப்பி, பிரவுசிங் சென்டர் வாசல்களில் வியர்ப்பது தேவையற்ற மன அழுத்தம் தரும்.
  • இந்த வருடம் ”கணக்கு” பாடத்தின் கேள்விகள் அளவுக்கு அதிகமாக கடினமாக இருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே அதில் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது.
  • ரிசல்ட் எப்படி இருந்தாலும் அதுதான் உங்கள் பிள்ளைகளின் (தற்போதைய) பெஸ்ட். நீங்கள் கோபிப்பதால் மார்க் ஷீட்டுகளில் மதிப்பெண்கள் உயராது. எனவே ஸ்வீட் எடுங்கள், கொண்டாடுங்கள்.
  • எல்லா பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு பிள்ளைகளும் நமது பிள்ளைகளை விட அதிக மார்க் வாங்கிவிட்டது போல ஒரு பிரமை தரும் நாள் இது. அதற்கு இடம் தர வேண்டாம்.
இன்றைய பரிட்சை முடிவுகள், இன்றைய பரிட்சையின் முடிவுகள் தானே தவிர, நாளைய வாழ்க்கைக்கான தீர்ப்புகள் அல்ல. இதை நீங்களும் உணருங்கள். உங்கள் அன்புச் செல்லங்களுக்கும் சொல்லுங்கள்.

பின் குறிப்பு - 
ரிசல்ட் எதிர் மறையாக இருந்தால் பிள்ளைகளுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். அம்மாதிரி சமயங்களில் அவர்களை கடிந்து கொள்ளவே கூடாது. உங்கள் பிள்ளைகளின் மேல் அக்கறையும், அன்பும் அதிகரிக்க வேண்டிய நேரமிது. உதவிக்கு சிநேகா - 24640050 போன்ற தொண்டு நிறுவனங்களை அணுகுங்கள்.

Tuesday, May 4, 2010

”அவர்” - திரைப்படத் துவக்க விழாவும், டிஜிட்டல் சினிமா கருத்தரங்கும்

”அவர்” - இயக்குனராக நான் அறிமுகமாகும் முதல் திரைப்படம். ஒரு கனவு நிறைவேறப் போகிற மகிழ்ச்சி இருந்தாலும், முதல் படம் என்கின்ற பதற்றம் இல்லாமல் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். முதல் காரணம், இணையம் வழியாக நான் பெற்றிருக்கும் உங்களின் நட்பு, அன்பு மற்றும் ஆதரவு. அடுத்த காரணம், சினிமாவை ஒரு கலையாக மட்டும் பார்க்காமல், கல்வியாக நினைத்து கற்கும் குணம் என்னிடத்தில் எப்போதும் உண்டு. கடைசியாக, மிக மிக முக்கியக் காரணம், தயாரிப்பாளர் திரு. சங்கர நாராயணன். சினிமாவையும் அதன் நவீன தொழில் நுட்பங்களையும் எந்த ஈகோவும் பார்க்காமல் கற்றுத் தெளிவதில் முனைப்பாக இருப்பவர்.

சினிமாவைப் பொறுத்தவரையில் Pre-Production, Production மற்றும் Post-Production வரையில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. பத்மஸ்ரீ கமல்ஹாசன் இது பற்றிய விழிப்புணர்வை போதுமான அளவு தமிழ் சினிமாத் துறையில் ஏற்கனவே உண்டாக்கி வைத்திருக்கிறார் ஆனாலும் அதை முழுமையாக ஏற்றுக் கொள்வதில் அனுபவம் வாய்ந்த சீனியர்கள் முதல் நவீன ஜீனியர்கள் வரை தயங்குகிறார்கள்.  செல்லுலாயிடில் இருந்து டிஜிட்டலுக்கு மாறுவதில் தயக்கம் ஒரு புறம், டிஜிட்டல் பற்றிய முழுத் தெளிவும் இல்லாத குறை இன்னொரு புறம். இந்த இரு காரணங்களால் தமிழ் சினிமா முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாவதில் தாமதமாக நடந்து கொண்டிருக்கிறது.

”அவர்”, முழுக்க முழுக்க டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாகும் திரைப்படம்! திரைப்படம் தொடர்பான டிஜிட்டல் காமிராக்கள் முதல், தியேட்டர்களில் உள்ள டிஜிட்டல் புரொஜக்டர்கள் வரை, பல்வேறு வகைகளை பார்த்து சோதித்து உறுதி செய்து பல தகவல்களை திரட்டி இருக்கிறார், தயாரிப்பாளர் திரு. சங்கரநாராயணன்.

அமெரிக்கா மற்றும் சவுதி போன்ற நாடுகளில் ஐடி பொறியாளராக பணியாற்றிய திரு, சங்கரநாராயணன், அடிப்படையில் ஒரு கல்லூரிப் பேராசிரியர்,  எனவே அவருடனான ஒரு சந்திப்பு உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பேருதவியாக இருக்கும்.

பொதுவாக திரைப்படங்களின் துவக்க விழா ஏதாவது சினிமா ஸ்டுடியோக்களில் பூஜையில் துவங்கும். ஆனால் ”அவர்” திரைப்படத்தின் துவக்க விழா ஒரு செமினார் அதாவது ஒரு கருத்தரங்கில் துவங்குகிறது. ”மினிமம் பட்ஜெட்டில் டிஜிட்டல் சினிமா”, இது தான் கருத்தரங்கின் தலைப்பு. நவீன டிஜிட்டல் காமிராக்கள், அவற்றில் உள்ள குறைகள், வசதிகள் தியேட்டர்களில் உள்ள நவீன டிஜிட்டல் புரொக்ஷன் வசதிகள் மற்றும் வகைகள் பற்றி திரு. சங்கரநாரயணன் உங்களுடன் உரையாடுவார்.

டிஜிட்டல் சினிமா எடுக்க எந்த மாதிரி காமிராக்களை பயன்படுத்தலாம்? அவற்றின் வகை என்ன? அவற்றின் திறன் என்ன? அவற்றை வாங்கலாமா? வாடகைக்கு எடுக்கலாமா? வாடகைக்கான செலவு என்ன?
டிஜிட்டல் புரொஜக்டர்கள் எத்தனை வகை உள்ளன? ஒவ்வொரு வகையிலும் எத்தனை தியேட்டர்கள் உள்ள? போன்ற விபரங்களை நீங்கள் ”அவர்” படததின் தயாரிப்பாளர் திரு. சங்கர நாராயணன் அவர்களிடம் நேரடியாகக் கேட்கலாம்.

அன்புடன் வாழ்த்த வாருங்கள்!
இது வரை நாங்கள் கற்றதை, நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள்.

தலைப்பு
”டிஜிட்டல் சினிமாவின் நவீன தொழில் நுட்பம்!”

நாள்
9.5.2010

நேரம் 
காலை பத்து மணி முதல் மதியம் 1 வரை!

இடம் 
பிளாட் நம்பர் 15,
ஆறுமுகம் நைனார் தெரு,
திருநகர்,
சென்னை - 87.
வழி வடபழனி ->விருகம்பாக்கம்->ஆழ்வார் திருநகர்-> மெகா மார்ட் பின்புறம், வலது புறத்தில் மூன்றாவது தெரு-> வலப்புறம்15 வது இல்லம்.

வழங்குபவர்
திரு. சங்கர நாராயணன்.

மேலும் விபரங்களுக்கு,
email : r.selvakkumar@gmail.com

மிக மிக எளிதாக, விரைவாக, அதிக செலவின்றி இனி  நிறைய திரைப்படங்களை உருவாக்க முடியும்!  காமிராமேன்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உட்பட, எவராக இருந்தாலும் நிறைய கேள்விகளுடன் வாருங்கள். அதை விட நிறைய பதில்களுடன் செல்லுங்கள். திரையுலகின் டிஜிட்டல் புரட்சியில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

Tuesday, April 13, 2010

லெப்டுல இருந்து ரைட்.. ரைட்டுல இருந்து லெப்ட் எப்படி வேணும்னா படி!


RACECAR
LEVEL
DEED
ROTOR
CIVIC
POP
MADAM
EYE
NUN
RADAR
TOOT

இந்த ஆங்கில வார்த்தைகளில் ஒரு சுவாரசியமான விசித்திரம் உள்ளது.
இந்த வார்த்தைகளை இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம். அப்படி வாசிக்க முடிந்தால் அந்த வார்த்தைகளை பாலிண்ட்ரோம்-Palindrome என்பார்கள்.

தமிழில் இதை முயற்சி செய்து பார்க்கலாமமே என்று தோன்றியது. சில மணி நேர மூளை கசக்கல்களுக்குப் பிறகு சிக்கிய வார்த்தைகளை கீழே தந்திருக்கின்றேன்.

விகடகவி
பாப்பா
தேருவருதே
துவளுவது
தாளாதா
தந்த
கலைக
கலக
மேகமே
வாடவா
மாடமா
மாதமா
மானமா
மாயமா


இதில் விகடகவி மிகப் பிரபலமான தமிழ் பாலிண்ட்ரோம். சில கேள்வி வடிவிலேயே இருப்பதைக் கவனியுங்கள். தொடர்ச்சியாக எனக்கு அப்படிப்பட்ட வார்த்தைகள்தான் வந்தன. சிலவற்றை இங்கே தந்திருக்கின்றேன். நீங்களும் முயற்சி செய்து சில வார்த்தைகளை எழுதுங்கள்.

சந்திப் பிழையை மன்னிக்கலாம் என்றால் தாவபோவதா, கைபை என்பவையும் பாலிண்ட்ரோம்கள்தான்.

ஆங்கில பெயர்கள், அர்த்தமற்ற ஒலிகளை மறுக்க மாட்டீர்கள் என்றால் லில்லி, டால்டா, பைப்பை, கூக்கூ என்பவையும் பாலிண்ட்ரோம்தான்.

தமிழில் பாலிண்ட்ரோம் எழுதும் போது எழும் மிகப்பெரிய சிக்கல் மெய் எழுத்துக்கள்தான். அதை மீறி பாலிண்ட்ரோம் வார்த்தைகைளை தேடுவது ஜாலியான சவால்.

ஆச்சரியகரமாக சில பாலிண்ட்ரோம் வாக்கியங்களும் உருவாகின.

இரு வார்த்தை பாலிண்ட்ரோம்கள்
மாலா போலாமா?
யானை பூனையா?
காரு முருகா

மூன்று வார்த்தை பாலிண்ட்ரோம்கள்
கைதி மாயமா? திகை!
வாடவா பூ வாடவா?
துருவ மேகமே வருது
நீதிபதி பதி நீ
தாயே நீயே தா
யானை தந்தம் தந்தனையா?

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளுடன் பாலிண்ட்ரோம்கள்
மே மாதமா? கலக மாதமாமே?
தாவ போவதா, பாப்பா தாவ போவதா? ---- (சந்திப் பிழை?)
தேரு வருதே வேகமாகவே தேரு வருதே

அர்த்தங்கள் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளாவிட்டால் . . .
சிவா வாழையா? யாழை வா வாசி
மில் டெலிபோன் போலி. டெல் மி!
சாரா, காமராசரா? மகாராசா!

இவை எனக்கு உதித்த பாலிண்ட்ரோம்கள். சவாலான இந்த வார்த்தை விளையாட்டில் நீங்கள் எத்தனை பாலிண்ட்ரோம் வார்த்தைகளை கொண்டு வருகிறீர்கள் என்று பார்க்கலாம்.

Thursday, April 8, 2010

நீ - நொடிகளில் புதைந்திருக்கும் யுகம்


நீ
இன்னும் வரையப்படாத வானவில்லாக
இன்னும் இசைக்கப்படாத வீணையாக
இன்னும் எழுதப்படாத கவிதையாக
இன்னும் கடக்கமுடியாத தொலைவாக
எனது நொடிகளில் யுகங்களாக புதைந்திருக்கிறாய்!


நீ
விதைகளில் ஒளிந்திருக்கும் விழுது
துளியில் ஓய்வெடுக்கும் கடல்
அகலில் பதுங்கியிருக்கும் சூரியன்

நீ
என்னுடன் வரமுடியாது.
ஆனால் . . .
நான் உன்னுடன் வருவேன்
மழையைத் தொடரும்
மண் வாசனையைப் போல!

Thursday, April 1, 2010

சூப்பர் ஸ்டாருக்காக ஒரு பாட்டு

சூப்பர் ஸ்டார் ஆகணும் சார். அதுதான் என் கனவு!

நான் தற்போது ”அவர்” என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருப்பதை உங்களில் சிலர் அறிந்திருப்பீர்கள். ஸ்கிரிப்ட், பாடல் பதிவிற்குப் பின், தற்போது நடிகர் நடிகையர் தேர்வு ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. தேர்வுக்கு ஒரு இளைஞன் வந்தான்.

ஒல்லியாக, மெல்லிய தாடியுடன், உறுத்தாத ஆங்கிலத்தில் பேசிய அந்த 23 வயது இளைஞன் ஜீன்ஸ் அணிந்திருந்தான்.  காரில் வந்து இறங்கிய அவனுக்கு ஏற்கனவே 5 வருட அனுபவம். புரொடக்ஷன் எக்சிகியுடிவ், லைன் புரொடியுசர், அசோசியேட் டைரக்டர், குறும்பட நடிகர் என கலவையான அனுபவம் கலந்த இளமை. 

உன்னுடைய எதிர்காலக் கனவு என்ன என்று கேட்டதற்கு அவன் சொன்ன பதில் இதுதான்.
”சூப்பர் ஸ்டார் ஆகணும் சார். அதுதான் என் கனவு!”

சூப்பர் ஸ்டார் ஆவது என்றால் என்ன?
தொடர்ந்து வசூல் மன்னனாகத் திகழ்வதா?
எம்.கே. தியாகராஜ பாகவதர் போல, பாடியே மக்களைக் கவர்வதா? எம்.ஜி.ஆரைப் போல சண்டைக்காட்சிகளால் மனங்களை வெல்வதா? ரஜினியைப் போல ஸ்டைல்களால் ஈர்ப்பதா?
இதற்கு ஒரு சிலர் ஆம் என சொல்லக் கூடும். அதே கேள்வியை மேலும் நீட்டித்தால்?
சூப்பர் ஸ்டார் ஆவது
எம்.கே. தியாகராஜ பாகவதர் போல, பெண்கள் பின்னால் சுற்றியவர் என பெயரெடுப்பதா?
எம்.ஜி.ஆரைப் போல பிடிக்காத தயாரிப்பாளர்களை, நடிகர்களை ஓரங்கட்டியவர் என்று பெயரெடுப்பதா?
ரஜினியைப் போல அரசியல் ஸ்டண்டுகளால் படங்களை ஓட வைப்பவர் என்று பெயரெடுப்பதா?
இப்படி பெயர் எடுத்தால் அவர் சூப்பர் ஸ்டார் அல்ல என்றுதான் பலரும் சொல்வார்கள். சரி, அதே கேள்வியை மேலும் நீட்டித்தால்?

சூப்பர் ஸ்டார் ஆவது
எம்.கே. தியாகராஜ பாகவதர் போல, 5 தீபாவளி கண்ட வெற்றிப் படத்தை தருவதா?
எம்.ஜி.ஆரைப் போல சினிமாவில் பிரச்சாரம் செய்தே தமிழக முதல்வர் ஆவதா?
ரஜினியைப் போல வெளிநாடுகளிலும் புகழ் பரப்புவதா?

இந்தக் கேள்விக்கு பதிலாக மூன்றையுமே அனைவரும் பதிலாகச் சொல்வார்கள்.
சரி, அதே கேள்வியை மேலும் நீட்டித்தால்?

சூப்பர் ஸ்டார் ஆவது . . .
எம்.கே. தியாகராஜ பாகவதர் போல, கொலை வழக்கில் சிக்கி ஏழையாக வாழ்ந்து மடிவதா?
எம்.ஜி.ஆரைப் போல அட்டைக் கத்தி, வாய் உளறும், நடிக்கவே வராது என்று பெயரெடுப்பதா?
ரஜினியைப் போல மென்டல், கன்னடத்துக்காரன் என்று விமர்சனத்துக்கு உள்ளாவதா?
இந்த மூன்றில் எதையுமே ஒரு சூப்பர் ஸ்டாரின் தகுதியாக எவருமே ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் மேலே உள்ள முரண்பாடுகள் அத்தனையையும் கொண்டவர்கள்தான் சூப்பர் ஸ்டார்களாக நம்மிடையே இருக்கிறார்கள். வெற்றியடையும்போது சிகரங்களையும், தோல்வியின்போது அதல பாதாளங்களையும் அவர்கள் கண்டிருக்கிறாரகள், மீண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சூப்பர் ஸ்டார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் கனவு காணும் ஒவ்வொருவரும் அவர்களுடைய வெற்றிகளை மட்டுமே பார்க்கிறார்கள். அந்த வெற்றிக்கான போராட்டங்களும், இழப்புகளும் மற்றவர்கள் கண்களுக்கு தென்படுவதே இல்லை. அதை விட முக்கியம், வெற்றி பெற்ற பின் அதை தக்க வைக்கும் போராட்டம். அந்த மனப் போராட்டத்தின் விளைவாக அவர்களில் ஏற்படும் தனிமை, இவற்றை அடிப்படையாக வைத்து ஒரு பாடல் உருவாக்கினால் என்ன என்று தோன்றியது. அப்படித் தோன்றக் காரணம் ஃபேஸ்புக்கில் எம்.கே.தியாகராஜ பாகவதரைப் பற்றிய சுவையான உரையாடல்.

எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு சமர்ப்பிக்கப்படும் இந்த இசைக்கு பாடல் வரிகளில் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்று யோசித்தேன். எனவே ஃபேஸ்புக்கில் தொடர்ந்து கவிதை எழுதி வரும் 10 பேரை சில வரிகள் எழுத வைத்து அவற்றை இசை அமைத்தோம்.

எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்களில் ”சொப்பன வாழ்வில் மகிழ்ந்து” என்பது சூப்பர் ஹிட் பாடல். அந்தப் பாடல் தேவநகரி என்ற இராகத்தில் அமைந்த பாடல். அந்தப் பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக் கொண்டு அதே தேவநகரி இராகத்தில் பாடலை இசையமைத்திருக்கின்றோம்.

வெற்றியின் மகிழ்ச்சியை விட, வெற்றியின் உச்சியில் தனிமையில் அதை தக்க வைக்கும் போராட்டங்களையும், தோல்வியடையும்போது எதிர்கொள்ளும் வலிகளையும் உணர்த்தும் விதமாக இந்தப் பாடலை இசையமைத்துள்ளோம். கேளுங்கள்!  ஒரு கனவு உலகம் உங்களுக்குள் விரியும்.


பாடலை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளலாம்

பாடல் வரிகள் - 10 ஃபேஸ்புக் நண்பர்கள்
இசை - விவேக் நாராயண் ("அவர்" படத்தின் இசையமைப்பாளர்)
பாடியவர்கள் - விவேக் நாராயண், அவருடைய தாயார், அவருடைய மகள்
சவுண்ட் மிக்ஸிங் - ராகேஷ்
ஐடியா - அடியேன்!
தூண்டுதல் - அஷாந்தி ஓம்கர், பார்த்திபன் ஷண்முகம்

Tuesday, March 16, 2010

நினைவிடுக்கில் வழியும் நிலவொளி


அள்ளி எடுத்துப் போக முடியாத நிலவொளியாய்
என் மேல் எப்போதும் பொழிகிறாய் நீ!

ஒளிர்வதும் ஒளிவதும்
உன் இயல்பாக இருக்கிறது.

கதவுகள் இல்லாத வானத்தில்
நீ வந்து போகும் தடம் தெரியவில்லை.

ஆனால் நீ வரும்போதெல்லாம்,
எனக்கு நான் தெரிகிறேன்.

அது போதுமெனக்கு!

.................................................................................

Thursday, March 11, 2010

மருதாணிச் செடியுடன் கொஞ்ச நேரம்


இரவு! பின்னிரவு!
மருதாணிச் செடியிடம் கொஞ்ச நேரம்,
பேசிக் கொண்டிருந்தேன்.
ஆமாம்! அப்படித்தான் நினைக்கிறேன்.
பேசிக் கொண்டிருந்தேன், மௌன மொழியில்!

மருதாணி இலைகளில் பொதிந்திருக்கும் சிவப்பை
நான் உணர்நதது போல,
எனக்குள் பொதிந்திருக்கும் அன்பை
மருதாணிச் செடி உணர்ந்திருந்தது.

நாளை யார் கையிலாவது மருதாணி சிவக்கும்.
அந்தச் சிவப்பில் நான் இருப்பேன்.

இனிய பொழுதுகள் தொடரட்டும்!

Wednesday, March 10, 2010

சுவாமி சரியானந்தா - நான் எப்பவுமே ரைட்டு

அந்த சாமியாரின் பெயர் சுவாமி சரியானந்தா. அவரிடம் எப்போதும் கூட்டம் அலைமோதும். அவர் சொன்னால் அது பலிக்கும். அவர் சொல்லி எதுவுமே நடக்காமல் போனதில்லை. அதனாலேயே அவருக்கு சுவாமி சரியானந்தா என்ற பெயர் வந்துவிட்டது. மேட்டுக்குப்பம் பக்தர்களிலிருந்து நியுஜெர்சி பக்தர்கள் வரை எல்லோருக்கும் அவர் ஒரு மகான். அவர் கேட்கும் தொகையை செலுத்திவிட்டு அருள்வாக்கு வாங்கிச் செல்வார்கள்.

”சாமி”
”உனக்கென்னம்மா தெரியவேண்டும்”
”எனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா?”
”என்னைப் போலவே உனக்கொரு மாயக் கண்ணன் வந்து பிறப்பான் மகளே”
ஆயிரம் ரூபாய் தட்சணை வைத்துவிட்டு, பக்தை அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவுடன் அடுத்த பக்தர் பரவசத்துடன் நுழைகிறார்.

”சுவாமி”
”சொல் குழந்தாய்”
”எனக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காதா?”
”நிச்சயம் கிடைக்கும், மகிழ்ச்சியுடன் போ”
தட்டில் சில நூறுகளை வைத்துவிட்டு அவர் நகர அடுத்த பக்தர் வருகிறார்.

”குருஜி”
”எனக்கு இந்த டென்டர் கிடைக்குமா?”
”நமது ஆசிரமத்திற்கு 10 இலட்சம் கொடுத்தால் அந்த 100 கோடி டென்டர் உனக்குதான்?”
”இதை நான் எப்படி நம்புவது?”
”ஹா..ஹா..ஹா..சந்தேகப் பதரே.. என் மேலேயே சந்தேகமா... இருக்கட்டும்... சிஷ்யா?”
”சொல்லுங்கள் குருவே”
”டென்டர் கிடைக்கும் என்று நான் சொன்னதை அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொண்டு பத்து லட்சம் வாங்கியபின், இந்த சநதேகபுத்தி அற்பனை அனுப்பி வை”
”உத்தரவு குருவே”

தட்சணையை வாங்கி உண்டியலில் போட்டபடி ”டென்டர் கிடைக்காது” என்று நோட்டுப் புத்தகத்தில் சிஷய்ர் எழுதுகிறார். பிறகு . . .

”குருவே எனக்கொரு சந்தேகம்”
”கேள் சிஷ்யா”
”ஆண் பிறக்கும் என்று குறி சொல்கிறீர்கள். ஆனால் நோட்டுப் புத்தகத்தில் பெண் என்று எழுதச் சொல்கிறீர்கள். வேலை கிடைக்கும் என்று குறி சொல்கிறீர்கள். ஆனால் நோட்டுப் புத்தகத்தில் வேலை கிடைக்காது என்று எழுதச் சொல்கிறீர்கள். டென்டர் கிடைக்கும் என்று குறி சொல்கிறீர்கள். ஆனால் டென்டர் கிடைக்காது என்று நோட்டுப்புத்தகத்தில் எழுதச் சொல்கிறீர்கள். ஏன் இப்படி?”

”சிஷ்யா !!! இது இந்த முட்டாள் பக்தர்களை ஏமாற்றும் எளிய வழி. யாருக்காவது நான் சொன்னது நடக்காமல் போனால் உடனே என்னிடம் தான் மீண்டும் வருவார்கள். அப்போது இந்த நோட்டுப் புத்தகம்தான் நம்மை காப்பாற்றும்”
”எப்படி?”, என்று சிஷ்யர் கேட்க, அடுத்து ஒரு பெண் பக்தை உள்ளே வருகிறார். முகத்தில் பதற்றம், ஏமாற்றம்.

”சாமி..ஏன் என்னை கைவிட்டுட்டீங்க?”
”அழாமல் விஷயத்தை சொல் பக்தையே”
”எனக்கு ஆண் பிறக்கும் என்று சொன்னீர்கள். ஆனால் பெண் குழந்தை பிறந்துவிட்டதே”
”பக்தையே நீ தவறாகச் சொல்கிறாய். நான் சரியாகத்தான் சொன்னேன். சிஷ்யா அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் காட்டு”
”அட ஆம் குருவே, பெண் குழந்தைதான் பிறக்கும் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அம்மா நீங்களும் பாருங்கள்”, என்று சிஷ்யர் நோட்டுப்புத்தகத்தை நீட்ட அந்தப் பெண் அதைப் படித்துவிட்டு கன்னத்தில் போட்டுக் கொள்கிறாள்.

”ஐயோ சாமி..நான் தான் உங்களை தப்பா நினைச்சுட்டேன். என்னை மன்னிச்சிடுங்க”, புலம்பிக் கொண்டே வெளியே சென்ற பின் குருஜி புன்னகைக்கிறார்.
”சிஷ்யா, இப்போது புரிகிறதா நான் ஏன் உன்னை மாற்றி எழுதச் சொல்கிறேன் என்று?”
”புரிகிறது குருவே..இந்த உலகில் உங்களை வெல்ல யாரும் இல்லை”

சுவாமி சரியானந்தா வாழ்க.. சுவாமி சரியானந்தா வாழ்க..
பக்தர்களின் வாழ்த்து கோஷம் டிவியில் லைவ்வாக 75 நாடுகளில் ஒலிக்கிறது.

Tuesday, March 9, 2010

ரஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரிஸ்க் சாப்பிடற மாதிரி

இரு வார்த்தைகளின் முதல் எழுத்து இடம் மாறி, வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள் அமைந்தால் ஸ்பூனரிசம் (Spoonerism) என்று பெயர்.

Come and wook out of the lindow என்பது ஒரு உதாரணம்.
இந்த வாக்கியத்தில், look - window ஆகிய இரு வார்த்தைகளிலும் முதல் எழுத்து இடம் மாறியிருப்பதை கவனியுங்கள்.

Reverend William Archibald Spooner அப்படின்னு ஒருத்தர் அந்தக் காலத்துல இந்த மாதிரி சொதப்புறதுல மன்னராம். அதனால இந்த வகை சொதப்பல்களுக்கு spoonerism என்று பெயர் வந்துவிட்டது.

இப்போ இன்னும் சில உதாரணங்கள்.
  • fighting a liar - lighting a fire
  • you hissed my mystery lecture - you missed my history lecture
  • cattle ships and bruisers - battle ships and cruisers
  • nosey little cook - cosy little nook
  • a blushing crow - a crushing blow
தமிழில் இந்த மாதிரி முயற்சிக்கலாமா என்று மூளையைக் கசக்கியதில் எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது.

ரஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரிஸ்க் சாப்பிடற மாதிரி.

இத மாதிரி நீங்க தமிழ் ஸ்பூனரிசம் சொல்ல முடியுமா?

Sunday, March 7, 2010

மகளிர் தினம் - ஸ்பெஷல் இசை (”அவர்” திரைப்படக் குழு சார்பாக)

நான் நானாக இருப்பதற்கு என் வாழ்வில் நான் சந்திக்கும் பெண்களே காரணம். தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக, ஆசிரியையாக, மாணவியாக, பக்கத்து வீட்டுப் பெண்ணாக, தோழியாக என் வாழ்வில் வந்த அத்தனை பெண்களும், தான் அன்பால் உருவான ஒரு சக்தி என்று எனக்கு நிரூபித்திருக்கின்றார்கள்.

அவர்கள் அனைவருக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு இசையை சமர்ப்பிக்கின்றேன்.

நான் கேட்டுக் கொண்டதற்க்காகவே, வலையுலகில் இன்று அக்கா என்று பலராலும் அன்போடு அழைக்கப்படும் தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதிய பாடல் இது.

நீராக நிலமாக விண்ணாக காற்றாக யாதுமாக
உயிராக உறவாக ஒளிர்கின்ற சக்தி நீயே!
- இந்த இரு வரிகளை மட்டும் (ரெக்கார்டிங்கின் போது உண்டான உடனடி தேவையால்) நான் எழுதியிருக்கின்றேன்.

இசையமைத்தது வழக்கம்போல என் நண்பன் விவேக் நாராயண். நான் எவ்வளவு நெருக்கடியில் கேட்டாலும், சட்டென ஸ்வரங்களைக் கோர்க்கும் அவரின் திறமைக்கு இந்தப் பாடல் இன்னொரு சான்று. இந்தப் பாடலைப் பாடியவரும் அவர்தான்.

நேற்று மாலை எழுதப்பட்டு, இன்று மாலை இசையமைக்கப்பட்ட இந்தப் பாடலை ”அவர்” திரைப்படக் குழுவினரின் சார்பாக வலையுலகத்தில் எழுதிவரும் அத்தனை பெண்களுக்கும் மகளிர் தினப் பரிசாக அறிவிக்கின்றேன்.



பாடலை இங்கே கிளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

அன்பென்னும் ஊஞ்சலில்  அழகாக அசைந்திடும்
ஆனந்தப் பெண்மை அழகே!
அதிகாரம் ஆணவம் அனைத்தும் கடந்து
அரவணைக்கும் அன்னை நீயே!

நீராக நிலமாக விண்ணாக காற்றாக யாதுமாக
உயிராக உறவாக ஒளிர்கின்ற சக்தி நீயே!

அன்னப்  பறவையாய்  நல்லதை கைக்கொண்டு
அழுக்கெல்லாம் அழிய வைப்பாய்!

மன்னவன் மாலையே மாதர்கள் அரசியே
மகிழ்வோடு என்றுமிருப்பாய்!

ஆழி நீ சூழி நீ ஆர்ப்பரிக்கும் ஆர்வம் நீ
அகலாத அன்பின் தேவி!

சொல்லும் நீ செயலும் நீ எண்ணம் நீ வண்ணம் நீ
நல்லதனைத்தும் நீயே!

காந்தம் நீ கருணை நீ எரிமலைநெருப்பும் நீ
பனிஉருச் சிற்பம் நீயே!

புதுயுகப் புயலும் நீ பொதிகையின் கயலும் நீ
புவியாள வந்த அழகே!

குழந்தைக்கு குழந்தை நீ தேவாதி தேவி நீ
உலகெல்லாம் ஆளும் சக்தி!

உண்மையே மென்மையே  ஒளிர்கின்ற பாசமே
உலகத்தின் உயிர்ச்சக்தியே!

Wednesday, March 3, 2010

கதவைத் திறந்தால்? மீண்டும் ஒரு சாமியார் கதை!

இரு மாதங்களுக்கு முன் விவேகானந்தர் பாறை போயிருந்தேன். நான் விரும்புகிறபடி, ”எதற்கும் சித்தமான, புகழை விரும்பாத நூறு இளைஞர்களை எனக்குத் தாருங்கள், இந்த உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன்”, என்று நம்பிக்கை கொடுத்தவருக்கு ஞானம் பிறந்த இடம். தியான மண்டபத்தில் உஸ் . . உஸ் .. என்று யாரோ ஒருவர் வாய் மேல் விரல் வைத்து அதட்டிக் கொண்டிருக்க, உள்ளே வருபவர்கள் ஒரு கணத்தில் அடங்கி இருளில் துழாவி தியானம் செய்ய அமர்கிறார்கள்.

அணைக்கப்படாத செல்போன் கூப்பாடுகளால் கவனம் குவிக்க முடியாமல், இந்த தியானம் எதை நோக்கி? என்ற கேள்வியுடன் நானும் அமர்ந்திருந்தேன். நான் பனகல் பார்க் ராமகிருஷ்ணா மிஷனில் பிளஸ் டு படித்தபோது அடிக்கடி இப்படி உட்கார வைப்பார்கள். அப்போதும் இதே கேள்விதான்.  இது போல பல தியானங்கள், ஆராதனைகள், அன்னதானங்கள் பங்கு பெற்றிருக்கின்றேன். எல்லாமே தனியார் அல்லது சாமியார் சம்பந்தப்பட்டவை. என்னை அழைத்துப் போன நண்பர்கள் எல்லோருமே ”இந்த சாமியார்தான் பெஸ்ட்” என்றார்கள். அதற்கு விளக்கங்களும் வைத்திருந்தார்கள்.

இந்த விளக்கங்களையும், சாமியார்களையும் எப்போதும் கேலி செய்கிற நண்பர் ஒருவருடன் இந்த ஞாயிற்றுக்கிழமை மெரினா பீச்சுக்கு சென்று கொண்டிருந்தேன். காரை செலுத்தியபடியே அவர் சுவாமி நித்யானந்தா பற்றி சிலாகிக்க ஆரம்பித்தார். எனக்கு ஆச்சரியம். ஆனால் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. நித்யானந்தா நிச்சயமாக ஏதோ சக்தி உடையவர். தூர இருந்து பார்க்கும்போது ஒல்லியான சரீரத்துடன் இருக்கும் அவர், அருகில் செல்லும்போது மிகப்பெரிய உருவாமாக காட்சியளித்தார் என்றார் பிரமிப்புடன்.

அவருடைய பிரமிப்பு இன்றைய சன் செய்திகளை பார்த்தவுடன் என்னாவகியிருக்கும் என்று யோசிக்கிறேன். எனது நண்பரைப் போலவே இலட்சக் கணக்கில் அவரை ஆராதிக்கும், நம்பும் மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே அதிர்ந்து போயிருப்பார்கள். குமுதம்  அவரை தொடர்ந்து புரமோட் செய்து வருகிறது. இந்த செய்திக்குப் பின் குமுதம் என்ன செய்யும் என்பதும் என்னால் யூகிக்க முடியாததாக இருக்கிறது. Zero degree சாரு திடீரென நித்யானந்தா பக்தராக மாறி வலையுலகில் கிட்டத்தட்ட நித்யானந்தா கொள்கை பரப்புச் செயலாளராகவே மாறி நடந்துவருகிறார். அவர் என்ன செய்யப்போகிறார் என்றும் யோசிக்கிறேன்.

ஒரு வருடத்திற்கு முன் என் தம்பி, நித்யானந்தாவின் நேரடி பார்வையில் நடைபெற்ற ஒரு வகுப்பிற்கு போய் வந்தார். முன் பின் அறிமுகம் இல்லாத ஆண், பெண்களை கட்டிப்பிடித்தபடி சில பயிற்சிகள் செய்யச் சொல்கிறாரகள். அவர் ஒரு ஃபிராட் என்றார். அவரைப் போலவே நித்யானந்தாவை சந்தேகித்து பரிகசித்தவர்கள் சிலர். அவர்கள் எல்லோரும் ”நான் அப்பவே சொன்னேன் பார்த்தியா?” என்று ஆனந்தப்படக் கூடும்.

இன்றைய சாமியார்கள் எனப்படுவர்கள் யார்?.தனது பலவீனத்தை முற்றிலும் மறைக்கத் தெரிந்தவர்களே சாமியார்களாக உலா வருகிறார்கள். அதனால்தான் உதறித்தள்ளாத வெறுமனே மறைத்து வைக்கப்பட்ட அவர்களுடைய பலவீனங்கள் ஏதோ ஒரு கட்டத்தில் எப்படியாவது வெளியாகிவிடுகின்றது. இன்றைய சன் செய்தி பரபரப்பும் அப்படிப்பட்ட ஒரு பலவீனத்தின் அம்பலம்தான்.

இந்த பலவீனத்தை மறைக்கத்தான் அந்த சாமியார்கள் தனி மனிதனாக நின்று போதிக்காமல், ஆசிரம், ஏ.சி, விமானம், பாதுகாவலர்கள், சிஷ்யர்கள் என்று ஒரு நிறுவனமாக மாறிப் போகின்றார்கள்.  எல்லாவற்றுக்கும் விலை வைக்கின்றார்கள். There is no free lunch என்பார்கள். இது ஏமாளி பக்தர்களுக்கு மட்டுமல்ல, ஏமாற்றும் சாமியார்களுக்கும் பொருந்தும். நித்யானந்தா கொடுத்த விலையை இன்று சன் டிவி காட்டிவிட்டது.


விவேகானந்தர் மறைந்து 70 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும் அவர் கேட்ட எதற்கும் சித்தமான, புகழை விரும்பாத நூறு இளைஞர்கள் உருவாகவில்லை. அவர்கள் உருவாகியிருந்தால் இந்த சாமியார்கள் உருவாகியிருக்க மாட்டார்கள்.

சன் டிவிக்கு ஒரு கண்டனம்
நித்யானந்தாவை அம்பலப்படுத்தியது நல்ல விஷயம்தான். ஆனால் உடனிருப்பது R என்ற பெயரில் ஆரம்பிக்கும் நடிகை என்று கூறி பல நடிகையர்களின் மேல் சந்தேகம் வர வைத்தது விஷமத்தனம்.

Tuesday, March 2, 2010

இந்தியர்கள் சகிப்பின் உச்சம். மற்றவர்கள் சகிப்பின் எ - - - -

அசிரத்தையாக துபாய் மியுசியம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, நண்பர் மீனாட்சி சுந்தரம் கோவிலுக்கு போய்விட்டு வரலாம் என்றார். துபாயின் அவசர வாழ்க்கையிலும் தினம் தியானம் பண்ணி கடவுளை வழிபட்டு பிறகு காரில் ஏறிப் பறப்பவர் அவர். அதனால் அவர் அழைத்ததும் வருகிறேன் என்றேன். எனக்கு கோவில் பிரசாதங்களின் மேல் அலாதி பிரியம்.

நம்ம ஊர் மினி ஹால் திருமண மண்டபங்களின் வாசலைப் போல, விசாலமும் இல்லாமல் குறுகலாகவும் இல்லாமல் ஒரு இடம். இங்குதான் கோவில் நுழைவாயில். ஷீவைக் கழற்றி இலவச ஸ்டாண்டில் வைத்துவிட்டு, காமிராவை ஆயத்தப் படுத்தினேன். நண்பர் தயவுசெய்து கிளிக் செய்யாதீர்கள், வந்திருப்பவர்கள் அசௌகரியப்படுவார்கள் என்றார். நான் பதில் பேசவில்லை. காமிராவை ஜீன்ஸ் பாண்டுக்குள் சிரமப்பட்டு நுழைத்தேன்.


பெருமாள் பூகடை என்ற தமிழ் போர்டு மட்டும் ஞாபகம் இருக்கிறது. மற்றபடி அந்த குறுகலான நுழைவாயிலின் இருபுறமும் வடஇந்தியர்களின் வழக்கப்படி மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாலைகளை விற்ற பெட்டிக் கடைகளே நினைவில் நிற்கின்றன. கிட்டத்தட்ட சென்னை ரங்கநாதன் தெருவை நேர்வகிடாக கால்வாசி வெட்டி வைத்ததுபோல குறுகல். ஆனால் எந்தக் கடையிலும் காதைக் கிழிக்கும் சாமி குத்துப்பாட்டுகள் இல்லை.


இரும்பு படிக்கட்டுகளால் ஆன படியேறி மாடிக்கு மேலே சென்றால் கோவில் இருக்கிறது. அதை கோவில் என்று நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். ஒரு மார்வாடி வீட்டு வரவேற்பறை போல உள்ளது. திருநீர் இல்லை, குங்குமம் இல்லை. தீபங்கள் இல்லை, பத்திகள் இல்லை. வேத கோஷங்கள் இல்லை, கோவில் மணி இல்லை. தேங்காயும் உடைக்கப்படுவதில்லை. தேங்காய் லிங்கத்தின்(லிங்கம்தானே?) அருகில் காண்பிக்கப்பட்டு பெரிய கருமை நிற பிளாஸ்டிக் கோணியில் திணிக்கப்படுகிறது. ஆனால் அங்கேதான் இந்து மத பக்தர்கள் கூடுகிறார்கள்.

பூசாரி மற்றும் பக்தர்கள் உட்பட அனைவருமே மௌன விரதம் இருப்பவர்கள் போல மனதுக்குள் முனகிக்கொண்டே பிரார்த்தனை செய்தார்கள். நான் அங்கிருந்த சாமிப்பட கண்ணாடிகளில் என் முகம் பார்த்துவிட்டு, தரையில் சாஷ்டாங்க நமஸ்காரத்தில் இருந்தவர்களை இடறாமல் பிரசாதம் எங்கே என்று தேடினேன். நாமே அங்கிருந்த பேப்பர் தட்டுகளை எடுத்துக் கொண்டு வரிசையில் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்தபோது நண்பரும் நமஸ்காரத்தை முடித்துவிட்டு வந்துவிட்டார். பிரசாதத்துடன் படி இறங்கினோம். கோவில் எப்படி இருக்கிறது? என்றார். பிரசாதம் சுமார் என்றேன்.


புன்னகைத்துக் கொண்டே வாங்க அங்க போலாம் என்றார். அவர் கை காண்பித்த இடம் கிருஷ்ணன் கோவிலாம். அங்கேயும் பளபள மொசைக் தரையில் சைலண்ட் பக்தர்கள் மற்றும் பூசாரிகள். நிஜமாவே இன்னமும் கூட்டம் சேராத ஒரு கல்யாண வீடு போலவே இருந்தது. கிருஷ்ணர் எங்கே இருக்கிறார் என்று தேடியபோது, பக்கத்து காம்பவுண்டில் இருந்த மசூதியில் இருந்து இறை அழைப்பு ஒலித்தது. அதன் பிண்ணனியில் இந்து பக்தர்கள் கை கூப்புவது எனக்கு வித்தியாசமாக இருந்தது. மசூதியின் இறை வணக்கம் முடிந்தபின், பூசாரி ஏதோ ஒரு ஆம்ப்ளிபயரை முடுக்கினார். சன்னமாக ஏதோ பஜன் கேட்டது.


வெளியில் வந்து ஷீவை மாட்டும்போது சீக்கிரம் வாங்க நேரமாகிவிட்டது என்று யாரோ அழைக்க கடைசி நேர பக்தர்கள் அவசரமாக உள்ளே ஓடினார்கள். நண்பர் கடைசியாக ஒரு முறை கோவிலை திரும்பி பார்த்துவிட்டு, ராசியான கோவில், வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்றார்.


நம்ம ஊர் தைப் பூசம் போல வேல் வேல் வெற்றி வேல் என்றும், ஐயப்ப பக்தர்கள் போல சாமியேய் சரணம் ஐயப்பா என்றும், திருப்பதி மலையை நிறைக்கும் கோவிந்தா கோவிந்தா என்றும் இங்கே தினமும் இந்த அரபு மண்ணில் குரல் கொடுக்க அனுமதி வேண்டும் என்று வேண்டிக்கொண்டால் இந்த சாமிகளால் அருள் பாலிக்க முடியுமா?


அந்த சாமிகளால் நிச்சயமாக முடியாது. ஆனால் அந்த அரபு மண்ணின் கட்டுப்பாடுகளை ஏற்று தனது ஆகம விதிகளை குறுக்கிக் கொண்ட கோவில்களைப் போல, அரபு மண்ணின் விதிகளை ஏற்று தனது ஆன்மீக அடையாளங்களை சுருக்கிக் கொண்ட பக்தர்களின் சகிப்புத் தன்மையை நான் பாராட்டுகிறேன்.


பின் குறிப்பு

கத்தார் நாட்டு்க்கு குடியுரிமை வாங்கிச் சென்றுள்ள  ஓவியர் திரு. எம்.எஃப் உசேன் அவர்களுக்கு சில விஷயங்கள்.


மத அடையாளங்களை கடைபிடிக்கின்ற விஷயத்தில், துபாயுடன் ஒப்பிடும்போது கத்தார் மிகவும் கெடுபிடியான நாடு.

துபாயில் வசிக்கின்ற இந்தியர்கள், தான் வாழும் மண்ணுக்கேற்ப தனது அடையாளங்களை மறைத்துக் கொண்டும் அந்த வேதனைகளை சகித்துக் கொண்டும் எப்படி வாழ்கிறார்கள் என்பதை ஒரு முறை அவர்களை நேரில் சந்தித்து கற்றுக் கொள்ளுங்கள்.


கத்தாருக்கு குடியுரிமை பெற்ற சூட்டோடு, அந்த மண்ணின் இயல்புகளை, புனிதங்களை கலை என்ற பெயரில் மறுக்கவோ, நிர்வாணப்படுத்தவோ முயற்சிக்காதீர்கள்.

உங்களுடைய எல்லா முயற்சிகளுக்கும் இந்தியாவில் மட்டுமே இடமுண்டு. எனவே உங்கள் தூரிகை அத்து மீற நினைக்கும்போதெல்லாம் இந்தியா வாருங்கள். இந்தியர்கள் சகிப்பின் உச்சம். மற்றவர்கள் சகிப்பின் எ . . .

Saturday, February 27, 2010

சுஜாதா நினைவாக இசை ரெடி - கேட்டுப்பாருங்க



இந்த முறை டிவிட்டர்கள் சந்திப்பை சுஜாதா நினைவு சந்திப்பாக வைத்துக்கொள்ளலாம் என்று கடந்த வாரம் முடிவானது. ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சுஜாதாவின் கவிதை எதையாவது இசையமைக்கலாம் என்று முடிவு செய்தேன். முதலில் சுஜாதாவின் குறள் உரையை இசை வடிவில் தரமுடியுமா என்று சிந்தித்தேன். அதை நெட்டில் தேடியபோது முதலில் கண்ணில் சிக்கியது கீழே இருக்கும் கவிதை. சந்தம்-கிந்தம், மீட்டர் - கீட்டர் எல்லாம் பற்றி சிந்திக்கவே இல்லை. கனமான ஒரு சப்ஜெக்ட் படிப்பதற்கு இலகுவானதாக இருக்கவே அதையே இசைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

இசை என்றால் உடனே நான் அடுத்து போய் நிற்பது நண்பர் விவேக் நாராயண் இல்லம் தான். அவசரம் கருதி போன் போட்டேன். எந்தக் கவிதை என்று கேட்காமலயே சரி என்றார். நேற்று மதியம் வந்து கவிதையை படித்துவிட்டு எதையோ முணுமுணுத்துவிட்டு டியுன் ரெடி என்றார். எப்போ ரெக்கார்டிங் என்றேன். நாங்கள் எப்போதுமே அப்படித்தான். சட்டென சிந்தித்து, பட்டென முடிக்கப்பார்ப்போம். இரவு வா என்று சொல்லவிட்டு மாலை போனில் அழைத்தார்.

வா !
அப்புறம் வா !
போய்விட்டு அப்புறம் வா !
சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

சுஜாதாவின் கடைசி வரி தனித்தனி வார்த்தைகளாக படிக்கும்போது எப்படி ஜாலம் காட்டுகிறது பாருங்கள். எனவே அதையே துண்டுப்பல்லவிகளாக பயன்படுத்திக் கொண்டோம்.

ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சுஜாதா பற்றி அல்லது அவருடைய கவிதைகளைப் பற்றி விமர்சனங்கள் அல்லது நினைவுகளை பல குரல்களில் பாடலின் இடையே இணைக்கலாம் என்று முடிவு செய்தோம். அதற்க்க்காக இணைய நண்பர்களை அணுகியிருந்தேன். பலரும் தயங்க, இருவர் மட்டும் அனுப்பியிருந்தார்கள்.

ஜமால்(adiraijamal@gmail.com) சரியில்லேன்னா சொல்லுங்கண்ணே, திரும்ப அனுப்பறேன் என்று தனது குரலை அனுப்பியிருந்தார். சுந்தரவதனம்(vadanan2006@yahoo.co.in) .mp4 பார்மட்டில் மொபைல் போனில் பதிவு செய்த தனது குரலை அனுப்பியிருந்தார். இன்று காலை 11 மணி வரை வேறு ஏதாவது குரல்கள் வருகிறதா என்று காத்திருந்துவிட்டு, பாடல் பதிவை முடித்துவிட்டோம்.

வீட்டிலேயே எளிமையாக ரெக்கார்டிங் செய்யப்பட்டது. சுஜாதாவின் நினைவாக!

பாடலை கேட்கும்போது வரிகளை இரசிக்க, வரிகள் கீழே தரப்பட்டுள்ளது. இங்கே கிளிக் செய்து பாடலை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்

சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்
கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்

மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்

ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்

தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்

குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்

சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

Thursday, February 25, 2010

சுஜாதா நினைவாக ஒரு இசை - வாங்க குரல் கொடுங்க

சர்வதேச குழந்தைகள் வருடம் அறிவிக்கப்பட்டபோது, சுஜாதா எழுதிய கவிதை இது.

எனது நண்பர் இசையமைப்பாளர் விவேக்நாராயண் உதவியுடன் இதை இசை அமைக்கலாம் என்று திடீர் முடிவு செய்திருக்கின்றேன்.

வாசித்துவிட்டு சுஜாதாவைப் பற்றி, அவருடைய எழுத்தைப் பற்றி, இந்த கவிதையைப் பற்றி என்ன தோணுதோ அதை எனக்கு Voice Mailஆக அனுப்புங்கள். ஒத்திகை எல்லாம் பார்க்காமல் ஜாலியாக, இயல்பாக, சுருக்கமாகப் பேசவும். எதுவும் தோன்றாவிட்டால் இந்தக் கவிதையை உங்கள் குரலில் வாசித்து அனுப்புங்கள். இசைக்குள் செருக முடிகிறதா என்று பார்க்கிறேன்.

உங்கள் குரலுடன் இணைத்து பாடலை முழுமையாக்கும் ஐடியா உதித்திருக்கிறது. பாடலின் வடிவம், இசை உத்தி பற்றி எதுவும் இன்னும் தோன்றவில்லை.

ஐடியா வந்தவுடன் உங்களிடம் வந்திருக்கின்றேன். பார்க்கலாம் எப்படி வருகிறதென்று.

நாளை மதியத்திற்குள் குரல்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி் r.selvakkumar@gmail.com


இனி கவிதை . . .
கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்

சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்
கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்

மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்

ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்

தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்

குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்

சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

Updated on : 27.02.2010
இசையை இங்கே கேட்கலாம்

Sunday, February 21, 2010

அவர்

சென்ற வருடம் டிசம்பர் இறுதியில் நாகர்கோவிலுக்கு ஒரு இரயில் பயணம். அதிகாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸின் தட தட தாலாட்டை மீறி செல்போன் என்னை எழுப்பியது.
”ஹலோ குட்மார்னிங்! சொல்லுங்க என்ன விஷயம்?” என்றது எதிர் முனைக் குரல்.
அழைத்தவர் அவர். (அவர் யார்?) அவர்தானே விஷயத்தை சொல்ல வேண்டும். ஏதாவது ராங்காலாக இருக்குமோ என்று யோசித்தபடி அப்பர் பர்த்தில் தூக்கம் கலைந்தேன்.

”ஹலோ நான் செல்வக்குமார் பேசறேன்”
"ஒரே சத்தமா இருக்கு. என்ன விஷயம் சொல்லுங்க?”
”நீங்கதான் சொல்லணும்”
”கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீங்கதான் என்னைக் கூப்பிட்டீங்க”
”நானா..?” என்று ஆச்சரியப்பட்ட வினாடியில், நடந்தது எனக்குப் புரிந்து போனது.
”அடடா..மன்னிக்கணும். நான் டிரெயின்ல இருக்கேன். தூக்கத்தில் புரண்டு படுக்கும்போது, எப்படியோ உங்க நம்பர் டயல் ஆகியிருக்கிறது”
”பரவால்ல, நானும் இப்பதான் ஒரு வேலையை முடிச்சிட்டு படுத்தேன்”, குரலில் கோபமில்லை, எரிச்சல் இல்லை, தூக்கம் கெட்டதே என்ற அலுப்பு இல்லை.
”சரி நீங்க சென்னைக்கு வந்தப்புறம் சந்திக்கலாம்” என்று மிக அமைதியாக, இயல்பாக பேசிய அந்த குரலுக்கு சொந்தக்காரரை இரண்டு மாதங்கள் ஆகியும் நேரில் சந்திக்க முடியவில்லை.

அவ்வப்போது Facebookல் வந்து ”நண்பா எப்படி இருக்கீங்க?” என்பார். பல முறை தேதி குறித்தும் அவரவர் வேலை பளு காரணமாக, அவரை சந்திக்க முடியாமலேயே இந்தப் பதிவில் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

ஏண்டா விடிய காலையில் 3 மணிக்கு போன் பண்ணி தூக்கத்தை கெடுத்த என்று நியாயமாக கோபம் வரக் கூடிய நிலையிலும், நிதானித்த அவரை எண்ணி வியக்கிறேன். அவரை இதுவரை சந்திக்கவே இல்லை. ஆனாலும் சின்னச் சின்ன கண்ணியமான facebook உரையாடல்கள் மூலம், எப்போதும் நினைவில் நிற்கும் நண்பர்களில் ஒருவராக அவர் இருக்கிறார்.

தன்னை ஆளத் தெரிந்தவர் தரணி ஆள்வார். விரைவில் அவர் தமிழ் மக்களின் மனதை வெல்வார்.

அவருடைய சிறந்த குணத்திற்கு மேலே நான் எழுதியிருப்பதே சாட்சி. அவருடைய திறமைக்கு சாட்சியாக விரைவில் ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது. அவர் இயக்கியுள்ள ”அவர் பெயர் தமிழரசி” இம்மாதம் திரைக்கு வருகிறது 

நல்ல குணம் படைத்த அவர், நிச்சயம் நல்ல திரைப்படத்தை தருவார்.
அவர் - இயக்குனர் மீரா கதிரவன்.

All the best Meera!

Friday, February 19, 2010

கடற்கரையில் தமிழ் டிவிட்டர்கள் - 03

மீண்டும் வட்டமடித்து அமர்ந்த போது மீண்டும் இனிப்பு இன்னொரு சுற்று வந்தது. நீங்க பாண்டியராஜன் மாதிரி எப்பவும் கூலிங்களாஸை கழட்ட மாட்டீங்களா என்று @njganesh என்னை நக்கலடிக்க, அதை கழட்டிட்டா வயசு அதிகமா காட்டும் என்று என் மனைவி வெள்ளைக் கண்ணாடியை மாற்றித் தந்தாள் (கவலையா, கடுப்பா). உண்மையிலேயே இப்பதான் நீங்க யூத்தா இருக்கீங்க என்று பாலா, @ommachi உள்ளிட்டோர் (கேலியா,நிஜமா) சர்டிபிகேட் கொடுத்தார்கள். அப்போது பாலா, @ommachiக்குப் பின்னால் பலூன் சுடும் கடை ஜரூர் ஆகிக் கொண்டிருந்தது. ஹலோ ரொம்ப பின்னால போகாதீங்க சுட்டுருவாங்க என்றார். இதுக்குப் பேரு சுடறதா? ரிலீசுக்கு முன்னாடியே ஜக்குபாய் சிடியானதுக்குப் பேர்தான் சுடறது என்றார் @rgokul. என்னைப் பார்த்து டைரக்டர் உங்க படம் எப்போ என்றார் @anbudan_bala, எதுக்கு சிடி போடறதுக்கா என்று அதிர வைத்தார் @ommachi.
.
யாரு ஹீரோ? யாரு மியுசிக் போன்ற சம்பிரதாய சலசலப்புகள் அடங்கிய பின்னால், மீண்டும் அதே ஸ்வீட் வந்தது. அலுத்தபடி அட எனக்கு வேணாங்க என்றபடி @njganesh தனது மூட்டையை எடுத்து வைக்க, மற்றவர்கள் அனைவரும் கப்சிப் ஆனோம். அனைவரும் பார்வையும் அவருடைய பையில். அவரோ ஹாலிவுட் சினிமாவில் ஹீரோக்கள் டைம் பாமை ஃபியுஸ் செய்வது போல, பயங்கர சஸ்பென்சுடன் படு நிதானமாக பையை திறக்க ஆரம்பித்தார். பக்கத்திலிருந்த நான் ஆர்வம் தாங்காமல் எட்டிப்பார்த்துவிட்டு,  கணேஷ் சாப்பாடு கட்டிக்கிட்டு வந்திருக்காருங்க என்று கொளுத்திப் போட, பதறியபடி அவர் தனது மூட்டையை பட்டெனத் திறந்தார். உள்ளே இருந்து அவர் வெளியே எடுத்தது..... சே! தண்ணீர் பாட்டில். 

அடுத்த சில நிமிடங்களை ஆபரேஷன் செய்தவர் @spinesurgeon இலவச இன்ஷீரன்ஸ் அது இதுன்னு சொல்றீங்க? ஆனா ஒருத்தன் பொது மருத்துவமனைக்கு வந்து போனா அவனைப் பத்தி ஒழுங்கா ரெக்கார்ட் மெயிண்டெயின் பண்றீங்களா நீங்க? என்று வம்புக்கு இழுத்தார் @anbudan_bala வம்புக்கு இழுக்க வைத்தவர்கள் @vickytamil மற்றும் @icarsprakash. கலைஞரை வம்புக்கிழுத்தால் டாக்டர் சூடாவார் என்பது டிவிட்டர் ஐதீகம். ஆனால் ஆத்து மணலில் பீச்சு மணலை நைசாகக் கலப்பது போல, டாக்டர் சிக்கலில் சிக்காமல் எந்த அளவுக்கு பொது மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பற்றிய தகவல்களை கணிணி மயமாக்கி இருக்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்தார். விளக்கத்தை விலாவாரியாக கேட்டு வாங்கியது, வெங்கட். டாக்டர் பேசி முடிக்கும் வரை பொறுமையாக இருந்த என் மனைவி இவர் உண்மையிலேயே டாக்டரா என்று சந்தேகக் கேள்வி எழுப்ப #twitter-meet-doubt-03, ஏங்க இப்படி ஒரு சந்தேகம் என்று மொத்த டிவிட்டர்களும் அதிர்ந்தார்கள். ”இல்ல அவர் பேசற அழகான கோயம்புத்தூர் தமிழைக் கேட்டா ஆச்சரியமா இருக்கு” என்று அப்பாவியாக என் மனைவி சமாளித்தார். இவரை டாக்டர்னு சொல்றதுக்கே அதிர்ச்சியாகறீங்களே, இளைய தளபதி விஜய்யை டாக்டர்னு சொன்னப்போ எங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று மொத்த பேரும் கோரஸாகச் சொல்ல, உண்மையிலேயே அதிர்ச்சியானவர் நம்ம @scanmanதான். அவர் பேரு விஜய். நானும் டாக்டர் விஜய், அவரும் டாக்டர் விஜய்யான்னு புலம்பித் தள்ளிட்டார் என்று @spinesurgeon தனது சக டாக்டரின் சார்பில் புலம்பினார் (அல்லது சந்தோஷப்பட்டார்).

திடீரென பிரகாஷ் முகத்தில் குறும்பு, டாக்டர் உங்களை பாலா என்னமோ கேட்கணுமாம் என்றார். என்னது? நான் டாக்டரான்னு நீங்களும் கேட்கப் போறீங்களா? அதான் அவங்க கேட்டுட்டாங்களே என்றார். இல்ல இது வேற என்றார் பாலா. கேளுங்க என்றார் டாக்டர். நாங்கள் எல்லோரும் என்னவாக இருக்கும் என்று ஆர்வம் அதிகமாகி பாலாவைப் பார்க்க, இளையராஜாவுக்கு பத்மபூஷண் கொடுத்தது பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க என்றார். தனது வாயைப் பிடுங்க வலை விரிக்கப்படுகிறது என்பதை உணர்ந்த டாக்டர், கொடுக்கலாமே தப்பில்ல, எவ்வளவோ பேருக்கு தர்றாங்க, இப்ப இளையராஜாவுக்கும் கிடைச்சிருக்கு என்று, மையமாகப் பேசி ஜகா வாங்கிக் கொண்டார். பொறி பறக்கும் என்று நினைத்த மற்ற டிவிட்டர்களுக்கு ஏமாற்றம்.
போட்டோவை ஏற்றிவிட்டு அடுத்த வரியை எழுதுவதற்கு முன் உதயம் தியேட்டரில் தமிழ்ப்படம் பார்த்துவிட்டு வந்துவிட்டேன். வீடு வருவதற்குள் படம் மறந்து போனாலும், அன்றைய சந்திப்பில் தமிழ்படம் பற்றிய பேச்சு ஞாபகம் வந்தது.

தமிழ்படத்தைப் பற்றி பேச்சு வந்தபோது, ஒரு தடவை பார்க்கலாம். நேற்று நான், மனைவி,மகள் மூவரும் போய்விட்டு வந்தோம் என்றார் @ommachi. அத இரசிக்கணும்னா பழைய படமெல்லாம் பார்த்திருக்கணும், இல்லன்னா சிரிப்பு வராது என்றார்கள் @icarsprakash, @spinesurgeon, @njganesh. அப்படின்னா எனக்கு ஒத்து வராது என்றார் வெங்கட். ஆனா இதை தலைவர் ஃபேமிலி தவிர யார் எடுத்திருந்தாலும் ரிலீஸ் பண்ணியிருக்க முடியாது, என்ன சொல்றீங்க என்று மீண்டும் பாலா டாக்டருக்கு கொக்கி போட, டாக்டர் சிக்கவே இல்லை. ஆமாம், ஆமாம் என்று என்னைப் பார்த்து (ஏன் என்னைப் பார்த்து?) சிரித்தார்.


இடையில் மீண்டும் என்னுடைய ”அவர்” படம் பற்றி பேச்சு வந்தபோது MP3 பிளேயரில் வைத்திருந்த பாடலை @anbudan_bala, @ommachi, @njganesh, @icarsprakash, @madhankarky @vickytamil @lavanya ஆகியோர் தனித்தனியாகக் ஆளுக்கொரு பாடலாகக் கேட்டார்கள். மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு 5 நிமிஷம் நீங்க கண்ணை மூடினா, உங்க பாடல்களை சுட்டு நெட்டுல போட்டுலாம் என்று @njganesh கிண்டலடித்தார்.

இவங்க எல்லாரையும் இதுக்கு முன்னாடி மீட் பண்ணியிருக்கீங்களா என்று மறுபடியும் ஒரு சந்தேகத்தை கிளப்பினாள் என் மனைவி. #twitter-meet-doubt-04. @ommachi, @icarsprakash தவிர மற்றவர்களை இப்போதுதான் நான் பார்க்கிறேன். ஏன் கேட்கிற? என்றேன். இல்ல எல்லாரும் பல வருஷ ஃபிரண்ட்ஸ் மாதிரி ஜாலியா ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் பண்ணிக்கறீங்களே, அதனாலதான் கேட்டேன் என்றாள்.


நான் பதில் சொல்லும்முன் @madhankarky மணலில் ஏதோ எழுத ஆரம்பித்திருந்தார்.
க - கா - கி - கீ -கு -கூ
ப - பா - பி - பீ - பு -பூ
ம - மா - மி - மீ - மு - மூ
இந்த எழுத்து வரிசைகளின் எழுதும் பாணியை உற்று நோக்குங்கள். “அ, ஆ, இ, ஈ“ ஒலி வரை எல்லாம் ஒரே மாதிரி உள்ளன. ஆனால் “உ“ ஒலி வரும்போது எழுதும் முறையில் “கு“ மேல் நோக்கி சுழிக்கப்படுகின்றது. ”வு” கீழ்நோக்கி ஒரு நேர்கோடாக இறங்குகின்றது. அதே போலத்தான் ”ஊ” ஒலியுள்ள எழுத்துக்களும் அடிப்படை ஒலியில் ஒன்றாக இருந்தாலும் எழுதும் முறையில் மாறுபடுகின்றன. இதை சரி செய்து அனைத்துக்கும் ஒரே மாதிரி எழுத்து வடிவம் கொண்டு வந்தால் தமிழுக்கென கீபோர்டு வடிவமைப்பதும், குழந்தைகளுக்கு தமிழ் எழுதக் கற்றுத் தருவதும் சுலபமாகிவிடும், என்று @madhankarkyயும், @spinesurgeonம் படு தீவிரமாகச் சொன்னார்கள்.

சிங்கப்பூரில் தமிழ் எழுத்துப் பயிற்சி என வரும்போது, “ட ப” போன்ற வளைவற்ற எழுத்துக்களில்தான் ஆரம்பிக்கப்படுகின்றது. போகப் போக ”க, வ” போல வளைவுகளுக்குப் பழக்கி கடைசியாக “இ” சொல்லித் தரப்படுகின்றது என்று டிவிட்டர் மீட்டிங், செம்மொழி மாநாடு போல வித்தியாசம் காட்டத் துவங்கியது. ஆனால் @ommachi மற்றும் venkat இந்த பயிற்சி முறை பம்மாத்து என்றார்கள். வளைவுகளை உடனே பழக்க வழி கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, தள்ளிப் போடுவது வேஸ்ட் என்றார்கள்.

திடீரென பேச்சு எல்.கே.ஜி லெவலில் இருந்து, டாப் கியருக்கு மாறியது. என்னதான் தமிழுக்கு வக்காலத்து வாங்கினாலும் இஞ்சினியரிங் மற்றும் மருத்துவத்தை ஆங்கிலம் தவிர்த்து தமிழில் மட்டும் படிக்க முடியுமா? என்று @icarsprakash கேட்டதும், ஏன் முடியாது என்று @ommachi சூடாகிவிட்டார். படிக்க முடியாது என்பது ஒரு mind set தான் என்று வெங்கட் அவரை ஆமோதித்தார். ஜப்பானில், சைனாவில் எல்லாம் ஆங்கிலம் கிடையாது. அவர்களில் டாக்டர் இல்லையா, சயிண்டிஸ்ட் இல்லையா என்று @ommachi கேட்க, ஆனால் அதற்கு மேல் படிக்க ஆங்கிலம் கட்டாயம் தேவையாமே என்று யாரோ சொல்ல... அதற்கு மேல் என்றால் நோபல் பரிசு வாங்க தமிழ் போதாதுன்னு சொல்றீங்களா? நான் இதை மறுக்கிறேன் என்று ஆங்கிலம் தெரியாமல் நோபல் பரிசு வென்ற ஒரு ஜப்பானியரைப்  பற்றிச் சொன்னார்.

ஆனா ஒண்ணுங்க, ஏகப்பட்ட திறமைசாலிகள் இருக்காங்க, இந்தியாவில ஐ.டி. முன்னேறிடுச்சு, அது இதுன்னு சொல்றாங்க, ஆனா ஒரே ஒரு புராடக்டாவது இந்தியர்கள் உருவாக்கினதுன்னு இருக்கா? இதே எம்.பி.3 பிளேயர்லயே பாட்டு கேட்கறீங்க. பாட்டுக்கு Tag இங்கிலீஷ்லதான் இருக்கு. இதை தமிழ்ல பண்ண முடியாதா? ஏன் யாரும் முயற்சிக்கல? என்று வெங்கட் காட்டமாகக் கேட்டார்.

அதற்கு யார் என்ன பதில் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் என் மனைவியின் கடைசி சந்தேகம் #twitter-meet-doubt-05. அவர் யாரு என்றாள் @madhankarkyயைக் காட்டி. இவ்வளவு நேரம் கழித்து இந்த சந்தேகமா என்று தோன்றினாலும், @madhankarkyயையே பதில் சொல்லச் சொன்னேன். அவர் என் பெயர் மதன் கார்க்கி, அண்ணாமலை யுனிவர்சிட்டியில் தமிழ் கம்ப்யுட்டடிங் பற்றி வகுப்பு எடுக்கிறேன், என்று முடித்துக் கொள்ள, முக்கியமா அவர் கவியரசு வைரமுத்துவின் மகன் என்று @spinesurgeon சொல்ல, ஏங்க அவர் வைரமுத்துவோட பையன்னு ஏன் சொல்லல என்று மனைவி ஆதங்கப்பட்டார். அவரே அடக்கமா இருக்கும்போது, நான் என்னத்தை சொல்ல என்றேன். @lavanyaவும் என் மனைவியைப் போலவே வியக்க ஆரம்பித்திருந்தார். அதே நேரம் இருட்ட ஆரம்பித்திருந்ததால், அனைவரும் புறப்பட முடிவானது. ஆளாளுக்கு ஃபோன் நம்பர்களையும், டிவிட்டர், இ-மெயில் ஐடிகளையும் பரிமாறிக் கொள்ள, மணி 7.30, கடைசி நேர ஃபிளாஷ்கள் மின்னின.

@lakshmi கடைசிவரை பார்வையாளராகவே இருந்தார். அரட்டையில் வெகு சில வார்த்தைகளே பேசினார் என்பது பெட்டிச் செய்தி. @lavanjaj அவ்வப்போது சில கேள்விகளைக் கேட்டார், பதில்களை காதில் வாங்கிக் கொண்டாரா என்பது தெரியவில்லை. என் மனைவி டிவிட்டர் அல்ல என்பது உபரிச் செய்தி.

விடைபெறும் போது எனக்குத் தோன்றியது இதுதான். சந்திப்பு ஏற்பாடானது டிவிட்டர் வழியாக இருக்கலாம். ஆனால் சந்திப்பை சாத்தியமாக்கியது மனிதர்களை மனிதர்கள் புரிந்து கொள்ள உதவும் ஆர்வம் தான். இந்த ஆர்வம் அடிக்கடி சந்திக்கும் நட்பாக மாறலாம் அல்லது டிவிட்டுகளாகவே தொடரலாம்.

சந்திப்புக்கான பஞ்ச் லைன், அதே இரவில் @anbudan_bala விடமிருந்து வந்தது. அவர் @madhankarky வைரமுத்துவின் மகனா?  சொல்லவே இல்லையே என்று டிவிட்டியிருந்தார். டிவிட்டுகள் தொடரும்.

கடற்கரையில் தமிழ் டிவிட்டர்கள் - 02

கதை, கவிதை என கற்பனை சமாச்சாரங்களை எழுதும்போது, நேற்று நிறுத்தி, அடுத்த மாதம் தொடரலாம். நாம் விரும்பும் எதையும் எழுதலாம். ஆனால் சந்திப்புகளை உடனே எழுதிவிட வேண்டும். இல்லையென்றால், மனைவியின் ”வரும்போது இதயம் நல்லெண்ணெய் வாங்கிட்டு வாங்கதான்” ஞாபகத்தில் மிதக்கிறது. சந்திப்பில் நடந்ததெல்லாம் மறந்து போகிறது. நேற்று கே.கே. நகர் முனுசாமி சாலை வீட்டுக்குப் பக்கம் என்பதால் @parisalkaaran புத்தக வெளியீட்டு விழாவிற்குப் போயிருந்தேன். போன ஞாயிற்றுக் கிழமை பீச்சில் சந்தித்த @athisha வாசலில் எதிர்ப்பட்டு, இந்த ஞாயிற்றுக் கிழமை நீங்கயாரு என்றார்?

இப்படி சில யாருக்களும், நடந்தது என்னக்களும், அப்புறம்களும் மனதில் கபடி ஆடும்போது, கடற்கரையில் தமிழ் டிவிட்டர்கள் - 02 வை எழுத ஆரம்பிக்கிறேன். முன் பின் பார்த்திராதவர்கள், பீச் போல பொதுவான இடத்தில் சந்திக்கும்போது, காந்தி சிலை அருகில் என்று சொன்னால் அங்கேயே நின்றுவிட வேண்டும். கால் வலி என மணலில் நகர்ந்தால் தாமதமாக வருபவர்களை மிஸ் பண்ணிவிடும் அபாயம் உள்ளது. டிவிட்டர்களுக்கென்று தனியாக அடையாளம் எதுவும் இல்லை. அதனால் மற்றவர்கள் வந்துவிட்டார்களா என்று நொடிக்கொரு முறை திரும்பிப் பார்க்கும்போது சுண்டல் பையன்கள், குதிரை சவாரி அழைப்பர்கள் தவிர மற்ற அனைவருமே டிவிட்டர்கள்போலத்தான் இருக்கிறார்கள். அரட்டை காத்திருத்தலாக மாறுவதை தவிர்க்க யாராவது ஒருவர் முன்வந்து தன் மொபைல் நம்பரை அனைவருக்கும் தந்து காந்தி சிலைக்கு முதலிலேயே வந்து காத்திருக்க வேண்டும். #twitter-meet-tips-01
 சந்திப்பின் முதல் பாகத்தில் டிவிட்டர்கள் சந்திப்பு பற்றி சில கேள்விகள் கேட்டிருந்தேன். யாரும் (டிவிட்டரில் கூட) பதில் சொல்லவில்லை. மீண்டும் பதிலை எதிர்பார்க்காமல் இன்னொரு கேள்வி.
டிவிட்டர் வந்தவுடன் பிளாக் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது என்கிறார்கள். ஒப்புக் கொள்கிறீர்களா?
பதில் எதுவாக இருந்தாலும் பதிலாக இருக்கட்டும், எதிர் கேள்வியாக இல்லாமல்.

”எங்கள நெருங்கி உட்கார சொல்லிட்டு நீங்க எங்க எஸ்கேப்பு”, என்று இடைவேளை முடிந்து திரும்பி வந்த @icarusprakashஐ  கலாய்த்தார் @njganesh. அவர் பதில் மேலேயே, மற்ற டிவிட்டர்கள் காந்தி சிலைக்கு அருகிலேயே நிற்பதாக @vickytamil கண்டுபிடித்து, அறிவித்து அவர்களை வரவேற்க, மற்ற டிவிட்டர்களும் வந்து சேர்ந்தார்கள்.  பெயிண்ட் பால் விளையாட்டில் மாறி மாறி எதிராளியின் மேல் பெயிணட் தெளிப்பதைப் போல, அவர்கள் வரும்போதே மாறி மாறி நாங்களும் அவர்களும் கிளிக்க ஆரம்பித்துவிட்டோம்.

கிளிக் முடிந்ததும் நிறைய புன்னகைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. சீனியர் என்று டிவிட்டரில் அன்போடு கலாய்க்கப்படும் @anbudan_bala ஜீனியர்கள் போல டி-ஷர்டில் இளமையாக வந்தார். டைரக்டர் எப்படி இருக்கீங்க? வசந்தபவன் மீட்டிங் மிஸ் ஆனதால, நான் முக்கியமா உங்களையும், @icarusprakashயும்தான் பார்க்க வந்தேன். @ommachi - @lakshmi தம்பதியினர் புன்னகைத்ததும், நிச்சயம் நீங்க வந்துடுவீங்கன்னு தெரியும் என்றார். . நாங்க வந்து ரொம்ப நேரமாச்சு. காந்தி சிலைன்னு சொன்னதும் அங்கேயே நின்னுட்டோம், என்று புகாராக இல்லாமல் தகவலாகச் சொன்னார் @spinesurgeon. போட்டோ எடுக்கும்போது, பார்த்து கிளார் அடிக்கும் என்றார் பளபள வழுக்கையுடன். ஆனால் டிவிட்டர் போட்டோவை விட நேரில் மிக மலர்ச்சியாக இருக்கிறார். @njganeshன் அதகளமான கைகுலுக்கலில், யாருக்காவது கைவலித்திருக்கும். @luckykrishna, @athisha மற்றும் @icarusprakash ஆகிய மூவரும் வலைப் பிரபலங்கள் என்பது, டிவிட்டர்கள் டீம்-2ன் ”ஓ..தெரியுமே” புன்னகையிலேயே புரிந்தது. இந்த அறிமுகங்களில் பெண்கள் எப்படி கலந்து கொண்டார்கள் என்பதை கவனிக்கவில்லை.

ரொம்பக் கூச்சமாக அறிமுகம் செய்து கொண்டவர் @madhankarky. கல்லூரியின் கடைசி பெல் வரை காத்திருந்து படித்து வந்த மாணவர் போல இருந்தார். @spinesurgeonக்கு இணையாக தலையில் பளபளா காட்டியவர் @rgokul. பென் டிரைவ் போல செதுக்கிய தாடியில் வசீகரமாகத்தான் இருந்தார். அனில்கும்ப்ளே போல தோற்றமளித்த @rajeshpadman பெர்முடாஸில் ஹாய் என்றார். பக்கத்துலயே வீடும் ஆஃபீசும் இருக்காம். தினசரி வாக்கிங் வருவது போல கேஷீவலாக வந்திருந்தார். எல்லா அறிமுகங்களையும் பொறுமையாக கிளிக் செய்து கொண்டிருந்த வெங்கட்டின் முகத்தில் தொடர்ந்து மென் சிரிப்பு, கையிலிருந்த காமிரா கிளிக்கிக் கொண்டே இருந்தது. ஆனால் இருவாரமாகியும் இன்னமும் அவரிடமிருந்து ஃபோட்டோக்கள் வரவில்லை.

எல்லோரும் அமர்ந்தவுடன் வட்டம் பெரிதானது. ஏற்பாடு செய்தவர்தான் வரவேற்புரை என்று @njganesh அறிவிக்க, ஐயய்யோ நான் இல்ல என்று @vickytamil நழுவப்பார்த்தார். பிறகு தைரியமாகி, பேச்செல்லாம் கிடையாது. சுய அறிமுகம் போதும் என்று தன் பெயரையும், டிவிட்டர் ஐடியையும் கூறினார், செல்வக்குமார் - @isr_selva, பிரகாஷ்-@icarusprakash, Dr.Bruno-@spinesurgeon என ஒவ்வொருவராகத் தொடர maddhankarky-@madhankarky என்றார் மதன். அவ்வளவுதான் அடுத்த வினாடி, ரெண்டாம் வாய்ப்பாடை தப்பாகச் சொன்ன மாணவனை மிரட்டும் வாத்தியார் போல, அப்படின்னா என்று @njganesh அவரை அதட்டினார். மதன் ஒரு கணம் ஜெர்க் ஆனாலும் பெயரும், ஐடியும் ஒன்றுதான் என்று நிதானமானார்.

ஒரு கேள்வி - பெயரையும், டிவிட்டர் ஐடியையும் சொன்னால் அதற்குப் பெயர் சுய அறிமுகமா?
பதில் சொல்வதற்கு முன் ஒரு விஷயம். முந்தைய வரிக்கும் இந்த வரிக்கும் இடையில் 72 மணி நேரம் இடைவெளி இருக்கிறது. இதற்கு மேல் தாமதித்தால் எல்லாம் மறந்து போகும் என்ற பயத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

அரட்டையின் ஒரு பகுதி, ஜெயமோகன் எப்படிங்க இவ்வளவு எழுதறார் என்று ஆச்சரியத்தில் ஆரம்பித்து, ஏன் எழுதறார் என்ற கேள்வியில் முடிந்தது. ஏன்னா மக்கள் கூட கிடைக்கிற Connectivityதான் என்று தீர்ப்பு வழங்கினார் @luckykrishna. அதனால என்ன யூஸ்? பணமும் கிடையாது என்று சந்தேகம் கிளப்பிய லாவண்யா, நீங்க ஏன் சாருவை ரொம்ப சப்போர்ட் பண்றீங்க என்று அதிஷாவை நோக்கி கேள்வியை வீசினார். ஏன்னா சின்ன வயசுல இருந்து எனக்கு அவரைத் தெரியும். வளர்ந்து அவரை மாதிரியே எல்லா மேட்டர்லயும் பெரிய ஆளா ஆகணும்னு எனக்கு ஒரு ஆசை இருந்தது, என்றார் அதிஷா. எல்லா மேட்டர்லயும்னா கட்டிங் மேட்டர்லயா என்றார் @icarusprakash.


ஆனா ஒண்ணுங்க வெறும் டெக்ஸ்ட் ஃபைல்லயே சர்வரை ஃபுல்லாக்கிய பெருமை ஜெயமோகனுக்குதான் என்றார் @njganesh. நீங்கதான் சர்வரை மெயின்டெயின் பண்றீங்களா என்று @rajeshpadman கேள்வி கேட்க, ஆமாம் என்றார். ஜெயமோகன் மாதிரி ஆளுங்க பக்கம்பக்கமா எழுதறாங்க ஆனா ஒரு பக்கத்துக்கு மேல புரியல, என்றவர் @vicktamil? இவங்கள்லாம் பரவால்ல, சிலபேர் தமிழ்லதான் எழுதுவேன், இங்கிலீஷ் வார்த்தையை தொடவே மாட்டேன்னு அடம்பிடிக்கிறதெல்லாம் கொஞ்சம் அதிகம் என்றார் @spinesurgeon. ஆமாம் என்ற ஆமோதிப்பு குரல்களுக்கிடையில் @TBCDயின் தமிழ்பிடிவாதம் கொஞ்சம் வறுபட்டது. Scanஐ சுகேன் என்பதும், Firefoxஐ நெருப்பு நரின்னும் சொல்றதெல்லாம் காமெடி என்று  யாரோ சொல்ல, சுஜாதாவே அப்படி எழுதியிருக்காருங்க என்று இன்னொரு யாரோ (@spinesurgeon அல்லது @anbudan_bala) சொன்னார்கள். அட அவர் நகைச்சுவைக்காக அப்படி எழுதியிருப்பாருங்க என்று நான் சொன்ன போது, @lakshmi 5வது முறையாக எழுந்து சென்று மொபைலில் பேசிவிட்டு வந்தார். ஜெயந்தியும், லாவண்யாவும் 3வது முறையாக தங்களுக்குள் எதற்க்காகவோ சிரித்தார்கள்.அதிஷாவும், @luckykrishnaவும் 4வது முறையாக நாங்க (கிழக்கு பதிப்பகம்) உலக சினிமாவுக்கு புறப்படணும் என்றார்கள். உடனே @spinesurgeon நீங்க போங்க, பின்னாலயே நானும் அரை மணியில வர்றேன் என்றார். இந்த சந்தடியில் திடீரென நமது முன் ஸ்வீட் பாக்ஸ். யாரு கொடுத்தது என்று நிமிர்ந்தால் பூர்ணகும்ப ஸ்வீட்ஸ் வழங்கியவர் நான்தான் என்ற புன்னகையுடன் @madhankarky.


ஸ்வீட் சாப்பிட்டு முடிந்த பின், நாங்க புறப்படறோம் என்று எழுந்துவிட்டார்கள் அதிஷாவும், @luckykrishnaவும். எல்லோரும் டாட்டா சொன்னபோது, ஒரு நிமிஷம் குரூப் போட்டோ எடுத்துக்கலாம் என்றவர் வெங்கட். சரி என்று ஆளாளுக்கு போஸ் கொடுக்க தயாராகி நிற்க காமிராவுடன் நின்றவர்கள் வெங்கட்டும், மதன் கார்க்கியும். பிறகு வெங்கட்டையும் நிற்கச் சொல்லிவிட்டு இரண்டு காமிராக்களையும் தானே இயக்கிய மதன் எந்த குரூப் போட்டோவிலும்  இல்லை.

பதிவு ரொம்ப நீளமாக இருந்ததால், வெட்டப்பட்ட பகுதிகள் அடுத்த பகுதியில்.

Tuesday, February 9, 2010

கடற்கரையில் தமிழ் டிவிட்டர்கள் - 01

நிலம் ஒன்றே,
சேரிக்கும் சீவாலயத்துக்கும் ஜலம் ஒன்றே,
அலம்புவதற்க்கும் பூசைக்கும் குளம் ஒன்றே,
தன்னைத்தான் அறிந்தவனுக்கே . . .

இதை பேச்சுப் போட்டியில் பேசி பரிசு வாங்கி மறந்தவர்களும், மறக்காவிட்டாலும் பின்பற்ற முடியாதவர்களும், மறந்தாலும் பின்பற்ற முயற்சிக்கிறவர்களும் ஒன்று கூடி கும்மியடிக்கிற ஆன்லைன் மடம் டிவிட்டர்.

தினப்படி வேலைகளைத் தவிர்த்து, டிவிட்டரைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தால் சங்க காலம் முதல், அவதார் காலம் வரை 140 எழுத்துகளில் சுருங்கிய தகவல்கள் சற்றும் எதிர்பாராமல் கிடைக்கலாம். ஆனால் அத்தனையும் சளைக்காமல் ஓடும் நதி போல சளசளவென விரைவாக . . .

சரி எதற்க்காக இந்த டிரையலர்? டிவிட்டர் நதியில் தகவல்களையும், விமர்சனங்களையும், வெற்று அரட்டைகளையும் அள்ளிக் கொட்டுபவர்கள் நேரில் சந்திக்க நேர்ந்தால்? பிப்ரவரி 7 ஞாயிற்றுக்கிழமையில் அப்படி ஒரு சந்திப்பு மெரினா பீச்சில் காந்தி சிலை அருகில் நிகழ்ந்தது.

சந்திப்பை பற்றி துவக்குவதற்குமுன் ஒரு கேள்வி. டிவிட்டர்கள் சந்திப்பு எதற்கு?
ஏய் . . .
வாடா சும்மா போய் யாரெல்லாம் வராங்கன்னு பார்த்துட்டு வரலாம்.
Bee . . . மாதிரி நேரில் போய் ரெண்டு கொட்டு கொட்டலாம்.
சீய் . . . இந்த ஆளு அவ்வளவுதானா/இவ்வளவு பெரியவனா என்று நொந்து/வியந்து போகலாம்.
டீ . . . பிஸ்கெட்டை அங்க போய் ஓசியில சாப்பிடலாம்.
ஈ . . . ன்னு இளிச்சு நிறைய ஃபிரெண்டுகளை சம்பாதிக்கலாம்.
ஃ . . . மேற் கூறிய எல்லாம்.
ஃ2 . . . மேற் கூறிய எதுவுமில்லை.

இதில் எது உங்கள் பதில் என்பதை யோசித்துக் கொண்டே அடுத்த வரிக்கு நகருங்கள்.

சந்திப்பு ஆரம்பித்த கதை
எழுதுவதற்கு மிட்நைட் கவிதையும், வாசிப்பதற்கு லைம்லைட் பிளாகுகளும் சிக்காத சில இரவுகளில் வெறுமனே தமிழ் டிவிட்டுகளை கவனித்துக் கொண்டிருப்பேன். அப்படிப்பட்ட ஒரு இரவில் நியுஜெர்ஸி டிவிட்டர் @njganesh நான் சென்னையில் இருக்கிறேன் என்றார். உடனே @vickytamil நாம் சந்திக்கலாமா என்று பதிலுக்கு டிவிட்டினார்.

 இடையில் வேறு வேலைகளைப் பார்த்துவிட்டு மீண்டும் நுழைந்தபோது எங்கே சந்திக்கலாம் என்று கேட்டு (@elavasam, @icarusprakash, @athisha, @luckykrishna, @anbudan_bala) டிவிட்டியவர்களின் எண்ணிக்கை கூடியிருந்தது. எந்த முன் உத்தேசமும் இல்லாமல் ஒரு சினிமா தியேட்டருக்குள் நுழைவது போல நானும் வர்றேன் என்று டிவிட்டினேன். பட்டென பவர்கட் போல டிவிட்டரே அமைதியாகிவிட்டது. என் மிட்நைட் கவிதைக்கு மிரண்டு அனைவரும் பதுங்கிவிட்டார்களோ என சந்தேகித்தபோது @mu75 எத்தனைபேர் என்று கேட்டார். நான்தான் இது வரைக்கும் ஆட்டத்திலேயே இல்லையே, இருந்தாலும் டிவி பார்த்து ஸ்கோர் சொல்வது போல ஆறோ ஏழோ என்றேன். கேட்ட அடுத்த வினாடி @priyaraju ஆஜராகி ”இந்த முறை மன்னியுங்கள், நண்பர்களே. சில உறவினர்களை நாளை சந்திக்க உள்ளேன். அடுத்த முறை சந்திப்போம்” என்று ஸ்கோரைக் குறைத்தார். அதே நேரம் பளிச்சென @vickytamil ஆஜராகி "இதுவரைக்கும் 12 + 1 பேர்" என்று ஸ்கோரை ஏற்றினார். யாரந்த +1 எனக்கேட்டதற்கு இதுவரைக்கும் பதில் இல்லை. இடையில் @elavasam காலையில் வைக்கமுடியுமா நானும் வரப்பார்க்கிறேன் என்றார். நான் மீண்டும் இடத்தையும் நேரத்தையும் சொல்லுங்க என்று கேட்டவுடன் 4 மணி காந்தி பீச் என்று ஒருவழியாக @vickytamil அறிவித்தார்.

திடீரென @ommachi ஆஜராகி ”குடும்பத்துடன் வரலாமா? ஆண்டீர் மட்டுமேவா?” என்றார். இடையில் புகுந்த @lavanyaj This tweetup is for guys alone? என்று அதையே ஆங்கிலத்தில் கேட்டார். யாரும் பதில் சொல்லாததால் @ommachi I would like to come with the kid அப்போதான் நம்மள (வசதியாய்) கண்டுகாம வுடுவாங்கோ :)  என்றவுடன் சூட்சுமம் புரிந்து நானும் மனைவி ஜெயந்தி மற்றும் மகளுடன் வருவதாக சம்மதித்தேன். ஆனால் @lakshmi ஹோம்வொர்க் செய்து தருவதாக சம்மதித்தும், என் மகள் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள். இதற்கிடையில் @anbudan_bala குடும்பஸ்தர்களுக்கு ஒரு வரவேற்பு டிவிட்டை தட்டிவிட @lavanyajவும் வருவதாகச் சம்மதித்தார்.

கடற்கரையில்
திரும்பிப் பார்க்கையில்
என் காலடித் தடங்கள் இல்லை.

எந்தக் காலத்திலோ கணையாழியில் படித்த ஹைகூவை இங்கு பயன்படுத்திக் கொள்கிறேன். என் காலடித் தடங்கள் எங்கே போனதாம் என்று கேட்பவர்கள் அடுத்த வரிக்கும், கேட்காதவர்கள் அடுத்த பாராவுக்கும் தாவலாம்.
”என் பின்னால் டிவிட்டர் நண்பர்கள் வந்துகொண்டிருந்ததால் என் காலடித் தடங்கள் மறைத்துவிட்டன” என்பது முந்தைய ஹைகூவில் எழுதப்படாத (எழுதக்கூடாத) கடைசி வரி.

காந்திசிலையை நெருங்கியபோது
@vickytamil கிட்டத்தட்ட நான் மனதில் வடித்திருந்தது போலவே தேகம். முன் நெற்றி மட்டும் அதிகம். ஆனால் ”வாங்க அவர் நான் தான் இவர்” என்று அதிர்வேட்டு போல வரவேற்ற @njganeshன் சரீரமும் சாரீரமும் (கமெண்ட் உபயம் @anbudan_bala) நான் எதிர்பாராதது. மனிதர் செம ஜாலி பட்டாசு. ஃபிங்கர் சிப்ஸ் போல பொறாமைப்பட வைத்த ஒல்லி உடம்புடன் மையமாகச் சிரித்து கைகுலுக்கி வரவேற்றார் @luckykrishna. எனக்குப் போட்டியாக @njganesh கூலிங்கிளாஸை எடுத்து மாட்டி அட்டகாசமாக போஸ் கொடுக்க காமிரா கிளிக்க ஆரம்பித்தது. ஓரிரு கிளிக்குகள் முடிவதற்கு முன் பீச்சுக்காற்றில் சுடிதார் போட்டு ஒரு காற்றாடி பறந்து வந்தது போல இருந்தது. பார்த்தால் நம்ம @lavanyaj என் மனைவி துணைக்கு ஆள் கிடைத்த சந்தோஷத்தில் லாவண்யாவிற்கு ஹலோ சொல்ல அது ஒரு கிளிக் ஆனது. கொஞ்ச நேரத்தில்
லாரிக்கு ஒதுங்குகிற மொபெட் போல @athisha வந்தார். போட்டோவுக்கு போஸ் கொடுக்க அநியாயத்துக்கும் பிகு செய்தார்.


சிறிது நேரத்தில் @ommachi @lakshmi தம்பதியர் குழந்தையுடன் வருகை தந்தனர். பரஸ்பர கைகுலுக்கல் மற்றும் குழந்தை கொஞ்சலுக்குப் பின் ”இவர் உண்மையிலேயே நியுஜெர்சிதானா?” #doubt01 என்று என் மனைவி @njganeshஐ சந்தேகித்தார். அட ஆமாங்க. நான் என் பேச்சை வச்சு என்னை சைதாப்பேட்டைன்னு முடிவு பண்ணிடாதீங்க. தமிழ்லயே டி-ஷரட் போடற அளவுக்கு பற்று அதிகமானதால என்கிட்ட அமெரிக்க வாசனை கம்மி என்றார்.

அதற்குள் பெண்கள் தனிக் கூட்டணி அமைக்க, @ommachi மட்டும் குழந்தைக்கு வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்தார். காலையில ரிப்போர்ட்டர், மத்தியானம் டிவிட்டர், அப்புறம் பிளாகர் அப்படின்னு தினசரி டிரிபிள் ரோல் பண்றோம் என்றார்கள் அதிஷாவும், லக்கியும்.அவர் திரைப்படக்குழு கதை, திரைக்கதை, வசனங்கள், பாடல்களை முடித்துவிட்டு நடிகர் நடிகைகளை தேடிக் கொண்டிருக்கிறது என்றேன் நான். விக்கி தான் சார்ந்திருக்கும் டாட்காம்கள் பற்றி ஏதோ சொன்னார்.  கணேஷ் லோக்கல் கடை ஒன்றில் கத்தரிக்காய் வாங்குவது போல செல் போன் பர்ச்சேஸ் கதையைச் சொன்னார். இதற்குள் அரை மணி நேரம் கடந்து கால் வலிக்க ஆரம்பித்ததும்,  நாம உள்ள மணல்ல போய் உட்காரலாம். மத்தவங்க மெதுவா வரட்டும் என்று முடிவானது. முதலில் வந்த டிவிட்டர் குழு காந்தி சிலையை விட்டு உள்ளே நகர்ந்தது.

நகர்ந்த பின் என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ளும் முன் இன்னும் சில கேள்விகள்.
எழுதியவை இலகுவில் மறந்து எழுதியவர்களே அதிகம் நினைக்கப்படுவதால் டிவிட்டுகளை ஜங்க் ஃபுட், ஜங்க் ஃபிக்ஷன் போல ஜங்க் சொற்கள் என்று சொல்லலாமா?
கோடம்பாக்கத்திற்கு பஸ் ரூட் சொல்வது போல எளிதாக இருப்பதால் பேப்பர் பேக், வெர்னாகுலர், மாத நாவல்கள் வரிசையில் டிவிட்டுகளை சேர்க்கலாமா?
வடிவேலு - சிங்கமுத்து மோதல்கள் போன்ற மெலிதான விஷயங்களைக் கூட தீவிரமாக அலசிக் காயப்போடுவதால் ஜங்க்கர்கள் என்று டிவிட்டர்களை அழைக்கலாமா? யோசிப்பவர்கள் இங்கேயே நிற்கவும், மற்றவர்கள் அடுத்த வரிக்கு வந்துவிடலாம்.

பீச் மணலில் வட்டமாக வசதியாக உட்கார்ந்தபின்னும் என்னை ஆச்சரியப்படுத்திய சமாச்சாரம், நமது @ommachiயின் அமைதி. கடந்த (வசந்தபவன்) டிவிட்டர்கள் சந்திப்பில் எஃப்எம் ரேடியோ போல எங்களைக் கவர்நதவர், இந்த முறை விருப்பம் கேட்ட நேயர் போல மகளுடன் காத்தாடி விட்டுக் கொண்டிருந்தார். அதற்குள் @luckykrishnaவும் @athishaவும் தங்கள் டிவிட்டர் அவதாரம் முடிவதாகவும், இனி உலகசினிமா இரசிகனாக அவதாரமெடுத்து கிழக்குப் பதிப்பகம் செல்லவேண்டுமென்றார்கள் வாட்சைப் பார்த்தபடி. இப்பதான் ஓபனிங் டைட்டில் போட்டிருக்கோம் அதுக்குள் எண்ட் டைட்டிலா?  என்று நொந்த வேளையில் பெண்கள் தங்களுக்குள்ளும், மொபைலிலும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

@njganeshன் இடிக்குரலில் புதியதலைமுறை மாத இதழின் தொடர் விளம்பரங்களைப் பற்றி பேச்சு யு டர்ன் அடித்தபோது, SRM குழு கல்விக்கென புதிய சானல் துவங்குகிறார்களாமே என்ற என் சந்தேகத்தை மறுத்தார்கள் @luckykrishnaவும் @athishaவும். டிவி பற்றி பேச்சு வந்தவுடன் தூர்தர்ஷனில் எனது நிகழ்ச்சி மற்றும் துபாய் பயண விபரங்களை கேட்டுக்கொண்டார் @vickytamil. @ommachiக்கு காத்தாடி அலுத்துவிட்டது போல, மற்றவர்கள் எங்கே என்று தூரப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.
அதே திசையில் உற்று நோக்கிய விக்கி, @icarusprakash அப்பவே வந்துகிட்டிருக்கேன்னு சொன்னாரே எங்க காணோம் என்று முணுமுணுத்தபோது, கையில் காமிராவுடன் அவர் வந்தார்.

டிவிட்டர்கள் மற்றும் பதிவர் சந்திப்புகளில் ஆளாளுக்கு ஒரு காமிரா இருப்பது வசதி. போஸ் கொடுக்கத் தேவையின்றி, அவரை விட்டுட்டோமா, நாம இருக்கோமா என்ற கவலையின்றி கிளிக்குகளுக்கிடையில் இயல்பாக அரட்டை நடக்கிறது. அதற்கு இந்த சந்திப்பை பற்றிய புகைப்படங்களே சாட்சி.
.
@icarusprakash @luckykrishna மற்றும் @athisha இவர்கள் மூவரும் சந்திப்பு எக்ஸ்பர்டுகளாக இருக்கிறார்கள். மிக இயல்பாக இணைந்து மிக இயல்பாக விலகுகிறார்கள். பல்வேறு சந்திப்பர்களைப் பற்றி காமெடியாக அலசுகிறார்கள். இன்னைக்கு நம்மளப் போலவே இன்னொரு குரூப் மஞ்ச சட்டையில சந்திக்கிறாங்க என்றார் @luckykrishna. ஆங்கிலத்தில் மட்டுமே டிவிட்டும் குழு ஒன்றிடம் நானும் வரலாமா என்று தமிழில் விண்ணப்பித்தேன். அதற்கும் ஆங்கிலத்தில்தான் பதில் தந்தார்கள் என்றார் @athisha. பைக்கை பீச்சுலயே விட்டுட்டு உலக சினிமாவுக்கு போயிட்டு வந்திடலாமா என்று @luckykrishnaவும் @athishaவும் சுறுசுறுப்பு காட்டியபோது @lavanyaj மற்றும் @njganesh ஆகிய இருவரும் அவர்களிடம் இன்டர்வியு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

@ommachi இன்னும் அதிசயமாக அமைதி காத்தார். வட்டம் பெரிசா இருக்கு கொஞ்சம் கிட்ட உட்காரலாமே என்று @icarusprakash யோசனை சொல்ல, வட்டம் சுருங்கியது. ஆனால் அடுத்த வினாடியே @icarusprakash எழுந்து கொண்டு இதோ வர்றேன் என்று கிளம்பினார். எதற்கு என்பது நான் சொல்லாமலயே உங்களுக்குத் தெரியும்.

இடைவேளை


@njganesh தனது பையை திறந்து எடுத்தது என்ன?
@anbudan_bala @spinesurgeonனிடம் கேட்ட அதிரடி கேள்வி என்ன?
@madhankarky யார் என்பது எப்போது வெளியானது?

இது போன்ற அதிரடி சஸ்பென்ஸ் கேள்விகளுடன் அடுத்த பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது.தொடர்ச்சியை படிக்க அடுத்த பதிவுக்கு காத்திருங்கள்.