Saturday, August 9, 2014

தான் வீசிய ஷார்ட்பிச் பந்துகளில் தானே வீழ்ந்த இந்தியா

லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்தை வென்றதற்கு காரணம் இஷாந்த் வீசிய ஷார்ட்பிச் பந்துகள்தான். அப்படி பந்து வீசச் சொன்னது கேப்டன் தோனி. எல்லோரும் அதற்காக தோனியை புகழ்ந்து கொண்டிருக்க, ராகுல் டிராவிட் மட்டும் ஒரு வித்தியாசமான கருத்தைச் சொன்னார்.

டெஸ்ட் மாட்ச்களுக்கு ஷார்ட்பிட்ச் பந்துகள் ஒத்துவராது. வெற்றி பெற்றுவிட்டோம் என்பதால் இதை சரி என்று நினைக்கக்கூடாது. இந்திய பவுலர்கள் இங்கிலாந்து பாட்ஸ்மான்களின் பேட் விளிம்பை(Genuine Edge) தொடுவதுபோல் பந்துவீச வேண்டும். அதுதான் தொடர்ச்சியான பலன் தரும் என்றார்.

டிராவிட் சொன்னது சரி. டெஸ்ட் மாட்சுகளில் ஐந்து நாட்கள் என்பதால் ஷார்ட்பிட்ச் பந்துகளை தவிர்த்துக்கொண்டே இருக்கலாம். பொறுமையாகக் காத்திருந்து இலகுவாக வருபவற்றை மட்டும் பவுண்டரிக்கு விரட்டலாம். இங்கிலாந்து இந்த எளிய பாடத்தை மறந்துவிட்டு டிவண்டி டிவண்டி போல விளாச ஆரம்பித்ததும் வரிசையாக தவறுகள் செய்து தோற்றுப்போனார்கள். ஆனால் இதை உடனடியாக உணர்ந்து கொண்டு அடுத்தடுத்த டெஸ்ட்களில் ஷார்ட்பிட்ச் பந்துகளை கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் இதை உணராமல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தம் கட்டி ஷார்ட்பிட்ச் வீசியே களைத்துப்போனார்கள். இங்கிலாந்து எளிதாக வெற்றி பெற்றது.

டிராவிட் சொன்னதை கவனித்துக் கேட்டிருந்தால் இந்தியா ஒரு வெற்றிகரமான அணியாக இங்கிலாந்திலிருந்து திரும்பியிருக்கலாம். ஆனால்... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். உலகின் பிரபலமான கேப்டனாக இருந்தாலும் டிராவிட் போன்ற அனுபவசாலிகள் சொல்வதை கேட்க வேண்டும் என்பதுதான் இந்த சீரிஸ் கற்றுத்தந்திருக்கும் பாடம்.