Monday, August 30, 2010

டாய் கடவுளே ...

தர்மபுரியில் பஸ் எரிக்கப்பட்டு 3 மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில், 3 அ.தி.மு.கவினருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இந்த வழக்கில் சாட்சியங்கள் எல்லாம் பின் வாங்கினார்கள். பார்க்கவே இல்லை என்றார்கள். ஃபைல்கள் காணாமல் போயின. மறைமுகமாக மிரட்டினார்கள். வாய்தா..வாய்தா..வாய்தா என்று இழுத்தடித்தார்கள். இரக்கமின்றி செயல்பட்ட அ.தி.மு.வினருக்கு சாதகமாக வழக்கு திருத்தப்பட்டது.

ஆனால் எல்லோரும் கைவிட்டாலும், பின் வாங்கினாலும், அரசியலும், அரசாங்கமும், நியாயங்களும், தர்மங்களும் எதிராக இருந்தாலும், வீராசாமி என்ற ஒரு தனி நபர் மட்டும் தொடர்ந்து போராடினார்.

அவர், அஞ்சவில்லை, அயரவில்லை, சலிக்கவில்லை, விட்டுக் கொடுக்கவில்லை. இந்த சம்பவத்தால் மனைவி மனநிலை பாதிக்கபட்டாலும், கண்ணீருக்கிடையில் கள்ளத்தனங்களை வென்றார்.

அவர்...
அந்த பஸ்ஸில் எரிந்து போன மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி! அவருக்கு என் வணக்கங்கள்!

காலம் கடந்தாலும், சட்டம் வென்றது, நியாயம் வென்றது, தர்மம் வென்றது என்று இந்த சமூகம் மார் தட்டிக் கொண்டாலும், அநியாயமாக பறிபோன உயிர்களுக்கும், அதை நினைத்தே அழுது கொண்டிருக்கும் உயிர்களுக்கும், யார் என்ன ஆறுதல் சொல்ல முடியும்.

டாய் கடவுளே ... எனக்கு உன்னை பிடிக்கவில்லை!