Saturday, July 19, 2014

MH 17 விமானம் சுடப்பட்ட மர்மம் : அமெரிக்கா - ரஷ்யா சண்டையாகிக்கொண்டிருக்கிறது.


மலேசியவிமானம் MH 17 சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் பெரிய அண்ணன்களான அமெரிக்க, ரஷ்ய சண்டையாக மாறிக்கொண்டிருக்கிறது. 

33,000ம் அடி உயரத்தில் பறக்கிற விமானத்தை சுட்டு வீழ்த்த வேண்டுமானால் வலிமையுள்ள ஏவுகணை வேண்டும். அதை துல்லியமாக இயக்க நன்றாக பயிற்சி பெற்றவர்கள் வேண்டும். அப்படிப்பட்ட ஏவுகணையும், இயக்கும் பயிற்சியும் உக்ரைன் நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கு இருக்க வாய்ப்பு உண்டு. 

உக்ரைன் நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா தொடர்ந்து பயிற்சியும் ஆதரவும் கொடுத்துவருகிறார்கள். ஏவுகணை கிளர்ச்சியாளர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியிலிருந்துதான்  ஏவப்பட்டுள்ளது. எனவே ஏவுகணை இயக்கப்பட்ட விதத்தையும், ஏவப்பட்ட பகுதியையும் கவனிக்கும்போது எல்லா சந்தேகங்களும் உக்ரைன் கிளர்ச்சியாளர்களை நோக்கி குவிகிறது. 

விமானத்தை சுட்டு வீழ்த்த உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவி செய்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா நேரடியாகவே குற்றம் சுமத்துகிறார்.  

சமீபகாலமாக ரஷ்யா மீண்டும் தலையெடுக்க முயல்வதும், அமெரிக்கா எரிச்சலுடன் கவனிப்பதும் நடந்துகொண்டே இருக்கிறது. எனவே அமெரிக்காவின்  இந்தக் குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? என்பதை கணிப்பது கடினம்.

உக்ரைன் அதிபர் படு கோபத்தில் இருக்கிறார். மது குடித்த கொரில்லாக்களால் இதைச் செய்ய முடியாது. நிச்சயம் ரஷ்யாவின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள்தான் இதைச் செய்திருப்பார்கள் என்கிறார் காட்டமாக.

விமானம் வீழ்ந்து கிடக்கும் பகுதி தற்போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பயணிகளின் உடல்களை அவர்கள் தான் கண்டுபிடித்து சேகரித்து வருகிறார்கள். இதனை கண்காணிக்க யாரையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. தைரியமாக நெருங்கிய பத்திரிகையாளர்களை வானத்தை நோக்கி சுட்டு விரட்டியடித்திருக்கிறார்கள். அப்பாவி பயணிகளின் உடல்கள் கொடுமையான வெப்பத்தில் கிடக்கின்றன. எனவே அவற்றை விரைவில் குலைந்து போகாமல் தடுக்க நாங்கள் பத்திரப்படுத்தி வருகிறோம் என்கிறார்கள். ஆனால் அவர்கள் தடயங்களை அழிக்கிறார்கள் என்று ஒபாமாவும், உக்ரைன் அதிபரும் குற்றம்சாட்டுகிறார்கள். சர்வ தேச மனித உரிமை ஆர்வலர்களை ஒரு குறிப்பிட்ட எல்லை வரை அனுமதித்துவிட்டு, அந்தப் பகுதி மக்கள் எவருடனும் பேசக்கூடாது எனச் சொல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

பிளாக் பாக்ஸை காணோம் என்கிறது உக்ரைன். விபத்து நடந்த முதல் சில மணி நேரங்களிலிருந்தே ரஷ்யாவை குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டது அமெரிக்கா. ஒபாமாவே நேரடியாக ரஷ்யாதான் காரணம் என்கிறார். இது உக்ரைன் உள்நாட்டுப்பிரச்சனை அல்ல. இதில் உலக நாடுகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளது. எனவே மற்ற நாடுகளும் இதில் தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்று உக்ரைன் பிரச்சனையை வழக்கம்போல தனது ஸ்டைலில் சர்வதேசப் பிரச்சனையாக்க அமெரிக்கா முயல்கிறது. ரஷ்யாவோ அசரமாட்டேன்கிறது. இன்னும் விசாரணையே துவங்கவில்லை. அதற்குள் ஏன் தீர்ப்பு தருகிறீர்கள் என்று அமெரிக்காவின் மேல் பாய்கிறது. உக்ரைன் உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பே இல்லை என்று நற்சான்றிதழ் தருகிறது. இப்படி மாறி மாறி அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு அப்பாவி மக்களையும், நாடுகளையும் பலிகொடுக்கிறார்களோ என எனக்குத் தோன்றுகிறது.


ஆனால் முக்கியமான சில கேள்விகள் இருக்கின்றன. உக்ரைன் நாட்டு கிளர்ச்சியாளர்கள் மலேசிய விமானத்தை ஏன் சுட்டு வீழ்த்தவேண்டும்? அதனால் அவர்களுக்கு கிடைக்கும் அரசியல் ஆதாயம் என்ன? ரஷ்யாவின் உத்தரவை ஏற்று இந்த தாக்குதலில் ஈடுபட்டார்கன் எனச் சொல்வது உண்மையாக இருந்தால், ரஷ்யாவிற்கு இதனால் என்ன இலாபம் என்பது தெளிவாகத்தெரியவேண்டும்.

இந்தக் கேள்விகளுக்கு ரஷ்யா வாய் திறக்கப்போவதில்லை. ஆனால்  அமெரிக்காவோ, உக்ரைன் அதிபரோ பதில் சொல்வார்கள் என்றால், மர்ம முடிச்சுகள் அவிழக்கூடும்.

Wednesday, July 16, 2014

கேப்போம்ல : முதலமைச்சராக செயல்பட இன்னும் என்னதான் வேண்டும் ஜெயலலிதாவிற்கு?

ஒரு முதலமைச்சராக செயல்பட இன்னும் என்னதான் வேண்டும் ஜெயலலிதாவுக்கு?
சட்டசபையில் எதிர்கட்சிகளே கிடையாது. பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட எதிர்க்கட்சி.
இங்கு இவர் ஆட்சி. மத்தியில் அவருக்குப் பிடித்த மோடியின் ஆட்சி.
அவருடைய எதிரிகள் கருணாநிதியும், காங்கிரசும் வீழ்ந்து கிடக்கிறார்கள்.

ஆனாலும் இன்னமும் ஹோல் சேல் மளிகைக்கடை முதலாளி போலவே செயல்படுகிறார். தான் முதலமைச்சர் என்பதையே மறந்துவிட்டார். 

எதைக் கேட்டாலும் மலிவு விலை கொசுறு கொடுத்து ஃபோட்டோ எடுத்துக்கொள்கிறார்.
மின்தடை இருக்கே என்றால், மின் தடை இல்லை மின்வெட்டுதான் இருக்கு என்று வார்த்தைகளால் ஏமாற்றுகிறார்.

இலங்கைப் படையினரால் இன்னமும் மீனவர்கள் கைது தொடர்கிறதே என்றால், கச்சத் தீவை மீட்போம் என்கிறார். எப்போது என்றால் காவிரிக்காக போராடுவோம் என்கிறார். காவிரி என்ன ஆச்சு என்றால் முல்லைப் பெரியாருக்கு தாவுகிறார். முல்லைப் பெரியார் பிரச்சனைக்கு என்ன வழி என்றால் மத்திய அரசை கை காட்டுகிறார். மத்திய அரசு அந்த 7 பேரை விடுதலை செய்யுமா என்றால், கருணாநிதி ஆட்சி சரியில்லை என்கிறார்.

நடந்துகொண்டிருப்பது இவருடைய ஆட்சி. ஆனால் இவர் கருணாநிதி ஆட்சி நடக்கிறது என நினைத்துக்கொண்டிருக்கிறாரோ என்று சந்தேகம் வருகிறது. அவரை மக்கள் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவரை எதிர்த்து அறிக்கைவிட்டால் அதுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது போல செயல்படுகிறார்.

டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவது. அந்த வருமானத்தில் மலிவு விலை அம்மா பிராண்டுகளை அறிமுகப்படுத்துவது, கருணாநிதியை திட்டி அறிக்கை விடுவது. இவற்றைத் தவிர இந்த 3 ஆண்டுகளில் உருப்படியாக எதையுமே செய்யவில்லை ஜெயலலிதா.

மீண்டும் கேட்கிறேன், அரசியல் வானிலை முற்றிலும் அவருக்கு சாதகமாக இருந்தாலும் ஏன் செயல்பட மறுக்கிறார்? சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அவரே கற்பனை செய்யாத அளவிற்கு மக்கள் அரசியல் வெற்றியை தந்திருக்கிறார்கள். பதிலுக்கு கொஞ்சமாவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். நீண்டகாலத்திட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். ஆனால் 3 ஆண்டுகள் ஆனபின்பும் அதற்கான அறிகுறியே இல்லையே. இன்னும் என்னதான் வேண்டும், ஜெயலலிதாவுக்கு?

#கேப்போம்ல  

ராமானுஜம் - திரைக்கதை இல்லாத திரைப்படம்

திரு. ஞானராஜ சேகரன் அற்புதமான, அவசியமான ஒரு பணியை செய்து கொண்டிருக்கிறார். பாரதியார், காமராஜர், பெரியார் மற்றும் ராமனுஜம் என நாம் மறந்த மேதைகளின் வாழ்க்கைகளை தனது திரைப்படங்களின் வழியாக பதிவு செய்கிறார். அடுத்த தலைமுறைக்கு இவர்களின் வாழ்க்கையை அறிமுகப்படுத்த இப்படி ஒரு பதிவு அவசியம் தேவைப்படுகிறது. அதற்காக ஒரு சபாஷ்.

ஆனால் . . . அவருடைய முயற்சிகள் எப்போதும் மேலோட்டமாகவே இருக்கின்றன. அவருடைய முயற்சியில் ஆழம் இல்லை. கதையாக நிகழ்வுகளை வரிசைப்படுத்திவிடுகிறார். இது மிகவும் கடினமானது. ஆனால் ஒருபோதும் கதையை திரைக்கதையாக்க அவர் மெனக்கெட்டதில்லை.

ஒருவரின் வாழ்க்கையை கதையாக வரிசைப்படுத்துவதை விட, ஒரு திரைப்படத்திற்கு ஏற்ற திரைக்கதையாக மாற்றுவது மிக மிக சவாலான ஒரு விஷயம். இந்த சவாலுக்கு அவர் ஒரு போதும் தன்னை உட்படுத்திக் கொண்டதில்லை. மோகமுள்ளில் துவங்கி ராமானுஜன் வரை அவர் திரைக்கதை என்ற ஏரியாவிற்குள்ளேயே வரவில்லை. அவருடைய அத்தனை படங்களும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தாதற்குக் காரணம் திரைக்கதையில் அவர் கவனம் செலுத்தவே இல்லை என்பதுதான்.

ராமானுஜன் படத்தில் அவர் இந்தக் குறையை சரி செய்திருப்பார் என நினைத்தேன். ஆனால் இதில் இன்னும் மோசம். ராமானுஜன் வாழ்க்கையைப் பொறுத்தவரை நாம் அறிந்தது மிக மிக சொற்பமே. அதனால் சுவாரசியமான நிஜ சம்பவங்கள் இல்லவே இல்லை. திரைக்கதாசிரியருக்கு ஒரு வகையில் இது அனுகூலம். கதையை அடுத்தடுத்து நகர்த்துவதற்கும், ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்திற்கு நகர்வதற்கும் புத்திசாலித்தனமாக சம்பவங்களை கற்பித்து எழுதிக்கொள்ளலாம்.

ஆனால் துளியும் திரைக்குத் தேவையான கற்பனை ஏதுமின்றி துண்டுத் துண்டுக் காட்சிகளாக படம் நகரும்போது மனம் ஒன்ற மறுக்கின்றது. நல்லவேளையாக போரடிக்கும்போதெல்லாம் விசிலடித்து, கூச்சலிட்டு மற்றவர்களை இம்சிக்கும் எவரும் வந்திருக்கவில்லை. அதனால் மொத்த தியேட்டரும் அமைதியாக எந்த ஒன்றுதலும் இல்லாமல் இடைவேளை வரை காத்திருந்தோம்.

ராமானுஜன் என்ற கணித மேதை நமக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பம்தான் அந்த பொறுமையைக் கொடுக்கிறது. இந்தப்படம் நாம் அறியாத யாரைப்பற்றியோ இருந்திருந்தால் நான்கைந்து காட்சிகளுக்குள் பொறுமையிழந்திருப்போம்.

ராமானுஜன் தனது கணித மேதைமையால் முதலில் வகுப்பாசிரியரை ஆச்சரியப்படுத்துகிறார், அடுத்து கோவில் பட்டரை ஆச்சரியப்படுத்துகிறார், அதற்கடுத்து வயதில் பெரிய பட்டதாரிகளை ஆச்சரியப்படுத்துகிறார், பின்னர் புரொபசரை, பிரின்ஸிபாலை, ஊர் பெரியவரை, கலெக்டரை, சென்னை பல்கலைக்கழகத்தை என ஒவ்வொருவராக வரிசையாக ஆச்சரியப்படுத்துகிறார்.  ஆனால் அவர் ஆச்சரியப்படுத்தும் காட்சிகளில் இயக்குனரும், திரைக்கதாசரியரும்  புத்திசாலித்தனமாக எதுவும் செய்யாததால் மகா போரடிக்கிறது.

கணிதத்தில் பெரிய மேதையாக இருந்தாலும் மற்ற பாடங்களை பாஸ் பண்ண முடியாத சாதாரண மாணவனாக தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக இருக்கிறார். தனது தந்தை உட்பட எவரும் தனது திறமையை அங்கீகரிக்காததால் வீட்டை ஓடிவிடுகிறார், இரயில் முன் படுத்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார், தனி அறையில் அமர்ந்து அழுகிறார்.

தனது திறமையை இந்த உலகுக்கு தெரிவிக்க அவர் தைரியமாக தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்யவில்லை. அவரது திறமை மற்றவர்களின் முயற்சியால்தான் மற்றவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

தன்னம்பிக்கை இல்லாத ஒரு மாபெரும் கணித மேதை தான் ராமானுஜன் என்கிற எண்ணம் நமக்கு படத்தின் இறுதியில் ஏற்படுகிறது. ஆனால் அவருடைய மனப்போராட்டங்களும், மேதைமையின் உச்சங்களும் பலமில்லாத வசனங்களால் படத்தில் சொல்லப்படுகிறது. ஆழமான காட்சிகள் மிஸ்ஸிங். Beautiful Mind படத்தில் இது போன்ற மனச்சிக்கல் கொண்ட ஒரு மேதை அபாரமாக சித்தரிக்கப்பட்டிருப்பார். அந்த அளவிற்கான ஸ்கோப் இருந்தும் ராமானுஜன் வெகு சாதாரணமாக படமாக்கப்பட்டுவிட்டது.

ரமேஷ் விநாயகத்தின் இசையில் இரண்டு பாடல்கள் அருமையாக இருக்கின்றன. பிண்ணனி இசையும் பரவாயில்லை. எடிட்டிங் லெனின். படத்தின் நீளத்தை வெட்டி எறிவதிலேயே அவருக்கு பாதி நேரம் செலவாகியிருக்கும் என நினைக்கிறேன். சில காட்சிகளை அவர்தான் வரிசைப்படுத்தினாரோ என்று கூட தோன்றுகிறது.

நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு மேதையை அறிமுகப்படுத்துகிற படம் என்பதால் மட்டும் இந்தப்படத்தை நான் வரவேற்கிறேன். அடுத்த படத்திலாவது நல்ல திரைக்கதை குழுவை வைத்துக்கொண்டு களத்தில் இறங்க வேண்டும் என திரு.ஞானராஜ சேகரனுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

பணத்தை சேமிக்க 6 வழிகள் : பணக்காரர்கள் செய்வதும் - மற்றவர்கள் செய்யாததும்


பள்ளிக்கூடம் படிக்கும்போதே சேமிக்கத் துவங்கவேண்டும்.
தற்போது ஒரு சர்வதேச நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இயங்கும் எனது நண்பன் பள்ளிப்படிப்பை முடிக்கும்போது ஒரு ப்ரீமியர் பத்மினி கார் வாங்கினான். கல்லூரி முடிக்கும்போது ஒரு வீடு வாங்கிவிட்டான். நம்பினால் நம்புங்கள்... அனைத்தும் உண்டியலில் சேர்த்த பணம் மட்டுமே.

பெரிய தொகையாக சேமிக்க வேண்டும்.
சேமிப்பில் கஞ்சத்தனம் கூடாது. இயன்றவரை பெரிய தொகையாக சேமிக்க வேண்டும்.பக்கத்துவீட்டு அங்கிள் ஒருவர் சம்பளக் கவர் வந்ததும் 50 சதவிகிதத்தை RD, FD, SB என வகை பிரித்து உடனே பாங்கில் போட்டுவிடுவார். அவரது மனைவி செலவுக்கு பணம் இல்லை என்று சண்டை பிடித்தாலும் அசரமாட்டார். சேமிப்புத் தொகையிலிருந்தே அவருடைய இரண்டு மகள்களுக்கும் நயா பைசா கூட கடன் இல்லாமல் திருமணம் செய்துவிட்டார்.

வங்கிகளின் தானியங்கி (Automatic Fund Transfer) சேவைகளை பயன்படுத்தவேண்டும்
அரசாங்கத்தில் வேலை பார்த்த என் நண்பர் ஒருவர் வங்கியிலிருந்து கிடைக்கும் வட்டியை விட்டு வைக்கவே மாட்டார். RDகணக்கிற்கு மாதத்தவணையாக கட்டிவிடுவார். RD முழுமை அடைந்ததும் அப்படியே அதை FDயா மாற்றிவிடுவார்.  இவற்றையெல்லாம் செய்வதற்கு வங்கியில் சொல்லி ஆட்டோமேட்டிக் வசதிகளை வாங்கி வைத்துக்கொண்டிருக்கிறார். எனவே மழை, சோம்பேறித்தனம், அவசர செலவு என எதற்கும் வீணாகாமல் இந்த பணப்பரிமாற்றங்கள் எல்லாம் ஆட்டோ டிரான்ஸ்பராக நடந்துவிடுகிறது.

ஓய்வு காலத்திற்கு வேண்டிய தொகையை திட்டமிட வேண்டும்
நான் உட்பட நண்பர்களில் பலர் ஐம்பது வயதாகியும் வேலை செய்துகொண்டே இருக்கிறோம். ஆனால் பழம் என்று நாங்கள் கேலி செய்த நண்பன் ஒருவன், அமைதியாக மகள், பேரன், பேத்தி மற்றும் மருமகனுடன் பொழுதைக்கழித்துக் கொண்டிருக்கிறான். பென்ஷன் போல அவனுடைய சேமிப்புத் தொகையிலிருந்தே வட்டி வருகிறது. அதனால் தன் தேவைகளுக்கு யாருடைய தயவையும் எதிர்பாராமல் தலைநிமிர்ந்து வாழ்கிறான்

கிரெடிட் கார்டு தவணைகளை குறித்த தேதிக்குள் கட்ட வேண்டும்.
எனது சகோதரன் இந்த விஷயத்தில் எக்ஸ்பர்ட். தேவை பெரிதாக இருந்தால் கிரெடிட் கார்டு வழியாகத்தான் வாங்குவான். ஆனால் குறித்த தேதிக்குள் திருப்பி செலுத்திவிடுவான். இதனால் அவனுக்கு வட்டியில்லா கடன் சாத்தியமாகிறது. அவனுடைய க்ளீன் நடவடிக்கையால் வங்கியில் அவனுக்கு நல்ல பெயர். கிரெடிட் கார்டு லிமிட் ஏறிக்கொண்டே இருக்கிறது. அவனால் எல்லா அவசரத் தேவைகளையும் சமாளிக்க முடிகிறது (குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்திவிடுவதால்).

ஏழையைப் போல செலவழிக்க வேண்டும்
ஆஸ்திரேலியாவில் கல்லூரிப் பேராசியரியராக கை நிறைய சம்பாதிக்கும் எனது நண்பர் ஒருவர், எளிமையாக ஒரு ஏழையைப் போலத்தான் செலவு செய்வார். மால்களை முற்றிலும் தவிர்ப்பார். குழந்தைகளுக்காக மால் தியேட்டர்களுக்கு வந்தாலும் அங்கே அனாவசியமாக உணவுகளுக்கு செலவழிப்பதை தவிர்ப்பார். கார் வைத்திருந்தாலும் குடும்பத்தோடு பல இடங்களுக்கு பஸ்ஸில் சென்று வருவார். அப்படிச் சேமிக்கிற தொகையை கல்விக்கும் மருத்துவத்திற்கும் பயன்படுத்துகிற கலையை அவருடைய குடும்பமே கற்றிருக்கிறது.

முதலீடு செய்வது (Invest) என்பது பணத்தை விரைவாகப் பெருக்க ஒரு வழி. ஆனால் இதில் ரிஸ்க் உண்டு. எந்த அபாயமும் இல்லாமல் நிதி சுதந்திரத்துடன் வாழ இந்த வழிகள் உதவும் என்பது என் அனுபவப்பாடம்.




Monday, July 14, 2014

கேப்போம்ல : மோடி சர்க்காருக்கு கோப்புகளை கொளுத்துவதில் அவசரம் ஏன்?

குவிந்திருக்கும் கோப்புகளை தூசி தட்டி அடுக்கி வைப்பது நல்லதுதான். ஆனால் அவற்றை அழிப்பதற்கு முன்பு வீட்டிலிருக்கும் அனைவரையும் இது தேவையாக என கேட்டுக்கொள்வது வழக்கம். ஆனால் இது போல எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் மோடி சர்க்கார் பழையதை ஒழிப்பதாகச் சொல்லி போகி கொண்டாடியிருக்கிறது.

ஒரு நாடு தொடர்புடைய எந்த கோப்பும் மோடிக்கு மட்டும் சொந்தமல்ல. அது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தொடர்புடையது. சொல்லப்போனால் அதை வெறும் கோப்பு என ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் அவற்றில் உள்ளவை நாட்டின் வரலாற்றுப்பதிவுகள். எனவே கோப்புகளை அழிப்பது என்பதும், வரலாற்றை அழிப்பது என்பதும் ஒன்றுதான். இது மோடி அரசுக்கு தெரியாதது அல்ல.

எனவே பழைய கோப்புகளை அழிப்பது தொடர்பாக தன்னிச்சையாக முடிவெடுத்ததும்,  அவசரம் அவசரமாக அழித்தபின் அறிவித்திருப்பதும் பல சந்தேகங்களை எழுப்புகிறது. BIG DATA என யார் யாரோ செல்ஃபி எடுத்துக்கொள்வதையெல்லாம் இந்த உலகம் ஆடியோ, வீடியோவாக பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறது. அதற்கான டெக்னாலஜியும், வாய்ப்பும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது அழிப்பதற்கு முன் அவற்றை டிஜிட்டலாக பிரதி எடுக்க ஏன் மோடி சர்க்கார் முயற்சிக்கவில்லை?
யாரையும் கேட்காமல் பழைய கோப்புகளை அழிக்க முடிவெடுத்தது ஏன்?
எந்தெந்த கோப்புகள் அழிக்கப்பட்டன என்பதற்கு பட்டியல் உள்ளதா?
அந்தக் கோப்புகள் இருப்பதால் இப்போதைய இந்திய அரசுக்கு என்ன பிரச்சனை?
அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தால் அதற்கு அழிப்பு ஒன்றுதான் தீர்வு என்ற முடிவை பரிந்துரைத்தது யார்?
இதற்காக யார் யாரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது?

தற்போதைய மோடி அரசுக்கு ஒரு விண்ணப்பம். அடுத்த முறை கோப்புகள் எதையாவது அழிக்க முடிவெடுத்தால் மக்களுக்கு ஒரு கடுதாசி போடுங்கள். எத்தனையோ மில்லியன் இந்தியர்கள் அவற்றை பத்திரப்படுத்தி வைக்கத் தயாராக இருக்கிறோம். கேட்டுக்கொண்டால் நாங்களே கூட அவற்றை டிஜிட்டலாக மாற்றித்தருகிறோம்.

கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் மோடி சர்க்கார் இந்திய வரலாற்றின் சில பக்கங்களை அழித்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. அந்த வரலாறு முக்கியமா? இல்லையா என்பதை தனியாக விவாதிக்கலாம்.

இப்போதைக்கு ஒரே ஒரு எளிய கேள்வி. அவசரம் அவசரமாக நாட்டு மக்களுக்குத் தெரியாமல் அழிக்கவேண்டிய அவசரம் என்ன?

#கேப்போம்ல

Sunday, July 13, 2014

Good bye Brazil. I miss you!

உலகின் மிகப்பெரிய ஓட்டை பிரேசிலின் கோலுக்கு முன்புதான் இருக்கிறது. எங்கிருந்து யார் அடித்தாலும் ஒரு கோல் விழுந்துவிடுகிறது. இவ்வளவு பெரிய ஓட்டையை பூசி மெழுக குறைந்தபட்சம் இரண்டு உலகக்கோப்பைகள் தேவைப்படும்.

உலகக்கோப்பை முடிந்ததும் அழுத்தி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் மற்றும் ஊழல் பிரச்சனைகள் விசுவரூபமெடுக்கும்போது, பிரேசிலின் கால்பந்து இன்னமும் நசுங்கிப்போகும்.

வழக்கமாக பிரேசிலின் ஆட்டத்தில் ஒரு ஹார்மனி இருக்கும். வீரர்களின் ஓட்டத்திலும் பந்தை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதிலும் ஒரு நடனத்தின் நளினம் இருக்கும். தற்போதைய பிரேசில் அணியிடம் அந்த ஒத்திசைவு மிஸ்ஸிங்.

நெய்மரின் கால்கள் ஒரு மேஜிக்தான். ஆனால் அது அவரின் தனித்துவம். ஒரு குழுவாக பிரேசில் சாதாரண அணியாகத்தான் விளையாடியது. எப்படி அட்டாக் செய்வது என்பது பற்றிய தீர்மானமான வியூகங்கள் இல்லை. பந்தை நெய்மரிடம் கொடுத்தால் போதும். கோலடிப்பது பற்றி அவர் கவனித்துக்கொள்வார் என்பதே அவர்களுடைய வெளிப்படையான வியூகமாக இருந்தது. அதனால்தான் எதிரணியினர் அனைவரும் ஒருவர் விடாமல் நெய்மரை சுற்றி வளைத்து வேட்டையாடிவிட்டார்கள்.

அட்டாக் இப்படி என்றால் தடுப்பாட்டத்திற்கென வியூகம் எதுவுமே இல்லை. கோலுக்கு இடமோ வலமோ பந்து வந்தால் திக்கித் திணறி சமாளிக்கிறார்கள். கோலுக்கு மத்தியில் பந்து விழுந்துவிட்டால், பதற்றமாகி கோல்கீப்பரை அம்போவென்று தவிக்கவிட்டுவிட்டு தடுப்பாட்டவீரர்கள் எல்லாம் எங்கேயோ காணாமல் போய்விடுகிறார்கள். ஜெர்மனி இந்த பலவீனத்தைத்தான் துல்லியமாக பயன்படுத்தி 7 கோல்களை அடித்தது. நெதர்லாந்தும் கிட்டத்தட்ட ஜெர்னியைப்போல பிரேசிலின் பலவீனத்தை குறிவைத்து அடித்து நொறுக்கிவிட்டது.

இவ்வளவு பலவீனமான அணியை வைத்துக்கொண்டு டாப் - 4 அணிகளில் ஒன்றாக வந்ததே அதிர்ஷ்டம்தான். என் கண்முன்னாலேயே பிரேசில் என்ற அற்புதமான அணி சொந்த மண்ணிலேயே காணாமல் போய்விட்டது. அதை கண்டுபிடித்துக்கொடுக்கப்போவது யார்? இந்தக் கேள்வியில்தான் பிரேசிலின் அணியின் எதிர்காலம் உள்ளது.

கிரிக்கெட்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணி வீழ்ந்தது போல தற்போது பிரேசிலின் கால்பந்தாட்ட அணியும் வீழ்ந்துகிடக்கிறது. நெய்மர் பிரேசிலின் கடைசி சூப்பர்ஸ்டாராக இருக்கலாம். மன்னாதிமன்னர்கள் வீழ்வதைப்பார்க்கும்போது கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்வது... காலமும் வெற்றியும் மன்னர்களுக்காக காத்திருப்பதில்லை.

Bye! Bye! Brazil. I miss you!

தங்ஸ்வீட்ஸ் - ஜீலை பௌர்ணமி



அழும் அக்காள் குழந்தைக்கு 

தாலாட்டு பாடிக்கொண்டே,
உஷ்ஷ்ஷ் பேசாதே என சுட்டு விரலாலே 
சத்தமின்றி ஆணையிட்டு,
பாத்திரம் ஒதுக்கி, துணி மடிக்க வைத்து
வீட்டை சுத்தம் செய்ய வைத்தபின்,
குழந்தையை தொட்டிலில் கிடத்தி
சைகையாலேயே 
அது உறங்கும் அழகை இரசிக்கச்சொல்லி,
தேவதைகள் உலகிற்கு அழைத்துச் செல்வாள் தங்கை!