Wednesday, November 25, 2015

பளிச்சென்றுசொல்லி விடுகிறேன் சுகிர்தா!

சுகிர்தராணியை பார்த்திருக்கிறேன். அறிமுகமில்லாததால் புத்தகக் கண்காட்சியில் கண்டும் காணாதது போல் கடந்திருக்கிறேன். நான் பொறுப்பேற்று நடத்தியிருக்கும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தபோது சில புன்னகைகளையும் பகிர்ந்திருக்கிறேன். ஏதோ ஒரு நாளில் தொலை பேசியில் பேசத் துவங்கியிருக்கிறேன். சுகிர்தாவின் குரலிலேயே இந்தக் கவிதையை கேட்டிருக்கிறேன். கவிதை எப்படி இருக்கிறது என்று சுகிர்தா கேட்டபோது நன்றாக இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறேன். இப்போதும் அதையேதான் சொல்வேன். 

ஆனால் ”நன்றாக இருக்கிறது” என்பதற்கு அகராதிகள் தரும் அர்த்தம் வேறு. என் உணர்வுகள் தரும் அர்த்தம் வேறு. அது என்னவென்று அப்போதும் சொல்லத் தெரியவில்லை. இப்போதும் சொல்லத் தெரியவில்லை. சில கவிதைகள் கடைசி வரிகளில் இருந்து துவங்கும். இந்தக் கவிதையும் அப்படியே. இந்தக் கவிதையில் ஆங்காங்கே நானும், நீங்களும் சுகிர்தாவும் இருக்கிறோம். வாழ்த்துகள் சுகிர்தா!

"செத்துப்போன மாட்டை
தோலுரிக்கும் போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர் சோற்றைத்தின்று விட்டு
சுடு சோறென பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் முறைத்து கடந்து விடுவேன்
அப்பாவின் தொழிலில்ஆண்டு வருமானம்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடிவாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசயிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்றுசொல்லி விடுகிறேன்
பறச்சி என்று"

-சுகிர்தராணி.