Friday, May 15, 2009

தி.மு.க அலை! பின் தங்கியது இலை!

பல Exit Poll கள் ஜெயலலிதாவுக்கு வெற்றி முகம் என்று கூறின. ஆனால் Post Pollகள் தி.மு.க கூட்டணியின் அலை அடிக்கிறது என்று சொல்கின்றன.

எக்ஸிட் போல் என்பது ஓட்டுப் போட்டுவிட்டு வாக்குச் சாவடியிலிருந்து வெளியே வருபவரிடம் யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று கேட்டு கணிப்பது.

போஸ்ட் போல் என்பது, நிதானமாக சில சமயங்களில் ஒரு நாள் கழித்துக் கூட வாக்காளர்களை அவர்களுடைய இடத்திலேயே சந்தித்து யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று கேட்டு கணிப்பது.

எக்ஸிட் போல்களில் பங்கு பெறும் வாக்காளர் பெரும்பாலும் உண்மையைச் சொல்லுவதில்லை. காரணம் வாக்குச் சாவடிசூழ்நிலை, பதற்றம் மற்றும் பயம்.

போஸ்ட் போல்களில் பங்கு பெறும் வாக்காளர்கள் ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஏனென்றால் வாக்களித்துவிட்டு வெகு நேரம் கழித்துதான் அவருடைய கருத்து கேட்கப் படுகிறது. மிக முக்கியமாக அவருடைய இடத்திலேயே கேட்கப்படுவதால் பதற்றமோ, பயமோ இருப்பதில்லை.

எக்ஸிட் போலில் வாக்காளரிடம் கேள்வி கேட்பவர்கள் பெரும்பாலும் பார்ட் டைமில் வேலை செய்பவர்கள். கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மக்களை சந்திக்கிறார்கள். உடனுக்குடன் சூட்டோடு சூடாக கணிப்புகளை தெரிவிக்கும் போட்டியில், எக்ஸிட் போல் நடத்துபவர்கள் இவர்களை பணிக்கு அமர்த்துகிறார்கள். அவர்களுக்கு வாக்காளரிடம் துல்லியமான பதிலை கேட்டு வாங்கும் திறமையோ, பயிற்சியோ குறைவு.

ஆனால் போஸ்ட் போலில் வாக்காளர்களை சந்திப்பவர்கள் இதற்கென்று பயிற்சி பெற்றவர்கள். வாக்காளர்களிடம் நயமாகப் பேசி, நண்பரைப் போல உறவாடி முடிந்தவரையில் உண்மையை வெளிவரவைப்பார்கள்.

எக்ஸிட் போல் வாக்குச்சாவடிக்கு அருகில்தான் நடக்கிறது. அவர்கள் வாக்காளர்களை சந்திக்கும்போது, ஒரு குறிப்பிட்ட கட்சியினர் அதிக அளவில் வாக்களிக்க வந்திருந்தால், அதன் துல்லியம் அடிபட்டுப்போகிறது.

போஸ்ட் போல் இந்த தவறை சரி செய்யும் விதமாக பரவலாக தொகுதியின் வெவ்வேறு பகுதிக்குச் சென்று வாக்காளர்களை சந்தித்து நடத்தப் படுகிறது.

இதுபோன்ற காரணங்களால் எக்ஸிட் போலை விட, போஸ்ட் போலுக்கு நம்பகத்தன்மை அதிகம்.

இந்த அடிப்படையில் பார்த்தால் சில எக்ஸிட்போல்கள் ஜெயலலிதா ஜெயிக்கிறார் என்று கூறுகின்றன. டைம் நவ் போன்ற சானல்கள் தேர்தலன்று காலை ஒன்பதரை மணிக்கே, ஜெயலலிதா முந்துகிறார் என்று தங்கள் எக்ஸிட் போலின் அடிப்படையில் கூற ஆரம்பித்துவிட்டன.

இன்று வெளிவந்த போஸ்ட் போலின் அடிப்படையில் பார்த்தால் குறிப்பாக சிஎன்என்-ஐபின் சேனலின் கணிப்புபடி, கிட்டத்தட்ட இது தி.மு.க அலை. தடுமாறுகிறது இரட்டை இலை.

இந்த முடிவுகளுக்கான காரணிகள்
வாக்குப் பதிவு சதவிகிதம் கூடியிருப்பது
இலங்கைப் பிரச்சனை - எல்.டி.டி.யி ஆதரவு
தி.மு.கவிற்கு அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ள பரவலான ஆதரவு
குறிப்பாக தி.மு.விற்கு நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் உள்ள ஆதரவு

”வெள்ளம் வந்தப்ப 2000 ரூபாய் குடுத்தாரு”
”ஒரு ரூபாய்க்கு அரிசி இதுக்கு முன்னாடி யாரு குடுத்தா?”
”இலவச டிவி தந்திருக்காரு”
”இன்னும் கேஸ் ஸ்டவ் தருவாங்களாமே”
இதெல்லாம் கிராமப்புரங்களில் பரவலாக ஒலித்த டயலாக்

அலை எதுவுமில்லாத தேர்தல். இந்த எம்.பி பரவால்ல. காதுகுத்துக்கு நெறைய மொய் எழுதுனாரு என்று படு லோக்கல் காரணிகள் மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிய தேர்தல்

”ஏழை பணக்காரன்னு பாக்கலப்பா. வீட்டுக்கு ஒரு டிவி உண்டுன்னு வந்து சொல்லிட்டுப் போயிட்டானுங்கப்பா. சில வீட்டுக்கு குடுத்துட்டானுங்க. சிலருக்கு எலக்ஷனுக்க அப்புறம்ன சொல்லிட்டானுங்க. அதாவது இலவசத்தை கரெக்டா வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துட்டானுங்க. கிராமப் புறத்துல வேற என்ன வேணும்” இது கம்பம் அருகிலிருக்கும் உத்தமப்பாளையத்தை சேர்ந்த என்னுடைய நண்பர் கூறியது.

கூட்டணிகள் பெறக் கூடிய வாக்குகளின் சதவிகிதம்
தி.மு.க கூட்டணி - 47%
அ.தி.மு.க கூட்டணி - 34%
விஜயகாந்த் - 10%
மற்றவர்கள் - 9%

தனிப்பட்ட முறையில் எனக்கும் இதுதான் தேர்தல் முடிவாக இருக்கும் என்றும் தோன்றுகிறது. காலையில் தெரிந்துவிடும்.

கொசுறு -
அன்புமணி ராமதாஸ் மீண்டும் காங்கிரசுடன் இணைவதில் தயக்கம் எதுவிமில்லை என்று கூறிவிட்டார்.
நரேந்திர மோடி ஜெயலலிதாவை சந்திக்கவுள்ள நிலையில், தோழர்கள் ஜெவை வீட்டுக்கே சென்று சந்தித்த பிறகும், மூன்றாவது அணியின் மீட்டிங்கிற்கு வருவது சந்தேகமாம்.

Thursday, May 14, 2009

இந்தியாவை வட்டமிடும் அமெரிக்க கழுகு

A. Peter Burleigh, US Charge d’Affaires (head of mission) -
இவர் தெற்கு ஆசியாவின் நாடித்துடிப்பை அறிந்தவர். சிங்களம், பெங்காலி மற்றும் ஹிந்தி மொழிகளை சரளமாக பேசக் கூடியவர். ஒரு மாதத்திற்கு முன்பு இவர் இந்தியாவிற்கு வந்து பொறுப்பேற்றபோது யாருக்கும் இவரைத் தெரியாது. ஆனால் நேற்றிலிருந்து இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் வல்லுனர்களின் ஊகஙகள் மற்றும் வியுகங்களுக்கு தீனிபோடுபவராகிவிட்டார்.

இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கான கடைசிக் கட்டத் தேர்தலில் நாடு முழுவதும் பரபரப்பாக இருக்கும்போது, அமெரிக்க தூதரகத்தின் சார்பில் பர்களே பி.ஜே.பியின் பிரதம வேட்பாளரான அத்வானியை சந்தித்தது பல்வேறு சிந்தனைகளை தூண்டிவிட்டிருக்கிறது. அவர் அத்வானியை மட்டும் சந்திக்கவில்லை சந்திரபாபு நாயுடு மற்றும் புது அரசியல்வாதி சிரஞ்சீவியையும் சந்தித்திருக்கிறார்.

சில அரசியல்கட்சிகளும், மீடியாக்களில் ஒரு பகுதியினரும் இந்திய அரசியலில் அமெரிக்கா மூக்கை நுழைப்பதாக சந்தேகப்படுகிறார்கள். இடதுசாரிகளின் தலைமையில் உள்ள மூன்றாவது அணியில் சந்திரபாபு நாயுடு உள்ளார். ஒருவேளை மூன்றாவது அணி இந்தியாவில் ஆட்சி அமைக்க முயற்சித்தால் அதற்கு அவரும், சிரஞ்சீவி போன்றவர்களும் ஆதரவு அளிக்கக் கூடாது என வலியுறுத்தவே இந்த சந்திப்பு நடந்தாக கொதிக்கிறார்கள்.

இடதுசாரிகளின் தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் அதில் அமெரிக்காவிற்கென்ன பிரச்சனை?
இடதுசாரிகள் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்ப்பவர்கள். அதை காரணம்காட்டிதான் காங்கிரஸ் அரசை விட்டு வெளியே வந்தார்கள். ஒருவேளை அவர்கள் பதவிக்குவந்தால் அணுசக்தி ஒப்பந்தம் கிடப்பில் போடப்படும் என்று அவர்கள் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை ஜார்ஜ் புஷ்ஷாக இருந்தாலும் சரி, ஒபாமாவாக இருந்தாலும் சரி, இந்த ஒப்பந்தம் தொடர்வதில் குறியாக உள்ளார்கள். அதனால் அதற்கு குறுக்கே நிற்கும் எவரையும் உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறை வழியாக அமெரிக்கா தனிமைப்படுத்த நினைக்கிறது. அதே நேரத்தில் அதற்கு ஆதரவளிப்பவர்களை ஒன்று சேர்க்கவும் முயற்சி செய்கிறது. அதற்குத்தான் நாயுடு, சிரஞ்சீவி மற்றும் அத்வானி சந்திப்புகள் எல்லாம்.

அத்வானி அதாவது பி.ஜே.பியும் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறதே என்று சிலர் கேட்கலாம். பி.ஜே.பி, ஜெயலலிதா போன்றவர்கள் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறார்களே ஒழிய முழுக்க தூக்கி எறிய வேண்டும் என்று சொல்லவில்லை. அதில் சில மாற்றங்கள் செய்துகொள்ளலாம் என்றுதான் சொல்கிறார்கள். அதனால் இவர்களை ஒன்று சேர்த்து தனக்கு ஜால்ரா அடிக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது.

ஜால்ரா அடிப்பதைத்தான் ஏற்கனவே காங்கிரஸ் செய்து கொண்டிருக்கிறதே என்றும் சிலர் கேட்கலாம். உண்மைதான் . . . ஆனால் இன்றைய நிலவரப்படி தேர்தல் கணிப்புகளில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றாலும் மீண்டும் இடதுசாரிகளின் துணையின்றி ஆட்சி அமைக்க முடியாது. அப்படி அமையும் ஆட்சி இடதுசாரிகளின் தலையீட்டால் முழுக்க முழுக்க அமெரிக்கா சொல்வதை கேட்கும் அரசாக இருக்க முடியாது.

எனவே அணுசக்தி ஒப்பந்தத்தை சில மாற்றங்களுடன் ஏற்கும் பி.ஜே.பி தலைமையில் சில கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவில் புதிய ஆட்சி அமைக்க அமெரிக்கா முயலுகிறது என்று நான் நினைக்கிறேன். இதற்கு எது காரணமாக இருந்தாலும் இது அமெரிக்காவின் அத்துமீறல்தான். இந்தத் தேர்தலிலேயே அமெரிக்க பணமும், அதிகாரமும் எங்கேயோ உள்குத்து செய்திருக்கிறதோ என்ற சந்தேகமும் வருகிறது.

”அமெரிக்கா இந்திய அரசியலின் உள்விவகாரங்களில் தலையிடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று இந்த சந்திப்புக்கு இடதுசாரிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் ”அமெரிக்கா இந்தியத் தேர்தலில் தலையிடவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் ஹிலாரி கிளிண்டன் வரவிருப்பதால் அதற்கு முன்னேற்பாடாக இந்த சந்திப்புகள்” என்று மொக்கையாக ஒரு விளக்கத்தை அமெரிக்கா கொடுத்திருக்கிறது.

குழம்பியிருக்கும் இந்திய அரசியல் வானில் அமெரிக்க கழுகு வட்டமிட ஆரம்பித்திருக்கிறது. இந்தியா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

Wednesday, May 13, 2009

Exit Poll - 2009

Exit Poll என்பது வாக்களித்துவிட்டு வெளியே வருபவர்களிடம் கேட்டு ஒரு முடிவுக்கு வருவது.
முன்னணி ஆங்கில செய்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு Exit Pollகளை நடத்தின.
இதில் உள்ள பெரிய ரிஸ்க், எந்தக் கட்சிக்கு வாக்களித்தேன் என்று, வாக்காளர் சொன்னது உண்மையா? பொய்யா? என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அதே போல Exit Pollகள் மிகச் சில நூறு வாக்களர்களிடம் மட்டுமே நடத்தப்படுகின்றன. ஒரு அலை அடிக்கும்போது பெரும்பாலும் Exit Pollகள் சரியாக உள்ளன. ஆனால் அலை இல்லாத தேர்தல்களில் Exit Pollகள் பெரும்பாலும் தவறிவிடும். ஏனென்றால் Spoilers எனப்படும் ரிசல்டுகளை பாதிக்கக் கூடிய கட்சிகளின் மதிப்பு இதில் தெரிவதில்லை. உதாரணமாக இந்த Exit Pollகளில் விஜயகாந்துக்கு எத்தனை வாக்குகள் விழுந்தன என்பது தெரியாது. அந்த வாக்குகள் தி.மு.க அல்லது அ.தி.மு.க வாக்குகளை பிரிக்கும். அது எந்தக் கட்சிக்கு என்பது Exit Pollகளில் தெரியாது.
எனவே அதை மனதில் கொண்டு நிறைய Exit Pollகளை படித்துவிட்டு (விஜயகாந்தை கணக்கிலெடுக்காமல்) குத்துமதிப்பாக இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்

தமிழகம்
மொத்தம் - 39
காங்கிரஸ் - 2 (ஜீரோ முதல் 4 வரை மாறலாம்)
தி.மு.க(மற்ற கட்சிகள்) - 12 (9 முதல் 13 வரை மாறலாம்)
அ.தி.மு.க - 25 (24 முதல் 28 வரை மாறலாம்)

இந்திய அளவில்
C-VOTER-POLLING AGENCY EXIT POLL FOR INDIA TV AND UTV BUSINESS CHANNEL
UPA                          - 193-205
NDA - 181-193
THIRD FRONT - 105-121
STAR NEWS-NIELSEN EXIT POLL
UPA                             -  202
NDA - 198
THIRD FRONT - 96
CNN-IBN NEWS CHANNEL POST-POLL SURVEY
UPA                           - 185-205
NDA - 165-185
THIRD FRONT - 110-130
NEWS-X CHANNEL EXIT POLL
UPA                              - 202
NDA - 193
THIRD FRONT - 101
HEADLINES TODAY NATIONAL PROJECTION
UPA - 191
NDA - 180
LEFT PARTIES - 38
OTHER PARTIES - 134

மீடியா போர் - சன், கலைஞரை ஜெயித்தது மக்கள் தொலைக்காட்சி!

தேர்தல் வரும்போது, வழக்கமாக சன்னும் ஜெயாவும் களத்தில் மோதும். நடுவில் நடந்த தாத்தா-பேரன்கள் சண்டையில் கலைஞரை கடு்ப்பேற்ற சன் டிவி நடுநிலை வேஷம் போட்டதும் ஃபோகஸ் மாறிவிட்டது. பிறகு “கண்கள் பனித்து - இதயம் இனித்தவுடன்“ இருவரும் ஒன்று சேர்ந்தார்கள்.

தேர்தல் வந்தவுடன் மீடியா போர் பழையபடி சூடு பிடித்தது. ஜெயா டிவி ஜெயலலிதாவின் தேர்தல் பரப்புரையை மட்டும் ஃபோகஸ் செய்தது. எனவே ஒரு முனையில் சன்-கலைஞர். மறுமுனையில் மக்கள் தொலைக்காட்சி. மக்கள் தொலைக்காட்சி அசரவே இல்லை.

புதுச்சேரியில் நடைபெற்ற திரைத்துறையினரின் பரப்புரையை ராஜ் டிவியிடமிருந்து பெற்று திடீர் நேரலை செய்ததை சன்னும், கலைஞரும் எதிர்பார்க்கவே இல்லை. பதிலுக்குப் பதில் ஒளிபரப்ப அவர்களிடம் எந்த சரக்கும் இல்லை.

அதே போல இன்னொரு நிகழ்ச்சி. மாம்பழத்திற்கு ஓட்டுப் போடுங்கள் என்றால் குற்றமாகிவிடும். ஏனென்றால் பிரச்சாரத்திற்கான நேரக் கெடு முடிந்துவிட்டது. ஆனால் மாம்பழத்தைப் பற்றி ஒரு ஆவணப்படம் போடலாம். அது குற்றமல்ல.

இதுதான் மாம்பழம். மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. இந்த மாம்பழம் தித்திக்கும். அந்த மாம்பழம் புளிக்கும் . . . என்று நொடிக்கொரு முறை மாம்பழம், மாம்பழமென தனது சின்னத்தை உச்சரிப்பது போல ஒரு ஆவணப்படத்தை மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. சன், கலைஞர், தேர்தல் கமிஷன் உட்பட எல்லோருக்கும் பெப்பே காட்டிவிட்டு அட்டகாசமாக தனது மறைமுகப் பிரச்சாரத்தை மக்கள் தொலைக்காட்சி செய்தது.

ஆனால் நேற்று மாலைதான் ஹைலைட். திராவிடர் கழகம் தயாரித்த விசிடிக்கு நேற்று மதியம் தடை விலக்கப்பட்டது. ஈழத் தமிழர்களின் அவலத்தை விளக்குகின்ற சிடி என்று அவர்கள் சொன்னாலும், அது உண்மையில் காங்கிரசுக்கும், தி.மு.கவுக்கும் எதிராக பிரச்சாரம் செய்கின்ற சிடி. பிரச்சாரத்திற்கான கடைசி நேரம் கடந்துவிட்டிருந்த படியால் தேர்தல் கமிஷனின் விதிப்படி அதை மக்களிடம் போட்டுக் காண்பிக்க முடியாத நிலை. அதை ஒரு நிகழ்ச்சியாக டிவியிலும் காட்ட முடியாத நிலை. அதனால் அந்த சிடியை வைத்து ஒன்றும் செய்துவிட முடியாது என்று ஆளும் கட்சி அசந்திருந்த நேரத்தில் மக்கள் தொலைக்காட்சி மிக சாமர்த்தியமாக ஒரு வேலை செய்தது. என்ன தெரியுமா?

திடீரென செய்திகளை ஒளிபரப்ப ஆரம்பித்தது. செய்தி என்ன தெரியுமா? பெரியார் திராவிடர் கழகம் தயார் செய்திருந்த சிடிக்கு தடை நீக்கப்பட்டது. தடை நீக்கப்பட்ட அந்த சிடியை இப்போது பார்க்கலாம் என்ற ஒற்றை வரிச் செய்திதான். அந்த ஒற்றை வரி முடிந்தவுடன் அந்த சிடி ஒளிபரப்பப்பட்டது.

அசத்தலான அட்டாக். நிகழ்ச்சியாக அதை காண்பிக்க முடியாது. ஏனென்றால் அது பிரச்சாரமாகிவிடும். ஆனால் இதுதான் அந்த தடை நீக்கப்பட்ட சிடி என்று செய்தியாக ஒளிபரப்ப முடியும். ஏன் என்று எந்த விதியும் கேள்வி கேட்க முடியாது. சன்னும், கலைஞரும் பேந்தப் பேந்த விழத்துக் கொண்டிருக்க, மக்கள் தொலைக்காட்சி அட்டகாசமாக பிரச்சார நேரம் முடிந்த பின்னும் நள்ளிரவு வரை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.

வேலை வாய்ப்புகளை பொறுத்தவரை, அமெரிக்கா தூங்கிய நேரத்தில் இந்தியா விழித்துக் கொண்டது என்பார்கள். அதே போல மீடியா பிரச்சாத்தைப் பொறுத்தவரையில் சன்னும் - கலைஞரும் தூங்கிய நேரத்தில் மக்கள் தொலைக்காட்சி எழுந்து கொண்டது.

அ.தி.மு.க முந்துகிறது. ஆனால் . . . குறுக்கே கேப்டன்

மதிய நிலவரப்படி அதாவது 20 சதவிகிதம் ஓட்டுப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் அ.தி.மு.க முன்ணணியில் உள்ளதாக ஆங்கில செய்திச் சேனல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் விஜயகாந்துக்கு கிடைக்கும் வாக்குகளை வைத்துதான் இந்தக் கணிப்புகள் பொய்க்குமா அல்லது உண்மையாகுமா என்பது தெரியவரும்.

சோவும் மற்றவர்களும் ஒரு கருத்தை தெரிவித்தனர். பொதுவாக விஜயகாந்தின் வாக்குகள் அரசுக்கு எதிரான வாக்குகள் + எம்.ஜி.ஆர் இரசிகர்களின் வாக்குகள் என்று சொல்லப்படுகிறது. இந்த இரண்டுமே அ.தி.மு.விற்குச் சேரவேண்டிய வாக்குகள். ஆனால் அந்த வாக்குகளை விஜயகாந்த் பிரித்துவிட்டார் என்றால், தி.மு.க -20, அ.தி.மு.க-20 எனப் பிரிந்துவிடும் என்றார்கள். நான் இப்படித்தான் நடக்கும் என்று யுகிக்கின்றேன்.

தேர்தல் நிலவரம் - காலை 10 மணி - அ.தி.மு.க முன்னணி

தமிழ் செய்தித் தொலைக்காட்சிகள் வழக்கம்போல சொதப்பிக்கொண்டிருக்க, ஆங்கில செய்திச் சேனல்கள் பரபரப்பாக இருக்கின்றன. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதன்மை செய்தி ஆசிரியர் ஜெயலலிதாவை சென்னை சூப்பர் குயின் என்று வர்ணித்தார். நான் கவனித்த சேனல்களின் நிலவரப்படி, அ.தி.மு.க முந்திக்கொண்டிருக்கிறது.
மத்திய சென்னையிலும் இன்னும் பல பகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தை அமுக்கினால் உதயசூரியன் சின்னத்தில் விளக்கு எரிவதாக ஜெயலலிதா குற்றப்பத்திரிகை வாசித்தார். நேரலையில் தோன்றிய சோ.இராமசுவாமி தி.மு.க பதவியலிருந்தால் அதற்கு வாய்ப்பிருக்கிறது வழக்கம்போல ஜெயலலிதாவை சப்போர்ட் பண்ணினார்.
”அணிமாற்றம் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, பி.ஜே.பி உட்பட என்னை எல்லா கட்சியினரும் அணுகியுள்ளார்கள். நான் நினைப்பது போல தேர்தல் முடிவுகள் வந்துவிட்டால், நான் டெல்லி சென்று எனது முடிவை தெரிவிப்பேன்” என்றார் ஜெயலலிதா.
”காங்கிரசும், ஜெயலலிதாவும் கைகுலுக்கும் வாய்ப்புகளும் பெருகிக் கொண்டு வருகிறது” என்று சோ குறிப்பிட்டார்.

Tuesday, May 12, 2009

தடை நீக்கப்பட்ட சிடி - மக்கள் தொலைக்காட்சியுடன் கலைஞர், சன் மோதல்!

மனதைப் பிசையும் தமிழ் இனப்படுகொலை காட்சிகளுடன் ஆளும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என்று முழங்கும் சிடிக்களை மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.
சென்னையில் மக்களை பார்க்கவிடாமல் கேபிள் கட், சில இடங்களில் பவர் கட் என்று மக்கள் தொலைக்காட்சி குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது.
ஆளும் கட்சியின் நற்பெயரை(?)க் கெடுக்க சமூகவிரோதிகள் திட்டமிட்டு மின்சாரம் துண்டிப்பு, 4 பேர் கைது என்று சன்னும், கலைஞர் டிவியும் பதிலுக்கு பதில் ஏசிக் கொண்டிருக்கின்றன.

ஜெயா டிவி கப்சிப் என்றிருக்கிறது. அந்த சிடியையும் கண்டுகொள்ளவில்லை, மின்வெட்டையும் கண்டுகொள்ளவில்லை.

மக்கள் தொலைக்காட்சியில் நான் அந்த சிடிக்களை முழுக்கப் பார்த்துவிட்டேன். இதுவரை பார்க்காதவர்கள் உடனே மக்கள் டிவியை பார்க்கவும். போகிற போக்கைப்பார்த்தால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு (பிரச்சார நேரம் ஓய்ந்த பின்னும்) எதிர்பிரச்சாரமாக விடிய விடிய ஒளிபரப்பாகும் என எண்ணுகிறேன். அதே சமயம் ஆளும் தி.மு.க எப்படியாவது நீதி மன்றத் தடையை பெற்றுவிடும் என்று தோன்றுகிறது.

இந்த சிடிக்கள் எப்படியும் யுடியுபில் வந்துவிடும். ஆனால் தேர்தல் பரபரப்புடன் பார்க்வேண்டுமானால் இப்போதே மக்கள் டிவி பாருங்கள்.

நீதி - வழக்கறிஞர்களுடன் மோதக் கூடாது. மோதினால் . . . ? பிரச்சாரம் ஓய்ந்தபின்னும், எதிர்கட்சிகளுக்கு மட்டும் பிரச்சாரம் செய்ய நீதிமன்ற அனுமதி கிடைக்கும்.

தி.மு.க கூட்டணி முந்துகிறது - என்.டி.டி.வி

கருணாநிதிக்குப் பிடிக்காத NDTV கருணாநிதிக்குப் பிடித்த ஒரு கருத்துக்கணிப்பை வௌயிட்டிருக்கிறது.

கணிப்பு 1 - ஏப்ரல் மாதம்
தி.மு.க கூட்டணி - 20 முதல் 22 வரை
அ.தி.மு.க கூட்டணி - 19 முதல் 21 வரை

கணிப்பு 2 - இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு முடிந்தவுடன்
தி.மு.க கூட்டணி - 21
அ.தி.மு.க கூட்டணி - 18

கணிப்பு 3 - மூன்றாம் கட்ட வாக்கெடுப்பு முடிந்தவுடன்
தி.மு.க கூட்டணி - 21
அ.தி.மு.க கூட்டணி - 18

கடைசிக்கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பிரச்சாரமும், கருணாநிதியின் வீல் சேர் பிரச்சாரமும் இந்த நிலையை மாற்றாது என்றுதான் தோன்றுகிறது.

தி.மு.க மக்களுக்கு மட்டும் இலவசங்களை வழங்கவில்லை. எதிர்க்கட்சிகளுக்கும் மின்வெட்டு, விலைவாசி, வேலைவாய்ப்பில் மந்தம் போன்ற இலவசங்களை வாரி வழங்கியது. இதை விஜயகாந்த் கெட்டியாக பிடித்துக்கொண்ட அளவிற்கு அ.தி.மு.க பிடித்துக்கொள்ளவில்லை. ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்ற குருஜிக்களின் இரகசிய விசிடிக்களை பார்த்துவிட்டு, திடீரென தமிழ்தாய் வேஷம் போட்டுக்கொண்டு, தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்பதை தனது தேர்தல் முழக்கமாக மாற்றிக் கொண்டுவிட்டார். “தமிழ் பதிவர் உலகத்திலும்“, ”உலகமெங்கும் உள்ள சில ஈழ ஆதரவாளர்கள் மத்தியிலும்”, ”எப்போதுமே ஈழத்தை ஆதரிக்கும் ஜெ. ஆதரவாளர்களிடத்திலும்”, ”கருணாநிதியின் அரசியல் நிலையால் ஏமாந்த சீமான் போன்ற அதீத உணர்வாளர்களிடத்திலும்” இதனால் ஒரு பெரிய சலசலப்பு எழுந்துள்ளது. ஆனால் அந்த சலசலப்பு மிகக் குறுகிய ஒரு வட்டம் என்பதும், அது கூட இன்னமும் முழுமையாக தி.மு.க எதிர்ப்பாக மாறவில்லை என்பதும் என் எண்ணம். எனவே தி.மு.க ஓட்டு சிதறும் ஆனால் பதற வைக்காது. இங்கே தி.மு.க தவற விடுவது போல அங்கே அ.தி.மு.க விஜயகாந்திடம் சில ஓட்டுக்களை தவறவிடும். எனவே தி.மு.கவைப் பொறுத்தவரை கணக்கு சரியாகிவிடும் என்று நான் நினைக்கிறேன்.

மிக முக்கியமாக ”மானாட மயிலாட பார்க்க விரும்புகிற மக்களை”, ”ஈழப் பிரச்சனை குறித்து பரிதாபப்படுகிற மக்களாக” அ.தி.மு.வின் பிரச்சாரம் மாற்றவில்லை. காரணம் ஜெவின் தனி ஈழ கோஷம் சந்தேகங்களையும், ஆச்சர்யங்களையும் சமமாகத்தான் உண்டாக்கியிருக்கிறது.

கருணாநிதிக்கு அவருடைய முதுமை ஒரு அட்வான்டேஜ். அவருடைய ஆட்சியின் பலகீனங்களை அவருடைய வீல்சேர் விசிட் எளிதாக மறைக்கிறது. ஜெயலலிதாவின் தனிநபர் அட்டாக்கும், மக்களை நெருங்காத ஹெலிகாப்டர் பயணங்களும், ஓட்டுக்களை அள்ளித்தருமா என்றால் சந்தேகம்தான்.

எந்த அலையும் இல்லாத ஒரு தேர்தல். யார் பிரதமர் என்பதைப் பற்றி பேசாமல், கருணாநிதி, ஜெயலலிதா சண்டையாக மாறிப்போன லோக்கல் தேர்தல். பி.ஜே.பியெல்லாம் இந்த தேர்தலில் நிற்கிறதா என்றே பொதுமக்களுக்குத் தெரியவில்லை.

சுருக்கமாகச் சொன்னால் பா.ம.க வின் அணிமாற்றத்தால் தி.மு.க கூட்டணி 40லிருந்து 20க்குச் சுருங்கும். அ.தி.மு.க கூட்டணி ஜீரோவிலிருந்து 20க்கு விரியும்.

கருத்துக்கணிப்பின் படி தி.மு.கவின் வெற்றியாக அதன் ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் சென்ற பாராளுமன்றத்தேர்தலில் தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளையும் வென்றது. அ.தி.மு.க ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அந்த வகையில் இது அ.தி.மு.கவிற்கு ஒரு திருப்தியான தேர்தல்தான். ஆனால் ஜெயலலிதாவின் இரகசிய பிரதமர் கனவிற்கும், அப்படி இல்லாத பட்சத்தில் எதிர் வரும் மத்திய அரசின் உதவியுடன் மைனாரிட்டி தி.மு.க மாநில அரசுக் கலைப்பிற்கும் இது உதவாது. அதே போல அவருடைய ”தனி ஈழ” கோஷத்தை மேலும் வலுவாக்கவும் இந்த ரிசல்ட் பயன்படாது.

ஆனால் இருதரப்புமே இதனால் ஏமாற்றமாக உணரும் என்பதுதான் இந்தத் தேர்தலின் ஸ்பெஷாலிட்டி!

என் கணிப்பு 1 - கடைசிக் கட்ட வாக்கெடுப்பு முடிந்தவுடன்
தி.மு.க கூட்டணி - 20
அ.தி.மு.க கூட்டணி - 19
விஜயகாந்த் - 0 (ஓரிரு தொகுதி தவிர அனைத்து தொகுதியிலும் டெபாஸிட் இழப்பார்)
அ.தி.மு.க, தி.மு.கவின் வெற்றி தோல்விகளில் வாக்கு வித்தியாசம் மிகப் பெரியதாக இருக்காது. இது விஜயகாந்திற்கு சட்டமன்ற தேர்தலில் டிமாண்டை அதிகரிக்கும்.

ஜெயலலிதாவை எச்சரித்த சீமான்!

திரைப்படத் துறையினரின் தேர்தல் பரப்புரையை நேற்று முன்னறிவிப்பின்றி ராஜ் டிவி நேரடி ஒளிபரப்பு செய்தது. அதை உள்வாங்கி மக்கள் தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது. அனைவருமே உணர்ச்சிப் பிழம்பாக கொதித்தார்கள். கூட்டம் ஆர்ப்பரித்தது. நான் மக்கள் தொலைக்காட்சியில் இந்த பரப்புரையைக் கண்டேன். பிரபாகரன் என்ற பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் ஆடியோ காணாமல் போய்விட்டு மீண்டும் வந்தது. ராஜ்டிவியில் எப்படியோ தெரியவில்லை. ஆனால் சீமான் பேச ஆரம்பித்தவுடன் ஆடியோக்காரர் எங்கேயும் கை வைக்கவில்லை.

சீமான் படு நிதானமாக ஆரம்பிக்கிறார். அவருடைய முதல் குரல் கேட்டவுடனேயே அவ்வளவு பெரிய கூட்டமும் அவருடைய குரலுக்கு கட்டுப்படுகிறது. நேரம் ஆக ஆக வேகமெடுக்கும் நீராவி இயந்திரம் போல, அவருடைய பேச்சில் அனல் கூடிக் கொண்டே போகிறது. அவருடைய பேச்சில் இலயிக்கும் அனைவரின் உணர்வுகளையும் தனது வீச்சினால் இதயத்தின் அடி ஆழம் வரை ஊடுருவிக் கிளறுகிறார். அவர் குரலை உயர்த்தும்போதெல்லாம் புலி உறுமுவதைப் போல இருக்கிறது. மகத்தான ஆளுமை. ஒவ்வொரு தமிழ் வார்த்தைக்கும் இவ்வளவு சக்தியா? அல்லது அவர் உச்சரிக்கும்போதுதான் அவ்வளவு சக்தி பெறுகிறதா?

இராமேஸ்வரத்தில் அவருடைய பேச்சைக் கேட்டேன். நேற்றைய பரப்புரை எனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு. இராமேஸ்வரம் பேச்சைப் போல சுருக்கமாகவும், கொந்தளிப்பாகவும் நேற்று இல்லை. காரணம் . . .

இராமேஸ்வரம் முதல் இன்று வரை மாறியிருக்கும் அரசியல் சூழல்! இலங்கைப் பிரச்சனையை அடக்கி வாசிக்க வேண்டும். இது கருணாநிதியின் அரசியல் கட்டாயம். இலங்கைப் பிரச்சனையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இது ஜெயலலிதாவின் அரசியல் கட்டாயம். ஆழ் மனதுக்குப் பிடித்த கருணாநிதியை எதிர்க்க வேண்டும். அரசியல் மனதிற்குப் பிடித்த ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டும். உணர்வுக்குப் பிடித்த திருமாவளவனை விட்டுத்தராதிருக்க வேண்டும். இந்த இரட்டை மனநிலை சீமானின் அரசியல் கட்டாயம்.

அவருடைய பேச்சில் இது வெளிப்படையாகவே எதிரொலித்தது. காங்கிரஸையும், சோனியாவையும், மன்மோகன் சிங்கையும் வெளுத்து வாங்கினார். ஆனால் ஒரு இடத்தில் கூட கருணாநிதியின் பெயரை உச்சரிக்கவில்லை. காங்கிரசுக்கு ஓட்டுப்போடாதீர்கள் என்று திரும்பத் திரும்ப சொன்னார். ஆனால் சூரியனுக்குப் போடாதீர்கள் என்று சொல்ல அவருக்கு நா எழவில்லை. திருமாவளவனை ஒரு இடத்தில் கூட அவர் விட்டுத்தரவில்லை. இந்த குழப்ப மனநிலையால் அவருடைய பேச்சில் அனல் கம்மியாக இருந்தது.

திடீரென ஜெயலலிதாவை ஆதரிக்க நேரிட்ட குற்ற உணர்வும் அவரை ஆட்டிப்படைத்தது. தனி ஈழம் அமைத்துத் தருவேன் என்று சொன்ன ஒரே காரணத்திற்க்காக நான் அந்த பெருமகளை ஆதரிக்கிறேன். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் தனி ஈழக் கோரிக்கையை கை விட்டால் . . .? (என்று என் போன்றவர்களின் சந்தேகங்களுக்கும் பதில் சொன்னார்) தேர்தல் முடிந்தவுடன் தனி ஈழக் கோரிக்கையை கை விட்டால் இதே சீமான் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி உங்களை எதிர்ப்பேன் என்று அதிரடியாக ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லாமல் முழங்கினார்.

ஆனால் சீமான் ஒன்றை மறந்து விட்டார். இன்று அக்கினிக் குஞ்சாக உலகம் முழுவதும் தமிழ் இன உணர்வை பற்ற வைத்துக் கொண்டிருக்கும் சீமான், தேர்தலுக்குப் பின் ஜெயலலிதாவை எதிர்க்கும் ஒரு நிலைக்கு வந்தால், இன்று வரை அவருடன் மேடையை அலங்கரித்தவர்கள் பலர் அவரை விட்டு விலகுவார்கள். அது மட்டுமல்ல அவருடைய வீர முழக்கத்தை வெறும் வெற்று முழக்கமாகவே மக்கள் பார்ப்பார்கள். கருணாநிதி - ஜெயலலிதாவின் அரசியல் விளையாட்டுகளில், வெட்டுப்பட்ட சாதாரண சிப்பாயாக குறுகிவிடும் அபாயம் அவருக்கு உண்டு.

ஆனால் அப்படி ஆகிவிடக் கூடாது என்று எனது மனது நினைக்கிறது. சீமானின் நண்பர்களில் ஒருவர் எனக்கும் நண்பர். ”சினிமாவையே நேசித்து, சினிமாவையே சுவாசிக்கிற ஒருத்தர் தான் சீமான்” என்று அவர் சீமானைப் பற்றிச் சொல்வார். அது ஈழப்பிரச்சனை இனப்படுகொலையாக உருவெடுக்கும் முன்பு. இன்று என்னைக் கேட்டால் ”தன் இனத்தை நேசித்து, தன் இனத்தையே சுவாசிக்கிற ஒருவர் தான் சீமான்” என்று சொல்வேன்.

ஆனால் அரசியல் விளையாட்டுகள் மிகவும் கொடூரமானவை. அதில் நேர்மையை விட துரோகங்கள் தான் அதிகம். இன்றைக்கு அவர் விரும்பாமலேயே அந்த விளையாட்டுக்குள் அவரும் இருக்கிறார். துரோகம் சீமான் என்கிற அற்புத இளைஞனை வென்று விடாமலிருக்க வேண்டும்! உணர்வுகளைப் புதைத்து, கேளிக்கையின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்களை மீட்டெடுக்க, நாளைய தமிழினத்திற்கு அவன் தேவை!

Sunday, May 10, 2009

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (ஜெயலலிதாவிற்குத் தந்த) விசிடி என ஒன்று இருக்கிறதா?

ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரின் விசிடி குறித்து எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.

அவர் எடுத்த காட்சிகள் இலங்கை அரசின் அனுமதி பெற்று எடுக்கப்பட்டதா? அல்லது எடுக்கப்பட்டதா?

அந்த வீடியோவை படமெடுத்தவர்கள் யார்? ஸ்ரீஸ்ரீரவிஷங்கரின் ஆட்களா? வெளியாட்களா?

ஸ்ரீஸ்ரீரவிஷங்கர் இது போல எத்தனை வீடியோக்களை எந்தெந்த நாடுகளில் எடுத்துள்ளார்?

வீடியோ எடுப்பதின் அவசியம் என்ன? விளம்பரமா? விவகாரமா?

அந்த வீடியோ இந்த உலகத்துக்கு தெரிய வேண்டிய, இலங்கை அரசின் அட்டுழியங்களை அம்பலப்படுத்துகின்ற வீடியோ என்றால் அதை ஏன் சர்வதேச மீடியாக்களுக்கு தரவில்லை? (உதாரணமாக பி.பி.சி, சி.என்.என்)

சரி சர்வதேச மீடியாக்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று அவர் கருதியிருந்தால் இந்திய மீடியாக்களுக்கு ஏன் தரவில்லை? குறைந்த பட்சம் ஜெயா டிவிக்காவது கொடுத்திருந்தால் உலக மக்கள் அந்த அட்டுழியங்களை பார்த்திருக்க முடியும். ஜெயலலிதாவின் பிரச்சாரத்திற்கு மேலும் உதவியிருக்கும்.

மீடியாக்களை தவிர்ப்பதும் ஸ்ரீஸ்ரீரவிஷங்கர் அவர்களின் இஷ்டம். ஆனால் அதை ஏன் மற்ற தலைவர்களுக்கு காட்டவில்லை. என்னிடம் கொடுத்தால் இலவசமாகவே காப்பி எடுத்துத் தருவேன். ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு காப்பி கொடுக்கலாம். ஆனால் அதை ஜெயலலிதாவிடம் மட்டும் இரகசியமாகக் கொடுத்தது ஏன்?

ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் எடுத்த இரகசிய அல்லது இலங்கை அரசின் அனுமதி பெற்று எடுத்த அந்த வீடியோவை என்னைப் போன்ற சாதாரண பொதுமக்களும் பார்க்க ஆவலாக உள்ளோம். ஜெயலலிதா மட்டும்தான் அந்த விசிடியை பார்க்க வேண்டுமா? மக்கள் பார்க்கக் கூடாதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாததால், எனக்கு ஒரு பெருத்த சந்தேகம் வருகிறது.

உண்மையிலேயே அப்படி ஒரு விசிடி இருக்கிறதா?

தமிழீழத்துக்கு ஆதரவாக “கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்” குரல் கொடுப்பாரா?

இளையராஜா வெறியர்கள் - ஏ.ஆர்.இரகுமான் வெறியர்கள்
கருணாநிதிக்கு டின்னு கட்டுபவர்கள் - ஜெயலலிதாவிற்கு டின்னு கட்டுபவர்கள்
தற்போது தமிழில் பிளாக் எழுதுபவர்களில் பலர் இந்த வரைமுறைகளுக்குள் வந்துவிடுகிறார்கள். இவர்களில் நால்வருமே தற்போது ஈழத்தமிழர் பிரச்சனையை வைத்துக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி-ஜெயலலிதா பக்தர்களை விட்டுவிடலாம். அவர்கள் முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்டவர்கள்.

ஆனால் சிலர் ஏ.ஆர்.இரகுமான் ஏன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆஸ்கர் மேடையில் எதுவும் பேசவில்லை என்று இரகுமானை குற்றம் சொல்லக் கிளம்பிவிட்டார்கள். நல்ல வேளையாக மற்றவர்கள் “இளையராஜா ஏன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பாட்டுப் பாடவில்லை” என்று பதிலுக்குபதில் கேட்காமலிருப்பது ஒரு ஆறுதல்.

என் நண்பரொருவர் புதிதாக தற்போதுதான் தமிழ் பிளாகுகளை படிக்க ஆரம்பித்திருக்கிறார். என்னங்க இது? உங்கள்ல பாதிப் பேருக்கு மேல கச்சாமுச்சான்னு யோசிக்கற மாதிரி இருக்கு. பொது மக்களோட கருத்துக்கும், உங்க கருத்துக்கம் சம்பந்தமே இல்ல என்றார். உங்களுக்கு சென்சார் இல்ல, கேள்வி கேட்க யாருமில்ல அப்படின்றதால, இஷ்டத்துக்கு தறிகெட்டு எழுதறீங்க என்று (என்னையும் சேர்த்துதான்) குற்றம் சாட்டினார். சினிமா விமர்சனத்துல இருந்து அரசியல் விமர்சனம் வரைக்கும் எல்லாத்துலயுமே ஒரு டிகிரி பேத்தல், விளாசல், அறிவு, அறியாமை இதெல்லாம் தூக்கலா இருக்கு என்று ரேட்டிங் போட்டார்.

”விட்டா முத்தையா முரளிதரன் ஏன் இன்னமும் சிங்களர்கள் கூட கிரிக்கெட் விளையாடுறார். அவர் ஒரு தமிழன் தானே. இது வரைக்கும் அவர் எடுத்த விக்கெட்டுகளை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு, தமிழீழத்துக்கு ஆதரவா குரல் கொடுக்கச் சொல்லுவீங்களா?” என்று கேட்டார்.

அவர் சொன்னார், நான் கேட்டுட்டேன்.
தமிழீழத்துக்கு ஆதரவாக “முத்தையா முரளிதரன்” குரல் கொடுப்பாரா?
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் விளையாட்டு மைதானத்தில் நடு பிட்சில் நின்று கொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பந்து வீச மறுக்கட்டும்.
இது வரை சிங்கள வீரர்கள் உதவியுடன், தான் எடுத்த விக்கெட்டுகளை எல்லாம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எனதில்லை என்று அறிவிக்கட்டும்.

கருணாநிதி-ஜெயலலிதா இவர்களின் அரசியல் மேடையை விட,
ஏ.ஆர்.இரகுமான்-இளையராஜா இவர்களின் பாட்டு மேடையைவிட,
சிங்களர்களின் கூடவே விளையாடும், முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் மேடை, நிச்சயம் உலகத்தின் கவன ஈர்ப்பு பெறும்.

தினம் தினம் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும், அவ்வப்போது ஏ.ஆர்.இரகுமானையும் மாற்றி மாற்றி திட்டி எழுதுவதால் மட்டுமே தனி ஈழம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், எழுதிக் கொண்டிருக்கும் நண்பர்கள், இனி முத்தையா முரளிதரனை திட்டுவது பற்றியும் சிந்திக்கலாம்.

பின் குறிப்பு
நண்பர்களே,
குறிப்பாக ஈழ நண்பர்களே,
ஒரு இனப்பிரச்சனையை ஏ.ஆர்.இரகுமான் ஏன் சொல்லவில்லை, ரஜினிகாந்த் ஏன் சொல்லவில்லை என்று பேசப்புகும்போது, ஒரு இன உணர்வு வெற்று இரசிகர்களின் உணர்வாக மாறி, அர்த்தமற்ற சலசலப்புகளாக இருக்கிறது.

மீண்டும் சொல்கிறேன். முத்தையா முரளிதரனை குரல் கொடுக்கச் சொல்வது எனது நோக்கமல்ல. அந்த நடிகர் ஏன் குரல் கொடுக்கவில்லை, இந்த இசை அமைப்பாளர் ஏன் பறிதவிக்கவில்லை? என்று ஒரு இனப்பிரச்சனையை சாதாரண இரசிகர் மன்றப் பிரச்சனையைப் போல வலுவிழக்கச் செய்து விவாதிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள். இந்தப் பதிவின் நோக்கம் இதை வலியுறுத்துவதுதான்.

பலரும் நான் உண்மையிலேயே நான் முத்தையா முரளிதரனை வம்புக்கு இழுப்பதாகவே நினைத்து பிரசுரிக்க முடியாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துவிட்டார்கள்.
எனவே பின்னூட்டத்தில் எழுதியிருந்த இந்த வரிகளை தற்போது பதிவிலேயே பின்குறிப்பு என தலைப்விட்டு இணைத்துவிட்டேன்.