Tuesday, April 30, 2024

கோவிஷீல்ட் ஊசி பற்றிய திடீர் அச்சம்

பக்கவிளைவுகள் இல்லாத மருந்து என எதுவும் இருக்காது என நினைக்கிறேன். எல்லா மருந்துகளிலும் அதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பற்றிய குறிப்புகள் இருக்கும்.

பலருக்கு ஒத்துப்போகும் மருந்து சிலருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். வலிநிவாரணிகளை எடுத்துக் கொள்பவர்கள், மயக்கமாக உள்ளது, உறக்கம் வருகிறது என்பார்கள். முடி உதிர்தல், எடை குறைதல், தோல் அரிப்பு, வயிற்று வலி, வாய் உலர்தல், மலச்சிக்கல் போன்றவை சில மருந்துகளால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகள். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவை மீறினால் அந்த மருந்தே பல பிரச்சனைகளை தரும் என்பதும் நமக்குத் தெரிந்ததுதான்.
கோவிஷீல்ட் ஊசியிலும் பக்க விளைவுகள் குறிப்பட்டிருந்திருக்கும் என்றுதான் நம்புகிறேன். ஆனால் பக்க விளைவுகள் பற்றி நமக்கு ஏன் தெரியாமல் போனது, அது பற்றி ஏன் வெளிப்படையாக பேசப்படவில்லை என்பது பற்றி எனக்கும் கேள்விகள் உண்டு. இந்த நேரத்தில் நாம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டம் வேறு, இப்போதைய காலகட்டம் வேறு. அப்போது ஊசியைத் தேடி அலைந்தோம். தற்போது ஊசியை உதாசீனம் செய்யும் மனநிலையில் உள்ளோம்.
இந்த பகடி செய்யும் மனநிலையில் தடுப்பு ஊசியைப் பற்றிய அச்சத்தை அதிகரித்துவிடக்கூடாது. ஏனென்றால் எதிர்காலத்தில் மீண்டும் தடுப்பூசி தேவைப்படும் சூழல் உருவாகலாம். அப்போது மக்கள் ஊசியை நிராகரித்தால் அது எவருக்கும் நல்லதல்ல. நம்முடைய நகர்தல் ஆரோக்கியமான சமூகத்தை நோக்கித்தான் இருக்க வேண்டும்.

ஜெயமோகனும் கண்ணதாசனும்!

அழைப்பு!

ஜெயமோகனின் பிரமாதமான சிறுகதை! இன்று காலையில் வாசித்தேன். ஆழமான அறிவியல் புனைவு. மனோஜ்நைட் ஷியாமளன் இக்கதையை வாசித்தால் அடுத்த படத்துக்கு ஸ்க்ரிப்ட் தயார் செய்துவிடுவார்.
“நாம் நம்மையன்றி எதையும் அறிந்ததில்லை” என்கிறது இந்தக் கதை. இதுதான் நான் இயக்கியிருக்கும் ”யாதெனக்கேட்டேன்” திரைப்படத்தின் மையப் புள்ளி. அவர் முழுக்க முழுக்க கற்பனையான ஒரு வெளியைப் படைத்து அறிவியல் புனைவாக எழுதியிருக்கிறார். நான் ஒரு குடும்பக் கதைக்குள் இந்த சிந்தனையை பொருத்த முயற்சி செய்திருக்கிறேன்.
மிகவும் நுட்பமான இந்தச் சிந்தனையை கதையாக எழுதும்போது மையப்புள்ளியிலிருந்து எதைநோக்கி கதையை செலுத்தவேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் வேண்டும். அதனை நான் கண்ணதாசனின் ”யாதெனக்கேட்டேன்” கவிதையிலிருந்து பெற்றேன்.
ஜெயமோகனின் இந்தக் கதையை வாசித்துவிட்டு, கண்ணதாசனின் யாதெனக்கேட்டேன் கவிதையை வாசியுங்கள், அல்லது கண்ணதாசனிலிருந்து ஜெயமோகனுக்குச் செல்லுங்கள். யாதெனக்கேட்டேன் திரைப்படம் இவ்விரு சூரியன்களின் ஒளியை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பதை படம் பார்க்கும்போது உணர்வீர்கள்.
என் நீண்ட நண்பர்கள் பட்டியலில் சிலர் மட்டும் யாதெனக்கேட்டேன் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் என் கருத்தை ஏற்பார்கள் என்று நம்புகிறேன். விரைவில் யாதெனக்கேட்டேன் உங்கள் அனைவரின் பார்வைக்கும் வெளியாகும்.
ஜெயமோகனின் அழைப்பு சிறுகதை முதல் கமெண்டில் உள்ளது. அடுத்த கமெண்டில் கண்ணதாசனின் ”யாதெனக்கேட்டேன்” கவிதையை கொடுத்திருக்கிறேன்.