Wednesday, January 7, 2009

திருமங்கலம் : வெற்றி யாருக்கு? ஆரூடம்

பொதுவாக இடைத்தேர்தல் என்றால் ஆளும்கட்சிதான் ஜெயிக்கும். அதற்கு ஒரே காரணம் அதிகார துஷ்பிரயோகம். போலீஸ், குண்டர்கள், துட்டர்கள் எல்லாம் ஆளுங்கட்சி பக்கம் நிற்பார்கள். அதனால் எதிர்கட்சிகள் அவ்வளவாக அலட்டிக்கொள்ளாது. ஆனால் திருமங்கலம் இடைத்தேர்தலில் அனல் பறக்கிறது. காரணம், தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தலின் முடிவு, வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒத்திகை.

தேர்தல் நடைபெறும் சூழல் மிகவும் வித்தியாசமானது.

ஆரம்பமே அசத்தல். ம.தி.மு.க நிற்க வேண்டிய இடத்தில் அ.தி.மு.க வை நிறுத்தி விட்டு நான் ரெடி நீங்க ரெடியா என்றார், ஜெயலலிதா. துணைக்கு கம்யூனிஸ்டு தோழர்கள் நின்று கொண்டார்கள்.

தி.மு.க முகாம் குழப்பத்தில் கும்மியடித்தது. காரணம் அ.தி.மு.க அல்ல. அண்ணன் அழகிரி. சொல்லாமலேயே பிண்ணனியில் இயங்குகிற அழகிரி, கட்சியே சொன்ன பின்பும் வேட்பாளர் பிடிக்கவில்லை என்பதால் 'கண் வலி' என்று ஜகா வாங்கினார். அப்புறம் ஏதேதோ பூசி மெழுகல்களுக்குப் பிறகு அழகிரி,ஸ்டாலின் மற்றும் பேரன் மாறன் மூவரும் ஒரே வண்டியில் சுற்றிவருகிறார்கள்.

விஜயகாந்த் வழக்கம்போல அண்ணியாருடன் தனி குடும்ப வண்டி ஓட்டுகிறார்.

நாங்களும் இருக்கிறோம் என்று முதல் முறையாக சரத் அரசியுடன் சேர்ந்து களமிறங்கியிருக்கிறார்.

பிரியாணி பொட்டலங்களும், குவார்டர் பாட்டில்களும் திடீரென திருமங்கலவாசிகளுக்கு அன்றாட உணவாகிவிட்டது. ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு காது குடைந்து கொண்டிருக்கிறார்களாம். ஜெயிக்க வேண்டும் என்ற வெறியில் ஒவ்வொரு கட்சியும் கரன்சிகளை வீச, இரண்டு கை போதாமல் எல்லா கட்சிகளிடமும் திருமங்கலம் ஓட்டர்கள் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் மக்களுக்கு கரன்சி அட்டாக் என்றால், இன்னொரு பக்கம் தொண்டர்களுக்கிடையில் அரிவாள் அட்டாக். திருமங்கலத்தில் கரன்சியும், கல்லடியும் சர்வ சாதாரணமாகிவிட்டது. உத்திர பிரதேசத்திலும், பீகாரிலும் கூட இவ்வளவு மோசமில்லை என்று தேர்தல் கமிஷன் அலுத்துக்கொள்கிற அளவுக்கு மோதல்கள் உச்சத்தில் உள்ளன.

பா.ம.க ஆழம் பார்க்க வசதியாக நாங்க ஆட்டத்துக்கு வரவில்லை, நாங்க எந்தப் பக்கமும் இல்லை என்று அறிவித்துவிட்டது. அந்த வகையில் முதல் வெற்றி பா.ம.கவுக்குதான். ராமதாஸின் இந்த நிலைப்பாடு தேர்தலுக்குப்பின் பேரம் பேச வசதியாக இருக்கும்.

ஒரு ரூபாய் அரிசி மற்றும் இலவச டிவிக்களையும் மீறி விலைவாசியும், காணாமல் போன மின்சாரமும் மிரட்டுவதால் தி.மு.க பலவீனமாகத்தான் களமிறங்கியுள்ளது. போன தேர்தலில் கூட இருந்த பா.ம.க., கம்யூனிஸ்டு தோழர்கள் இம்முறை கூட இல்லை. ஆனாலும் அரசு இயந்திரத்தின் பலம் + அழகிரியின் மிரட்டல் ஆகிய இரண்டையும் வைத்துக்கொண்டு, ஜெயிக்கலாம் என்று கணக்கு போடுகிறது.

தேர்தல் முடிந்த பின் விஜயகாந்த் பெற்ற வாக்குகளும், ராமதாஸின் தந்திரமான நடுநிலையும் அவரவருடைய மவுசு குறையாமல் பார்த்துக் கொள்ளும். அவர்களுடைய மார்க்கெட் ரேட் எகிறும்.

செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி தரும் செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் அழகிரி பலம், அரசு பலம் மற்றும் தில்லு முல்லுகள் காரணமாக தி.மு.க சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் மட்டும் எப்படியாவது ஜெயிக்கும். தே.மு.தி.க வின் வளர்ச்சி காரணமாக அ.தி.மு.க சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கும்.

திருமங்கலம்வாசிகளுக்கு பிரியாணிப் பொட்டலங்கள் மட்டுமே மிஞ்சும்.

1 comment:

COVAI PRAVEEN said...

Thanxx

nice let see wat happen???!