Thursday, July 24, 2014

சென்னை தெருக்களில் மக்களை அச்சுறுத்தும் பைக் ரேஸ்!

அசோக்நகர், கே.கே.நகர் பகுதி காவல் துறை உயரதிகாரிகள் கவனத்திற்கு! 

இரவு 8.30 மணி இருக்கும். நெரிசலான காசி தியேட்டர் சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். பச்சை விழுந்த அடுத்த வினாடி எங்கிருந்துதான் அந்த மோட்டர் பைக்குகள் முளைத்தனவோ. விர்ரென்று சில வினாடிகளில் உதயம் தியேட்டரை தொட்டுவிட்டார்கள். ஏற்கெனவே வேகமாகச் சென்று கொண்டிருந்த கார்கள், லாரிகள், பஸ்களுக்கு இடையே கண நேரத்தில் ஒடித்து திருப்பி எப்படித்தான் இவர்களால் ரேஸ் ஓட்ட முடிகிறதோ?

மற்றொருநாள் அதே போல் இன்னொரு சம்பவம். நெசப்பாகம் டாஸ்மாக் அருகில். இரவு 9 மணி இருக்கும். அதே இளைஞர்களாக இருக்கலாம். தைரியமாக நடக்கக்கூட வழியில்லா டிராபிக்கின் உள்ளே ஒவ்வொரு வாகனத்தையும் மெலிதாக உரசி நடுங்க வைத்துவிட்டு இரண்டு பைக்குகள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டு மறைந்தன.

இது போல அதே ஏரியாக்களில் மேலும் 3 சம்பவங்களை என்றால் குறிப்பிட முடியும். அதிர வைக்கும் வேகம் காரணமாக என்னால் அந்த பைக்குகளின் நம்பர்களை குறித்து வைக்க முடியவில்லை. சில நேரம் அங்கிருக்கிற பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் பங்கிலிருந்தே ரேஸ் துவங்குகிறது. பயங்கரம்... பெட்ரோல் பங்கில் எங்காவது மோதிவிட்டால் என்ன ஆவது?

யார் செய்த அதிர்ஷ்டமோ. ஹெல்மெட் கூட அணியாமல் மக்கள் நடமாடும் சாலைகளில் ரேஸ் ஓட்டும் அந்த இளைஞர்களுக்கு எந்த அபாயமும் ஏற்படவில்லை. பொதுமக்களுக்கும் அலறி அடங்கிய சில நிமிட இதயத் துடிப்பைத் தவிர பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் எல்லா நாட்களும் இதுபோல விபத்தின்றி தப்பிப்பது சாத்தியமில்லை.

நான் குறிப்பிட்டுள்ள இரண்டு சம்பவங்களின் போதும் போலீஸ் வாகனங்கள் இருந்தன. காவலர்கள் அந்த மோட்டர் பைக்குகளை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்களைப் பிடிப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதற்குக் காரணம் அலட்சியமா? அந்த ரேஸ் இளைஞர்களின் (அரசியல்/அதிகார/பணம்) பின்புலமா? எனத் தெரியவில்லை. 

கத்திப்பாரா முதல் தி.நகர் வரை ரேஸ் - 5 பேர் - பரிசு ரூ.4000/-
லயோலா கல்லூரி முதல் கடற்கரை வரை ரேஸ்! 6 பேர் - பரிசு ரூ.1000/-
அடையாறு முதல் கடற்கரை வரை ரேஸ்! 4 பேர் - பரிசு ரூ.750/-
இதெல்லாம் கடந்த சில மாதங்களில் ரேஸ் ஓட்டிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டபோது கிடைத்த விபரங்கள். ஆனாலும் தெருக்களில் பைக் ரேஸ் ஓட்டுவது ஆங்காங்கே நடந்து கொண்டே இருக்கிறது.



இதில் கிடைப்பது பணமோ? த்ரில்லோ? எதுவாக இருந்தாலும் மக்கள் புழங்கும் சாலைகளில் ரேஸ்களை அனுமதிப்பதை ஏற்கவே முடியாது. உடனடியாக அந்த பொறுப்பில்லாத இளைஞர்களை தடுக்க வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பான சாலைகளைத் தர வேண்டும்

No comments: